logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 241 - 260 of 877

Year
Award
   

மாதாந்திர பரிசு

  • குமரி உத்ரா

0   672   0  
  • May 2023

கவிச்சுடர் விருது

  • ச.ஆனந்த குமார்

0   1275   0  
  • April 2023

மாதாந்திர பரிசு

  • ப்ரியா ரஞ்சன்

0   824   0  
  • April 2023

மாதாந்திர பரிசு

  • கவி ரகுமான்

0   740   0  
  • April 2023

மாதாந்திர பரிசு

  • ஜோதி சரண்

0   743   0  
  • April 2023

மாதாந்திர பரிசு

  • குகை சிவா

0   684   0  
  • April 2023

மாதாந்திர பரிசு

  • விஜி கல்யாணி

0   687   0  
  • April 2023

மாதாந்திர பரிசு

  • அறிவுச் செல்வன்

0   929   0  
  • April 2023

மாதாந்திர பரிசு

  • வி.அபிவர்ணா

0   698   0  
  • April 2023

மாதாந்திர பரிசு

  • அமல் ராஜ்

0   639   0  
  • April 2023

கவிச்சுடர் விருது

  • கருவை ந.ஸ்டாலின்

0   1135   0  
  • March 2023

மாதாந்திர பரிசு

  • கலைச்செல்வி

2   940   0  
  • March 2023

மாதாந்திர பரிசு

  • ராஜா அபி

0   754   0  
  • March 2023

மாதாந்திர பரிசு

  • கோவை புதியவன்

0   737   0  
  • March 2023

மாதாந்திர பரிசு

  • இனியவன் காளிதாஸ்

0   829   0  
  • March 2023

மாதாந்திர பரிசு

  • தமிழ்ச்செல்வன்

0   714   0  
  • March 2023

மாதாந்திர பரிசு

  • லோக சுந்தரம்

0   739   0  
  • March 2023

மாதாந்திர பரிசு

  • த. ரவீந்திரன்

0   726   0  
  • March 2023

மாதாந்திர பரிசு

  • வம்சி ராஜன்

0   908   0  
  • March 2023

கவிச்சுடர் விருது

  • செ.வீரமணி

1   1171   2  
  • February 2023

மாதாந்திர பரிசு

குமரி உத்ரா

View

கவிச்சுடர் விருது

ச.ஆனந்த குமார்

இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை கவிஞர்  ச.ஆனந்த குமார் அவர்கள் பெறுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

கோவையை பிறப்பிடமாக கொண்ட கவிஞர் அவர்கள் வணிகவியல் முதுகலை பட்டம் பெற்றவர். தற்போது சென்னயில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி புரிந்து வருகிறார்.

இவரது கவிதைகள், கதைகள்  பல்வேறு பிரபல இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் வெளிவந்துள்ளன.

கோவையில் வசந்த வாசல் கவிமன்றத்தின் மூலமாக எண்ணற்ற கவியரங்கங்கள் மற்றும் பட்டி மன்றங்களில் கலந்து கொண்டுள்ள கவிஞர், கோவை வானொலி நிலையத்தில்  பகுதி நேர தொகுப்பாளராகவும், சங்கமம் தொலைகாட்சியில்  (அமீரகம்) - பகுதி நேர தொகுப்பாளராகவும் பணி புரிந்து வருகிறார். 

இவரது முதல் கவிதை தொகுப்பு  படைப்பு பதிப்பகத்தின் வெளியீடாக – முடிவிலியின் நினைவு சங்கிலி – என்ற கவிதை நூல் வெளியாகியுள்ளது.

நமது படைப்பின் மாதந்திர சிறந்த படைப்பாளி விருதினை முன்பே பெற்றுள்ள கவிஞர் இப்போது நமது கவிச்சுடர் விருதினையும் பெறுவதில் படைப்பு குழுமம்  பெருமிதம் கொள்கிறது.

                            **************************************

இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம்:

ஒரு பூச்செடி வளர்ப்பவனின் துள்ளலும் மகிழ்ச்சியையும் பற்றி பேசும் கவிதை ; அவன் அதனிடமிருந்து ஒரு பூவை பறித்தவுடன் அஃது அன்னியப்பட்டு விட்டதான முடிப்பில் கவிதை சிறக்கிறது. பூச்செடியையும், பூவையும்  படிமங்களாய் மாற்றிக் கொண்டால் வாழ்க்கைக்கும் பொருந்தி போகும்.

 

தினம் ஒரு முறையாவது

எல்லா செடிகளிடமும்

பேசி விடுவதுண்டு தண்ணீர் விடுகையில்..

வெய்யில் காலங்களில் இரு முறை..

மெலிதாய் பூக்கள் பூக்க

துவங்கும்போது நான் சிறு பிள்ளையென

துள்ளி குதிப்பதை பார்த்து

ஒருவேளை எல்லோரும்

புன்னகைத்திருக்கலாம்..

என்றாலும்

ரோஜா மலர்ந்தவுடன்

சட்டென பிய்த்தெடுத்த என்

கருணையின் அதிர்வுகளில்

இருந்து அவைகளால்

இன்னும் வெளிவர முடியவில்லை..

 

 

பெண் பிள்ளை என்றால் செல்லம் என்பது குடும்பங்களின் கொண்டாட்ட மன நிலை .. உண்மையில் அந்த பெண் குழந்தைகளுக்கும் அப்படித்தானா? இந்தக் கவிதையிலும்  ஒரு பெண் பிள்ளை தன் மன நிலையை பதிவு செய்கிறாள்….

 

கம்மல் வாங்குவதற்கு

கடையையே புரட்டி போடுவேன்..

புடவை தேர்வு செய்ய

நான்கைந்து கடைகளாவது

ஏறி இறங்குவது வழக்கம்..

பொருத்தமான

நகைகளுக்கு அலைவது பிடித்தமான

பொழுதுபோக்கு..

படிப்பும் என் முடிவுப்படி..

சம்பந்தம் மட்டும் பேசி முடிவு செய்து

புகைப்படம் காட்டி

மாப்பிள்ளை என்றார்கள்..

இப்போதும்..

திருமண துணிகள்

தேர்வு செய்ய எனக்கு முழு

சுதந்திரம் உண்டென்கிறார் அப்பா..

காணும் காட்சியெங்கும் மிஞ்சி நிற்கும் வலிகள் வரிசை கட்டி நிற்க; அதனிடத்தில் நின்று யோசிக்கத்தான் யாருக்கும் நேரம் வாய்ப்பதில்லை.  இங்கு கவிஞருக்கும் அப்படி பட்ட நிலைதான்பேரூந்துக்கான காத்திருப்பே பெரும் கவலை

 

மின்கம்பிக்கு இடைஞ்சல்

என வெட்டப்பட்ட

மரத்தைச் சுற்றி

சத்தமிட்டு வட்டமிடுகிறது

பறவைகள்..

தேநீர் தந்த சிறுவனிடம்

சர்க்கரை குறைவென

தலையில் குட்டி கூட்டம்

பலமாய்ச்சிரிக்க வெளிவரும்

கண்ணீரை பல்கடித்து மறைக்கும் சிறுவன்..

விடாமல் சுற்றி அலுக்காமல்

வாடிக்கையாய் பிச்சை கேட்கும்

கூட்டம் என

எதுவும் பாதிக்கவில்லை..

என் கவலையெல்லாம்..

எப்போதும் சரியாக வருகிற

ஆறு மணி பேருந்து

இன்னும் வரவில்லை..

என்பதுதான்..

காத்திருப்பு என்பது சுகமானதுதானா?

சில நேரங்களில் சில கவனிப்புகள் வழியாக, செயல்கள் வழியாக சுகமானதாக  மாற்றிக் கொள்ள முடியும் என்பதுதான் யதார்த்தம் என பகிர்கிறது இக் கவிதை….

 

புதிதாக நந்தியாவட்டை பூத்திருக்கிறது.

வரிசையாய் எறும்புகள்புற்றுக்குள் செல்கின்றன..

போன வருடம் வைத்த செடிகள்

மரங்களாகியிருத்தன.

கால்சட்டையணிந்து ஓடுபவர்களும்

நாற்பது வயதை கடந்தவர்கள்

நடந்தும் எனை கடந்து கொண்டிருந்தார்கள்..

வெகுநேரமாய் அமர்ந்திருப்பதால்

அடுத்தமுறை பார்த்தால் புன்னகைக்க வாய்ப்பிருக்கிறது..

பந்து பொறுக்கி விளையாடும்

குழந்தைகளுக்கு போடும் வேலையையும்

இடையிடையே செய்து கொண்டிருக்கிறேன்..

வழக்கம் போல் தாமதமாகும்..

என குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறாய்..

வெறென்ன செய்துவிட முடியும்..

நொடிக்காய் யுகங்கள் தவமிருப்பதாய்

அன்பின் இருத்தல் பொருட்டு

சலிப்பின் பிசுக்குகள் மறைத்து

பொறுமையாய் காத்திருப்பதை தவிர..

தேவைக்கேற்ப பிரார்த்தனைகளும் கூட மாறிக் கொள்கிறது. ஒரு விவசாயி மழைக்கு வேண்டி பிரார்த்திக்கும்  போது ஒரு பிரயாணி மழையற்ற வானைக் கேட்பான். கடவுள் என்னதான் செய்வார்? கவிதை யதார்த்த நிலையை பேசுகிறது….

 

விடாமல் குதிக்கிற

தூறல்கள் பற்றி ஊடகங்கள்

ஏற்கெனவே அறிவித்து விட்டன..

வீதியில் கால் வைத்தால்

ஒரு வேளை சேற்றில் மாட்டி

செருப்பு பிய்ந்து விட வாய்ப்பிருக்கிறது

வழக்கமாய் அமர்ந்திருக்கும்

பூக்கார பெண்மணி இருக்கப்போவதில்லை..

இன்று பூங்காவில்

நடைப்பயிற்சி கிடையாது..

வாடகைக்கு வாகனங்கள்

செயலிகளில் கிடைக்காது..

வெளியூர் செல்பவர்கள்

எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது...

எப்போது வேண்டுமானாலும்

மின்சாரம் கைவிடலாம்..

பள்ளிகளுக்கும் விடுமுறையில்லை..

இணையத்தில் நடக்கும் வகுப்புகள்..

இரண்டாவது நாளிலேயே சலித்து கொண்டோம்..

வெயிலுக்காய் காத்திருப்பதென..

இப்படித்தான் கோடை

கத்தரி வெயிலின் மத்தியில்

மழைக்கு பிரார்த்தனை

செய்த ஞாபகம்..

 

பெண்களை பூவெனவும் நிலவெனவும் சிலாகிப்பது  ஏமாற்று வேலைதானோ! ஒரு பெண் தன் மனக் குமுறலை வெளியாக்கும் இக் கவிதை அருமை  

 

முல்லை கொடியென படர்ந்தே

இருக்கட்டுமா என்றதும்

மகிழ்ச்சியுடன்

ஒப்புக்கொள்கிறாய்..

போன்சாயாக வீட்டில்

வசிக்கட்டுமா..என்றதும்

எதிர்பார்த்திருந்தைப்போல்

சரியென சொல்லி விட்டாய்..

மூங்கிலென நான்

வளர்வதை மட்டும் 

உன்னால் கடைசிவரை

சகித்து கொள்ளவே 

முடிவதில்லை..

மேடையில் இராஜா என்றாலும் கூத்து கட்டுகிறவன் பொழப்பு பிச்சைக்காரன்தான் கடவுள் வேசம் போட்டவன் கையேந்தும் போது கடவுளும் கூட கண்மூடிதான் தூங்குகிறார்.

 

பார்க்காமலேயே இருந்திருக்கலாம்..

ராட்சச ராவணணாய் சிரிக்கையில்

ஊரே பயத்தில் அலறும்..

பீமன் வேடம் தரிக்கையில்

சுமந்திருக்கும் கதை கூட

கம்பீரமாய் நடிக்கும்.

புறவழி நெடுஞ்சாலை

உணவகத்தில்.. 

ஆறடி உடல் குறுக்கி

பரிமாற தெரியவில்லையென

வடுக்கள் சுமந்து

ஆற்றாமை அணிந்திருந்த காட்சி

என் கண்ணில் படாமல் 

காலம் ஒருவேளை 

தவிர்த்திருக்கலாம்

இனி கவிஞரின் சில கவிதைகள்:

 

அப்பா கொள்கைக்காய்

தீக்குளித்தார்..

அவருக்கு தெரியாது

கொள்கைகள் மாறிக்கொண்டே

இருக்கும் என்று..

நான் மீம்ஸ் போடுகிறேன்..

எனக்கும் தெரியாது

எதிரெதிர் நின்றவர்கள் எல்லாம்

கூட்டணியென்ற பெயரில்

ஒரே வரிசையில் அமர்வார்கள் என்று..

தலைமுறைகளாய் தொண்டராக

வாழும் ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பத்தில்

மகனுக்கு என்ன

வேலை கொடுக்கலாம்..

என யோசித்து கொண்டிருக்கிறேன்

-----------------------------------------------------

வெயில் விழுங்கி நிழல்

பிரசவிக்கும் தாவரம் போல்

ஸ்கலித ரசவாதத்தில் திரவத்தை

அடைகாத்து உயிராய் சுமக்கிற 

இறைவி!

 

உமிழ்நீர் சுரப்பிகளில்

சில சிட்டிகைகள் இனிப்பு கலந்து

பரிமாறுகையில்

கொதி நிலையில் காமம்

பிற நிலையில் பாசம் எனவும்

கூடு பாய்கிறது முத்தம்..

 

சமையலறை தொடங்கி

வீட்டின் முடுக்குகளில் நீக்கமற

பிரார்த்தனையென நிறைந்திருக்கும்

வேலைக்கென‌ பிறந்திருக்கும்

வியர்வை இயந்திரங்கள்..

 

சொட்டு சொட்டாக வலி

உடலுக்குள் உடும்பென

உருக்கும் ரத்தப்போக்கிலும்

புன்னகை வீசும் பூக்களின்

மனித உருவம்.

 

நிபந்தனைகளற்ற அன்பின்

வாசம் அணிந்தவளை

திமிர் ஆயுதம் கொண்டு

வார்த்தை கங்குகளில் எரியூட்டி 

கண்ணீர் கசிய உள்ளீடென

உரமாறாமல் இருந்து விடுங்கள் 

 

மற்றவர்களுக்கென உருகி

சுவாசிக்கும் 

அவள் ஒரு நீரதிகாரம்!

 

----------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

சலனமற்றது நாற்காலிகள்..

பெருந்துரோகத்தின் அடையாளம்..

குருதி கொப்பளிக்கும்

பகைகளின் தடயம்..

முதுகில் பொத்தலிடும் துப்பாக்கி ரவைகள்..

வன்மத்தில் உச்சத்தில் பிரியங்கள்

வெட்டப்பட்ட சதுரங்கம்..

நிற்காமல் அலறுகிற ஒப்பாரி..

தருக்கில் வெடித்தெழும் அகம்பாவம்

வென்றதாய் சிலுப்பும் மதுகோப்பைகள்

கொன்று குவித்த கொள்கைகள்..

அடையாளபடுத்தியும் அழிந்தும்

போன மதங்கள்..

இடைவிடாத சம்பவ தொகுப்புகளில்..

காலம் நாற்காலிகளை மையமிட்டே

நகர்கின்றன..

எல்லோரையும் கபளீகரம் செய்து

சலனமற்றிருக்கிறது நாற்காலிகள்..

-------------------------------------------------------------

இலைகள் மறைத்து பெரிய

குழிகள் வெட்டி வலைகள் விரிந்து

யுக்திகள் வகுத்து காட்டுக்குள்

கம்பீரமாய் திரிந்த

விலங்குகளை கூண்டுக்குள்

அடைத்து பார்க்கும்போது பெருமையின்

உச்சியில் கர்வத்தோடு இருந்தவன்

கால் உடைந்து சக்கர நாற்காலியில்

அமர்ந்தபோது புரிந்தது

அடைத்தல் என்பதன் அர்த்த அடர்த்தி

-----------------------------------------------------

சொல்வதற்கு ஏதேனும்

ஒரு விஷயம்

இருந்து கொண்டே இருக்கிறது..

'ம்' கொட்டி மிக

ஆர்வமாக கேட்க வேண்டும்

என எதிர்பார்ப்பதில்லை..

ஓட்டத்தை தடை செய்யாமல்

பொறுமையாய் இருந்தால் போதுமானது..

அனுபவம் பகிர உணர்வுகள் கடத்த..

அறிவுரையும் குறுக்கீடுமற்ற

எவரேனும் தேவைப்படுகிறார்கள்

அப்படித்தான் தெருவோர

அரசமரப் பிள்ளையார்

அறிமுகமானார்

 

 

எங்கோ மலை பிளந்த

சாலையில்..தாயன்பின்

அடர்த்தியாய். படர்ந்திருக்கும்

பனிமூட்டத்திற்குள்..

குளிருக்காய் தேனீர் அருந்தி

கொண்டிருக்கலாம்..

காற்றில்  அலைகிற சருகாய்..

கொஞ்சமாய் தொப்பை வளர்த்து

வேலையென்கிற பெயரில்

தொலைந்து கொண்டிருக்கலாம்..

இல்லையென்றால் இன்னும் கூட

பிரமீளின் பசுவய்யாவின்

கவிதைகளுக்குள்..

அரும்ப துடிக்கிற மொட்டின் வாச

ஆக்கிரமிப்பாய் கிறங்கி கிடக்கலாம்..

விஷச்செடிகளை நகலெடுத்த

அயல்நாட்டு எல்லை பீரங்கிகள்

எல்லை தாண்டி இடம் பெயராமல் காத்திருக்கிற

காவலாளியாய் இருக்கலாம்..

வயிறுக்கும் மனதிற்கும்

யுத்தம் நடத்துகிற எட்டு மணி

நேர இயந்திரமாய் சுயம்

தொலைத்து உருமாறி

குடும்பத்தில் அமிழ்ந்து

போயிருக்கலாம்..

இயக்குனராகி சாதிப்பதாய்

எவனுக்கேனும் எடுபிடி வேலை

செய்து கொண்டிருக்கலாம்..

இப்போதும் கூட

ஒவ்வொரு முறையும் அனிச்சையாய்

நாக்கு கடிக்கையில்..

நீதான் என்னை நினைத்து கொள்கிறாய்

எனும் நம்பிக்கையோடு..

காற்றில் மிதக்கிற புகையாய்

கரைந்து கொண்டிருக்கிறேன்..

--------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

பின்னிரவில் திடுக்கென

விழிக்கும் நொடியில்

சாளரத்தின் ஊடே

பனிக்காற்றாய் நுழைகிறது உன் அணைப்பில்

ஆட்கொள்ளும் கதகதப்பு!

மரங்களில் நிறைந்திருக்கும்

பூக்கள் உன் அனிச்சப்புன்னகையை

நினைவுபடுத்துகிறது

பனிநிரப்பிய அரவமற்ற சாலையில் நடந்து வீடடையும் வரை

சலிக்காமல் இடைவெளியற்ற உன்

பேச்சுக்கள் துணை...

எப்போதாவது அடிக்கும் இள வெயில்

உன் செல்லக்கோபங்கள்..

பனிச்சில்லு மழைகள்

இனிப்பு தடவிய உன் அழுத்தமான

முத்தங்கள்..

கையை சுட்டுக்கொண்டு

தேநீர் கலக்குகையில் உன்

பரிதவிப்பும்..

குடிக்கையில் இடைஇடையே

நமக்கான பகிர்தலும்..

எவன் சொன்னது..

வேறு கண்டம் இடம் பெயர்ந்த

நான் தனிமையில் இருக்கிறேன்

என்று..

--------------------------------------------------------------------------

இலக்கு தவறாமல் குறி

வைத்து..

மிக சரியாக கற்கள் வீசி

புறாக்களின் கால்களை

பழுதாக்கி‌...

படபடவென கூட்டமாய் பயந்து

பறப்பதை மொட்டை மாடியில்

கைதட்டலோடு குதித்து

ரசிக்கிற சிறுவர்களுக்கு

ஒரே ஒரு முறை தானியங்கள்

வைக்க கற்று கொடுத்தேன்..

இப்போதெல்லாம் புறாக்கள்

பயத்தில் படபடக்கும்

சத்தம் கேட்பதேயில்லை...

---------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

ஏறக்குறைய மாலையிலிருந்து

அலைகளை துரத்தி

அம்முக்குட்டியும்

அவளை விடாமல் துரத்தி

அலைகளும் விளையாடிக்கொண்டிருந்தன..

ஒவ்வொருமுறை வென்றுவிட்டதாய்

துள்ளி கைதட்டி சிரித்தாள்..

விட்டுக்கொடுத்த கடல் வேடிக்கை

பார்த்தது..

அவள் போய் வெகுநேரம் கழித்தும்...

சலிக்காமல் அலைகள்

தேடிக்கொண்டே இருக்கின்றன.

கட்டிய மணல் வீட்டின் பக்கத்தில்

----------------------------------------------------------------

கடைசி நிமிடத்தில்

ஆள் குறைகிறதென..

தேவதைகள் நடனத்திற்கு

நிறம் காட்டி ஒதுக்கிய அம்முக்குட்டியை

ஆசிரியர் ஆண்டுவிழாவிற்கு

மேடை ஏற்ற வேண்டி வந்தது.

அம்முக்குட்டியின் ஆட்டம் பார்த்து

அரங்கம் அதிர ஆசிரியைக்கு

புரிந்தது திறமைக்கு

நிறம் தடையில்லையென..

ஆ..வென ஓடிச்சென்று

ஆசிரியருக்கு முத்தங்கள்

பொழிந்ததில் புரிந்தது..

எல்லா நிற தேவதைகளும்

அன்பு பொதுமறையென்று..

----------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

நகர்கிற ரயிலின் அதிர்வுகள்

பல்வேறு இசைக்குறிப்புக்கள்

வாசிக்கின்றன..

எட்டு மாதக்குழந்தையின்

நடுநிசி வீறிடலில்..

சலிப்பின் இருப்புகளற்று

குளிர்கிறது குழந்தைக்கு என

காற்றாடியை அணைக்கிறாள்

கீழ்ப்படுக்கை பெண்ணொருத்தி

தயக்கம் அணிந்த முதியவர்

கேட்காமலே தன்

கீழ்படுக்கை கொடுத்து

மேல் நகர்கிறான் பேரன்

வயது இளைஞன்

அமர்கிற இருக்கையில்

நெளிந்தும் சுருண்டும் படுத்தாலும்

பரஸ்பரம்கால்படவில்லையென

உறதி செய்து கொண்டது

சக மனித மரியாதை..

விடிந்ததும் கனம் நிரம்பிய

பைகள் இறக்குவதற்கு

சங்கிலியாகின வெவ்வேறு கைகள்..

முகம் மறந்து அவரவர்கள் நகர்ந்து

விட்டனர் நின்று விட்டது ரயில்..

இப்போதும் நிற்காமல்

இசைக்குறிப்புக்கள் மட்டும்

கேட்டு கொண்டே இருக்கின்றன

---------------------------------------------------

View

மாதாந்திர பரிசு

ப்ரியா ரஞ்சன்

View

மாதாந்திர பரிசு

கவி ரகுமான்

View

மாதாந்திர பரிசு

விஜி கல்யாணி

View

மாதாந்திர பரிசு

அறிவுச் செல்வன்

View

மாதாந்திர பரிசு

வி.அபிவர்ணா

View

கவிச்சுடர் விருது

கருவை ந.ஸ்டாலின்

ந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை கவிஞர்  கருவை ந.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.

 

கரூர் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர்   கல்விப்புலம் சார்ந்து தமிழ்மீதான தன் ஆர்வத்தைச் செறிவு படுத்திக் கொள்வதற்காக, இளங்கலைத் தமிழ் இலக்கியம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களை கரூர் அரசு கலைக்கல்லூரியிலும், முதுநிலைத் தமிழ் இலக்கியத்தை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர்.

 

கவிதைப் புலத்தில் நவீனக் கவிதைகளின்மீது கொண்ட ஆர்வத்தினால் தற்போது கரூர் அரசு கலைக்கல்லூரியில் ‘நவீனக் கவிதை இலக்கியத்தில் வாழ்வியல் கூறுகள்’ என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வையும்  மேற்கொண்டு வருகிறார்

 

நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில் அளவிலான கவிதைப்போட்டிகளில் பங்கேற்று மாவட்ட, மாநில அளவில் பல பரிசுகளைப் பெற்றுள்ள கவிஞர் தொடர்ச்சியாக, பல்வேறு கவியரங்குகளில் பாடி பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தனிநபர் சொற்பொழிவு, பட்டிமன்றப் பேச்சு, கவியரங்க நடுவர் பொறுப்பு, அகில இந்திய வானொலி நிலையத்தில் கவிதை குறித்த உரையாடல்கள் எனப் பல்வேறு களங்களிலும்  தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது கவிஞரின் சிறப்பு.

 

தனது கவிதைக் கருத்தியலின் முதல் முயற்சியாக ‘பெருந்துணைத் தேறல்’ என்ற பெயரில் நவீனக் கவிதை நூல் ஒன்றை தான் செயல்படுத்திவரும் ஆதன் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் நக்கீரன் இதழ் தேசிய அளவில் நடத்திய மாணவக் கவிஞர் போட்டியில் தலைசிறந்த முதன்மைப் பத்து நபர்களில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு நட்சத்திரக் கவிஞர் என்ற விருதையும் அவரது கரங்களால் பெற்றுள்ளார்.

 

நச்செள்ளை தமிழ்ப்பேராயம் என்ற ஓர் அமைப்பை நிறுவி, அதன் மையப் பொறுப்பாளராக இருந்து கொண்டு  அதன் வழியாக இதுவரை யாரும் முன்னெடுக்காத எந்நாளும் இன்றியமையாத பல தமிழ்ச் செயல்பாடுகளைக் களப்பணியாக ஆற்றி வரும் கவிஞர் பல விருதுகளையும் பெற்றவர் என்பது தமிழுக்கு மரியாதை.

 

கவிஞர் கருவை .ஸ்டாலின் அவர்களுக்கு இவ்விருது மேலும் பல சிறப்புகளையும் உயர்வுகளையும் அவரிடம் கொண்டு சேர்க்கும் என்பது உறுதி.

 

இனி கவிஞரின் சில கவிதைகளைக் காண்போம்.

 

 

நால்வழி சாலையின் தோற்றம் ஒரு சிலுவையின் குறியீடு என்பதில் தொடங்கும் இக் கவிதை அதற்குள் அபகரிக்கப் பட்ட நிலங்களின் கதறலும், வெட்டப்பட்ட மரங்களின் உதிரமும் சொல்லாமல் சொல்லப்படும் பொருளின்  நுட்பத்தை தாங்கிக் கொள்கிறது..  விழுந்து கிடப்பது  மரம் என்றாலும் அடர் கிளைகளுடன் பறவைகளின் இசையைக் கேட்டு அது வளர்ந்திருக்கும்.  அம் மரம் ஊர்வன, சார்வனவுடனும்  விளையாடி மகிழ்ந்திருக்கும்…  அதனால்தான் அது விழுந்து கிடக்கும் அக்காட்சியை கரம் விரித்த சடலத்தின் நிலை என்கிறார் கவிஞர்

 

 

குறியீடல்ல சிலுவைகள்*

 

இந்தத் தெருவின் சாலை

வடிவமும்

ஒத்துப்போகும்,

 

உருவாவதற்கு முன்பு

குறுக்கும் நெடுக்குமாக

பின்னிப் பிணைந்திருந்தது

அம்மரத்தின் கிளைகள்,

 

இடது பக்கமாக குருதி

ஒழுகவொழுகக் கிடக்கும்

சடலத்தின்

கரம் விரிந்த நிலை,

 

நேர்கோட்டில் தவழும்

நதிகளின் இடையில்

கல்லெறியும்

சிறுவனின் வீச்சு,

 

எல்லா நிலைகளிலும்

வாங்கிய பாவங்களை

ஏற்கனவே

சுமந்து கொண்டு இருக்கும்

சிலுவைக்கு

எதற்கு இன்னொரு சுமை,

 

இறக்கி வையுங்கள்

அவரை,

கொஞ்சம் சிலுவையின்

பாவத்தையும்

சேர்த்தே மன்னித்து...

 

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது விவாத பொருளாகவே இருந்து விட்டு போகட்டும். ஒருவேளை கடவுள் என்பவர்  இருந்தால் அவர் மன நிலை இப்போது எப்படி இருக்கும்என்பதுதான் இக்கவிதையின் மாயத் தோற்றம்.

 

 

தியானத்தில் அமர்ந்தேன்

தலையை வெட்டி

இடம் மாறச் செய்து

விகார விந்தையாக்கினீர்

 

கிறக்கத்தில் கிடந்தேன்

பாம்பை தலையில் சுற்றிவிட்டு

பாற்கடலில் புதைத்துவிட்டீர்

 

யாரோ

செய்த லீலைகளுக்கெல்லாம்

செயப்படு பொருளாக்கினீர்

 

சமாதியில் பூத்த எருக்களைக்கு

ஞானப்பூவென்று

பெயர் சூட்டினீர்

 

இப்போதாவது....?

இல்லை

எப்போதும் இல்லை

 

என்னால் வாழும் உங்களை

எப்படி வெறுக்க முடியும்

உங்களால் மடிந்த

என்னால்...

 

 

காதலின் பிரிவை முகாரி, அம்சவர்த்தினி இராகங்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிறது கவிதைஒரு சொல் உடைத்திருக்கலாம் இதயத்தைபெரும் மழை என்பது துயரத்தின் குறியீடாகிறது. கடல் என்பது மனம். இன்று அது பொங்கியெழலாம்நாளை தூவானம் தூறி சில்லிட்டுக் காதலை ஆனந்த பைரவியால் அலையாட்டலாம்

 

நீயும் நானும்

பிரிந்த தக்க தருணத்தில்

சொல்லிக்கொள்ளாமல் வந்த பெருமழையொன்று

கடற்கரையில்

எழுதிவைத்த பெயர்களை

தின்றதோ விழுங்கியதோ

சாட்சியங்களை

சரித்துவிட்டதாய் பரிகசித்த வான்

அழுகிறதா நகைக்கிறதா

என்பதறியாமல்

முகாரியையும் அமிர்தவர்சினியையும்

உளரும் கடலலை

வானுக்கும் மண்ணுக்கும்

இடையில் தான்

நிற்கிறது

காதல்.

 

உனக்கும் எனக்கும் என்பது இக்கவிதையின் பொருள்பாட்டில் எனக்கும் எனக்கும் என்பதேயாம். குழம்புவது மனம்குழப்புவது செயல்மௌனத்தின் உரையாடல் இங்கு அவசியமாகிறது. தெளிதல் பிறக்கும் வரை தேவை பெருங்கதையாடலின்  த்யான உச்சம்தெளிதல் யாரும் நினைப்பது போல் அத்துணை எளிதல்ல….

 

உனக்கும்

எனக்குமிடையே

என்ன இருக்கிறது

 

இப்படி கதைக்கிறோம்

இப்படி பிதற்றுகிறோம்

இப்படி உளறுகிறோம்

 

சிரிப்பதை குறைத்து - கொஞ்சம் மௌனித்து

இரு

 

இங்குதான்

தொடங்கப்பட்டது

உனக்கும்

எனக்குமான மெல்லுரையாடல்

 

ஆத்மாவின் 

பரிசுத்தமான வேலையென்பது

 

பேரன்பித்துத் திரிவது

பேசச் செய்வது

புட்டியொன்றினை

கையில் கொடுத்து

குமட்ட குமட்ட உள்ளிறங்க வைப்பது

 

தெளிதல்

யாவர்க்கும்

எளியதொன்றில்லை

 

தெளிந்து தெளிந்து

குழப்பும்

இவ்வீணையின் நரம்பிழையில்

ஒன்றினை

பலவந்தமாய் பிடுங்கி

சொருகிக்கொள்

உனது

செவியில்...!

 

இன்னுமிருக்கிறது

ஏதோ மிச்சம்,

 

வா !

பெருங்கதையாடுவோம்...

 

தெளிதல்

யாவர்க்கும்

எளியதொன்றில்லை...!

 

சுத்தமானவர்கள் கல்லெறியுங்கள் என்பது போல்தான் இக் கவிதை. புனித நூலொன்றைப்  புரட்டிப் பார்ப்பது அழுக்குக் கரங்கள் என்பதோடு நிறுத்திக் கொள்ளும் கவிதைபார்க்கும் விழிகள் பரவசம் வாங்கி அகவழுக்கைக் கழுவிக் கொண்டால் புனித நூல் அன்றுதான்  புனிதம் ஆகலாம்  என்பதையும் மறை பொருளாக கோடு போட்டு காட்டுகிறது.

 

 

புனித நூலென

நீங்கள் மதிக்கும்

ஒவ்வொரு பக்கத்தையும்

புரட்டிப்பார்க்கிறது

அழுக்குப்படிந்த கரங்கள்...!

 

கவிஞரின் மற்றும் சில கவிதைகள்:

 

 

பிரேத மனிதனிடம்

கொஞ்சம்

கதைக்கலாம் என்று இருக்கிறேன்

 

கைகால்கள் சுருக்கப்பட்டு

குருதியுறைந்து

வெள்ளுடை தரித்தவனிடம்

சொல்வதை கேட்கும்

திறனிருக்குமா ?

 

கேட்டுவிட்டு

பதிலுரைப்பானா ?

 

தெரியாது

தெரியவே தெரியாது

 

கையில் அவனுக்கு பிடித்த

தேநீர் இருக்கிறது

குடித்துமுடிப்பதற்குள்

கடந்துவிடவேண்டும்

இவ்வறையை விட்டு.....!

 

********                     

 

ஓய்வெடுத்துக்கொள்கிறது

இப்பிரபஞ்சம்

கொடுப்பதிலும் பெறுவதிலும்

நிறைத்துக்கொள்ளும் பேரன்பில்

சிற்சில வலிகளையும்

பரந்துபட்ட மனங்களில்

பாவப்பட்ட சுவடுகளையும்

வித்தியாசமான நேரங்களின்

விசித்திரமான நாட்களிலும் 

இவளிருக்கிறாள்

என்கிற ஒற்றைப்புரிதலோடு...!

 

*********         

 

பொய்க்கால் ஆட்டம்

உண்மையாகவே ஆடுகிறது

பசி.

 

 

*******

 

தொடுதிரைக்குப்  பின்னிருந்து

காலாட்சேபம் செய்யும்

நகலெடுத்துவைத்த

கோப்புகள்

எப்படியும் எப்படியாகவும் அழவைத்துவிடுகிறது

குளோனிங் முறையில் தரம்பிரிக்கப்பட்ட

போதனைக்கட்டிகளை

உண்ணும் பட்சிகளே

அசலையும் கொஞ்சம் இரட்சியும்.....!

 

 **********                            

 

தின்று ஏப்பமிட்டு

தூக்கியெறியப்பட்ட

விதையின் நிழலில்

சிறிது ஓய்வெடுக்கவும் நேரிடலாம்

எந்நாளிலோ ஒருகணம்...!

 

*********   

 

*குப்பனின் குடல்...*

 

தெருக்களில் உள்ள

அந்த நூறு வீட்டின் கழிவுகளும்

இங்கேதான் குடியிருக்கின்றன

சாஷ்டாங்கமாக மஞ்சத்தில்

படுத்துறங்கிக்கொண்டிருக்கும் கழிவுகளோடு

அவ்வப்போது புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்துகொண்டேயிருக்கிறது

தனக்கே உரித்தான நாற்றத்தை

அள்ளிவீசி

டெங்குவையும் மலேரியாவையும் சிவப்புக்கம்பளமிட்டு வரவேற்கத் தயாராயிருந்தது

பரந்துபட்ட குப்பைகள்

பட்டவனுக்கு படையல்

போட்ட எச்சில் இலையை மோப்பமிட்டமடி திரியும் பெட்டை நாயும் அதன் பெருந்துணையும்,

நெகிழியின் ஊர்த்துவதாண்டவத்தை ஒரு இடுக்கியின் மூலம் மூட்டை கட்டுகிறான் துப்புரவு தொழிலாளன்.

இப்படியாக

குன்றென நிமிர்ந்து நிற்கும்

குப்பைகளை களையெடுத்துக்கொண்டிருக்கிறான்

குப்பன்

தனக்கான ஒரு கவளம் எங்கேனும் தட்டுப்படுமா என்று...!

 

*********

  

இப்பேற்பட்ட

இந்தவகையான 

இனிப்பை

இப்படித்தான் சுவைக்கவேண்டும்

உயர்தர பேக்கரிக்குள்

உருண்டுகொண்டிருந்தது

பண்டங்கள்

இது கடிக்க இது நக்கிட

இது மென்றிட

பட்டியல் நீண்டுகொண்டிருந்த கொள்கலனில்

மிச்சத்தை கையிலெடுத்த

கரமொன்று

தட்டுக்கும் வாயுக்குமான குறுவெளியில்

இது பசிக்கு புசிக்க

தடாலென உமிழ்நீருக்குள்

மூழ்கி

இன்னுயிர் நீத்தது

அடுத்த மரணத்திற்கு

நேரம் குறித்துக்கொண்டிருந்தான்  கடைவாயிலில்

பசியோடு ஒருவன்...!

 

**********

 

எதிர்வரும் காலம் கணித்து

ஒவ்வொரு முறையும்

நல்லதொரு

பக்கங்களை

கிழித்தெறிகிறீர்கள்

பிறகு

ஒவ்வொரு கிழிந்த தாளையும்

சிற்சில பிசின் சேர்த்து

ஒட்டவைக்க முயல்கிறீர்கள்

எத்தனை வண்ணங்கள்

எத்தனை சத்தங்கள்

கிழிந்து கலந்திருக்கக்கூடும்

அக்கணம்

இறந்தவை

அப்படியே சென்று தொலையட்டும்

கையில் மீண்டுமொரு

புத்தகம் இருக்கிறது

படிப்பதிலும் கிழிப்பதிலும்

 இருக்கிறது

உங்களின் சுயவிசாரணை.

 

*********                     

 

பக்குவமாய் பதப்படுத்தப்பட்ட

சடலங்களை

ருசிபார்த்துக்கொண்டிருக்கிறேன் 

பொரித்தெடுக்கப்பட்ட வானலியில்

ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கும்

துணுக்குகளில்

பொறாமை சற்று தூக்கலாகவும்,

அரைவேக்காட்டில்

ஆணவம் கொஞ்சம் காரசாரத்துடன் மிஞ்சியேயிருக்கின்றன

உதிரியுதிரியாயிருக்கும் அப்பண்டங்களில்

உப்புசப்பற்றுக்கிடக்கும் ஆசைகள்

கொதிக்கும் சினக்குளத்தில் மூழ்கி

எழுகின்றன,

தீர்க்கப்படாத தருக்கத்தில்

தீக்குளிக்கப்பட்ட வல்லமை

தீயாத வண்ணம்

விரிக்கப்பட்ட வாழ்க்கையிலையில்

அடுக்கிவைக்கப்பட்ட யாவையுமே

ருசிபார்த்துக்கொண்டிருக்கிறேன்

கௌரவத்தினால் வெட்டுண்ட மென்நாவினால்...

 

*********

 

அங்கே கேட்பது

மியாவ் மியாவ் சத்தம் தானே

உங்களுக்கு அது நாயின் குரைத்தலாகவும்

மரண விளிம்பிலுள்ள ஆட்டின்

மேவாகவும் கூட இருக்கலாம்

 

எனக்கு அது

என்னைத் தொலைத்துவிட்டு போன

பூனைக்குட்டியின் மியாவ் மியாவ் சத்தம் தான்

 

கொஞ்சம் பொறுமையாக இருங்கள்

தொலைந்து போன நினைவுகளின் சத்தமாக

என் மனதில் வருடியது போக  என்னமோ தெரியவில்லை இப்போது காதிலும் வருடத் தொடங்கியிருக்கிறது

அந்த மியாவ் மியாவ் சத்தம்

 

என்னை களவாண்டு சென்றவரை நான் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்

 

என்னை சந்திக்க வரும் யாரேனும்

வரும் வழியில் கண்டுபிடித்தால் சொல்லுங்கள்

 

பார்ப்பதற்கு பூனை போல் இருக்கும் பூனை தான் அது

 

நான்கு கால்களும்

ஒரு மூக்கில் இரு துவாரமும்

கொஞ்சம் தடித்த வாலும்

தொலைத்து விட்டுப் போன காதல் குழைக்கப்பட்ட கண்களும் தான் அது தனித்த அடையாளம்

 

மீண்டும் நீள்மௌனம்

 

மெல்லியதாக கேட்கிறது

அதே மியாவ் மியாவ் சத்தம்...

 

*********

 

குளித்து முடித்து

தலை துவட்டுகையில்

நித்தியமாய் ஒட்டிக் கொண்டிருந்தது

அம்மாவின் கைமணம்.

 

 

******

 

 

கூற்றுவனின் பாசக்கயிறு

சுழன்றபடியே சுற்றும் பிரபஞ்சம்

சந்துபொந்துகளோ

சாக்கடை எச்சங்களோ

மிச்சங்களை கழுவியூத்தவும் ஏதுமில்லை.

கஞ்சிப்பொங்கிடாத இவ்வீட்டில்,

இருந்து கரைந்ததும்

கொடுத்தது தொலைந்ததும் சொற்பநாளிலே !

சொச்சத்தில் மீண்டது ஏதோ சொச்சம்

மாற்றுமுறை மய்யம் கொண்டதில்

வரவாய் சில காய்ந்த கோதுமைவுடல்கள்,

கணக்கதிகாரம் வகுத்த சூந்திரம் பங்கிடாய் விழுந்தது

உடல்சூம்பிக்கிடக்கும் தெருநாய்களுக்கும்

சில ரொட்டிகள்.

 

********

 

தொடர்ச்சியாக

அடுக்கப்பட்ட நிலைப்பாடுகள்

பலவும்

தொடர்புடையவனிடம்

போகிற போக்கிலாவது

சென்றெட்டுமா எனும்

கவலையில்லை

மனதோடு சிலாகித்திடும் இவர்களுக்கு....

 

********

 

மிருதிகளை அப்படியே

நகலெடுக்கத் தெரிந்த தேகியே யாக்கையின்

எந்திரக்கோளாறின் கக்குதலில்

மவுனம்

சில நேரம் சில பொழுது வெள்ளையையும் கருப்புகளையும் உமிழ்ந்துவிடுகிறது துடைத்தெறியப்பட்ட துகில்

ஓட்டியிருந்த கரி

அப்படியெனில்

தேகி!

நான் என் முகம்

கதம்பம்..

 

********

 

இவ்வளவு இறுக்கமாக

பிடித்துக்கொள்ள வேண்டிய

எந்தக் கட்டாயமுமில்லை

விட்டெறியுங்கள்

அல்லது விட்டொழியுங்கள்

அது உங்களுக்கு பாரமாகவுமிருக்கலாம்

கூடவே

எனக்கு அது தேவையாகவும்.

 

*கருவை ந.ஸ்டாலின்*

View

மாதாந்திர பரிசு

கலைச்செல்வி

View

மாதாந்திர பரிசு

கோவை புதியவன்

View

மாதாந்திர பரிசு

இனியவன் காளிதாஸ்

View

மாதாந்திர பரிசு

தமிழ்ச்செல்வன்

View

மாதாந்திர பரிசு

லோக சுந்தரம்

View

மாதாந்திர பரிசு

த. ரவீந்திரன்

View

மாதாந்திர பரிசு

வம்சி ராஜன்

View

கவிச்சுடர் விருது

செ.வீரமணி

 

இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை  கவிஞர் செ.வீரமணி அவர்களுக்கு அளிப்பதில் பெருமைக் கொள்கிறோம்.  சென்னையில் வசிக்கும் கவிஞர்,.  அடையாறு அரசு நெசவுத்தொழில் நுட்பக்கல்லூரியில் பயின்றவர் . ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்துகொண்டிருக்கிறார். இவருடைய கவிதைகள் குமுதம் தீராநதி ,  இனிய உதயம் , படைப்பு கல்வெட்டு , தகவு மற்றும் கதிர்'ஸ் கவிமாடம் போன்ற பல இதழ்களில் வெளி வந்திருக்கின்றன. நமது . படைப்பு குழுமத்தின் மாதாந்திர சிறந்த படைப்பாளராகவும் இரு முறை தேர்வு செய்யப்பட்டவர் 

 

இவருடைய முதல் கவிதை தொகுப்பு " துளி அன்பு சிறு நேசம் கொஞ்சம் காதல் " கடந்த ஆண்டு எழிலினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது . பரவலாக வாசிக்கப்பட்டு நல்ல வரவேற்பைப்பெற்ற இந்த தொகுப்பு 'தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை' யின் அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருதும் பெற்றிருக்கிறது .

 

இனி கவிஞரின் சில கவிதைகளைக் காண்போம்:

 

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்து உற்சவம் எடுத்து கொண்டாடும் அழகை மிகச் சிறப்பாக எடுத்து வைக்கும் கவிஞர், இவ்வளவு செய்தும் இந்த மக்கள் காட்டும் விசுவாசம் கொஞ்சம் கூட இந்த கடவுள்களுக்கு இல்லையே என்ற  பொருமல் பகுத்தறிவுச் சிந்தையுடன் இந்தக் கவிதையை மேலும்  அழகு செய்கிறது….

 

அரச மரம்

குளத்தங்கரைனு

அம்போனு

கெடந்தவருக்கு

கோயில கட்டி

பெத்த புள்ளையாட்டம் பார்த்துகிட்டோம்

 

கோச்சுகிட்டு போய்

கோவணத்தோட

நின்ன தம்பிக்கும்

ஆறுபடைவீடு கட்டி

அழகு பார்த்தோம்

 

காட்லயும் மேட்லயும்

கஷ்டப்பட்ட

இன்னொரு

அய்யனுக்கும்

கிரானைட்ல

கோயில் கட்டி

ஏசி கூட போட்டு

வச்சோம்

 

மண்டை ஓடு

மயானம்னு

சுத்திகிட்டு திரிஞ்ச

அப்பனுக்கு

பெரிய பெரிய

கோயில கட்டி

குடிவச்சோம்

 

பாம்பு படுக்கைனு

சமனில்லாம

ஆடிக்கிட்டு கிடந்த

மாமனுக்கு 

ஊஞ்சல் சேவை

உற்சவம்னு

நிறைய

பண்ணியிருக்கோம்

 

தங்க கிரீடம் 

வைர மூக்குத்தி

பச்சை பட்டு

பவள மாலைன்னு

ஆத்தாளுக்கு

பண்ணதெல்லாம்

சொல்லி மாளாது

 

வேளாவேளைக்கு

ஆகாரம்

அழகழகா அலங்காரம்

வருசம் ரெண்டு திருவிழா

காவலுக்கு

காம்பவுண்டு

சுத்தி நாலு கேமரானு

எவ்வளவோ

செஞ்சோம்

 

எங்கப்பே போனீங்க

எல்லாரும்

 

நன்றியெல்லாம்

மனுசங்களுக்கு

மட்டுந்தானா

 

படிமங்களும், உத்திகளும், குறியீடுகளும் அறிந்திடாமல் இருந்த அந்த நாளில் தன்னிடம் ஒரு கவிதை இருந்ததாக தொடங்கும் கவிஞர்,  எவையெல்லாம் மகிழ்விற்கென்று மாற்றத் தொடங்கினோமோ அன்றே ஒவ்வொன்றாக நம்மை விட்டு அவைக்  கழன்று கொண்டதாக பெரும் உண்மையை வெளிச்சம் போட்டுக்  காட்டுகிறார். கவிஞரின் சொல்லாட்சியில் சொல்ல வேண்டும் என்றால் , இப்போது படிமம் இருக்கிறது, உத்தி இருக்கிறது, குறியீடு இருக்கிறது ஆனால்; கவிதை மட்டும் கிடைக்கவில்லை.

 

படிமங்களும்

குறியீடுகளும்

உத்திகளும் 

அறிந்திராத

நாட்களில்

என்னிடம்

ஒரு கவிதை இருந்தது

 

நிலவும்

நட்சத்திரங்களும்

வானமும்

வசப்படுவதற்கு முன்

குளிர்ந்த இரவும்

சில கனவுகளும்

இருந்தன

 

ஓயாமல் சுழல்கிற

சக்கரங்கள்

வாய்க்கப்பெறுவதற்கு முன்

பாதங்களால்

உரையாடிக்கொண்டு

பயணித்த

அழகிய பாதைகள்

இருந்தன

 

வீடென ஒன்றை

மதிலெழுப்பி 

சிறை வைத்துக்

கொள்வதற்கு முன்

உதைத்து விளையாட

ஒரு பூமிப்பந்திருந்தது

 

அமரவும்

உண்ணவும்

உறங்கவும்

கொல்லப்பட்ட மரங்கள்

வந்து சேர்வதற்கு முன்

சிறு தோட்டமும்

நிறைய பறவைகளும்

அவற்றின்

பாடல்களும் இருந்தன

 

ஏதுமற்ற உச்சிக்கே

ஏங்கித்தவிக்கிறது

மீச்சிறு இதயம்

 

இட்டு நிரப்ப

தேவையெல்லாம்

இலவசமாய் கிடைக்கிற

துளி அன்பும்

சிறு நேசமும்

கொஞ்சம் காதலும்

 

காதலின் நிலைகளை கவிதைகளின் தன்மைகளாக மாற்றியெழுதுகிறார் கவிஞர்எவ்வளவு இடர்களை எழுதும் கவிஞன் என்றாலும், அவனுக்குள் பூக்கும் அந்தக்  காதல் அத்துணை அழகானது.  மரபுக் காதலுக்கு சீர் அடி, தளை எதுவும் இல்லையென்பதே கவிதையின் பெரும் அழகு

 

உன் முந்தானையின்

கொடியில் 

பூக்கிறது

என் கவிதை

தலைப்பு

 

உன் காதணிகளின்

கொஞ்சலில் பிறக்கின்றன

உவமை அணியும்

உருவக அணியும்

 

அன்பில் தொடங்கி

அன்பில் முடிந்து

அன்பில் தொடர்கிறது

நம் அந்தாதிகள்

 

புதுக்கவிதையாய்

புலரும் பொழுதுகளை

கசல் கவிதைகளாய்

முடித்துவைக்கிறது

உன் காதல்

 

குறுங்கவிதையைப்போல் எட்டிப்பார்க்கும் என்

கோபங்களை

ஆற்றுப்படுத்துகிறது

நெடுங்கவிதைகளான

உன் நேசங்கள்

 

கன்னத்தில்

பதிக்கும்

ஹைக்கூ கவிதைகளில்

நிரம்பி வழிகிறது

உன் அன்பு

 

எதுகை மோனை

சீர் தளை அடி என

ஏதுமில்லாதது

நம் மரபுக்காதல்

 

வல்லினத்தை

இடையினத்தால்

வீழ்த்தும் மெல்லினத்தின்

பிரியங்களால்

நிரப்பப்பட்டிருக்கின்றன

நம் கவிதை

தொகுப்புகள்

 

சம்பிரதாயங்களின்  இலட்சணங்களோடு  தெயவதங்களுக்காக  இயற்றப்பட்ட ஸ்லோகங்கள், பாடல்களோடு அறுசுவைப் பதார்த்தங்கள் சமைக்கப் பட்டாலும்,  தன் கரகரக் குரலில் சுதிலயம் இல்லாமல் கூப்பிடும் கா…கா…காஎன்ற  பாட்டுக்குதான் காக்கை  வடிவில் கடவுள் வருவதாக  சொல்லும் இந்த கவிதை எளிமையான சொல்லாடலில்  பகுத்தறிவு பகல்.

 

சுப்ரபாதத்தோடு

காய்ச்சப்படுகிறது

பால்

 

ஆதித்ய ஹ்ருதயத்தோடு

தயாராகிறது சாதம்

 

சௌந்தர்ய லஹரியில்

நறுக்கப்படுகிறது

காய்கறிகள் 

 

அபிராமி அந்தாதியில்

செய்து முடிக்கப்படுகிறது

பச்சடியும் பாயசமும்

 

சியாமளா தண்டகத்தில்

சுட்டெடுக்கப்படுகிறது

மெது வடை

 

லலிதா ஸஹஸ்ரநாமத்தில்

பொறித்தெடுக்கப்படுகிறது

அப்பளமும் அதிரசமும்

 

காயத்ரி மந்திரத்தோடு

படைக்கப்படுகிறது

நைவேத்யம்

 

எதையும் அறிந்திராத

என் கரகர

கா...கா..கா..கா...

குரலுக்கு மட்டுமே

கடவுள் வருகிறார்

இன்றைய வாழ்க்கையின் அவலம் அரசியல் சூழ்ச்சிகளால் நிரம்பியது.  தாங்கும் சக்தி குறையும் போது மன உறுதியும் குலைந்து விடுகிறது. எரியும் நிழலுக்குள் நின்று எப்படிக் குளிர் காய்வது? கவிஞரின் மேம்பட்ட கோபமாக இந்த வரிகளை முன்னெடுக்கலாம். “ மழிப்பதற்குக் காசில்லாமல்தான் மண்டிக்கிடக்கிறது குறியீடுகள் ஏதுமறியாத எங்கள் மயிர்

 

 

கொதிக்கிற

சோற்றுப்பானையின்

நெஞ்சில்

நெருப்பு வைக்கிறது

விலையேறி

கனக்கிற

எரிவாயு உருளை

 

வழக்கம்போல்

பிரசங்கம் மட்டுமே

செய்து கொண்டிருக்கிறது

வலியேதுமறியாமல்

ஃபிரிட்ஜில்

வாழ்கிற ஆப்பிள்

 

எரிபொருள் தீர்ந்துபோன வாகனங்களை

டோல் கேட்டில்

கூடுதல் பணம் கட்டி

தள்ளிக்கொண்டு

போகிறோம்

ஏளனமாய் சிரிக்கின்றன

தேசிய நெடுஞ்சாலையின்

மைல் கற்கள்

 

டிஜிடலில்

ஒளிர்கிறது

அன்னை தேசம்

நாங்கள்

அழுகிற பிள்ளைக்கு

பால் வாங்க முடியாமல்

ஜி பே வில்

கடன் வாங்கி கழிக்கிறோம்

 

கொடிமரங்களின்

நிழலில் வளரமுடியாமல்

போன்சாய் மரங்களைப்போல் சூம்பிக்கிடக்கிறது

வாழ்க்கை

 

மழிப்பதற்கு

காசில்லாமல்தான்

மண்டிக்கிடக்கிறது

குறியீடுகள்

ஏதுமறியாத

எங்கள் மயிர்

 

பட்டினியைத்தவிர

அத்தனைக்கும்

போடப்படுகிறது வரி

 

இறகுகளை கொய்து

சிறகுகளால்

கட்டித்தரப்படுகிறது

எங்களுக்கான

வண்ணக்கூடுகள்

 

ஒரு கன்னத்து

அறையிலேயே

உணர்விழந்த பின்னும்

மறு கன்னத்திலும்

அறைந்து

சிலுவையிலும்

அறைந்து விட்டுப்போகிறது அச்சேதி

குறுங்கவிதைகளிலும்  கவிஞரின் சொல்லடர்த்தி சிறப்பாகவே இருக்கின்றன. கவிஞரின் இன்னம் சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு…..

 

 விரும்பி அமர்கிற

பறவைக்கு

கிளையின் முட்கள்

பொருட்டில்லை

 

தாங்கிப்பிடிக்கிற

சிறு கிளைக்கு

பறவையின் எடை

ஒரு பாரமில்லை

 

நீ பறவை

நான் கிளை

 

பிறந்த ஊரிலிருந்து

மண்ணெடுத்து

தொட்டிச்செடி வளர்த்தேன்

மலர்ந்த பூக்களில்

எல்லாம்

தாய்ப்பாலின் வாசம்

 

உன்னைப்போல்

ஒரு நதியும்

என்னைப்போல்

ஒரு கடலும்

நம்மைப்போல்

ஒரு அலையாகி

புரள்கிறது

 

உன்னைப்போல்

ஒரு நிலவும்

என்னைப்போல்

ஒரு இரவும்

நம்மைப்போல்

ஒரு வானாகி

விரிகிறது

 

உன்னைப்போல்

ஒரு இசையும்

என்னைப்போல்

ஒரு மொழியும்

நம்மைப்போல்

ஒரு பாடலாகி

ஒலிக்கிறது

 

உன்னைப்போல்

ஒரு பூவும்

என்னைப்போல்

ஒரு காற்றும்

நம்மைப்போல்

ஒரு சித்திரம்

வரைகிறது

 

உன்னைப்போல்

ஒரு உயிரும்

என்னைப்போல்

ஒரு உறவும்

நம்மைப்போல்

ஒரு காதலாகி

கனிகிறது

 

உன்னைப்போல்

ஒரு அழகும்

என்னைப்போல்

ஒரு தமிழும்

நம்மைப்போல்

ஒரு கவிதையாக

மலர்கிறது

 

பசித்திருந்தபோது

பாட்டி சுட்ட அப்பம்

 

விழித்திருந்தபோது

களிறொன்றின்

ஒளிரும் விழி

 

தனித்திருந்தபோது

காதலியின்

அழகிய முகம்

 

இயல்பில் இல்லாத

கவிதை கண்களுக்கு

எப்போதும் வாய்ப்பதில்லை

அழகிய நிலவு

 

வாழ்ந்தாலும்

தேய்ந்தாலும்

உச்சியிலேயே

நிற்கிறது

வெள்ளி நிலா !

 

நிலவு முத்தமிட்டும்

இயல்பில்

மாறவில்லை

தாழக்கிடக்கிற

உப்புக்கடல்

 

மதுரையை

எழுதத்தொடங்கினால்

தமிழை

எழுதச்சொல்லி

அடம்

பிடிக்கிறது கவிதை

 

நானில்லாத

கவிதையா என

வடம் பிடிக்கிறது

சித்திரைத்தேர்

 

இரண்டையும்

எழுதவிடாமல்

தானே

மதுரையென

குறுக்கே

பாய்கிறது வைகை

 

கள்ளழகர்

தன்னைத்தான்

எழுதவேண்டுமென

ஆற்றில் இறங்காமல்

அடம்பிடிக்கிறார்

 

மீனாட்சியும்

சுந்தரரும்

சித்திரை தேரில்

வலம் வருவதைவிடவும்

கவிதைத்தேரில்

உலா வரவே

விருப்பமென்கிறார்கள்

 

பொற்றாமரைக்கு

தண்ணீரில்

மிதப்பதைவிடவும்

தமிழில் மிதப்பதே

அலாதி பிரியமாம்

 

பண்டைய தீரமும்

பாண்டியர் வீரமும்

எங்களுக்கும்

இடம் ஒதுக்கென

மீன் கொடி பிடித்து

போராடுகிறார்கள்

 

சிலம்போங்கிய

கரங்களுடன்

என்னை

எழுதாவிட்டால்

எரித்துவிடுவேன்

என

எச்சரிக்கிறாள்

கண்ணகி

 

மக்கள் பிரதிநிதிகள்

நாங்களே என

மார்தட்டுகிறார்கள்

மல்லி மொட்டும்

ஜல்லிக்கட்டும்

 

அழகர் மலையும்

பழமுதிர்ச்சோலையும்

நாங்களும்

மதுரைதான் என

மனு கொடுக்கிறார்கள்

 

எதையும் எழுதாத

என் கவிதையின்

நினைவுகளில்

நிறைந்திருப்பது

பிட்டுக்கு சுமந்த

மண்ணில் பிறந்து

தரணியெல்லாம்

விளைந்திருக்கும்

தமிழ்தான்

 

காத்து இரட்சிப்பதாக

நம்பப்படுகிற

கருவறை சாமிகளுக்கே

வாய்க்கிறது

பட்டுத்துகிலும்

பாலும் தேனும்

 

கால்கடுக்க

காவலுக்கு நிற்கிற

வாயில் சிலைகளுக்கு

அருளப்படுவதேயில்லை

ஒட்டுத்துணியும்

ஒரு வாய் அன்னமும்

 

 ஊர் என்பது

அம்மாவின்

பாதம்பதிந்த மண்

உறவென்பது

அவளின் கையளவு இதயம்

 

அம்மா இருந்தவரை

ஊருக்கு வந்து போவது

ஒரு உற்சவம்போல் நடந்தேறும்

 

இன்று

கூடு திரும்பாத

தாய்ப்பறவைக்கு

ஏங்கித்தவிக்கும்

குஞ்சுக்குருவியைப்போல் துவண்டிருக்கிறேன்

அவள் இல்லாமல்

அடுத்தவர் வீடாகிப்போன

என் கூட்டுக்குள்

 

இந்த கூட்டுக்குள்தான்

என் சிறகுகள்

முளைத்தது

 

இந்த புழக்கடை

மாமரம்தான்

என் போதி மரம்

 

இந்த கிணறுதான்

என் ஜீவநதிகளின் ஊற்றுக்கண்

 

சாணத்தில் மூடி கூரையில் வீசிய பாற்பற்களும்

பால்யமும்

இந்த மண்ணில்தான்

புதைந்து கிடக்கிறது

 

முதல் காதலும்

முதல் கவிதையும்

இந்த காற்றில்தான்

கலந்திருக்கிறது

 

பொன்னியின் செல்வனோடும்

யவன ராணிகளோடும்

கதைகள் பேசி

களித்திருந்த கிணற்றடி

இன்று ஈரமில்லாமல்

வறண்டு கிடக்கிறது

 

துளசியும் செம்பருத்தியும்

சிரித்திருந்த முற்றம்

வெறுமையில் வாடிக்கிடக்கிறது

 

வாசலில் நிற்கின்ற

பூவரசின் நிழல்

குளுமையைத்தொலைத்து

படர்ந்திருக்கிறது

 

அம்மா இருந்தவரை

நலங்கு வைத்து

அலங்கரித்த

பெண்ணைப்போல் இருந்த வாசல்

இன்று அறுவடை முடிந்த வயலைப்போல்

வெறுமையாய்க்கிடக்கிறது

 

அம்மா

கூட்டிப்பெருக்கி

வாசல் தெளித்து

சாணம் மெழுகி

கோலமிடுவது

ஒரு ஜலதரங்க கச்சேரியும்

ஓரங்க நாடகமுமாய் அரங்கேறும்

 

ஒற்றை பார்வையாளனாய்

அருகிருந்து

ரசித்துக்கொண்டிருக்கும் என் கன்னத்தை வருடி எனக்கொரு

காகத்தை வரைந்து

அதன் வாயில்

வடையை சுழித்துவிட்டுப்போவாள் 

 

நான் காகத்தோடு

வானத்தில் எம்பிப்பறப்பேன்

 

கோலம் காகம்

வானம் வடையோடு

அம்மாவையும்

தின்று செரித்த

காலத்திற்கு

தாயுமில்லை ...!

தந்தையுமில்லை.

 

நித்யஸ்ரீ்யும்

அஃப்ரினும்

கரோலினும்

என்னுடைய மகள்கள்

 

சீதாராமனும்

முகம்மது ரஃபீக்கும்

ஜேம்சும்

எனது நண்பர்கள்

 

ராமரும்

ஜீசசும்

அல்லாவும்

என் கடவுள்கள்

 

காவியும்

வெண்மையும்

பச்சையும்

என் அன்பின்

வண்ணங்கள்

 

ஜெய் ஸ்ரீராம்

அல்லேலுயா

அல்லாஹு அக்பர்

 

 நேற்று

வாரித் தூற்றிவிட்டுப்போன

அதே காற்றுதான்

இன்று

என் தோட்டத்திற்கு

மழையை

அழைத்து

வந்திருக்கிறது

 

ட்எங்கப்பனுக்கு

கவிதை எழுத

தெரியாது

காதலிக்கத் தெரியாது

 

ஆனால்

எங்கம்மாக்கு

வேர்த்து வடிஞ்சா

வேட்டிய உருவி

குடுத்துட்டு

கோவணத்தோட

துண்டை தேடி

ஓடுவாரு

 

பாசம் வைக்கவும்

அன்பு காட்டவும்

எங்கப்பன் தான்

குரு எனக்கு

 

செத்துப்போன

ஆத்தாவைப் பத்தி

ஒரு கவிதை எழுதி

படிச்சு காட்டுனப்போ

மட்டும்

நாந்தான்

சாமி அவருக்கு

 

அழகாக இருந்தது

அக்காக்கள்

இருந்த தெரு

 

கூட்டிப்பெருக்கி

வாசல் தெளித்து

குலுங்குகிற 

வளைகரங்களில்

தெருக்களின்

துயில் கலையும்

 

நிலவொளியில்

பாய் விரித்து

அக்காக்கள் சொல்கிற

கதைகளை கேட்டுவிட்டே

ஒவ்வொரு இரவும்

உறங்கப்போகும்

 

தெரு முனை

கோவில் திறந்தே கிடக்கும்

அம்மைகள்

பக்கத்துவீட்டு திண்ணைகளில்

புளியங்கொட்டைகள் மினுங்க

பல்லாங்குழி 

ஆடிக்களித்திருப்பர்

 

கனகாம்பரம்

தொடுத்துக்கொண்டு

மர்ஃபி ரேடியோக்களில்

ஒலிச்சித்திரம் கேட்ட

அக்காக்கள்

ஒளிச்சித்திரங்கள்

 

ஒயிலாக அமர்ந்து

நீள் சதுர ஆடிகளில்

வட்ட நிலவை

அலங்கரித்து

கார்குழலில்

மலர்ச்சூடி

வெளிச்சங்களை

வரைவார்கள்

 

தோழிகளோடு

சில்வர் குடங்களில்

நீர்கொண்டு போவது

தேர் நடந்து போவதைப்போல்

தினசரி திருவிழா

 

குடங்கள்

பேசிக்களிக்கும் கதைகளால்  நிரம்பித்தளும்பும்

 

குளக்கரை படிகள்

அக்காக்களின்

கொலுசொலி கேட்க

இடம்பெயராமல் காத்துக்கிடக்கும்

 

குளத்தில் மிதக்கும்

தாமரை மொட்டுகள்

மையிட்ட விழிகளை

கண்டு மலரும்

 

குளம்

மருதாணியிட்ட

கைகளை தீண்டி

வட்டவட்டமாய்

சிலிர்க்கும் 

 

குடங்களில் அள்ளி எடுக்கும்

தாமரைக்குளம்

ஒரு குழந்தையைப்போல் 

இடுப்பில் ஏறி

அமர்ந்துகொள்ளும்

 

பந்தலிட்டு வாழைகட்டி

நல்வரவு சொல்லும்

குண்டு வண்ண

சீரியல் பல்புகளோடு

அக்காக்களின்

அழகும் ஒளிரும்

 

அழகின் நறுமணம்

திருமண வீதியெங்கும் கமழும்

 

தெருவின் அழகையெல்லாம்

கூரை புடவையின்

முந்தானையில்  கட்டிக்கொண்டு

காணாமல் போன அக்காக்கள்

 

தாவணி அணிந்த

தேவதைகளாகவே

வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

நினைவுகள் திரும்பிப்பார்க்கிற

பால்யத்தின் தெருக்களில்

 

அம்மா

 

என்னை சுமந்தவள்

நான் ஏடுகளை

சுமக்க தினம்

மண்ணை சுமந்தவள்

 

கூட்டியும்

பெருக்கியும்

கொண்டுவந்த

கூலிக்காசில்

என்னை

கூட்டலும்

பெருக்கலும்

படிக்க வைத்தவள்

 

காதணிகளையெல்லாம்

விற்றுவிட்டு

எனக்கு

உவமை அணியும்

உருவக அணியும்

வாங்கித் தந்தவள்

 

தான்

நடப்பதற்குக்கூட

செருப்புகளை

வாங்காமல்

நான்

பறப்பதற்கு

சிறகுகளை

சேமித்துக் கொடுத்தவள்

 

கடிதம்கூட

எழுதத்தெரியாத

இவள்தான்

என்னை

கவிதை

எழுத வைத்தவள்

 

என்னை சுமந்தவள்

நான் ஏடுகளை சுமக்க

தினம்

மண்ணை சுமந்தவள்

 

இன்று....

தன்னையே

சுமக்க முடியாமல்

தள்ளாடி....!

தள்ளாடி....!

 

பூக்காமல் போனாலும்

நீர் வார்ப்பேன் என்பதை

எப்படிச் சொல்வது

 

கேட்காத போதும்

பூக்களைத்தருகிற

இந்த செடியிடம்

 

 படிக்கிற பிள்ளைகளும்

வாசிக்கிற மனைவியும்

எழுதுகிற நானும்

தனித்தனி

அறைகளில்

மௌனத்தில் கிடக்கிறோம்

 

எழுதப்படிக்கத் தெரியாத

மியாவ் மட்டுமே

எல்லோருடனும்

கொஞ்சிப்

பேசிக்கொண்டிருக்கிறது

 

துயரங்களை

இறக்கிவைக்க

இன்னொரு தோளின்றி

சதா உம்மென்று

ஒற்றையாய்

தொங்கிக்கொண்டிருந்த

ஒரேகடவுள்

இறங்கிவந்து

சிரித்து விளையாடுகிறார்

தத்தெடுத்த

நாய்க் குட்டியுடன்

 

கைபேசிகளால்

களவாடப்பட்ட

குழந்தைகளின் மகிழ்ச்சியை

சிறுகச் சிறுக

மீட்டுத்தருகிறது

தொட்டியில் துள்ளியாடும்

வண்ண மீன்கள்

 

மறந்துவிட்ட

கிளிப் பேச்சை

உறங்கிக்கிடந்த

குயில் பாட்டை

சிறகசைத்து

துளிர்க்கச்செய்கிறது

சின்னஞ்சிறு

அலகுகளால்

காலத்தை முத்தமிட்டு

பின்னகர்த்தும்

காதல் பறவைகள்

 

தீராத இறுக்கங்களில்

கட்டுண்டு

கிடக்கிறது ஆறறிவு

 

இயல்பில் நின்று

அன்பால் வருடி

அழுத்தங்களையும்

கவலைகளையும்

கட்டுடைக்கிறது ஐந்தறிவு

 

 

View

Showing 241 - 260 of 877 ( for page 13 )