logo

கவிச்சுடர் விருது


இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் சார்பாக வழங்கப்படும் கவிச்சுடர் விருதினை, நமது படைப்பு குழுமத்தில் தனது சிறந்த படைப்புகளை தொடர்ந்து அளித்துவரும் கோவை சசிகுமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்! 

அவரைப் பற்றிய சிறு குறிப்பினை அவரது சுய தகவல்களின் வழியாக நாம் அறிவோம்...

"தமிழ்நாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் பட்டியகவுண்டனூர் அவரை உலகிற்கு அறிமுகம் செய்த அழகிய கிராமம். பழைய வாய்மொழி வரலாறுகளில் செந்தாமரைக்குளம் என்பதுதான் பட்டியகவுண்டனூர் கிராமம். இயற்கை எழில் பொங்கும் அழகிய கிராமம். விவசாயத் தொழில்தான் வாழவைத்த தொழில். அப்படியான விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர். இளமையிலேயே அவரது தந்தையார் விவசாயம் சம்பந்தமாக அனைத்தையும் கற்றுக் கொடுத்துவிட்டு தற்போது இறைவனது நிழலில் இளைப்பாறுகிறார். 

தனியார் துறையில் பணியாற்றும் அவர் சமூகத் தொண்டில் தேசிய மக்கள் உரிமைகள் அமைப்பில் கோயமுத்தூர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார்

வாழ்க்கை பல நிகழ்வுகளை கற்றுத் தந்துவிட்டு மறந்துவிடாத நிகழ்வுகளை நம்முள் ஏற்படுத்தி விடுகிறது. அப்படியான ஒரு மறக்கமுடியாத நிகழ்வைத் தான் சில எழுத்துகள் நினைவுபடுத்திக் கொண்டே அவரையும் எழுதவைக்கிறது. 

இதன் தொடக்கமாக கவிதை மலர்கள் அவர் வாழ்வில் அரும்பிய வயது 17. ஆம் எனது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது அரும்பியது. அதற்கு ஒரே காரணம் ரசனையை எழுத்துக்களில் கோர்வையாக்கியதுதான். கல்லூரி வாழ்வில் கவிதை மொட்டு மலர்ந்து மணம் வீசத் தொடங்கியது. அப்போது அவருக்கு கவிதை எழுதவும் அவர் எழுதிய வரிகளை ரசித்தது கல்லூரித் தோழமைகள். அப்போதே ஒரு மணி நேரத்தில் 30 கவிதைகள் எழுத அத்தனையும் ரசித்தார்கள். 

வாசிப்பின் மௌன மொழி இன்னும் அவரை நிறைய எழுத வைத்தது. காலச்சூழலில் கவிதை மனதுக்குள் இருந்தாலும் சிறு தொய்வு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் எழுத வேண்டும் என்ற ஆவலில் கவிதைகளை மீண்டும் மலர செய்ய கிடைத்தது முகநூல் தளம். அப்படி எழுதும் போது நிறைய நண்பர்கள் அவரை மேன்மேலும் எழுத ஊக்குவித்தனர். அப்படியாக  கவிதைகளை படைப்புக் குழுமத்தில் எழுத வாய்ப்புக் கிடைத்தது. அப்படி எழுதுகையில் முதன் முதலில் அவரை மேடை ஏற்றி 2017ல் முதல் விருதை படைப்பு குழுமம்தான் தந்தது. 

அதன் பின்னர் அவர் கவிதைகளை கனடா டொரண்ட்டோவில் உள்ள சி.எம்.ஆர் இணையதள வானொலி என் கவிதைகளை கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஒலிபரப்பி உலகத்திற்கு அறிமுகம் செய்தது. 
பொள்ளாச்சி எப்.எம் வானொலியும் எனது கவிதைகள் ஒலிபரப்பியது.

பின்னர் ஸ்விட்சர்லாந்தில் சந்துரு என்ற இணையதள வானொலியும் அவரது கவிதைகளை ஒலிபரப்பியது.

பின்னர் 

தினஇதழ் நாளிதழ் சென்னை
பரணி காலாண்டிதழ்  - நெல்லை
இனிய நந்தவனம் – திருச்சி
உதய சூரியன் – ஆஸ்திரேலியா
சிகரம் – ஈரோடு
மருதாணி - திருவனந்தபுரம்
படைப்பு மின்னிதழ்
கொலுசு மின்னிதழ்
தமிழ்நெஞ்சம் மின்னிதழ் – பிராண்ஸ்
காற்றுவெளி மின்னிதழ் – லண்டன்
ஆகிய பத்திரிக்கைகள் மற்றும் மின்னிதழ்களில் பிரசுரம் ஆகி வருகிறது. 

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியீடு மூலம் சிறகசைப்பில் மிளிரும் வெயில் நூலை ஏப்ரல் 2018ல் வெளியிட்டுள்ளார்
 
அதன் பிறகு 

படைப்பு குழுமம்- 2017 சிறந்த படைப்பாளிக்கான விருது
தென்றலின் கவிப்பூங்கா – இரண்டாம் பரிசு
கவிஞனின கனவு – 7 வெற்றிச் சான்றிதழ்கள்
கவியரங்க சான்றிதழ் – உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
சங்கத்தமிழ் கவிதைப் பூங்கா மதுரை – 2 விருதுகள்
தளிர் இலக்கிய கூடம் நினைவு விருது – திருப்பூர்
“கவி இளவரசு” சாதனையாளர் விருது 2018 - சக்ஸஸ் அவார்ட்ஸ் கரூர் 
அசோகமித்திரன் படைப்பூக்க விருது 2018 – தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை தேனியில் வழங்கியுள்ளது. 
வேளாங்கண்ணியில் எழுச்சிக் கவிஞர் விருது 2019 – வானம் வசப்படும் வா நண்பனே மார்ச் 17ம் தேதி வழங்கி உள்ளது
சிறந்த கவிஞருக்கான விருது – சிகரம் இதழ் ஈரோடு 02.06.2019
கவிச்சுடர் விருது – கமலாலயம் அறக்கட்டளை சென்னை மேனாள் மேயர் சைதை துரைச்சாமி அவர்களால் வழங்கப்பட்டது. 
இவ்வளவு விருதுகள் என கவிப்பயணம் பெற்றுத்தந்தது

தற்போது பிப்ரவரி – 14 என்ற காதல் கவிதைகள் தொகுப்பு பிப்ரவரி 2020ல் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் மூலம் வெளியிட்டுள்ளது

இதுவரை முகநூல் மற்றும் இணையம் பத்திரிக்கைகளில் இயற்கை, சமூகம், காதல், என சுமார் 5000 கவிதைகள் எழுதிவிட்டார்.


கவிதையின் மொழி இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது வரையறைகளின் கோட்பாடல்ல! தன்னிச்சையாய் எழுந்து தனித்துவத்துடன் பேசுகிற இலாவகம்தான் கவிதைகள் தனக்கான மொழியாக எடுத்துக் கொள்கின்றன என்றும் சொல்லலாம். கவிச்சுடர் கோவை சசிகுமாரின் கவிதைகள் தன் இயல்பில் மொழியாளுகையை எடுத்துக் கொள்கின்றன! தனக்கான உணர்வுகளை தக்காரிடம் கொண்டு சேர்க்க புரிதலின் பக்கம் தலைசாய்த்து மொழியை வளைத்துக் கொள்கிறது!

இனி அவரது படைப்புகள் சிலவற்றை அலசி ஆய்வோம் வாருங்கள்!


இலையுதிர் கால நிறங்கள் உஷ்ணத்தால் உதிர்க்கப்படுவதாக சொல்லும் கவிஞர், சிதறடிக்கப்பட்ட மேகத்தூறல்களில் வானவில்லின் நிறங்களும் வளைவதாக அழகியல் பேசிடும் அதே வேளையில் உதிர் இலைகளின் வேதனை, கூடடடைய பறபறக்கும் பறவைகளின் அச்சம் மற்றும் பிரிவுகள், அடர்ந்த மௌனங்களும்தான் வனத்தின் அடைமழையாகிறது என்று சொல்வதில் ஓர் இன்பத்தின் உள் பெரும் பதட்டம் இருப்பதை நாசூக்காக சொல்கிறது இந்தக் கவிதை! 




சூரியக் கீற்றுகளின்
உஷ்ணத்தில் உதிர்க்கப்பட்ட
இலையுதிர் கால நிறங்கள்!

மேகத்தூறல்களில் 
சிதறடிக்கப்பட்ட துளிகளில்
வளைகிறது 
வானவில்லிலும் நிறங்கள்!

உதிர்ந்த இலையின்
வேதனையிலும் 
விரைந்து செல்லும்
பறவைகளின் அச்சத்திலும்
பிரியமானவரின் பிரிதலின்
மௌனத்திலும்
சிதறிய சிதறல்கள் 
அடைமழையாகின்றது
வனத்திற்குள்!

********************

சில கேள்விகளும், சில கலகங்களுமே விடிவிற்கு முன்னோடியாக இருக்கும் என்றும் சொன்னது சாக்கரட்டீஸ் என்ற மேதை! இந்தக் கவிதையும் அந்தப் பணியை செவ்வனே செய்கிறது என்று சொல்லலாம்! கடவுளை எல்லோருக்கும் பொதுவென்று சொல்லிவிட்டு குருக்கள் மட்டும் அவரை மறைத்து நிற்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்புகிறது! அதுமட்டுமில்லாமல் கடவுளை கருவறையில் குருக்கள் பூட்டி வைத்துவிட்டு செல்கிறாரே... அவர்தான் மனிதனை உருவாக்கினார் என்றால் அவரை பூட்டும் அதிகாரம் இவருக்கு எப்படி வந்தது என்ற கேள்வி பெரும் கலகத்தையும் இந்த கவிதைக்குள் விதைக்கிறது!


நிர்ப்பந்திக்கப்பட்ட
வாசலில்
பொதுமையில் உண்டாக்கப்பட்ட
கருவறையில் அனைவருக்கும்

அனுமதி 
மறுக்கப்பட்டு இருக்கிறது

காலையில் எழுந்து
குளித்து முடித்துக்
கடவுளென 
வணங்க வருகையில்
என்னை முதலில்
பார் என குருக்கள்தான்
நின்றிருக்கிறார்
கருவறையில் 
தனக்கு மட்டுமே
உரித்தான அதிகாரத்தோடு.

கடவுள் பொதுவுடைமையாக்கப்
பட்டவர் என்றபோதும்
தினம் சிறைவைத்துப் பூட்டிச்
செல்கிறார் குருக்கள்.

கடவுள் மனிதனால் உருவாக்கப்பட்டாரா?
எனில் அவரை பூட்டி வைப்பதில்
தவறில்லை

கடவுள் மனிதனை உருவாக்கினாரா?
அப்புறம் ஏன் பூட்டி 
வைக்க சம்மதிக்கிறார்?

******************

மனிதனை கடவுள் படைத்ததாக சொல்லும் மனிதன் கடவுளைப் படைத்து சந்தைக்குள் கொண்டுவரும் அவலம், அன்பு, பாசம் மறைந்து அலையும் கூட்டம்.. இதனிடையில் சிந்திக்க மறந்த ஆறடி நீளம் மூன்றடி ஆழம் என ஆழமாய் ஊன்றுகிறது இந்தக்கவிதை!


நடைபாதையொன்றின் சருகுகள்
முனகலாய் சப்தமிடும் 
கானகத்தினூடே
சமூகத்தின் சீற்றத்தில் வெந்து 
சாம்பலாகிக் கொண்டிருக்கும் 
மரங்களின் நடுவில் 
காட்சிப் பொருளின் நாற்காலியில் 
அமரும் பொருட்டு 
அங்கேயும் கோர்க்கப்பட்ட 
வார்த்தைகளின் 
வலிமையின் பக்கங்களில்
பாரதியின் வரிசையில் 
தொடங்கியவொரு 
விழிப்புணர்வாய்!

வாய்மையைப் புறம்தள்ளி
பொய்மையின் வாக்கியங்களுக்குள்
பிறிதோர் உலகம் 
படைக்கும் வரிசையில்
விலைபோக காத்திருப்பு
பட்டியலில் கடவுள்கள்
கடவுள் படைத்ததாக 
நம்பிய மனிதன்
கடவுளை படைக்க 
ஆரம்பித்துவிட்டான் 
தனது வசதிகளுக்கேற்ப!

நடக்கும் அவலங்களில்
சீராக்கப்படாத சீர்திருத்தங்களில்
நெறிமுறை தவறிய பதவியில்
துயரத்தில் சிரிக்கும் கூட்டத்தில்
அன்பு, பாசம், பண்பை மறந்து
பணத்திற்கு 
விலைபோகும் சந்தையில்
இறந்தபின்பு கூத்தடிக்கும் 
ஆடம்பர மயானத்தின் 
வரிசையில் 
ஆறடி நீளம், மூன்றடி ஆழம்…
********************
பிரபஞ்ச அழகியலின் நேசத்தைப் பேசும் கவிதை, தனக்குள்ளாகவும் சிலக்கேள்விகளை கேட்டுக் கொள்கிறது! முடிவு என்பது கடந்து போன சாம்ராஜ்ஜியங்களின் நிழல் மட்டும் அல்லவா! இதோ அந்தக் கவிதை:


அந்தரத்தில் இருந்து
விழுந்துகொண்டு இருக்கும்
மழைத்துளியொன்றின்
பிரகாசத்தில்
சிரித்து மலர்வதாக 
செடிகளும் கொடிகளும்!

ஒவ்வொரு மலரிலும்
வெளிப்பட்ட உணர்வுகளில்
காற்றோடு கலந்து பரப்பிய 
வாசனையின்னும்
பிரபஞ்சத்தை நேசிக்க வைக்கிறது!

அவ்வப்பொழுதுகளில்
என்னை நானே 
கேள்விகள் கேட்டுக்கொள்கிறேன்
இப்பொழுது யாரும்
நிதானிப்பதாயில்லை நவீனத்தில்

நினைவில் தொடரும்
வலிகளையோ 
நிர்பந்திக்கப்படும் உணர்வுகளையோ
யாரும் பொருட்படுத்தவில்லை

விசாரிப்புகள்
ஆதங்கங்கள்
அரவணைப்புகள்
அனைத்தும்
திட்டமாகவோ 
எதிர்பார்ப்பினூடோ
முடிவுகளை நோக்கி!

மௌனங்களின் பின்னே
பெரிய சரித்திரங்களின்
சாம்ராஜ்யம் மறைந்து 
தனக்குள்ளே
தன்னை ஆட்கொண்டு 
கடந்துபோகின்றது
நெடுநாட்களாக
யாருமற்ற பொழுதுகளில்!
******************************
எந்திரங்களாகிவிட்ட மனிதர்கள் வேடம் தரித்துக் கொள்கிறார்கள்! பெற்றவர்களின் கனவை புத்தகங்களாய் சுமக்கும் சிறுவர்கள்! பைத்தியமாக்கிவிட்ட அலைப்பேசிகள் மனிதத்தை தின்றுவிட்டதாய் புலம்புகிறது கவிதை:


வேடம் தரித்த நவநாகரிகத்தில்
எங்கிருந்தோ இயக்கப்படும்
எந்திரங்களாய்
மனிதர்கள்!

தூக்கமின்றி சிலரும்
உறக்கம் கலையாமல் சிலரும்
நிற்கமுடியாமல் சிலரும்
நடக்கமுடியாமல் சிலரும்
நாகரிகத்திற்கேற்ப 
வேடம் தரித்துக்கொள்கிறார்கள்!

தன் கனவைப்பூர்த்தியாக்க
சுமையேற்றிய வண்டிகளாய்
மாணவர்கள் 
கற்பதெல்லாம் பெற்றோரின் 
விருப்பத்திற்காக வெறுப்பாக்கிக் 
கொள்கின்றனர் இளைய சமூகம்!

மீண்டு்ம் மீண்டுமாய்
மீண்டுவர முடியாத 
சுழலுக்குள் தள்ளப்படும்
எந்திரமான வாழ்க்கை!

வழிதெரிந்தும் குருடனாய்
நினைவிருந்தும் பைத்தியமாய்
மாற்றிவிட்ட அலைபேசிகளின்
ஆதிக்கத்திற்குள் மெல்ல மெல்ல
மறைகிறது மனிதம்!

*******************

ஆதரவற்ற அவலர்களின் வாழ்க்கையையும் வறுமையையும் பேசும் கவிதை:


வான் வெளியில்
காற்றும் தீயும்
பற்றி ஏவுகணையாக
எண்ணுகையில்
பளிச்சென்று மின்னி மிளிரும்
சூரியக் கற்றைகளின்
வெப்பம் தாளாத
புழுக்களின் நெளிவுகளாக!

வாழவும் சாகவும்
வழி தெரியாது
ஆதரவற்ற அவலங்களின்
பின்னே வறுமையை 
அணைத்துக்கொள்ளும்
ஆளுமைகளின் சூடு தணியாத
நெருப்புப்  பிழம்பில்
அழிந்த மாள்கிறது
ஏழ்மை!

ஏழையின் சிரிப்பில் 
இறைவனைக்  காண்பதாய்
வேசம் போடும்
வேடிக்கைப்  பணக்குவியலின் 
வேள்வித் தீயில்
வெந்து மாள்கிறது 
ஏழ்மையின் வறுமைப் பசி!
***********************

உயிர்பெற்றெழும் சருகுகள் மனிதர்களை தங்களின் வனத்திற்குள் வராதே என்று எச்சரிப்பதாக பொங்கியெழும் கவிதையொன்று...


இலைகள் உதிர்ந்துபோன
வெற்று வனத்தினிடையே
இறந்து கிடக்கும்
இலைச்சருகுகள் 
உயிர்ப்பிப்பதாய் எனக்குள் 
உணர்கின்றேன்!

துடிக்க துடிக்க 
கதறுபவையாகவும்
வாழ வழியற்றப் 
போனவைகளாகும்
வளியெங்கும் வாளியில்
நச்சையூற்றி 
கொன்றுகுவிக்கும்
மானிடனே
வராதே என்று கதறுவதை
காண்கிறேன்!

சுயநலத்திற்காக
பெற்றவரையும் உற்றவரையும்
உயிர்குடிக்கும் துரோகி இனமே
நெருங்காதே என்று கதறுகிறது!

ஏவாள் ருசித்த கனியில்
வெட்கம் துவங்கி 
மறைக்கப்பட்ட அங்கங்களில்
ரசனை தூவி
வெட்கம் மறைக்க 
வெட்டிய என் கானக மரங்களில்
உன் இனம் செழித்துவிட்டது
என் இனம் செத்துவிட்டதென
கதறி காற்றில்
பறந்து மறைந்தது உயிர்வற்றிய
சருகொன்று!
************************.
எதுவும் எனக்கென்று சொந்தமில்லை! பெயர் பெற்றவர்களின் ஆசை, படிப்பு பெற்றவர்களின் கனவு, காதலையும் காதலி பறித்துக் கொள்வதாக புலம்பும் கவிதையின் மனக்குமுறலில் சில நியாயங்கள் இறந்து கிடக்கின்றன!



பெயர் கூட 
எனக்குச் சொந்தமில்லை
அதுவும்  
பெற்றவர்களுக்குச்  
சொந்தமானது

மழலை முதல் 
வாலிபம் வரை
பிடித்தவை எல்லாம் 
பெற்றோருக்கும் 
பிடித்தவையாக வேண்டும்
வாலிபத்தின் காதலை 
நிலைநிறுத்த
காதலி அதையும் பறித்துக் 
கொண்டு சென்றுவிட்டாள்

பெற்றோர் உற்றோர் 
உறவினர்களின் 
பிரியங்களில் திருமணம்

வாழ்க்கையில் எது பிடித்தாலும்
இருவருக்கும் பிடிக்க வேண்டும்
என்ற நிர்பந்தம்

உடை உடுத்தவும் 
உணவு அருந்தவும் 
இருவருக்கும் பிடித்தாக வேண்டும்

வானொலி கேட்பதிலும்
தொலைக்காட்சி பார்ப்பதிலும்
கூட
மனைவியுடனான நாடகங்கள்
கணவனின் செய்தி நேரங்கள்
மகனின் கிரிக்கெட் நேரம்
மகளின் பாடல் நேரங்கள் 
என அவர்களுக்குப் 
பிடித்தவைகளுக்காக
நான் மாறிக் கொள்கின்றேன்

இதையெல்லாம் விடுத்து
எனக்கான ஆறடி நிலம்
மூன்றடி ஆழம்
இரண்டடி அகலமென
யோசிக்கையில் 
அதுவும் 
நினைவஞ்சலி நாளில்
எனக்கான சவக்குழியை 
தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
*************************

கவிஞரின் மற்றும் சில கவிதைகள் உங்களின் பார்வைக்கு:


எங்கோ வாசிக்கப்பட்ட
புல்லாங்குழலின் ஓசையொன்றில்
துண்டிக்கப்பட்ட மூங்கிலின்
ரணமொன்றை ரசிக்க
பழகிக்கொள்கின்றன செவிகள்!

சப்தங்களாகவோ
நாதங்களாகவோ
கேட்கும் இசையில் லயித்த
மனதில் இன்னுமாய்
மீட்டிப்போகும் சுவாசத்தின்
வாசத்தில் கிறக்கங்கள்!

நாளையும் வாசிக்கப்படலாமென்று
நேசிக்கப்பட்ட 
ஸ்வரங்களோடு
தூரத்தில் ஒலித்துப்போனது
பின்தொடர்வதாய்
அவனது உதடுகளில் 
ஊதப்பட்ட புல்லாங்குழலிசையின்
வலிகளின் வேதனை
கையேந்திய சில்லரை
காசுகளோடு!
******************

மௌனத்தின் வாசலை 
இறுக மூடிக்கொண்டு
பேசுகிறேன்
ஒலியற்ற குரலில்.

ஒரு வேகம் தான்
இன்னும் கடந்தபாடில்லை
எனக்கான இலக்கை

எனது முயற்சியில்
எனதுடம்பை நகர்த்த
எனக்குப் பின்னால் ஓராயிரம்
கரங்கள் கட்டியிழுக்கின்றன

எல்லாவற்றிலுமே துரோகத்தின் 
சாயல் தெரிகின்றது
ஒரு புன்னகையில் 
வன்மம் தெரிகின்றது
உபசரிப்பில் 
சுயநலம் தெரிகின்றது

எனக்கென்று ஓரிடத்தை தேடினால்
முன்னரே கையகப்படுத்தி 
வேறொருவன் 
உறங்கச் செல்கின்றான்

கடைசியில் புதை குழியும் கூட
வேறொருவன் வசமாகின்றது
எதைக்கொண்டு போனாலும்
கடைசியில் 
அரணாக்கயிறைக் கூட
அறுத்தெடுத்துக் கொள்கிறார்கள்

கடைசியில் குழிவெட்டிய 
வெட்டியானிடமும் 
பேரம் பேசப்படுகிறது
"இப்போ இத வச்சுக்கோ 
பிறகு பாக்கலாம்" என்று.
**********************

அந்தரத்தில் இருந்து
விழுந்துகொண்டு இருக்கும்
மழைத்துளியொன்றின்
பிரகாசத்தில்
சிரித்து மலர்வதாக 
செடிகளும் கொடிகளும்!

ஒவ்வொரு மலரிலும்
வெளிப்பட்ட உணர்வுகளில்
காற்றோடு கலந்து பரப்பிய 
வாசனையின்னும்
பிரபஞ்சத்தை 
நேசிக்க வைக்கிறது!

அவ்வப்பொழுதுகளில்
என்னை நானே 
கேள்விகள் கேட்டுக்கொள்கிறேன்
இப்பொழுது யாரும்
நிதானிப்பதாயில்லை 
நவீனத்தில்

நினைவில் தொடரும்
வலிகளையோ 
நிர்பந்திக்கப்படும் உணர்வுகளையோ
யாரும் பொருட்படுத்தவில்லை

மௌனங்களின் பின்னே
பெரிய சரித்திரங்களின்
சாம்ராஜ்யம் மறைந்து 
தனக்குள்ளே
தன்னை ஆட்கொண்டு 
கடந்துபோகின்றது
நெடுநாட்களாக
யாருமற்ற பொழுதுகளில்!
**********************

வெகுநேரம் காத்திருந்த
இடைவெளியில்
ஆக்கிரமித்த இருட்டுக்குள்
மெல்ல சமிக்கை
செய்து
ஔியூட்டிப் பின்தொடர்ந்த
ஒலியினூடே
சோவென பெய்யும் மழையில்
வேய்ந்த கூரையின்
ஓட்டையில் ஒழுகும் 
நீருக்கிடையில் 
தான் நனைந்து குட்டிகளுக்கு
வெப்பமூட்டுகிறது
வெள்ளாடு.
************************

விளக்கொன்றில் தீபம் ஏற்றுவதற்காக
நிமிருகின்றேன்
சன்னல் வழியே வழிந்தோடும்
பார்வையொன்றில் விடுபடமுடியாத
மனிதநேயத்தின் பரிதவிப்பாய்
இன்னும் ஏக்கங்களில் 
இருள் சூழ்ந்திருக்கின்றது

காலடிகளுக்குப்பின் தொடர்ந்து
வந்துகொண்டிருக்கிறது 
அனாதரவான சொற்களில்
சேர்த்து கோர்க்கப்பட்ட 
மனித வாசனை நிரம்பிய
உஷ்ண வார்ப்புகளாய் மௌனம்!

ஒரே திசையில் இரண்டு பயணம்
போய்வர அவகாசம் தேடிய
பொழுது
மாயக்கண்ணாடியில்  மறைந்துபோன
பிம்பங்களாய் நகர்ந்துபோன
சாலையோர மரங்கள்
அதில்
தொங்கவிடப்பட்டநினைவுகள்
காலம் களவுகொண்டு
போயிருந்தது!

திசையின் முடிவில்
திரும்பிய கணம்
காதடைக்கும் பெருவொலியில்
கதறிக்கொண்டு தேடியபொழுதுகளில் 
இலையுதிர்த்த மரங்களில்
உயிரற்றுபோயிருந்தது நினைவுகள்!
**********************

சிந்தனை கலைந்ததான 
சிரிப்பொன்றில் 
மீண்டும்
நெடுநேரம் சிரித்துவிட்டதாய்
தலைமீது கைவைத்து
தன்னைச்சுற்றி நின்றவர்களை
மீண்டும் ஒருமுறை நோட்டமிட்டு
மீண்டும் நிறுத்தப்படாத 
சிரிப்பொலியில் மனநிலை 
குளறுபடியான இடைவிடாத 
சிரிப்பொலி தனிமையில்

யாவர்க்கும் பதிலளிக்க முடியாத
ஆச்சரிய நிகழ்வாய் அமைந்த காலம்
நகர்ந்துபோனாலும் 
அன்றொலித்த அதே சிரிப்புக்குரல்
வெறிச்சோடிக்கிடந்த அந்த பொழுதுகளில்
தடுக்கமுடியாத அதே சிரிப்பொலியில்
தூரத்தில் தேய்ந்து போன நிலவாய்
தேம்பிக்கொண்டிருந்தது அந்த உருவம்
அன்னையாக இருக்கலாம்
மனைவியாக இருக்கலாம்!

அன்று சிரித்துப்போன
எண்ணங்களினூடே மழலையாக
சிரித்துப்போன அதே சிரிப்பில்
ஏதோவொரு நிகழ்வொன்றில்
நிர்பந்திக்கப்பட்டு விடுபடமுடியாத
வன்மத்தில் இடைவிடாமல்
சிரித்துக்கொண்டிருந்தான்
ஆகாயத்தை நோக்கி!

உணர்வற்ற குரலில்
மௌனமற்ற மொழியில்
அவனுக்குள்ளே அவளுக்கா…
************************

உதிர்ந்து விழும்போது
மௌனமாய் அழுதுகொண்டே 
இறக்கும் யோனியின் 
சினைமுட்டையில்
தப்பிப் பிழைத்தவன்
ஏசுகிறான்

"ஏண்டி உனக்கு வேற 
வேலையே இல்லையா
நீ போய் வாங்க வேண்டியதுதானே"
என்று புலம்பியவண்ணம்
மளிகைக் கடையில்
"அதாங்க அதை பேப்பரில்
சுத்திக்கொடுங்க" 
என்பதில்
இவனும் உதிர்ந்துபோயிருக்கலாம்

தினம் பூத்து
கருத்தரிக்காமல் 
வீழும் மலர்களையும் 
மரங்கள் என்றும் தாய்மையோடுதான்
மணம்வீசச் செய்கின்றது.
*********************

நிறைய நாட்கள்
மௌனித்த சொற்களை
எங்கேனும் 
நடவு செய்யவேண்டும்
என்பதில்
வெள்ளைத் தாள்களைத் 
தேடினேன்

அதிலும்
மெல்ல இமைதுடிக்கும்
விழிகள் சிமிட்டி
சிரிப்பதில்
நான் எதை எழுதினேன்
தெரியவில்லை
காதலிக்கிறேன்
என்று மௌனமொழி
பேசுகிறாள்
வெள்ளைத்தாளில் சொற்களின்
நடவு முடிந்து 
துளிர் விட்டிருந்தது 
காதல்.
******************

முன்னிரவு கடந்து
பின்னிரவுத் தொடக்கத்தின்
சிந்தனையில் 
தூரமாய்க் குரைக்கும்
நாயின் குரலில் 
மீண்டும் கலைக்கப்பட்ட
மௌனத்தில் 
கடிகார முட்கள் மட்டும்
உயிரோட்டமாக!

நிரப்பப்பட்ட பேனாவின்
மையும் தீர்ந்துபோக
குப்பைத்தொட்டியில்
நிறைந்த காகிதங்கள்
நெளிந்து விரிந்துகொண்டிருந்தன!

பின்னிரவின் இறுதியில்
கற்பனை நிரம்பிய
எழுத்துக்களை யாரோவின்
பிடியில் இறுகிய மனதோடு
வெளிப்படுத்த முடியாமல்
மௌனத்தின் சாயலில்
வழிந்தோடும் கண்ணீரில்
கரைந்து வழிந்துபோனது
கடைசிக் காகிதத்தில்!

உறக்கத்தின் தொடக்கத்தில்
விடிந்திருந்தது மறுநாள்!
********************


இன்னும் பாதையாகவே
பயணிக்கிறேன்
இருபுறமும் செடிகளாகி
மரங்களாகி மரித்தபின்னும்
சாலை பாதையாகவே
இருக்கிறது

வேகமாய் நகரும் வாகனத்தின்
முன்பு தோன்றி மறையும் 
கானல் நீரில்
வெப்ப உமிழ்களை உணர்கிறேன்

கடந்து கொண்டிருக்கிறது காலம்
நகர்ந்துகொண்டு இருக்கிறது
நாகரிகம் 
வெட்டப்பட்டு பாலையாக்கப்பட்ட
வனத்திற்குள்

எனக்கான பிரதேசத்தில்
மனிதம் இயற்கைக்கு 
கட்டுப்பட்டிருந்தால் இனங்கள் 
செழித்திருக்கும் 

விதையில்லாப் பழங்கள்
குளோனிங் ஆடுகள்
பறவையென அறியா கோழிகள்
மகரந்தமாகாத மலர்கள்
இவற்றையெல்லாம் நமதாக்கும்பொழுது
நமக்கான சந்ததியும் 
நாளை? 
******************

என் தேசத்தில் தேடுகின்றேன்
வறுமையற்ற வாழ்வாய் 
எனக்கான சந்ததிகளை

விழிகள் நிறைய 
கண்ணீரோடு கையேந்தும் 
சிறுவர்களின் கெஞ்சலும்

தோல்சுருங்கி 
கைவிடப்பட்ட மூதாட்டியின் 
முனகலோடும்

நடுங்கும் கைகளில் 
கைத்தடியின் ஆதரவில் 
கால்இடறி ஆதரவின்றி 
விழப்போகும் முதியவரிடமும் 
தேடுகிறேன் 
வறுமையற்ற வாழ்வை.

ஒரே துணியை பலமுறை
உடுத்தி சக மாணவரின்
கேலிக்கு உரித்தாகி
முகம் சுண்டி வீடு திரும்பும்
மாணவனிடமும்

கல்வியின் ஏக்கங்களில்
வீடு வீடாய் பாத்திரக் கரியினை
முகத்தில் தடவி 
வீடு திரும்பும் சிறுமியிடம் 
தேடுகிறேன் 
வறுமையற்ற வாழ்வை.

மார்சுரக்க வழியின்றி
தண்ணீர் நிரப்பி
தன் கைக்குழந்தையின் 
பசி போக்க வழியின்றித் தவிக்கும் 
தாய்மையில் தேடுகின்றேன் 
வறுமையற்ற வாழ்வை.

இப்படியாக அடுக்கிப்போனால்
கண்ணிர் தளும்பும் 
என் விழிகளில் 
உவர்ப்புநீர் வற்றி 
உதிரம் கொட்டிப்போகும்

வறுமையற்ற வாழ்வினைத் தேடி
இன்னும் தான் ஓடுகின்றோம்
இன்னும் அந்த கானல் நீர் 
கண்ணுக்குத் தெரிகின்றது
கைகளுக்கு எட்டவில்லை.

**********************

சிரித்துக்கொள்ள செய்திகளற்று
போனதில்
விழிகளில் தெரியும் தேடலில்
எதிர்நோக்கும் சிந்தனைக்குள்
சிறைப்பட்டு வெளிவர மனமின்றி
உள்ளிருப்பு போராட்டமாய் 
மௌனம்!

நம்மைச்சுற்றி நோட்டமிடும்
கண்களில் 
எதுவும் நிகழக்கூடுமென்ற
எதிர்பார்ப்பினூடே
இரு கைகள் விரித்து நின்ற
கனவுக்குள்
நான் மட்டுமே அகப்பட்டு
விடுபடுவதற்குள்
கலைக்கப்படும் கனவாக
கதவு தட்டல்களின்
எதிர்ப்புறம் ஒரு புன்னகை!

-----------------

இனியும் நின்றபாடில்லை
சொட்டுச் சொட்டாய்
வடியும் திரவத்தின் 
உயிர்ப்பு நிலையின்
உயிர் சுவாசம்!

பெருவனப்பகுதியில்
ஆள் அரவமற்ற
அமைதியொன்றில் மெதுவாய்
மெல்லிய கீச்சொலிகளுக்கு
செவிமடுக்கையில்
வாழ்வாதாரப் போராட்டத்தில்
தப்பிக்க வேழமும்
இரைக்காக சிங்கங்களும்
ஓலமிட்ட சப்தங்கள்!

என்னவென்று
யோசிப்பதற்குள் தன் பசிக்கு
பிறவற்றைப் பற்றுதலின் 
பேரில் வேட்கை 
தணித்து பின் வேடமிட்டுக்
கொள்கிறார்கள் 
சிதைக்கப்பட்டு மீள்வதற்குள்
பலமுறை 
வன்மம் தீர்க்கப்படுவதாய்
தோற்றுப்போகும் நியாங்கள்!

--------------------------

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

குளோரி சக்தி


0   335   0  
February 2023

தா.வோ. சரவணன்


0   737   0  
December 2020

மெஹ்ராஜ் பேகம்


0   184   0  
August 2023

ம.செல்வகணேஷ்


0   920   0  
July 2018

கலை


0   1071   0  
July 2020