logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 201 - 220 of 727

Year
Award
   

மாதாந்திர பரிசு

  • அம்பேத்கர் கிட்டு

0   784   0  
  • May 2022

மாதாந்திர பரிசு

  • சிவசந்திரன்

0   462   0  
  • May 2022

மாதாந்திர பரிசு

  • ம.சூர்யா திருமால்

0   638   0  
  • May 2022

மாதாந்திர பரிசு

  • தமிழ்கவி அபி

0   767   0  
  • May 2022

மாதாந்திர பரிசு

  • விஜயலட்சுமி சண்முகம்

0   474   0  
  • May 2022

கவிச்சுடர் விருது

  • ரத்னாவெங்கட்

0   726   0  
  • May 2022

படைப்பு சிறுகதைப் போட்டி

  • முதல் பரிசு - ப்ரீத்தி வசந்த்

0   684   0  
  • May 2022

படைப்பு சிறுகதைப் போட்டி

  • இரண்டாம் பரிசு - முகமது பாட்சா

0   653   0  
  • May 2022

படைப்பு சிறுகதைப் போட்டி

  • மூன்றாம் பரிசு - கலையரசி ஜி

1   554   1  
  • May 2022

படைப்பு சிறுகதைப் போட்டி

  • சிறப்பு பரிசு - குடந்தை அனிதா

0   626   0  
  • May 2022

படைப்பு சிறுகதைப் போட்டி

  • சிறப்பு பரிசு - நெய்வேலி பாரதிகுமார்

0   771   0  
  • May 2022

படைப்பு சிறுகதைப் போட்டி

  • சிறப்பு பரிசு - அன்பு மணிவேல்

0   623   0  
  • May 2022

படைப்பு சிறுகதைப் போட்டி

  • சிறப்பு பரிசு - ந.சிவநேசன்

0   524   0  
  • May 2022

படைப்பு சிறுகதைப் போட்டி

  • சிறப்பு பரிசு - அருள் வடிவேல்

0   455   0  
  • May 2022

கவிச்சுடர் விருது

  • வீரசோழன். க.சோ.திருமாவளவன்

0   1250   0  
  • May 2022

கவிச்சுடர் விருது

  • கிறிஸ்டினா அருள்மொழி

1   1536   0  
  • April 2022

மாதாந்திர பரிசு

  • அ.சீனிவாசன்

0   496   0  
  • April 2022

மாதாந்திர பரிசு

  • கே.பாலன் வடக்கத்தியான்பட்டி

1   611   0  
  • April 2022

மாதாந்திர பரிசு

  • ஆயிஷா பாத்திமா

0   611   0  
  • April 2022

மாதாந்திர பரிசு

  • ஸ்ரீவாரிமஞ்சு

0   1010   0  
  • April 2022

மாதாந்திர பரிசு

அம்பேத்கர் கிட்டு

View

மாதாந்திர பரிசு

சிவசந்திரன்

View

மாதாந்திர பரிசு

ம.சூர்யா திருமால்

View

மாதாந்திர பரிசு

தமிழ்கவி அபி

View

மாதாந்திர பரிசு

விஜயலட்சுமி சண்முகம்

View

கவிச்சுடர் விருது

ரத்னாவெங்கட்


நமது படைப்பு குழுமத்தின்  இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருதினை கவிஞர் ரத்னா வெங்கட் அவர்கள் பெறுகிறார் என்பதில் பெருமை அடைகிறோம்.
முதுகலை வணிகவியல், இளங்கலை கல்வியியல் படித்துள்ள கவிஞர் அவர்கள் புதுக்கோட்டையை பிறப்பிடமாகக் கொண்டவர். அமைதியான குணமும், தனிமை விரும்பியுமான கவிஞர் புத்தகங்களின் மீது அளவற்ற காதல் கொண்டவர்.

கவிதைகளே தனது முகவரி என்று பெருமையுடன் சொல்லும் கவிஞரின் சங்க இலக்கியக் காதலின் வெளிப்பாடாக முல்லை முறுவல் என்ற முல்லைப்பாடல்களின் தொகுப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது.

பலரின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்ற கவிஞரின் "காலாதீதத்தின் சுழல்" கவிதை தொகுப்பு படைப்பு குழுமத்தின் வெளியீடாக வெளியானது. அவரது இரண்டாவது கவிதை தொகுதி "மீச்சிறு வரமென" என்ற கவிதை தொகுப்பு பரிதி பதிப்பக வெளியீடாகவும் வந்துள்ளது. மூன்றாவது தொகுப்பிற்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக இருக்கும் நூல்களின் தோழி கவிஞர் ரத்னா வெங்கட் அவர்களின் கவிதைகள் ஒவ்வொன்றுமே அன்பின் சூழலைப் பேசக்கூடியதாக இருப்பதே சிறப்பு! இனி கவிஞரின் சில கவிதைகளை காண்போம்.:

கணவன் மனைவி உறவென்பது அன்பினால் பின்னப்படுகிறது. அவை அப்படியே காலம் முழுக்க  நகர்ந்துவிடுகிறதா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இசையின் ஆரோகணம் அவரோகணம் போன்று ஏற்ற இறக்கங்களில் இசைக் குறிப்புகள் எழுதுகிறது. அப்படியானவொரு இசைக்குறிப்பாக நகர்கிறது இந்தக் கவிதையும். எழுத்துகளையும் வார்த்தைகளையும் மனைவி ஆயுதங்களாய் எடுத்து பிரயோகித்தாலும் கணவன் சாகசமாய் அதனை எதிர் கொள்கிறான். ஒரு கட்டத்தில் உக்கிரத் தாண்டவம் முயலும் அவளின் கோபத்தை அவனின் சமாளிப்பும் , பசபசப்பு வார்த்தைகளும் அமைதியாக்கி சரணடைய வைக்கிறது. இது ஒரு பாசாங்கில்லாத கவிதை.

  

பின்னெப்போதைக்குமான 
சந்தர்ப்பங்களை 
தகர்த்தெறிய 
நம் பாதங்கள் நடந்த
இணைப்புப் பாலத்தை 
கொளுத்தவென 
ஆவேசங்கள் முட்டி மோத
எழுத்தைக் கையிலெடுக்கிறேன்

நாண் விடுத்த அம்பாய் 
இலக்கின்றி இறைபடும்
வார்த்தைகளை
சாகசமாய்த்தான் 
எதிர் கொள்கிறாய் 

அத்தனைக்கும் 
அழுத்த இராக்கதனாய் 
பதிலளிக்க மறுக்கும் 
உன் திடத்தை 
கிழித்துக் கோர்த்து 
மாலையாகத் தோளில் சூடுகிற 
வெறி உந்தித் தள்ள
கூர் தீட்டிய நகங்களை 
பொருத்திக் கொள்கிறேன் 

விரித்த கூந்தலும் 
பிதுங்கிய நாவுமாக 
கோரத் தாண்டவமே 
இதற்கான முடிவென 
அடியெடுக்கையில்
பிம்பத்தின் உக்கிரம்
தாளாது
துகள் துகளாகிறது கோபம்

அனர்த்தமே அனர்த்தமே 
அன்புதானடி  உன் ஆயுதமென
பசப்புகிற பச்சாதாபத்தை 
மென்று துப்புகிற இயலாமை
உபாயமென கைக்கொள்கிறது 
உதவாத தன்னிரக்கத்தை

மடை உடைய வீழ்வதை
எதுவுமே நடவாத 
தோரணையில் புறக்கணித்து
குப்பியில் அளந்து தரும்
மருந்தாய் உனதிருப்பு 
உயிர் காக்க மட்டுமென
உயர்வு நவிற்சியாய்ப்
பகடி பேசுகிறாய் 

உமிழத் துடிப்பதை 
அடக்கி குமுறுகிற எரிமலை
உறுமிப் பார்க்கிறது மனதில்
கக்கி விட்டால்...?
அத்தனை கற்களையும்
அத்தனை சாம்பலையும் 
பாதுகாத்து என்ன செய்வாய்?
 
அனல் விழுங்கிப் புதைத்து
காதலெனப் பெயர் சூட்டி அவிந்து
செயலற்ற ஒன்றென நிற்பதெல்லாம் 
இம்மையிலும் மறுமையிலும்
வெம்மையில் உன்னை 
உருகவிடாதிருக்கும் 
பொருட்டிலேயே....

**********
பெண் என்பவள் எப்போதும் இளகிய மனம் கொண்டவள். அவளின் மனக்கதவுகள் காற்றிலடித்துக் கொண்டேயிருக்கும். ஆனாலும் பத்திரமாக பூட்டியிருப்பதான பாவனை முகம் அபிநயிக்கும். அன்பை மொத்தமாக குழைத்து வைத்திருப்பாள். அதில் கொஞ்சம் இடம் மாறும் போது இயலாமை இழுத்து வைத்து வாதம் செய்யும். இங்கு தான் இறந்துவிட்டதாகவே கதறியழுகிறாள் ... யாரும் சட்டை செய்யவேயில்லை! மகன் இடம் பெயர்கிறான். மகள் இடம் பெயர்ந்துவிட்டாள். தாய்மை அழுகிறது . அது அவர்கள் யாருக்கும் புரியவேயில்லை.இறந்தவளிடம்தான் கணவன் இஞ்சி டீ கேட்கிறான்... ஒரு உயிர் துடிப்பான கவிதை...



ஒரு விபரீத விநாடியில் 
நான் மரித்துப் போனேன் 

புதைப்பதா எரிப்பதா 
என்ன செய்ய 
அனர்த்தமாக யோசிக்கையில்
துளிகள் உடைந்து தெறிக்க 

அம்மா ஏன் அழுகிறாய் 
எனத் திகைத்த மகனிடம்
நீ  வேறிடம் போகிறாய் அல்லவா 
என்னை விட்டு என்றேன்
புரியாது விலகினான் 

அம்மா என்ன பிரச்சினை 
உனக்கு இப்போது
பெண்ணுடைய அலைபேசி
அதிர்ந்து அழைத்தது கேள்வியாக 
நீ அருகில் இல்லையில்லையா
தங்கம்...
அதனால் இருக்கலாம் 
அக்கறையும் எரிச்சலும் 
கலந்த படபடப்பு சிறிது நேரம் 
பிறகு 'டொக்' 
புளித்துப்போன அமைதி

நான் இறந்ததை 
யாருக்கெல்லாம் அறிவிக்க...?
அவசரமாக தொடர்பு எண்களைத்
தேடி அழைக்கப் போன
அபத்தத்தின் நடுவே
எனக்கு டீ தரலையா
கணவரின் குரல் 
இஞ்சி சேர்த்தா...?  எழுந்தேன் 

தேநீர் கொதிக்கையில் 
உடன் குமிழிட்டது நினைவு
யாருக்காக மரித்தேனோ 
அந்தப் பெயர் நினைவில்
வரவேயில்லை 

எங்கே அந்த நினைவு  
சூட்டுக்கோலிட்டு இழுத்தால் 
இழுத்துப் பார்த்தேனே....
எரியத்தான் எரிகிறது?
பின்...
எப்படி இறந்தேன்?
எதற்காக இறந்தேன்?
எவருக்காக இறந்தேன்?

நிலைக் கண்ணாடியில் 
பார்த்தால் தெரியுமில்லையா? 
சதைப் பிண்டம் 
கோளமாகத் தெரிய 
நரம்பதிர்ந்த துடிப்பில் 
வெடித்துச் சிதறியது 
அடைத்துப் போன இதயம்

ஏன் இப்படி அழுகிறாய்? 
எல்லோரும் கேட்கையில் 
சைகையில் கதறுகிறேன்
நான் இறந்தது தெரியலையா?

யாருக்காக எதற்காக இறந்தாய்?
பதிலிறுக்க இயலாத கேள்வியால் துளைக்கிறார்கள் 

நினைவில்லையே....
யாருக்காக இறந்தாலென்ன
நான் இறந்தது உங்களுக்கு முக்கியமில்லையா?

தோள் குலுக்கி உதடு பிதுங்க 
அனைவரும் உச்சுக் கொட்டி நகர்ந்த நொடியில் 
நான் உண்மையாகவே 
மரித்துப் போனேன்.

************** 
தடுமாற்றம் என்பது இடறலின் ஒரு வகை. அது எங்கும் எப்போதும் எவ்விடத்தும் நிகழலாம். அதை யாரும் எளிதில் கடந்துவிடலாம்... ஆனாலும் காலத்தின் நமுட்டு சீண்டல் எள்ளலின் சாமர்த்தியாகும் போது உடைந்து போகிறது மனசு.. சாதாரண நிகழ்வுதான் என்றாலும்...

ஒரு தடுமாற்றம் என்பது
கை கொட்டிச் சிரித்துப் 
பார்க்க விழையும்
காலத்தின் நமுட்டு சீண்டல்தான்
சுழற்சியின் தந்திரம்தான் 
கால் தடுக்கி விழ வைக்கும்
எள்ளலின் சாமர்த்தியம்தான் 

உதறி நடக்க
சரித்திர நிகழ்வாக
சாத்தியம் உண்டுதான் 
உருகி வீழ்ந்து 
சாக்காடு சேரும் வரையில் 
விடேன் என இடறும் 
விஷ முள்ளாக்காத வரையில்

ஒரு தடுமாற்றம் என்பது
சாதாரண நிகழ்வுதான் 

#ரத்னாவெங்கட்
[25/05, 13:14] JINNA PADAIPU: கரணம் மாறியதில் 
கைமாற்றிச் சுழற்றி
மடியேந்திக் கொள்கிறது
வட்டச் சுழல்கள் 
அபரிமிதமான வாஞ்சையுடன்
 
தள்ளிச் சென்ற சுயநலம்
ஒருமுறை...ஒரேயொரு முறை
திரும்பிப் பார்த்திருந்தால்...
சொல்ல நினைத்ததை
நின்று கேட்டிருந்தால்...?

தத்தளித்தலைக் கைவிட்டு
சஞ்சலங்கள் அற்று முழுமையாய்
ஓடும் நீரில் ஒப்புவித்திருக்கலாம்..
சேருமிடத்தில் சேர்த்துக்கொள் என
***************
தள்ளிச்சென்ற சுயநலம் ஒரு முறை திரும்பிப் பார்த்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும்!  ஒப்புவித்தலின் முழுமையை உணராத சுயநலம் கைவிட்டதால் வட்டச்சுழல்கள் கைமாற்றி மடியேந்திக் கொள்வது காலத்தின் கடமையென்பதை அறியுமா? சிறப்பான பொருள் வடிவம்: 

கரணம் மாறியதில் 
கைமாற்றிச் சுழற்றி
மடியேந்திக் கொள்கிறது
வட்டச் சுழல்கள் 
அபரிமிதமான வாஞ்சையுடன்
 
தள்ளிச் சென்ற சுயநலம்
ஒருமுறை...ஒரேயொரு முறை
திரும்பிப் பார்த்திருந்தால்...
சொல்ல நினைத்ததை
நின்று கேட்டிருந்தால்...?

தத்தளித்தலைக் கைவிட்டு
சஞ்சலங்கள் அற்று முழுமையாய்
ஓடும் நீரில் ஒப்புவித்திருக்கலாம்..
சேருமிடத்தில் சேர்த்துக்கொள் என

***********
இரந்து பெறுதல் காதலென்பேன், இரந்து மருகுவேன், இரந்து இழிபடவும், இறக்கவும் செய்வேன். நீயே இவ்வுலகென்று இதயம் வரிந்து கட்டிய பிறகு நீதானே வாசலாகவும் இருப்பாய்!  ஒப்பு கொடுக்கும் காதலுக்கு வடிவம் கிடையாது.  பண் இசைக்கும் அழகான பாணத்தியின் விரல்கள் இதோ:

அரூபத்தின் முழு வடிவாக 
ஆதியற்ற அந்தமாக
இருதயத்தின் மொழியுடன்
இணையாத இசையாக

பிளவின் கசிவாக 
பிரியத்தின் வலியாக
உறங்கா அடிமனதில்
ஓலமிடும் நிசப்தமாக

உதிரக் கடைசலில் 
ஒதுங்கிய மூன்றாம் துளியாக
கன்னமிட்டுப் பதுக்கி
ஒறுத்திடும் உணர்வாக

கனவுகள் நீட்டித்த 
காலப் ப்ரமாணமாக
கள்வெறியின் பித்தாக
காமம் உடைத்த காதலாக

எதை நினைந்து 
வேண்டுகிறேனோ
அது நீயாக
எதை மறக்கத் 
துடிக்கிறேனோ
அந்த வதையாக
உயிர்த்திருக்கிறாய்
எது எனதல்லாததோ 
அதுவாக  இருந்து
என்னை 
இரந்து பெறவும் 
இரந்து மருகவும் 
இரந்து இழிபடவும்
இரந்து இறக்கவும் 
பணிக்கிறாய்...பேரன்பே 

நீயின்றியும் அமைவதில்லை இவ்வுலகு

 

View

படைப்பு சிறுகதைப் போட்டி

முதல் பரிசு - ப்ரீத்தி வசந்த்

View

படைப்பு சிறுகதைப் போட்டி

இரண்டாம் பரிசு - முகமது பாட்சா

View

படைப்பு சிறுகதைப் போட்டி

மூன்றாம் பரிசு - கலையரசி ஜி

View

படைப்பு சிறுகதைப் போட்டி

சிறப்பு பரிசு - குடந்தை அனிதா

View

படைப்பு சிறுகதைப் போட்டி

சிறப்பு பரிசு - நெய்வேலி பாரதிகுமார்

View

படைப்பு சிறுகதைப் போட்டி

சிறப்பு பரிசு - அன்பு மணிவேல்

View

படைப்பு சிறுகதைப் போட்டி

சிறப்பு பரிசு - ந.சிவநேசன்

View

படைப்பு சிறுகதைப் போட்டி

சிறப்பு பரிசு - அருள் வடிவேல்

View

கவிச்சுடர் விருது

வீரசோழன். க.சோ.திருமாவளவன்

2022 பிப்ரவரி மாதத்திற்கான கவிச்சுடர் விருதை வீரசோழன். க.சோ.திருமாவளவன் அவர்களுக்கு வழங்குவதில் படைப்புக் குழுமம் பெருமிதம் கொள்கிறது.

 

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், அருகன்குளம் எனும் கிராமத்தை சேர்ந்த கவிஞர் , மதுரை அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டமும் , சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டம் (Master of Law) பயின்றவர்

 

மொரீசியஸ் துணைக் குடியரசுத் தலைவர் வையாபுரி பரமசிவம் பிள்ளையிடம் கவிதைக்காக முதல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆனந்த விகடன், கணையாழி, இனிய உதயம்,பேசும் புதிய சக்தி, மகாகவி இதழ், தகவு, வாசகசாலை, காற்று வெளி, தமிழ் நெஞ்சம், போன்ற இதழ்களில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வரும் கவிஞரின்  பேச்சியம்மாளின் சோளக் காட்டுப் பொம்மை எனும் கவிதை நூல் நமது படைப்பு குழுமத்தின் வழியாக வெளிவந்துள்ளது.

 

இனி கவிஞரின் சில கவிதைகளைக் காண்போம்.

மேய்ப்பனின் கருணை என்பது அறுப்பிற்குதான் என்பது எவ்வளவு  நிதர்சனமோ அப்படித்தான் ஆட்சியாளர்களின் கருணையும் நேசமும் என்பதை நாசூக்காக சொல்லும்  இக் கவிதை கவிஞரின் சொல்லாடலுக்கு சிறப்பு சேர்க்கிறது.

 

 

மேய்ப்பனின்

மடியில் தவழும்

மரிக்கு

கருணை நீட்டப்படலாம்

அறுப்பு நிச்சயம்.

 

இயேசுவின் கைகளில்

தவழும் மரி

இன்னமும் கருணையால்

காலம் நீட்டிக்கப்பட்டிருக்கலாம்

சாகாவரம் மரிகளும் பெற்றிருக்கிறது.

 

மேய்ப்பனின் பாதையை

ஒரு போதும் மாற்றியதில்லை

மரி.

மரியை கசாப்புக்கு

அனுப்பும் முகவரியை

எப்போதும் மாற்றியதில்லை

மேய்ப்பன்.

 

கருணைக்கும்

காலத்திற்கும்

கடுகளவே

மனம் பெற்றிருந்தாலும்

கசாப்காரனின்

முகவரி கருணையில்

நிலைபெற்றிருப்பதில்லை.

 

🌷

மரம் ஆகாயத்தைப் நோக்க்கவும், பூமியை பார்க்கவும் தன் கைகளை அகலமாக விரித்திருப்பது ஒரு மாயவித்தை நடத்தும் தந்திரக்காரனைப் போல் தெரிகிறது. அந்த தந்திரக்காரன்தான்  எத்தனை வித்தைகளை செய்கிறான்

 

மரமெனும் மாய வித்தை

பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது.

ஆகாயத்தை நோக்கவும்

பூமியைப் பார்க்கவும்

அகன்ற கிளைகள் விரிந்து

கொண்டிருக்கின்றன.

 

மனித இதயம் துடிக்கவும்

ஓசையின் தனிமை பூக்கவும்

விடியல் செய்து கொண்டே

இருக்கிறது

விதையின் விருட்சங்களை.

 

பூமி கருணை சுரக்கும்

தாயாய் அன்பைப் பூக்கிறது

மரத்தின் ஈரங்களில் தாய்மை

சுரக்கிறது.

மண்ணிலும் கல்லிலும்

ஒற்றைக் கல் சிற்பமாய்

கால் வழி பால் சிந்தும்

அமுதம்.

 

மனிதப் பூக்களை

இதய நார் இசைக்கும்

மரத்தின் ஒசைகளில்

வழியும் நீராய்

இதயத்தின் ரீங்காரம்

இன்னிசைக்கும்

தனிமையில் மரமும் இதயமும்.

 

பாடங்களை புத்தகங்களில்

படிப்பதிலும்

அறிவின் புன்னகையை

அன்ரூல்டில் எழுதுவதிலும்

அதிகமாய் பக்கங்களை

நீட்டுகிறது....

மரம்!

 

 

🌷

இங்கு மேய்ப்பர்கள் யார்?  அவன் தொரட்டி பசியாற்றுகிறதா? அல்லது  கொலை செய்கிறதா?  ஆழம் நகர்த்துகிறது இக் கவிதை

 

மேய்ப்பர்களின் பயணம்

-------------------------------------------

இலக்குகள் இல்லா பாதையிலும்

இன்னிசைக் காலால் நடக்கும்

மேய்ப்பன் காலடியே

கிழக்கு திசை.

 

நூறோ, இருநூறோ, முந்நூறோ

எண்ணிக்கை நிர்ணயம்

செய்யப்படுவதில்லை.

 

மேய்ப்பன் குரல் வழி

காதுகள் தீட்டி காலில்

கண்கள் வைத்து எட்டு வைக்கும்.

 

தொரட்டிகளின் நீளங்களில்

இரையை வைத்தாலும்

காலில் எட்டியே கவனமாய்

கவ்வும்.

 

இரை தேடும் பகலில்

இரவெல்லாம் அசைத்தே

பகலை அசைக்கும்.

 

ஒய்யார கொப்புகளும் கிளைகளும்

மேய்ப்பன் தொரட்டியில்

தூக்கு மாட்டும்.

 

திருவிழாக்களில் பதம் பார்க்கும்

அரிவாள்களின் கண்கள்

இரக்கம் பார்ப்பதில்லை.

 

 

 

🌷

ஓய்வெடுக்கும்

மரங்களிடையே

ஊர்ந்து செல்கிறது

பேருந்து

 

 

 

🌷

புத்திதான் புத்தனாகிறான். அறிவுதான் போதியாகிறது.  உரக்க பேசும் மூளையின் குரல் நியாயமாகவும் இருக்கும். இக் கவிதையும் புத்தனாகி போதியாகிறது

 

மண்டைச் சுரப்பின் ஆழம்

சுவாராஸ்யமானது

அறிவைப் பெருக்கியவனின்

மூளை சேமிப்பு பாத்திரம்

அடர் வன புத்த போதி நிலையானது.

 

படைப்பின் பெரும் சப்தம்

மூளையின் குரல் உரக்கப்பேசும்

உண்மையில் ஔிந்திருக்கலாம்.

 

கடந்து செல்லும் காட்சிகள்

வானவில் வண்ணமாய் மறையும்

வண்ணங்கள் சிதறிப்போவதில்லை

காட்சி பிரமிப்பானது

 

வான் தன் சுயமியை

வானவில்லிலிருந்து பெற்றிருக்கலாம்

வானவில்லின் அழகு

பிரபஞ்சத்தையே பேரின்பமாக்குகிறது.

 

புத்தரும் சிரிக்கிறார்

ஓவியப் புன்னகையாய்

சித்தார்த்தன் உடை களைந்து!

 

 

🌷

கவிஞரின் மற்றும் சில கவிதைகள்;

 

அந்தத் கட்டங்களுக்கு

மெளசு அதிகம்

குதிரை தாவும் கட்டங்கள்

சுவாரஸ்யமானவை.

 

ராணி வைத்து ஆடும்

கட்டங்கள் ராசாவின்

கம்பீரத்தை நிலைப்படுத்தும்.

 

விரல்களில் நகரும் குதிரை

தாஜ்மஹாலில் ஒடிய சுல்தான்களின்

குதிரைக்குளம்பை ஞாபகம் செய்யும்.

 

ராணி தன் கம்பீரத்தால்

சிப்பாய்களை வீழ்த்துவது

வேலுநாச்சியார் உடைவாள்

வரலாற்றைச் சொல்லும்.

 

குதிரையும் ராணியும்

மன்னராட்சிக்கு மட்டுமல்ல

சதுரங்க ஆட்சிக்கும்

சட்டம் தனை உருவாக்கும்.

 

குதிரையும் ராணியுமில்லாத

ஆட்டம் தனை

சதுரங்க கட்டம் கருப்பு வெள்ளையில்

நிழற்படத்தை வரலாறாய் பதிவு செய்யும்.

 

எதிரெதிர் கட்டங்கள்

தாவித் தாவி சிப்பாய்களை வீழ்த்தும்

போரின் வேகத்தை

உலக சாம்பியன் நிர்ணயம் செய்வார்

நிமிடங்களில்.

 

பல நாள் களப்போராட்டம்

நிமிடங்களில் நிறைவு பெறுகிறது

ராணியும் குதிரையும்

நாடுகளை ஆள்கிறார்கள்.

 

ஒவியமாய் வாழ்ந்தாலும்

நெஞ்சக்களத்தில்

குதிரைக்குளம்பு சப்தத்தில்

ராணி வருகிறார் கம்பீரமாக

சிப்பாய்களை விரல்களால் வீழ்த்தி!

 

 

 

🌷

சுவர்ச் சட்டங்களில்

அறையப்படும் ஆணிகள்

நினைவுகளைத் தாங்கும்.

 

பாட்டன் பூட்டன் தாத்தா

நமக்குத் தெரியா காலங்களில்

வாழ்ந்த வரலாறு பேசும்.

 

ஆச்சி பாட்டி பூட்டியின்

தோடுகளும் காது வளர்த்த

கதைகளும் நிழற்படம் நிரப்பியே

இருக்கும்.

 

அம்மா ஆச்சியின் கதையை

சொல்கையிலும்

ஆச்சி பூட்டியின் கதையை

சொல்கையிலும்

சீதனமாய் வந்த உரைகல்லும்

அம்மிக்கல்லும் அதன் காலங்களை

கணக்கெடுக்கும்.

 

ஆணிகள் எப்போது

அடிக்கப்படடதெனத் தெரியாது

நிழற்படத்தில் குறிக்கப்பட்ட

எண்களால் வருடத்தை நினைவு

செய்யலாம்.

ஆணிகள் காலத்தையே தாங்கும்

வரம் பெற்றவை.

 

சுவர்களில் நிழற்படங்களோடு

மான் கொம்புகளும்

நரிப்பல்லும் கூட

அழகு செய்யும்.

 

சுதந்திரத்திற்காக

காந்தியோடிருந்த பூட்டன்

என்னிடம் பேசுகிறார்

ஐஎன்ஏவில் இருந்த தாத்தா

கேப்டனாகவே இருந்ததை

நிழற்படம் பேசுகிறது.

 

ஆவணங்கள் பேசுவதை

ஆணிகள் தாங்குகிறது...

 

ஆணிகள்சுவரில்

காலத்தைப் பதியம் செய்கிறது

காலத்தை அழித்து விட்டு

ஆணியை அப்புறப்படுத்த முடியாது.

 

 

 

🌷

சோளக் காட்டுக்குள்

காக்கை குருவிகளுக்காக

ஆச்சி பேச்சியம்மாள்

ஊன்றி வைத்தாள் நிலப்பொம்மை!

 

முதலில் வைக்கோல்

தயார் செய்தாள்

தன் அண்ணன் கருப்பையா

சட்டையை தயார் செய்தாள்

உருவமானது சோளக்காட்டு பொம்மை!

 

காக்கைளும் குருவிகளும்

ஆள் நிற்பதாய் கண்டு

சோளம் கொறிக்க வருவதில்லை.

 

பின்னொரு மழைநாளில்

அடித்த காற்றில்

அத்துணையும் பறக்க

கூடு மட்டும் குடிலாயிருந்தது.

 

வனாந்திரப் பறவைகள்

காக்கையோடு குருவியும்

தங்கி விட்டுச் செல்கின்றன

 

சோளங்கள் பூக்கிறது

மாற்று நிலத்திலும்!

 

 

 

🌷

யாசகங்கள் தீரா

வெம்மைகிலும்

பூக்கிறது

திருவோடு.

 

காடுகள் மேடுகளிலும்

யாருக்காகவோ

இழைப்பாறுகிறது

நிழல்.

 

கூடுகளின் கிளைகளில்

மூத்திருக்கும் வளையங்கள்

சொல்லியே செல்கிறது

ஆண்டுகளை.

 

யார் கண்டறிந்திருப்பார்

இளைப்பாறுதலில்

பெரும் நிம்மதி

ஒரு திருவோடென!

 

 

 

🌷

குளம் நிறைந்தது...

ஓடை வழி

ஓடி வந்தது

நிலா!

 

 

 

🌷

கடலலைகள் முத்தமிடத் துடிக்கும் கரையெங்கும் வெயில் வாசம்

 

ஒரு ரூபாயிலும் இரண்டு ரூபாயிலும்

கரையும் நிமிடங்கள்

 நாணயங்கள் சேகரிக்கும்.

 

தோள்களில் ஆடும் பஞ்சு மிட்டாய்கள் சாளரங்கள் கேட்பதில்லை

பெரும் சுமையென வருபவனிடம்

காற்று பேரம் பேசுவதில்லை.

 

குழந்தைகளின் நா அறிந்தவனோடு

தூண்டில் பஞ்சு மிட்டாய்கள்

இரையாய் பேசுவதில்லை

இரைப்பையாய் பேசும்.

 

பீலிபெய் சாக்காடும்

வாழ்வை சுமப்பதில்லை

வறுமையை சுமக்கிறது

அரை சாண் வயிறு

 

தூக்கிச்செல்வது

குழந்தைகள் பூரிப்பை

சில்லறைகள் சிணுங்கினாலும்

குழந்தைகள் சிணுங்குவதில்லை.

 

குழந்தைகள் கண்ணீரை

ஒட்டியெடுக்கிறான்

பஞ்சுகளில் இவன்

கண்ணீர் தெரிவதில்லை.

 

 

🌷

 

நான் கோமாளிதான்

என் செய்கைகள் சிரிப்பு வரக்கூடியதாகவே இருக்கும்

சிரிப்பு மருந்து கொடுக்கும்

மருத்துவன் நான்.

 

முகபாவனைகள் மாறியிருக்கும்

பார்த்தாலே கோபம் குறையும்

வெடிகளை இதயத்தில் சுமந்தாலும்

சிரிப்பை முகத்தில் சுமப்பவன்.

 

ஆடைகளை வனையத் தெரியாதவன்

அன்பின் கூடுகளை பொருத்தத் தெரிந்தவன்

கூடைகளில் பூக்கள் பூப்பதில்லை

செடிகளில் வாசம் வராமலிருப்பதில்லை

அழவந்தாலும் சிரிக்க கற்றுக் கொண்டவன்.

 

ஆறடி உசர சட்டைப் பாக்கெட்டில்

பணத்திற்கு பதில் சிரிப்பு சில்லறையாக

நிறைந்திருக்கும்.

 

ஐய்...

கோமாளி போறான்

ஐய்...

கேமாளி உக்காந்திருக்கான்

சொல்லும் மழலைகள் வார்த்தை வாசங்களில்....

 

நான் கண்ணீர் சிந்துவதில்லை!

 

 

🌷

என் பாக்கெட் சாளரங்களுக்கு

பஞ்சமில்லை

துரோகங்களுக்கு பதில் மலர்கள் நிரம்பியிருக்கும்

 

காற்றின் நீச்சல்களில்

என் மணம் உங்களை அடையலாம்

வருவேன் மலர்களாக

முட்களுக்கு பதில் மலரை கிரீடமாய் தருவேன்!

 

அன்பின் வாசம்

அலைகளிலிருப்பதில்லை

என் மலர்களில் பூத்திருக்கலாம்...

 

மலர்களால் அன்பினை செய்பவன்

அன்பின் கூடுகளில் துரோகங்கள் முளைப்பதில்லை.

 

 

 

🌷

இலையொன்று விழுந்தது

காற்றின் தாக்கம்

மழையின் பேரியக்கம்

என எதுவாகவும் இருக்கலாம்

ஆனால் இலையின் மேல் துளிகள்

 

மரணமொன்று நிகழலாம்

பிறப்பின் சாசனச் செய்தியே

இறப்புக்கான தேதி எழுதுவதுதான்

அப்போது மழை பெய்யலாம்

இல்லையேல் வெயிலாவது அடிக்கலாம்

 

இலை விழுந்ததால் மரம் வீழ்வதில்லை

தாகங்கொண்ட பறவையைப்போல

தேடலைவிரித்துக் கொண்டேயிருக்கும்

நேர்ப்புவியிலும் எதிர்ப்புவியிலும்

 

மரணம் நிகழ்வின் மண்மாளிகையில்

அழுகையின் நீர்த்துளிகள் அரணாகி

ஆண்டொன்றில் நினைவுகளாகிவிடும்

மாண்டார்கள் மீள்வதில்லையென

மாற்று பயணம் செய்கிறது வாழ்க்கை

 

வெயிலும் மழையும்

எப்போதும் வரும்

மானுடர்கள் இளைப்பாறுவார்கள்

இலை விழுந்த மரத்தினடியில்...!

 

வீரசோழன் க.சோ.திருமாவளவன்

 

🌷

நதி "எழுதிக்கொண்டே" செல்கிறது

காதலின் சின்னத்தை...

விதியாக முடிந்து போன வாழ்வை

வரலாறாய் மாற்றியவளை

பளிங்குகளால் பதம் செய்து

உலகம் கொண்டாடுகிறது அதிசயமாய்

 

வான் தன்னை மறக்க

பால்நிலா சோறூட்ட

காலாற கடுதாசி செய்திட

நூற்றாண்டு கடந்தும் வாழும் காதலியவளை நதிதன்

முகத்துவாரத்தில் வரைந்திருக்கிறது

 

மரணத்தை விழாவெடுத்தது

நினைவுச்சின்னமாயிருக்கலாம்

ஆயிரமாயிரம் மரணத்தை

மும்தாஜின் காதல்

முந்தானை செய்திருக்கிறது....

 

ஆறுகளின் வரலாறை

குறிப்பெடுத்தவர்கள்

"யமுனை"யை இதயத்தில்

எழுதி வைத்தார்கள்.....

 

காதலெனும்

கம்பீர வரலாற்றை

யமுனை தினமும்

பேசிக்கொண்டிருக்கிறது....

 

தனது கண்ணீரால்!!!

View

கவிச்சுடர் விருது

கிறிஸ்டினா அருள்மொழி

நமது படைப்பு குழுமத்தின் டிசம்பர் 2021 க்கான கவிச்சுடர் விருதினை... ஆழ்ந்த மனத்துயர் இருந்தாலும் பெருமிதத்துடன் மறைந்த கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி அவர்களுக்கு வழங்குவதில் பெருமைப் படுகிறோம். நமது படைப்பு குழுமம் அவரது

 

படைப்புகளை மிகவும் உன்னிப்பாகவே கவனித்து வந்திருக்கிறது. 

கோவையை வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்த கவிஞர் திருப்பூரை சேர்ந்த பல்லடத்தில் பிறந்தவர்.  பி.எஸ்.சி. வேதியியல் பயின்ற  அவரது கல்லூரி வாழ்க்கை திருப்பூர் L.R.G. government arts college for women ல் கழிந்தது.  மிகவும் சுட்டியான பெண்ணாகவே வளர்ந்த கிறிஸ்டினா தன் தந்தையின் சொல் மீறாதவர். தன் தந்தையின் ஹொஸைரி ஸ்கிரீன் பிரிண்டிங் யூனிட்டை தனியாக நிர்வகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார். 1994ல் பி.டெக் சிவில் இன்ஜினியர் தேவசகாயம் அவர்களைக் கரம் பிடித்த பிறகு குடும்ப வாழ்க்கையில் தன்னை முழுமையாகவே அர்பணித்துக் கொண்டார்.

அவரது தந்தை நீ உன் புகுந்த வீட்டில் உன் அதீத திறமைகளைக் காட்டி அதனால் குடும்பவொழுங்கு கெட்டுவிடும் படி நடந்து விடாதே என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க தன்னை சுருக்கிக் கணவன் , மகன் என்ற கூட்டிற்குள் தன்னைப் பொருத்திக் கொண்டார். 2016ம் ஆண்டிலிருந்துதான் அவர் முகநூல் வழியாக கவிதைகளை எழுத தொடங்குகிறார்.  அவர் பார்வை குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்காமல் பலதரப்பட்ட கவிதைகளையும் வாசித்துப் பயணம் செய்தது. கூடவே மரபுக் கவிதைகளையும் எழுதப் பயின்று அதிலும் தன்னை நிருபித்துக் கொண்டிருந்தார்.

கவிஞரின் இந்த கவிதைப் பயணம், அவரது கணவருக்கும் கூட தெரியாது. பின் நாளில் தெரிந்த பிறகு முழு சுதந்திரம் அளித்து அவரது கவியரங்க பயணங்களுக்கு தானும் கூடவே நின்று ஆதரவு அளித்ததாக கூறும் அவரது கணவரின் கண்ணீரை யாராலும் துடைக்க முடியாது!

2010ல் மரணித்த கவிஞரின் தந்தை ஒரு நாள் கனவில் ஒரு பேனா அளித்ததாகவும், அதிலிருந்து கவிதைகளின் மீது நாட்டம் ஏற்பட்டதாகவும் அவர் கணவரிடம் அவரே தெரிவித்திருக்கிறார்.

கவிஞருக்கு அபிஷேக் சாமுவேல்  என்ற ஒருமகன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறார்.

கவிஞரின் மரணத்தை யாராலும் சீரணித்துக் கொள்ளவே முடியாது. சென்னையில் நடந்த அவருக்கான சாதனைப் பெண்மணி விருதை பெற்றுக் கொண்டு தனது குடும்பத்துடன் ஊர் திரும்பியவர்.. நன்றாகத்தான் தன் கணவரிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். இரவு உணவுக்கு மாவு வாங்கி வர கணவரை அனுப்பிவிட்டு வீட்டில் இருந்தவருக்கு திடிரென்று மூச்சு திணறல் ஏற்பட அவரது கணவரும் மகனும் பதட்டத்துடன் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல அங்கிருந்தும் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தன் உலகப் பயணத்தை முடித்துக் கொண்டார்.

இந்த விருதுக்கு தகுதியானவர் இதனை அவரால் நேரடியாக பெறமுடியாது என்றாலும் இதனை அவருக்கு கொடுத்து தமிழுக்கு அழகு செய்வது படைப்பின் கடமையாகிறது. இனிய நல் வாழ்த்துகள் கவிச்சுடரே!

 

 

இனி கவிஞரின் சில கவதைகளை காண்போம் :

 

இல்லறம் என்பதே நேசத்தின் பிரதிபலிப்புதான்.  கடினம் என்பதும் அங்கு கரைந்துவிடும் கற்பூரம்.  ஆலாபனையின் அந்திக்குதான் காத்திருப்பு என்பது எத்தனை சுவையான சொல்லாடல்!

 

நேசம் அதிரும் நிம்மதியின் காத்திருப்பு….

*************************************

தொட்டாற் சிணுங்குகிறாள்

கற்பூரமாய் கரைகிறாள்

காற்றின் கனவுகளைக்

கைப்பிரதி எடுத்துக்

கவிதை என்கிறாள்

 

உள்ளங்கையின் உயிராகி,

ஊடுருவி,மோட்சம் தந்து மிதந்து,

பயிராகும் வாதைக்கு பந்தி வைத்து

பரிமாறும் வேளை பயந்து நிற்கிறாள்

 

பகற்கனவா, பள்ளி நினைவா?

தீர்மானம் அநாதி என்பதால்

சீர்திருத்தம் தேவையில்லை

 

தேவதை வரங்கள் மெய்படும் வேளை

தேவன் தேகமும் அதிர்வானேன்

அமைதிப்படட்டும்,அமைதிப்படட்டும் ஆலாபனையின் அந்திக்குத்தானே காத்திருப்பு…!!!

 

வாழ்வியலின் தேடல் வியப்பானதுஇதுதான் ஞானம் என்று எதையும் யாரும் யாராலும் வகுக்க முடியாது.  இது இதுதான் என்பதே கூட ஒரு ஆறுதலுக்கான சொற் கட்டமைப்புதான்.  இவன் தெளிந்தவன் என்று எதைக் கொண்டு நிர்ணயிக்கிறோம் என்பதே கூட இங்கு ஒரு கேள்விக் குறிதான்கலங்கி கிடக்கும் குளம் ரகசியங்களை மறைக்கும்.. அல்லது கலங்கி கிடக்கும் எதுவும் ரகசியமாகவே இருக்கும் என்பதை அழகாக சொல்லிவிடும் தெளிவு இந்த கவிதை!

 

தெளிவு என்பதும் சுமைதான்...

*******************************

கடலுக்கடியில் ஆழ்ந்து கிடந்த

கிழிஞ்சல்

சுட்டு சுண்ணாம்பாகி

கோபுரத்தில் மின்னியது

வெண்நிறத்தில்...

 

உயர வேறுபாடுகள் தந்த

காலக் கணிதப் பிசகுதான்

வாழ்வின் சூச்சுமம் என்கிற

ஞானக் குழப்பம் தெளிந்தபோது

மறைந்து போயிருந்தது மகிழ்வு...

 

இது சுமையில்லை

சுகமுமில்லை

பின் ஏன் தெளிய வேண்டும்...

 

கலங்கி கிடக்கும் குளம்

ரகசியங்களை மறைக்கும்

அல்லது

ரகசியம் இருக்கும் எதுவும்

கலங்கலாகவே இருக்கும்

மனிதர்கள் வாழ்க்கை போல...!!!

 

காதலென்பதே ஒப்படைத்தல்தான்.  நீ எடுத்துக் கொள் யாதுமாகிவிடுகிறேன்  என்பது காதலின் அர்ப்பணம்யாதுமானவனிடம் தன்னையே ஒப்படைத்த பிறகு முக்திப் பெற மோட்சம் எதற்கு என்பதே இக்கவிதையின் உச்சம்!

 

உன் கைப் பொருள் …

***********************

துளைத்தெடுத்தாய்

கண்ணா என்று கதறி கைக்குழலாகிவிட்டேன்

என் காதல் அப்படி

 

உயிர்த்தெழுந்த உடன் பார்த்த நீ

என் மேசியா

இரண்டாம் வாழ்வின் நித்திய ஜீவன்

என் கைலாயத்தை வைத்திருக்கும் கமண்டலம்

ஏதேனின் பள்ளியெழுச்சிப் பாசுரம்

 

ஆதியின் ஏவாளானாலும்

கோகுலத்து ராதையானாலும்

யாதுமானவனிடம்

வரும் வெறுமை தரும் நிறைதல்

முத்தியடைய

மரணம் எதற்கு என்கிறது…!!!

 

கைம்மாறு என்பது களங்கமாஎன கேள்விக் கேட்கும் கவிஞர்.. விட்டேத்தியாய் விட்டு பறக்கும் உயிருக்கு எத்தனை செய்திருக்கும் இந்த உடல்கால நீட்சியில் தவிர்க்க முடியவில்லையாஅதனிடம் கூட சொல்லாமல் பிரிந்து போகிறாயே என உயிரையே கேள்விக் கேட்கிறார்அதற்கு விளக்கம் கேட்கத்தான் கவிஞரின் உயிரும் உடலை பிரிந்து சென்றிருக்குமோ,! இதோ கவிதை

 

கைம்மாறு என்பது களங்கமா…???

*********************************

அன்புக்குப் பலனாய் அன்பைக் கேட்பது அறமா?

கொடுக்கலும் வாங்கலுமா உறவு ?

 

விட்டேத்தியாய் விட்டுப் பறக்கும்

உயிருக்கு

எத்தனை செய்திருக்கும் உடல்

கால நீட்சியில் தவிர்க்க முடிவதில்லையா

சிறையிருப்பின் சலிப்பு ?

 

விழுது விடும் என்ற காத்திருப்பு

பழுது பட்டபின்

வேருக்குத் தெரியாதா வேறுபாடு ?

 

வேறு வேறு களத்துக்கு

வேறு வேறு நீதி என்பதை

வேதமும் மறுக்காதபோது

 

கைம்மாறு என்பது களங்கமா

அன்புக்கு…???

 

 

 

 

கடவுள் பெயரெனும் தொல்லை…

*********************************

🦚எப்படியும் நாவன்மை என்னுள் தரவேண்டும்

முப்பால் மொழிமூழ்கி முத்தெடுக்க —அப்பனே

ஏறுமயில் வாகனனே என்னுள்ள வேண்டுதலை

ஆறுமுகா நீயே அருள் !!

 

💒அன்றாடம் தோத்தரித்து ஆண்டவரைப் போற்றுவதால்

மென்மேலும் தந்திடுவார் மேன்மைதனை — என்னுடைய

பாழ்மனத்தின் வேண்டாதப் பாவங்கள் மன்னித்தென்

ஏழ்பிறப்பும் காப்பார் இயேசு !!

 

☪️பிறைபார்த்து நோன்பை பிழையின்றி பூர்த்தி

நிறைவாக செய்திடுவேன் நித்தம் —இறையே

மறையோதும் தூய்மை மனம்பார்த்து நாளும்

குறையெல்லாம் தீர்க்கும் குதா !!

(குதா—அல்லா)

 

 

 

நீ கொடுத்த மறுபிறவி…!!!

***********************

❤️நேசத்தில் மூழ்கி நெஞ்சழுத்தும் வேளை

சட்டென பார்த்தது உன் முகம்தான்

மூச்சுக்கு வேண்டி முணகியபோது

அக்கரைக்கு அருகிருந்து

சுவாசம் கொடுத்தாய்

சொக்கிய மனம் சொந்தம் என்றது

 

துடிக்கத் துடிக்கத் துவண்டபின் தெரிந்தது

பிறவி இப்படித்தான் நமக்கென்று

பிரிவெல்லாம் இனி இல்லையென்றாய்

பேரின்பம் இதுவென்று பேசாமல் கிடந்தேன்

 

கண்கட்டி அழைத்து வந்து

கடவுள் காட்டிய உன்னை

பொத்தி வைத்து வணங்கும் எனக்கு

என்ன வேண்டும் இதற்குமேல்

 

ஆனாலும் என் அதரம் மதுரம் என்ற

குறும்பில்

நகம் கடித்து நகைக்கிறது நீ தந்த மூச்சு காதலுடன்…!!!

 

 

 

எப்படிச் சொல்வாய் நீ முடியாதுதான்

************************************

வெறுமனே கடந்து போதல் என்பது

வெறுப்பில் சேர்த்திதானே

அலட்சிய முகம் காட்டும்போது

கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்கிறாய்தானே

 

காலாவதி ஆகும்நிலை அன்புக்கும் உண்டா

சாயம் போதல் என்பது நேசத்திலும் நடக்குமா

 

சகுந்தலைப் பட்சிகள் வளர்த்த

குழந்தையிடம் கேட்டால்

துஷ்யந்த மறதி புரியும்

 

கவர்ச்சிக்கும், கண்ணியத்துக்கும்

காத தூரம்…!!!

 

 

 

புத்தக பிம்பமும் உண்மை நானும்…

********************************

எல்லாவற்றுக்கும் சிரிக்காதே

மரப்பசு அம்மணி ஆக்கப்படுவாய் என்றார் தி்.ஜா

 

அப்பிராணி இரக்க குணத்துடன்

பிரிவோம் சந்திப்போம்

ஏமாளி மதுவா நீ

கேட்டார் சுஜாதா

 

பொய் ஏற்றுப் பழகும்மா

உண்மையில் மட்டும் உயிர் வைத்தால்

காதலையே துறந்த

அது ஒரு கனாக்காலம் சுகந்தா போல்

வருத்த வேண்டும்

எச்சரித்தார் ஸ்டெல்லா ப்ரூஸ்

 

கலைகளில் உருகாதே,இளகதே

மீறல்களில் முன்னோடி அவைகள்தான்

மெர்க்குரிப் பூக்கள் சியாமளியைக் கேள் பெண்ணே புரியும்

சொன்னார் பாலகுமாரன்

 

எல்லாவற்றிலும் என் அப்பா குரல்

 

பெண் பிம்பங்களின் பின்னால் திரிந்து

எழுத்துக்களில் உலா வந்து

புத்தகங்களில் கிறங்கி

அறிவுரைகளில் மயங்கி

 

உண்மை பயமுறுத்தும் நேரங்களில்

மீண்டும் புதைந்து கொள்கிறேன் காகிதக் கண்ணாடிகளில்

என்னை அழகாகப் பிரதிபலிப்பவை அவை மட்டுமே…!!!

 

 

 

பாரம் தரும் தூரம் அதிகம்…

****************************

என் சிறு பிணக்கின் இடைவெளி

உன் வசதியாகும் அளவுதான் நாம்

வாழ்ந்திருக்கிறோம் இல்லையா

 

நேசப் பிரதேசங்கள் நசுங்கும் நெரிசல் நிலையை

பின் எப்படித்தான் வெளிப்படுத்த

 

நிம்மதிக்கூடு நிறம் குறையும்போது

ஆசைப் பயிர் நுனி வாடும்போது

அப்படி இப்படித் தோன்றுவதுதானே

அன்பு செய்யும் வம்புத்தனம்

 

இலேசாக தலைவருடி உறுதியை உணர்த்தேன்

பிரியத்தின் அடர்த்தி பெரும் பாரம்

நெருப்பு வளர்க்கும் நேசக் காய்ச்சல்

சுடுகிறது குளிரக் குளிர…!!!

 

 

வயிறு நிறைய உலகம்…

****************************

“அம்மா பசிக்கிறது”என்று வயிறு தடவி கையேந்தியது ஒரு குழந்தை

 

“பசித்தால் வயிறு வலிக்குமாம்மா” என்றது

இன்னொரு குழந்தை

 

இரண்டு குழந்தைகளுக்கும் நடுவே

இருந்தது ஒரு கார்…!!!

 

 

 

எப்படி இருந்தாலும்

கவிதை எழுதத் தெரிந்திருந்தாலும்

அப்படி எழுதியிருக்க மாட்டாள்

ஒருபோதும் கண்ணம்மா

 

வார்த்தை தவறிவிட்டாய்

பாரதி என்று…!!!

 

 

எனக்கே ஆனதுதான்…

*********************

உபவாச நாழிகைக்காய்

உத்திரத்தில் மடித்து வைத்திருந்த

உயிர்கூடு

உன் வருகைக்குப் பின் காணவில்லை

 

உள்ள அன்பை எல்லாம் வார்த்து உருவாக்கியது

உள்ளே நானும் இருந்தேன்

 

எடுத்தது உண்டானால்

என்னிடம் கொடுத்து விடு

எனக்கு என்றால் அது எனக்குத்தான்

எனக்கே எனக்கென்றால்

எப்படியும் அது உனக்குத்தான்…!!!

 

 

 

முனை மழுங்கல் உன்முன்தான்…

***********************************

ஞான ஊற்றைத் திறந்து விட்டாய்

கொட்டித் தீர்க்கையில்

நனைந்து நிற்கிறேன் பார்

 

முனை மழுங்கிய கூர்மை

முதுகு சொறிந்து கொள்ளும்

மூழ்கிவிட்ட பின் மூச்சு பற்றி என்ன

மீனாகிப் பின் மானாகி, நானாகி விடுகிறேன் தினமும்

 

எல்லாம் பார்த்து ஏளனம் கொள்ளாதே

வேறுநிலை வித்தகி நான்

உன்முன்தான் வெற்று

 

நேசப் பெருங்கடலில் உவர்ப்பில்லை

பாசம் பொழிகையில் போதவில்லை

சூரியனை முழுதாய் கேட்கும் சுயநலத்தை சபிக்காதே

 

நான் வானமாகி நிற்கிறேன்

வந்துபார்…!!!

 

 

 

*ஆறு வெவ்வேறு வெண்பாக்கள் எழுதவும்

*அதில் ஒரே தனிச்சொல் வைக்கவும்.

*காசில் முடிக்கவும்.

*ஒவ்வொரு பாவிலும் ஒரு மலரின் பெயர் இடம் பெற வேண்டும்

*இவை ஆறுமே அந்தாதியாக எழுதவும்.

 

எல்லா நிபந்தனைகளும் ஏற்று

எழுதிய வெண்பா

 

கரம்பற்றும் முன் இப்படித்தான்

*******************************

எப்படித்தான் சொல்வேன்

    எனதுமனம் உன்னிடம்தான்

இப்படியே பார்த்தால்

   இனிக்குமா?—அப்படியேன்

பார்க்கின்றாய் மல்லிகைபோல்

      பாவையிவள் பாவமன்றோ

வேர்க்கிறது போகாதே

       விட்டு!!

 

விட்டுவிட்டு வந்தெந்தன்

    வீறாப்பை நோகடித்து

சொட்டிக் கலங்கடிக்கச்  

    சொன்னாயோ — அப்படியேன்

செய்கிறது ஊசிமுல்லைச்   

     சின்னமழை வம்பிழுக்கப்

பெய்கிறதோ என்மேனி

      பட்டு!!

 

பட்டால் பழிவருமோ

    பால்முகமும் மாறிடுமோ

மொட்டாய் அனிச்சம்பூ

     மேனியிவள் — அப்படியேன்

செய்வதென்று ஆராய்ந்து   

      சென்றாயோ ஆணழகே

மெய்தானா பேசேன்இம்

       மட்டு!!

 

மட்டற்ற நேசத்தில்

     மங்கைமனம் மோகத்தில்

சட்டென்று சாய்ந்தாளிச்

     சாமந்தி —அப்படியேன்

வீழ்ந்தேனோ பேரன்பின்

     வீச்சில் அயர்ந்தேனோ

பாழ்மனத்தை சொல்லிவிட்டேன்     

      பிட்டு!!

 

பிட்டுக்கு மண்சுமந்த பிள்ளையவன்   

    பேரருளால்

தட்டேந்தித் தந்தமனம்

    தாமரையாம் — அப்படியேன்

நான்செய்தேன் என்றெண்ணி   

      நாணத்தில் வீழ்வதற்குள்

ஏன்வந்து தாங்கேன்ஓர்

      எட்டு!!

 

எட்டூரும் பூமணக்க

    என்னைநீ கைப்பற்றி

தொட்டாள இன்பம்

      தொடராதோ — அப்படியேன்

செய்தாய் எனக்கேளாச்

      செண்பகமாய் உள்நிறைந்து

மெய்ம்மலர்வேன் அப்போது

       மொட்டு!!

 



View

மாதாந்திர பரிசு

அ.சீனிவாசன்

View

மாதாந்திர பரிசு

கே.பாலன் வடக்கத்தியான்பட்டி

View

மாதாந்திர பரிசு

ஆயிஷா பாத்திமா

View

மாதாந்திர பரிசு

ஸ்ரீவாரிமஞ்சு

View

Showing 201 - 220 of 727 ( for page 11 )