logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 561 - 580 of 761

Year
Award
   

கவிச்சுடர் விருது

  • பொள்ளாச்சி முருகானந்தம்

0   1334   0  
  • December 2019

மாதாந்திர பரிசு

  • அன்றிலன்

0   1008   0  
  • November 2019

மாதாந்திர பரிசு

  • ராஜகவி ராகில்

0   1003   0  
  • November 2019

மாதாந்திர பரிசு

  • வத்சலா ரமேஷ்

0   996   0  
  • November 2019

மாதாந்திர பரிசு

  • கனகா பாலன்

0   1020   0  
  • November 2019

மாதாந்திர பரிசு

  • அமுதா தமிழ்நாடன்

0   965   0  
  • November 2019

கவிச்சுடர் விருது

  • மதுரா

0   1282   0  
  • November 2019

மாதாந்திர பரிசு

  • வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்

0   1093   0  
  • October 2019

மாதாந்திர பரிசு

  • சுசித்ரா

0   847   0  
  • October 2019

மாதாந்திர பரிசு

  • கோ.வசந்தகுமாரன்

0   1455   0  
  • October 2019

மாதாந்திர பரிசு

  • வதிலை பிரபா

0   1195   0  
  • October 2019

மாதாந்திர பரிசு

  • அம்பிகா குமரன்

0   1227   0  
  • October 2019

கவிச்சுடர் விருது

  • கார்த்திகேயன் மாகா

0   1657   0  
  • October 2019

மாதாந்திர பரிசு

  • மயிலாடுதுறை இளையபாரதி

0   1102   0  
  • September 2019

மாதாந்திர பரிசு

  • கோ.கலியமூர்த்தி

0   957   0  
  • September 2019

மாதாந்திர பரிசு

  • லஷ்மி

0   1601   0  
  • September 2019

மாதாந்திர பரிசு

  • மு.ச.சதீஷ்குமார்

0   973   0  
  • September 2019

மாதாந்திர பரிசு

  • வீரசோழன்.க.சோ.திருமாவளவன்

0   1217   0  
  • September 2019

கவிச்சுடர் விருது

  • ஏ. நஸ்புள்ளாஹ்

0   1592   0  
  • September 2019

மாதாந்திர பரிசு

  • சுஜய் ரகு

1   1222   0  
  • August 2019

கவிச்சுடர் விருது

பொள்ளாச்சி முருகானந்தம்

'சிறகை தூக்கி திரிகிறேனென 
கழுகும்
கழுகை தூக்கி திரிகிறேனென 
சிறகும்....
மாறி மாறி நொட்டனை பேசும் நொடியொன்றில் தான்
சிட்டுக்குருவியொன்று....
வானத்தை நோகி கடந்து விடுகிறது.....'

- எவ்வளவு யதார்த்தமான மொழியில், இந்தக் கவிதை நம்மிடம் பேசிவிட்டு கடந்துவிடுகிறது! வாழ்வியலின் சித்தாந்தங்களை அழகாக பேசும் இந்தக் கவிதையை எழுதியவர், 'பொள்ளாச்சி முருகானந்தம்' அவர்கள்... கொங்கு மண்டலத்தின் பிரதான நகரமாக விளங்கும் பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஊரையும் பெயரோடு சேர்த்து வைத்துக் கொண்டார்.

கவிஞர் அவர்கள் இளங்கலை கணிதம் முடித்த பட்டதாரி. தொண்ணூறுகளின் தொடர்ச்சியில் கவிக்கோ ஐயா...மு.மேத்தா. அண்ணன் அறிவுமதி. ...ஆகியோரின் படைப்புகளின் வழியே எழுதத் தொடங்கி எழுதிக்கொண்டிருக்கிறார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்

படைப்பு குழுமத்தில் சிறந்த படைப்பாளிக்கான மாதாந்திர பரிசு...மற்றும் தொடர் கவிதைப்போட்டியில் அய்யா விக்கிரமாதித்தியன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்றாம் பரிசு எனவும் பெற்றவர். இது தவிர இனிய உதயம் உள்ளிட்ட பல்வேறு  இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளி வந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் மின்னிதழ்.கல்வெட்டு. தகவு என தொடர்ந்தும் இவரது படைப்புகள்  வலம் வந்து கொண்டிருக்கின்றன..

தொடர்ந்து இவரது பக்கத்தில் "ஒரு சொட்டு தீ " என்றத் தலைப்பில் சமூக கவிதைகளையும் பதிவிட்டு வருகிறார்..

கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் அவர்கள்தான் இந்த மாதத்திற்கான, நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினையும் பெறுகிறார் என்பதை, மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது நமது படைப்பு குழுமம்.

அவரது சில கவிதைகளை ஆய்வில் எடுத்துக் கொள்வோம்...

* காலத்தோடு ஒன்றுவதாக சொல்லிவிட்டு, நம் ஆட்கள் அடிக்கின்ற கூத்தே வேறு ரகம். நாம் கண்கூடாகக் காண்பவைதான். ஆங்கிலப்பள்ளியில் சேர்த்தவுடன் அப்பா டாடியாகவும் அம்மா மம்மியாகவும் மாறிவிடுகிறார்கள்... ஆங்கில வாசனைக் குறைவென்றாலும் தமிழை தங்கிலீஷில் பேசி பம்பம் காட்டுவார்கள். உடைகள் கூட நாகரீகம் என்றுச் சொல்லி நழுவிப் போய்விடும். நம் ஊர்க்காரர் சும்மா இருப்பாரா? கவிட்யையில் வம்பிழுக்கிறார்... இதோ அந்தக்கவிதை!

'இந்த தலைமுறை விசித்திரமானது
தமிழை ஆங்கிலம் போல் பேசும்
ஆங்கிலத்தை தமிழ்போல் பேசும்.....
சுண்ட கஞ்சி ஊறுகா.....
கருவாடு ஊறப்போட்ட மிளகா
அத்தனையும் பிடிக்கும்.....
ஆனா டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல
அப்படியே வண்டி தள்ளிட்டுப் போய்
வாங்கினால்தான் ஒரு திருப்தி.......
வாவ்....பேப்லஸ்...
ஆஹான்.....என்னா ட்ராயிங்......ப்பாவென
மோர் சூப்பர் மார்க்கெட்ல
காலையில எவனாச்சும் ஒருத்தன்
பொன்னாங்கண்ணி கீரை கட்டைப் பார்த்து
சொல்லி விடுகிறான்..............இப்படி.
ஒரு தமிழ் வாத்தியார் மகள்
தம்புள்ளைக்கு
ஸ்லீவ் லெஸ் ட்ரெஸ்ஸ போட்டு
தரதரனு இழுத்துட்டு வருது-
பாவம் புள்ள கூசிக் கெடக்கு..............
தொப்புளுக்கு மேல 
சேலை கட்டுவதோ............
வியாழக்கிழமை தவறாம
வேட்டி கட்டி சாய்பாபா கோவிலுக்கு போவதோ.........
நாகரீகமல்ல...........
மண்சார்ந்து வாழோனும்...........'

---------------

* சாதரண வீடுகளில்தான் எலிகளின் நேசம் அதிகமாக இருக்கும்... அதை பிடித்துவிடுவதும் பெரும் போராட்டம்! அதற்காக அவர்களின் மெனக்கெடலை நகைச்சுவை குறையாமால் சொல்ல இந்தக் கவிஞனால் மட்டுமே ஆகும்!

'கர்த்தரே....
இன்று இரவு நீர் கண் விழித்து 
சூதானமாய் ரட்சியும்.....
என் மனைவி
மொய் மீன் கருவாடு வாங்கியிருக்கிறாள்....
புளியும் கல்லுப்பும் பிசைந்து -
தகர கூண்டை
கழுவியிருக்கிறாள்.......
பழக்க தோசத்தில்
அந்த குட்டி எலி
பால் பாக்கெட்டை கடிக்க வரலாம்....
பக்கத்தில்
குட்டி வீட்டிற்குள்
காய்ந்த மீனொன்று
தூக்கு மாட்டி தொங்கும்.....
பேசாமல் மூக்கை பொத்திக்கொண்டு போக-
சூதானமாய் ரட்சியுங்கள்..'

-------------------
* களவு போன செம்பருதிப்பூ அதன் வரலாற்றை எழுதி விடுகிறது! இழப்பு  என்பது இழப்பு மட்டுமல்ல.. ஓர் நினைவு மீட்டலும் கூட.. இதோ அந்தக்கவிதை...

'அத்தனை எளிதல்ல
இழப்பு......
பூத்திருந்த மூன்று
செம்பருத்தி பூக்களில்
யாரோ ஒன்றை
களவாடி விட்டார்கள்............
செப்டிங் டேங்
சுத்தம் செய்து கொடுத்த
பழனிச்சாமியண்ணன்
வெட்டிக்கொடுத்த
குண்டு செம்பருத்தி குச்சியது..........
நல்ல நாள் பாத்து 
கொட்டாச்சியில்  மண்தோண்டி
பதியம்போட்டு
கண்ணுக்குள் வைத்து
நுனியில் சாணி பூசி
பார்த்து பார்த்து
வளர்த்த செடியில்
யாரோ ஒன்றை திருடியிருக்கிறார்கள்.........
இழப்பு ஒன்றும் அவ்வளவு எளிதல்ல......'

--------------

* மருத்துவ மனையில் பிணக்கூராய்விற்கு, மருத்துவர்களுக்கு உதவியாக உடனிருந்து அறுத்துத் தரும் ஆராய்களை வைத்து ஒருக்கவிதையை கவிஞர் புனைந்திருக்கிறார்.. நடை முறை சம்பவங்களை சொல்வதாக அமைந்தாலும் சாதியை உயர்த்திப் பிடிப்பவர்களை கன்னத்தில் அறைகிறது இந்தக்கவிதை!

யூரின் ட்யூப் பராமரிக்கிற
கையுரைகளற்ற
ஆராயிகளை கவனித்திருக்கிறீர்களா..
அவர்கள் பெரும்பாலும்
பிணக் கூராய்வு செய்யும்-
குப்பானோ நல்லானோ
அவர்களின் 
பக்கத்து வழியோ
தூரத்து வழியோ
சாதி சனமாய்த்தான் இருக்கும்........
அவன் சவமறுக்கும் போது-
என்ன சாதியென கேட்டதாய் நினைவில்லை......
அவள் பிறப்புறுப்பில்-
விரல் நுழைத்து ட்யூப் மாற்றுகையில்
என்ன சாதியென கேட்டதாய் நினைவில்லை.........
ஆனால்
அவர்களுக்குத் தெரியும்
இவர்கள் என்ன சாதியென்று.........!

-------------------

* மழைக்கு ஒதுங்கும் வானம் எப்படியிருக்கும்? கிராமத்து வாசனையோடு இந்தக் கவிதையுடன் உறவாடும் மழையைப்போல் இருக்கலாம்....

'நாலு பக்கம் சீமக்கருவலு
எட்டுத்தெசையும் கருத்த மண்ணு
நடுவால எங்கய்யாவோட அய்யா நட்ட 
பனை வெட்டி
கை மண்ண கொழச்சு கட்டுன மச்சு வீடு.......
ஒத்த மழத்துளிக்கு ஊர் பூரா நனைஞ்சாலும்
ஒரு துளி உள்ள வராது 
எங்க மச்சுவீட்டு திண்ணையில..
கம்மா ஒடைஞ்சு காதவழி தண்ணி வர
ஆடுமாடு முங்கி அதப்புடிச்ச மனுச மக்க முங்கி.....
தொழுநோய் வந்த முனியனொரு மூலை
கடைசி காருக்கு காத்திருந்த 
பூவீசும் பொழப்புக்காரி இருளாயி ஒரு மூலை
பொம்பள சீக்கு புடிச்ச கோட்டச்சாமி மயன் ஒரு மூலை
ஊருக்கெல்லாந் தாயத்து கட்டும் 
ஒமரு வாப்பா ஒரு மூலை
தோத்திரமய்யானு ஒவ்வொரு மண்டையா உலுக்குற 
சோசப்பு பாதரு ஒரு மூலை
நாஞ்செத்தாலும் பரவாயில்ல ஊருக்குள்ள எழவு 
விழுந்துரக்கூடாது எஞ்சாமினு பொழம்புற 
தோப்படைப்பட்டி வெட்டியானொரு மூலை
காத வழி கொட்டுற மழையோட
நானும் மச்சுத்திண்ணையில ஓசிக்கேன்.....
எல்லா சாதிக்கும் வலி  ஒன்னுதாய்யா......
மழைக்கு ஒதுங்குன வானமுய்யா 
எம் மச்சு திண்ணை........'

------------------------

* நகர நாகரீகம் கிராமங்களை விழுங்கி விடுகின்றன. பிழைப்பிற்காக  பட்டினம் போகிறவன் கிராமத்தை கை கழுவிவிட்டுச் சென்றுவிடுகிறான். அப்படித்தான் ஒருவன் வீட்டை விற்க எத்தனிக்க அதைத்தடுக்கும் ஆத்தாவின் குமுறல் மண் வாசனையுடன்...

'ஏலே ..அய்யனாரு....
சேறு கொழச்சு
ஓடை கல்லு பொறுக்கி
ஊரு சிறுக்கிக வாயில விழுந்து
இருந்த காக்குறுக்க பூமியில.......
சீமக்கருவ வெட்ட
முள்ளு குடிச்ச ரத்தம் போக
மீதி ரத்தம் பாலா தந்து
நானும் எம்மட ராசாவும்
பொத்தி பொத்தி வளத்த ஒத்த மயன்டா நீ.......

ஏஞ்சிங்கம் செத்து
வாற அமாவாசையோட
கணக்குக்கு பதினாறு வருசமாச்சுல.....

அய்யா....
உங்கப்ப வயக்காடு போயி வந்த
இரத்த வாசம்
இன்னுஞ் செவரெல்லாம் வீசுதுய்யா.....

நா அந்த குச்சுலுக்குள்ள
குத்த வெச்சு
ஈமாந்தண்ணி குடுச்சா
புழுதண்ணீல கூட
எம்புருசன் வாசம் வீசுதுய்யா...

அய்யா...
எத வேணா எடுத்துக்க
எங்குச்சுல வித்துராதய்யா
நா கண்ணு மூட வரைக்கும்.....'

------------------

*கவிஞரின் மற்றும் சில கவிதைகள்:

'உன்னை முத்தமிட
அவ்வளவு பிடிக்கும்.....
நீ தூங்கும் போது-
உன் கண்களின் வழியே
கனவை முத்தமிட வேண்டும்......
கிளம்பும் போது
கொஞ்ச தூரம் விட்டு
மறுபடி அழைத்து முத்தமிட வேண்டும்....
உன் கோபத்தை
கண்ணாடியில் முத்தமிட வேண்டும்......
நீ கொஞ்ச வரும் போது-
என் மகளுக்கு முத்தமிட வேண்டும்.....
இப்படியான முத்தங்களுக்குப் பின்னாலும் கூட
நான் கவிஞனாயிருந்திருக்கிறேன்.............!'

--------------------

'கடவுளற்றவனின்
இறுதி யாத்திரையில் தான்
அத்தனை வேண்டுதல்களையும்
கொட்டித் தீர்த்திருப்பாள்
பொஞ்சாதி....

தூசியென்றவனின்
நெற்றி முழுக்க திருநீறு......
பூவென்றவனின்
கழுத்து முழுக்க மாலைகள்........
நாற்றமென்றவனின்
உடல் முழுக்க பண்ணீர்......

இப்போது
சாமியானான்........'

-------------------

அப்போது
ஒரு முப்பத்தொன்பது வயதிருக்கலாம்...
சில பதினாறு முடிகள்
நரைக்கத் தொடங்கிய பருவம்......
அவள் மிக ஊடுருவிக் கிடந்தாள்
உணர்வதைக்கூகூட
மெலிதாய் காட்ட வேண்டிய பருவமாம் அது......
ஆனால் வெட்கமேயில்லாமல்
கொஞ்சிக் கொண்டுதான் இருந்திருக்கிறோம்........
மூச்சு முட்ட மூச்சு முட்ட
எல்லாமும் தான் ஆகிக் கிடந்திருக்கிறது........
ஒரு தேநீர் ஒரு தோசை ஒரு மிஸ்டு கால்-
ஒரு அழகான கவிதை
ஒரு மழை ஒரு சாறல் 
கொஞ்சம் தலைவலி இன்னும் கொஞ்சம் விரதம்
தூங்கப் போவதற்கான குட்நைட்
இப்படி நிறைய மொழிபெயர்ப்புகள்
வாழ்ந்திருக்கிறது............
அவளும் நானும் 
இவைகள் எல்லாவற்றையுமே
மிக ரகசியமாய் பரிமாறியிருக்கிறோம் என்றே
எழுத வேண்டும்...........
எனக்கு அப்போது -
ஒரு முப்பத்தொன்பது வயதிருக்கலாம்.........
இப்போதும்தான்..........!
----------------
கீழே விழும் போது
அறிவியலையோ 
புவியீர்ப்பு விசையையோ
பேசுவதை விட
சுண்டு விரலை நீட்டினாலே போதும்......
-------------------

எங்கள் 
ஹீமோகுளோபினுக்கு
ஒரு போதும்-
உங்களால் சாயம் பூச முடியாது.....

நீங்கள்
பற்ற வைப்பது
மெழுகுவர்த்தி -
மீண்டும் கட்டியாகி எரிவோம்.....

எங்கள்
தீப்பந்தங்களில்
இன்டியன் ஆயிலை
தெளிக்காதீர்கள்.....
நாங்கள்
அமைதிக்கான ஜோதி
கொண்டுசெல்கிறோம்....

போகிற போக்கில்
உங்கள்
காலி மதுக்குப்பிகளில்
தீ நிரப்பி வீசுகிறீர்கள்....
உங்கள்
புத்திசாலித்தனத்தில்
தீ வைக்க....

எங்கள்
இறைவர்களுக்கு
மனிதர்களைத்தான் தெரியும்-
உங்களைத் தெரியாது.......

எங்களுக்காக மெனக்கெடாதீர்கள்.......
நன்றி......
----------------
சொர்க்க ரதமென்று எழுதி
அதில் பிணம் போகிறது...........
-----------

View

மாதாந்திர பரிசு

ராஜகவி ராகில்

View

மாதாந்திர பரிசு

வத்சலா ரமேஷ்

View

மாதாந்திர பரிசு

அமுதா தமிழ்நாடன்

View

கவிச்சுடர் விருது

மதுரா



'சீவி சிங்காரித்து
அலங்கரித்து அழகுசெய்து
அனைத்துக் குழந்தைகளையும்
அவைக்கு அனுப்பி வைத்தபின்
அவசரமாய் தயார் செய்த
அவள் குழந்தைக்கு
அனுமதி மறுக்கப்பட்டது
ஆயாவின் குழந்தைக்கு
இடமில்லையென்று'

இந்த ஆண்டு வெளியான 'சொல் எனும் வெண்புறா' என்ற நூலில் உள்ள ஒரு கவிதைதான் இது..
இதை எழுதியவர், நம் படைப்பு குழுமத்தில் நீண்ட காலமாக எழுதி வருகின்ற கவிதாயினி மதுரா(எ) தேன்மொழி ராஜகோபால் அவர்கள்... ஆம், அவர்தான் இந்த மாதத்திற்கான சிறப்பு விருதான 'கவிச்சுடர்' விருதைப் பெறுகிறார் என்று அறிவிப்பதில் நம் படைப்புக்குழுமம் பெருமிதம் கொள்கிறது...

ஆங்கில முதுகலை இலக்கியம் படித்துள்ள கவிதாயினி பிறந்தது மன்னார்குடி என்றாலும் தற்போது வசித்து வருவது தமிழ்க் களஞ்சியம் தஞ்சையில்தான். 

சிறு வயது முதலே வாசிப்பில் தன்னை நுழைத்துக் கொண்டவர் பல் வேறு இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கு பெற்று பல சிறப்புகளையும் பெற்றவரென்பது குறிப்பிடத்தக்கது.

கல்கி,மங்கை,மங்கையர் மலர்,தினமலர், கோகுலம் மற்றும் சிற்றிதழ்களிலும் இவரது கவிதைகள் அழகு சேர்த்திருக்கின்றன...நமது படைப்பு குழுமத்தின் மாதாந்திர படைப்பாளி விருதை 2017 ல் பெற்றிருக்கிறார். இவரது சில கவிதைகளும் ஆங்கில மொழியாக்கம் பெற்றுள்ளன..

சமீபத்தில் பைந்தமிழ் பாமணி விருதினை மரபுக் கவிதைகளுக்கா பெற்றுள்ளார்.. மேலும் 'கம்பனும் கட்டுத்தறிகளும்', 'சிதறும் முத்துகள்' என்ற இரண்டு மின்னூல்களையும் வெளியிட்டுள்ளார் 

தனது வாழ்நாளின் மிகப்பெரிய மகிழ்ச்சியாகக் கருதுவது நமது படைப்பு குழுமத்திலிருந்து வெளியான அவரது 'சொல் எனும் வெண்புறா' என்ற நூல் மிகப்பெரிய ஆளுமைகளால் வெளியிடப் பட்டதுதான் ...

இத்தனை சிறப்புகள் பெற்ற நம் கவிதாயினி மதுரா அவர்களுக்கு கவிச்சுடர் விருது அளிப்பதில் நம் படைப்பு குழுமம் பெருமிதம் கொள்கிறது....


இப்போது கவிதாயினியின் சில கவிதைகளை காண்போம்.. 
அளவீடுகளோடு  நகரும் வாழ்க்கையென்பது கணக்கியலுக்குள் சிக்கிக் கொண்ட விடையறியா வினாக்களாகவே மாறிவிடும்... வாழ்க்கையின் அளவீடுகள் சுயக் கட்டுபாட்டில் இருக்கலாம்... அவை பிறர் கட்டு பாட்டிற்குள் சென்று விட்டால் நாமும்  சிறைக் கைதிகள்தான் என்பதை உணர்த்தும் கவிதை இதோ படியுங்கள்...

@அளவீடுகள்

அளந்து பேசவும் சிரிக்கவும்
அளவைகள் உண்டோ?
விழும் இடத்து வடிவம் பெறும்
தண்ணீராகிறேன்..
குடுவையிலா கடலிலா
கொட்டிக் கவிழ்க்கையில்
பிரளயமாகவோ குடிநீராகவோ
குறிப்பிட்டுக் கொள்ளுங்கள்..
இடும் சாயத்தில்
நிறம் மாறித் தெரிவது
இயல்பல்ல..
இருப்பிற்கான அடையாளம்..
ஒப்பனைகளுக்குள்
ஒளிந்து கிடக்கும்
உண்மைகள் உலா வருகையில்
கண்ணாடியைக் கழட்டி விடுங்கள்.
மனம்....
மெய்யைத் தரிசிக்கட்டும்...

--------------------
புவிக்கோளம் கவிஞரின் பார்வையில் பிரிகிறது பல அங்கங்களாக....


@புவிக்கோளம்

கணிக்கத் தெரியாத காலமுள்
ககனவெளி தாண்டி
கடற்சுற்றும் கருமேகங்கள்
மெல்லத் தரிக்கும் மிதவெப்பம்
உறுத்தி உணர்த்தும் ஊவாமுள். ..
நிறமாறிய பசிய மலை.
ஊடறுக்கும் உணவுச்சங்கிலி
விருத்தி மறந்த உயிர்த்தாது
கருவறுக்கப்பட்ட கானகம்
சுழற்பின்னலுக்குள்
சுருண்டு கிடக்கும்
சூத்திரங்கள்..
சுயமிழந்த சுதந்திரங்களில்
சுருக்கிடும் முடிச்சுகள்.
உயிர்த்து மரிக்கும்
உணர்வுக் குமிழிகளில்
உறைந்து கிடக்கும்
புவிக்கோளம்..

------------------

ஆசைகளென்பது கதவுகளுக்குப் பின்னால் காத்திருக்கிறதாம்! அவை கவிதாயினின் பார்வையில் வண்ணத்துப் பூச்சியின் சிறகிலேறி வானத்தையளக்க ஆசைப் படுகிறது... கூடவே சில நியாயமான உணர்வுகளையும் முன் வைக்கிறது; இந்த கவிதையின் வழியாக....

@

மெல்லத் தட்டித்
திறக்கும்
கதவுகளின் பின்னே
காத்துக் கிடக்கின்றன
ஆசைகள்...

வண்ணத்துப் பூச்சியின்
சிறகுகளிலேறி
வானையளக்கவும்
விண்மீன்களை
விரல்களில் பிடித்து
விளையாடவும் அனுமதி வேண்டி
தயங்கி நிற்கின்றன..

முன்மொழிந்திட ஒரு துணை
முயற்சிக்க ஒரு இணை..

மூங்கில் வனத்துக்குள்
குழலூதவும்..
இசையின் நரம்பெடுத்து
யாழிசைக்கவும்
வண்ணங்களைக் குழைத்து
வானம் செய்யவும்
முயற்சிக்கட்டும்..

அபத்தங்களின் ஆரம்பங்களை
ஆராதிக்கச் சொல்லவில்லை
அப்படியே விட்டுவிடுங்கள்..

அதுவாகவும் அவளாகவும்
வாழ்ந்துவிட்டுப் போகட்டும்..

----------------------------
ஒரு கவிஞனிடம் கவிதைகள் எப்படி பிறக்கும்? இப்படியும் இருக்கலாம்... எனென்றால் அது அப்படித்தான்!...



@அது அப்படித்தான்

இரவு மரத்தின்
கனவுக் கிளைகளில்
இளைப்பாறிக் கொண்டிருக்கும்
அவனுக்கு
இருளின் நிசப்தம்
ஒரு பாடலை
இசைத்துக் கொண்டிருக்கிறது..

பகற்பொழுதுகளில்
மறந்து போன
வரிகளை
நினைவூட்ட புது ராகத்தை
ஒப்புகையிடுகிறது..

பசியோ பிணியோ
அற்ற பேருலகத்தின்
கதவுகளை ஒவ்வொன்றாய்த்
திறக்க முயல்கையில்
அவன் சிறகுகளில்
சுமந்து வைத்திருக்கிற
துயரங்களையும் வலிகளையும்
ஒவ்வொன்றாய்
உதிர்த்து விடுகிறது..

மறுநாள்
பொழுது புலர்கையில்
அவை கவிதைகள் எனக்
கொண்டாடப்படலாம்..

ஏனென்றால்...
அது அப்படித்தான்...

-----------------------
இருத்தலுக்கான விதியை நிர்ணயிக்க எடுக்கும் முயற்சிகளில் கவிதாயினி சில முன்னெடுப்புகளையும் கேள்விகளாக்கி நகர்கிறார்....

@
பறப்பதற்கான
நியதியை வகுத்த பின்னே
படைக்கப்பட்டிருக்குமோ
சிறகுகள்?

பூக்களின் புன்னகையில்
புதைந்து கிடக்கும்
கவி வரிகளை
இலை நரம்புகளில்
எழுதி வைத்தது யாரோ?

காற்றாக மாறி
கிசுகிசுக்கவோ
பறவையாய் மாறி
பருகிடவோ
அனுமதி கொடு..

உனக்கான
ஆயிரமாயிரம்
கவிதைகளில்
ஒன்றையேனும்
இதய உறைக்குள்
பத்திரப்படுத்த
பரிசளிக்கிறேன்..

பின்பு..
இருத்தலுக்கான
விதியை நானே
நிர்ணயிக்கிறேன்.

--------------------
யாமத்தின் மொழியறிய கவிதாயினி அந்த நிசப்த வெளிக்கு தன் ஆன்மாவை அனுப்பி விவரங்களை அள்ளிவருகிறது இந்தக் கவிதை.....

@யாமத்தின் மொழி

யாமத்தின் நிசப்த நிமிடங்களில்
ஆகாயம் தேடி  மலைமுகடு சுற்றிப்
பனிபெய்யும் 
அடர்வனமொன்றின்
பருத்த மரத்தின்
உச்சியில் ஒண்டிக்கொள்கிறது
ஆன்மா...
சூரிய ரேகைகள்
சுருக்கிட்டு மொட்டவிழ்க்கும்
வரை சிரமப் பரிகாரம் செய்ய
இலைகள் ஒவ்வொன்றாய்ப்
பேரெழுதிப் பிய்த்துப்
போடுகிறது....
சரசரப்பில் துயில்கலைந்த
மைனா ஒற்றைக்கண்ணைத்
திறந்து பார்த்துவிட்டு
மீண்டும் மூடிக்கொள்கிறது...
பச்சைத் தவளையொன்று
புல்வெளிக்குள் சிணுங்க
புதரோர பாம்பு அசையாமல்
தவமிருக்கிறது. ...
மெல்ல மரணித்துக் கொண்டிருக்கிறது
அன்றைய இரவு..

--------------------------
பெருமழைக்குள் நனைந்து காயும் கனல் துண்டுகள் ஊடாகி நுழைகிறது அகத்தின் தீயின் நாக்குகளாய்.. தாகத்தின் வேட்கை தீராத்தீ என்பதும் நியாயம்தானே....

@தீராத்_தீ

ஊழிக் காற்றின்
இரைச்சலில்
அதிர்ந்து கொண்டிருக்கிறது
பூமி...
வனமடைத்து
பெய்யும்
பெருமழைக்குள்
நனைந்து காய்கிறது
கனல் துண்டுகள்..
அகத்தினடியில்
எரிந்து கொண்டிருக்கும்
தீயின் நாக்குகளோ
தாகத்தின் வேட்கையில்.
யுகங்கடந்து
பெய்த பின்னும்
பெருநெருப்பு
அணைவதாயில்லை...
கனன்று கொண்டே
இருக்கிறது
பெண்ணுக்குள்
தீராத் தீ..

-----------------
ஒவ்வொரு ஊடலுக்கு பின்பும் சேரும் அந்த நாசாக்கு வார்த்தைகள் இப்போது நகராமல் நின்றவிடத்திலேயே நிற்கிறது... அதை அகந்தை என்றாலும் பரவாயில்லை.. நீயே இறங்கிவா!....

@
சட்டென உடைந்து
நொறுங்கிய நொடிக்குப்பின்
பேச நினைக்கையில்
மௌனக் கதவு
மூடியே கிடக்கிறது..
ஆற்றாமை
அடிமனத்தில்
ஆரவாரம் செய்தாலும்
அகந்தையோ அழுத்தமோ
ஏதொன்றையும்
நினைத்துக் கொள்..
முதலடி எடுத்துவைக்க
மனதில்லை...
ஒவ்வொரு முறையும்
வலிய வந்து விளக்கம்
தர விருப்புமில்லை...
தீவிர சிகிச்சைப் பிரிவில்
கிடக்கும் நட்பைப்
பிழைக்க வைப்பதும்
சாகடிப்பதும்
இம்முறை உன் கையில்...

-----------------
மெய்யிலிருந்து எதற்கு பொய்யை பிரித்தெடுக்க வேண்டும்? மெய்யின் கதவுகள் திறந்து கொள்ளத்தான். அதற்கும் ஒரு கடவுச் சொல் நம் வசம் இருக்கிறதே என்பவர் அச்சொல்லை நமக்கும் சொல்லிவிடுகிறார். அதுதான் காதல்....

@
பொய்களை 
மெய்யிலிருந்துப்
பிரித்தெடுக்க
இன்னும் பயிற்சி 
போதவில்லை
அது தேவையுமில்லை..
காதல் என்ற
ஒற்றைக் கடவுச்சொல்லில்
திறந்து கொள்கிறது
அத்தனைப் பூட்டுகளும்..

------------------
கவிதாயினியின் இன்னமும் சில கவிதைகள் :

@
பொங்கிப் பெருகும்
நேசப் பரிவர்த்தனை..
ஆராதிக்க
அறிந்தாளில்லை..
ஆனந்தப் பெருவெளிக்குள்
அன்பின் அலைகள்
தலை கால் புரிவதில்லை..
கொடுத்துச் சிவந்தபின்
பெற்றுக்கொள்ள
ஏதுமில்லை..
எல்லாமே
அவனும் அவனாகிய பின்
பாதங்களோ கைகளோ
தலை மீது
எதை வைத்தாலென்ன?
வழியும் குருதியை
நிறுத்தக் கண்ணப்பராகிறது
இதயம்..

@

உனக்குமான எனக்குமான
இடைவெளியை
எதைக் கொண்டு நிரப்புவது?
திகைத்து நிற்கிறது
காலம்....
நீண்ட மௌனத்தை
எந்த மொழியில்
மொழி பெயர்ப்பதென
தத்தளிக்கிறது ..
நேசம்....
ஒன்றாய்ப் பயணித்த
காலங்களை அசைபோட்டு
மறுகிக் கொண்டிருக்கிறது
உள்ளம்...
தெளிவில்லா புரிதல்களில்
தொலைதூரம் போய்
மனச் சிடுக்குகளில்
சிறைப்பட்ட சிநேகத்தை
மீட்க வழியின்றி
தவித்துக் கொண்டிருக்கிறது
நட்பு!!!!

@

பூட்டிக் கிடக்கும்
காராக்கிருகம்
திறக்க இயலாமல்
பாழடைந்து கிடக்கிறது
இற்றுப் போன
கதவிடுக்கின் வழியே
ஒளியைப் பாய்ச்சுகிறாய். . 
காட்டுச் செடிகள்
மண்டிக் கிடக்கும் புதரில்
மலருமில்லை தேனுமில்லை..
இருப்பினும்
வண்ணத்துப் பூச்சியாய்
நுழைந்து படபடக்கிறாய்
நீ உதிர்த்த
வண்ணத் திறவுகோலால்
வசந்தத்தின்
வாசல் திறக்கிறேன்..



@பிள்ளையாரும் நானும்

பள்ளி விட்டுத் திரும்பும்போது
ஒரு பொன்னந்தி மாலையில்
அறிமுகமானார் அந்த பிள்ளையார்....

முட்டுச்சந்தின் மூலையில்
நாயொன்றின் துரத்தலிலிருந்து
தப்பிக்க அடைக்கலம்
கொடுத்ததினால் அத்யந்த நண்பரானார்...

அன்றிலிருந்து
சிலேட்டு குச்சி முதல்
சர்க்கரை மிட்டாய் வரை
பகிரப்பட்டது ...

அவ்வப்போது சண்டை வந்து
முகம் திருப்பினால்
ஏதாவது ஒரு மாமிமூலம்
சுண்டல் கொடுத்து சமாதானப்படுத்தி விடுவார்...

கடைசி இருக்கை கோமளா கிள்ளியது
 தம்பி கேலி செய்தது வரை...
பள்ளிக்கதை வீட்டுக்கதை
எல்லாம் அவருக்கு அத்துபடி..

திடீரென ஒரு மழைநாளில்
நான் பெரிய மனுஷியாகி விட
பிள்ளையாரும் கடவுளாகி விட்டார்..

இப்போதெல்லாம் நானும்
பிள்ளையாரும் பேசிக்கொள்வதேயில்லை..


@இரவின்_இறக்கைகள்

இரவின் இறக்கைகளை
பிடித்திழுத்து
போர்த்திக் கொள்கிறேன்..
மேகப்புரவிகளில் விரைந்த
கனவுகளில்
எத்தனை அதிசயங்கள்...
நீலக்கடல் நுரை ததும்ப
திராட்சை ரசமாகிறது...
சூரியனோ மின்னி
உருண்டோடும் பந்தாகிறது..
நட்சத்திரங்கள் கண்சிமிட்டி
உண்ணும் உணவாகிறது..
நிலவோ தோழியாகி
வானமுழுதும்
கைப்பிடித்து அழைத்துப்
போகிறது...
வெளிச்சக் கதிர்கள்
கைநீட்டி எழுப்பிப் போகையில்
நேற்று உண்ட
விண்மீன்கள்
தொண்டைக்குழியில் சிக்கி
பேச்சற்று நிற்க வைக்கிறது
பூமியில்....



@பயண_சிநேகம்

வினாவுதலும் விசாரிப்பதுமாய்
உயிர்ப்பிக்க ஆரம்பிக்கிறது
ஒரு உரையாடல்..
முகமறியாதவர்களையும்
நலம் கேட்டு
நட்பாக்க விழைகிறது..

ஒரு கோட்டின் பயணத்தில்
ஏதோ ஒரு சொல்
திறக்கிறது
மனத்தின் கதவுகளை..

ஏதோ ஒரு சமிக்ஞை
இழுத்துத் தாளிட்டு
இறுக மூடுகிறது இதழ்களை..

ஒத்த அலைவரிசைக்குள்
ஊடுருவ
காத்துக் கிடக்கின்றன
சில சொற்கள்..

எப்படியோ
பயணங்கள் எப்போதும்
ஒரு சிநேகத்தை
இறங்கும் நிறுத்தத்தில்
விட்டுப் போகிறது .
சிலவற்றை
மறுத்தும் போகிறது..


@யானைத் தீ

தேடுதல்களிலேயே
தொலைந்து கொண்டிருக்கும்
திக்குத் தெரியாத
காடொன்றில்....
கிடைப்பதை
ருசிக்கத் தெரியாத நாவில்
எதைத் தின்றால்
பித்தம் தெளியும்?
அடங்காத் தீயாய்...
எதை உண்ணுவது
எதைக் கொண்டு
ஆற்றுவது?
எத்தனை முயன்றும்
ஏக்கங்களின்
இரைச்சலாய்...
காலந்தோறும்
காயசண்டிகைகள்
ஆபுத்திரனின்
அட்சயப் பாத்திரத்தை
எதிர்பார்த்தே
காத்திருக்கிறார்கள்.....

 - மதுரா

View

மாதாந்திர பரிசு

வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்

View

மாதாந்திர பரிசு

கோ.வசந்தகுமாரன்

View

மாதாந்திர பரிசு

வதிலை பிரபா

View

மாதாந்திர பரிசு

அம்பிகா குமரன்

View

கவிச்சுடர் விருது

கார்த்திகேயன் மாகா

கவிதைகளென்பது தெளிந்த நீரோடையை போன்றது.. அவை தம் ஓடு பாதைகளை உள் வாங்கி கொண்டு  வண்ணங்களை  மாற்றிக் கொள்கின்றன.. கவிதைகள்... காற்றோடு கலந்து நிறமிழந்தும் பேசும் மகா சுவாசம்.. வாழ்வியலையும் வாழ்ந்தவியலையும் வகைப்படுத்துகின்ற ஆவணம். இங்கு படிமக்கூறுகளை பாட்டாக்கி தெளிகின்றது கவிஞர் கார்த்திகேயேன் மாகா அவர்களின் கவிதைகள்.. புரியாதது போல் தோன்றினாலும் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணமாகத்தான் இருக்கின்றன அவரது கவிதைகளின் மொழி

நமது படைப்பு குழுமத்தில் தொடர்ந்து சிறப்பான கவிதைகளை எழுதிவரும் கவிஞருக்கு இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருதினை அளிப்பதில் பெருமை கொள்கிறது நமது படைப்பு குழுமம்..கவிஞர் கார்த்திகேயேன் மாகா.. கரூரில் தமிழாசிரியராக பணி புரிந்து வருகிறார்... 2014 ல் இவரது கவிதைகளின் தொகுப்பாக 'பெவிலினியனில் காத்திருக்கும் தலைகள்' என்ற நூலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 வாழ்த்துகள் கவிஞரே!

இனி அவரது கவிதைகளில் சில நமது பார்வைக்கு:

காலத்தையே பந்தாக்கி காட்சிகளை கண்களுக்குள் நிறுத்துகின்ற இந்தக் கவிதை மகா அழகு என்று மனம்விட்டு சொல்லலாம் :

*

ஒரு நீல வண்ணப் பந்தைத்
தவறித் தவறிப்பிடித்து விளையாண்டு கொண்டிருந்தார்கள் சிறுமிகள்
யாருக்கும் சிக்காமல் நழுவியோடிக் கொண்டிருந்தது இளம் வெயிலில்

முற்றிய வெயில் சிறுமிகளின் பாதம் படிந்த நிலத்தை எரித்துக் கொண்டிருந்தது
சிக்காத நீலப்பந்தையும் சேர்த்து 

விடுபட்ட பிடியைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள் மீண்டும் பின்மாலையில் இல்லாத பந்தோடு

அந்தி ஊதி வைத்திருந்தது ஆவியான நீலப்பந்தைசற்று சிறியதாக

இடி இடித்தபோது உடைந்து 
மின்னும் போது கிழிந்து இப்போது குட்டிக் குட்டித் துளிகளாய்த் திடலெங்கும் தெறித்துத் தெறித்து ஓடுகிறது பந்து

விடிந்ததும் வந்து விளையாடுகிற 
சிறுமிகளுக்காக 
நிலம் பிடித்து வைத்திருக்கிறது பந்தை 
குளுமையின் நிறத்தில் 

                 கார்த்திகேயன் மாகா
__________

 அப்பாவி அரசியல்வாதியின் முகத்தில் ஒட்டியிருக்கிறது வாலை சிரிப்பு. அவன் எப்போதுமே கூழைக்கும்பிடுமட்டுமே போடுகிறான்.. அவன் விசுவாசத்திற்கான வால் காலரில் இருக்கிறதாம்..(குனிந்து சேவகம் செய்வதால்) பறவைகளை கூண்டில் அடைக்க ஆசைப்படுபவர்கள் நடை பயிற்சி செய்யும் முரண் இப்படியாக விரியும் இந்தக் கவிதை சமூகத்தின் மற்றுமொரு பக்கம் என்று சொல்லலாம்:        
*

கூழைக்கும்பிடு போடும் முகங்களில் முளைத்திருக்கும் வாலை சிரிப்பு மறைக்கிறது
கழுத்தில் வால் காலரென முளைக்க அதை வாங்கிச் செல்கிறான் 
பாவங்களை ஏவத் தெரியாத அரசியல்வாதி 

இந்தப் பாதையில் தான் வளர்ப்பு நாய்கள் பயணிக்கின்றன
கூண்டில் பறவை வளர்க்க ஆசைப்படுபவர்கள் நடைப் பயிற்சி கொள்கிறார்கள்
இரண்டாவது சிட்டிங்கிற்கு ஆசைப்படுபவன் இங்கே தான் தள்ளாடாது தெளிந்து நிற்கிறான்
சொற்களைப் பிடித்து நடை பழகும் எழுத்தன் தன் மூத்த கவிகளின் வருகைக்கு நிக்கோடின் விரல்களாடு ஏந்தி நிற்கிறான்
தன் தொகுப்பை
புதிய துளிர்கள் யாவும் நீண்டு முளைத்திருக்கின்றன ஒரு வாலைப் போல 
பழைய கால் தடங்கள் சிலைகளாய் முளைத்து நிமிர்ந்து நிற்கும் இவ்வழியில்
ஆரத் தழுவிப் படர்ந்திருக்கும் பச்சையங்களை மேய பின்புறம் மட்டுமே வாலுள்ள என் கழுதைகளைத் தவறியும் விடுவதில்லை நான்

       கார்த்திகேயன் மாகா
______________________

காலம் நம்மை பின்னுக்கு தள்ளி அது முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாகரீகம் நம்மை நசுக்கிவிட்டு நம் மீதே ஏறி அமர்ந்து கொள்கின்றன. காட்சிப் படிமங்களின் வழியே கரை சேராத வாழ்க்கைக்கூறுகளை அலசுகிறது இந்தக்கவிதை...



தினை காத்தலெனும் விளையாட்டை விண்ணென்று பால் சுரந்து நிற்கும் கதிர்களில் கடித்துப் பறக்கும் மைனாக்களுடன் குருவி காகங்களுடன் கவணெறிந்து ஆடும் பாவாடைச் சிறுமிக்கு நரை கூடியது

கருதுகள் புடைத்து நிற்கும் வயல்களில் சில்லி ஸ்டால்கள் முளைத்து நிற்கிறது
ஜெராக்ஸ் மெஷின் நகலெடுக்கிறது
சோளம் விளைந்த கதையை 
பக்கத்தில் பொக்லைன் தோண்டுகிறது தொலைந்த தினைப்புனத்தில் கிளி விரட்டும் போது பிறந்த காதலை 

வானில் ஏறிப் பறந்த விதைகள் விழுந்து முளைத்தது பறவையின் எச்சமாய்
அதைக் களையென்று வெட்டி அகற்றுகையில் அறுந்து விழுகின்றது
பறவையின் மலக்குடல்

அந்த பானிபூரிக் காரன் நின்று கொண்டிருக்கிறான் ஆளுயரப் பச்சையத்தை
வழங்கிய பாசிப் பசுஞ்சுனையின் கீழ் அதன் மொழி புரியாமல்
லெக்கின்ஸ் சிறுமிகளின் பாதங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை அவ்வளவுதான் 

கதிரறுத்துத் தூற்றிப் புடைத்துக் 
காய்ப்பேறிய முதுசிறுமி தான் உங்களுக்கு மண் கலயத்தில் கம்மங்கூழ் கொடுக்கிறாள்
தன் கொதித்த வாழ்வின் எச்சத்தைக் குளிரக் குளிர சர்பத் என்று தருகிறாள் 

முப்போகமும் கோடையை அனுபவிக்கும் அவளுக்கு ஒரு பத்து ரூபாய் கொடுத்து விட்டுச் செல்லுங்கள் 
நினைவின் கூழாங்கற்களைத் தன் காலத்தில் மீது ஏவ ஒரு கவண் வாங்குவதற்காவது உதவட்டும் 

            _______________

இதுதான் கடைசி அழைப்பு என்று இருவருமே பேச தொடங்குகிறார்கள் அதுவும் எப்படி? முதலழைப்பின் சிறகு முளைத்த சொற்களோடாம்... அது முடியாமல்  நீள்கிறது இக் குறுங்கவிதையில்:

*



இது தான் கடைசி அழைப்பு இப்படி நிர்பந்தத்தோடு பேசச் சொன்னதும் 
முதல் அழைப்பின் சிறகு முளைத்த சொற்களை உடலெங்கும் தொங்க விடுகிறேன் 

பேசப் பேச எனைத் தூக்கிப் பறக்கிறது சொற்கள் 
மறுமுனையில் என் எஞ்சிய சிறகுகள் உன்னை வருட வருட 
நீயும் மயிலாகிறாய் நீளும் சிறகுகளுடன் 

நிர்பந்தத்தின் கழுத்தை நம் சிறகுகள் வெட்டிவிட பேசிக்கொண்டிருக்கும் சொற்கள் இரை தின்ற மலைப்பாம்பாகின்றன.
 

             கார்த்திகேயன் மாகா
___________________

காட்சிப் படிமங்கள் அழகூட்டும் போது கவிதைகள் மிளிர்வதில் வியப்பில்லை. வெய்யில் தன் வாளிப்பில் முகம் பார்க்க... தலை துவட்டுகிறதாம் காமம், வாழ்வின் கணங்களென்பது ஆடறுத்த கத்தியில் ஒட்டிக் கிடக்கிறது, திருகு எந்திரத்தில் தப்பித்த வரகு மண்ணில் விழுந்து முளைவிடும் பசுமை ஆதியின் நிறமாகிறது,ஆடிடும் திரைச்சீலை இங்கு நாடகக்கணிகையாக... அவளின் உதட்டு சாயத்தால் நிலம் சிவக்கிறது... இரசியுங்கள் இந்தக் கவிதையை

*

வாளிப்புகளில் முகம் பார்த்துக்கொள்ளும் வெயிலில் தான் தலைதுவட்ட விரும்புகிறது காமம் 

ஆட்டுக் குருதியில் கழுவப்பட்ட கத்தியின் மனதை விட்டத்தில் சொருகவைத்தது வாழ்வின் கணங்கள் 

திருகுதனில் தப்பித்த வரகு 
முளைவிட்ட துளிர்களில் மின்னுகிறது ஆதியின் பசுமை

திரைச்சீலை கீழ்த்தெரியும் கணுக்காலில் ஆடற்கலை ஒளிந்துகொள்ள நாடகக்கணிகை தன் உதட்டுச் சாயத்தால் நிலம் சிவக்க வைக்கிறாள் 

அச்சிவப்பை உள்வாங்கி விடியல் வருகையில் தேநீரகத்தில் சுருட்டுப்புகைக்கு கண்ணைக் கசக்கிக் கொண்டு நடுத்தெருவில் அலைகிறது சூரியன் 

கார்த்திகேயன் மாகா
__________________

தெருவொரக் கடைகளில் உணவு சாப்பிடுவதற்கான அவசியத்தை இந்தக் கவிதை எளிமையாக சொல்லிவிட்டு நகர்கிறது..:

*
இரண்டு வட்ட தோசை 
பெப்பர் அதிகமாய் 
ஒரு ஒன் சைடு ஆம்லேட்
வயிறு நிரம்பிய பின்
கூடுதலாய் ஒரு புரோட்டா ஆர்டர் செய்ய எது காரணமாய் இருக்கக் கூடும் 

தகரம் வேய்ந்த அந்த கொட்டகையில் 
வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டே
கல்லாவில் காசு வாங்கிப் போடும் 
யூனிபார்ம் கழற்றாத 
அச்சிறுமியைத் தவிர.

              கார்த்திகேயன் மாகா

______________________

கவிஞரின் இன்னமும் சில அற்புதமான கவிதைகள் உங்களின் பார்வைக்கு:

*

வறண்ட காற்றின் நீள நாக்கு அத்தனை ஈரத்தினையும் சுவைத்தபின் வளைந்து வருகிறது 

ஊறிய வாய்நீரின் சுவையை வாங்கத்தான் சுழற்றிச் சுழற்றி வீசுகிறது 
இந்தக்குளிர் உறைகிறது போக்குவரத்துக்கென நியமிக்கப்பட்ட பாதையைத் தனதாக்கிக்கொண்டவனின் ஆடையற்ற தேகத்தில் 

ஒரு வேண்டுகோளை சிலேடைப் போல தூக்கிக்கொண்டு ஓடி வருகிறான் 
குழிக்குள் தவறி விழுந்த தனது சொற்களை நனையாமல் எடுக்க 

அது நீரற்ற சேறு 
மிதந்த சொல்லின் கலங்கிய எழுத்து 
வீசாத மென்காற்றின் கைகளைப் பிடித்தும் கெஞ்சிப் பார்க்கிறான் 

கேட்பதற்குச் செவிகளற்ற சொற்களைப் பேசுபவனின் உலகம் 
அந்தச் சேற்றில் தான் புதைந்திருக்கிறது 

உண்டாட்டுக் காலத்தில் இருக்கிற காற்றுக்குக் தெளிகிற வரைக்கும்
நாக்குப் பூச்சிக்கும் தீராத வறட்சி தான்!

கார்த்திகேயன் மாகா

__________

அம்மிக்கல்லை இரண்டாகப் பிளந்தவள் குழவிக்கல்லை தன் விரலிடுக்கில் நசுக்கி வன்முறையைக் கட்டவிழ்க்கிறாள்

சோற்றுப்பானை , தட்டு, குவளை , நாற்காலி யாவற்றையும் இல்லாத ஓசையொன்றை எழுப்பி உடைத்து அறையை நிரப்புகிறாள்

சிரிப்பின் மென்கோடுகள் படர 
சிதைத்த கைகளில் ஈரம் மின்னுகிறது
முதன் முறையாக 
ஒரு கோபமற்ற வன்முறையை
 ஓசையற்ற உடைத்தலைப் பார்க்கும் கண்களில் பனிக்குடத்தின் சாயல்

அருகிருப்பவர்களின் மகிழ்ச்சியில்
ஒரு தலைப்பிரட்டை நெளிகிறது
நண்டு நுழைகிறது
மீன் துள்ளுகிறது
கொக்குகள் அமர்ந்து போகிறது
அல்லிகள் பூக்கிறது

மகள்களின் சகிப்புத்தன்மையைத் தாங்கிக் கொள்கிற
தொலைந்த குளங்களின் ஒரு துண்டு
களிமண்ணால் மட்டுமே சாத்தியம்
வீட்டைக் குளமாக்க
                    
கார்த்திகேயன் மாகா
____________

நாக்கு சில சொற்களை ஊதித்தள்ளுகிற போது காற்று அதைக் கடத்திக்கொண்டு திசை தேடுகிறது 
பசிக்கு ஏங்கியவனின் வறட்சி சொல்விளிம்பில் தென்பட அவை ஒரு தேன்கூட்டில் இளைப்பாறுகிறது 

பருவத்தின் புடைத்த திமிர் ஒரு அலுமினியப் பாத்திரமாய் சகல பழக்கங்களின் சுவைகளை ஊரெங்கும் தூற்றிப் போகையில் அடுத்த யுகத் தொடக்கத்தின் வாய் கசப்பானது 

பழங்களை   ஊதி ஊதிப் பெரிதாக்கப் பார்த்தான் அணுக் கழிவில் ஆல்ஹகால் தயாரித்த விஞ்ஞானி ஒருவன் 

அவர்கள் பனிப்பழத்தை கோடையிலும் சாப்பிடலாம் என ஏக உரிமம் கொண்டு மெழுகு தடவச் சொன்னான் ஆயுத வியாபாரி 

இனி தனது கனிகளின் நிறத்தை தீர்மானிக்க இயலாக் கையறு நிலையில் தனக்குத் தானே தீ மூட்டி எரிந்த எச்சம் அமேசான் காட்டிற்கும் நீள்கிறது 
எரியும் நெருப்பிற்கு தனித்தனிப் பழங்களின் நிறம்.

கார்த்திகேயன் மாகா

__________________

துருவேறிய கம்பியில் தரையைத் தோண்டிக் கொண்டிருந்தோம் 
எதைத் தேடுகிறீர்கள் என்றான் வழிப்போக்கன்
துரு ஏறிய நூற்றாண்டை என்றான் உடனிருப்பவன்
கம்பியின் நூற்றாண்டை என்றான் இன்னொருவன் 
துருவிற்கும் கம்பிக்கும் இடைப்பட்ட நூற்றாண்டை என்றேன் நான்

உனது நூற்றாண்டு மண்டையோடுகளாலும் எலும்புகளாலும் ஆனது 
அப்படியே குழியை எட்டிப் பார் எனக்கடந்து சென்றான் வழிப்போக்கன் .

(அடுத்த நூற்றாண்டில் உயிரோடிருக்கும் தமிழனுக்கு)
_____________________




கழுதை அணில்கள் முயல்குட்டிகள் இவற்றோடு சில மனிதர்களையும் ஏற்றிக்கொண்டு மிகுந்த புழுக்கத்தில் 
காற்றை விலகச்சொல்லி ஒலி எழுப்பிக்கொண்டே சென்ற பேருந்து 
இவனது கையசைப்பிற்குச் செவி கொடுத்து நின்று ஏற்றிக்கொண்டு சென்றது.

 காடு பற்றிய கவிதையில் லயித்தவனுக்கு அமர இடமற்றுப்போனதில் பெரிதாகக் கவலையொன்றுமில்லை. 

ஆண்ட்ராய்டு அவ்வளவு பழக்கமில்லை என்பதால் தன் பந்துமுனை(பால்பாயிண்ட்)பேனாவில் எழுத நினைத்தவனுக்கு காகிதம் இல்லாமற்போகவே ஐனஸைப் போன்ற உருவம் கொண்டவனின் முண்டா பனியன் ஏதுவாக இருந்தது.

இவன் எழுத எழுத ஐனஸ் தூங்கிப்போக,
கடைசிவரி முடித்து அவனது முண்டாசு பனியனைக்கழற்ற முற்பட டயர் வெடித்து நின்ற பேருந்தின் சத்தத்தில் எழுந்தவன் தன் வயிற்றைத்தடவி  நிம்மதி கொண்டவன் இறக்கிப்போகிறான்.
ஐனஸை ஊருக்கே பின் தொடர்ந்து.

 குளியலறை கதவிடுக்கில் செருகப்பட்ட பனியனில் அந்தக்கவிதை இருந்தது கண்டு நிம்மதி அடைந்தவன் அதை எடுத்துப்படிக்க ஐனஸின் அட்டூழியங்கள் அதில் எழுதப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டி
எழுதியவனுக்கு சவுக்கடி
 சாதிக்காரன் அங்காளி பங்காளிகளால் கிடைக்க 
வலி தாழாதவன் விழித்தெழுந்ததும் காண்கிறான் 
பால்பாயிண்ட்  முனை பொங்கித் தரை வரை சிதறி இருந்ததை

கார்த்திகேயன் மாகா
_____________________

அடுக்கடுக்காய் 
உன் நினைவின் பானைகள் இரவோர மூலையில் 

வராத தூக்கம் துலாவச் சொல்கிறது பானையை 
துலாவத் துலாவ விரல்களெங்கும் உன் சொற்களின் ஈரம்

எந்த யுகத்தின் சொற்களென்று எனக்கும்
எந்த யுகத்தின் விரல்களென்று உனக்கும் தோன்றவில்லை

துலாவும் போது ஈரமாகிற மாயம் 
ஒன்றே போதும்
 
திசைகளின் எதிர் எல்லையின் நுனியில் இருந்தாலும் தோன்றும் போது புள்ளியாகிவிடுகிற நமக்கு....... 

   கார்த்திகேயன் மாகா
___________________

தீராத நீர்மையின் வடிவத்தை இட்டு நிரப்பிக் கொண்டு அவன் உடலொழுகப் பயணிக்கிறான் 
கொஞ்சம் ஆசுவாசமாய் இருக்கிறது நீருள்ள மேடுகள்
தவிர அவன் மனமெங்கும் குற்றம் புழுங்கும் கணங்களில் ஆழத்துளைக்கும் இராட்சத எந்திரம் நோண்டி விட்டுப் போகிறது
இருந்தும் 
பேரன்பின் துணை நாணயத்தைச் சுண்டித்தான் அன்பு தருகிறது 
தலை விழுந்த போது கிட்டாத பூப் பக்கம் யாருக்கென்று தான் அடித்துக் கொள்கிறது நெஞ்சம்
 
கார்த்திகேயன் மாகா
________________


வசவுகளும் சாபங்களுமே கொண்ட நம் ஆதிக்குகையின் படுக்கையறையில் விழுந்த மீச்சிறு இடைவெளியை என் கெஞ்சலின் தையல் ஊசி இழுத்து இழுத்துத் தைத்துக் கொண்டிருக்கிறது 
கொஞ்சம் புரண்டு படடி காதலி  யுகங்களின் நீளக் கிழிசல் அது    

 கார்த்திகேயன் மாகா

-______________________

இறந்துபோன நண்பனை ஒருமுறை தற்கொலைக்குத் தடுத்தவன் வந்திருந்தான் எட்டோடு ஒன்பதாவது மதுப்புட்டியாக இரவையும் குடித்துவிட்டு தென்னைமரத்து மாத்திரைகளை துணிப்பையிலிருந்து அவிழ்க்கையில் தான் தான் அதைப்பிடுங்கி எறிந்து காப்பாற்றியதாகவும் பத்தாவதாக ஒரு மதுப்புட்டியை வாங்கி ஆளுக்குப்பாதியாய் அருந்தியதையும் பகிர்ந்துகொண்டிருந்தான்

நீ பதினொன்றாவது மதுப்புட்டியை வாங்கிக்கொடுத்திருந்தால் அவன் தற்கொலை செய்யாமல் இருந்திருப்பான்    என்றேன்

பதினொன்றில் பாதியை தனித்து அருந்துகையில் தான் அழைப்பு வந்தது 
குடித்துவிட்டு பார்க்கிறேன்
மீதிப்பாதியை துணைக்கு மாத்திரையோடு அருந்திச்செத்திருக்கிறான்  நண்பன் என்றான்

இருவரும் அருந்தாத அப்புட்டியை நம் மூவரும் அருந்தலாமா என்கிறான் 

இறந்தவன் குவளையோடு காத்திருக்கிறான் நாங்கள் இன்னும்  நுழையாத அறைக்குள்.

 கார்த்திகேயன் மாகா
___________________

ஒரு குருவியின் தலையில் அமர்ந்த பனம்பழம் என
 நீ
அமர்ந்திருந்து எழுந்துபோன 
சுமைச்சுவடு நீங்கவில்லை
கோடையின் நீர்த்தடம் உன்னில்
 பயணிக்கும் கணம் ஓடிக்கலக்க 
உடன்துடிக்குமென் வியர்வை

நெடும்பின்னல் வறட்சி முத்தப்பாய்ச்சல்களால்
கடையோடும் நீர் பாதவழி நிலமெங்கும்

கைகோர்த்த முன்னிரவு அம்பெனப் பறக்கும் பின்னிரவு நோக்கி

மெழுகின் துளியூண்டு அன்பு
உன்னில் வழுக்கி உருண்டோடும் சமுத்திரம் நோக்கி

 சுரையின் காய்ந்த மேலோடு துளை விழாது கிடக்க
அது உன் நினைவின் நீரதிலே மிதந்து பயணிக்கிறது
நாம் சேர எண்ணிய ஆல்ப்ஸ்மலை உச்சிக்கு.

_____________

மாடியிலிருந்து கீழிருக்கும் அம்மாவைக் கூப்பிடுகிறது ஒரு குழந்தை 
உடன் விளையாடிய குழந்தையும் கூப்பிட்டுப் பார்க்கிறது   
 வேலைக்குச் சென்ற அம்மாவை  
தொடு திரைச் சேமிப்பில் பதிந்துள்ள மகளின் படம் பார்த்துக் கொண்டு கோப்புகளுக்குள் நுழைபவளுக்கு மாலையில் தான் சென்று சேர்கிறது அக்குரல் .
பிரிவின்  வலியைப் பிள்ளையின் மொழியில் உடனிருந்து கேட்கும்  தந்தைகள் தான்           
எத்தனை  துர்பாக்யசாலிகள்.      
   
  கார்த்திகேயன் மாகா
_______________

View

மாதாந்திர பரிசு

மயிலாடுதுறை இளையபாரதி

View

மாதாந்திர பரிசு

கோ.கலியமூர்த்தி

View

மாதாந்திர பரிசு

மு.ச.சதீஷ்குமார்

View

மாதாந்திர பரிசு

வீரசோழன்.க.சோ.திருமாவளவன்

View

கவிச்சுடர் விருது

ஏ. நஸ்புள்ளாஹ்

கவிதையில் இருந்த பறவை
பறக்கத் துவங்கியதும்
சொற்கள் ஒவ்வொன்றாய்
மறையத் துவங்கியது.
மறையத் துவங்கிய சொற்களை
மனதுக்குள் சேகரிக்கத் துவங்கினேன்
கவிதையில் மீண்டும்
பறவை உட்கார்ந்து கொண்டது.

ஒரு கவிப்பாடியின் மனதை இதைவிடவும் அழகாக யாரும் சொல்லிவிடமுடியாது. அவன் தினமும் உறவுகளைவிடவும் சொற்களிடம்தான் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறான். கவிஞர்  ஏ. நஸ்புள்ளாஹ் அவர்களும் எப்போதும் சொற்களிடம் அதிகம் பேசிக் கொண்டிருப்பவர்... அவர் எழுத்துகளில் நவீனத்துவம் ஒட்டியிருக்கும் அதில் அதிகமாக சமூக அக்கறையே பயணம் செய்யும். 

ஏ. நஸ்புள்ளாஹ் கிழக்கிலங்கையில் கிண்ணியாவில் பிறந்தவர். உயர்தரம் வரை கல்வி கற்று தற்போது நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் மானி வாசிப்பாளராகவும் கடமையாற்றி வருகிறார். 

இதுவரை, துளியூண்டு புன்னகைத்து (கவிதை 2003), நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம் (கவிதை 2009),கனவுகளுக்கு மரணம் உண்டு (கவிதை 2011),காவி நரகம் (சிறுகதை 2013),ஆதாமின் ஆப்பிள் (கவிதை 2014),இங்கே சைத்தான் இல்லை (கவிதை 2015),ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர் (கவிதை 2016),மின்மினிகளின் நகரம் (கவிதை 2017),ஆகாய வீதி (கவிதை 2018),A.Nasbullah poems ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள் (மொழிபெயர்ப்புக் கவிதைகள் 2018) என 10 தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் கவிஞர் தனது 11வது தொகுப்பிற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

கவிஞர் ஏ. நஸ்புள்ளாஹ் கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது படைப்பு குழுமத்திலும் தனது கவிதைகளைப் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த கவியாளுமைக்கு இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருதினை அளிப்பதில் படைப்பு குழுமம் பெரு மகிழ்வு கொள்கிறது..

இனி கவிஞரின் கவிதைகள் சிலவற்றைக் காண்போம்:

  எனக்குள் ஒரு நதி சலசலக்கிறது என்று சொல்லும் கவிஞன் அந்த நதி எதுவாக இருக்கும் என்பதை வாசகனின் கணிப்பிற்கே விட்டு விடுகிறான்... இப்போது அந்த நதி வாசிப்பவர்களின் மனதிற்குள் இடம் மாறிவிடுகிறது... எதுவும் பேசினால்தான் தீரும் என்பதே வழக்கு... நதியோடு இன்று இரவு நிச்சயம் பேச்சு வார்த்தை நடக்கும்.. இரவுதான் அதற்கான உகந்த நேரம் என்பது கவிஞனின் தீர்க்கம். அமைதி அங்குதான் இருக்கும் .. அப்போதுதான் அந்த சலசலப்போடு பேசுவதற்கும் சரியாகவும் இருக்கும்... அப்போது ஏற்படும்  சலசலப்பைக் கேட்கும் தருணத்தில் அது கறுப்பு நிறத்தில் இரவாக மாறிவிடும். பின்னர் அவன் நிம்மதியாகத் தூங்குவதற்குச் சென்றுவிடலாம்... இதனால் ஒரு பிரளயம் தடைசெய்துவிட்ட திருப்தி கவிஞனுக்குள்ளும்  நிலவுகிறது...

எப்போதும் எனக்குள்
ஒரு நதி சலசலத்துக் கொண்டே இருக்கிறது
எனினும் நதியை நான் சந்தித்ததும் இல்லை
அதன் சலசலப்பை
மனசுக்குள் பூட்டி வைத்ததும் இல்லை
முதன் முறையாய்
இன்று இரவு நதியைச் சந்தித்துப் பேச இருக்கிறேன்
பேசும் தருணத்தில்
எனது வாசகனுக்காய்
நதியில் புதிதாய் ஒரு சலசலப்பை
தொடங்கி வைக்க இருக்கிறேன்
வாசகன் சலசலப்பை கேட்கும் தருணத்தில் அது கறுப்பு நிறத்தில் மாறிவிடும்
இனி வாசகன் தூங்கச் செல்லாம்.

@

இருப்பதற்கு ஓர் இடம் உண்டென்றாலும் போய் சேருமிடம் தாய் நிலம்தான் என்று சொல்கிறார் கவிஞர். ஆனாலும் அவாவுதல் என்பது இருக்குமிடத்தின் மீதே கவிழ்ந்து கிடக்கிறது என்பது கவிஞரின் சுய விமர்சனம்... ஆதாமின் பிறப்பிடமான வானகமே என் தாய் கூடு என்று சொல்லும் கவிஞர் அங்குச் செல்ல மனமில்லாமல் இறுதி நிலத்தின் தொன்மைகளை அள்ளி வாரிக்கொண்டு நிணம் தின்னும் பிசாசுகளுடன் வாழ்வது பிடித்துவிட்டதாகப் பகர்கிறார்...

எனது எல்லாவிதமான அவாவுதலும் 
முதல் நிலத்தின் மையப்புள்ளிக்குள் மாத்திரமே
மயக்கமுர்றுக் கிடக்கிறது.
எனக்கான நிலமொன்று 
வானக் கிளையில் அமர்ந்து
பறவை போல் காத்திருப்பதை
மறக்கவே எத்தனிக்கிறேன்...

எனக்கான பிரதியும்
அதன் நிசப்த வாசிப்பும்
அன் நிலத்தில் விளையும் ஆப்பிள் கனிகளும்
நான் விரும்பிய உயர்ந்த மதுக்குவளையும்
அங்குதான் இருக்கின்றன.

எனது முதல் நிலம் வெற்றுத்தாளில் பறக்கும்
வண்ணத்துப்பூச்சியை ஒத்ததும்
வண்ணமற்றதுமான நிறப்பிரிகை என்பதை
எனக்குள்ளிருக்கும் நான் அறிவதற்கு
மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்.

வீடு திரும்புதல் மிக அவசியமானது
ஆரம்பித்த இடத்தில் முடிப்பதே
பறவைகளின் கூடு திரும்புதலின் 
இன்னுமொரு யுக்தி
வனத்தில் வாழும் குரங்குகளும் அப்படித்தான்
எனினும் நான்
வீடு திரும்ப விரும்பாதவனாய் இருக்கவே விரும்புகிறேன்

எனது இறுதி நிலம் காத்துக் கிடக்கிறது
தொன்மங்களை அள்ளிக்கொண்டு
நான் முதல் நிலத்திலேயே தாவிக் கொண்டிருக்கிறேன்
நிணம் தின்னும் பிசாசுகளுடன் வாழ்வது
எனக்குப் பிடித்துப் போய்விட்டது

மன்னிக்க
நான் என்பது எழுத்துப் பிழை.

@

நிறங்களைப் படிமமாக்கி வாழ்தலை அற்புதமாகச் சொல்கிறார் கவிஞர். நிறமில்லாமல் வாழ்வதுதான் வாழ்க்கை.. நிறங்கள் நம்மை ஏமாற்றிவிடும் என்பதும் ஓர் எச்சரிக்கைதான்...

நிறங்களுக்கு நடுவே
வாழ நினைத்துக் கொண்டு இரண்டு
நிறங்களைத் தெரிவு செய்தேன்.
முன்பு மனசு 
இப்படி வேண்டியதில்லை
இப்போதெல்லாம்
குழந்தைகளைப் போல மனசு
எதையெதையோ தெரிவு செய்கிறது.

நிறங்கள் பச்சை மற்றும் நீல நிறங்களாக இருந்தன
சில நாட்கள் 
நிறங்களைப் பின் தொடர்ந்தேன்.
நிறங்களின் அணுகுமுறை சரியில்லை
எனவே 
நிறங்களுக்கு நடுவே வாழ்வதைத்
தவிர்த்துவிட்டேன்.

நிறங்கள் என்பது
தனிமையும் வெறுமையும் என
கற்பனை செய்து கொள்ளுங்கள்.

@

ஒரு சிறந்த கவிதையைப் படித்ததும் வாசகன் சிலாகிப்பான்.. கவிஞனின் மனமோ அப்படி இருப்பதில்லை.. அந்த கவிதையிலிருந்து புதுச் சொற்களை எடுத்துக் கொண்டு அது வேறொரு தளத்திற்குப் பறக்கத் தொடங்கிவிடும்.. இங்கும் அப்படித்தான் நிகழ்கிறது.. கவிஞர் ஏ.நஸ்புள்ளாஹ் கவிஞர் றியாஸ் குரானாவின் கவிதைகளின் தேர்ந்த ரசிகர் என்பது எல்லோருக்குமே தெரியும். அவரது கவிதையைப் படித்த தாக்கம் இந்தக் கவிதையில் வழிகிறது...

றியாஸ் குரானாவின் காடுகள்
காடுகளுக்குச் சிறகுகள் உண்டு. 
அசைத்துக்கொண்டே இருக்கின்றன. 
ஒரு நாள் பறந்துவிடும்.
என்கின்ற
றியாஸ் குரானாவின் பிரதியை
வாசித்துவிட்டு நித்திரைக்குச் சென்றேன்
காடுகள் சிறகுகள் உயர்த்திப் பறக்கத் தொடங்கின
பறக்கத் தொடங்கிய 
றியாஸின் காடுகள்
எனது பிரதியில் இருந்த 
பாலைவனத்தில் இறங்கின
பழைய கவிதை ஒன்றின்
மூன்றாம் வரியைப் போல
எனது பாலைவனம் சோலைவனமாய் மாறியது
நித்திரையிலிருந்து வெளியேறினேன்
றியாஸின் பிரதியில் தனிமையும்
எனது பிரதியில் நானும்
உட்கார்ந்து இருக்கிறோம்.

@

படிமங்களைச் சொல்லாட்சியாக்கி அதற்குள் கவிதையைக் கட்டமைப்பதுதான் சிறந்த கவிஞனின் மொழிதலாகிறது.. இந்தக் கவிதையில் பறவை ஒரு சஞ்சலத்தின் (அ) கவலையின் படிமமாக மாறிவிடுகிறது.. இருள் என்பது ஜென்னின் நிலையில் அமைதி என்றும் பொருளாகும்.. இனி இந்தக்கவிதையை நீங்களே படித்து ரசிக்கலாம்...

என்னைத் துரத்தும்
ஒரு பறவையை
இருள் வளைத்துப் பிடிப்பதை நான் காண்கிறேன்
பின் 
என்னை அழைத்த அவ்விருள்
விடிய விடிய
ஒரு நாவல் நீளத்தில் கதை சொன்னது.
எனக்குக் கதை பிடித்திருந்தது
அதனாலேயே 
கதை கேட்பதற்காய்
அதிக நேரத்தை ஒதுக்கியிருந்தேன்.
வெகுநாட்களாய் தேடித் திரிந்த கதையது
இப்போது
இருள் மெதுவாக என்னை விட்டு நகரத் தொடங்கியது
துரத்தி வந்த பறவை மீது 
கருப்பு நிற பூனை ஒன்று வாய்வதாய் 
அக்கதை முடிகிறது.

@

ஞாபகங்கள் சுயத்தன்மையுடன் இருக்கும்போதுதான் அது ஒழுங்கான சிந்தனைகளுடன் பேசித் திரிகிறது.... கற்பனையிலூறி மதுக்கோப்பையில் வழிந்த ஞாபகங்கள் கடலாக மாறினாலும் மலையாகத் தேர்ந்தாலும் தேடுவது கடிதாகிவிடுகிறது... நீயாக மட்டுமே பிரதிபலி எனக் கேட்டுக் கொள்கிறான் கவிஞன் தன் நினைவுகளை....

ஞாபகங்கள் உன்னைப் போல
பிரதிபலிக்க வேண்டும் என
முயற்ச்சி செய்கிறேன்
மதுகோப்பையில் நிறைந்த
ஞாபகங்கள் 
சில நேரம் கடலாகிறது
சில நேரம் மலையாகிறது
கடல் நடுவிலும்
உன்னை காணக் கிடைக்கவில்லை
மலை உச்சியிலும்
உன்னைக் காணக் கிடைக்கவில்லை
ஞாபகங்களின்
ஆயிரத்து நூறு பக்கம் திறக்கப்பட்டுவிட்டன
நீ இன்னொன்றைப் போல
பிரதிபலிக்க மாட்டாய் என்பதில்
உறுதியாய் இருக்கிறது எனது காதல்
ஞாபகங்களுள் ஒரேயொருமுறை
நீயாக மட்டும் பிரதிபலி
நம் சந்திப்பு 
இரண்டு பிரதிகளாக பிரிந்து செல்ல
தயாராக உள்ளது.

@

கவிஞனின் கவிதைகள் வாசகனோடு உரையாடும்போது மட்டுமே  முழுமையடைகிறது. கவிஞன் கடலை விரித்தால் வாசகன் அதில் மீன் பிடிக்கிறான்.. அதிலும் மிஞ்சிய சொற்கள் கவிஞனின் வனைவில் தேவதையாகிறது.. இப்போது வாசகனுக்குத் தேவதையும் தேவைப்படுகிறது...இனி அவனுக்கு என்ன தருவது எனக் கவிஞன் யோசனையில் ஆழ்கிறான்... கற்பனையையும் வாசகன் களவாடிவிட்டதாக...

கவிதைக்குள் கடலை விரித்து வைக்கின்றேன்
ஒரு வாசகன் வலை வீசுகிறான்
வலை முழுக்க சொற்கள்
துள்ளிக் குதிக்கின்றன
லாபகமாக விரும்பிய சொற்களை
தனக்கு எடுத்துக் கொள்ளும் வாசகன்
இன்னும் சில சொற்களை
அப்படியே விட்டுச் செல்ல முனைகிறான்
விட்டுச் செல்ல முனையும் சொற்ளை
ஒரு தேவதையாக மாற்றிக் கொண்டிருந்தேன்
கையோடு தேவதையையும்
எடுத்துச் செல்ல விரும்பிய வாசகன்
வழக்கத்தைமீறி
இப்போது  கற்பனையையும்
எடுத்துச் சென்றுவிட்டான் 
என ஒரு உரையாடலை தொடங்க வேண்டியிருக்கிறது.

@

தனிமை வெளிச்சத்தில் இரவு ஊர்கிறதாம் அதன் இரு மருகிலும் வயலின் இசை இழைகிறது...மதுக்குவளை வழிய, சிகரெட் புகையின் சுருள் டாவின்ஸி ஓவியத்தைப் பிரசவிக்க... தனிமை எல்லை மீறும்போது நான் தொலைந்து என்னை ஊற்றிக் குடிக்கிறேன்  என மிதமிஞ்சும் வரிகள் போதையாகிறது....

தனிமை நிரம்பிய வெளிச்சத்தில்
இரவு ஊர்ந்து கொண்டிருக்கிறது
அதன் வலப்புறமும் இடப்புறமும்
வயலின் கணத்திற்குக் கணம்
நடனமிடுகிறது.

பியர் வெகு அபூர்வமாக
குறைந்து கொண்டே செல்கிறது
இழுத்துத் தள்ளிய
சிகரெட் புகையின் நீள் வளையம்
சுவரில் டாவின்ஸின் ஓவியமாய்
கூடி பரவசிக்க.

முற்றிலும் இசையின் 
கண்ணாடித் துகள்கள்
சன்னல் வழியாக 
பின்னிரவை நிலவொளியில் இணைக்க
மின்மினி பூச்சிகளின் சங்கீதம் ஆரம்பித்திற்று.

எல்லை தாண்டும் தனிமை
விலங்கிடும் போதெல்லாம்
இயலாமையின பெயரால் இப்படிதான்
விலக்கப்பட்ட வாழ்க்கையுடன்
என்னை குவளையில் ஊற்றி குடித்துக் கொண்டிருக்கிறேன்

*****    ****     *****

View

Showing 561 - 580 of 761 ( for page 29 )