logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 581 - 600 of 761

Year
Award
   

மாதாந்திர பரிசு

  • ஜெயாபுதீன்

0   1001   0  
  • August 2019

மாதாந்திர பரிசு

  • சஜோ வில்லியம்ஸ்

0   1179   0  
  • August 2019

மாதாந்திர பரிசு

  • மு. சுகுமாரன்

0   1379   0  
  • August 2019

மாதாந்திர பரிசு

  • கார்த்திக் கல்யாணி

0   1031   0  
  • August 2019

கவிச்சுடர் விருது

  • காளிதாஸ்

0   1351   0  
  • August 2019

மாதாந்திர பரிசு

  • கருவை ந. ஸ்டாலின்

0   1168   0  
  • July 2019

மாதாந்திர பரிசு

  • பாண்டிய ராஜ்

0   999   0  
  • July 2019

மாதாந்திர பரிசு

  • பூ. விவேக்

0   977   0  
  • July 2019

மாதாந்திர பரிசு

  • மு. முபாரக்

0   1164   0  
  • July 2019

மாதாந்திர பரிசு

  • ஷீலா கடற்கரை

0   1261   0  
  • July 2019

கவிச்சுடர் விருது

  • தங்கேஸ்வரன்

0   1274   0  
  • July 2019

மாதாந்திர பரிசு

  • அ. முத்துவிஜயன்

0   1051   0  
  • June 2019

மாதாந்திர பரிசு

  • கீர்த்தி கிருஷ்

0   1376   0  
  • June 2019

மாதாந்திர பரிசு

  • மாறன் மணிமாறன்

0   1007   0  
  • June 2019

மாதாந்திர பரிசு

  • முனைவர் வே. புகழேந்தி

0   1090   0  
  • June 2019

மாதாந்திர பரிசு

  • சத்யா தமிழச்சி மருதாணி

0   990   0  
  • June 2019

கவிச்சுடர் விருது

  • தனபால் பவானி

0   1145   0  
  • June 2019

மாதாந்திர பரிசு

  • ஷாலுமதி சுரேஷ்

0   1437   0  
  • May 2019

மாதாந்திர பரிசு

  • சோ. நளாயினி

1   1214   0  
  • May 2019

மாதாந்திர பரிசு

  • கதிர்

0   1216   0  
  • May 2019

மாதாந்திர பரிசு

ஜெயாபுதீன்

View

மாதாந்திர பரிசு

சஜோ வில்லியம்ஸ்

View

மாதாந்திர பரிசு

மு. சுகுமாரன்

View

மாதாந்திர பரிசு

கார்த்திக் கல்யாணி

View

கவிச்சுடர் விருது

காளிதாஸ்

'நெடுநேரமாய், ஒரு ராட்சஷப் பறவை
எதிர்க் கூரையில் அமர்ந்து கரைகிறது...
தப்பிக்கத் தவறிய இளஞ்சிறகு 
அதன் கூர்நகங்களில்.
காலம், 
தன் கடைசி பிம்பத்தை உடைக்கவும் 
கல்லெடுக்கக் குனிகிறது.'

- ........... மாதத்திற்கான கவிச்சுடர் விருதினைப் பெறும் நம் படைப்பு குழுமக் கவிஞர் காளிதாஸ் அவர்களை படைப்பு குழுமம் வாழ்த்தி மகிழ்கிறது...

கவிஞர் காளிதாஸ் அவர்கள் நீண்ட காலமாக நமது படைப்பு குழுமத்தில் அவரது கவிதைகளை பதிந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். அவரது சொற்பிரயோகங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

மதுரை மாவட்டம் பரவை அரசு மேல் நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணிபுரியும் கவிஞர், 1 சந்திப்பின் கடைசி நொடி 2.அட்சதை,3.பிம்பங்களின் மீது ஒருகல் மற்றும் 4. திருடனின் வீடு என்று நான்கு தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

இனி கவிஞரின் படைப்புகளைக் காண்போம் :

மனக் கசப்புகளின் மூலப்பொருளாக ஒரு வார்த்தை நிச்சயம் நிமிர்ந்திருக்கும்.. அதை துப்பிவிடாதவரை மனக்கிலேசங்கள் மாறுவதுக் கிடையாது. காதலியிடம் காதலன் வைக்கும் வேண்டுகோள் இதுவாகத்தான் இருக்கமுடியும்... அன்பு காத்திருக்கிறது... துப்பி விடு கண்ணே அந்த ஒவ்வாத ஒற்றை வார்த்தைதனை....

இம்மியளவு அன்பு தான் மிச்சமிருக்கிறது
துடைத்தெறிய தயாராக்கப்படுகிறது புன்னகை
வற்ற வற்ற அள்ளப்பட்டு விட்டது கண்ணீர்
தேடப்படுகிறது வலியறியா அணு
தவிர்க்கும் கோணத்திற்குத் தவிக்கிறது கண்
சுண்டச் சுண்ட உறிஞ்சப்பட்டு விட்டது இரக்கம்
மன விளக்கமாறால் அள்ளி மறுபிறவியில் கொட்ட வேண்டும் தாமதிக்காமல் துப்பி விடு
ஒவ்வாத அந்த ஒற்றை வார்த்தையையும்.

----

ஒரு படிமம் பல பொருட்களுக்குள் பதுங்கிக்கொள்ளும். ஆசையும் அப்படித்தான் இங்கொரு படிமத்தில் அமர்ந்து அமர்க்களம் செய்கிறது... அது கழுவி போட்ட மிச்சத்திற்கு கால நாய் வேறு காத்திருக்கிறதாம்...

கதவு இல்லை என்பதால்
தாழ்ப்பாள், பூட்டு, சாவிக்கு 
வேலையே இல்லை.
காற்றைப் போல உள்ளே நுழை
கலைத்துப் போடு
களவாடு
ஒளிந்து கொண்டு பூச்சாண்டி காட்டு
சமைத்திடு
பரிமாறு
எல்லாவற்றையும் கழுவிக் காய வை
மிதமிஞ்சியதை அதற்குரிய பாத்திரத்தில் இடு
நாக்கைத் தொங்கப் போட்டுக் காலனாய்க் காத்திருக்கிறது 
கால நாய்.

------
மீன்காரி
படிமத்திற்குள் படிமமாக அவளே நுழைகிறாள்...அவளின் கூடையில் உள்ள மீன்கள் சொற்களாக படிம இட மாற்றம் செய்து கொள்கின்றன... வாழ்க்கையின் சித்திரத்தை படிமங்களால் செதுக்குகிறான் கவிஞன்.. 

ஒரு மாறுதலுக்கு
சொற்களை ஏந்தி வந்த மீன்காரி
பேரம் படிந்ததும், வழக்கம் போல் செதில்களை உரசுகிறாள்.
பெருஞ்சொல்லின் குடலைக் கொத்திப் போக கூரையில் கரைகின்றன காலக் காகங்கள்.
கூடுதலாகப் போடப்பட்ட கொழகொழத்த சொல்லை
'குழம்பு'க்கென ஒதுக்குகிறாள்.
கண்டதுண்டமாக்கப்பட்ட நல்ல சொற்கள் வறுபடக் கூடும்.
மடித்து வீசப்படும் கழிவுச் சொற்களுக்காகச் சண்டையிடுகின்றன
பழக்கப்பட்ட நாய்கள்.
அவள் கைகளிலிருந்து நழுவும் கவுச்சி வாசத்தை சாராயநெடியோடு முகர்கிறது தெருமுக்கு.
சில்லரை கழித்து சரியான விலையை மார்புக் கச்சையில் செருகியபடி
சுமையை இடம் மாற்ற ஒரு கைபிடிக்கச் சொல்கிறாள்
ஒரு மாறுதலுக்கு
சொற்களை ஏந்தி வந்த மீன்காரி.

----------------

பேருந்து நிறுத்தங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு நிகழ்வுகளையும்.. பல் வேறு கதைகளையும் தினமும் வாசித்துக் கொண்டிருக்கிறது... நாமும் கவிஞரின் வாயிலாக அவற்றின் காட்சிகளை இந்தக் கவிதையில் காண்போம்...

வேரோடு பிடுங்கப்பட்ட காற்றோடும் மழையோடும் சேர்த்து சில நிறுத்தங்களின் பெயர்களும் காணாமல் போய்விட்டன.
சில்லரை சப்தங்களோடு நிறுத்தங்களின் பெயர் சொல்லி இறங்கச் சொன்ன நடத்துனர் பணி ஓய்வுக்குப் பின் தேங்கி நிற்கிறார்.
பழைய அடையாளத்தோடு வருவோர் அதே இடத்தில் புதிய அடையாளத்தோடு கையேந்தும் நிறுத்தத்தை பரதேசியைப் போல நிராகரிக்கிறார்.
துருப்பிடித்த நிறுத்தப் பலகையின் மீது யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி காலக் காக்கையின் எச்சம் கோடாக வழிந்து காய்ந்திருக்கிறது.
காம இச்சைக்குக் களவாடப்பட்டு இறக்கிவிடப்பட்ட இளம்பெண் மீது கழிவிரக்கம் கொண்டவாறே மணிக்கட்டைத் திருப்பி நேரம் பார்க்கிறது நிறுத்தம்.
கூடை நிறைய பொறுக்கிய நாவல் பழங்களைத் தூசு துடைத்து விற்ற கிழவியின் உழக்கு நெளிந்து கேட்பாரற்றுக் கிடக்கிறது விரிவாக்கப்பட்ட சாலையின் பாதி இடிந்த நிறுத்தச் சுவருக்கு அருகே.
யாரையோ காவு கொள்ள வந்து வழி தெரியாமல் 
மயங்கிக் கிடக்கும் எமனின் முகத்தில்
யாரோவொரு புண்ணியவான் தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்கிறார்.  ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கிறது பெயரழிந்தும் கம்பீரம் குறையாத பழைய நிறுத்தம்.

----
ஒவ்வொருவருக்குள் ஒரு பிம்பம் ஒளிந்திருக்கும். அது ரகசியமானதாகவும் இருக்கும். காதலின் தொடராக... காமத்தின் நிழலாக... இப்படி எத்தனையோ... இங்கும் ஒரு பிம்பம் ஒரு சவத்தின் அருகில் நின்று தன்னைக் காட்டிக் கொள்ளாமல் நிகழ்த்தும் செயல்... கவிதையாக! வாழ்வியலில் யாரும் பார்க்காத ஒரு கருப்பு பக்கமாக...

அதிர்ச்சியுடன் அரக்கப்பரக்க வந்து என் பிணத்திற்கு மாலையிடுகிறாய்
நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்க்கிறாய்
யாரும் கவனிக்காத போது 
எட்ட நின்றவாறே, என் உதடுகளில் முத்தமொன்றைச் சேர்க்கிறாய்
'எப்படி நிகழ்ந்தது?' என்ற கேள்வியை
வேறு பக்கம் திருப்புகிறாய்
ஏதோ நினைவு வந்து, கண்களுக்குள்
செல்ஃபி எடுத்துக் கொள்கிறாய்
நெற்றியில் இருக்கும் நாணயத்தை எடுத்து, அடுத்த விளையாட்டிற்குப்  'பூவா தலையா?' போட விழையும் அபத்த சிந்தனையைத் தலையிலடிக்கிறாய்
கட்டுகளை அவிழ்த்து விட்டு
ஒற்றை உதிர்த்துவிட மாட்டேனாவென
உற்றுநோக்குகிறாய்
அமைதியாய் இறைஞ்சும் 
உன் கைபேசிக்குக் காது கொடுத்து
துளிக்கண்ணீரால் என் உருவம் துடைத்தபடி காலைத் தூக்கிப் போடும் உன் நடுச்சாமக் கனவை ரசித்துக் காண்கிறது பாதி கரைந்த பசிய நிலா.

______

வீடு கூடாக மாறுகிறது... வாழ்க்கை பறத்தலின் விதிகளோடு நகர்கின்றன... அலைச்சலின் மிச்சம் வாழ்வில் தொங்கிக்கிடக்க நாளினை நகர்த்தும் வாழ்க்கை கவிதையாக....

என் கூட்டில் தான் இருக்கிறேன்
என் கூடு போலவே இல்லை
என் அலகு கொத்தி வந்த குச்சிகளில்
ஒன்றுகூட இல்லை
நனைதலுக்காக ஒடுங்குதல் இல்லை
உலர்தலுக்காக சிறகடித்தல் இல்லை
குளுமை இல்லை
வெக்கை இல்லை
இரைக்காகக் காத்திருத்தல் இல்லை
எதையோ பற்றிக் கொண்டு
எங்கோ தொங்குகிறது
வெளியேறுதலும் திரும்புதலும் ஒரு நாளினை நகர்த்தி வைக்கிறதன்றி வேறொன்றுமில்லை
இருப்பைச் சுருக்கி காற்றில் அலைகிற கூட்டின் மீது குவிந்திருக்கிறது யாருடையதோ அம்புக்குறி.


________

அரசியல் பேசாத கவிதைகள் அழகு சாதன பொருட்கள் மட்டுமே.. வாழ்க்கையின் ஓரம்சம் அரசியல்.. நாம் பல் துலக்கும் டூத் பேஸ்ட்டிலிருந்தே தொடங்கிவிடுகிறது அரசியல் வாழ்க்கை... நாம்தான் நம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்... இதோ கவிஞரின் இன்றைய அரசியல் மேசும் கவிதை...

நீர் நிறைந்த 
பொருளாதாரப் பானையைத் தோளில் தூக்கி
அரிவாள் நுனியால் பொத்தலிட்டு
முச்சந்தியில் போட்டுடைத்து 
அநேக ஆரவாரங்களுடன் 
சுடுகாடு நோக்கிப் போகிறாள்
பழம்பெரும் தாய்.

புத்தோவியம் வரையவென 
காந்தியிடம் திருடப்பட்ட
குட்டி பென்சிலால் தான்
அகிம்சைக்கான
எல்லைக்கோடுகள் வரையறுக்கப்படுகின்றன.

சட்டத்தின் முன் சாதாரணர்களை மட்டும் கொன்று
தடையில்லாச் சான்று பெற்று
வெளிநாடு தப்பியோடத்
தயாராய் இருக்கிறாள்
நீதி தேவதை.

'சில்லறை'களாகக் கொட்டுகிறது
தனியுடைமைத் தானியங்கி.
எங்கள் பிச்சைப் பாத்திரம் நிரம்பத்
தடையாய் இருக்கிறீர்கள்.

மேலும், வீரம் வெட்டப்பட்டு
முழுச்சம்'மதத்'துடன்
கோழையாக்கப்பட்ட எங்களுக்கு
தகர்த்தெறிவதைத் தவிர
வேறு மழுங்கடிப்பில்லை...
மன்னியுங்கள் லெனின்.

_______

இதுவும் கூட ஓர் அரசியல் கவிதைதான்.. தன் மானமில்லாத அரசியல்வாதிகள் பணம் மட்டுமே குறிக்கோளுடன் வாழ்பவர்கள்.. அவர்கள் அவமரியாதைகளை பொருட்செய்ய மாட்டார்கள்... எதையும் துடைத்தெறிந்துவிடுவார்கள்... ஆனால் பேனாவின் ஈரம் அப்படியில்லை...

நீங்கள் எல்லாவற்றையும் துடைத்துவிடுவீர்கள் 
அல்லது துடைத்துவிட்டதாய் 
மாயம் செய்வீர்கள்.

புட்டத்தில் ஒட்டிய தூசி
குதிகாலில் படிந்த சேறு
தலையில் விழுந்த எச்சம்
தரையில் சொட்டிய தேநீர் 
வழிந்தோடும் வியர்வை
உணர்வற்றுப் பிரியும் சிறுநீர்
கண்ணெதிரே கொட்டிய ரத்தம்
கழுவிக் காய வைத்த கண்ணீர் இன்னும் உலராத முத்தம்
உச்சியில் தோய்த்த எண்ணெய்...

எல்லாவற்றையும் 
அடையாளமே தெரியாதபடி
துடைத்துவிடுவீர்கள்
அல்லது துடைத்துவிட்டதாய்
மாய்மாலம் செய்வீர்கள்.

பேனா ஈரம்
அவ்வளவு சீக்கிரம் உலர்ந்துவிடாது.

_______

கவிஞரின் கவிதைகள் இன்னமும் சில...


நமக்கு இடையில் ஓடும் நதியில் ஒரு கை அள்ளி யாரோ முகம் கழுவுகிறார்கள்.
கரை மரம் உதிர்க்கும் இலை நரம்பை இறுகப் பற்றியவாறு மறுகரை நகர்கிறது காலச் சுள்ளான்.  குனிந்து தாகம் தணிக்கும்  குதிரையின் கடிவாளத்தில் இழுத்துப் பிடித்து உலர வைக்கப்பட்டிருக்கிறது நம்
அதீத இச்சையும் அதீத இயலாமையும்.
மற்றொரு பருவத்திற்கு கண்கட்டி அழைத்துச் செல்லும் பெருந்தலைவனிடம் ஒப்படைத்து 
கொஞ்ச காலம் கவனம் சிதறி இருப்போம், எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும்.
மூடிக் கிடக்கும் நம் உளுத்த கதவுகளைப் பெயர்த்து டிஜிட்டல்மயமாக்க வரும் ஒப்பந்தகாரன் கண்ணை உறுத்தும்முன் நம் பிணம் எரிக்க இப்போதே பதுக்கி வைப்போம் இதம் தரும் முற்றத்து வேம்பை.

_______

முத்தமெல்லாம் பிறகு தான்...
கைகளுக்குள் முகம் அள்ளி
நெஞ்சாரக் கழுவுவாய்.
ஆறடி ஆளுக்குள்
ஆயிரம் அடி இறங்கும்
'ஆள்'துளைக் காதல்.

______

எனக்குப் பசிக்கிறது தான்
பேய்ப்பசி தான்
ஆளையே தின்றுவிடும் அகோரப்பசிதான்
பசியில் கண்மண் தெரியவில்லை
நேரம், ருசி, வெந்தது, வேகாதது
பழையதா, புதியதா
சைவமா, அசைவமா
தொண்டையில் சிக்குமா
செரிக்குமா, உபாதை தருமா
பசி எல்லாவற்றையும் மறைக்கிறது
முடி கண்ணுக்குத் தெரியவில்லை
நஞ்சு நாக்கு அறியவில்லை. என்றாலும்...
கெட்டுப் போனதையும் மலத்தையும் 'திணித்தால்' தின்று கொழுத்துவிடாது 'வடக்கிருந்து' உயிர்விடும் என் பசி.

________

ஒரு புள்ளி வைக்கிறேன்
அதைத் தொட்டுப் பார்த்து ஆசுவாசம் கொள்கிறாய்.  புள்ளியிலிருந்து எழும் இசைக்கு ஸ்வரம் கூட்டுகிறாய்.
புள்ளியிலிருந்து ஒரு நீள்கோடு
குவியும் ஒளிக்கனவு
படரும் பச்சையம்
பறக்கும் சாம்பலை
ஒரே மூச்சில் உள்ளிழுக்கிறாய்.
ஒரு பெருமழைத்துளி 
மிகச் சரியாக அப்புள்ளியின் மீதே விழுகிறது.

_______

என் இடத்தை நானே நிரப்பிக் கொண்டிருப்பேன்.
மௌனம், வலி, வேதனை, கண்ணீரால் தானாகவே பூர்த்தியாகியிருக்கும் என் வெற்றிடம்.
போலித்தனங்களால் தோண்டிய புதைகுழியில் என்னைத் தலைகீழாகப் புதைக்க முயல்கிறாய்.
பச்சாதாபத்தோடு நீ தரும் பச்சைத்தண்ணீர் கூட சுத்திகரிக்கப்பட்ட என் சிறுநீரே.
வியர்வை வழிய என்னை மிதித்து
நீண்ட வரிசையில் நிற்கும் என்னிடமே
மலிவாக நீட்டுகிறாய் பஞ்சாமிர்தமாய்.
பல்லாண்டு பிரார்த்தனைகளின் முடிவில், சப்புக் கொட்டி என்னையே
நக்கத் தலைப்படுகிறேன் நானும்.
விறைத்துக் கிடக்கும் என்னை எரித்து
விபூதியாகப் பூசிக் கொள்.
இனி நீ, மொட்டை அடிக்கவோ அதற்கான டெண்டர் விடவோ அவசியமிருக்காது.

__________

இந்த முறை திருவிழாக் கூட்டத்தில் நிச்சயம் தொலைந்து போவேன்.
இத்தனை நாள் தவிப்பு அடங்க
தூக்கித் தொலைதூரம்
கொண்டு சென்று 
மொத்தமாய் முத்தக் கொலை செய்.
நீ வருவாயெனக் காத்திருந்து
திருவிழாக்களைத் தொலைக்க
இனியும் என்னால் இயலாது.

_______

எங்கு பார்த்தாலும் சொல் தான்...
சொல் மீது இடறி
சொல் மீதே விழ வேண்டியிருக்கிறது.

இக்கட்டான தருணத்தில்
சொல்லி வைத்தாற் போல
எல்லாச் சொற்களும் 
தனித்து நிற்கின்றன.

சொல் மீதேறி வந்து
சொல்லம்பு எய்தி
சொற்குருதி பருகிச் செல்கிறது
ஒரு வன்சொல்.

பொத்திப் பொத்திப் பாதுகாத்தாலும்
கையளவு சொற்களாவது
களவு போய்விடுகின்றன
அந்தந்தப் பருவத்தில்.

மின்னிக் கொண்டிருக்கும் போதே
உதிர்ந்து சாம்பலாகி
உருத் தெரியாமல் ஆகிறது
நட்சத்திரச் சொல்லொன்று.

நம் காலத்திலேயே புதைத்து
நம் கண்முன்னேயே அகழ்ந்தெடுத்து
நம் பாரம்பரியம் என
நம்மிடமே கையளிக்கப்படுகிறது
'தெய்வீக' அந்நியச் சொல்.

யாரோ எதையோ எதற்கோ நோண்டி
தடவி வைத்த சொல்லை ருசித்து
காலந்தோறும் நோய் பரப்பும்
ஈக்களின் மீது
கவனமாய்த் தெளிக்க வேண்டும்
வீரியம் மிகு பூச்சிச்'சொல்'லியை.

_______

ஒரு கதவு அடைத்திருக்கிறது...
காமக் களியாட்டத்தின் தொடக்கம்
தற்கொலை முயற்சி
ரகசிய பேரம்
விட்டு விலகுதலுக்கான 
கடைசி முத்தம்
வெளியே தூக்கி எறிவதற்கான
ஒரு சொல்
அவசரமாக அடங்கும் துளிக்கண்ணீர்
துண்டிக்கப்பட்ட பகல் கனவு
ஏதோவொன்று
திறந்திருக்கும் மற்றொரு கதவின் மீது
பழிபோடத் தயாராக இருக்கிறது
அல்லது ஒரேவொரு கதவாக உருமாறுவதற்கான சாத்தியங்கள் மீது
'நிலை' கொள்கிறது.

_________

உயர்த்தப்பட்ட 
இடது உள்ளங்கையில்
வலது விரல்களால்
நடுவர் காட்டுகிறார்
ஸ்ட்ரேட்டஜிக் டைம் அவுட்.
கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள்
அவசரம் அவசரமாகச்
சிறுநீர் கழித்துவிட்டு,
தன் செயல்களை
மீண்டும் தொடரப் பழகிக் கொண்டார்
புராதானக் கடவுள்.

-----------

தூக்குக் கயிறு
அரளி மசி
திணறும் புகை மூட்டம்
கொளுத்திக் கொள்ளத் தீ
மலையுச்சி
கட்டுக்கடங்கா வேகம் என
எவ்வளவோ இருந்தும்
பொசுக்கெனப் போகும்படி
ஒரேவொரு சொல்.

-----------

உன்னிடம் தான்
எல்லாவற்றையும் கற்றேன்.

எப்படிப் பார்ப்பது
எப்படிச் சிரிப்பது
எப்படித் தயங்குவது
எப்படி மயங்குவது
எப்படிச் சொல்வது
எப்படிச் சேர்வது
எப்படி விலகுவது
எப்படி அழுவது...

எல்லாவற்றையும் 
கற்றுக் கொடுத்த நீ,
எல்லாவற்றையும் மறைத்து
உள்ளுக்குள் 
எப்படிப் புழுங்குவது என்பதை மட்டும்
கற்றுத் தர மறுத்து
எதுவுமே தெரியாதது போல் கடந்து சென்று
கேலிச் சிரிப்பை உதிர்க்கிறாய்.

-----------

இன்னும் விலக்கி வைக்கப்படுகிறது கறுப்பு
சாதுர்யமாகவும் சடங்காகவும்.
துக்கம் தடவி வந்த கறுப்புக் கடிதங்கள்
கிழிபடாமல் பத்திரமாக இருக்கிறதா எவரிடமும்?
மேகத்தைப் போலவும்
இருளைப் போலவும், கறுப்பு
தன்னை வெளிப்படுத்தத் தவறாத போதும்
ரகசியங்களைப் போலவும்
மர்மங்களைப் போலவும்
மிகவும் கண்ணியமாகப் பாதுகாக்கப்படுகிறது.
காணாமல் போய்விடாது
தொலைக்கவும் முடியாது
குறிப்பாக எழுதப்படாத எழுத்துக்களைப் போல
வாழ்வு முழுதும்
வலம்வரக் கூடியது கறுப்பு.
விலக்கினாலும் விலகாமலும்
விளக்கினாலும் விளங்காதது போலவும்
கள்ளத்தனமாக யாருடைய பெட்டிக்குள்ளோ
பணத்தைப் போல
பதுங்கிக் கிடக்கிறது கறுப்பு.
விவரமறிந்த யுவனோ யுவதியோ
ஒவ்வொரு வட்டத்தையும்
அதீத நம்பிக்கையுடன் கறுப்பாக்குகிறார்கள்.
காரணம் இல்லாமலா
கறுப்பைப் போல உன்னத நிறம்
வேறெதுவும் இல்லையென
சங்கோஜத்துடன் ஒப்புக்கொள்கிறார்
நம்மைப் பிணமாகப் பார்க்க ரசிக்கும் 
தோழர் வெட்டியான்?

-----------

யாரோ தொலைத்த சாவியைக்
கையிலெடுத்திருக்கிறேன்.
அது இன்னும் துருப்பிடிக்கவில்லை.
தன் பழைய கதவுத் துவாரத்தை
தொங்கிய ஆணியை
ஒளித்து வைக்கப்பட்ட மறைவிடத்தை
மெழுகில் நகலெடுக்கப்பட்டதை
தன்னால் மட்டுமே திறக்க முடியுமென்கிற
அபார நம்பிக்கையை
தன்னை வார்த்தவனின் கைத்திறமையை
பூட்டின் இசைவை
எப்படியும் கண்டடையப்படுவோமென
மறதியாக வைக்கப்பட்ட இடத்தை
மறக்க முடியாமல் மருகும்
அதன் முனகலையும் கையிலெடுத்திருப்பதாக
தன்னை உணர்கிறது சாவி.

நெகிழும் ஒரு மகிழ்வை
எளிதாகத் திறந்ததாக,
அடக்க முடியாமல் ஒரு துக்கத்தை
அவ்வளவு வேகமாகப் பூட்டியதாக
அசைபோடும் சாவியை வைத்துக் கொண்டு
நடுத்தெருவில் நிற்கிறேன்...
இழுத்துப் பூட்டப்பட்ட கதவைப் போல.

View

மாதாந்திர பரிசு

கருவை ந. ஸ்டாலின்

View

மாதாந்திர பரிசு

பாண்டிய ராஜ்

View

மாதாந்திர பரிசு

மு. முபாரக்

View

மாதாந்திர பரிசு

ஷீலா கடற்கரை

View

கவிச்சுடர் விருது

தங்கேஸ்வரன்

'நீர்க்குமிழ்களின்முகங்களில் நெக்குருகிப்போய்
என்முகத்தைதேடிப்பார்க்கிறேன் இப்போது
அதுஏற்கனவே ஒருநீர்க்குமிழியின் முகமாகியிருந்தது
உடையாதநீர்க்குமிழியின்முகமாய்.....'

 கவிஞர் தங்கேஸ்வரன் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு சின்னமனூரை சேர்ந்தவர். தற்போது தேனி மாவட்டம் ஹைவேவிஸ் அரசு மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிகிறார்.

அது மட்டுமில்லாமல் தமிழார்வம் அவரது சுவாசம் என்பதால் நிறைய கவிதைகளையும் எழுதிவருகிறார். கல்கி, கணையாழி, செம்மலர், வண்ணக்கதிர், தகவு மற்றும் கொலுசு போன்ற சிற்றிதழ்களிலும் அவரது கவிதைகள் தொடர்ந்து பிரசுரம் கண்டுள்ளன. 

இவரது முதல் கவிதை தொகுப்பான 'தங்கேஸ் கவிதைகள்' சென்ற ஆண்டு கவிஞர் பிறைசூடன் அவர்களால் வெளியிடப்பட்டது. தற்போது கலில் ஜிப்ரனின் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு ' முறிந்த சிறகுகள்' என்ற பெயரில் அவரால் தொகுக்கப்பட்டு விரைவில் வெளிவர தயாராகவும் இருக்கிறது. 

இவரது கவிதைகளின் மேன்மையைப் பாராட்டி நமது படைப்புக் குழுமம் ஜூலை  மாதத்திற்கான கவிச்சுடர் விருதினை தங்கேஸ்வரன் அவர்களுக்கு அளித்து கௌரவம் செய்கிறது...

இனி கவிஞரின் படைப்புகளைக் காண்போம்

பழைய நினைவுகளென்பது வாசம் நிறைந்ததாகவும் இருக்கும். சில நேரம் துர் நாற்றம் நிறைந்ததாகவும் இருக்கும். நல்ல நினைவுகளை எப்போதும் அசைபோட்டு ருசிக்கலாம்...அனால் கசப்பான நினைவுகள் அப்படி இல்லை என்பதை இந்தக் கவிதையின் ஒரு படிமக்கூறு மூலமாக அழகாக சித்தரிக்கிறார்...

துருவேறிய நினைவுகளை
விரல் பருமன் தூசி படிந்து கிடந்த
பழைய டிரங்குப்பெட்டிக்குள்
மூச்சு வாசனை ஏறிய
பழைய காகிதங்களைக் 
கண்டன சில 
சுண்டெலிகள் ஒரு நாள் இரவு
அவற்றில் உடல்சூட்டின் ருசியறிந்து
கடித்து தின்றன முழு இரவும்
செரிக்கவும் இயலாமல்
துப்பவும் இயலாமல்
துருவேறிய நினைவுகளை தின்று
மதிமயங்கி கிடங்கின்றன
யுகம் யுகம் கடந்த பின்பும்

***
 
கவிதையின் வடிவம்தான் என்ன?, கவிதை இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரையறை இருக்கிறதா? மரபு மட்டுமே கவிதையா?, நவீனம் பின் நவீனம் சண்டைகள் ஏன்? இத்தனைக்கும் ஏன் இத்தனை பிதற்றல்? வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று யார்தான் தீர்மானிப்பது?

ஒரு கவிதை இவ்வளவு கடினமாக
இருக்க வேண்டுமா?
ஒரு கவிதை இவ்வளவு எளிமையாக
இருக்க வேண்டுமா?
எதுகை மோனை படிமம் குறியீடு
உருவம் உள்ளடக்கம் புதுமை கற்பனை
நவீனத்துவம் பின் நவீனத்துவம்
மற்றும்.... மற்றும்
வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை
உதைத்து பீறிட்டது
நான் எப்படி இருக்க வேண்டுமென்று
யாரடா தீர்மானிப்பது?

***

படிமங்களுக்குள் நுழைந்து கொண்டு விளையாட காதலர்களுக்கு ஆசை.... அதுவும் எப்போதுமே காதலென்றால் பட்டாம் பூச்சிகள் பறந்து வந்துவிடும். 

அவன் துரத்த அவள் பட்டாம் பூச்சி
அவள் துரத்த அவன் பட்டாம் பூச்சி
மீள் உரு கொள்வதற்கும்
வெகுதொலைவுக்கு அப்பால்
துரத்தப்பட்ட பட்டாப்பூச்சிகள் குழம்பின
இனி யார் துரத்தினால்
யார் யாரின் பட்டாம் பூச்சி
யார் யாராய் ஆவதென்று!

***

வீடு என்பது அச்சமற்றதாக இருக்கவேண்டும். வீடு பெண்களின் இரசனைக்கான கைவினைகள். அதுவும் கிராமத்து வீடுகளென்றால் சொல்லவே வேண்டாம். பசுஞ்சாணம் மெழுகி.. பஞ்சாரத்துக் கோழிகள் நிறைந்து... அரிசிக்கழுவும் தண்ணீருக்காகவும் அருகில் நின்று தலையுரசும் ஆடுகள் வரை ஒரு சப்தம் நிறைந்த வெளியாக இருக்கும்.. அப்படி இருந்த வீட்டிலிருந்து நகரத்திற்கு வாழ்க்கைப்பட்டு போன பேத்தி கதவின் அழைப்பு மணி அடித்தாலே அச்சத்துடன் குவியத்தில் வந்திருப்பது யாரென்று அறிந்த பின்பே கதவைத் திறக்கிறாள்... 

 பசுஞ்சாணத்தில் மெழுகிவிடுவாள் தெரு வாசலை
பசலைக்கீரை நிறத்தில் கருக்கலிலேயே 
தொழுவத்தில் கட்டியிருக்கும் பசுங்கன்றும் 
வெள்ளாட்டுக்குட்டியும் சங்குப்பூனையும் 
சிம்மி நாய்க்குட்டியும்
நீச்சத்தண்ணீ கேட்டு 
பக்கத்து வீட்டு குட்டிக்காடுகளும் குருமான்களும்
சட்டமாக வீட்டுக்குள் நுழைந்து விடுவார்கள் 
சாணம் பதிந்த கால்களோடு
கழுத்தைக்கட்டிக்கொண்டும் 
முகத்தை உரசிக்கொண்டும்
முழங்காலைக்கட்டிக்கொண்டும் காச்சு மூச்சென்று 
கத்திக்கொண்டிருக்கும்
ஒவ்வொன்றும் காலையிலேயே....
தீம்பட்டி குழல் வைத்து அடுப்பூதிக்கொண்டிருப்பவள்
ஒவ்வொன்றொன்றுடனும் 
வழமை பேசிக் கொண்டிருப்பாள் சளைக்காமல்
ஒரு கரண்டியில் கொதிக்கும் கருவாட்டுச்சாறெடுத்து 
தாத்தாவின் உள்ளங்கையில் வைத்து 
உப்பு பார்க்க சொல்வாள் மறக்காமல்
சுயம் தொலைத்து நிற்க நேரமில்லாத 
இப்பெரு நகரத்தில் பிழைப்பிற்காக
பல்லடுக்குமாடிஒன்றின் ஒருதளத்தில் 
அடைந்து கிடக்கும் கிராமத்தானுக்கு

இப்போது எந்தஅழைப்பு மணி ஒலித்தாலும்
ஒற்றறியும் லென்ஸ் மூலம் 
வெளி முகம் பார்த்து கதவு திறக்கும் வரை
அடிவயிற்றிலிருந்து பீறிட்டெழும் 
பயத்தையும் தாண்டி
பார்வதி பாட்டியின் சிரித்த முகம் 
எட்டிப்பார்ப்பதை மட்டும்
ஏனோ தவிர்க்கவே முடியவேயில்லை  

***

உரையாடல்கள் நிகழ்த்தாமல் எதுவுமே இங்கு நிகழ்வதில்லை. உரையாடல்கள் சில நேரம் நீண்டுகொண்டே செல்லும்.. சில நேரம் சட்டென்று முடிந்துவிடும்.. இவை பரவாயில்லை . சில உரையாடல்கள் வாய்தா வைத்துவிட்டு நகரும்... அதன் முடிவறியாமல் நாம் குழம்பி நிற்போம்.. இங்கும் சில உரையாடல்கள்...

முடிவற்ற நீண்ட உரையாடல்களை 
வளர்த்துக்கொண்டிருந்தோம்
நாங்கள் இருவரும்
இறுதியில் நாளை தொடரலாம் என்று 
விடைபெற்றதுமழை

ஒரு வார்த்தை உரைக்காமல் முகத்தோடு 
முகம நோக்கி கிடந்தோம்
நாளை நோக்கலாம் 
என்று விடைபெற்றது நிலவு

வந்ததிலிருந்து வார்த்தைக்கு வார்த்தை
வாயாடிக்கொண்டிருந்தவளிடம்
சரி சரி சண்டை வேண்டாம்...
நாளை பேசித்தீர்த்துக்கொள்ளலாம் என்றேன்
எதுவாக இருந்தாலும்
இப்பொழுதே பேசி தீர்த்து விடுவோம் என்று
சட்டென்று மார்பில் சாய்ந்தாள்!

***

இயற்கை காட்சிகள் மனதிற்கு இதம் தரக்கூடியவை. வனத்திற்குள் செல்பவன் விலங்குகளாகவே வாழ்கிறான் என்பது ஒரு ஜப்பானிய பழமொழி... கவிஞரும் இயற்கையின் காட்சிகளில் நுழைந்து காணும்போது அதன் வடிவங்கள் மாறி அழகூட்டுகின்றன...

பட்டாம் பூச்சியின் சிறகென விரிந்திருக்கும்
யாழினி பாப்பாவின் விரல்களின் வழியாக
சொட்டுகிறது இன்றைய
அதிகாலை துளித்துளியாக

தற்போதே திறந்திருக்கும் செம்பருத்தி மொட்டின்
பச்சையத்திலிருந்து பிறந்திருக்கும்
என நம்பக்கூடும்
ஒரு விரலளவு தேன் சிட்டு

மாராப்பின்றி திறந்திருக்கும்
மஞ்சள் அரளிப்பூவின் மார்பில்
கொஞ்சம் தாய்ப்பால் அருந்திவிட்டு
இடமும் வலமுமாய்
இலைகளில் துடைத்துக்கொண்டிருக்கிறது
குட்டியே குட்டியான அலகை

பனி தெளித்த வாசல்களில் உதிர்ந்து கிடக்கும்
மஞ்சள் சிவப்பு மற்றும் வெள்ளை வார்த்தைகளோடு
கொஞ்சம் கட்டிப்புரண்டுவிட்டு
பக்கத்து தென்னைக்கு தாவும்
அணிலொன்று
தலைகீழாய் நின்று விச் விச் விச்
கத்தும்போது
துடிக்கும் குறியென ஆடி அதிரும்
அதன் வாலுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும்
இணையின் இருப்பிடம்

இரவெல்லாம் பாதங்களை சுமந்து சுமந்து
இப்பொழுதுதான்
சற்று கண்ணயர்ந்திருக்கும்
இந்தத் தெருவை வன் புணர்ந்து எழுப்பிட மனமின்றி
மௌன வலம் வந்து என் வாசலில்
முடித்துக்கொள்கிறது
தன் திட்டமிடாப் பயணத்தை
இந்தக் கவிதை

***

ஆண்பாதி பெண்பாதியென வாழும் அர்த்த நாரீஸ்வர் நிலை காமத்தின் களவாடலில் நிகழ்கிறதை அழகாக விவரிக்கும் இந்தக் கவிதையில்தான் எத்தனை சுவை?

வலது மார்பில் இடது கன்னத்தை சாய்த்து
துயில் கொள்கிறாள்
ஒரு புன்முறுவல் தேங்கிய உதடுகளோடு

என் வலது கை அனிச்சையாய்
அவள் கழுத்தை மாலையிட்டுப் பிணைத்திருந்தது

நிழல் விழுந்தாலே சப்திக்கும்
அடர் மெளனம் கரைந்தோடுகிறது
இருளின் கருமையோடு
கால வெளிதனில்

விரல்களை விலக்கினாலும் சகியாத
துயரம் கொள்பவளாக துயிலாழ்ந்திருப்பவள்
சற்றைக்கெல்லாம் என்னை ஒரு கனவாக்கி
விழிகளுக்குள் இழுக்கிறாள்
தன் ஆகர்ஷனத்தின் வழியே

ஒரு வெண்புறா பக்கவாட்டில் சிறகு விரித்தது போல் என் மீது சரிந்திருக்கும்
இவளை வைத்த கண் விலக்காமல்
எத்தனை நேரம் பார்த்தேனோ

என் கர்வம் அழிந்து கொண்டிருக்கிறது
தடையின்றி
ஆண்டாண்டுகளாய் ஆண்டு வந்திருந்த

அத்துமீறும் ஆண் சாபம்
படுக்கையை சுற்றி உதிர்த்து கிடந்தது
சிறு சிறு இறகுகளாக
நான் அர்த்த நாரியாய் போக

மாதொரு பாகனாக இருப்பது எவ்வளவு மகத்தான அனுபவம்
இரண்டு இதயங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனவே
ஒரே மார்பில்

***
ஒரு கவிதைக்குள் நுழைந்து வெளிவருவதும் ஒரு போராட்டம்தான்.. ஆனால் அதற்குள் நுழையும் முன்பாகவே வியப்பாக நின்றால்  அந்தக் கவிதையும் விளங்காததுதான். இந்தக் கவிதையில் லூசிபர் லூசிபர் என்ற சொல்லாடலை தங்கேஸ் பயன் படுத்தியிருக்கிறார். யார் அந்த லூசிபர்... ஒரு பழைய ஏற்பாட்டின் மொழியாக்கம் லூசிபர் என்றால் சாத்தான் என்று வரையறுக்கிறது... லத்தீன் மொழியில் லூசிபர் என்றால் விடி வெள்ளியும் என்று பொருளுண்டு. இப்போது இந்த லூசிபரை பிடித்துக் கொண்டு இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள்... கவிதையில் தெளிவு பிறக்கும்...

ஒரு பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து
உன் கிரகத்திற்கு வருகிறேன்
எனக்கென்று வீடு வாசல் எதுவுமில்லை
சுழலும் உன் பூமியின் அச்சில் ஒரு துகளைப் போல ஒட்டிக் கொள்கிறேன்
புள்ளியாகவே இருந்தாலும் இருத்தலின் மன உளைச்சல்
என்னை பேரண்டமாக வெடித்து சிதறிப் போகும் படி செய்கிறது
பெயரிடப்படாத பால் வீதி எங்கும்
இலக்கற்று அலைகிறேன் ஊழிக்காலம் முதல்
நான் நீ சாதி மாதம் தேசியம் மனிதம் என
சமன்பாடுகளை
எழுதி எழுதி தீர்த்த பின்பும் 
தொக்கி நிற்கும் ஒரு கேள்வி சுருக்கு கயிறு போல
ஆதாமாக இருந்தாலும் இந்த தூக்கு கயிறை முத்தமிடாமல் செத்திருக்க மாட்டான்
லூசிபர் லூசிபர்
கடவுள் தன் அம்சத்தில் மனிதனை படைத்தாலும்
அவன் மனதுக்குள் உன்னைத் தானே
சிறு மீன் குஞ்சென. நீந்த விட்டிருக்கிறான்..

***

கவிஞரின் மேலும் சில சிறப்பான கவிதைகள் :

கன்னக் கதுப்பில் வெடிக்கும்
வெட்க குமிழ்களில் 
உடைபடுகிறது அவன் மனது
சிறு சிறு புள்ளிகளாக தோன்றிய சலனங்கள்
ஒரு பேரலையாக எழுந்து வருகிறது
உன் கடலில்
படகு கிடைக்காத பரிசல்காரன்
மிக ஆழத்தில் மூழ்கி 
விரும்பிச் சாகிறான் உன் விழியோரம்
முடிக்காத வார்த்தைகளில் தெறித்த
பிறைநிலாக்களை பொறுக்கி 
தலையணையாக்கி
இரவெல்லாம் தொடர்கிறான்
விட்ட இடத்திலிருந்து
கரும் உரையாடல்களை
உதடு கடித்த நளினத்தின் ஒரத்தில்
ஊறித் திளைத்த ரசத்தை
ஒருவருக்கும் தெரியாமல்
நீவிப்பார்க்கிறான் 
இரகசியமாக நள்ளிரவில்
என் ஆன்மாவை திறந்த இரகசியச் சாவி
தொலைந்து விட்டதென்று
ஏ உலகமே நீ இருளாகவே 
இருந்து விட மாட்டாயா?
என் கண்ணில் வலம் வரும்
அடங்காத கனவுகள்
சுதந்திரமாகவாவது வலம் வரட்டும்
இதே வீதிகளில்

***
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் நாம் தற்கொலை செய்து கொண்டோம்
பிரிவாற்றாத நம் ஆன்மாக்கள் ஒரு தேக்கு மரத்திலையில் போய் ஒட்டிக் கொண்டு
படபடத்தன
தீராத வலிகளைச் சுமந்தலையும் வார்த்தைகள்
இந்த பிரபஞ்சம் முழுவதும் 
அவர்களை கண்டீர்களாவென்று
நம்மை தேடியலைகின்றன
அவயங்களின் கூட்டுத் தொகுப்பு தான்
இந்த உடல் என்னும் மனிதர்கள்
முகம் சுளித்தபடி கடந்து செல்கிறார்கள்
நாம் நடந்த வீதிகளை
மது நெடி கசியும் வார்த்தையோடு
வந்தவன் சொல்கிறான்
உன் அன்பை இந்த தெரு நாய்க்கு பிச்சையிடு
தின்கிறதா பார்ப்போம்
அரூபமாக அலையும் ஆத்மாக்கள்
கிசு கிசுக்கின்றன
மனிதனின் நிழலை மட்டும் பெயர்த்தெடுக்க முடிந்தால்
எவ்வளவு நல்லது
தனிமையின் துயரமே அவனை சாகடித்து விடும்
இன்னொன்று கதைத்தது
இந்த நூற்றாண்டு மனிதர்களை
தனிமை சாகடிப்பதில்லை
வெளவால்களைப் போல எச்சமிடும் அவைகளில் கூடு கட்டி பழகியிருக்கிறார்கள்
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் மனப்பிறழ்வடையும் கடவுள்கள்
நேசிக்கும் இதயங்களை
யோசிக்காமல் கைவிட்டு விட்டு விடுகிறார்கள்

***

நிழல்கள்

மனிதர்கள் எல்லாம் உறங்கிய பிறகு
விழித்துப்பார்த்து கண்களை
உருட்டுகின்றன உறங்காத தெருக்கள்

மரித்ததாய் நாம் நினைத்திருந்த நினைவுகள்
பூப் போல உயிர்த்தெழுந்து நடைபயில்கின்றன
நடுநிசிக்கும் பின்பு
நாயின் கண்கள் அவைகளை அடையாளம் கண்டாலும்
அசட்டுக்குறைப்புகளுக்கெல்லாம் அஞ்சுவதில்லை அவைகள்

இருள் வடியும் சாலையும் சுற்றியலையும் சாபங்கள்
காலத்தின் முற்றிய வாசனைகளை தங்கள் மீது
கமழவிட்டபடி வீதியெங்கும் அலைகின்றன
இருள் நதிகளென

எத்தனை மூச்சுக்காற்றுக்கள் இங்கு முன்பு உலவினவோ
அதன் அத்தனை நிழல்களும் இன்னும்
உலவியவண்ணமே உள்ளன
மற்றும் நம் காலடிச்சுவடுகளில் முறிவதும்
அவைகளின் முதுகெலும்புகளோ என்னவோ 
யார் கண்டது?

இந்தக் கவிதையை நீ எழுதினாலும்
நான் எழுதினாலும்
எழுத வைத்த நிழல்களுக்கே சமர்பித்து விடு
என்று என் காதில் கிசு கிசுத்துவிட்டு
இருளில் இறங்கி மறைந்து போகிறது
இந்தக் கவிதைக்கான நிழல்

***

கன்னத்தில் பளாரென்று ஒரு அறை
கை வைத்து தடம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
வாய் மைதுனத்தைப் பற்றிய ஒரு கொச்சையான வசவு
தொண்டைக் குழிக்குள் கத்தியாய்இறங்குகிறது
எச்சிலூறி நிற்கும் ஒநாய்க்கு முன் குமட்டியபடி அவள் வாந்தி எடுக்க
ஆண்மை சுயமென்னும் கயமைத்தனம்
காட்டு யானை போல பிளிறுகிறது
பிறப்புறுப்புகளின் அடிப்படையில் பெண்களை வதைக்கும்
ஒரு கேடுகெட்ட சமூகத்தில்
ஆண்குறி திமிரின் உச்சமாக
எப்போதும்இறுமாப்பெய்திக் கொண்டிருக்கிறது

***


அழுது விடுவது என்று முடிவானவுடன்
இந்த கண்ணீரை உன்னையன்றி யாரிடம் சிந்துவேன்?
உன் அருகாமைக்கோ தொலைவிற்கோ
உன் கை என் மீது படரும் நினைவுக்கோ
அல்லது காரணமற்று அரும்பிய
முதல் துளி கண்ணீருக்கோ
அழுது விடுவது என்று முடிவானவுடன் . .

தூண்டிலில் அலகை தானே குத்திக் கொண்டு
இரத்தப் பிசுபிசுப்புடன் துடிக்கும் மீனுக்கு
தண்ணீரோ கரையோ
எல்லாம் ஒன்று தான்
துடித்து அடங்குவதற்கு
மற்றும் உன் நினைவுகளுக்கு புழுக்கள் ஆவதற்குத்தானே இதயத்தை வளர்ப்பது

***

என் இதயத்தின் சீரற்ற ஒசையை
பதிவு செய்யும் டப் லப் சப்தம்
உன் வருகையின் தாமதத்தில்
தொலைவில் வரும் வாகனத்தின் ஓசை
உன்னுடையதல்ல என்றாலும்
ஒரு முறை நிமிர்ந்து பார்ககாமல் ஆசுவாசம் கொள்ளாது மனது
பிடுங்கப்பட்ட நாற்றிலிருந்து வழியும்
மண் கலந்த நீரைப் போல வழிந்தோடும்
நினைவுகள் உன் வயல் தேடி
காணாத காற்றை கண்டவுடன்
கழுத்தை கட்டிக் கொண்டு கதறி அழும்
காட்டுக் கொடியின் ஜாதி நான் என்று
நீ அறிவாய் தானே ?

***
பட்டாம் பூச்சியாக படபடத்து உள்ளங்கையில் வந்து அமர்கிறது அது
மனது விடைபெறாமலே ஒரு காத தூரம் போய் விட்டது கழன்று 
நெகிழ்ச்சிக்கு ஒரு மழைத்துளி கூட தலை மீது விழவில்லை என்றாலும்
உச்சி முகர்ந்து ஆசீர்வதிக்கும்
ஒரே ஒரு செம்பருத்தி இலை போதும்
தரையில் இறக்கி விட மனதின்றி
உள்ளங்கையில் ஏந்தி நிற்கிறேன்
கோவில் தூணில் அசையாது நிற்கும் யாழியானேன் சற்று நேரத்தில்
சற்று நேரம் என்பதுயுகம் யுகங்களாகிறது
ஒரே ஒரு சருகுக்காக நின்று புறப்படும்
காலத்தைப் பார்க்கும் போது தான்
மிதக்கும் கடவுளிடம் கொஞ்சம் சிநேகம்
காட்டத் தோன்றுகிறது

***

காலுக்கு செருப்பற்றவர்கள் வெய்யிலோடு பூண்டிருப்பது வெறுக்கத்தக்க விரோதமல்ல
கொஞ்சம் கசப்பு கலந்த கட்டங் காப்பியின் துவர்ப்பு
ஒரு குடையின் கீழ் 
அறுந்த செருப்புகளை தைத்துக் கொண்டிருப்பவனுக்கு
ஒரு குடையின் கீழ் அரசாளும் கனவு
அவ்வப்போதுஇடைஞ்சல் தந்தாலும்
வாழ்க்கையோடு எந்தப் பிணக்குமில்லை
தெருமுக்கில் பெட்டிக்கடை வைத்திருக்கும் மணவாளனுக்கு
தினமும் பத்துப் பாடை பார்த்த பின்னும்
ஆழ்ந்ததூக்கத்தின் மீது அத்தனை விரக்தியுமில்லை
வார்த்தை கவசம் பூண்டு
சொற்போர் புரிந்து கொண்டிருக்கும்
ஒரு அலுவலக ஊழியனான எனக்கு
ஏனோ பார்ப்பவர் மீதெல்லாம்
இனம் புரியாத கோபம் 
 என் மகள் மீது கூட
ஒரு சின்னஞ் சிறிய சாக்லெட்டிற்கே
பெரும் அழுகையை நிறுத்தி அவள் சமாதானமாக விடும் போது கூட அல்ல
ஆனால் எதன் பொருட்டு அவள் அவ்வளவு சீக்கிரம்
சமாதானமானாள்
என்பதன் பொருட்டே

***

இந்த அற்புதமான அந்தி வானத்தை
தொலைக்காட்சிக்கு பலி கொடுத்தது
எத்தனை அபத்தம்?
ஓஷோவும் லாவோட்ஷும் நீந்திக் குளித்த இந்த மஞ்சள் நதியில் தானே
இந்த செம்பருத்தியும் 
ஈரம் படிந்ததலையுடன் குளித்து வந்திருக்கிறது
மனதை சுமந்தலையும் உனக்குத்தான்
ஒரு பில்லியன் டன் பாரம்
எனக்கு?
கடலை ஒரு மிடறில் உறிஞ்சிக் குடித்து விட நினைத்த 
 சித்தார்த்தன் தானே புத்தனான்
ஆனாலும் முதலில் மோட்சம் பெற்றது என்னவோ போதி மரம்தான்
சங்கரா சங்கரா சூத்திரர்கள் அவரின்
காலிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்றால்
உழைப்பின் சிறகுகளை மென்மையாக நீவி விடும்
இந்த இருள் காக்கை தரும் பேதமற்றநிழல் ஒன்றே போதும்
மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு 
விண்கலத்திற்கும் முன்பே
முதலில் உங்கள் சாதியை அனுப்பி விடாதீர்கள்

***

சாதி
இரட்டைக்குறிகள் முளைத்து விடுகின்றன
இடுப்பில் ஒன்றும் தலையில் ஒன்றுமாய் 
( சுட்டெலியின் விறைத்த காதளவு )
அந்தப் பெயரைக்கேட்ட புளகாங்கிதத்தில்
உள்ளே கொதிக்கும் இரத்தம் புகையாகி

அத்தனை துவாரங்களிலும் கசிகிறது
கருநீல நிறத்தில்

உடைவாளும் முறுக்கிய மீசையுமாய்
மூவேந்தர்களும் 
வலிமையான காட்டு விலங்கொன்றை
முன்விட்டு நடந்து வரும் தலைவர்களும்
முதன்மை திரை நட்சத்திரங்களும்
உடனடியாக வந்துவிடுகிறார்கள்
ஆண்ட பரம்பரையின் ஞாபகத்திற்கு என்றால்
நீ மட்டும் தப்புவதெப்படி ?

எண்ணிக்கையில் அதிகம்
வலிமையில் அதிகம்
அறிவில் அதிகம்
ஆற்றலில் அதிகம்
வாக்குகளில் அதிகம்
நீளும் பட்டியல் நீத்தார் பெருமையென

என்னையே கேள்

முகநூலில் ஜல்லிக்கட்டை ஆதரித்தவன்
காவிரி ஆணையம் வேண்டி குரல் கொடுத்தவன்
ஸ்டெர்லைட்டையும் நீட்டையும் இன்றும்
எதிர்ப்பவன்
(அனிதா நம் குடும்பத்தில் ஒரு பெண்தான் இன்றும் )
சமயங்களில் வண்ண வண்ண சட்டைகள் அணிந்து
கூட்டங்களுக்குப் போய் வந்தவன் தான்
ஆனாலும் சென்டை மேளத்திற்கும்
பாண்ட் வாத்தியத்திற்கும்
சிவகாசி பட்டாசுக்கும்
பலூன் போல் ஏன் உப்பிவிடுகிறது
அவயங்கள் ஒவ்வொன்றும் ?
என் நண்பனை கேட்டேன்
அவனுக்கும் இது போல் இது முளைத்திருக்க கூடும்
என்ற நம்பிக்கையில் தான்

சும்மாயிரு இது கடவுளின் தேசம்
கடவுளின் தேசத்தின் புளாங்கிதத்தின் உச்சத்தில்
இப்படி சமான்யர்களுக்கு முளைப்பது சகஜம் தான்
இல்லையென்றால் தான் ஆச்சர்யம்

உன் உடல் மீதும் ஆன்மாவின் மீதும்
முழுசுதந்திரமெடுத்து அது உரிமைகொள்ள
நீ ஆசிர்வதிக்கப்பட்டவன் போ என்றான்
அலட்டிக்கொள்ளாமல்

***

View

மாதாந்திர பரிசு

அ. முத்துவிஜயன்

View

மாதாந்திர பரிசு

கீர்த்தி கிருஷ்

View

மாதாந்திர பரிசு

மாறன் மணிமாறன்

View

மாதாந்திர பரிசு

முனைவர் வே. புகழேந்தி

View

மாதாந்திர பரிசு

சத்யா தமிழச்சி மருதாணி

View

கவிச்சுடர் விருது

தனபால் பவானி

'ஆடுவது
தாயமென்றாலும் கூட 
மீண்டும் மீண்டும் வெட்டுப்பட்டு
சிறைக்குள் சிக்கிக்கொள்ள
சம்மதிக்கிறது மனது
மகளிடம் மட்டும்' 

- கவிஞர் தனபால் பவானி தன் எழுத்துகளால் நம்மை வசிகரிக்கிறார். 

ஒரு கவிஞன் படைப்புகளோடு பயணிக்கும் போது வார்த்தைகளையும் சேர்த்து சுவாசிக்கத் தொடங்குகிறான்... கவிஞர் தனபால் அவர்களின் வார்த்தைகள் ஆக்ஸிசன் நிறைந்து வெளியாகிறது.

இந்த ஜூன் மாதத்திற்கான கவிச்சுடர் விருதினைப்பெறும் கவிஞர் தனபால் பவானி அவர்கள் ஈரோடு அருகில் உள்ள பவானியை இருப்பிடமாக கொண்டவர். தன் ஊரின் மீது கொண்ட அதீத நேசத்தின் காரணமாகவே தனது பெயருக்கு அருகில் ஊரையும் சேர்த்துக்கொண்டவர். கவிதைகள் மட்டுமல்லாது கட்டுரைகள், பட மற்றும் புத்தக விமர்சனங்கள் என்று பல்வேறு தளங்களிலும் சிறப்பாக எழுதிவருகிறார்.

படைப்பு குழுமம் தொடங்கப்பட்ட ஆரம்பகாலம் முதல் தன்னை இதில் இணைத்துக்கொண்டு பல படைப்புகளை கொடுத்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாத சிறந்த படைப்பாளிகளுள் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். படைப்பின் மீதுகொண்ட அதீத ஈடுபாட்டின் காரணமாக தகவு மாத இணைய இதழில் நிருபர்கள் குழுவில் ஒருவராக இயங்கி பல்வேறு கவிஞர்களை நேர்காணல் செய்திருக்கிறார். 2018ஆம் ஆண்டு தகவு இதழின் சிறந்த பங்களிப்பாளருக்கான விருதும் வழங்கப்பட்டது.

ஆரம்பகாலங்களில் நாளிதழ்களின் இலவச இணைப்புகளில் வரும் சிறு சிறு கவிதைகளைப் படித்து கவிதைகளின் மீது வந்த ஆர்வத்தால் எழுதத் தொடங்கியவர், தான் அன்றாடம் பார்க்கும் காட்சிகளை, கவனிக்கும் விஷயங்களை, எளிய மனிதர்களின் வாழ்வை, சந்திக்கும் சமூகப்பிரச்சனைகளை கவிதைகளாக, கட்டுரைகளாக படைக்கிறார். விரைவில் தன் படைப்புகளை புத்தகங்களாக கொண்டுவர முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.

இனி அவரது படைப்புகளை திறனாய்வோம் வாருங்கள்:

முரட்டு காற்றொன்றின்  வழித்தடங்கள் பாதிப்பின் சுவடுகளாக மாறிவிடுகின்றன... அதனை எதிர்க்கொள்ளும் மூங்கில்காடு முறியும் நிலையிலும் காற்றை உள்வாங்கி வெளிவிடும் மெல்லிசையில் புல்லாங்குழலாகி இந்தக்கவிதை தன்னை சான்றுபடுத்திக்கொள்கிறது...

வழிதெரியாமல் வந்துவிட்ட
சூறைக்காற்று மூங்கில்
காட்டுக்குள் மூர்க்கமாய் நுழைகிறது

காற்றில்
மோதிக்கொள்ளும் சருகுகள்
பயத்தில் படபடக்கின்றன

வேர்களின் விசும்பல்கள்
காடெங்கும் கேட்கிறது

மெல்லிய கிளைகளோ
சட்டென முறிந்து விழுகின்றன

சிறகுகள் வலிக்க
எதிர்க்காற்றில் பறக்கின்றன
பட்டாம்பூச்சிகள்

துளை விழுந்த மூங்கிலுக்குள் 
நுழைந்த வேகமான காற்று 
தென்றலாய் மறுபுறம் வந்தபோது 
மூங்கில் மாறியிருந்தது 
புல்லாங்குழலாய்

----
வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் இடம் இருக்குமென்றால் அது நாம் ஆதியில் தங்கிவாழ்ந்த வீடாக மட்டுமே இருக்கமுடியும். .. அதற்குள்தான் நம் பிள்ளைப்பருவங்கள் இன்னமும் விளையாடிக்கொண்டிருக்கும்... அதன் சுவர்கள் நம் பிஞ்சு விரல்களை பதிவு செய்திருக்கும்... இவற்றை நினைவுக்கூறும் கவிஞர்.. அதிலுள்ள மனித வாழ்வின் அடிமட்ட சோதனையையும் எழுதுகிறார்.. சொந்தவீடு வாடகை வீடாக மாறும் அவஸ்த்தை அதில் வாழ்பவர்கள் மட்டுமே உணரமுடியும். காலம் சுழற்றும்  சூழ்ச்சியில் இடம் மாறி அழகிய வேறொரு சொந்த வீட்டிற்கு திரும்பும் கவிஞர் தன் பிள்ளைகளின் காலடிக்காக ஏங்குகிறார்....

ஆதியில் ஒரு வீடு இருந்தது
பாதியில் இறந்துபோன தாத்தாவின் வீடு
கொலுசுகள் சிணுங்க சிணுங்க
சொந்தங்கள் சிரிக்க சிரிக்க
எங்கள் பாதங்களால் நிறைந்த வீடு அது

கடன் வந்து பாதிவீட்டை 
தின்று செரிக்க
வட்டியும் முதலும் 
மீதிவீட்டை செரித்து ஏப்பம் விட்டது
சொந்த நாட்டில் அகதியும்
சொந்த வீட்டில் வாடகையும்
சொற்களால் சொல்லிவிட முடியாத வலி

மழைவந்தால் மண்சுவர் கரையும் ஓலைக்குடிசைக்குள்
கண்சிமிட்டும் சிம்னி விளக்கின் ஒளியில்
ஒழுகும் இடங்களில் 
பாத்திரங்களை வைத்துவிட்டு
தூக்கமிழந்து உறைந்து ஒடுங்கி நடுங்கிய இரவுகளிலும்
ஈரப்பாதங்களால் 
நிறைந்தே இருந்தது அந்த வீடு

காலப்பெருவெளி அடித்துவந்த வாழ்வில்
வெளியூரில் இருந்தபடியே 
கட்டிமுடிக்க நேர்ந்தது
அடுக்குமாடி வீடொன்றை

வழுக்கும் தரைகளைத் துடைத்தபடி
அப்பாவும் அம்மாவும் வாழுமந்த வீட்டில்
எப்போது நிறையும் எங்கள் பிள்ளைகளின் பாதங்கள்..?\

--------

பெண்களின் காலச் சூழலையும் கால மாற்றங்களையும் காணும் போது ஒரு வெறுமை அதில் நிரம்பியிருக்கும்.  தன் தாயை தமக்கைகளை பார்த்து வளர்ந்தக் கவிஞன் அவர்களைப் போன்றோரின் தன் ஊர்ப் பெண்களின் கால மாற்றத்தையும் கணக்கிட்டு வேதனைக்குள்ளாழும் இந்தக் கவிதை மிகவும் சிறப்பானது...

எப்போது கோலப்போட்டி வைத்தாலும் 
தெருவடைத்து போடும் ரங்கோலியால் 
புருவமுயர்த்த வைக்கும் தேவி 
இப்போது தன் இரண்டாவது மகளுக்கு
சோறூட்டியபடி வேடிக்கை மட்டும் பார்க்கிறாள் 

ஏற்றிக்கட்டிய பாவாடையோடு 
ஆற்றில் இறங்கினால் அரைமணி நேரம்கூட 
மூச்சடக்கும் ஆனந்தி ஒட்டிக்கொண்ட 
ஆஸ்துமாவால் அவதிப்படுகிறாள் 

ஊருக்கே தையல்கலை சொல்லிக்கொடுத்த 
கலைவாணி வாக்கப்பட்டுப்போன இடத்தில் 
சாராயவாடையோடு பீடியிலிருந்து கசியும் 
புகைக்கு நடுவே விறகடுப்பில் 
சமைத்துக்கொண்டிருக்கிறாள் 

தூரிகையெடுத்தால் 
ரவிவர்மனுக்கே சவால்விடும் காயத்ரி 
சாயம்போன அழுக்கு நைட்டியோடு
குடியிருக்கும் வீட்டின் மூலைமுடுக்கெல்லாம் 
ஒட்டடை அடித்துக்கொண்டிருக்கிறாள் 

இளவரசிகளாய்ப் பிறந்து 
ராணிகளாய் வளர்க்கப்பட்ட 
பெண்களின் இன்னொரு பக்கம் 
யாராலும் துடைத்துவிடமுடியாத 
கண்ணீர்துளிகளால் நிரம்பியே இருக்கிறது 

----
வெட்கத் துகள்களுக்குள் ஒளிந்து கிடக்கும் பூகம்பம் என்று காதலை வர்ணிக்கும் கவிஞன் அவளின் கண்கள் கொத்துவதால் காதல் விஷம் ஏறுவதாக சொல்லிவிட்டு சற்றென்று நெகிழ்ந்து அவளது அழகு சலனமற்ற நதியென்றும் அதன் உதடுகளில் கவிதை சிக்கி உடைவதாகக் கூறுவதும்... காதலின் இரண்டாம்கெட்ட நிலையை அழகாக வடித்திருக்கிறார் இந்தக் கவிதையில்....

உன் வெட்கத்தின் துகள்களுக்குள்
ஒளிந்துகிடக்கும் பூகம்பங்களை
சட்டெனக் கட்டவிழ்த்து
நொடியில் நிலைகுலைய வைக்கிறாய்

சட்டையுரித்த பாம்பென 
மினுமினுக்கும் உன்
கண்கள் கொத்துவதால்
உடம்பெங்கும் ஏறுகிறது
அமிர்தமும் விஷமும்

சலனமற்று பாயும் நதியாய்
உன் பேரழகின் 
கரையோரத்தில் பயணித்து 
உதடுகளின் சுழலில் 
சிக்கி உடைகின்றன என் கவிதைகள்

எல்லா மின்னல்களையும்
கண்களுக்குள் வைத்துக்கொண்டு 
மென்பார்வைகளென மொழிபெயர்க்கிறாய்

குடையற்ற பொழுதொன்றில்
பெய்யும் பெருமழையென 
அழகால் மொத்தமாய் நனைத்துவிட்ட உன்னிடம் 
வேறென்ன கேட்டுவிடப்போகிறேன்
முத்தங்களால் துவட்டிவிடு என்பதைத்தவிர...!

----
குற்றமே கொள்கையென வாழும் அரசாங்கத்திடம் நியாயங்களை எப்படி எதிர் பார்க்க முடியும்? மக்களின் விரோத மனப்பான்மைக்கு ஜன நாயகம் என்று பெயரிட்டால் காறித்துப்பத்தான் தோன்றும்.. இதுவும் கவிஞனின் கோபம்தான்....

உங்களிடம் இன்னும் 
லத்திகளும் துப்பாக்கிகளும் 
மீதமிருக்கின்றன அதையும் 
அப்பாவிகள் மீது பிரயோகியுங்கள் 

பள்ளிகளுக்கும் கோவிலுக்கும் 
அருகில் ஆட்சியரின் அனுமதியோடு
சாராயக்கடை திறப்புவிழா 
நடத்துங்கள்  

அம்மணமான விவசாயிகளிடம் 
முண்டாசுகள் அவிழாமல் இருக்கின்றன 
அதை பிடுங்க ஆயுதப்படையை அனுப்புங்கள் 

உரிமைக்காக போராடும் 
மாணவர்களின் மீது 
உங்கள் கையாலாகாத்தனத்தை 
கட்டவிழுங்கள் 

பெண்களிடமும் 
பெரியவர்களிடமும் 
வன்முறையை நிகழ்த்தி 
உங்கள் வீரத்தை 
மெச்சிக்கொள்ளுங்கள் 

இன்னும் வாகனங்களும் 
வாழ்க்கையும் மிச்சமிருக்கின்றன 
அதையும் தீயிட்டுக் கொளுத்துங்கள் 

இறுதியில் இழப்பீடென 
எதையாவது அறிவித்து அதையும் 
உங்கள் சட்டைப்பையில்
திணித்துக்கொள்ளுங்கள் 

விவசாயிகளை மதிக்காத நாட்டில் 
மக்களை மதிக்காத மாநிலத்தில் 
மனிதனாய் வாழ நாதியற்ற ஊரில் 

தமிழ் புத்தாண்டென்ன 
ஆங்கிலப் புத்தாண்டென்ன 
போங்கடா நீங்களும் 
உங்க ஜனநாயகமும் ...!

------
பிணிப்படர்ந்த சூழலில் தொல்லைத்தருவது பிணி மட்டுமில்லை அதனைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளும்தான். அதன் துன்பவியலை கவிதையாக வடித்திருப்பது கவிஞரின் சுவாரசியம்

மெல்லத் தொடங்கும் 
இருளின் அடர்த்திக்குள் 
கருமைகவ்விய அச்சமொன்று
படர்ந்து நிரம்புகிறது

ருசி கேட்கும் நாக்கில்
மீண்டும் மீண்டும் அப்பிக்கொள்கின்றன
ரசத்தின் புளிப்பும்
கொதிநீரின் வழவழப்பும்

படுக்கைக்கும் கழிவறைக்கும்
நீளும் பாதையில் 
தன் அத்தனை முகங்களையும்
காட்டிச் சிரிக்கிறது பிணி

புரண்டுபடுக்கும் தருணங்களில்
மூக்கிலேறி நினைவுகளுக்குள்
கசக்கிறது மாத்திரைகளின் நெடி

அருகிலிருப்பவர்களின் 
கனவுகளோடு சேர்த்து 
உறக்கத்தையும் கலைக்கிறது
இருமல் சத்தம் 

நோய் பூசிய இரவை கடப்பதென்பது
காதலி மடியில் தூங்கி விழிப்பதுபோல 
அத்தனை எளிதல்ல...!

-----
இசைக்குறிப்புகளால் காதலை இசைக்கும் அழகான கவிதையொன்று:

நீ மூச்சுவிடுகிறாய்
ஒரு புல்லாங்குழல் தன்னைத்தானே இசைத்துக்கொள்கிறது

ஒரு வீணை 
கசியவிடும் ஸ்வரங்களென
உனக்குள்ளிருந்து வெளிப்படுகிறது 
உன் வெட்கச்சிணுங்கல்கள்

கூந்தலுக்குள் சிக்கெடுக்கிறாய்
சிதறிவிழும் கவிதைகளில்
ஒளிந்து கிடக்கின்றன சில சிம்பொனிகள்

ஆர்மோனியத்தின் 
கருப்பு வெள்ளை கட்டைகள் 
உனக்கு விரல்களாய்
வாய்த்திருக்கின்றன

யாழொன்றை மீட்டிட 
நீளும் கைகளிலும் ஒட்டிக்கொள்ளும்
உன் மெளனத்தின் பேரழகு

ரசனைக்குறிப்புகளால் எழுதப்பட்ட பெண்களுக்கு நடுவே
இசைக்குறிப்புகளால்  
எழுதப்பட்ட கவிதை நீ

------
மகளிடம் தோற்று விளையாடுவதில் ஒரு சுகம் இருக்கிறது... அவள் உயர்வதற்காக குனியும் தகப்பன் மனசில் ஒரு அழகியல் கவிதை:

ஒவ்வொரு முறை
உருட்டும்போதும்
ஒற்றைப்புள்ளிக்காய் ஏங்குகிறாள் 

தாயம் விழுந்து ஆட்டம் தொடங்கியதும் 
விருத்தங்களைப் பற்றிக்கொண்டு 
கட்டங்களைத் தாண்டிப் பயணிக்கிறாள்

துரத்திவரும் என் காயிடம் வெட்டுப்படாமலிருக்க
லாவகமாய் மலையேறிவிடுகிறாள்

விருத்தம் விழுந்தும் அவளிடம்
வெட்டுப்பட வேண்டுமென்றே
உள்ளிருக்கும் காய்களை நகர்த்துகிறேன்

மூன்று போட்டு வெட்டி சிறைவைத்து 
வெட்டாட்டம் ஆடி வேகமாய் பயணித்து 
தன் காய்களை பழம் எடுக்கிறாள்

ஆடுவது
தாயமென்றாலும் கூட 
மீண்டும் மீண்டும் வெட்டுப்பட்டு
சிறைக்குள் சிக்கிக்கொள்ள
சம்மதிக்கிறது மனது
மகளிடம் மட்டும்

----------
கடவுள்களைத் தேடி  ஒரு மூட்டை கேள்விகளோடு பயணிக்கும் கவிஞன்... பல இடங்களில் அவரைக் கண்டும் காணாதக் கவிஞன் இறுதியாக ஒரு பூங்காவிற்குள் உறங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறான்.. அவரை எழுப்ப மனமில்லாமல் கேள்வி மூட்டையை அவரருகில் வைத்துவிட்டுச் செல்வது ஆயிரம் பொருட்களை உணர்த்தும் கவிதை...

ஒரு மூட்டை நிறைய
கேள்விகளைச் சுமந்தபடி
தெருவில் இறங்கி தேடத்தொடங்கினேன்
கடவுளை

தெருமுனையின் தேநீர்க் கடையில்
பூமாலைகளுக்குள் 
சிறு சிலையாய் இருந்தார் ஒரு கடவுள்

ஊதுபத்தி வாசனையில்
மிதந்தபடி புகைப்படத்தில்
தொங்கிக்கொண்டிருந்தார்
இன்னொரு கடவுள்

மரத்தடி நிழலில் மழுங்க மழுங்க
விழித்தபடி அமர்ந்திருந்தார்
புதிதாய் முளைத்த கடவுளொருவர்

என்னையே இழுத்துக்கொண்டுதானே
போகிறார்களென புலம்பிக்கொண்டிருந்தார்
தேரில் ஊர்வலம் போகுமொறு கடவுள்

கடவுளைத்தேடி களைத்துப்போன
கால்களுக்கு ஓய்வு கொடுக்க
பூங்கா ஒன்றுக்குள் நுழைந்தேன்

அங்கே பக்தர்களின்
வேண்டுதல்கள் நிறைந்த  
மூட்டையைச் சுமந்தபடி
ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார் ஒரு கடவுள்

கேள்விகள் நிரம்பிய 
என் மூட்டையை
அவர் பாதங்களில் வைத்துவிட்டு
திரும்பிவிட்டேன்....!!!

-------

கவிஞரின் அற்புதமான மேலும் சிறந்த சில கவிதைகள்....

கழுத்தறுத்த கத்தி
குரல் நெறித்த தூக்குகயிறு
முகம் சிதைத்த அமிலம்
தேகம் தின்ற தீ
உடலேறிய வாகனம்
பூவைக் கொன்ற காமம்
துரத்தி குத்திய கூர்வாளென
ரத்தத்தின் பிசுபிசுப்பை 
புசிக்கும் யாவற்றிற்கும் தெரியாது
அது பெண்களின் உயிரென்பது

ஆறாம் அறிவில் ஓட்டைவிழுந்த
மூளை துருப்பிடித்த
புத்திக்குள் சாத்தான்கள் புகுந்துகொண்ட
சொற்களால் திட்ட முடியாத
பாவிகளின் கொடூரத்தை 
பார்த்து பார்த்து 
கடந்து கடந்து இதயம்
கனத்துப் போகிறது

***

சொற்கள் நிறைந்த வனமொன்றில்
வழிதவறி வந்துவிட்ட 
ஊமை ஒருவன்

தூக்கிச் சுமக்கும்
மெளனத்தையெல்லாம் 
ஒரு புன்னகையின் வழியாகவோ
ஒரு கண்ணீரின் வழியாகவோ 
இறக்கி வைக்க எத்தனிக்கிறான்

கடக்கும் எதிலும் 
ஏதோவொன்றை தேடுகிறான்
கண்டெடுத்த எதிலும் 
ஏதோவொன்றை இழக்கிறான்

ஒரேநாள் பொழிந்த பெருமழையில் 
வாழ்நாள் வறட்சியை தணிக்கிறான்
ஈரம் சொட்டும் மிச்சங்களில்
வாழ்ந்து விட நினைக்கிறான்

சேர்த்து வைத்த வார்த்தைகளுக்கு 
சிறகுகள் முளைக்கும் முன்
அவள் வந்து விட பார்க்கிறான்
காத்திருக்கும் காலம் யாவையும்
அவள் காலடியில் வைக்கிறான்

***

ஊரறிய அடைகாத்தவள்
வயிற்றுக்குள் தொப்புள்கொடிசுற்றி 
தலைமேலாய் கால்கீழாய் 
கிடந்த என்னை 
இரு உயிருக்கும் ஆபத்து 
என்று சொல்லியும்
வலிபொறுக்கா விடியலொன்றில்
பெரும்பாடுபட்டு பிரசவித்தாள்

எட்டி எட்டி உதைத்த என்னை
இடப்பக்கம் கிடத்தினார்கள்
முக்கி முக்கி பெத்தவள் 
நான் பசியால் அழுததை 
அன்று மட்டும் ரசித்திருப்பாள்

பின்னாளில் வளர்ந்த எனக்கு
ஒரு நன்னாளில் யாருக்கும் தெரியாமல்
சிறகுகளை தந்தவள்
தான் பார்க்காத வானத்தையும்
சேர்த்தே தந்தாள்

கிழிக்கப்படாத நாட்காட்டியில்
மாறாத தேதியைப்போல
அவள்காட்டிய திசைநோக்கி பறக்கும்போதெல்லாம் 
என் சிறகுகளுக்குள் பத்திரமாகவே இருக்கிறது 
அவள் வானத்தோடு சேர்ந்த 
என் வானமும்

***

கோடுகளால் நிறைந்த 
வனமொன்றை வரைந்து 
அதன் நடுவே 
வீடொன்றையும் வரைந்து வைத்திருந்தாள் 
வைஷ்ணவி பாப்பா

உதித்து வரும் சூரியனும்
சிறு நதியில் கவிழ்ந்த 
காகித கப்பலொன்றும்
வாலாட்டியபடி நாய்க்குட்டியும்
குஞ்சுகளுக்கு இரையூட்டும் பறவையும்
தூண்டிலில் மீன் பிடிக்கும் அப்பாவுக்கு 
உதவும் அம்மாவுமென வரைந்துவிட்டு

"இதுதான் என் வீடு நல்லா இருக்கா?" 
எனக் கேட்கிறாள் வைசு
"நீ எங்கே?" எனக்கேட்டால்
"நான் தான் வரைஞ்சிக்கிட்டு இருக்கேனே" என்கிறாள்

நான் ஓவியத்தில் ஒரு புள்ளியாகிப்போகிறேன்

***

இத்தனை 
வருடங்களுக்குப் பிறகு
நீ வந்தபோது நெகிழ்ச்சியால்
நிரம்பியது என் வீடு

உள்நுழைகையில் 
நீ எந்தக்காலெடுத்து வைத்தாயோ தெரியாது 
என்கால்கள் தரையிலில்லாமல் 
இருந்ததை நீ பார்த்திருக்க மாட்டாய்

நீ குடித்துவிட்டு வைத்த பழச்சாற்றின் 
கடைசிச்சொட்டில் 
நூற்றுக்கணக்கான முத்தங்கள் மிதந்ததை 
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை

ஆட்டோகிராப் நோட்டில் 
அடைப்புக்குறிக்குள் நீ எழுதித்தந்த வார்த்தைகளை 
அதே வெட்கத்துடன்தான் இப்போதும் படித்தாய்

புரட்டிப்பார்த்த புகைப்பட தொகுப்பில் 
உன்படத்தில் கசிந்த நினைவுகளின் மேல்
புதுப்பிக்கிறாய் பழைய புன்னகையை

விடைபெற்று வீடுதிரும்ப 
பேருந்தில் புறப்பட்டபோதுதான்
புரிந்துகொண்டேன் 
போய்க்கொண்டிருப்பது 
நீ மட்டுமல்ல என்பதை...!

***

அருகில் வரவேண்டாம் 
அங்கேயே நில்லுங்கள் ...

நீங்கள் சுமந்து வருவது 
என் மீதான பரிவல்ல 
என் வலியின் அடர்த்தியை 
ஆய்வு செய்வதற்கான முயற்சி 

வார்த்தைகளால் நலம் விசாரித்துவிட்டு 
பின்சென்று புன்னகையால் 
கைகுலுக்கிக்கொள்ளும் 
உங்கள் கருணை எனக்கு வேண்டாம் 

கண்ணீரைத் துடைக்க 
நீளும் உங்கள் விரல் 
என் கண்களைக் குத்தி 
குருடாக்க முயல்வதாய்த் தோன்றுகிறதெனக்கு 

குருதி வழிந்தோடும் காயத்தில் 
கூர் தீட்டப்பட்ட ஆயுதத்தால் 
மேலும் குடையும் குரூரத்தை விடக் கொடுமையானது 
பொய் முலாம் பூசிய உங்கள் அன்பு 

ஆகவே ...

அருகில் வர வேண்டாம் 
அங்கேயே நில்லுங்கள் 
என் வாழ்வை நானே 
வாழ்ந்து கொள்கிறேன் 

****

பாட்டி வீட்டிலிருந்து புறப்படும் 
போது கொடுத்தனுப்பிய 
முத்தத்திலிருந்து  இரண்டும் 

பக்கத்துவீட்டு அத்தை 
கொடுத்த ஒற்றை முத்தமும் 

சொந்த பந்தங்கள்  
கொட்டிக்கொடுத்த 
ஒரு கூடை முத்தங்களும் 

பள்ளிக்கு புறப்படுகையில் 
அப்பாவும் அம்மாவும் 
சேர்ந்து கொடுத்த முத்தமுமாய் 

சீருடையணிந்த கால் சட்டைப்பையில் 
முத்தங்களை  
நிறைத்துக்  கொண்டு போகும் குழந்தை 

வகுப்பாசிரியை கொடுத்த முத்தத்தையும் 
சேர்த்து கொண்டுவந்து 
பிரித்துக்கொடுக்கிறது எல்லா பொம்மைகளுக்கும் 

***

வலப்பக்க கதவு வழியே
குயில்களின் சத்தம்
இடப்பக்க ஜன்னல்கள் வழியே
நாய்களின் குரைப்பு
தூரத்தில் கேட்கும்
ரயிலின் ஓசை
ஊஞ்சலில் ஆடும்
குமரியின் சிரிப்பு
புன்னகைக்காத உதடுகளின்
வழியே வந்துவிழும் மெளனம்
புரிந்துகொள்ளாத மனம் உதிர்க்கும்
சொற்கள் நிகழ்த்தும் வன்மம்
எல்லாவற்றையும் சுமந்து கணக்கும்
அடக்க முடியாத பெருங்கோவம்
இவை எல்லாவற்றையும் 
மறக்கச்செய்யும் கடந்து போகும்
தொடர்வண்டியிலிருந்து 
கைகாட்டும் குழந்தை என 
ஒரு விடியல் எப்படி
வேண்டுமானாலும் நிகழும்

***
அவனிடம் கண்களைத்தவிர
எல்லாமே இருந்தன
கைவசம் வைத்திருந்த
கைத்தொழிலை கட்டவிழ்க்கிறான் 
ஓடிக்கொண்டிருக்கும் தொடர்வண்டியினுள்

கொண்டுவந்த பைக்குள்
கைவிட்டெடுக்கும் போதெல்லாம் 
வாத்துபொம்மையும் நாய்க்குட்டியும் 
சிரித்தபடி வெளிவருகின்றன

பலவண்ணங்களில் வைத்திருக்கும் 
விசில்களில் நுழையும் ஒரே காற்று
வெவ்வேறு இசையை 
வெளியிடுகின்றன

கைப்பேசியில் சொருகியிருந்த
ஹெட்போனை காதுகளில் 
வைத்தபடி தன் உலகத்தில்
விளையாடிக்கொண்டிருந்தாள்
அந்தச்சிறுமி

***

தகிக்குமிந்த கோடையில்
வேண்டியபோது நனைந்துகொள்ள 
மெல்லிய மழையொன்றை 
பரிசாக கொடுத்தாய்

பூட்டிய வீட்டின் சாவியைப்போலவே 
அந்த மழையையும் 
எப்போதும் என்னோடு
பத்திரமாகவே வைத்திருந்தேன்

யாரும் தீண்டாமல்
சலனமற்று ஓடுமொரு 
காட்டு நதியைப்போல 
என் தனித்த பயணத்திலும்
உலராமலே இருந்த மழையை

அடர்ந்த இரவொன்றில்
பொழியச் செய்தேன்
வந்துவிழுந்த எல்லா துளிகளிலும்
உன் முத்தங்களின் 
ஈரமும் கலந்தே இருந்தது கூடுதல் சிறப்பு

***

பிரியங்களின் பெருவாசலில் 
தனித்திருப்பது அத்தனை சுலபமல்ல 

தனிமை போர்த்தியபடி 
மெல்ல நகரும் பொழுதுகள் 
நரகத்தை நினைவூட்டும் 

துக்கம் மிகுந்து தூக்கம் துறந்த 
இரவுகளை தலையணைக்கடியில் 
ஒளித்து வைக்கச் சொல்லும் 

பசி நிறைந்த பகல்கள் 
மெளனத்தை சமைத்து
உணவாய்த் திண்ணும் 

பெயரற்ற உருவங்கள் 
மூளை மடிப்புகளில் 
முன்னும் பின்னும் மின்னும் 

அழகிய முரண்களோடு 
அர்த்தமற்ற சண்டைகளால் 
மனம் திணறி பிரிந்திருப்பதை விட 

தனித்தே இருந்துவிடலாமென்றும் 
தோன்றும் ....!

***
தெருவோரத்தில் கடை போட்டு 
கீரை விற்கும் கிழவியிடம் 
பேரம் பேசி இரண்டு ரூபாய் குறைத்து 
வாங்கி வந்துவிட்டேன் 
சில கீரைக்கட்டுகளை 

வீடுகள் நிறைந்த வீதிக்குள் 
வண்டி தள்ளிக்கொண்டு வந்த 
இளநீர் விற்பவரிடம் அவ்வளவு வாதாடி 
ஐந்து ரூபாய் குறைத்தாகிவிட்டது 

கோணிச்சாக்கின் கீழ் அமர்ந்து
செருப்பு தைப்பவரிடம் பிடிவாதமாய் 
பத்து ரூபாயை பிடித்துக் கொண்டுதான் 
மீதம் கொடுத்து வந்தேன் 

நெடுஞ்சாலை ஓரத்தில் பழங்கள் 
விற்கும் விவசாயி ஒருவரிடம் 
நாட்டுநடப்பு பேசியபடி சில பழங்களை 
இனாமாக வாங்கிக்கொண்டேன் 

பெருநகரின் நடுவில் 
கண்ணாடிகளால் எழும்பியிருந்த 
குளிர்சாதன வசதி நிரம்பிய 
அந்த வணிக வளாகத்தினுள்
வாங்கிய பொருள்களுக்கு 
பைசா குறையாமல் 
வரியையும் சேர்த்து கட்ட 
மிகநீண்ட வரிசையில் நின்று 
கடனட்டையோ காசையோ நீட்டிக்கொண்டிருக்கும் 
என்னை என்ன செய்ய...?

***
உடைந்து கிடந்த 
சாக்பீஸ் துண்டுகளால் தெருவோரத்தில் 
வரையத் தொடங்குகிறான் அவன் 
ஒரு கடவுளை

கையில் கடாயுதத்தோடு 
நிற்கும் கடவுளை 
கைப்பேசியில் தற்படம் எடுப்பவர்கள் 
கவனமாய் தவிர்த்து விடுகிறார்கள் ஓவியனை 

வேகமாய் விரைந்து செல்பவர்கள் 
வீசிவிட்டு செல்கிறார்கள் சில சில்லறைகளை 

ஒரு வழியாய் கோடுகளால் முடிவுக்கு வந்த கடவுள் 
மகிழ்ச்சியில் உதிர்க்கிறார் 
பெருமூச்சொன்றை 

ஓவியத்தை கடக்கும் முன் 
குழந்தை ஒன்று கையெடுத்து 
கும்பிட்ட போதுதான் உயிர் வந்தது 
கடவுளுக்கு ...!

***

நடுங்காதே மனமே 
தூரத்தில் தெரிவது 
வேறு யாருமல்ல 
தேனின் தித்திப்பென அடி நாக்கில் 
ஒட்டிக்கிடந்த ஒரு உறவுதான் அது 

பக்கம் நெருங்கி உன்னை
கடந்து போகும் போது 
உடைந்து போகாதே 
உன்னைப்போலவே அந்த உறவும் 
தேனீர் அருந்தவோ  
பசி போக்கவோ வந்திருக்கலாம் 

உன் சந்தோசத்தின் மீதொரு 
பார்வைக் கல்லெறிந்தோ அல்லது 
உண்மையில் பார்க்காமலே கூட 
உன்னைத் தாண்டிப் போயிருக்கலாம் 

கடந்த காலத்தின் நினைவுகளை 
கண்களில் கொண்டுவந்து ஆறிப்போனதாய் 
நினைத்துக் கொண்டிருக்கும் 
காயங்களின் தழும்புகளைத் தடவிப்பார்க்காதே 

கூண்டைத் திறந்துவிடும் 
கைகளென மென்மையாக விலகு 
சிறகுவிரிக்கும் பறவையென 
அவளோ / அவனோ பறக்கட்டும் 
அந்த சந்தோசத்தில் 
உன் சந்தோஷமும் இருக்கிறதென நிம்மதி கொள்...!

***

உயர்ந்து வளர்ந்த மரமொன்றின் 
தனித்த கிளை நான் 
சிறகு விரித்தபடி வந்தமர்ந்த 
சிறு பறவை நீ 

அலகு தவிர்த்து 
கண்களால் கொத்துகிறாய் 
கிளையெங்கும் கசிகிறது காதல் 

பட்டுப்போன மரம் 
துளிர்விடத் தொடங்குகிறது 
உன் பார்வை பட்டுப்போன 
நொடியிலிருந்து  

இளைப்பாற வந்த பறவையின் 
சிறகுக்குள் இளைப்பாறுகின்றன
மரமும் கிளைகளும்

ஒற்றை மரத்திற்கான ஈரம் 
பாய்கிறது மொத்த வேர்களுக்குள் 

இறுதியில் உந்திப் பறக்கிறாய் 
காய்ந்து உதிர்ந்த இலையொன்று 
உயிர்த்தெழுகிறது 

***

லட்சுமி என்றே அழைத்து பழக்கப்பட்ட 
மகாலட்சுமி அக்காவுக்கு
வளர்ச்சியில்லாததால் இன்றுவரை 
கல்யாணமே நடக்கவில்லை

விவாகரத்து வாங்கி வந்ததிலிருந்து 
பிள்ளைகளுக்காகவே 
வாழத்தொடங்கிய வளர்மதி அக்கா 
இப்போதும் பூ கட்டி விற்கிறார்

கணவனை இழந்து 
கட்டில்கடை வைத்து வாழ்க்கை நடத்தும்
தனா அக்காவின் மகளும் 
வாழாமல் வந்துவிட்டதால்
பாரமாகிப்போனாள்

காதலித்தவன் கைவிட்டதால்
தற்கொலையின் விளிம்பு வரை சென்று 
வாழ்வில் அத்தனை பிரியமில்லாத அமுதா அக்கா 
ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்

சொல்லமுடியா சோகங்களால் 
சூழப்பட்ட வலியிலும் வாழ்கிறார்கள் 
என நினைத்துக்கொண்டிருந்த நாளொன்றில்

"பசிக்குது காசு தரியா" 
என பேருந்து நிலையம் அருகே 
கையேந்திய சாந்தி அக்கா 
மனம் பிறழ்ந்து திரிவது
தம்பிகளால் வீட்டைவிட்டு விரட்டப்பட்ட 
காரணமாய் கூட இருக்கலாம்

***
ஆழ்ந்த உறக்கத்தின் 
அர்த்த ராத்திரியில் 
கைப்பேசிக்குள் விழுந்து கிடந்தது 
ஒரு தவறிய அழைப்பு 

நடுநிசியின் பெரு மெளன அமைதியிலும் 
என் செவிப்பறைக்கு எட்டாத 
நொடியில் அது தன் சத்தத்தை 
நிறுத்தியிருக்கக்கூடும் 

சங்கீதம் வழிந்தபடி 
எழுப்பிய அலாரம் 
அரைக்கண்ணில் பார்க்க வைத்தது 
அந்த தவறிய அழைப்பை 

விபரங்கள் எதுமற்ற
அந்த புது எண்ணின் மீது 
குவியும் கவனத்தில்  
தொலைந்துபோன நட்பும் 
உடைந்துபோன உறவுகளும் 
வந்து போகின்றன 

ஆர்வத்தோடும் அன்போடும் 
திருப்பி அழைத்தபோது 
"நீங்கள் அழைத்த எண் தற்போது 
அணைத்து வைப்பட்டிருக்கிறதென" 
வரும் பதிவுக்குரலால் 
 
நீளும் சந்தேகத்தையும் 
குமுறும் குறுகுறுப்பையும் 
பெருகும் பயத்தையும்
எதைக்கொண்டு நிரப்புவது ..?

***
பெரு நகர பேருந்தில் 
நரக பயணத்தில் 
பெண்ணாய் படும் 
அவஸ்தைகளை 
எப்படிச் சொல்ல...?

இருக்கைகள் நிறைந்த 
காலை வேளையில் 
கிடைக்கும் இடைவெளியில் 
என்னை நிறுத்திக்கொள்ள
முயலும் போராட்டத்தை 
எப்படிச் சொல்ல...?

உடைக்குள் ஊடுருவி 
உடல் தேடும் ஒருவனிடம் 
உடலுக்குள் மனுசி என்ற 
மனசொன்று இருப்பதை 
எப்படிச் சொல்ல...?

மல்லிகை கருகும்படி 
முதுகில் மூச்சுக்காற்றை 
ஊசியாய் இறக்கும் ஒருவனிடம் 
உனக்கும் என் வயதிலொரு 
சகோதரி இருப்பாளென 
எப்படிச் சொல்ல...?

கடக்கும் சாக்கில் 
கம்பியை பிடித்தபடி 
பின்னுரசும் ஒருவனிடம்  
பிசுபிசுப்பின் ஈரக்கசிவை 
எப்படிச் சொல்ல...?  

வெக்கை தகிக்கும் வியர்வையில்
வழிந்திறங்கும் துளிகளில் 
வாசம் நுகரும் ஒருவனிடம் 
உதிரம் கசியும் வலியை 
எப்படிச் சொல்ல...?

காலதாமதத்திற்கு காரணம் கேட்டு 
கைப்பேசியில் வந்து குதறும் மேலாளருக்கு 
"அந்த மூன்று நாட்களில்" 
அலுவலகம் வர கொஞ்சம்
தாமதமாகுமென்பதை 
எப்படிச் சொல்ல...???

***

View

மாதாந்திர பரிசு

ஷாலுமதி சுரேஷ்

View

மாதாந்திர பரிசு

சோ. நளாயினி

View

Showing 581 - 600 of 761 ( for page 30 )