இந்த மாதத்தின் நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை கவிஞர் சுரேஷ்பாபு ராசேந்திரன் அவர்களுக்கு
வழங்குவதில் பெருமையடைகிறோம்.
திருவண்ணாமலை மாவட்டம்
கீழ்பென்னாத்தூர் அருகில்
உள்ள கத்தாழம்பட்டு என்ற கிராமத்தை பிறப்பிடமாக
கொண்டவர். இளம் வயதில் தந்தையை இழந்ததால் வசதி வாய்ப்புகள் இருந்தும் குடும்ப சூழல் காரணமாக அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பை கடக்கவியலாத கட்டாயம் அமைந்து விட்டதால் பின்னர் சென்னை மற்றும் பெங்களூரில் ஆடை வடிவமைப்பாளராக பணி புரிந்தார்.
தெலுங்கு, தமிழ், கன்னடம்,
ஹிந்தி , ஆங்கிலம் என
ஐந்து மொழிகள் பேச தெரிந்தும், தமிழன் என்றே தன்னை
அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பிய நேசம் கவிதைகளின் பக்கம் அவரை மடை மாற்றியது.
கை கால்கள் முழுவதும் கட்டப்பட்ட
நிலையில் எட்டு மணி நேரம் ஐந்து நிமிடம் தண்ணீரில் மிதந்து கின்னஸ் சாதனை செய்து தன்னை சாதனையாளராகவும் நிலைக்காட்டிய கவிஞர் சென்னை மாரத்தானிலும் பதக்கம் பெற்றவர்.
நிறைய
துரோகங்களையும் அவமானங்களையும் சந்தித்து தற்கொலை ஒன்றே தீர்வென எண்ணிய கவிஞருக்கு
2018 ம் வருடம்
நண்பர் மதன் மூலமாக படைப்பு குழுமத்தின் அறிமுகம் கிடைத்தது…
படைப்பு குழுவின் மாதாந்திர சிறப்பு
கவிதைகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது கவிதைகள் மிகப் பெரிய உத்வேகத்தை தனக்குள் நிகழ்த்தியாகவும், படைப்பின் "படைப்பு சமூகத்தின்
இணைப்பு" என்ற தாரக ஒமந்திரத்திற்கேற்ப நிறைய இலக்கிய பேராளுமைகளுடன்
நெருங்கி பழகும் வாய்பையும் படைப்பு தனக்கு எளிதாக்கி தந்ததாகவும்
கூறுகிறார்.
படைப்பில் வெளிவந்த கவிதைகளை பார்த்து விஜய் சிங் என்பவர் மூலமாக BIKE LOVER என்ற குறும்படத்திற்கும் பாடல் எழுதும்
வாய்ப்பு கிடைத்தது.
தனது முதல் கவிதை
தொகுப்பினையும் விரைவில் படைப்பு பதிப்பகம் மூலம் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வரும் கவிஞருக்கு
இவ் விருது சேர்வதில் பெருமைக் கொள்கிறோம்.
இனி கவிஞரின் சில கவிதைகளைக்
காண்போம் :
இலக்கண தமிழில் மட்டும்தான்
கவிதைகள் இருக்க வேண்டுமா என்ன? பேச்சு மொழியில் எழுதப்பட்ட
நிறைய கவிதைகள் வாசகன் நெஞ்சை விரைவில் சென்றடைந்திருக்கின்றன. அப்படி பட்ட ஒரு கவிதைதான் இது. ஒரு மலையில் காட்டுத் தீ பற்றிக் கொள்வதால் ஆடு மேய்ச்சலுக்கு விடும் கிழவிக்கு கவலை பிடித்துக்
கொள்கிறது. அவளின் புலம்பலாகவே
இந்தக் கவிதை அமைந்தாலும் அவள் நினைத்தது போல் இது தெய்வக் குற்றமாக இல்லை… மேய்ப்பவன்
சரியாக அணைக்காத பீடியினால்தான் இவ்விளைவு என்று முடிப்பதில் இந்தக் கவிதை பொருளால் சிறக்கிறது… இதோ கவிதை..
அய்யோ..யாத்தே...
மலக்காடு பூராவும் பத்தி எரியுதே..
ஆட்ட மாட்ட மேச்சு
அர வயித்து கஞ்சி குடிக்க
சுத்து பத்து ஊரானுக
இத்த நம்பித்தானே பொழக்கிறானுவ..
மரமட்ட எரிஞ்சிப்போனா
மறுநா மேச்சலுக்கு எங்க போவும்..?
பாதி ராவுலத் தீப்புடிச்சி
பாவிமவ உசுரெல்லாம்
என்ன பாடு படுதுகளோ..
மங்கம்மா சாமியாடி
தெய்வக் குத்தம் ஆச்சின்னு சொல்லி,
நாளு ஒன்னு ஆவுலியே
சொனக் கன்னிமாரு காவு கேக்கெ...
ஆட்டுக்கார சின்னயனோட
ஆராயிக் கெழவி ஒப்பாரி வெக்க
அக்கம் பக்க ஆளுவ எல்லாம்
ஆறுதலா அழுவய தேத்துதுக..
ஆட்ட மேச்சுத் திரும்பயில
மலக்காட்டு பாதெயோரம்
மறுக்கா நல்லா அணைச்சிருக்கலாம்..
சின்னயன் வளிச்சுப்போட்ட
செய்யது பீடியில பொகஞ்ச கங்க.
…..
மகளின் குறும்பு இரசனையின் வெளிப்பாடு. என்னதான் எரிச்சல் ஏற்ப்பட்டாலும்.. மகளை ஜெயிக்கவைப்பதற்காக ஜெர்ரி என்ற எலியிடம் தோற்கும் டாம் என்ற பூனையாக இருந்துவிடுவதிலும் ஒரு மகிழ்ச்சிதான்….
செய்தியில்
மூழ்குகிறேன்..
கார்ட்டூனுக்கு
மாற்றுகிறாள்.
மீண்டும்..
செய்தியில்
மூழ்குகிறேன்..
கார்ட்டூனுக்கு
மாற்றுகிறாள்.
வழக்கம் போல்
ஜெர்ரியிடம்
தோற்றுக் கொண்டே
இருந்தது..
டாம்.
………..
கிளையொன்றிலிருந்து பிடி தளர்ந்த எறும்பொன்று யானை மீது விழுந்து ஆடி அசைந்து அதன்மீது ஒரு ஆங்காரத்துடனோ அல்லது நளினத்தோடுவோ பயணித்தாலும்… யானை அறியாது அதன் சுமையை என்பது ஒரு அடர் படிமத்தின் கூறுகள்.
அடர்வனக் கிளையொன்றில்
பிடித்தளர் எறும்பின்கால்
களிறொன்றின் நடையசையும்
புறமுதுகின் மேல்விழுந்து
குடமமர்ந்தப் பெண்ணவளின்
இடையசையும் மென்நளிவாய்
இருள்சூழ் கொய்யா
இருக்கனி மறையசைவாய்
கோ அவனின் பூப்பல்லக்கின்
மனங்கமழ் தூளியசைவாய்
ஒய்யார பவனிவர
ஒருபோதும் களிறறியா
எறும்பதனின் முழுபாரம்.
………..
கவிதைக்கு தேவை ஒரு கருப் பொருள். கவிஞர் சூதகமாகப் பயன் படுத்திருக்கும் இந்தக் கவிதையின் கருப் பொருள் சற்று வித்தியாசமானது… குழந்தையுடன் உறங்கும் மனைவியை படுக்கைக்கு அழைக்கும் கணவனின் திண்டாட்ட மன நிலையை குழந்தையின் யதார்த்தப் பார்வையில் வைத்து புன்னகைக்க வைக்கிறது…
மூனுகண்ணன் கதய கேட்டு
வயிறு முட்டச் சோறுண்டு
அம்மாவ அணச்சிக்கிட்டு
தூங்கிப்போன அந்த ராவோட
பாதி தூக்கத்துல
திடுதிப்புனு சத்தங்கேட்க,
அம்மாவ உசுப்பி விட்டு
"சோத்துப் பானய பூன
உருட்டுதுமா"னு அலற,
உருட்டட்டும் நீ தூங்குனு
மெதுவாக புன்னகைத்து
தூங்கிப்போன
அம்மாவின் விசித்திரமான
நடவடிக்கையை
புரிந்துக்கொள்ள முடியாமல்
விழித்த இரவில்..
அந்த புன்னகைக்கான
அர்த்தம் தன்னை போலவே
ஏமாந்துப்போன அந்த
பூனைக்கானதாய்
இருந்திருக்கலாம்.
……….
நாம் சாதாரணமாக கடந்து போகும் மனிதர்களில் பலூன் விற்கும் மனிதர்களும் கூட அடங்குவார்கள்.. ஒரு குறியீட்டையே சுமக்கும் மனிதர்கள் என்றால் அவர்கள் பலூன் விற்கும் வீதி வியாபாரிகளாகத்தான்
இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒருவரின் வாழ்வியலை பேசுகிறது இந்த கவிதை…
எத்தனை ஊதியும்
நிறையவே இல்லை..
ஓட்டை விழுந்த பலூனும்
ஊதி விற்கும்
கிழவனின் வயிறும்.
வண்ண வண்ணமாய்
பலூன்கள்..
இருண்டுக் கிடக்கிறது
ஊதி விற்கும்
கிழவனின் வாழ்வு.
அடம்பிடிக்கும் குழந்தைகள்
அரை வயிற்றை
நிரப்பி விடுகிறார்கள்..
மூர்ச்சையாகிக்
கிடக்கிறது...
ஊதிய பலூனுக்குள்
கிழவனின் மூச்சுக்காற்று.
வெடித்துச் சிதறும்
பலூன்களுக்குள்
சிறைபட்டுக் கிடக்கிறது
கிழவனின்
அடுத்த வேளை உணவு.
தோள் சுமக்கும் பலூன்கள்
மிகவும் கனக்கிறது….
ஒன்றுமே விற்காத நாட்களில்!
***************************
நான் என்பது நான் மட்டும் அல்ல நீங்களும்தான் என்பதே இந்த கவிதையின் முக்கிய அங்கம் என்றாலும்… அந்த நான் யார் என்பதும் மிக முக்கியம். நான் என்பவன் நல்லவன் மட்டுமல்ல…. வழி கெட்டவனும்தான்… இதோ கவிதை…
இது எனக்கான உலகம்
இதற்குள் யாரும் நுழைந்து விடாதீர்கள்
நல்லவன் என்ற தேடலில்
நிச்சயம் நான் கிடைக்க மாட்டேன்
நிஜத்தில் நான் பிதற்றுவதை
நிஜமென்று நம்பிவிடாதீர்கள்
பிஞ்சைப் புணர்ந்தவன் பின்புலத்தில்
எனக்கும் ஒரு தொடர்பிருக்கலாம்
நஞ்சை மருந்தென்றவனுடன்
நானுமோர் விலைபேசியிருக்கலாம்
நாட்டை விற்றவனுக்கு எனது வாக்கும்
ஒரு காரணமாக இருந்திருக்கலாம்
எனது வாகனத்தின் வேகத்திலும்
ஓசோன் துளைப்பட்டிருக்கலாம்
நான் தூக்கி வீசிய நெகிழிப்பையில்
எனக்கான கடைசித்துளி உயிர் நீர்
தடைப்பட்டு இருக்கலாம்
நான் அமரும் நாற்காலியின் அடியில்
ஒரு மரத்தின் நிழல் மறைந்திருக்கலாம்
உங்கள் கண்களில் கருணையை
சுரக்க வைக்க மட்டுமே எனக்கு அந்த
பசுந்தோல் தேவைப்பட்டிருக்கும்
இதில் நான் என்பது நான் மட்டும் அல்ல
நான் என்பதை நான் என்றே
வாசிக்கும் நீங்களும் தான்.
……………….
இனி கவிஞரின் மற்றும் சில கவிதைகள் காண்போம்:
கணவன் உயிலின்படி
பிள்ளைகளுக்கு
பிரித்துக் கொடுத்தபின்
மனைவிக்கான பாகத்தில் தான்
இருந்தது
அந்த மஞ்சள் காடும்
மல்லிகைத் தோட்டமும்.
………..
நிசப்தங்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சப்தங்கள் எங்களை
பயன்படுத்தி கொள்வதாய்
புலம்பி கொண்டிருந்தது
நிசப்தங்கள்
நீர் குமிழிகள்
உடையும் சப்தம்
அதனுள் இருந்த நிசப்தத்தின்
அழுகுரல் என்றது
பாறைகளில் மோதிச் சென்ற
நதியின் பயணம்
மேலோட்டமாக பார்த்தவர்கள்
கடல் ஆர்பரிப்பதாய்
சொல்லிச் சென்றனர்
ஆழ்கடலினை
அகழாத பார்வைகளில்
நிசப்தங்கள் தென்படுவதில்லை
காற்று இரைவதாய்
எல்லோரும்
சொல்லிக் கொண்டு இருக்கையில்
காற்று இறைகிறது என்று நகைக்கிறான்
பார்வை இழந்தவன்
கல்லறையின்
உள்ளிருக்கும் நிசப்தத்தினை
மனிதர்களால் உணர முடியாததை
போன்றே
இப்பிரபஞ்ச நிசப்தத்தினை
பிணங்களால் உணர முடிவதில்லை.
…………
வாயாடி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எங்க வூட்டுக்கு
எதித்தாப்பலதேன்
சின்னாயி கெழவி வூடு
சின்னாயின்னு கேட்டா
திருத்திருன்னு முழிப்பாங்க
வாயாடி வூட்டுக்கு
வழி ஏதுன்னு கேட்டா
வாண்டுவ கூட்டிப்போவும்
ஊரே ஒறங்கிப்போன
ஒம்பது மணி ராவுலக்கூட
கட்டுன புருசன
வசவித்தான் ஒறங்க வெப்பா
வெள்ளன நாலு மணிக்கே
வசவுத் தொடங்கிப்பூடும்
வாயாடிக்கு புருசனா
வாக்கப்பட்டு வந்தவனுக்கு
கெழவன் காடு சேர்ந்து
வருசம் நாலு ஆனபொறவும்
வாயாடிக் கெழவி ஊட்டு
வசப்பாட்டு அடங்கவில்ல
என்ன பாவஞ் செஞ்சானோ
எலவெடுத்த கெழவி இவ
செத்தும் வசவுறாளே
சீருகெட்ட சிறுக்கி மவனு
கண்டமேனிக்கு பேசுறவங்க
அறிஞ்சிருக்க மாட்டாங்க
கெழவியோட வசவுலத்தான்
கெழவன் இன்னும் வாழுறான்னு.
……….
அகதியாய்
இடம்பெயரும் அந்த
சிறு பறவையின்
பிடித் தவறி உடைந்த
முட்டையின் அருகில்
வட்டமிட்டு வட்டமிட்டு பறக்கும்
அந்த தாய்ப் பறவையின்
க்கிரீச்சிடலில்
ஒரு பெண்ணின்
கருகலைந்த கதறல் சத்தம்.
…………
இன்ன சாதிக்காரனுக்கும்
இன்ன சாதிக்காரனுக்கும் சண்டை
இரு சாதிக்காரனும்
இறந்துவிட்டனர்
இன்னமும் இறக்கவில்லை
இரு சாதியும் பெயருக்கு பின்னால்.
………..
காற்றில்லாத போதுதான்
எல்லோரும் தூற்றுகிறார்கள்
மின்சார வாரியத்தை.
…………….
புத்தனின் மௌனம்
சலசலக்கிறது
போதிமரச் சருகுகள்.
……………..
வாசித்தப் புத்தகம்
மிகவும் கனக்கிறது
எழுத்தின் தாக்கம்.
…..
............
இப்போதெல்லாம்
ஆற்றைக் கடக்க
நீச்சல் தெரிந்திருக்க
தேவையில்லை..
செருப்புகளே
போதுமானதாய்
இருக்கிறது.
…………
உணர்வின்_தொலைதல்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமக்கான ஊடலில் இஃது
சற்றே பெரும் இடைவெளி
பீப்பாய்களில் நுரைத்திருக்கும்
திரட்சை ரசத்தின்
சுவையையும் போதையையும்
ஆண்டுகளே தீர்மானிக்கிறது
வெறுமை படர்த்திய
கன்னத்தின் ரேகைகளில்
வழிந்துருளும் கண்ணீருடன்
பார்வையை திசைமாற்றி,
நாம் காதலித்த கணங்களில்
போதையேற்றிய வார்த்தைகளின்
ஊறலில் இன்னும்
எறும்புகளாய் விழுந்தூறி
தத்தளிக்கிறோம்
அறைக்குள் அழுது கிடந்த
நம் கண்களுக்கு அழகாய்
அரிதாரமிட்டு
பொய்யாய் புன்னகைக்க
பழகுவதென்பது
நடித்தலினும் கடினம் தானே.!
தொட இயலாத தூரங்களை
நெருக்கமாக்கி கொண்டு
தொட்டுவிடும் இடைவெளியை
எங்கே எப்படி தொலைத்தோம்?
………….
நவீனங்கள்
மல்டிஃபிளக்ஸ்
திரையரங்கில்
தனி இருக்கைகளில்
அமர்ந்திருக்கிறோம்
நொடிக்கு நொடி
காட்சிகள் மாறும்
அந்த மென்னிருட்டில்
உன் முக அழகை
ரசித்துக்கொண்டே
உன் ஐவிரல்களை
கவ்விக்கொள்கிறது
என் ஐவிரல்கள்
பீட்சாவின் துண்டுகளென
பிரித்தெடுக்க முயலும்
உன் விரல்களினூடே
ஒட்டிக்கொள்கிறது
காதலின் ச்சீஸ் இழைகள்
மெல்ல என் தோள் சாயும்
உன் சுவாசங்களில்
இடைவேளை காத்திருப்பில்
இருக்கைக்கே வந்து சேர்ந்த
நாட்சோஸின் நறுமணம்
மினி பாப்கார்ன்
காகிதக் குவளையின்
கடைசி கைத்துழாவல்களில்
பொரிந்தும் பொரியாத
சோளமணிகளை
பொரித்துக்கொண்டிருந்தது
உன் விரல்களின் மென்சூடு
திரைப்படம் நன்றாக
இருந்ததென
நீ மெய்சிலிர்க்க
என் கண்களைப் பார்த்து
சொன்ன தருணத்தில்
மிக அழகாய் முடிந்திருந்தது
நான் எழுதிக்கொண்டிருந்த
கவிதை.!
………….
பரண்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பரண் என்பது
தரைக்கும் கூரைக்கும்
இடைப்பட்ட பழையதின்
தளமென நீங்கள்
கடந்துப் போய்விடுவீர்கள்
அதில் சுருட்டி வைக்கப்பட்ட
கழுத் தைத்த பாயில்
கிழவனின் பாரம் சுமந்த
கிழவியின் வெட்கங்கள்
சிதறிக் கிடக்கலாம்
துருப்பிடித்த
அமுல் டப்பாவின்
சில்லரை சப்தங்கள்
இன்னும் முடக்கப்படாத
அம்மாவின் வங்கி கணக்கை
உயிர்ப்பிக்கலாம்
அதன் மீது
கசக்கி எறியப்பட்டு
கரிபடிந்த காகிதத்தில்
பிழைகள் திருத்தப்படாத
முதல் காதலின்
பிதற்றல்கள் இன்னும்
மிச்சமிருக்கலாம்
சொந்தங்கள் படைசூழ
எங்கள் கனவுகளை
அந்தரத்தில் ஆடவிட்டு
சுகமாகத் துயிலச்செய்த
தூளியின் சாயலும்
ஒட்டியிருக்கலாம்
எங்கள் வாழ்வியலை
வார்த்தைகளில்
விவரிப்பதற்குள்
பரண் என்பது
தரைக்கும் கூரைக்கும்
இடைப்பட்ட பழையதின்
தளமென நீங்கள்
கடந்துப் போய்விடுவீர்கள்.
…………….
கொடிது
நீ நின்று ரசித்து
கண்கள் விரிய வியந்துச் செல்லும்
அந்த புத்தரின் சிலைமீது
பாசிகள் மண்டிக்கிடக்கின்றன..
அவர் கிடத்தப்பட்ட
பெயரறியா மரம்கூட
ஞானம் பெற்றுவிட்டதாக
பேசிக்கொள்கிறார்கள்..
எப்படியும் உன் காதலை
என்னிடம் சொல்லிவிடுவாயென
என் மனக்கண்ணிலேயே
பிரயத்தனப்பட்டு
பிரதிபலித்துக்கொண்டிருக்கும்
உன் மௌனப் புன்னகைக்கு
மொழியுரு கொடுத்து
தோற்றுக்கொண்டிருக்கிறேன்..
வழக்கம் போலவே
நீ ஏதும் மொழியாத
மறு சந்திப்பொன்றில்
புத்தனை தொட்டெழுப்பி
மௌனம் கலைத்து,
ரௌத்திரம் பழக்கிவிடு..
ரௌத்திரம் கொள்ளுதலொன்றும்
அத்தனை கொடியது அல்ல,
மௌனம் சுமப்பதைக் காட்டிலும்.
……………
கரைதல்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உன்னைப்பற்றிய
நினைவுகள் எப்பொழுதும்
அதீத மண்வாசம் கலந்த ஒரு
சிறு தூறலுடன் தொடங்கி
சாலையோர தோட்டத்து
சாமந்தி வாசம் நுகரச் செய்து
நனைந்த பறவையின் கூட்டில்
சிறகுகளை உலர்த்தி
சில்லிட்டு நனைந்த கைகளை
தேநீர் குவளையில் கதகதத்து
இடி இடித்து, மின்னல் வெட்டி
அடை மழையென வலுத்து
குடையை இழுத்துச் செல்லும்
சாரல் காற்றுடன் சேர்ந்து
பூந்தென்றலாய் மாறி என்னை
உறங்க செய்துவிடுவதெல்லாம்
மீண்டும் ஒரு சிறு தூறலின்
தொடக்கத்திற்காக.!
………..
தொடர்வண்டி
**************************
பரபரப்புகளையும்
தன்னுடனே
சுமந்தேறிய
தலைகளோடு,
அறிமுகமான
மொழிகள்
ஒன்றுக்கொன்று
பேசிக்கொள்கிறது.
அன்னியப்பட்ட
மொழிகள்
புன்னகையுடன்
அமைதி காக்கிறது.
இடம் பிடிக்க போடப்பட்ட
கைக்குட்டைகள்
எல்லைகளை
தீர்மானித்துக்கொள்ள,
பல்லவியை மட்டுமே
பாடி பாடித் தேயும்
தேநீர் விற்பவரின்
கட்டைக்குரலோடு,
பார்வையற்றவர்
விற்கும் பேனாக்கள்
தலைவிதியை
மாற்றி எழுதுகிறது.
காதல் இணையின்
முதல் பிரிவில்
கையசைப்புகள் கரையும்
காட்சிப்பிழையோடு,
முன்பதிவு அல்லாத
பொதுப்பெட்டியில்
கழிக்க முடியாத
கூட்ட நெரிசலில்
சிறிதும் சிரமபடாமல்
சுகமாய் பயணிக்கிறது,
மொழிகளுக்கு
அப்பாற்பட்ட
வசவுகள் மட்டும்.
……………
நனைதல்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காய்ந்த சுள்ளியின்
முள்முனைக் கூரில்
கோர்த்த மழைத்துளி
மண் தொட எத்தனிப்பதை
ஒத்திருந்தது...
ஒரு பெருமழை பொழிதலில்
சலசலத்தோய்ந்த
பின்னிரவொன்றில்
முத்தமிடுதலில் மூழ்கிய
உன் உதடுகளின்
மோன வார்த்தைகளை
சிறைபிடிக்க முயலுமென்
மயிர் பரந்த மார்பின்
மையத்தின் மீதுருள
காத்திருக்கும்
உன் நாசிமுனை வியர்வையது.
……….
புதிர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஊருக்கு
ஒதுக்காப்பல தான்
ஒன்னாயி தாசி வூடு
அப்பனும் ஆத்தாளும்
ஒத்த பாடையில
ஒத்துமையா காடு சேர
அனாதயா நின்னவளுக்கு
ஆதரவா தாசி பட்டம்
வானம்பாத்த பூமியில
தப்புச் செடியா ஒத்த புள்ள
"ரமேசு பய என்னைய
தாசி மொவன்னு
சொல்லுதாம்மா"னு
கண்ணெல்லாம் கலங்கி நிக்கு
கூட படிக்கிறவங்க எல்லாம்
அண்ணந் தம்பியாட்டும்
அழாதடா கண்ணுனு
மெல்லத் தட்டி தூங்க வெச்சா
கருக்க சாமத்துல
கதவு தட்டும் சத்தங் கேட்டு
மெல்ல தொறந்து பாக்க
மண்ணெண்ண திரி வெளக்கு
மங்குன வெளிச்சத்துல
பல்ல இளிச்சிக்கிட்டு
முக்காட்ட வெலக்கி நிக்கான்
ரமேசோட அப்பன் ரங்கராசு..
ஆம்பள தாசிக்கு ஏதும்
அகராதியில பேருண்டா.?
…………..
இலக்கணப்
பிழையெனவே
இருந்துவிட்டு போகட்டும்
நான் என்ற ஒருமைக்குள்
நீயும் இருப்பது.!
………
மெல்லினம் ஆடிக்களைத்து
உறங்கபோகும்
சிறுவயது நாட்களில்
நெற்றியினை வருடி
விரலிடுக்குகளில் தலைக்கோதி
மார்பின் மையத்தில்
பெண்டுலத்தின் இசைக்கொப்பாய்
தட்டி தட்டி உறங்கச் செய்யும்
அப்பாவின்
ஏர் பிடித்து காய்த்துபோன கைகள்
இரண்டும்
மயிலிறகென மாறியிருக்கும்.
……..
இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை மலேசியாவை சேர்ந்த தமிழ் படைப்பாளி ம.கனகராஜன் அவர்கள் பெறுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பு செய்கிறோம். நவீன கவிதைகளின் பால் நாட்டம் கொண்ட கவிஞர் வட மலேசியாவில் அமைந்துள்ள கடார மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படைப்பாளர் . ஆசிரியராகப் பயிற்சிப்பெற்று, பல தமிழ் தொடக்கப் பள்ளிகளிலும் பின் இடைநிலை பள்ளிகளிலும் ஆசிரியராக பணிபுரிந்து தற்பொழுது மலேசியக் கல்வி அமைச்சில் பள்ளி ஆய்நராக (school Inspector) பணிப்புரிகிறார்.
80 களின் இறுதியில் எழுத ஆரம்பித்த
இவர் இன்றுவரை விரும்பிப் படைப்பது புதுக்கவிதைகள்.
மலேசிய மழைச்சாரல் குழுமம் வெளியிட்ட
கவிதைதொகுப்புகளில் இவர் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு அஸ்ட்ரோ எனும் ஒளியொலி
நிறுவனம் நடத்திய கண்ணதாசன் கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர், தொடர்ந்து பல
இலக்கிய இயக்கங்கள் நடத்திய கவிதைப்போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். படைப்புக்
குழுமம் ஆண்டு தோறும் நடத்திவரும் கவிக்கே கவிதைப்போட்டியில் 2018 க்கான
போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று, தொடர்ந்து நடந்த ஆண்டு விழாவிலும் கலந்துகொண்டு
, படைப்புக்குழும உறவுகளோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
தன் இலக்கியப்பயணத்தில், குறிப்பாக
நவீனக்கவிதைகளுக்கான தன் பயணத்தில் ஒரு தெளிவான வழிகாட்டியாக தகவு இதழும்,
கல்வெட்டு மின்னிதழும் திகழ்வதாகக் கூறுகின்றார்.
இலக்கிய இதழ்களில், குறிப்பாக படைப்பு
மின்னிதழிலும், தென்றல் மற்றும் வானம்பாடி வார இதழ்களிலும் தொடர்ந்து கவிதைகளோடு
ஆய்வு கட்டுரைகளும் எழுதிவருகிறார். இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம்:
உளவியலின் சுவாசம் வாழ்வியலின்
எச்சங்களாக படிகின்றன. போலியான வாழ்க்கை நிஜத்தை தின்றுவிட உறவுகளின் வார்த்தைகளும் ஒப்பனை பிம்பங்களாக
மாறிவிடுகின்றன.. யாரிடம் போய் பேசுவது
? இயற்கையின் மடியில் சாய்வதை தவிர… இதோ கவிதை….
என் முகத்தின் பாதியை
முகமூடி தின்றுவிட
ஊமையாய் தவிக்கிறது
சுவாசம்
அமிலம் ஊற்றி
அழிந்த வேர்களில்
இன்னும்
வந்ததைக் கேட்கவில்லை
சென்றதைச் சொல்லவில்லை
அதற்குள் இரவாகிவிட்டது
மண்ணிடம் பேரம்பேசி
வேர்களைக் கொண்டு வந்தேன்
வண்ணமற்ற கடல்
உள்ளே வராமல் வாசலில் நிற்கிறது
மேலும் நடக்காமல்
கரையில் சாய்ந்துவிடவா
ஒரு கோழையாய்
இருவேறு நிலைப்பாட்டில் வாழ்கிறான்
மனிதன். சுயத்துடன் பேசுவது குறைந்து விட்டது.
துயரங்களையும் மகிழ்ச்சியையும்
கண்கள் படிமமாக்கிக் கொள்கின்றன. நாவலின் இறுதிப் பகுதியில் ஒரு மிருகம் சிரிக்கிறது… இப்போதும் சுயத்துடன் பேசாவிட்டால்
எப்படி?... இதோ கவிதை ….
எங்களுக்கான
இடைவெளி குறுகிக்
கொண்டே வருகிறது
இடையே ஒரு விழி புன்னகைத்து
மறு விழி கலங்கும்
பூக்கள்
கவலையில்லாமல்
அந்த வெற்றிடங்களை
நிரப்பிக்கொண்டிருக்கின்றன
எனக்கு நிகர் அந்த மிருகத்தையும்
அதற்கு நிகர்
என்னையும்
மாறிமாறிப் பரிமாறுகிறது
இதயம்
எட்டியெட்டிப் பார்க்கும்
என் மாலை விழிக்குள்
காலையைப்பற்றிய ஏக்கம் இல்லாமலில்லை
என் நாவலின் இறுதிப்பகுதி முடிவதற்குள்
உதிர்ந்த விடியலை
மீட்டுணரும் இரகசியத்தைச்
சொல்லிச்செல்லென்றால்
சைகை மொழியில் சிரிக்கிறது அந்த ஓநாய்
எங்களுக்கான
இடைவெளி குறுகிக்
கொண்டே வருகிறது
மேலும்
ஒரு சிறப்பான கவிதைக்கு படிமங்கள் பால்குடம் எடுக்கும். இதுவும் ஒரு உளவியல் கவிதைதான்.
காலத்தின் வாலைப் பிடித்து ஓடும் ஒரு மனிதனின் கவிதை. கனவுகளால் நிரம்பிய வாழ்க்கையை
இறுதிச் சுற்றின் மண் குடத்தில் முடித்திருப்பது வியப்பு! பார்வைக்கு கவிதை…
*நேற்று*
வாலைப் பிடித்துவிட்டேன்
பின்னே ஓடும் காலத்திடம்
என் முகத்தை இழந்துவிட்டேன்
*இன்று*
கானகத்தின் பாடலை
மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்
இலைகளில்
பனித்துளிகளால்
வசந்தத்தை
வரைகிறேன்
என் எண்ணிக்கைக்கு அடங்கச்சொல்லி
வானில் வானம்பாடிகளுக்குப்
பாடம் நடத்துகிறேன்
சஞ்சலத்தோடு
பூந்தோட்டத்தில்
தேன் தேடும் பூச்சிகளுக்கு
சம்பந்தமில்லா
வண்ணமூட்டுகிறேன்
குருவிகளின் சிறகுகளோடு
புல் நுனியின்
துளி நெல்லை
மெல்ல
பறிக்கிறேன்
வாடிய பூக்களிடையே நிறமற்ற
மீன்களாய் நீந்துகிறேன்
*நாளை*
காலையில் வெண்மேகங்கள்
கருக்கத்தொடங்கலாம்
பாலை மீண்டும் பன்னீரில் குளிக்கலாம்
என் வற்றிய குளங்கள்
கனவுகளால் நிறையலாம்
மறக்காமல்
மண்குடத்தோடு காத்திரு
நனைதல் என்பது எத்தனை விதமாகவும்
இருக்கலாம். அவசரத்தில்
அங்கே ஒதுங்குகிறோம் என்பது முட்கள் நிறைந்த பகுதி என்பது குறிப்பிட வேண்டிய இடம். உதிர்தலும்
துளிர்த்தலும் நிகழ்ந்த நிகழ்வில் முடியாத கவிதை…
முதலில் நான்தான் நனைகிறேன்
பின் என்னைச் சுற்றி
முட்செடிகளும் கொஞ்சம்
நனைய
அவசரத்தில் அங்கேதான்
ஒதுங்குகிறேன்
வருடிய முட்களின்
நுனிகளில்
குருதியாய் கரைகிறேன்
உன் புன்னகை மின்னலின்
விரல்பிடித்து எழுகிறேன்
இரவெல்லாம்
இதயம் நனைத்த
தூறல்களால் ஆடை நெய்து
உன் நினைவுகளைப் போர்த்திவிடுகிறேன்
என்னுரசல் பட்டவுடன்
தீ படர்ந்த கோளாய் மருவி
என்னைச் சுடுகிறாய்
கோடைகாலத்து
இரப்பர் இலைகளாய்
சிவந்து உதிர்கிறேன்
மெல்ல மறைகிறேன்
இறுதியில் இருவரும் நனைகிறோம்
இப்பிறவி
மழையில்
வாழ்க்கையின் படிம சிறகுகளை வலிய அசைக்காமல் தானாகவே அசைக்கிறது கவிஞரின் எண்ணற்ற வரிகள்.
ஆழ்ந்து வாசிக்கிறவன் இவரது கவிதைகளில்
தொலைந்து போவது நிச்சயம்.
கவிஞரின் மற்ற மற்றக் கவிதைகளையும்
படித்து
பாருங்கள் உணர்வீர்கள்…
வண்ணங்களால் நிறைந்த கடலைக் கனவென்று
ஏமாந்த
கடற்பறவை நான்
நீந்திமகிழும் மீன்களின்
தூதுவர்களாக அலைகள் மட்டும்
என் கால் தொட்டு
கதை சொல்கின்றன
ஒரு பாதி முகமூடிக்குள்
ஒளிந்துகொண்ட
என் மறுபாதி மனித முகத்தைக்கொண்டு
என்னை மனிதன் என்றே
அனுதானிக்கலாம்
அதிகாலையை மென்று
மாலையைச் சிறகாக்கி
இரவுக் கனாவில்
திணிக்கப்பட்ட விதைகளில்
பூக்கக் காத்திருக்கிறது
என் சிறகுகளின்
சரித்திரம்
வானத்தின் வரைபடத்தில்
என் பெயர் பறவையென்றே
இருக்கிறது
வா உதிரலாம்
உதிர்வதே இறை நிலை
மண்ணில் உதிர்ந்து
வேர்வழியே
கிளைக்கு மீண்டு
பூவாகக் காத்திருக்கிறேன் பார்
உனக்குப் பிடித்த வாசனையில்
உன் இதய வண்ண மல்லிகையாய்
கொஞ்சம் விழியொத்த செம்பருத்தியாய்
நீ
தள்ளி அமர்வதுபோல்
கொஞ்சம் முள்ளோடு ரோஜாவாய்
மீண்டும் உதிர்வது
சுகமானதுதான்
தாயைக் காக்க சேயும்
சேயைக்காக்க தாயும்
குடும்பம் காக்க தந்தையும்
நாட்டைக்காக்கும் வீரனைப்போல்
உதிர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்
நீயோ அல்லது நானோ உதிர்வதற்குத்
தயக்கமொன்றுமில்லை
தலைப்பிலா
தவத்தில் பூத்தவர்களாகவே
இருக்கிறார்கள்
தலைப்பிடப்பட்ட வரலாற்றில்
நம்மைப்போல்
உதிர்ந்தவர்கள்
கடற்கரையின்
கல்லிடுக்குகளில் எதையோ
தேடுகின்ற மாடப்புறாக்கள்
என்னைப்போலவே
கரையில் ஒதுங்கியிருக்கிறது
மோதிரம் இழந்த நீலச்சிமிழ்
கண்களுக்குப் படாமல்
கரைகளின் சாபமாய்
மூச்சுற்று விழும் வண்ண மீன் களைப்
பற்றி கவலையற்று விளையாடிக்கொண்டிருக்கின்றன அலைகள்
கதிர்கள்
என்னைச் சேராமல்
மறைக்கின்றன
அரச மரக்கிளைகள்
ஒரு துளி இதயத்தை
மென்றபடி
உன் விரல்களில்
அந்த மோதிரம்
வானவில்லால் தன்னை
அலங்கரித்துக் கொண்ட கிளிஞ்சல்களாய்
எப்போதாவது நிறங்காட்டும்
உதட்டோரத் தனிமைப் புன்னகை...
பல மொழிகளோடு
கரையைத் தழுவிச்செல்லும்
கடலலையைப் போன்றதுதான்
அப்பாவின் அந்த மௌனம்
இன்று
சித்தனாய் பித்தனாய்
முகங்காட்டும் பிம்பத்தில்
நானாகத்தெரிகின்ற அப்பாவின் முகத்தோடு
பேசுகிறேன்...
வேறு வழியின்றி
இன்றும்
எட்டியெட்டிப் பார்க்கிறேன்
மொழியிழந்த
இரவெல்லாம்
வறட்டிருமல் சத்தமின்றி
வறண்டு போயிருக்கிறது
அப்பாவின் அறைச்சுவர்
மழையின் துளியோடும்
மாலைக் காற்றோடும்
குறியீட்டு மொழியோடுதான்
பேசிக்கொண்டிருந்தார்
அப்பா
அந்த இறுதி நாளில்
இம்முறை,
தழும்புகள் நிறைந்த
அப்பாவின் கைப்பிடித்து
செம்மண்ணில் நடை பழக
சாலையைப் பார்த்தபடி
காத்திருக்கிறது
என்னோடு
தூசு படிந்த
அப்பாவின் மிதிவண்டி
வாசலில்
பாதி கடித்த அரத்திப்பழத்தோடு
காத்திருக்கிறாள் ஏவாள்
உள்ளே
செல்லமான அணைப்பும்
இறுதி முத்தங்களும்
வேர்விடத்தொடங்கியிருந்தன
பாசமாக வாலாட்டிச்
சுற்றிச் சுற்றி வந்தன
நேசம் நிறைந்த அவன்
சொற்கள்
விழிகளுக்கு பதில்
கடல் பூத்த முகத்தோடு
ஏறிட்டுப் பார்க்கிறாள்
குடில் முழுவதும்
வெவ்வேறு கோணத்தில் இருவரும்
நாட்டியமாடிக்கொண்டிருக்கின்றனர்
காட்டுப் பறவைகள்
அன்றைய பயணத்தை
கூட்டுச் சுவர்களில்
பதிந்துகொண்டிருக்க...
நதி வழியே வனத்திற்குள்
நுழைந்த ஆதாம்
இன்னும்
திரும்பவில்லை
பனியின் சாரல்
நனைந்த சுகத்தில் பாதச் சுவடுகள்
இடராமல் நடக்கின்ற என் விழிகளின்
ஓரத்தில் பட்டாம் பூச்சிகள்
வண்ணந்திருடிய கள்வனாய்
பூக்களிடையே ஓடி ஒளிகின்ற
வண்டுகளின் வேடத்தில் நான்
எப்போதும்போல்
தேவதையின் சாயலில் நீ
மகரந்த ஊர்வலத்தில்
பூக்களிடையே
ஆடிப்பாடி
உன்னைத் தொடரும்
அவசரத்தில்
சேர்த்து வைத்த தேன்
துளிகளாய் சிந்த
ஒவ்வொரு துளியிலும்
ஒவ்வொரு சொர்க்கமாய் பூக்கிறது
அதன் இரம்மிய போதையில்
தயங்கித் தயங்கி
1330 -வது குறளைக்
கனவின் காதருகில்
கிசுகிசுக்கிறேன்
உள்ளே கேட்கிறதா
உனக்கு
ஒரு சுடர் இளகி
பருந்தாய் மாறிய
திமிரில்
அங்குமிங்குமாய் காற்றைக் கீறி
விளையாடிக்கொண்டிருக்கிறது
மறு சுடர் இளகி
காக்கையாய் மருவி
கரையோர மரங்களில்
எச்சங்களால் ஓவியங்களை
வரைகின்றது
மீதச் சுடரெல்லாம்
தேன் சிட்டுகளாய்
பூக்களை சீண்டிக்கொண்டிருக்கின்றன
விளம்பர இடைவெளியாய்
கார்மேகங்களுக்குள்
மீந்த மின்னலை ஊற்றிவிட்டுப்போகின்றன
பூநாரைகள்
மற்ற பறவைகளுக்கு
சிறுவர்களின்
சிறைகள் திறக்கும் வரை
காத்திருக்கவும்
ஓருயிரிலிருந்து ஒவ்வோர் உயிராய்
விழுங்கத்தொடங்கி்ன ஆறறிவு நுண்கிருமிகள்
இருந்தும் அதன் (அ)சிங்கப்பசி
அடங்குவதாய் இல்லை
எல்லா கொலையையும் நியாயப்படுத்த
அருவுருவ
இறை சாசனம் எழுதிக்கொண்டன
அவை
இதுதான்...
இப்படித்தான் என்று ஒருபுறமும்....
எதுவும்
எப்படியும் என்று முகக்கவரியின்
மறுபுறமும்
முடிவற்ற
விவாதத்தைப் புன் சிரிப்போடு
வேடிக்கைப் பார்க்கின்றன
அவை
தலையும் வாலுமாய் துடிக்கத்தொடங்கிய
நம்பிக்கையில்
அமிலந்தெளித்து
விளையாடுகிறது காலம்
கொஞ்சந் துணிச்சலோடு
குழந்தைகளின் பாதங்கள்
வாசல்வரை வரும்போது மின்மினியாய்
சுவாசத்தைக் கிள்ளுவது
கோறனி நச்சிலின்
மனசாட்சியா அதன்
அடியாட்களா?
பெருந்தீயோடு பருந்தொன்று
பால்வீதிக் கிளையொன்றில் வந்தமர்ந்து.... குளிரத்தொடங்கிய பொழுதில் அதன் இரைப்பையின் விதைகளெல்லாம் கண்
விழித்துச் சோம்பல் முறித்தன...
இறை கொடுத்த முகமூடியணிந்து...
ஆளுக்கோர் உயிராய் தடம் பதிக்கத்தொடங்கிய அந்த வினாடியில்தான் 'நான்' எனும் வன்மம்
இதயத்துடிப்பில் கலந்திருக்கவேண்டும்;
மனிதமெனும் நுண்கிருமியால் அப்போதே பீடிக்கப்பட்டிருக்க வேண்டும்
இந்த பூ +
கோளம்.
ஆப்பிளைக் கடித்து
முதலில் நீ வெட்கப்படு
வெட்கத்தில் சிவந்த
காற்றில் நான் ஏக்கமாய்ப் படர்கிறேன்
படர்ந்த கன்னத்தின்
மாக்கோலத்துப் புள்ளிகள் போலவே
அண்டத்துள் கோள்களை வீசி
விளையாடும் சிறுவனாகி
மகிழ்கிறேன்
முன்னம்
நான் காயாய் தெரிந்த
பிம்பத்தில்
உன்
தனிமையை
சலவை செய்துகொள்கிறாய்... மீண்டும்
கனியாகிறாய்
கனியுண்டுக் களிக்கும்
அணில்களின் மென்மையான
உரோமங்களை வருடி
வண்ணமூட்டும் இளம்பச்சைத் தளிர்கள்
போலவே
மயக்கும் உன்
விழிகளின் ஓரத்தில்
ஊஞ்சலாடும் ஏக்கம்
எனது போலவே
உனதும்
தயங்காமல்
இதய வடிவில்
ஆப்பிளைக் கடித்து
இருவரும்
வெட்கப் படலாம்
என் கனவில் வந்து வந்து
போகும் என் கிராமம்
மாதிரியே
அவைக்கனவிலும் வந்திருக்கவேண்டும்
அடர்ந்த காடுகள்
தனிமையில் அழுகின்றன
கிளிகளும்
காட்டுப்
பூனைகளும் இன்னும் பலவும்
ஒரு மழலையின் கடிதத்தை
மௌனமாய் வாசிக்கத் தொடங்கியது
விதைக்குள் நுழைந்த
மழைத் துளி
ஒளியில் நனைந்துப் பின்
இருளுக்குள் நழுவிய
காகிதப் பெட்டி
நான்
அதே அவசரத்தில்
மெய்யைச் சுற்றிலும்
அமிலத்தை அருந்திய
போதையில்
தள்ளாடுகிறது
என்னுயிர்
அழாதே
கொஞ்சம் பொறு
அசுர வேகத்தில்
வீசும் புயலில்
என் சுவாசத்தை
செதுக்கிச் செல்கிறேன்
உன் சுவாசத்தின்
முகவரியாக
இறுதி ஒப்பாரியல்ல
இது
இன்னொரு பாவத்திற்கான
நாடோடிப் பயணமும்
அதற்கும் சற்று முன்
அந்திமத்தில்
அமர்ந்தபடி அழுவதும்
எனக்குச் சுகமே
இனி
வழியில் சந்திக்கப் போகின்ற
விழியிழந்த தேவதைகளிடம்
என்னைச் சொல்லாதே
குருதியில் நனைந்த
முட்களிலும்
என் மௌனத்தின் இரணத்திலும்
உன் பெயரும்
இருக்கிறது
மாய மானைத்
துரத்தும் சுவாசம்...
கடல் சேர்வதற்குள்
கலைந்துபோன
நதியாய்
இன்றும் நாளையும்
வளர்வதற்கும் வளப்பதற்கும்
துளிர்விட்ட
இமழலைகளை
கொல்லைபுறத்து
கொள்ளையனிடம்
விற்றுவிட்ட
மர்ம மிருகங்கள்
...நாம்
பூக்களால் மறைக்கப்பட்ட
ஆயுதக்கிடங்கு
நம் மனம்...
கடவுளுக்குத் தெரியப்போவதில்லை
பிறக்கும்போதே
விலங்கோடு பிறந்த
உயிர்களை
இன்றுவரை
காக்க முயன்று
காணாமற் போன
இதயம்...
உனக்குமெனக்கும்
புரிய வாய்ப்பில்லை...
இந்த நரகத்தைச்
சொல்வதற்கான
சொற்களோடு வரவில்லை...
நாம்...
இந்த மாதத்தின் நமது படைப்பு குழுமத்தின்
கவிச்சுடர் விருதினை தேனி மாவட்டம் கெ.கல்லுப்பட்டியை சேர்ந்த கவிஞர் மு.முபாரக் அவர்களுக்கு
வழங்குவதில் பெருமைப் படுகிறோம்..
முது நிலை தமிழ்+ கூட்டுறவு பட்டயப் படிப்பு படித்த கவிஞர் தற்போது கூட்டுறவு வங்கி செயலாளராக திருச்சி மாவட்டத்தில்
பணி புரிகிறார்.
இவரது கவிதைகள் படைப்பின் தகவு கல்வெட்டு இதழ்கள் உள்பட பல்வேறு இலக்கிய சிற்றிதழ்களிலும், ஜனரஞ்சக இதழ்களிலும் வெளி வந்துள்ளன.
2007 ஆம் ஆண்டு குங்குமம் இதழ் நடத்திய
போட்டியில் வெற்றிபெற்று கவிஞர் வைரமுத்துவிடம் அவர்களிடம் பரிசும், 2020 ஆம் ஆண்டு
படைப்பு குழுமம் நடத்திய கவிதைப் போட்டியில் கவிஞர் மு.மேத்தா
அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசுடன் விருதும் பெற்றுள்ளார்.
நமது படைப்பு குழுமத்தின் மாதாந்திர படைப்பாளி விருது, 2022ஆம் ஆண்டு இயக்குனர் திரு லிங்குசாமி அவர்கள் நடத்திய
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ
போட்டியில் சிறப்பு பரிசு, 2016 ஆம் ஆண்டு திரு.அப்துல்
கலாம் நினைவு பரிசு என பல விருதுகளும் பெற்றுள்ளார்.
கவிஞரின் முதல் கவிதை நூலானா ஆ காட்டு நமது படைப்பு குழுமத்தின்
வெளியீடாக வெளிவந்து பலரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது…
இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம்
:
...
அவசர அவசரமாய்
சிலுவை பற்றிய கவிதையொன்றை
கேட்கிறாய்,
கொஞ்ச நேரம் காத்திரு...
நேசித்தவர்களால்
என் கைகளில் அறையப்பட்ட
ஆணிகளை அகற்ற கொஞ்சம் தாமதமாகலாம்!
***
காசில்லாத போது கேட்கப்படுகிறது
கொடுத்த கடன்,
பசியில்லாத போது தரப்படுகிறது உணவு,
சோர்ந்து போன நேரங்களில்
திணிக்கப்படுகிறது,
கடினமான வேலை,
அவநம்பிக்கையில் வாழும்
போது நிகழ்கிறது துரோகம்,
நம்மை நமக்கே பிடிக்காத
போது
செலுத்தப்படுகிறது புது புது
குற்றம்,
கையில் குடையில்லாத போது
ஓயாமல் பெய்கிறது மழை,
ஆறுதல் தேடி அலைகின்ற போது,
அழுகின்றது பச்சிளம் குழந்தை,
கையிருப்பு குறைவாகயிருக்கும் போது
அதிகரித்திருக்கிறது விலைவாசி,
இன்றோ நாளையோயென உயிருக்கு
போராடிக்கொண்டிருக்கும் போது
நிகழ்கிறது...இயற்கைச் சிற்றம்,
எப்படி இக்கவிதையை முடிப்பதென
திணறிக்கொண்டிருக்கும் போது தொடர்கிறது ...
பேனாவின் மௌனம்!
***
நீண்டதூரம் நடக்கக்கூடாது
வெயிலில் அலையக்கூடாது
என்ற மருத்துவரின்
அறிவுரைகளை காற்றில்
பறக்கவிட்டு விட்டு
ஆட்டோக்காரன் கேட்ட தொகை
அதிகமென வெயிலில்
நடந்து வரும் அப்பாவின்
கைகளில்
பிள்ளைகளுக்கான தின்பண்டம்!
***
காலொடிந்த
பறவையொன்றை
வீட்டுக்கு அழைத்து வந்தேன்
அழகாகயில்லையென்கிறாள்
மனைவி,
அருவருப்பாயிருக்கிறதென்கிறான்
மூத்தமகன்,
ஓடி ஒளிந்து கொள்கிறான்
இளையமகன்
வாங்கிய இடத்திலே கொடுத்திடுங்களென்கிறாள்
மகள்,
சார் உங்களுக்கு இது எதுக்கும்
பயன்படாதென்கிறாள் வேலைக்காரி,
தேவையில்லாத வேலை உனக்கெதுக்கென்கிறார்
அப்பா,
அவசர அவசரமாய்
என் கையிலிருந்து வாங்கிக்கொண்டு
காயத்திற்கு மருந்தை
தேடிக்கொண்டிருக்கிறாள்...அம்மா!
***
இது தான்
நான் குடிப்பது கடைசி
என அப்பா சொன்ன
எண்ணிக்கை நூறை
தாண்டியிருந்தது...
மகனுக்கு பள்ளிக்கு கட்ட
வேண்டிய நூற்றி ஐம்பது
ருபாய் கட்டணத்தை
செலுத்துவதற்காக சொன்ன
தவணை நூற்றி ஐம்பதை
தாண்டியிருந்தது...
பெரியமனுஷி ஆகிவிட்ட
மகளுக்கு
தாவணி வாங்கி தருவதென்பது
கானலாகவே மாறியிருந்தது...
வயதான அம்மாவின்
மருத்துவ செலவு செய்ய
முடியாமல்
இன்னும் இருக்கும் ஆயுளை
முன் கூட்டியே குடித்திருந்தது...
வீட்டிற்கு சீதனமாய் வந்த
மனைவியின்
பொருட்கள் எல்லாம்
கடன் வாங்கியவர்களிடம்
அடைக்கலமாயிருந்தது...
அதிகமான போதையில்
நான்கு சக்கர வாகனத்தில்
மோதி கொண்டதில்
இரண்டாக
இருந்த கால்களின் எண்ணிக்கை
ஒன்றாகியிருந்தது....
பள்ளிகட்டணம் செலுத்த
முடியாததால் பள்ளிக்கு
முன்பு மிட்டாய் விற்றுக் கொண்டிருந்த
மகனும்,
துணிக்கடை ஒன்றில்
தாவணி விற்றுக் கொண்டிருக்கும் மகளும்
மதுக்கடையைக் கடக்கும் போது
செத்து செத்து பிழைக்கிறார்கள்...
அப்பாவைப் போலவே!
**
என் மீதான கோபத்தில்
கையில் கிடைத்த
பொருட்களை எல்லாம்
வீசிக்கொண்டிருக்கிறாய்...
வீசிய
பொருட்களையெல்லாம்,
உன் அருகிலேயே
மீண்டும் மீண்டும் எடுத்து
வைத்துக்கொண்டிருக்கிறது...
என் காதல்!
***
மழையில் நனைவது
பிடிக்கும்
வானவில்லை பிடிக்கும்
சுற்றி வரும்
வண்ணத்துப்பூச்சியை பிடிக்கும்,
அதிகாலையில் புல்லின் மீது
அமர்ந்திருக்கும்
பனித்துளியைப் பிடிக்குமென,
எழுதிய கவிதையை
கைப்பைக்குள் ஒளித்து
வைத்திருக்கிறாள்...
கணவனுக்கு பிடிக்காதென!
**
மரணத்தை விட
கொடுமையானது
வேறொன்றுமில்லையென்கிறாய்,
நேசிப்பவர்களின்
மௌனம் இருக்கிறதென்கிறேன்,
மௌனமாக
கடந்துபோகிறாய்!
**
அப்பாவின் அவசர வேலை
தடைபட்டிருந்தது,
அம்மாவின் வீட்டு வேலைகள்
தேடலாகியிருந்தது,
தாத்தாவின் கையிலிருந்த
நாளிதழ் நான்காகியிருந்தது,
பாட்டியின் பக்தி
திசைமாறிக்கொண்டிருந்தது,
யாராவது குழந்தையின்
தொலைந்து போன டெடிபியரை
கண்டுபிடித்து கொடுங்களேன்!
**
காணாமல் போன கடிகாரத்தை
தேடிக்கொண்டிருந்தேன்
கிடைத்ததும்,
காணாமல் போன நிமிடங்களை
தேடிக்கொண்டிருக்கிறேன்!
**
திரையில்
கொலைகளை சாதாரணமாய் செய்பவன்
ஒரு எறும்பை தெரியாமல்
மிதித்ததற்கு
வருந்திக்கொண்டிருக்கிறான்...
திரையில் மக்களுக்கு
கோடி கோடியாய்
அள்ளிக் கொடுத்தவன் பசிக்குதென
கையேந்திய சிறுமியை
கண்டும் காணாமல் கடக்கிறான்,
ஒவ்வொரு மேடைகளிலும்
கடவுளில்லையென பேசிக்கொண்டேயிருப்பவன்
தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத
நாளில் காக்கச் சொல்லி கடவுளிடம்,
மனமுருகி
பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறான்,
நேர்மை நேர்மையென பேசிக்கொண்டிருந்தவன்
இலஞ்சப் பணத்தை கையில் கொடுக்காமல்
கூகுள் பே' யில்
அனுப்பி வைக்குமாறு சைகை செய்கிறான்,
நிமிடத்திற்கு நிமிடம்
நிறமாற்றிக் கொள்ளும் உலகத்தில்
பல ஆண்டுகளாய்
யாரோ ஒருவருக்கு கொடுத்த
வாக்குறுதிக்காய் இன்னும்
ஒரு ரூபாய்க்கு
இட்லி விற்றுக்கொண்டிருக்கிறாள்
பாட்டியொருத்தி!
***
என்னைக் காயப்படுத்துவதற்கு
கல்லொன்றை
எடுத்திருந்தான் ஒருவன்,
கடுஞ்சொல்லொன்றை
எடுத்திருந்தான் ஒருவன்,
துரோகமொன்றை எடுத்திருந்தான்
ஒருவன்,
வஞ்சமொன்றை எடுத்திருந்தான்
இன்னொருவன்,
எல்லாவற்றிலும் தப்பித்த நான்,
பொய்யான அன்பொன்றில்
விழுந்து என்னை நானே
காயப்படுத்திக் கொண்டிருக்கிறேன்!
**
எதுவுமே
தெரியாமலிருந்த
என்னை
கவிஞனாக்கிவிட்டு,
எல்லாம் தெரிந்த நீ
கவிதையாகி விட்டாய்!
**
அப்பாவை
புதைத்துவிட்டு
வீட்டை நோக்கி பயணிக்கையில்
எதிரே வருகிறான்...
தன் தந்தையின்
தோளில்
அமர்ந்த படி,
என் வயதுடைய ஒருவன்!
**
சலசலத்து ஓடும் நதியில்
மௌனமாய்
நீர் அருந்திவிட்டு
கடந்து போக எத்தனிக்கும்
பறவைக்கான கவிதையொன்றில்
மீன்கள் வருகின்றன
உதிர்ந்த பூக்கள் வருகின்றன
வேண்டாமென தூக்கியெறிந்த உடைகள்
வருகின்றன...
இறுதியாய் வேடன் வரும் போது கவிதையை
தூக்கியெறிந்து விட்டேன்...நான்!
***
ஏதேதோ செய்கிறது...
மரம் வெட்டுபவனை
குயில்பாட்டு!
***
இன்றே வாழ்வின்
இறுதி நாளென அறிந்தால்
கோவிலுக்கு செல்கிறார்கள்,
பிடித்த மழையில் நனைகிறார்கள்,
திரைப்படத்திற்கு செல்கிறார்கள்,
பூங்காக்களுக்கு
செல்கிறார்கள்,
தான தர்மங்கள் செய்கிறார்கள்,
விலகியிருப்பவர்களிடம்
நட்பாய்
சேர்ந்து நடக்கிறார்கள்,
அக்கம் பக்கத்தினரிடம்
அன்பை பொழிகிறார்கள்,
பிடித்த
பயணம் செய்கிறார்கள்,
நேசித்தவர்களை பார்க்கச்செல்கிறார்கள்,
தாம் செய்த தவறுகளுக்காய்
வருந்துகிறார்கள்,
இறுதி நாளென்பது ஆரம்பித்து
வைக்கிறது..வாழ்வை!
***
என் மீது
கோபமாகயிருக்கும்
போதெல்லாம்
ஒரு அச்சமுமில்லை...
அன்போடு இருக்கிறாய்
ஆயிரம் ஆயிரம் அச்சங்கள்!
**
அவசர அவசரமாய்
மேய்ந்து கொண்டிருக்கிறது ...
மரணத்தை,
சற்று நேரத்தில்
பலி கொடுக்கப்படவிருக்கும் ஆடு!
**
சிறு எறும்பின் மீது கூட
அன்பு காட்ட வேண்டுமென்ற
காட்சியை படமாக்குவதற்குள்
பல எறும்புகளை கொன்றிருந்தார்...
புத்தன் வேடமிட்ட நடிகர்!
**
உன் கவிதையில் வந்த
தேவதையும்
என் கதையில் வந்த தேவதையும்
ஒரு நாள்
சந்தித்துக்கொண்டார்கள்...
என்ன பேசிக்கொண்டார்களென அறிய
ஒரு கவிதையோ கதையோ
இப்போது
எழுத வேண்டியதாகயிருக்கிறது!
**
என்னிடம்
காகிதமில்லாத போது
பெரும் மழை!
**
Showing 281 - 300 of 838 ( for page 15 )