logo

காண்டாமிருகத்தை விழுங்கும் மின்மினி


நூல் பெயர்                :  காண்டாமிருகத்தை விழுங்கும் மின்மினி (ஹைக்கூ)

ஆசிரியர்                    :  மணி சண்முகம்

 

பதிப்பு                          :  முதற்பதிப்பு - 2024

 

பக்கங்கள்                  :  106

 

வெளியீட்டகம்          :  இலக்கிய படைப்பு குழுமம்

 

வெளியீடு                  :  படைப்பு பதிப்பகம்

 

விலை                         :  ரூ  150

மனித மனங்கள் வேண்டுமானால் மாறலாம் ஆனால் இயற்கை எப்போதும் மாறுவதே இல்லை. இயற்கையும் இலக்கியமும் ஒன்று. இதை இல்லையென்பவர்களுக்கு, நதியின் ஓட்டத்தில் எதிர்ப்படும் பாறை, நதியின் பாதையை இரண்டாகப் பிரித்தாலும், பாறையைத் தாண்டியபின் ஒன்றாகக் கூடும் என்பதே சாட்சி. எடுத்துக்காட்டாக, இவ்வுலகில் முதன்முறையாக இலையுதிர்காலத்தை தனிமையின் குறியீடாகச் சொல்லப்பட்டது இலக்கியத்தில்தான். இயற்கையை தரிசிக்க இலக்கியத்தைத் தவிர வேறொன்றுமில்லை மனித மனங்களுக்கு. மே மாதங்களில் ‘ஹொதொதொகிசு’ என்றொரு குயிலினம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து ஜப்பானுக்கு வலசை வரும். மே மாதம் என்பது ஜப்பானில் வசந்தகாலம் முடிந்து கோடை தொடங்குவதற்குச் சற்று முன்னர் என்பதால் இக்குயிலின் முதல் கூவல் கோடையின் வரவை அறிவிப்பதற்கானது என்று ஜப்பானியர்கள் காத்திருப்பார்களாம். புதினத்தின் நாயகன் கென்ஜி, கடற்பறவைகள் இரைதேடிக் கிளம்பும் ஒலியைக்கேட்டுத் துயிலெழுவாராம். இன்னும் சொல்ல வேண்டுமெனில், மேலைநாடுகளில் யார் எந்தப் பரிசு பொருள் கொடுத்தாலும் ‘இதன்மீது ஒரு ஹைக்கூ எழுதிக் கொடு’, என கேட்பார்களாம்.

ஹைக்கூவின் ஒரு அம்சம், அதன் விளக்கத்தை அளித்திடும் பொறுப்பை அதன் வாசகர்களிடம் சமர்ப்பிப்பதாகும். ஒரு ஹைக்கூ அதன் வாசகர்கள் அதன் அர்த்தங்களைப் பல்வேறு வழிகளில் விளங்கிக்கொள்ளஅனுமதிக்கிறது. எனவே, மூலத்திலிருந்து வேறொரு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஹைக்கூவில் அத்தகைய அம்சத்தைக் கிடைக்கச் செய்வது சற்றுக் கடினம். இருப்பினும் மிகவும் தர்க்கரீதியான மொழிபெயர்ப்பின் வாயிலாக, அசலின் அழகையும் உணர்வையும் மீட்டவோ மீட்கவோ முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுகிறது இந்த நூல். மேலும், மேலைநாடுகளில் எழுதப்பட்ட குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் ஹைக்கூக்களை மொழியாக்கம் செய்து வெளியிடப்படுவதே ‘காண்டாமிருகத்தை விழுங்கும் மின்மினி’ எனும் நூல்.

 கடலூரைப் பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி மணி சண்முகம் அவர்களுக்கு இது இருபத்தொன்றாவது நூல்.  சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் காவல்துறைப் பணியோடு இன்றும் எழுதி வருகிறார். இதுவரை வெளியான இவரது மற்ற தொகுப்புகள் வாசகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பதுடன், படைப்பு பதிப்பகத்தில் இவர் வெளியிடும் மூன்றாவது நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.