நூல் பெயர் : தனியொரு அன்றில் (கவிதைகள்)
ஆசிரியர் :
மணி அமரன்
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
116
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 160
பனங்களி
என்றும், அரிவாள் மூக்கன் என்றும் அழைகப்படும் நெய்தல் நிலத்து பறவையான அன்றில் பறவைக்கும்
தமிழ் இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பென்பது ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தது. அதிக சத்தத்தை
எழுப்பும் அன்றில் பறவையைக் குறித்து “ஒரு தனி அன்றில் உயவு குரல் கடைஇய” என்ற அகநானூற்றுப்
பாடலே ஆதாரம். அதிலிருந்து தொடங்குகிறது இந்நூலுக்கான தலைப்பு. கடலும் கடல் சார்ந்த
இடத்திலும் வாழும் அன்றில் பறவைகள் காதலும் காதல் சார்ந்த இடத்திற்கும் எடுத்துக்காட்டாக
இருப்பதே இப்பறவைகளின் தனிச்சிறப்பு. காரணம் இவற்றில் ஆண், பெண் பறவைகள் ஒரு முறை இணை
சேர்ந்துவிட்டால் பிரியவே பிரியாது. பிரிய வேண்டிய சூழ்நிலை வந்தால் இரண்டில் ஒன்று
இறந்துவிடும். அதனால்தான் சங்ககாலம் முதல் சமகாலம் வரை இலக்கியத்தில் காதலுக்கு இலக்கணமான
அன்றில் ஆராதிக்கப் படுகின்றது. இலக்கியம் உயிர்ப்புடன் இருப்பதற்கு மொழி எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் இவ்வுலகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணமான காதல். அப்படிப்பட்ட
காதலின் கீதங்களை எல்லாம் ஒன்றுதிரட்டி கவிதைகளாக உருவாக்கப்பட்டிருப்பதே “தனியொரு
அன்றில்” நூல்.
திருநெல்வேலி மாவட்டம் சங்காணியைப் பிறப்பிடமாகவும், குன்னத்தூரை வசிப்பிடமாகவும்
கொண்ட படைப்பாளி ‘மணி அமரன்’ அவர்களுக்கு இது மூன்றாம் நூல். இவரது இரு நூல்களை படைப்பு
பதிப்பகம் மூலமே வெளியிடப்பட்டு பலரது கவனத்தை தன் பக்கம் திருப்பியவர். பல கவிதைகள்
பலரின் பாராட்டுதலோடு இன்றைய இலக்கிய உலகிலும், சமூக வலைத்தளத்திலும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான
அங்கீகாரத்தைப் பெற்றவர் மேலும் படைப்பு பரிசுப்போட்டியில் வாகை சூடியதோடு மட்டுமல்லாமல்
படைப்பின் உயரிய விருதான கவிச்சுடர் விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.