logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 441 - 460 of 727

Year
Award
   

மாதாந்திர பரிசு

  • ரேணுகா ஸ்டாலின்

0   1026   0  
  • August 2020

மாதாந்திர பரிசு

  • ஜெகன் M ஆண்டனி

0   786   0  
  • August 2020

கவிச்சுடர் விருது

  • ஜே.ஜே. அனிட்டா

3   1495   2  
  • July 2020

மாதாந்திர பரிசு

  • கலை

0   1070   0  
  • July 2020

மாதாந்திர பரிசு

  • கழாரம் துலாலிங்கம்

0   1222   0  
  • July 2020

மாதாந்திர பரிசு

  • கார்த்தி

0   767   0  
  • July 2020

மாதாந்திர பரிசு

  • திருவேடகம் ஜெய்கணேஷ்

0   1208   0  
  • July 2020

மாதாந்திர பரிசு

  • பொ. திராவிடமணி

0   785   0  
  • July 2020

மாதாந்திர பரிசு

  • அன்பு மணிவேல்

0   987   0  
  • July 2020

மாதாந்திர பரிசு

  • வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

0   1167   0  
  • July 2020

மாதாந்திர பரிசு

  • ராஜராஜேஸ்வரன் ரத்னசபாபதி

0   951   0  
  • July 2020

கவிச்சுடர் விருது

  • கவிஞர் சௌவி

0   1532   1  
  • June 2020

மாதாந்திர பரிசு

  • ரா.கர்ணன்

0   966   0  
  • June 2020

மாதாந்திர பரிசு

  • நீ சு பெருமாள்

0   1179   0  
  • June 2020

மாதாந்திர பரிசு

  • மு.ச. சதீஷ்குமார்

0   797   0  
  • June 2020

மாதாந்திர பரிசு

  • வே.மு. ஜெயந்தன்

0   1074   0  
  • June 2020

மாதாந்திர பரிசு

  • கோ. சிவராஜன்

0   1218   0  
  • June 2020

மாதாந்திர பரிசு

  • தக்ஷன்

0   1269   1  
  • June 2020

மாதாந்திர பரிசு

  • வசந்தன்

0   1313   0  
  • June 2020

மாதாந்திர பரிசு

  • விஜய் ஆனந்த்

0   799   0  
  • June 2020

மாதாந்திர பரிசு

ரேணுகா ஸ்டாலின்

View

மாதாந்திர பரிசு

ஜெகன் M ஆண்டனி

View

கவிச்சுடர் விருது

ஜே.ஜே. அனிட்டா

இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருதினை நமது படைப்பு குழுமத்தில் தனது தனித்துவமான கவிதைகள் மூலமாக படைப்பாற்றலை வெளிப்படுத்தி வரும் கவிஞர் ஜே.ஜே.அனிட்டா அவர்களுக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.

சமூக நலன் சார்ந்த பணியாளராக பணியாற்றிய கவிஞர், தற்போது நல்லதொரு இல்லத்தரசியாக தனது குடும்பத்துடன் திருச்சியில் வசித்து வரும் கவிஞர், தனது கவிதை பயணத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதை அவரே சொல்ல தெரிந்து கொள்வோம்.

   
"சரியான துவக்கமென்றால் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்த போது அதிக நேரங்களையும் நாட்களையும் தமிழ்த்துறையிலும் நூலகத்திலும் கழித்த போது ஏற்பட்ட மொழியின் மீதான பெருங்காதல் தான்.திருச்சியில் பிறந்து வளர்ந்து பள்ளி,கல்லூரி படிப்பெல்லாம் முடித்து பேராசிரியைப் பணியை தொடர்ந்த வரை எனதெழுத்துக்களோடு மனமொத்து பயணித்தேன்.சமூகப் பணி படித்து சமூகப் பணி செய்தவைகளை முடித்து குடும்பப் பணி துவங்கிய திருமண வாழ்விற்குப் பிறகு சிறிது இடைவெளி.
கவிதையும் குரலும் பெற்றுத் தந்த பரிசுகளின் முகம்தடவிப் பார்க்கும் போதெல்லாம் பேனாவையும் தேடத் துவங்கி விட்டேன்.
முகநூலில் இணைந்து எழுதத் துவங்கி எட்டு வருடங்கள் கழித்து தான் எனது அடையாளத்தை மிகச் சரியான தளத்தில் மிகச் சரியான ஆயுதத்தோடு  நிறுவிக் கொள்ள முடிந்தது.படைப்பு கல்வெட்டு,படைப்பு தகவு,நக்கீரன்,மெல்லினம்,மேலும் சில மாத இதழ்கள்,மின்னிதழ்களில் கவிதைகள் களம் காண இன்னும் இனியும் தொடர்கிறேன்.

பெண்களுக்கேயுரிய அத்தனை சமூக இடர்பாடுகளையும் குடும்ப பொறுப்புகளையும் எதிர்மறை விமர்சனங்களையும் கடந்து துணிந்து எழும்போதெல்லாம்..எழுதும் போதெல்லாம்...
நிச்சயமாக கண்ணீர் இனிக்கிறது.

என்னிடம் எழுதுவதற்கான கொள்கை கோட்பாடுகள் எதுவுமில்லை.நான் காண்கிறவையோ என்னைக் காண்கிறவையோ என்னவெல்லாம் பிரம்மாண்டங்கள் நிகழ்த்துகிறதோ எவையெல்லாம் எனது மனம் கீறி அகழ்ந்து ஆராய்கிறதோ அதை கவிதையாகக் கொடுக்க முடிகிறது.
நிறைய சப்தங்களுக்கு இடையே தான் அதிகபட்சக் கவிதைகளை மௌனமாகப் பிரசவித்திருக்கிறேன் ஜே.ஜே.அனிட்டா என்னும் நான்."

இனி கவிஞரின் கவிதைகளில் சிலவற்றை கவனிப்போம் வாருங்கள்:

கவிதையின் அளவுகோல் என்னவாக இருக்கும்? மொழியும், வரிகளும் கொண்ட நயம் மட்டும்தானா? இல்லை இலக்கணம் என்ற கண்ணியத்திற்குள் வாழும் தொட்டி மீன்களாகவா? இல்லவேயில்லை ... கவிதையின் அளவுகோல் வேறானது என்று பட்டியலிடுகிறார் கவிஞர். யாரும் மறுக்கவியலா ஆழம். இதோ கவிதை:


நான்கடி அல்லது
ஒரு அங்குலம்

சில மீட்டர் தூரம்
ஒரு கடலின் பரப்பளவு
அல்லது 
இப்பிரபஞ்சத்தின் உயரம்

பிறகு..
மட்காத சாயம்..
வெளிர் நிறம் எடுப்பானது.

பதப்படுத்தப்பட்ட திடம்
அல்லது குளிரூட்டப்பட்ட
மென்மை..

கொஞ்சமாய் பிரியம்
லேசான கீறல்..
அங்கங்கே சத்தம்..
வெளிப்படையான தோற்றம்
பிறகு
வெளியற்ற உடல்

ஒரு பிடி கோபம்
சிறிதளவு வெட்கம்
எப்போதாவது  கண்ணீர்

ஆறடிக்கொரு முறை மரணம்
அரையடிக்கும் குறைவாய் அன்பு

போதவில்லையெனில் கடன்
போக வழியில்லையெனில்
திருட்டு..

மறைக்கப்பட்ட பிழை
பெரிதளவில் ஞானம்

அளந்தால்  பொருள் குறைவு
பிளந்தால் பூமியின் விலை

சின்னச் சின்ன கேள்விகள்
பெருந்துளிகளாலான சுடர்

உடைத்தாலும்
உடையெனத் தரித்தாலும்
ஒரே அளவு  கனவு

விற்கலாம்
வாங்கலாம்
மட்கியும் போகலாம்..

சொற்களால் ஆன பிறகு 
இன்னும் சிரமம்..

ஒரு கவிதை இவ்வளவு தான்.

விலை என்ன சொல்லுங்கள்.

-------------------------

கோபத்தின் வெளிதான், பிரபஞ்சத்தின் அமைதி என்றால் பொய்யில்லை. ஒவ்வொன்றின் சாதாரண நிகழ்வுகளும் ஒரு சீற்றத்தை, ஆற்றாமையை, அன்பை கொண்டதாகத்தான் இருக்கும். இந்த கவிதைக்குள்ளும் ஒரு கரு முட்டையின் சீற்றம் மறைமுகமாக இருப்பதை தெளிய முடிகிறது. இதோ கவிதை:

சினமுற்ற சினைமுட்டையின்
வெறிமுட்டிய பகை தான்
கருமுட்டை உதறி..
புறவுலகை வந்தடைவது.

இலையொற்றிய நீரின்
கரம்பற்றாத கிளைகளுடனான
மனமொத்த பிரிவு தான்..
மரம் விட்டு மண் பாய்வது.

வனம் பற்றிய கூட்டில்
அமையொத்து நிகழாத
இசை கொத்திப் பறவையின்
பிரிவுற்ற நிலையொப்ப நிகழ்வது தான்..
சுரம் தப்பி மொழியுறைவது.

அகம் பற்றி உன்னலகின்
பெருங்கோபக் கூர்முனையில்
செவி விட்டுத் தொலையாது
மனமொத்த ஊடற்கொண்டு

சிறுகோபம் துய்க்க
மனப்பித்துக் கொண்டவளாய்
உருப் பற்றொழிந்து
தடம் மாறித் திரிகின்றேன்..

எனையொத்து நிகழும்
பெருங்கோபம் கொள் நண்ப..

இருளொத்த ஒளியொன்று
கனம் பற்றிப் படரட்டும் என்மேல்...!

-----------------------------

நேசத்தின் உருவொன்று ஆழ்மனதில் உழல்கிறது. அது எல்லாமுமாகவும் விரிகிறது. அந்த நேசத்தின் உரு யாராகவும் இருக்கலாம். கடவுளாக, தாயாக, இணையராக, பிள்ளைகளாக,ஏன் ஆசையாகவும் இருக்கலாம் அதது அவரவர் மனவோட்டங்களே.... கவிதை:

ஆதிப் பெருந்தாகம் நீ..
ஆளும் துயர் மருளும்
நீள்வானக்  கீழ் வானம் நீ..
பேரண்டத்தின் முதற்புள்ளி துவங்கி
அசைவுற்று நெகிழ்ந்தாடும்
பேரன்புக்குரிய இப் பிண்டத்தின்
தோற்றக் காரணம் நீ..
ஜீவப் பெருந்தாகமணையா
ஆன்மக் கொடுஞ்சாபம்
தீயணைத்து வேகும் பூந்திவலைகளின்
நேர்மறைக் கோட்பாடு நீ..
என் பாவப் பெருங்கோபந்தணிய
ஏகுஞ்சிறுகாட்டுப் பேடைக் குரல் கரைய
ராகம் தாளம் பொருந்தியழ
கேட்கும் செவியளந்து மீட்கும்
இசையின்  விசையும் நீ..
நாளை வரையுழன்று
நேற்றின் மறையுகந்து
ஞானத் தீஞ்சுவைகள் நேரும் பின்
தேறுமெனக் காத்திருந்து
ஆழப் புதைகிற நேரஞ் சொல்லியே
ஆழ்மனக் கிடப்பை
ஆட்கொண்டலையும் ஆல் வடிவானவன் நீ..
நீருக்கெதிரான பசியும் நீ..
நேர்மைக்கெதிரான தகவும் நீ..
பேசித் தீராத ஆசை முகம் 
மறத்தலென்ன..
பூமிக்கெதிரான போர் புரியும்
பூமத்திய சித்தங்களில்
யாருக்கும் புலப்படாது

எனதகப் பிழைப்பின்
ஒற்றைத் துளி உயிர் திசுவில்
ஒட்டிக் கொண்டலையும்
பற்றறவே இல்லாத
ஒற்றையுலகம் நீ..!

-------------------------
ஏகாந்த பெருவெளியாய் பெண்!  அரிதாரமிட்ட செழுமைத்துயரம் இவள்!  அடர் மௌனத்தை கிழுத்தெறிகிறது ஒவ்வொரு வரிகளுமே!
கவிதை:

கோப்பைகள் நிறைய பருகத் தந்த
மரகதத் துளிகளை
செவ்விதற் குடுவைக்குள் சேகரித்து
மகரந்தம் துளிர்க்கிறாள்..
கண்களின் கதவுகள் திறக்கிற
ஏகாந்தப் பெருவெளிக்குள்
காந்தச் செருக்குடன்
ஆடவர் பலரும்
ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்..
ஒப்பனைகளை மெருகேற்றும்
ஒளிக் கீற்றுகளின் மென்பாய்தலில்
அவளங்கத்தின் அசைவுகள்
துல்லிய பூகம்பக் கொடுங்கோள் புரிகிறது..
தன் மீது படரும் விரல்களின்
மயக்கத் தூரிகையில்
அவள்..
மேனியின் நிறங்களை வடிவமைக்கிறாள்..

நாளொன்றுக்கு ஒரே இரவு
அரிதாரமிட்ட செழுமைத் துயருடன் 
ஆதித் தோற்றமளித்து
ஆசைகளைப் பிறப்பிக்கும்
அற்பத் தொழில் தான் என்றாலும்...

பெண்மையின் தோற்றப் பிழையால்
பகலென்பது கூட
கூனிக் குறுகிப் போகும்
கனத்த இரவென
உறைந்து கிடக்கிறது.

இவர்களின் மெய் பித்தத்தில்

ஆடைகளென்ற பொய்யால்
நிறமியிட்டுக் கொள்ள வேண்டிய
பெண் என்பவளே மெய்..!

-----------------------------

மெய்பிம்பத்தின் கட்டமைப்பாக மிளிரும் கவிதை, தன் சுயத்தையும் விலக்கி கவிதையின் வழியாகப் பார்க்கிறது!
இதோ கவிதை:

கனவுகளற்றவர்களின் 
கூட்டத்திலிருந்து வந்திருக்கிறேன்..
எனதுறக்கங்களில்
இரவு அழுவதை கவனிப்பீர்களானால்
எனது பிறழ்வுகளில்
பழுப்பின் நிறத்தை சுவைப்பீர்களானால்
நான் இரக்கமற்ற கனவுகளைத்
துய்ப்பவளல்ல..
பகலின் நிறங்களில் நான்
பொய்முலாம் பூசுதலின் பொருட்டு
மெய்ப்படாத நிர்மூலங்களை சுமந்தவாறு
சிறு சிறு உறக்கங்கள் கழிகிறேன்..
எனில்..
நான் கனவுகளின் முதுகில்
சுமைகள் பிதுங்க நடக்கவியலாது.

என்னை
கனவுகளின் கூடாரங்களினின்று
வெளியேற்றத் துணிகிறேன்.

எந்தக் கனவிலும்
உறக்கம் அழுவதாய்
நினைவிலேயில்லை.

-------------------
பெண்ணெனப்படுபவள், எங்கெங்கு எந்தெந்த நிலைகளில் சுயம் இழக்கிறாள்! ஆண் சமுகத்தின் கட்டமைப்பு  கூடாரமாகிப் போகிறாள்!  உருப்புகளால் அலங்கரிக்கப்பட்ட போதையென சிங்காரித்தல் கட்டமைப்பின் பாசாங்கு! அவளின் மனம் படிக்காத பசியின் வெறி! அதுவும் விலைமகளென்றால், அவள் காசிற்கு வாங்கிய போதை! வெறுப்பின் உச்சமாய் வந்து விழுகிறது வார்த்தைகள்!
கவிதை:

அம்மா மருத்துவச்சியே..!
அவ்வுறுப்பைத் தகர்த்தெறிய வந்திருக்கிறேன்..
வலியறுக்கும் மரத்த ஊசியின்றியே
அறுத்தெறியலாம் நீ..
பாவப் புண்கள் குழுமிய எச்சிலின்
காய்ந்த அழுக்கொழிய
மழித்து உயிர்த்தெழ வை .
பணத்தின் பெருத்த கனம்
வயிற்றைக் கழுவத்தானே தவிர..
ஒருத்தனின் சிரத்தையிலும்
இரக்கமில்லையென்பதை
பழுத்த தடத்தைப் பார்த்தால்
புரிந்து கொள்வாய்.
சிறுத்த நீரையே தடுத்து நிறுத்துமளவு
வலிக்கிற கொடுஞ்சாபம்
சுமந்தவள் நான்..
அடுத்து எடுத்து வைக்க
மரணமன்றி வேறில்லையெனும் போது
கொடுத்த சுகங்களின் பதிலாய்
உறுப்பையிழந்தவளென்று
வழக்கில் வந்தாலும் பரவாயில்லை.
வழித்து எடு.

பெண்ணெனக் கொள்ள
அங்க அடையாளம் இல்லாத
வஞ்சப் பித்துக் கொண்டலைந்தாலும்

நஞ்சென உறுத்தும்
அவ்வுறுப்பு மட்டும்
கொன்று புதைத்து விடு..!

இந்தப் பிறவியின் 
இன்னும் மீதமுள்ள அற்ப வாழ்வுக்கு
கொஞ்சம் பொருளிருக்கிறது.

பெண்ணெனப்படுபவள்....

-------------------------

பேரன்பின் தேவதைகள் சிறகுகளுடன் தேவ லோகத்திலிருந்து இறங்க வேண்டும் என்பதில்லை! இங்கேயே இருக்கிறார்கள் என பட்டியலிடுகிறது இந்த கவிதை!


யாரிடம் பேசினால்..

பட்டாம்பூச்சியின் சிறகில்
நிறங்கள் முளைக்கிறதோ..

யாரிடம் மன்றாடினால்..

நெட்டுரு செய்த சொற்கள்
நெக்குருகிப் போகிறதோ..

யாரிடம் அழுதால்..

மழையின் கனவில்
மௌனம் துளிர்க்கிறதோ..

யாரிடம் சேர்ந்தால்
அணுக்களின் தாபத்தில்
அனுதாபம் மேலோங்குகிறதோ...

யாரை நேசித்தால்..

பிரபஞ்சமே உடைந்து
விழித்திரையில் சிறைபட்டுக் கொள்கிறதோ...

யாரின் குரல் கேட்டால்...

காற்று மெலிந்து
இசையின் துளையில்
வேர் விட்டெழுகிறதோ...

யாரை நினைத்தால்..

பூஞ்சிறகொன்று உயிர் துழாவி
வாஞ்சையுடன் 
பூமி தொடாது வானமும் துறக்கிறதோ...

யாரை மறந்தால்...

மரணத்தின் சிலுவைகளுக்கு
மனம் மண்டியிடுகிறதோ...

அவர்கள்...

பேரன்பின் தேவதைகளாகப்பட்டவர்கள்..!

---------------------------------
வயதுக்கு வருதல் என்பது ஒரு பெண்ணிற்கு ஏற்படும் பருவ மாற்றம் மட்டுமல்ல. சுற்றம் சூழ, மகிழ்வின் சடங்குகளுடன் வாழ்வின் மறக்கா தருணமாகவும் அமைவது அதன் சிறப்பு! எளிய தாயின் மகளுக்கு இவையெல்லாம் சாத்தியமா! இந்தக்கவிதை வலியின் வலிதான்!

எனது பாவாடையில் தீட்டுக் கறையைப்
பார்த்து விட்ட அம்மாவுக்கு..
செய்வதறியாத பேரின்ப நிலை
ஆனாலும்..
உறவுகள் புடைசூழ 
ஊருக்கே விருந்து வைக்க
பேராசைப்படும் அவளின் கைகளில்
மிச்ச சொச்சங்களைக் கொண்டு
ஒரு முழம் பூவும்...
ஒரு டசன் பழமும் மட்டுமே வாங்கவியலும்..
சடங்கானவளை ஒதுக்கி வைக்க
இடமில்லாத குடிசைக்கு
கதவே இன்னும் விதிக்கப்படவில்லை...
தானே எல்லாமுமாகி
தலைக்கு எண்ணெய் வைத்து
நீராட்டு  விழாவைக் கூட்டுக்குள்ளேயே
நிகழ்த்தி..
பூப்பெய்திய சம்பவத்தை
கண்ணீரில் துடைத்துக் கரையேற்றுகிறாள்..

இன்னும் சற்று சூதானமாய்
இருந்திருந்தால்
அம்மாவுக்குத் தெரியாமல்
மறைத்திருக்கலாம்...

இப்போதெப்படி சொல்வது
இது ஆறாம் மாதத் தீட்டு என்று...

---------------
புதிய நடையில் சந்தம் குறையாமல் வார்த்தைகளில் வீரியம் கோர்த்தெழுதும் கவிஞர் ஜே.ஜே.அனிட்டா மேலும் சிறந்த படைப்புகளை வழங்க  நமது குழுமம் மன நிறைவுடன் வாழ்த்துகிறது! கவிஞரின் சிறப்பான கவிதைகளில் இன்னமும் சில கீழே...

எளந்தாரிப் பய மக்கா
சுடுகாட்டுச் சுள்ளியால
அப்பன் பொணத்து மேல
சிந்திய செங்குருதி...

கடுங்காட்டுப் புங்கமரக் கெளையில
சுருங்கிய கழுத்தும்
எரிஞ்ச உடலுமா
தொங்கிய வெசக் கயிறு..

பாவாட நாடா அவுந்த பாவத்துக்கு
வயசுக்கே வாராம உதிரஞ் செலவழிய
மேக்காலப் பயக
நெருஞ்சிய முறிச்ச கத...

கெழக்கால வெதச்சது
ஈனச்சாதிப் பய எச்சமிட்ட வெளக்குன்னு
மேற்கால சாதி மக்க
சாமிய மறைச்ச குத்தம்..

வவுத்தாலப் போய் விட
வைத்தியரப் பாக்க
வெரசா வண்டி கட்டி கடந்த தார் ரோடு
வெவகாரம் புடிச்சவுக
செஞ்சுவச்ச பாதையின்னு
அடிச்சே வெரட்டி விட
அஞ்சாறு பொணமள்ளி
மாடு மட்டும் வீடு சேர...

எதுக்கோ படைச்சாரு
எதையோ வெதச்சாரு
கடவுளுக்கும் ரெண்டு சாதி..

நாங்கவொன்னு
அவுகவொன்னு..

பொணமா போன பின்ன
பொறுக்கும் எலும்புத் துண்டில்
பொறக்குமாய்யா புது சாதி..

மறக்காதிருக்கும்படி
மனசுல ஏத்திக்கங்க....

மேற்கால மறஞ்சாலும்
கெழக்கு எங்க வெத...!

-----------------------
 

இப்போதெல்லாம் அப்படியில்லை

நீயும் நானும்
ஆளுக்கொரு திசையில் பறக்கப் பழகியிருக்கிறோம்..

உனது நேரங்களை நான்
கொத்தித் தின்பதேயில்லை..
நீயும் எனக்கான கிளையிலேயே
பிறழ்ந்து கிடப்பதில்லை..

நமக்கான வானத்தை 
யாரோ தான் நெசவு செய்கிறார்கள்
இல்லையெனில்...

எந்த அலங்காரமுமில்லாத
நமது பேரன்புக்கு
இத்தனைப் பெரிய
சிறகிழப்பு தேவையாய் இருந்திருக்காது.


--------------------------

நானொரு எழுத்தாளனாகி விட்டேன்.
இனி கவிதைகள் ஒருபுறமும்
நானொரு புறமும் கிடக்கலாம்.
தலைக்கு மேல் அழுத்தும் கர்வத்தை
வியர்வை துடைத்தெடுத்துக் கொள்ளும்.
பிறகு...
பொருள் தேடுவேன்..
கவிதைக்கும் சேர்த்து.

எனது பேனா பிரபஞ்சத்தின் 
புண்களைக்  கீறி  பழுது பார்க்கும்.
ஆனால் ஆற்றுப்படுத்தாது
எனது மை.

எங்கும் எப்போதும்
தோன்றித் தொலையும்
சொற் சழக்குகளால் 
சிந்தனை கைதாகும்.

பேசும் போது எழுத வராது.
எழுதும் போது..
பேசவும் தெரியாது.

புகழ் மாலைகள் கழுத்தை நெரிக்கும்.
எழுத்து நிமிர நிமிர
பூ மாலையின் அளவு பெரிதாகும்.

சபைகளில் முதலிடம் தான்.
கால் மேல் காலிட்டு அமரத்
தடையில்லை.

பெயரை மாற்றுவேன்.
எனக்கே மறந்து விடும்.
யாரோ நினைவுபடுத்துவார்கள்
எழுத்தையும் தான்.

விருதுகள் சேமிக்க
வீடு கட்டியாக வேண்டும்.
வீட்டிற்கு வந்து கௌரவித்தல்
கூடுதல் பெருமையெனக்கு.

எது எழுத்து என
அகராதி சொல்வேன்.
அகராதி பிடித்தவர்கள்
எனதகராதியிலேயே இல்லை.

அடிபணியத் தோன்றாது.
எது நடந்தாலும்
நான்கெழுத்தில் நன்றியோ
மூன்றே வரிகளில்
அனுதாபக் குரலோ 
அறிவித்தால் போதும்.

புத்தகங்கள் என்னை எழுதும்.
புத்தகங்களை நான் எழுதிய பின்.

உலகமே சுற்றி
என்னை தோற்றுவிப்பேன்.
பிறகு அலுத்துப் போவேன்.
லேசாக சொற்கள் அந்நியமாகும்.
பேசாத சொற்கள் புண்ணியமாகும்.

நரைத்த எழுத்துக்கள்
பரண் மேல் ஏறும்.
எல்லோரும் மறக்கத் துவங்குவார்கள்.
எனது கழுத்தைப் பிடித்து
மாலையை அகற்றுவார்கள்.

பொருள் குறைந்த எழுத்தும்
வாழ்வுமாய்..
இருள் நோக்கி நகர்வேன்.


அப்போது...

எழுதுவேன்.

எழுதத் துவங்குவேன்.

எழுதிக் கோண்டேயிருப்பேன்.

அரிதாரங்கள் அம்பலமாகும்.
நிறமியகற்றி வெண்மை போர்த்துவேன்.
அலங்காரச் சொற்கள் அறவேயின்றி
அனுமானத் தேவை நிறைவு பெறும்.

உலகம் புரியும்.
உயிர் மரணத்தை வெல்லும்.

நானொரு எழுத்தாளனாய்
மரித்துப் போவேன்.

அப்போது எல்லோரும்  கூறுவார்கள்.

இப்போது தான்
அவனொரு ஆகச் சிறந்த எழுத்தாளனென்று.

-----------------------------


அது ஒரு பசி..
ஆற்றாமையின் அரூபம்
நிச்சலனப் பெருவெளி
தாகமுறையாத கடுங்காடு
தடித்த சுமையுணர்வு
கார்கால மழை பெறாத
பேறுகால வலி
இம்மையின் சாபத் துறவு
மறுமையின் வேரறுந்த பிணக்கு
ஆழ்நிலை கூப்பாடு
அருவருப்பின் எச்சம்
மானத்தின் துச்ச சன்மானம்
ஞானத்தின் பேருண்மை
உடலும் உடல் அல்லாத பொருளும்
உலகும் உலகல்லாத உயிரும்
ஆன்மத் துஞ்சலும்
மிகுதியான மரணமும்..
ஏற்றமுறா தாபமும்
வீழ்ச்சியுறா வெறுமையும்
மொழியறுந்த மௌனமும்
விழியிழந்த காட்சிப் பிழையும்...
யாருமல்லாத யாவரும்
யாதுமாகித் தொலைந்த யாக்கையும்

சிலநேரம் 
கடவுள் புசித்த மிருகம்

சிலசமயம்
மனிதம் புசித்த கடவுள்..

அதுவொரு தீராப் பசி.

அன்பெனப்படுவது யாதெனில்....

------------------------------


ஒரு பறவையின் சிறகு போர்த்த
தனதகத்தின் கதகதப்பை
பலியெனத் தரும் 
விருட்ச வேர்கள் 
அவளுடையது.

அவளின்  கனவுகளுக்கென்று
இரவு தன்னை புதுப்பிப்பதில்லை.
அவள் தன் இமைச் சிறகில்
இரவு பூட்டி..
கனவுகள் மெய்ப்பித்துக் கொள்கிறாள்.

அவளின் பிரயத்தனங்களில்
நூற்கோர்வைப் படையாலான
மந்தச் சரீரம் இருப்பதில்லை.
அது வெற்றுத் தோல்களை
தனதுடைக்கு நிறமிட்டு
கையகப்படுத்தும்..

ஆனால் அவள்..

வானம் படராத நிலத் துவாரங்களில்
நிழற் கச்சை நெய்து
அதனொளிப் படர்தலில்
பகல் நெய்பவள்.

அனிச்சப் பார்வை மலராத
வீதிகளின் தனித்த துயர்பொழுதில்
அவள் கனத்த சொற்களுக்கு
ஆகிருதி அன்பளித்து
வெய்யளாய்  உயர்ந்து நிற்பவள்.

சொல்லும் சொல் சார்ந்த நிலமும்
அவள் மெய்யழுந்த உழுத கவிதை.
அதன் மீதழும் பெயலின் துளிகள்
அன்பினாலானவை.

ஏனெனில்..

கண்ணம்மா

கவிதையினாலானவள்.

---------------------


உனது வீட்டின் மேற்கூரை..?
பகலில் வானமும் இரவில் வீதி விளக்கும்.

பசித்தால்..?
பறவையின் அலகில் பொருத்திய நெல்மணி.

ரசிக்க...?
எப்போதாவது மழை.

வெறுப்பது...?
எப்போதும் பசி .

பயமெனில்..
நாளைக்கும் பசிக்குமே.

கோபமெனில்...
கடவுள் வரட்டும். சொல்கிறேன்.

மிருகங்கள்.?
நேசிப்புக்குரியவை.

மனிதர்கள்..?
எனது உலகத்தில் இல்லை.

அடுத்த பிறவியிலாவது..?
இப்படியே தான்.ஆனால் கிழிந்த ஆடை மறைக்கப்பட்டு.

வயதுக்கு வந்துவிட்டாயா...?
நான்கைந்து அண்ணன்கள் சொன்னார்கள்.

உறவுகளென சொல்லிக் கொள்ள...?
இந்த திருவோடும்..அதில் பெற்றவர் இட்ட முதல் சில்லறையும்.

கனவுகள்..?
அதையும் உறங்க வைத்து விடுவேன்.

சேமிப்பு..?
நாளையாவது கிடைக்குமென்கிற பாதுகாப்பு.

பரிசு..?
அவரவர் விரும்பி அழைக்கும் எனது பெயர்கள்.

மரணம் பற்றி..?
பைக்குள் வைத்திருக்கிறேன்.

உடலென்பது..?
என்னிடம் இல்லாதது.

அன்பென்பது..?
உங்களிடம் இல்லாதது.

கண்ணீர்..?
தாகமெடுப்பதேயில்லை.

வாழ்க்கையென்பது..?
இந்நிமிடம் நீங்களும் நானும்.

நாளையைப் பற்றி..?
இந்தக் கேள்வியை மட்டும்
நான் கேட்கிறேனே...



-----------------------

நீயும் நானும் அப்போதெல்லாம்
மழைக்குருவியின் கீச்சொலி உரச
மழைக்கான ஆயத்தங்களோடு
உடன்படிக்கை செய்திருந்தோம்.

நிலத்தை கடலெனவும்
கடலினத்தை அடவியெனவும்
மனத்தோல் போர்த்தாத ஆன்மத்தை
நிழலெனவும் கொண்டு..

உயிர் வாழக் கற்றுக் கொண்டிருந்தோம்.

உலகம் சுருங்கி கைக்குட்டையான போது
விழிப் பிடியினின்று நழுவிய
பேரன்புத் துளிகளை
அத்தனைப் பிரியமாய்
பத்திரப்படுத்தியிருந்தோம்.

உனது சொல்லின் திரட்சியில்
நான் மட்காத எழுத்துக்களை
புலரச் செய்து கொண்டிருந்தேன்.

நுதலினின்று நழுவிய
உவலொன்றில் பெயரெழுதி
கடறு வரைந்தோம்.

அது..

கனத்த உருவமாய்
நறுந்துளிகளை மெய் போர்த்தியது.

இப்போது...

சிறகுலர்த்துகிறோம்.

வனம்..
கடல்..
நிலம்...
பறவை..

இவை தவிர்த்து
நீயும் நானும் மரணம் தழுவிய
யாவற்றிலும்

அச் சிறகுகள்
தன்னுயிர் வளர்த்துப் பறப்பதை
உனைப் போலவே நானும் காண்கிறேன்.

---------------------------------

View

மாதாந்திர பரிசு

கழாரம் துலாலிங்கம்

View

மாதாந்திர பரிசு

திருவேடகம் ஜெய்கணேஷ்

View

மாதாந்திர பரிசு

பொ. திராவிடமணி

View

மாதாந்திர பரிசு

அன்பு மணிவேல்

View

மாதாந்திர பரிசு

வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

View

மாதாந்திர பரிசு

ராஜராஜேஸ்வரன் ரத்னசபாபதி

View

கவிச்சுடர் விருது

கவிஞர் சௌவி

சௌந்தர் இரங்கநாதன் என்ற இயற்பெயருடைய கவிஞர் சௌவி அவர்களே இந்த மாதத்திற்கான, நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினைப் பெறுகிறார் என்பதை மிகுந்த பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

இவரது கவிதைகள் காலத்தின் நிகழ்வுகளையும் காதலையும் படம்பிடிப்பதாக இருக்கின்றன! வார்த்தைகளின் சிக்கலில்லாத கோர்வை, இவரது கவிதைகளை அழகு செய்துவிடுகிறது!

தன்னைப்பற்றி அவரே நமக்கு எழுதியயளித்த தன்னிலை குறிப்பொன்றை இங்கு பார்ப்போம்:

"என்னுடைய பெயர் சௌவி. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சாரலில் குயில்கள்
பாடிக்கொண்டேயிருக்கும் தென்னந்தோப்புகள் நிறைந்த சின்னபாப்பனூத்து என்ற கிராமம் நான்
பிறந்த ஊர். இந்த கிராமம் உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டத்திலுள்ளது.
அங்கிருக்கும் இயற்கையின் பேரழகுகளைக் காதலிக்கத் தொடங்கிய பிறகுதான் நான் கவிதை
எழுதக் கற்றுக்கொண்டேன். இயற்கைதான் என் முதல் காதலி. கிராமத்து வீட்டிலிருந்து
அம்மாவுடன் மாடு மேய்க்க காட்டுக்குப் போகத்தொடங்கியபோதுதான் இயற்கை எனை இழுத்து
தன் அழகையெல்லாம் எனக்குப் பந்தி வைக்க ஆரம்பித்தது. மேகங்கள் எப்போதும்
ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் மலைகள் பார்க்கும்போதெல்லாம் ஒரு கவிதையைக்
கொடுத்துவிடும். அந்தியில் வந்து இரவு தூக்கம் வரும் வரை பேசிக்கொண்டிருக்கும்
நட்சத்திரங்கள் கவிதைகளைக் கொடுக்கும். கருவேல மரத்திலமர்ந்தபடி அந்திப் பாடலிசைக்கும்
கற்றாழைக்குருவிகள் கவிதைகளைக் கொடுக்கும். முற்றத்து வேப்ப மரத்தினுள்ளே தன்னுடல்
மறைத்தபடி காற்றில் இசை கோர்க்கும் குயில் கவிதைகளைக் கொடுக்கும். இவ்வாறாக
எழுதப்பழகி எழுதிக்கொண்டிருப்பவைதான் என் கவிதைகள். பள்ளிப்பருவத்திலிருந்து
எழுதத்தொடங்கிய கவிதைகள் இப்படித்தான் ஒவ்வொரு நாளையும் கவிதைகளால்
நிறைத்துவிடுகின்றன.
ஆனந்த விகடன், குமுதம் தீராநதி, குங்குமம், காமதேனு, புன்னகை, படைப்பு-கல்வெட்டு,
படைப்பு-தகவு மற்றும் பல இதழ்களில் என் கவிதைகள் வெளிவந்துள்ளன. கவிதை என்பது
வாசித்தவுடன் எழுதப்பட்ட மன நிலையை, சூழலை, உணர்வுகளை அப்படியே வாசிப்பவரின்
மனதுக்குள் நிகழ்த்த வேண்டும். என் கவிதைகள் அவ்வாறானவை என்றே நம்புகிறேன்."

***

கவிஞரின் உணர்வுகள், கவிஞரே சொன்னதுபோல்  நம்மிடம் எளிதில் கடந்துவிடுவது திண்ணம். அப்படிப்பட்ட அவரது சில கவிதைகளை இங்கு நாம் ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம்.

***

சாதி மதங்களால் பிரிக்கப்பட்ட ஒரு சமூகமாக நம் மனிதயினம் மாறியபிறகுதான் வன்முறைகளும், சீர் கேடுகளும் எளிதாக நுழைந்து, பண்பாட்டு கூறுகளை சிதைத்துவிட்டன. மனிதம் மீண்டும் தலைதூக்க நம்முள் ஊறியிருக்கும், நம்முள் பாவும் ஊடையுமாக இழைந்து வலைப்பின்னலாகியிருக்கும் சமூகக்கூறுகளை கண்டெடுத்து முன்வைப்பது மிகவும் அவசியமானவொன்று. இதனை இந்தக் கவிதை மூலமாக கவிஞர் நமக்கு எடுத்து வைக்கும் வரிகள் மிகவும் நேர்த்தியானவை!


1
புணர்ந்து முடித்தபின் பிரிந்துசெல்கின்றன
அக்ரஹாரத்து மாணிக்கம் ஐயர் வீட்டு
ரோஸி என்ற பெண் நாயும்
வளவிலிருக்கும் குப்பன் வீட்டின்
பெயரில்லா ஆண் நாயும்
அந்தோணி
தன் தொழுவத்தில் கறந்த பால்
வாகனங்களேறி
ஆச்சாரத்துக்குப் பேர் போன
சடகோபன் வீட்டு குளிர்சாதனப்பெட்டியில்
தயிரென உறைந்துகொண்டிருக்கிறது
இப்ராஹிம் வெட்டிய ஆட்டுக்கறி
முருகனின் வீட்டில்
பிரியாணியாகிக்கொண்டிருக்கிறது
கீழென ஒதுக்கப்படுபவர்கள் கட்டிய
சுவர்களுக்குள்தான்
தங்களை மேலென நினைத்துக்கொண்டிருப்பவர்கள்
குடித்தனம் நடத்துகிறார்கள் கூச்சமின்றி
அனுமதி மறுக்கப்பட்டவர்கள்
வெளுத்த ஆடைகளைத்தான்
கோவிலின் கருவறைக்கருகில் நின்று
முதல்மரியாதையை ஏற்கும்
ஊர்ப்பெரியவர் அணிந்திருக்கிறார்
இத்தனை தெளிவுரைகளிருக்க
இன்னும் அப்படியென்னதான் தேடலோ
சாதிக்குள்....மதத்துக்குள்?

***
நாடோடி மன்னன் திரைப்படத்தில் பட்டுக்கோட்டையாரின் பாடல் ஒன்றில்,'விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
... குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்' என்றொரு வரியை ஞாபகப்படுத்துகிறது கவிஞரின் இந்தக்கவிதை! சூரியனைக் கண்டு சோம்பேறிகள் பதுங்கிக்கொள்ள, அதன் வெப்பத்தை உழைப்பவர்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பது சிறப்பான பார்வை!

2
வெயில் ஆரம்பிக்கிறது
தன் மிகச்சூடான கரங்களால்
பூமியின் கழுத்தை இறுக்கியபடி
வெயிலுக்கு பயந்து பதுங்குபவர்கள்
பாதுகாப்பான இடம் தேடிப் பதுங்குகிறார்கள்
கையில் நீண்ட தடியோடு
அறுபது ஆடுகளை ஓட்டிக்கொண்டு புறப்படுபவன்
தன் கையிலிருக்கும் தடியால்
வெயிலை விரட்டியபடி தன நாளைத் துவக்குகிறான்
தலையில் மோர் சுமந்து செல்பவள்
சூடேறிய சூரியனின் மீது
ஒரு டம்ளர் மோரை ஊற்றி
சூரியனைக் குளிர்வித்தபடி
தன் நாளைத் துவக்குகிறாள்
மரம் வெட்டத் துவங்குபவன்
தன் பதமான அரிவாளால்
சூரியனை வெட்டி வீசிவிட்டு
தன் நாளைத் துவக்குகிறான்
கட்டிடம் கட்டத் துவங்குபவன்
சிமெண்ட்டையும் மண்ணையும் குழைத்தெடுத்து
சூரியனின் மேல் பூசிவிட்டு
தைரியமாக
தன் நாளைத் துவக்குகிறான்
கல்லுடைக்கத் துடங்கும்
இளந்தாயொருத்தி
பக்கத்து மரத்தூளியில் மகனைத்
தூங்க வைத்துவிட்டு
கையிலிருக்கும் சுத்தியலால்
சூரியனை நொறுக்கிவிட்டு
தன் நாளைத் துவங்குகிறாள்
பயப்படுவர்கள்
பதுங்கிக்கொண்டார்கள்
பயப்படாது நாளைத் துவக்குபவர்கள்
சூரியனை வெற்றி கொண்டு
உலகத்தை இயக்குகிறார்கள்

***
சக்கரவோட்டம் ஓடிக்கொண்டிருக்கும் அவசர யுகத்தில் நாமும் வேகமாக ஓட கற்றுக்கொண்டோம். அதே சமயம் நம்மை நாடி நிற்கும் சின்ன சின்ன வேண்டல்களையும் நம் அவசரத்தின் காரணமாக மறுதலித்துவிடுகிறோம்! காரணம் சுயம் என்பதைவிட நம் தேவைக்கான ஓட்டம் மிக முக்கியம் என்றே வாழ்வதுதான்! நமக்கே ஒரு தேவை  தேவைப்படும் போது மற்றவர்களும் நம்மைப் போலவே ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை செவுள்களில் அறைந்ததுபோல் சொல்கிறது இந்தக்கவிதை!


3
அப்போதுதான் நிகழ்ந்திருக்கவேண்டும் விபத்து
நான்கு சக்கர வாகனமொன்று
இருசக்கர வாகனத்தை
இடித்துத் தள்ளிவிட்டு சென்றுவிட்டது
விழுந்து முகமெல்லாம் ரத்தம் ஒழுக
கூட்டத்துக்கு நடுவே எழுந்து நிற்பவர்
யாரென்று விசாரிக்க நேரமில்லை
அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது
பாதயாத்திரை செல்லுமொருவர்
செருப்பணியாப் பாதங்களோடு
பாதையோரத்தில் நின்றபடி
கட்டை விரலை உயர்த்தி லிஃப்ட் கேட்கிறார்
நின்று ஏற்றிக்கொள்ள நேரமில்லை
அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது
சீருடையோடு மரத்தடியில்
தனியாகநிற்கும் சிறுவன்
பள்ளி வாகனத்தைத் தவறவிட்டுவிட்டான்போல.
ஓடி வந்து கை நீட்டுகிறான்
நின்று ஏற்றிக்கொண்டு சென்று
பள்ளியில் இறக்கிவிட்டுச்செல்ல நேரமில்லை
அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது
வாடி வதங்கிய தேகத்தோடு
தலைநரைத்த முதியவர்
தள்ளாடித் தள்ளாடி நடந்துபோய்க்கொண்டிருக்கிறார்
கடக்கும் என்னை நோக்கும்
அவரின் கண்கள் இறைஞ்சுகின்றன
நின்று ஏற்றிக்கொள்ள நேரமில்லை
அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது
வேகமாகச் சென்றுகொண்டிருந்த
என் இருசக்கரவாகனம்
திடீரென வளைந்து ஆட
பக்குவமாய்க் கீழே விழாமல் நிறுத்தினேன்
பின் சக்கரத்திலிருந்து காற்று
சுத்தமாய் வெளியேறியிருந்தது
பக்கத்தில் பஞ்சர் ஒட்டும் கடை எதையும்
காணவில்லை
வண்டியை ஓரமாய்ப் பூட்டி நிறுத்திவிட்டு
சாலையில் விரையும் வாகனங்களை நோக்கி
என் கட்டை விரலை உயர்த்துகிறேன்
அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதென
கண்டுகொள்ளாமல் விரைகின்றனர்
அனைவரும்

***
 வெயில் அண்டவெளியின் ஆக்கசக்தி!  இருந்தாலும் அதன் வெப்பம் அதன் மீதான பகைமையை கூட்டிவிடுகிறது! அதற்கு எதிராக சமர் செய்ய நீச்சல்குளம், இளநீர், குளுமை சாதனங்கள் என பலவற்றோடு, நாம் நட்பு பாராட்டிக்கொள்கிறோம். ஆனாலும் இறுதிவரை வெயில், வெயிலாகவே இருந்து வெற்றிக் கொள்வதாக சொல்லும் இந்தக் கவிதை.. வெயிலுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட நம்பிக்கையூட்டுவதுதான்!

4
வெயிலைப் பற்றிய ஏராளமான புகார்கள்
உங்களிடத்திலும் என்னிடத்திலுமிருக்கின்றன
வெயிலை நாம் எப்போதும் வசவு வார்த்தைகளால்
திட்டிக்கொண்டேயிருக்கிறோம்
மழையை நேசிப்பதைப்போலவோ
நிலவொளியை நேசிப்பதைப்போலவோ
நிழலை நேசிப்பதைப்போலவோ
நாம் வெயிலை ஒருபோதும் நேசிப்பதில்லை
ஒருநாளைக்கு
குறைந்த பட்சம் ஒருமுறையாவது
நாம் வெயிலைச் சபித்துவிடுகிறோம்
அதுவும் கோடையில்
வெயிலின்மீது கணக்கற்ற சாபங்கள் ஏற்றப்படுகின்றன
வெயிலிலிருந்து தப்பிக்க
குடை நிழல் குளிர்பானம் இளநீர்
குளிரூட்டப்பட்ட அறை மின்விசிறி என
ஏராளமான வழிமுறைகளை வைத்திருக்கிறோம்
ஆனாலும் வெயில் நம்மை விடாது பின்தொடரந்து
தீண்டிக்கொண்டேயிருக்கிறது
உலகம் முழுவதும் வெயிலுக்கெதிரான ஆராய்ச்சிகள்
நடந்துகொண்டேயிருக்கின்றன
மேலே வந்தமரும் வெயிலை
ஒரு வெறுப்புணர்ச்சியோடே
சுமந்து கடக்கிறார்கள் எல்லோரும்
வெயிலைத் தோற்கடிக்க
மரங்களோடு மேகங்களோடு நதிகளோடு
குளங்களோடு மழையோடு என
ஏராள ஒப்பந்தங்கள் செய்கிறோம்
ஆனாலும் கடைசியில் வெயிலே ஜெயிக்கிறது
அத்தனை சாபங்களையும் மீறி
அத்தனை கோபங்களையும் மீறி
அத்தனை சதிகளையும் மீறி
அத்தனை வேண்டுதல்களையும் மீறி
அத்தனை எதிர்ப்புகளையும் மீறி
எப்போதும் வெயில் வெயிலாகவே இருக்கிறது
என்பதே வெயிலின் தனிச்சிறப்பு

***

இயற்கையின் நிலையில் மனிதர்கள் ஒன்றி வாழ்வது ஜென் நிலை மட்டுமல்ல, ஜென்ம நிலையும் கூட! ஏனென்றால் இயற்கையின் படைப்புகள் அனைத்துமே இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றன.. மனிதன் மட்டுமே விதிவிலக்காக அதனை அழித்து வாழ்கிறான் என்பதை குறியீடாக எடுத்துக் கொண்டு செல்லும் இந்தக் கவிதை உங்கள் பார்வைக்கு! 

5
மலர்களை உதிர்த்துக்கொண்டிருக்கும்
மர நிழலில்
எறும்புகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன
அதை அப்படியே விட்டுவிடுங்கள்
சிலுசிலுவெனக் காற்றைக் குளிப்பாட்டி
அனுப்பிக்கொண்டிருக்கும்
வேப்ப மரத்து இலைகளுக்குள் மறைந்தபடி
ஒரு குயில் பாடிக்கொண்டிருக்கிறது
அதை சலனப்படுத்தாமல் கடந்து சென்றுவிடுங்கள்
உங்கள் வயக்காட்டு வரப்பு மேடுதான்
வானத்தைத் தொட்டுவிடுவோமென்று
பட்டம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்
விடுமுறைச் சிறுவர்கள்
கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்
அவர்கள் வானம் தொடட்டும்
தண்ணீரின் மேற்பரப்புக்கு வந்து
வெளிச்சத்தை ரசித்துக்கொண்டிருக்கின்றன மீன்கள்
நீங்கள் வலைவீசுவதைச்
சற்றே நிறுத்திவையுங்கள்
கருவேல மரத்தில்
கற்றாழைக் குருவிகள் கூடியமர்ந்து
பேசிக்கொண்டும் பாடிக்கொண்டுமிருக்கின்றன
உங்கள் ஒலிபெருக்கிகளைக்
கொஞ்சம் நிறுத்தி வையுங்கள்
மேகங்கள் நிரம்பிய இரவு வானத்தில்
நட்சத்திரங்களைப் படைத்து மகிழ்கின்றன
மின்மினிப்பூச்சிகள்
இரவைக் காயப்படுத்தும்
உங்கள் வெளிச்சங்களைக் கொஞ்சம்
கட்டுப்படுத்துங்கள்
இந்த உலகம் உங்களுக்கானது மட்டுமல்ல

***
முரண்களால் சிக்கிக் கொள்கிறது உலகம்! துன்பம் இன்பம் இரண்டுமே இரண்டு பக்கங்களென்றாலும், உதவியென்பது ஒரே பக்கம் கொண்ட வெளிச்சம்தான். இதனை மறந்துவிடுவதால் எழும் துயர்தான் இந்தக் கவிதை! 

6
அத்தனை பால்காரர்களும்
விரையும் அந்தச் சாலையில்தான்
நான்கு நாட்களுக்கு முன்பு
அடிபட்டு இறந்த நாயொன்றின் இரு குட்டிகள்
பாலுக்குக் கத்திக்கொண்டிருக்கின்றன பசியால்
அத்தனை ஆடை தயாரிப்பு நிறுவனங்கள்
அமைந்துள்ள சாலையில்தான்
சட்டையில்லாத சிறுவனொருவன்
பிளாஸ்டிக் புட்டிகளைப்
பொறுக்கிச் சேகரித்துக்கொண்டிருக்கிறான்
ஒரு நல்ல சட்டைக்கான கனவுகளோடு
மாநகரத்தின்
அரசுத் தலைமை மருத்துவ வளாகத்தில்
ஒழுகும் குருதியோடும் அடிபட்ட காலோடும்
தாவித் தாவிக் குதித்தபடி
பரிதாபக் கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கும் பறவையினை
கண்டுகொள்ளாமல் கடந்து போகிறார்கள்
எல்லோரும்
காப்பாற்றுவார் கடவுளென்று
எல்லோரும் கோயிலுக்குச் செல்ல
கடவுளைக் காப்பாற்ற நின்றுகொண்டிருக்கிறார்
துப்பாக்கி வைத்த கடைநிலைக் காவலரொருவர்
காடுதிருத்தி வியர்வை சிந்தி விளைவித்தவன்
தாங்கமுடியாத கடனால்
தற்கொலை செய்து கொள்ள
வாங்கி விற்ற வியாபாரி
அதை செய்தித்தாளில் படித்தபடி
சொகுசுக் காரில் போய்க்கொண்டிருக்கிறான்
சற்றே சங்கடத்தில் உச்சுக்கொட்டியபடி
உலகம் எல்லோருக்குமானது என்கிறார்கள்
மறுபடி மறுபடி சொல்கிறார்கள்
ஆனால் நம்பத்தான் முடியவில்லை

***
சாதாரண வியாபாரியொருவனின் மன நிலையை படம் பிடிக்கும் காட்சிதான் இந்தக் கவிதை!

7
பத்து வட்டிக்கு
ராயல் பைனான்ஸில் கடன் வாங்கி
பெங்களூர் போய்
ஹோல்சேல் கடையில் துணிகள் வாங்கி
தள்ளுவண்டியில் கடைபோட்டு
இந்த தீபாவளிக்கு நாலு காசு
இலாபம் பார்க்கலாமென
ஆசைப்பட்ட நாச்சிமுத்து
பெய்துகொண்டிருக்கும் மழையிடமிருந்து
அசலைக் காப்பாற்ற
தார்பாய் போட்டு
கடையை மூடிவைத்துவிட்டுப் புறப்படுகிறான்
நாளையாவது
மழை வராமலிருக்க வேண்டுமென
இன்னும் இரண்டு நாட்களுக்கு
கனமழை நீடிக்குமென
தொலைக்காட்சியில் தோன்றி
அறிவித்துக்கொண்டிருக்கிறார்
வானிலை மைய அதிகாரி
பெய்யும் மழையை உற்றுப்பார்க்கிறேன்
அதற்கு கொஞ்சம்கூட ஈரமில்லை

****
கவிஞரின் நயம்மிக்க இன்னமும் சில கவிதைகள்:

8
தீர்ப்பு வரும்முன்னே
வென்று விட்டதாய்க் கூத்தாடுகிறார்கள்
ஒருவர் தவமிருக்கிறார்
ஒருவர் விருந்தளிக்கிறார்
ஒருவர் பழி தீர்க்க வேண்டியவர்களென்று
பலரைப் பட்டியலிடுகிறார்
ஒருவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களையெல்லாம்
தைரியமாக எடுத்து
எல்லோரின் பார்வைக்கும் வைக்கிறார்
ஒருவர்
உடனடியாக கைது செய்யப்படவேண்டியவர்களென்று
ஒரு பட்டியலைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார்
ஒருவர் மாட்டுக்கறி தின்பவர்களைக்
கணக்கெடுக்க உத்தரவிடுகிறார்
தொழிலிழந்து ஏழையாகிய
குறுந்தொழிலதிபர்கள்
உய்ய வழியில்லையென்று
உத்திரத்தை வெறித்து நோக்குகிறார்கள்
தோற்றுவிடுவோமென்று
நம்பத்தொடங்கியவர்கள் ஒன்றுகூடி
அடுத்த கட்ட ஆலோசனை நடத்துகிறார்கள்
இன்னும் திறக்கப்படாத பெட்டிகளுக்குள்
முடங்கிக்கிடக்கும் வாக்குகள்
தலையில் அடித்துக்கொண்டு
தங்களுக்குள் சிரித்துக்கொண்டிருக்கின்றன
-சௌவி

9
எந்த இராமனும் வில்லுடைக்கவில்லையென்று
தன் நரைமுடிகளைச் சாயமேற்றி
கருப்பாக்கிக்கொண்டிருக்கிறாள்
திருமண வயது கடந்த பெண்ணொருத்தி
இன்றேனும் கிட்டும் வருமானத்தில்
குடும்பத்தினர் எல்லோரின் பசியையும்
தீர்க்கமுடியுமென்று
பணம் கொழுத்த வீடாகத் தேடுகிறான்
திருடனொருவன்
நாளை காலை பதினோரு மணிக்கு விமானம்
இனி மறுபடி மூன்று வருடங்கள் கழிந்தே வீடு
விசனத்தில் கண்ணீர் கன்னத்தில் வழிய
மகளை அணைத்துக்கொண்டு
தூங்காது படுத்திருக்கிறான்
இளந்தகப்பனொருவன்

இனி கண்விழிக்காதிருந்தால்
எவ்வளவு நிம்மதியாக இருக்குமென
கண்ணீர் வழியும் கண்களை மூடுகிறாள்
மாலையில் புதிதாய்
முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட
மூன்று மகன்களைப் பெற்ற
முதியவளொருத்தி
அடித்த காற்றில் அத்தனை தென்னைமரங்களும் விழுந்துவிட்டன
வாங்கிய கடனோ பூதமென
எழுந்து நின்று மிரட்டுகிறது
விடிந்தால் தவணை கட்டவேண்டிய கடைசிநாள்
உறங்காமல் உத்திரத்தையே
பார்த்துக்கொண்டிருக்கிறார்
கட்டிவிடுவோமென நம்பிக் கடன் வாங்கிய விவசாயி
இரவென்பது
விடியலை நோக்கிச் செல்வதாகவே
எல்லோராலும் சொல்லப்படுகிறது
எல்லோராலும் நம்பப்படுகிறது
எப்போது விடியுமிந்த இரவு?
-சௌவி

10
என் மௌனங்களையெல்லாம்
காலியாகிப்போன ஹார்லிக்ஸ் டப்பாக்களிலும்
மை தீர்ந்த பிரில் இங்க் புட்டிகளிலும்
அடைத்து அலமாரியில்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
ஏன் பேசமாட்டேனென்கிறாய்
ஏன் மௌனமாக இருக்கிறாய்
எனக் கேட்பவருக்கெல்லாம்
அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற
மௌனம் நிரப்பப்பட்ட ஹார்லிக்ஸ் பாட்டிலை
எடுத்துக் கொடுக்க நினைப்பதுண்டு
மௌனம் உலகின் மிகச்சிறந்த மொழி
என்பதை
சிலர் புரிந்துகொள்வதேயில்லை
மௌனத்தின் மொழிகள்தான்
எத்தனையோ விபரீதங்களைத் தடுக்கின்றன

எத்தனையோ சண்டைகளைத் தனிக்கின்றன
மௌனமான இரவைப் பாருங்கள்
அது எவ்வளவு அழகாகவும்
அமைதியாகவுமிருக்கிறது
இரைச்சல்கள் மிகுந்த பகலோடு
ஒப்பிடுகையில்
மௌனமான இரவு ரம்மியமானது
இரவின் மௌனத்தோடு
விடிய விடியப் பேசிக்கொண்டிருக்கலாம்
அது பகலைப்போல அதட்டவோ
அலுத்துக்கொள்ளவோ
காதுகளை மூடிக்கொள்ளவோ செய்யாது
அது கேட்டுக்கொண்டேயிருக்கும்
பேசும் மனசு சாந்தப்படும்வரை
எனக்குள் ஏதேனும் பெருத்த சப்தங்கள்
கேட்கும்போதெல்லாம்
நான் டப்பாக்களில் அடைத்து வைத்திருக்கும்
மௌனத்தை எடுத்து
ஆட்டாங்கல்லில் ஆட்டியோ
மிக்ஸியில் போட்டு அரைத்தோ
குடித்துவிடுவேன்
உள்ளுக்குள் கேட்கும் பெருத்த சப்தங்கள்
அரைமணி நேரத்துக்குள்
அப்படியே அடங்கிவிடும்
கட்டுத்தறியில் கட்டப்பட்டிருந்த மாடுகளிடமும்
காடுகளில் சுற்றிப் பறந்து கொண்டிருந்த
வண்ணத்துப்பூச்சிகளிடமும்தான்
நான் நிறைய மௌனங்களையும்
அம்மௌனங்களின் பேரழகையும்
கற்றுக்கொண்டேன்
மரங்களின் மௌனம்
செடிகளின் மௌனம்
சுவர்களின் மௌனம்
என எத்தனை எத்தனையோ
மௌனங்களை ரசித்தாலும்
எனக்குப் பிடித்ததென்னவோ
மலையின் மௌனம்தான்
அவ்வளவு பெரிதாக ஆஜானுபாகுவாக
எவருக்கும் அடங்காத உருவத்திலிருந்தாலும்
மலைதான் எவ்வளவு மௌனமாக
அமர்ந்திருக்கிறது!

-சௌவி

11
மரத்திலிருந்து கீழே விழுந்து
காற்றோடு கைகோர்த்தபடி ஓடும்
இலைக்குக் கிடைத்திருப்பது
சுதந்திரமல்ல
ஓடிய இலையை பக்கத்து நதியில்
தள்ளிவிட்டுவிட்டு
தான் மட்டும் தப்பித்துப்போகும்
காற்று செய்தது
துரோகம் அல்ல
தன்னுள் விழுந்த இலையை
தன்னுடனே இழுத்துச் செல்லும்
நதி செய்வது
உதவி அல்ல
போய்க்கொண்டிருந்த இலையை
தன்னிடமிருந்த செடியொன்றை நீட்டி
கரை தடுப்பது
காப்பாற்ற அல்ல

உதிர்ந்து ஓடிய இலையினைப் பற்றிய
குறிப்புகள்
உதிராத எந்த இலையினிடத்தும் இல்லை
ஏனென்றால்
ஒவ்வொரு இலைக்கும்
வெவ்வேறு குறிப்புக்களால்
எழுதப்படுகிறது வாழ்வு
-சௌவி

12
சந்தடி மிகுந்த கடைத்தெருவில்
எல்லாக் கடைகளின் முன்பும்
கைகூப்பி
கடவுளாக்க முயற்சிக்கிறார்
முதியவர்
யாருக்கும்
கடவுளாக மாறவோ
பக்தனின் கோரிக்கைக்குச்
செவிமடுக்கவோ விருப்பமில்லாத
அத்தெருவில் கோவில்களுமிருக்கின்றன
அக்கோவில்களுக்கு உள்ளேயிருக்கும்
கடவுள்களும் அவ்வாறே
மனிதர்களைப் பார்த்து
கடவுள் இவ்வாறு மாறிப்போனாரா
அல்லது
கடவுளைப் பார்த்து

மனிதர்கள் இவ்வறு மாறிப்போயினரா
அல்லது
கடவுள் என்றாலே இப்படித்தானோ?
இன்னும் எந்த உறக்கமும்
எந்த இரவும்
விடையளிக்கவேயில்லை அம்முதியவருக்கு
கடவுளாக ஆசைப்படாதவர்களை
கடவுளாக மாறச்சொல்லி
கடவுள் இல்லாத ஊரில்
கடவுளைத் தேடிக்கொண்டேயிருக்கிறார்
கடவுள்
-சௌவி

13
***நவீன சமையலறை***
எரிவாயுவில் எரியும் அடுப்பிருக்கிறது
எப்படிப்பட்ட நீரையும் சுத்திகரித்துக்
குடிநீராக்கும் உபகரணம் மாட்டப்பட்டுள்ளது
கொதித்தலிலிருந்து வெளியேறும் ஆவியை
உடனடியாக வெளியேற்ற
சுவற்றுக்குள் சுழன்று வெளியேற்றும்
காற்றாடி உள்ளது
எல்லாவற்றையும் சூடாக்கித்தர
உயர்ரக சூடேற்றி உள்ளது
குளிரேற்றி அருந்தவும் தின்னவும்
குளிர்சாதனப்பெட்டி உள்ளது
எல்லா சமையல் பொருட்களையும்
அழகாய் அடுக்கி வைக்க
வெளியே துருத்தாத அலமாரி உள்ளது
பாத்திரங்களை உடனுக்குடன் துலக்கியுலர்த்த

மின்சாரத்தில் இயங்கும் துலக்கியுள்ளது
சமையலறை என்பது
நவீனம் நவீனம் எனச்சேர்க்கப்பட்டு
அத்தனை நவீனமாகிவிட்டது
இத்தனை நவீனத்திற்குப் பிறகும்
எந்த வீட்டிலும் மாறவேயில்லை
அடுப்படியில் பெண்கள் என்ற
ஆதிகாலச் சொற்றொடர்
-சௌவி

14
சிமெண்ட் மூட்டையை
லாரியிலிருந்து தூக்கிச் சுமந்து
குடோனுக்கு அடுக்குபவனின் நாள்
சிமெண்ட் நிறத்திலேயேயிருக்கிறது
வெயிலில்
ஓடும் வாகனப்புகைகளுக்கிடையே
ரோட்டைச் சுத்தப்படுத்தி
தாரூற்றி சாலையைச் செப்பனிடுபவனின் நாள்
கருப்பு நிறத்திலேயேயிருக்கிறது
காலை மூன்று மணிக்கே எழுந்து
ஒவ்வொரு தோட்டமாய்ச் சென்று
பாலைக் கறந்து சேகரித்து
நகரமேகி
வீடுவீடாய்ச் சென்று பாலூற்றுபவனின் நாள்
வெள்ளை நிறத்திலேயேயிருக்கிறது
எப்படி வாழ்வு இப்படியானதோ தெரியாது

நெடுஞ்சாலையில் மரங்களின் மறைவில் நின்று
பேருந்து நிலையங்களில் கடைகளுக்குள்ளான சந்துகளில் நின்று
வாடிக்கையாளர்களைத் தேடுபவர்களின் நாள்
சிவப்பு நிறத்திலேயேயிருக்கிறது
பசியா வறுமையா
எது திருடனாக்கியது எனத்தெரியாது
அடுத்தவர்களின் கண்களை இருட்டாக்கிவிட்டும்
இருள்பொழுதுகளிலும் வாழ்வைத்தேடும்
திருடர்களின் நாள்
இருட்டு நிறத்திலேயேயிருக்கிறது
வண்ணங்களாலானது வாழ்க்கை என்கிறீர்கள்
வண்ணங்களாலானதா வாழ்க்கை?
-சௌவி

15
மாதவிலக்கானால்
உன்னுடன் கோயிலுக்கு வராதே
என்கிறாய்
அலுவலகத்திலிருந்து திரும்ப நேரமாகிவிட்டாலும்
உன் பசியடக்க
என் சமையலுக்காகக் காத்திருக்கிறாய்
இரவுச் சமையலறை வேலைகளை
முடித்துவிட்டு வருவதற்குள்
இவ்வளவு நேரமா என
காமமேறிய கண்களுடன்
சலித்துக்கொள்கிறாய்
உன் தேவை முடிந்ததும்
என் திருப்தி பாராமல்
உறங்கிப்போகிறாய்
நான் எப்போது உறங்கினேனென்பதை
உணர்ந்துகொள்ளாமல்

நீ கண்விழிக்கும் காலையில்
நான் பெட்காஃபி நீட்டவேண்டுமென
எதிர்பார்க்கிறாய்
அலுவலகம் புறப்படும்வரை
செய்தித்தாள்களோடும்
தொலைக்காட்சியோடுமே
பொழுதைக் கழிக்கிறாய்
அலுவலகத்திற்கு தாமதமாகச்
செல்லக்கூடாதென
நீ ஒரு எடுத்துக்காட்டாயிருக்கவேண்டுமென
நீ நினைப்பதுபோலவே
என் அலுவலகத்தை நானும் நினைப்பதை
நினைக்க மறக்கிறாய்
என் சம்பளப்பணத்தின் பிடித்தங்களைக்
கணக்கிடும் நீ
உன் சம்பளப்பணத்தின் உண்மையை
நிர்வாணப்படுத்த மறுக்கிறாய்
என் முகநூலுக்குள் நுழைந்து
என் உரையாடல்களை
ஒரு சந்தேகக்கண்ணோடே
படிக்கிறாய்
உன் எல்லா உரையாடல்களையும்
விகல்பமற்றவை என்றே நம்ப
உத்தரவிடுகிறாய்
என் மார்புகளின் கனபரிமாணத்தை
சரியாகத் தெரிந்துவைத்திருக்குமுனக்கு
என் மனதின் கனபரிமாணம் தெரியவேயில்லை இன்னும்
நீதான் சொல்கிறாய்
மகளிர் தின வாழ்த்துக்களை..!
-சௌவி

 

View

மாதாந்திர பரிசு

நீ சு பெருமாள்

View

மாதாந்திர பரிசு

மு.ச. சதீஷ்குமார்

View

மாதாந்திர பரிசு

வே.மு. ஜெயந்தன்

View

மாதாந்திர பரிசு

கோ. சிவராஜன்

View

மாதாந்திர பரிசு

விஜய் ஆனந்த்

View

Showing 441 - 460 of 727 ( for page 23 )