logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 841 - 849 of 849

Year
Award
   

கவிச்சுடர் விருது

  • வேதா நாயக்

0   1345   0  
  • April 2017

கவிச்சுடர் விருது

  • ஆண்டன் பெனி

1   2012   0  
  • March 2017

கவிச்சுடர் விருது

  • அன்பில் பிரியன்

0   1518   0  
  • February 2017

கவிச்சுடர் விருது

  • அகதா செந்தில்குமார்

0   1410   0  
  • January 2017

மாதாந்திர பரிசு

  • நிஷா மன்சூர்

0   1600   0  
  • May 2016

மாதாந்திர பரிசு

  • முருக தீட்சண்யா

0   1181   0  
  • May 2016

மாதாந்திர பரிசு

  • ஆனந்தி ராமகிருஷ்ணன்

0   1161   0  
  • May 2016

மாதாந்திர பரிசு

  • சந்துரு

0   1155   0  
  • May 2016

மாதாந்திர பரிசு

  • முருகன் சுந்தரபாண்டியன்

0   1463   0  
  • May 2016

கவிச்சுடர் விருது

வேதா நாயக்

கவிச்சுடர் வேதா நாயக் – ஒரு அறிமுகம் ********************************************************  படைப்பு எனும் இந்த முகநூல் குழுமம் தொடங்கிய நாட்களிருந்து ஒவ்வொரு படைப்பாளியும் தத்தம் பாணிகளில் எழுதி முத்திரை பதித்து வருவது கண்கூடு. அந்த வரிசையில் இந்த மாதம் கவிச்சுடர் பெறும்படைப்பாளி வேதா நாயக் அவர்களைப் பற்றியும் படைப்பு குழுமத்தை ஆதரித்து வரும் படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்ய அவசியமில்லை என்றாலும் நாள்தோறும் இந்த குடும்பத்தில் இணைந்துவந்துகொண்டிருக்கின்ற புதிய படைப்பாளிகளின் கவனத்துக்காக ஒரு அறிமுகக்கட்டுரை அவசியமாகிறது.  கவிஞர் வேதா நாயக் இயற் பெயர் வேத நாயகம், வேலூர் அருகே உள்ள போளூர் கிராமத்தில் பிறந்தவர். வயது 41, இந்திய அளவில் பிரசித்தி பெறவே தன் பெயரை நாயக் என மாற்றிக் கொண்டார். அந்த அளவு இந்திய மரபில் விருப்புடையவர். நாற்பது வயதுடைய இவரின் எழுத்து எண்பது வயதின் அனுபவம் நிறைந்து காணப்படுவது இவருடைய எழுத்துக்கு ஒரு சான்று. அவரது தங்கை மகள் பெயர் ஹேமா. தனது தங்கை மகள் மேல் மிக்க நேசங்கொண்டவர். ஆதலால் தனது கவிதைகளை ஹேமா என்ற பெயரிழும் எழுதி வருபவர். மேலுமிவர் மஹாபாரதத்தில் அர்ஜூனன், பீமன் ஆகியோரின் வாழ்க்கையை ஒற்றி சிறுகதைகள் எழுதி வருகிறார் மேலும் இவர் சமஸ்கிருத மொழி இலக்கியத்தில் ஈடுபாடுடையுவர். இவரது பெரும்பாலான படைப்புகளில் சமஸ்கிருத மொழி சொற்கள் வர இவையே காரணம்.  திருவண்ணாமலை இவரது விருப்பத் தளம். அது போல் மலை பிரதேசங்களை மிகவும் விரும்புவார். திரைத்துறையிலும் ஈடுபாடுடைய வேதா, தற்சமயம் சில இயக்குனர்களோடு அவர்களது கதைவிவாதங்களிலும் பங்கேற்கிறார். தற்சமயம் சில படங்களில் பாடல் எழுதவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். கோட்பாடுகள் மீது ஈடுபாடு இல்லாதவர். பெரும்பாலும் உணர்வின் மொழியையே கவிதைகளில் புதைப்பவர். நீர் நிலைகள் குறித்த பெருங்கட்டுரைகளை தனது முகநூலில் எழுதியுள்ளார். குறைந்த ஊதியத்தில் பணியாற்றினாலும், தினசரி முப்பது ரூபாய் என்ற கணக்கில் புத்தகங்களுக்காக சேமித்து வைத்து சென்னை புத்தகக் கண் காட்சியில்வருடந்தோறும் நூல்கள் வாங்குவார். அந்த அளவு இலக்கியத்தின் மேல் அதீத ஈடுபாடுடையுவர்.  வேனிற் காலங்களை பெரும்பாலும் வெறுக்கும் வேதா, தன் கவிதைகளில் வேனிற் கால எரிச்சல் பற்றி பெரிதும் குறைபடுகிறார். எழுத்தாளர்கள் ஜெயமோகன், ஜி. குப்புசாமி ஆகியோர் மீது அதிகஈடுபாடுடையவர். ஜப்பானிய சிறார் இலக்கியங்களையும் , காமிக்ஸ் புத்தகங்களையும் குழந்தையை போல் இன்றும் ஈடுபாடோடு தேடி வாங்கி படிப்பவர். இலக்கிய நாட்டத்தோடு வரும் இளந் தலைமுறைக்கு,வேதா படிக்கக் கூறும் நூல்களில் காமிக்ஸ்கள் நிச்சயம் அடங்கும். சங்க தமிழ் இலக்கியங்களில் வேதா கொண்ட ஈடுபாட்டிற்கு வேதாவின் மிதியடி, பச்சை குத்துவது போன்ற கட்டுரைகளே பெரும் உதாரணங்கள். படைப்பில் இவர் இயற்றிய மற்ற கவிதைகளைப் பற்றி முதலில் பார்ப்போம்.   கவிச்சுடர் வேதா நாயக் கவிதையும் அவர் பார்வையும் : ------------------------------------------------------------------------  மென்மையின் சூட்டை குளிர்வித்தல் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நான்கைந்துகளை  அடைக்கக் கொள்ளுமாறு சாணம் மெழுகிய உள்ளறை, எச்சத்தினை விளக்குமாற்றின்  அடிக்கட்டையில் அழுத்தி எடுக்க முயன்றும் இன்னுங் கசப்பாய் அடியில் படிந்திருத்தலால் கிழிந்த புத்தகங்களின் கனத்த அட்டைப்பாவி நாளான செய்தித்தாள் மேற்பரத்தி, சுவாச இடையூறு ஏற்படா வண்ணம்  வளி நுழைய சின்னஞ்சிறு இடைவெளி, மூடாப்புக்காய் இரும்புத் தகடு, அதன் மேல் சாற்ற கருங்கல் பலகை(தேடுவதொன்றும் அவ்வளவு எளிதல்ல) என முன் தயாரிப்புகளை  தகர்த்தெறிகின்றன வயலில் நெற்கதிர்களை தின்று கொழுத்த வெள்ளெலிகள்; கரும்புத் தோட்டத்தில் நள்ளிரவில் அடிவயிற்றை கலக்கும் குரலில் ஊளையிடும் குள்ள நரிகள்; ஆங்காங்கே மேயும் பாம்புகளென இத்தனைத் தடைகளையும்  தாண்டியான பின் பகல்களில் கோழியை மிதிக்கும் சேவல்களும்  காபந்து பண்ணிக்கொள்கின்றன பரஸ்பரம்..., இருள்சாயத்துவங்கும் நேரத்திற்கு வெகு அருகே கூச்சலிடுவாள் அம்மா' வழக்கமா வெக்கற  இடத்துல காணோம், போய் தேடுங்க'., சனியன் பிடிச்ச கோழி  இட்டிருப்பதெல்லாம் கத்தாழை செடி அருகேயும், ஆள் நுழைய இயலா முள் நிரம்பிய  புதராயும், நெடிது வளர்ந்த புற்றின் ஓரமாகவும் தான் என்பது எத்தனை அபஸ்வரமானது என  முட்டையை உடைத்து ஒரே வாயில்  விழுங்கி விட்டு தேகப்பயற்சி செய்பவனுக்கு தெரியவா போகிறது?  ஒரு கவிதையின் வெற்றி என்பது சொல்லாடலின் சூட்சமத்தில் இருக்கிறது.அதை சரியாக பயன் படுத்தும் போது கவிதையின் வெற்றியை பார்க்க நேரிடலம்.சில கவிதைகளை கேள்வியில் முடிப்பது சிந்தனை தூண்டும் செயலாகும்.இன்னும் இந்த உலகத்திற்கு இரண்டு வகை யான மனிதர்கள் மட்டுமே தேவை.  ஒன்றுகேள்வியை கேட்பவர்கள்.இன்னொன்று கேள்விக்கான பதிலை தேடிகொண்டே இருப்பவர்கள் இப்படி கேள்விகளையும் கேள்விக்கான தேடல்களையும் கொண்டவர் தான் வேதா.  ------------------------------------  வினோதரச மகரந்தத்துகள் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ வீட்டிலிருந்து கொணர மறந்த இளைஞனொருவன் சட்டைக்காலரை கைக்குட்டையென பாவித்து அவசரமாய் வழியும் வியர்வையை அழிக்கிறான்.  குடை எடுத்துவர மறந்த  எழுபது வயது மனைவியை தூஷித்தபடி அண்ணாந்தபடி பார்த்தவாறு இருக்க வைத்து கண்களில்  சொட்டு மருந்தை விடுகிறான் ஒரு கிழவன்.  இலவச இணைப்பின் உபயத்தில் நீண்ட நேரமாய் கைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் மாணவியானவள் செவி, கன்னம் வழிஒழுகிய வியர்வையை கைபேசியின் திரை முழுக்க ஒட்டிக் கொண்டிருப்பதை கண்ணுற்று  அசூயையாய் பிருஷ்டத்தில் தேய்த்து மீண்டும் உரையாடலை தொடர்கிறாள்.  வெள்ளரிப் பிஞ்சுகளை நெடுக்கக் கீறி உப்பு மிளகு தடவி விற்பவன்  சட்டையின் ஐந்து பொத்தான்களை கழற்றி விட்டு ஐஸ்கிரீம் கடையிலிருந்து பனிக்கட்டிகளை வாங்கி சிறு துண்டில் முடிச்சிட்டு கன்னத்திலும், மார்பிலும் அறைந்து கொள்கிறான்.  குளிர் சாதனம் பொருத்தப்பட்ட  காரின் உள்ளே பசி கிள்ளும் வயிற்றோடு பணக்காரத் தம்பதிகள் சாலையோர உணவக பசியாறலுக்காக கதவு திறக்கையில் அனற் காற்று முகத்தில் அறையப்பெற்று ஸ்தம்பித்து இரண்டு கணங்கள் தயங்கிப்பின் வெளிவருகிறார்கள்.  சிறு குழந்தை ஒன்றின் வியர்த்தலை சேலைத் தலைப்பில் அழுந்தத் துடைத்த பின் பாலியஸ்டரின் வெம்மையில் மேலும் வீறிட்டு அழுவதை தாளாமல் கண்கள் பனிக்க செய்வதறியாமல் திகைக்கிறாள் தாயொருவள்.  ஜன்னலோர இருக்கைக்கு தாவியேறி அமர்ந்த பின் வெயிலின் வெம்மையில் மூச்சுத்திணறி இத காற்றுக்கேங்கிய நிறைசூலிக்கென விட்டுக்கொடுக்கும்  ஒரு தறுதலைக்காகவேனும் என்றோ ஒரு நாள் மழை பெய்யக் கூடும்.  கவிதையை படித்துக்கொண்டே இருக்கும் போது அதன் காட்சிகளை கண்முன்னே பார்க்குமாறு எழுதுவதென்பது மிகச்சிறந்த ஆளுமைதிறன்.  ஒரு பேச்சாளர் பேசும் போது எப்படி அவை முழுக்கஆளுமை செய்கிறாரோ அப்படியே தான் கவிஞர்களும் படிக்கும்போது கவிதையை நடந்துக்கொண்டிருக்கும் செயல் போல் உணர்த்தி விடும் திறமை மிக்கவராக இருக்க வேண்டும். அப்படியான திறன் கொண்டவர் தான் நம் வேதா. இவரின் தீரா காதல் மனிதர்களை விட அதிகமாய் புத்தகத்திடம்தான் செலவு செய்கிறார்.  ஒரு மீனும், ஒரு பறவையும் எப்போதும் தடயங்களை  விட்டுச் செல்வதில்லை  வேதாவின் பார்வைக்கோணேம் மிக அழகான ஆழமான படிமத்தை போர்த்திக் கொண்டிருக்கும்.வேதா நல்ல கவிஞன்,தேர்ந்த வாசிப்பு மிக்கவர் என்பதைவிட அவர் நல்ல புகைப்பட ரசனையாளர் கூட இவர்கவிதையில் பதியப்படும் படங்கள் வித்தியாசம் கொண்டவை எனப்பதைவிட பிரம்மாண்டம் நிறைந்தவை. கவிதைகளைவிட புகைப்படத்திற்கான தேடல் நேரம் அதிகம் என்பதை பார்க்கும் போதே அனுமானித்துக் கொள்ளலாம்.  "சட்டகத்தின் இருப்பிடமும்  குழைந்த சோற்றுப் பருக்கையும்"என்ற கவியதையின் மூலம் நமக்கு சொல்லித்தருகிறார்...  "சில ஓவியங்கள் உங்களது  பார்வைக்குப் பட்டு விழிகளைத் துளைத்து  பின் மண்டை வழியே  வெளியேறி விடத்தான் துடிக்கிறது"  என்று தொடங்கும் இக்கவிதையில் உலக கவிஞர்களின் உயர்ந்த பார்வையின் வரிசைக்கு நம்மை அழைத்து போகிறார்...  இவரின் சில உலகத்தரம் வாய்ந்த ஆளுமை நிறைந்த கவிதைகளை உங்களுக்காக மீண்டும் சமர்ப்பிக்கிறோம்...  ஒரு நத்தையை, ஆமையைப் போல்  உள்ளுக்கிழுத்தலில்  கழுத்தோரங்களிலும், கைகளிலும் சிராய்ப்பு ஏற்படுகிறது.., ஒரு பூனையை, புலியைப் போல் பதுங்குகையில் பிருஷ்டம்  முட்களால் குத்தப்படுகிறது.., அரிமா போல் கர்ச்சிக்க முனைகையில் சிசு தேம்புவது போல் குரலெழும்புகிறது.., ஒரு வரையாடு உச்சியை அடைய  தம் கால்களை எவ்வாறு  லாவகத்துடன் பயன்படுத்துகிறதோ அதே போல் நகலெடுத்தலில் சில சிக்கல்கள்  இருப்பதால் அசலின் மூலமாய் எல்லாம் இழப்பதென்றாலும் ஏற்பே. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  தீர்க்கவியலா நோயின் ஒற்றைக் குரைப்பொலி கைகளை இறுகப்பற்றி மெலிதாய் நீவி  ஒன்றுமில்லை பயப்படும்படி எனவும்., கண்கள் மூடி பிதற்றும் வார்த்தைகளை அருகமர்ந்து அணைப்பதே போலச் செய்து உம் ' காரத்தை அதிகப்படியாய் செவிகளில் படும்படி ஒலிக்க செய வேண்டும்., வேண்டுமெனில் ஆடைகளைத் தளர்த்தி வியர்வை துளிர்க்கும் இடங்களை குறிவைத்து பனை மட்டை விசிறியால்  ஆசுவாசப்படுத்தலாம்... கண்டிப்பாக மின் விசிறி பயன்படுத்துதல்  தவிர்க்கப்படுகிறது.., உங்களது அன்புக்குகந்தவர் எனில் சில நிமிடங்கள் அணைத்தபடி உடன் படுத்திருப்பது சாலச் சிறந்தது... விடுபட்டு எழுந்து 'உனது நோய்மை  என்னையும் கபளீகரம் செய்து விட்டது பார்' என நம்மை தொட்டுப் பார்த்து  உறுதி செய்து கொள்ளச் செய்யலாம்.., படுக்கையிலிருந்து எழ முயற்சித்து தளர்ந்து கீழே விழ நேர்ந்தால் கரம் நீட்டி உறுதியான விரலில்  ஏதோ ஒன்றை நீட்டி பிடித்தெழும்ப வைத்து காதோரம் ' உனது வெளிறிய உதடையும்; நடுங்கும் கால்களையும் ,  பஞ்சடைத்த செவிகளையும், குழைந்த நீர் சேர்ந்த விழிகளையும் நான் முன்பு பெற்றிருந்தேன், இப்போது கனவு போல் எனக்கு தெரிவது போல் நீயும் விரைவில் தெளிவாய்' என்று தெளிவாய் சொல்லி விடலாம்.., மருந்தெனக் கொள்வது  மனம் எனும் நாணல்  சூறைக்கு வளைந்து தருதலாம். --------------------------  இசைக்கும் எனக்கும்  யாதொரு இணைப்புமில்லை... பிணக்குமில்லை. கேட்பதை உள்வாங்க  நேரமுமில்லை... போர் நிகழ்கிறது, காற்றின் ஈரப்பதம் கூட வற்றி தன்நிலை இழக்கிறது... நின்ற இடத்திலேயே  தலையுடன் காதையும் ஆட்டியபடி உடல் நடுங்க நின்றிருக்கும்  வயோதிக நாய் என்னென்ன  நினைத்துக் கொண்டிருக்குமோ அறியேன்... மனக்கண்ணில் ரொட்டிகளும், என்புத் துண்டுகளாக மிதக்கும்  காட்சி வரும் வரை அவ்விடத்தை விட்டு நகராமல் இருக்கும் என்பது  நிச்சயமாகையில்  அந்நாயும் நானும் சந்திக்கும்  புள்ளியிலிருந்து விலகி, எனைப் பரவசப்படுத்தும்  இசைக் கோர்வை ஒன்றுக்காக ஏங்கி நின்ற இடத்திலிருந்து  விலகாமல் காத்திருக்கும்  பொருளீட்டும் பெயரற்ற அறிவிலிக்கு என்ன பெயர்? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~  ஆதுர மொழிகள் தூவிப் பொழிந்து சிறிது, சிறிதாக உறைந்த நிலையை உருக்கலாமென எண்ணம் ஏற்றி வெவ்வேறு இடங்களுக்கு, வெவ்வேறு காலங்களில்  வெவ்வேறு எனது மனநிலைகளில் கைப்பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு அலைந்தேன்... உணவகங்கள், நடைபாதைகள், திரையரங்கம், பேருந்து நிறுத்தங்கள், கடலோரங்கள், ஆறுகள் என... ஏதோ ஓர் அற்பக் காரணத்தை முன்னிறுத்தி அதற்கு பின்பு உறுமும் புலியாய் பதுங்கிக் கிடந்து முகம் தூக்கி வைத்திருப்பவளை சமாதானங் கொள்ள எந்த ஆயுதமும்  சரியாய் செயற்படவில்லை... கொஞ்சங் கொஞ்சமாய்ச் சூடேறி சோற்றுலையின் கொதிநிலைக்கு  ஒவ்வொரு நாளாய் மெருகேறும் தங்கமாய் ஆகிறாள்... கை நிறைய கூழாங்கற்கள் நிரப்பி சறுக்கு மரத்தின் மேல் முனையில்  கடினப்பட்டு மேலேறி உருட்டி விட்டபின் கடகடத்து வழுக்கி இன்னும் மூளியாகும்  அவசரத்தோடு  தரை மேல் சிதறும் ஒலியால் குலைந்த அவளை ஆற்றுப்படுத்திப் புன்னகைக்க  செய்தது குழந்தைகள் விளையாடும் பூங்கா ஒன்றில்தான் என்பதை நினைவு கூர்கிறேன். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  இப்படி பல்லாயிரக்கணக்கான நவீன கவிதைகளை எழுதி இந்த காலத்தில் இவருக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு நவீன இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு உலகத்தரம் வாய்ந்த எழுத்தாளர் இவர் என்பது இவரின் எழுத்துக்களே சொல்லும்...  இந்த இரசனையான எழுத்துக்களின் முன் பிரம்மித்து நிற்கும் படைப்புக் குழுமம் கவிச்சுடர் வேதா நாயக் அவர்களை வாழ்த்தி வருங்கால இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்று அவரது எழுத்துக்கள் உலகெங்கும் பவனி வரவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறது !!  வாழ்த்துக்கள் கவிச்சுடர் வேதா நாயக்  வளர்வோம் வளர்ப்போம், படைப்பு குழுமம்.

View

கவிச்சுடர் விருது

ஆண்டன் பெனி

கவிச்சுடர் ஆண்டன் பெனி  ஒரு அறிமுகம்
*************************************************************

படைப்பு எனும் இந்த முகநூல் குழுமம் தொடங்கிய நாட்களிருந்து ஒவ்வொரு படைப்பாளியும் தத்தம் பாணிகளில் எழுதி முத்திரை பதித்து வருவது கண்கூடு. அந்த வரிசையில் இந்த மாதம் கவிச்சுடர் பெறும் படைப்பாளி ஆண்டன் பெனி அவர்களைப் பற்றி படைப்பு குழுமத்தை ஆதரித்து வரும் படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்ய அவசியமில்லை என்றாலும் நாள்தோறும் இந்த குடும்பத்தில் இணைந்து வந்துகொண்டிருக்கின்ற புதிய படைப்பாளிகளின் கவனத்துக்காக ஒரு அறிமுகக்கட்டுரை அவசியமாகிறது.

கவிஞர் ஆண்டன் பெனி அவர்கள் தமிழ்நாடு அரசின் ஒரு உயர்பதவி வகிக்கும் ஒரு அதிகாரி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இவர் முக நூல் தவிர பற்பல வலைத்தள இலக்கிய ஏடுகளிலும் தமிழ் நாட்டின் பழம்பெரும் வார இதழ்களிலும் தொடர்ந்து கவிதைகள் படைத்து வருபவர். ஆண்டன் என்கிற மகனின் பெயரையும் பெனி என்கிற மகளின் பெயரையும் சேர்த்து ஆண்டன் பெனி என்கிற புனைப்பெயரில் தற்போது கவிதைகள் படைத்துவரும் இவரின் இயற்பெயர் திரு ரவிக்குமார். ஆண்டன் பெனி என்கிற புனைப்பெயர் தவிர இவர் முன்பு புதிய கோடங்கி என்றும் பட்டினத்தார் என்றும் புனைப்பெயர்களில் இவர் படைத்து வந்த பல கவிதைகள் இலக்கிய வலைத்தளங்களில் பிரபலமானவை.

படைப்பு குடும்பத்தில் மகளதிகாரம் என்கிற பரிசுப்போட்டி நடத்த காரணகர்த்தாவாக விளங்கியவர். இதுவே படைப்பு குழுமத்திகின் முதல் பரிசுப்போட்டியாகவும் இருந்தது. அந்த போட்டிக்கு பிறகு அவர் தொடர்ச்சியாக எழுதி வருகின்ற மகளதிகாரம் கவிதைத் தொடர் இன்று வலைத்தளங்களில் வைரலாகி வாட்சப் என்கிற அலைபேசி தொடர்பு குழுமங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெரிதாக பேசப் பட்டு வருகிறது என்பது எல்லோரும் அறிவர்.

படைப்பில் இவர் சமர்ப்பித்த கவிதைகளில் படைப்பாளி நண்பர்களுக்கு மிகவும் பரிச்சயமான மகளதிகாரக் கவிதைகள் பற்றி கூறும் முன்பு இவர் இயற்றிய மற்ற கவிதைகளைப் பற்றி முதலில் பார்ப்போம். பள்ளிப்பருவ நாட்களின் நினைவலைகளில் என்றென்றும் அசைபோட வைக்கும் முதல்காதல் பற்றி இவரின் ஒரு கவிதையை வாசிக்கும்போது படைப்பாளிகள் தங்களின் மலரும் நினைவுகளுக்கு சென்று வர செய்து விடும் இந்த கவிதையை பாருங்கள்:-

என் அறையெங்கும் இறைந்துகிடக்கிறாள்...
****************************************************************
ஊரிலிருந்து முத்துராசு
என் விலாசம் தேடி வந்திருந்தான்.
பள்ளியின் வேப்பங்கன்று
பெரிய மரமாக வளர்ந்துவிட்டதாம்.
பிரம்பெடுத்து ஓடஓட விரட்டிய
எட்டாம் வகுப்பு சார் போன வாரம்
சிறு விபத்தொன்றில்
படுத்த படுக்கையாகிவிட்டாராம்.
நன்கொடையில் புதிதாகக் கட்டப்பட்ட
மூன்றாம் வகுப்பு கட்டிடத்தின் கல்வெட்டில்
என் பெயரை முதல்ல போடவச்சதே இவன்தானாம்.
புதுப்புது சாரும் புதுப்புது டீச்சருமா
உள்ளூரிலேயே இருக்கும் அவனை
வேற்றாளாகப் பார்ப்பதாகவும்.
சிறுபிள்ளையின் குதூகலத்தில்
விடிய விடிய
அவனே கொண்டு வந்திருந்த
கருப்பட்டி மிட்டாய் தீரும்வரை பேசியவன்,
ஒரு நீளப் பெருமூச்சில் தன்னை
ஆசுவாசப்படுத்திக்கொண்டு...
அவனோட முத்துமாரி வாக்கப்பட்டுப்போன இடத்தில்
வாழப்பிடிக்காம வந்துவிட்டதாகச் சொன்னபோது
கண்கலங்கியிருந்தான்.
ஊருக்குத் திரும்பும் போது
சுற்றிலும் எச்சரிக்கையுடன் பார்த்துவிட்டு
சன்னமான குரலில்
ஒம் மல்லிகாதான் எங்கஇருக்கான்னு
இதுவரை தெரியலடா… எனச்சொல்லி
அழத்தெரியாத எனக்கு
என் நினைவெங்கும் மல்லிகாவை
இறைத்துவிட்டுப் போயிருந்தான்.

மானிடர் மத்தியில் நித்தம் செத்துக் கொண்டிருக்கும் மனிதம்...நான் எனது என்கிற சுயநலம் பொங்கி நிற்கும் இந்த காலத்துக்கேற்ற ஒரு கவிதையை ஒரு விபத்தில் இறக்கும் நாயின் அவல நிகழ்வாக சித்தரிக்கும் இவரின் கவிதை சுயநல மனிதர்கள் முகத்தில் வீசப்படும் ஒரு அமில வீச்சாய் வந்து தெறிக்கிறது:-

பூத்துக் குலுங்கும் யோசனை மரங்கள்
**************************************************************
வாகனம் ஒன்றில் அடிபட்டு
நாயொன்று துடிதுடித்தது.
அடையாளம் தெரிந்தும்
அடிபட்ட நாயால்
மோதிய வாகனத்தை
அடையாளம் காட்ட முடியவில்லை.
நாயின் வலிமிகுந்த
குரைத்தல் கேட்டு
நாய்களின் பெருங்கூட்டம் கூடிற்று.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக
குரைக்கத் துவங்கின.
முதலில் குரைத்த நாய்
மோதிய வாகனத்தின் எண் கேட்டது.
இன்னொன்று போக்குவரத்தைக் குறை கூறியது.
மற்றொன்று பார்த்து வந்திருக்கலாமே என்று யோசனை சொன்னது.
வேறொன்று முன்னம் நடந்த
இதுபோன்றதொரு விபத்தை விவரித்தது.
மீத நாய்களெல்லாம்
புதிதாக என்ன சொல்லலாம் என்று
யோசனையில் இருந்த நிலையில் தான்
அடிப்பட்ட நாயின் உயிர் பிரிந்தது.
அது தெரிந்ததும் உடன் கலையத் தொடங்கின
எதெற்காகவோ கூடின நாய்களெல்லாம்...
அவைகளுக்குத்தான் வேலையுமில்லை,
நிற்க நேரமுமில்லையே.

சமுதாய அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மனிதனை கதாநாயகனாக சித்தரிக்கும் இந்தியக் கலைகளின் வெளிப்பாடுகள் தமிழ் நாட்டுக்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் சூழல்களை நிர்ணயிப்பதே திரைப்பட மாயைகள்தாம் என்பது வரலாறு. அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதென்பது வெறும் இரண்டரை மணிநேர இருட்டில் காணும் கனவாகவே ஒரு சாதாரண குடிமகனுக்கு இன்றும் இருந்து வருகிறது என்பதை கீழே காணும் அருமையான கவிதை மூலம் சித்தரிக்கிறார்...

அநீதிக்கு எதிராக முத்துராசுடன் இப்படியாக நாமும்
************************************************************************
தவறவிட்ட பேருந்துக்கு
அடுத்த பேருந்து வரும் வரை
ஒரு குளிர்சாதன திரையரங்கில்
காத்திருப்பதென உத்தேசம் முத்துராசுவுக்கு.
விளக்கு அணைக்கப்பட்டதும் உள்ளுர் விளம்பரங்களின்
படையெடுப்பினைத் தொடர்ந்து
அகன்ற திரையொன்றில் சினிமா காட்டினார்கள்.
கதாநாயகனவன் இடைவேளை வரை
ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளையாக
உறவுகளோடும் கதாநாயகியோடும்
ஆடி ஓடிக்கழித்தான்.
ஒரு முக்கியத் திருப்பத்தில்
விளக்குகள் ஔிர்ந்ததும் இடைவேளை வந்தது.
கேண்டீனில்
காற்றுப் பொட்டலங்களில்
விதிக்கப்பட்டிருந்த விலைகளின்
அநீதியைத் தட்டிக்கேட்க முத்துராசு பொங்கியபோது
அப்போது யாரும் அவனுக்குத் துணை வரவில்லை.
கதாநாயகன் தன் வழக்கமாக,
இடைவேளைக்குப் பின்னரே
அநீதியைக் கண்டு பொங்கினான்.
கூடுதல் ஒலியமைப்பின் கதாநாயகனின்
அநீதிக்கெதிரான அதிரும் சத்தம் கேட்டதுமே
கேண்டீன் கதவுகள் மூடத்துவங்கின.
கதாநாயகன் துணையுடன்
கதவைத்திறந்து பார்த்த முத்துராசுவுக்கு
அந்தப் பயம் பிடித்திருந்தது.

அதே முத்துராசு என்கிற பெயரில் மற்றுமொரு சமூக அவலமான ஒதுக்கப்பட்ட சாதிகள் என்கிற பெயரில் ஆண்டாண்டுகாலமாக இழைக்கப்படும் அநீதிகளை ஒரு எளிய நிகழ்வுக் கவிதையாய் தருகிறார்...

மஞ்சளாற்றுத் துயரத்தில் முத்துராசு மகன்
*****************************************************************
காலஞ்சென்ற முத்துராசு மகன்
பள்ளியில் வாந்தியெடுத்துவிட்டதால்
வகுப்பாசிரியர் இரண்டு மாணவர்களின் துணையோடு
அவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.
என்னத்த தின்னு தொலைச்ச எடுபட்ட பயலே?
பாதியில் வீடுவந்த மகனை சின்னத்தாயி கடிந்தாள்.
‘ஸ்கூல் பாத்ரூம்ல ஒன்னுக்கு போனேம்மா
நாத்தம் கொடல பொறட்டிடுச்சி
நானென்ன செய்ய?’ என்ற மகனிடம் கேட்டாள்,
கழுவத்தான் வேண்டாம்,
பெஞ்ச மூத்துரத்துல
ஒரு போணி தண்ணி ஊத்துறதுக்கு,
உங்கப்பன் செத்தபின்னாடி
ஆளில்லையா அங்க?
---------------------------------------------------------
அறிஞர் அண்ணாவின் செவ்வாழை சிறுகதையை நினைவுபடுத்தும் உழைக்கும் வறியவன் உழைப்பால் விளையும் பலன்கள் அவன் குடும்பத்தை அடைவதில்லை என்கிற சமுதாய அவலத்தை வலிமிகு வரிகளால் விவரிக்கிறது கீழே காணும் பலூன்காரன் கவிதை:-

பலூன்காரனுக்கு மூன்று குழந்தைகள்
************************************************************
பலூன்கள் வலுவிழந்து
காற்று வெளியேறும் முன்னமே
வெடிக்க வைத்தும்,
நூலறுத்து பறக்கவிட்டும்,
தேய்த்து ஒலியெழுப்பியும்,
விளையாடிக் கொள்ளத்
தெரிந்திருக்கிறது குழந்தைகளுக்கு.
விற்பனையாகாது வீடு திரும்பும் பலூன்களுக்கு
உள்ளுக்குள் முட்டும் காற்றினை இறக்கிவிட்டு
சற்றே ஓய்ந்து கொள்ளத் தெரிவதில்லை.
பலூன் ஒன்றினைத் தொட்டுவிடத் தவிக்கும்
பலூன்காரன் குழந்தைகளின்
ஏக்கப் பெருமூச்சின் வெளி அழுத்தம் உணர்ந்ததுமே
ஒன்றிரண்டு பலூன்கள் இரவோடு இரவாக
வெடித்துச் சிதறி தாங்களாகவே
மாய்த்துக் கொள்கின்றன.
காலையில் உடைந்துகிடக்கும்
பலூன் சதையில் சிறுமுட்டை செய்து
தலைக்குப் பதில் நெற்றியில்
விதியென அடித்துக் கொள்கிறார்கள்
அவன் குழந்தைகள்.

--------------------------------------------------

புவியெங்கும் பெண்மையின் பெருமை எழுத்துக்களில் மட்டுமே பெரிதாக பேசப்படுகின்ற இந்தக் காலத்தில்தான் மிருக வெறி பிடித்த காமுகர்களின் வன்புணர்வுக் கொடுமைகளும் பொது இடங்களில் கூட கண்கூடாக நடக்கும் அவலங்களை ஒரு கவிதையாக கொடுத்திருக்கிறார் நமது கவிச்சுடர் :-

இருள்சூழ் வேட்டை
***************************
அவன் கொழுத்த செம்மறியாடு போலிருந்தான்
தன் ஆந்தைக் கண்களை வெளியெங்கும்
அகோரப் பசியின்பொருட்டு மேயவிட்டிருந்தான்
மேலாடையைத் திறந்துவிட்டு
காட்டெருமையின் திமிலையொத்த
தன் புஜங்களில் மூக்கணாங்கயிறாகத் தொங்கும்
தங்கச்செயினை வறண்டு கிடந்த அந்த இருளிலும்
வெளிச்சமிட்டிருந்தான்.
ஒரு முதிர்ந்த பூம்பூம் மாடாக அவன் தலை
நிலையில்லாது ஆடிக்கொண்டிருந்தது.
எச்சிலும் தீர்ந்தபின் குரல்வளையை
தண்ணீர்விட்டு நனைத்துக் கொண்டான்.
நீலகிரியின் மூடிய பனிமூட்டத்தை விலக்கி
வெளிப்படும் சருகுமான் போல்
இரயில் பெட்டிக்குள் ஒய்யாரமாக நுழைந்த அவள்
வேட்டைக்கு அவன் விரித்து வைத்திருந்த
முப்பின்னல் நரம்பு வலையை உணர்ந்ததும்
இரயில் பூச்சியாக தன்னைத் தானே சுற்றிக்கொண்டாள்.
கடவாயின் ஓரங்களில் வளர்ந்திருந்த
அவன் கோரைப்பற்கள்
வெகுநேரக் காத்திருப்புக்குப் பிறகே
உள்ளிழுத்துக் கொண்டன.

கவிச்சுடர் ஆண்டன் பெனி அவர்களின் மகளதிகாரக் கவிதைகள் பெருவாரியாகப் பாராட்டுக்களைக் குவித்துக் கொண்டிருக்கும் வேளையிலும் அவரது மகன் பற்றிய கவிதைகளும் வாசகர்களால் பாராட்டப்படுவது படைப்பு நண்பர்கள அறிந்ததே. அப்படி ஒரு மகன் கவிதையையும் கீழே தருகிறோம் :-

மகன் நிமித்தம்
***********************
மகன் என் தோள் மீதேறி
தன் இரு கைகளையும் தூக்கி நிற்கையில்..
வானத்தில் அவன் விரல் நுனித் தடம்..!
***
மகனுக்கு
தலை வாருவதைக் கூடத் தவிர்க்கிறேன்...
அவனுள் என்னைத் திணித்து விடாதிருக்க..!
***
என் தந்தையின் தவறுகள்
என நினைப்பதை
நான் மகனுக்குச் செய்யாமல் இருக்கிறேன்
ஒரு தந்தை மகனுக்காற்றும் உதவியாக.
***
மகனை நெஞ்சோடு
இருத்திப் பழகிய பின்
மருத்துவப் பரிசோதனை
தேவையற்றதாகிவிடுகிறது…
***
மழை நாட்களில்
குடும்பத்தையே
காகிதக் கப்பலில் ஏற்றி
வீட்டுக் கரையிலிருந்து
கை காட்டுகிறான் மகன்…

நாதியற்றுப் போன நம் நாட்டு நதிகளின் நிலைமையை பற்றி இவர் எழுதிய ஒரு கவிதையை அவர் முடித்து வைக்கும் வரிகள் வலி(மை)மிக்கவை:-

இப்படியாக வாழ்ந்தோடிய
என் ஞாபக நதியொன்றின்
நினைவுகளின் மீதும்
உருண்டு திரிகின்றன
வாகனங்களின் காற்றடித்த உருளைகள்
இப்போதும் மாதம் முப்போதும்.

மகளதிகாரக் கவிஞரின் மகளதிகாரத் தொடர் கவிதைகளின் சிலவரிகளை இங்கே மீண்டும் உங்களின் பார்வைக்காக சமர்ப்பிக்காவிட்டால் இந்த கட்டுரை முடிவுபெறாது:-

கண்ணாமூச்சி விளையாட்டில்
நான் அப்பா என்பதால்
தேடிக்கொண்டேயிருப்பேன்
அவள் மகள் என்பதால்
தானாகவே வந்து கண்படுவாள்.

ஒற்றைமணிக் கொலுசுதான்
மகள் விளையாட விளையாட
கோவில் பிரகாரமாகிவிடுகிறது
வீடு.

அப்பா எனக்கும்
தலைவாரிப் பூச்சூட்டிப்
பொட்டிட்டுப் போகிறாள்
அத் தருணத்திலிருந்து
நான் தாயுமானவன்.

என்ன பெயர் கொண்டு அழைத்தாலும்
திரும்பிப் பார்க்கிறாள்
அவளுக்கென்று வைத்தபெயரோ
அப்படியே இருக்கிறது.

கோபம் என்றால்
முட்டிக்குள் முகம் புதைத்து
மௌனமாகிறாள்
மகிழ்ச்சியென்றால்
கைகளுக்குள் முகம் புதைத்து
அமைதியாகிறாள்
இவ்வளவுதானே தியானம் என்பதும்.

ரயில் சாளரக் கம்பிகளில்
தொக்கி நிற்கும்
சாரல் மழைத்துளிகளை
மகள் சேகரிக்கத் துவங்குகியதும்
விரும்பிப் பெய்கிறது
ஒரு பெருமழை.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்… என்று துவங்கிய
இன்றைய கதையில் இருந்த ஒரு பொய்க்காக
குட்டி இளவரசி கோபத்தில் இருக்கிறாள்.
ஒரு நாட்டுல ஒரு ராஜா எனத்திருத்தம் செய்து
அவள் கோபம் குறையக் காத்திருக்கிறேன்.

அவள் காலடித் தடங்களைக்
கவர்ந்து செல்லவே
பெய்யத் துவங்குகிறது
மீண்டுமொரு சாரல் மழை.

வீட்டில் பகல் முழுதும் ஒரு கலவரக்காரியின் ஆரவார நடைபோடும் மகளின் செல்லக் கலவரங்களை அடக்க முடியாத காவல்காரனாக திகழ்கிறார் இக்கவிஞர். விரல்நுனியில் மருந்து தேய்த்து அமுதமேந்தி வரும் பூமியில் பிறப்பெடுக்கும் மகளை ஒரு தேவதையாகப் பார்க்கும் இக்கவிஞரின் ஆளுமையை அடக்க பிரம்பேந்திய ஆசிரியையாக அந்தச் செல்ல மகள் வேடமிடுவதாக குற்றமும் சாட்டுகின்றார் இந்த அப்பா கவிஞர். அவரது வாரத்தில் மகளோடு விளையாடக் கிடைக்கும் ஞாயிறை எட்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று எண்ணிக்கையை கூட்டுகின்றார். சிரிப்பின் ரகசியங்களை தன்னோடு பகிர்ந்து கொள்ளும் மகள் தனது தேம்பலுக்கான காரணத்தை மட்டும் தன தோழிமூலம் அறிவிப்பது ஏனென்று தெரியாமல் திகைத்து நிற்கின்றார் தந்தையான இக்கவிஞர். மகளின் பிஞ்சுகால்தடங்கள் விட்டுச்செல்லும் முத்தத்துளிகளை குனித்து அள்ளும்போது சுட்டபழத்தையும் சுடாத பழத்தையும் அள்ளுகின்ற அவ்வைபிராட்டியாக மாறும் இந்த கவிஞரின் மகளதிகார முத்துக்கள் விரைவில் ஒரு தொகுப்பாக வெளிவரக் காத்திருக்கிறது.

இவருடைய தனித்தன்மை வாய்ந்த கவிநடையும் சொற்களின் சேர்மானமும் பல பாடுபொருள்களில் பல கவிஞர்களை மிரள வைத்துள்ளன... இவரது பல படைப்புகள் ஆனந்த விகடன் போன்ற பல முன்னனணி பத்திரிக்கைகளிலும் வெளிவந்திருப்பது இவர் கவித்துவத்திற்கு சான்றுகளாகும். மேலும் பாவலர் அறிவுமதி அவர்கள் தமிழ் மிக சிறந்த ஐம்பது கவிஞர்களின் கவிதைகளை தேர்வு செய்து வெளியிட்ட கவிதை நூலில் இவர் கவிதை இடம்பெற்றது இவரின் சாதனைகளின் ஒரு மகுடமும் மைல்கல்லுமே ஆகும்.

இவரது கவித்துவத்திற்கும் பாடுபொருளின் பார்வைக்கும் ஒரு படைப்பை பார்ப்போம்...

தனிமையின் இரவுகள்
*******************************
வெளிக்காற்றினை முற்றிலும் தடைசெய்த
குளிரூட்டப்பட்ட அறைக்குள்
வௌவால்களையொத்த திரைச்சீலைகள்
தலைகீழாகப் படபடக்கிறது.
ஒற்றைக்கண் ஆந்தையின்
ஔியூட்டப்பட்ட விழி
மஞ்சள் நிறத்தில் இரவுவிளக்காக
என்னை உற்றுநோக்கியபடியே இருக்கிறது.
கண்ணாடிகள் பூத்த
மேல்சுற்று அலங்கார வளைவுகளில்
வெளிமரங்களின்
நிழல் பாவைக்கூத்தில்
இராவண வதைப்படலங்கள்
காட்சியாகின்றன.
வனாந்திரத்தின் கோரக் காட்சிகளிலிருந்து
என்னை விடுவிக்க
தலையணைக்குள் முகம் புதைத்தால்
உன் விரகதாபத்தின்
சிற்றிழைகளின் வழிப்பாயும்
உயரழுத்த மின்சாரம்
இன்னுமாய் வதைக்கிறது.
உன்னிலிருந்து என்னை வலிய விடுவித்து
வனாந்திரத்திற்கே மீண்டும் வந்து
இரவுக்கே என்னைத் திண்ணக் கொடுக்கிறேன்
--------------------------------------

வெட்கச்சாட்டு திருமணச்சாரி என்று இவர்தம் கவிதைகளில் வெளிப்படும் புதுமையான சொற்களால் விளையாடியும் வாரத்துக்கு எட்டுநாட்கள் என்று எண்ணிக்கை கற்பித்தும் குட் நைட் என்பது ஆண்பால் என்றும் புதுமையான சிந்தனைகளையால் கவி புனையும் இக்கவிஞரின் எழுத்துப்பணிகள் மென்மேலும் வளர்ந்து பூத்துக் குலுங்க கவிச்சுடர் விருதினை அளித்து பெருமைப் படுவதில் பெருமிதம் கொள்கிறது படைப்புக் குழுமம்.

இந்த கம்பீரமான எழுத்துக்களின் முன் பிரம்மித்து நிற்கும் படைப்புக் குழுமம் கவிச்சுடர் ஆண்டன் பெனி அவர்கள் வருங்கால இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்று அவரது எழுத்துக்கள் உலகெங்கும் பவனி வரவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறது !!

வாழ்த்துக்கள் கவிச்சுடர் ஆண்டன் பெனி

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

கவிச்சுடர் விருது

அன்பில் பிரியன்

கவிச்சுடர் அன்பில் பிரியன்  ஒரு அறிமுகம்
********************************************************************
அன்பில் பிரியன் இவர் - சர்ப்பத்தின் காதலன் அல்லது சர்ப்பம் இவரின் காதலி என்று கூட சொல்லலாம். இவரின் கவிதைகளில் அதிக பட்சம் சர்ப்த்தையும் ஆதாம்,ஏவாளின் காதலையும் கொண்டாடி கொண்டிருக்கும்.

காதல்கவிதை,பொதுகவிதை என்று இரண்டு விதத்திலும் மிக அற்புதமாக கவிதை படைக்கும் திறன் மிக்கவர். இவரின் கவிதைகள் ஒளிதன்னை மிக்கவை போலவே உணரலாம் எளிதில் எல்லோரையுமே ஊடுருவும் சக்திக்கொண்டவை.

ஒரு நவீன ஓவியத்தை வார்த்தையில் அழகாக வரைய கூடியவர். சில நாட்களுக்கு முன்பு இவர் எழுதிய விலா எலும்பு கவிதை அத்தனை சிறப்பாக அமைத்திருந்தது. ஒரு நாள் காதல்,ஒரு நாள் சமூகமென்று இவரின் கவிதை மாறி மாறி பன்முகத்தையே சாயலாக உடுத்திஇருக்கிறது. இவர் நவம்பர் 2016ல் சிறந்த படைப்பாளி என்ற விருதை படைப்பு குழுமத்தில் பெற்று இருப்பது குறிப்பிட தக்கது.

படைப்பாளி அன்பில் பிரியன் செப் 29.1985ல் பிறந்தவர். வயது வைத்து பார்க்கும்போது இளமையாக தெரிந்தாலும் அவரின் எழுத்துக்கள் ஒரு வளர்ந்த / கைதேர்ந்த ஒரு கவிஞரின் எழுத்தாகவே இருக்கிறது.
இவரின் கவிதைகள் சிலவற்றை உங்கள் பார்வைக்காக மீண்டும் சமர்ப்பிக்கிறோம்:-

தன்னை கடந்து போகும் அத்தனை நிகழ்வுகளையும் எதார்ததனமான பார்வையில் வார்த்தையின் கடைசி ஆழம் வரை சென்று வடிக்கட்டி அதையும் மிக எளிமையாய் தொடுத்து எழுத கூடும் திறன் பெற்றவர். அப்படிப்பட்ட வீரியம் கலந்த கவிதை தான் இந்த ஒருசயனைடு குப்பியின் படைப்பு.

//
நெடுஞ்சாலையில் படிமமான நாயின்மேல்
உன் வாகனத்தை ஏற்றாதே
லொள் லொள் என குரைத்துவிட்டு
மறுபடியும் துயில போகும்

பிளாட்பார்மில் மரித்தவனின் உதட்டில் மொய்க்கின்ற ஈக்கள் மாறி அமர்கையில்
மெல்லியதாய் புன்னகைக்கும்
அந்த முகத்தினை பாரேன்

ஞாயிறு கசாப்பு கடை ஆட்டின் கண்கள்
என் பூச்செடிஒயர்கூடையின்
பசுமையையே பார்க்கிறது
அது மேய்வதற்குள் கறிக்கடையிலிருந்து
திங்கட்கிழமைக்குள் நகர்ந்துவிட வேண்டும்

ஆதிக்கத்தால் குதறப்பட்ட யுவதியின்
கசியும் யோனியை ஒரு முனையால் மூடி
மறுமுனையால் மார்பை மறைக்க பார்க்கிறது
விசும்பும் துப்பட்டா

ஆன்மா ஓய்ந்த பின்னும்
ஏதோ ஒன்றினால் மெய்யில் இயக்கம்
நிகழ்கிறதா என்ன

சாம்பல் தடவுகையில் உம்மென இருந்து
கொதிக்கும்சட்டிக்குள் வந்தவுடன் துள்ளும்
விறால் மீன்
என் நாவினில் கரைவதை பார்க்கிறாய்

சில நொடிகளுக்கு முன்
இதில் கரைந்த சயனைடு குப்பியை
உனக்கு தெரியாதுதானே..
//

ஒரு விலா எலும்பைஉருவி ஒலிஅதிர படைக்கப்பட்ட அற்புத கவிதை. மொழியே நினைத்தாலும் இவரிடம் இருந்து கவிதை திறமையை பிரிக்க முடியாது என சவால் விடுவது போல் இருக்கிறது.

//
என் விலா எலும்புகளிலிருந்து
உனை உருவுகையில் எழும்பிய
சுருக்கென்ற
வலி
நீள்கிறது
நீளட்டும்
அவ்வலியை சுகிக்கதானே
நாம்
கருஈரம் சொட்டும்
பிறந்த கன்றுகுட்டிகளாக
காத்திருந்தோம்
பால்வீதியின் கருவறைக்குள்
மாம்ச ருசியே
உயிரின் இலைகளின் மேல்
நீ சொட்டுகையில்
உன் பச்சை கவிச்சி
நாசியில் தெறிக்கும்
வாசனை திரவியமாகி
நுரையீரல் கிளைக்களுக்குள்
கிறக்கமாய் சுழல்கிறது
என் நிணநீர் நிரப்பிய
உன் எலும்புமஜ்ஜை குழிகளை
முத்தங்களின் கோழை
பசையாகி மூடுகிறது
பௌர்ணமியின் வசியமிடும் மஞ்சள்
பளபள சாக்லெட் கவராக
ஒரே நேரத்தில்
நம் இதயங்களை சுற்றுகையில்
கெட்டிய தேன் தித்திப்பாய்
நமை நாமே சுவைத்துகொண்டோம்
நீ கண்மூடும் வேளையில்
கழுத்து நரம்புகளிலிருந்து
பெருகும் சூடான இரத்தமாய்
உன் கண்களில் மேல் விழுவேன்
மறுகணமே நீ உயிர்த்தெழுந்து
உன் நெஞ்சுஎலும்புக்குள்
தேவனால்கூட பிரிக்க முடியாதவாறு
எனை ஆணியாக்கி ஓங்கி அறைவாய்
பெருங்காதலின் ஒலி அதிர அதிர
//

மழை வந்ததும் கொட்டும் அருவியைப் போல
கை தட்டியதும் உடனே வரும் ஒரு ஓசையைப்போல
கேட்டவுடன் எழுதி தரும் இசைக்கு மெட்டுக்கு எழுதும் ஒரு பாட்டைப்போல
இவரின் கவிதையும் இப்போதைக்குரிய கால கட்டத்தில் சுடச்ச்சுட எழுதியிருக்கிறார் .

//
உள்ளே வைத்து தைக்கப்பட்ட
அறுவைச்சிகிச்சை கத்தரி
ஒவ்வொரு உறுப்பையும்
கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக்கொண்டு இருக்கலாம்
நதியை வன்புணர்ந்த
டெண்டரினுடைய குறியின் மேல்
நெளிவது என்ன
மணலலான புழுதானே?
மலையை விழுங்கும் கிரஷரினுடைய
கிட்னிகுழாயை அடைத்து கிழிக்கிறது
கூரிய ஜல்லிக்கல் ஒன்று
பிளாஸ்டிக் அரிசிகள்
தொண்டையில் நுழைகையில்
உருகி உருகி
தொண்டை தீயும் துர்வாடைக்கு
தட்டே தன் மூக்கை பொத்திக்கொள்கிறது
மலடான விளை நிலங்களில்
தோண்ட தோண்ட எழும்பும்
மண்டை ஒடுகளில்
குழந்தையின் மண்டை ஒடுகளுடைய
பற்களில் நிழலாடுவது எது
ஒரு வாய் சோற்றுக்கான தவிப்பா அல்லது
ஒரு குவளை நீருக்கான தாகமா?
வீசும் காற்றில்
முழுமையாய் விஷம் பரவி முடிவதற்குள்
முத்தங்களை மீதமாக்காதீர்கள்
நண்பர்களே
குறிப்பாக குழந்தைகளிடம்...
//

பறவையின் சிறகில் கவிதை பறப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல
அதுவும் நூறு பறவைகள் ஒரே நேரத்தில் கவிதைகளை சுமந்து பறக்கசெய்தால் மயிலிறகே ஆனாலும் எடை கூடினால்அச்சாணி முறிய தானே செய்யும் என்ற பழமொழிக்கு ஏற்ப இங்கு பறக்க விடுகிறார் ஒரு பறவையின் நினைவுக் கூட்டை

//
எல்லாவற்றின் மீதும்
அமர்ந்து அமர்ந்து சலித்த
நூறு பறவைகள்
ஒரே நேரத்தில்
என் மீது அமர்கின்றன
அமர்ந்திருந்த பறவைகள்
ஏதோ யோசனை வந்ததாய்
ஒரே நேரத்தில்
விர்ரென்று பறக்கையில்
கூடவே நானும் பறக்கிறேன்
அவற்றின் பாதநகங்களில்
என் சட்டையின்காலர் தொங்கியபடியே
இதை ஆச்சர்ய கண்களால்
பார்த்துகொண்டிருந்த உன் மீது
இப்போது
ஒரே நேரத்தில் அமர்கின்றன
வேறு நூறு பறவைகள்
அவசர அவசரமாய்
நீயும் சட்டையை கழற்ற பார்த்தாய்
தப்பிக்கலாமென்று நினைத்தாய்
ஐயோ பாவம்
ம் ம் உன் தலையை தாழ்த்து
மேகத்தின் மீது பட போகிறது...
//

//
ஒரு பறவையின் கனவில்
அப்படி என்னதான் இருக்கும்
சதா இதே யோசனைதான் எனக்கு
ஓடும்போதும்
தலைகீழான ஆசானத்தின்போதும்
கவிதை எழுதும்போதும்
கோல்ப் விளையாடும் போதும்
ஒரு ஜோக்கிற்கு சிரித்த உடனேயும்
போகத்தில் கிளர்ச்சியுறும்போதும்
ஏன்
ஒரு கனவுகாணும்போதும் கூட
சதா இதே யோசனைதான் எனக்கு
ஆழ் அமைதி ததும்பிய ஒரு இரவில்
துயிலில் ஆழ்ந்த
ஒரு பறவையினுடைய
கனவின் உள்ளே இறங்கி பின்னர்
மெதுவாகவே நடக்கிறேன்
பறவையின் உறக்கம் கலையாதபடி
பறவையின் கனவு
அவ்வளவு பெரிய வெளியாக
விரிந்து கொண்டே செல்கிறது
அது இதுவரை உதிர்த்த இறகுகளை
வழியேர பொறுக்கிக் கொண்டே
செல்கிறேன்
அது இதுவரை அமர்ந்த
கிளைகளின் நிழல்கள்
என் குறுக்கே வந்து
காற்றில் அசைந்தபடியே
நடனமாடுகின்றன
அது இதுவரை உண்டு எச்சமிட்டதில்
விருட்சமான மரங்களின் வேர்கள்
நான் நடக்க முடியாதவாறு
என் கால்களை பிரியமாய்
பின்னிக் கொள்கின்றன
அது இதுவரை கூடுகட்டி வசித்து பின்னர் வெட்டப்பட்ட
மரங்கள் தலைவிரிகோலமாய்
பறவையின் மடியில் படுத்தபடியே
அழுதுக் கொண்டிருக்கின்றன
அது இதுவரை ருசித்த வானம்தான்
கனவின் உள்ளேயும் வானமாய்
அது இதுவரை தொட்டு பார்க்க
ஆசைப்பட்ட முகில்கள் அதனோடு
காலாற நடந்தபடியே உலா போகின்றன
அது இதுவரை ருசித்த பழங்களின்
வாசனை என் நாசியை மூச்சடைய
வைக்கிறது
ஒரு பறவையின் கனவில்
அப்படி என்னதான் இல்லை
எல்லாமிருக்கும் பறவையின் கனவில் ஏதோ ஒன்று குறைகிறதென்று
உள்ளே கொண்டு சென்றேன்
ஒரு கூண்டை
பதற்றத்திலும் துயரத்திலும்
உடைந்து போன பறவை
வேகமாக தரையிறங்கியது
மின்சார கம்பிகளை நோக்கியபடி
அவ்வளவு வேகமாய்
தரையிறங்கிய பறவை
தலைகீழாக தொங்கி முடிகிறது.....
//

ஒரு சர்ப்பத்திடமிருந்து விஷம் இல்லாத கவிதையை எப்படி தேடுவது?
அல்லது நல்ல பாம்பு என பெயர் வைத்தாலும் விசமில்லாத சர்ப்பத்தை எங்கே தேடுவது?
என ஞான திருஷ்டிக்கள் பற்றி நாம் ஆராய்ந்து கொண்டிருந்தாலும் அந்த பாம்பையே(சர்ப்பத்தையே) காதலித்து கவிதை மூலமாக அன்பு செலுத்தும் படைப்பாளி அன்பில் பிரியனைக் கண்டு வியப்பின் உச்சத்திற்கே சென்று விட்டோம்.

//
சர்ப்ப கவிதை :
---------------------
கனவிற்குள் வந்த பிராய்டிடம்
நாற்கலியையும்
கோப்பை தேநீரையும் அளித்து
கனவையும் சர்ப்பத்தையும் பற்றிய
சுவாரசிய உரையாடலை தொடங்குகிறேன்
என் அறைக்குள் ரகசியமாய் புகுந்து
சதைபொந்தான என் காதிற்குள் நுழைகிறது
சினையுற்ற சர்ப்பமொன்று
சட்டென பிராய்டு ஏதோ அசம்பாவிதம்
நிகழ்வுற்றதை அறிந்து
நீ இக்கனவிலிருந்து வெளியேறு வெளியேறு
நனவிற்குள் போ என
என்னை அவசரப்படுத்துகிறார்
விழிகள் திறந்து நனவிற்குள்
நான் வருவதற்கும்
அச்சர்ப்பத்தின் வாலின் நுனி
என் காதினுள் முழுமையாய் மறைவதற்கும்
சரியாக இருந்தது
அவ்வளவுதான் அன்றிலிருந்து
அச்சர்ப்பம் எங்கேதான் இருக்கிறதென
எங்கேதான் போனதென
கண்டறியவே முடியவில்லை
எதேச்சையாக ஒரு நாள்
கண்ணாடியில் தலைசீவுகையில்
மூக்கினுள்ளேயிருந்து
ஒரு நாக்கு எட்டி பார்த்தபோதுதான் தெரிந்தது
சர்ப்பம் என் மூக்கிற்கு அருகிலிருந்தது
புணர்ச்சியின்போது என்னுள்ளிருந்து
உஸ் உஸ் சத்தம் கேட்கிறதென
என் காதலி நடுங்கும் குரலால் சொன்னதுபோனதுதான்
உள்ளிருக்கும் சர்ப்பம்
காமத்தால் நிரம்பியிருந்ததை அறிந்தேன்
ஓர் அடைமழைஇரவில்
முட்டைகள் உடையும் சத்தம் கேட்டு
பயத்தோடு கண்விழித்தேன்
ஆம் சினையுற்ற சர்ப்பத்திலிருந்து
சின்னஞ்சிறு பாம்புகுட்டிகள் வெளியேறி
குருதியில் தத்திதத்தி நெளிகின்றன
புழுக்கம் பிசுபிசுக்கும் ஒரு நிசியில்
தெருவில் யாரோ ஒரு நாடோடியின்
மகுடியொசை கேட்கிறது
என் காதின் வழியே பொத் பொத்தென
தரையில் விழுந்து வெளியேறும்
தாய்சர்ப்பத்தையும் அதன் குட்டிகளையும்
பின்தொடர்ந்து போகிறேன்
மகுடிஒசையின் பின்னாலே போகும்
அச்சர்ப்பத்தையும் குட்டிகளையும்
திருப்பி திருப்பி பார்க்கும்
நாடோடியின் முகத்தை
வெளிச்சத்தில் பார்க்கிறேன்
தலையை ஆட்டியபடியே
மகுடியை ஊதிக்கொண்டிருந்தார்
பிராய்டு நாடோடியாக
//

சர்ப்ப கவிதை பல எழுதி இருந்தாலும் ஒரு கவிதை மட்டுமே இப்போது உங்கள் பார்வைக்கு. மேலும் சர்ப்ப கவிதை பற்றி படிக்க விரும்பினால் சர்ப்ப கவிதை என படிப்பதில் தேடினால் அவர் எழுதிய அனைத்து சர்ப்ப கவிதைகளும் கிடைக்கும்.

//
கனவில் இருக்கிறேன்
நீ அழைக்கவே இல்லைதான்
ஆனாலும்
நீதான் அழைக்கிறாயென
இமைகள் திறக்கிறேன்
//

ஒரு கனவு மீன் தூண்டிலில் முனையில் மாட்டி தவிப்பதாய் அத்தனை தவிப்பு.
நீ தான் அழைக்கவேயில்லை ஆனாலும் தூண்டில் முள்ளில் சிக்கி உன் விரல் இடுக்கில் சாவது என்பது அத்தனை பெரும் வருமென்று நினைக்க சொல்லும் இக்கவிதை நீர் அற்ற குளத்தில் புதையல் இருப்பதாய் புரிந்துக் கொள்ள கூடும் .

காதலுக்கு மிக எளிமையான எடுத்துக் காட்டை கொடுத்து விட்ட்டார்.

//
கண்ணீருடன் முத்தமிட்டு கொள்ளும்
மீன்களின் மிருதுவம்
எனது காதல்
//

ஒரு விரிசலில் பூப்பூக்கும் நினைவு தளிர் ஆயிரம் காடுகளை பிரசவித்து விடக்கூடும்.தாக்கு பிடிக்க முடியாத நினைவுகள் விரிசலில் பரவுவது கவிதையின் அலாதி பிரியங்கள் .

உண்மையின் மௌனங்களை கவிதையில் வீசி கண்களை மூட விடாத எழுத்துக்கள் விரிசல்களின் நினைவு துளிர்கள் தான் .

//
எனது துயரம்
எல்லோரையும் இழந்துவிட்ட
ஒரு மரணவீட்டின் விரிசல்களில்
பூக்கும் பசுந்தளிர்கள்
//

இயற்கையில் தொடங்கி சமூகம் வரை தனக்கென ஒரு தனிப் பாணி வகுத்துக் கொண்டும், அதிலே மிகச்சிறப்பாக எழுதிக்கொண்டும் எழுத்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த அற்புதமான படைப்பாளிக்கு கவிச்சுடர் விருதளித்து பெருமை கொள்கிறது படைப்பு குழுமம்.

இந்த கம்பீரமான எழுத்துக்களின் முன் பிரம்மித்து நிற்கும் படைப்புக் குழுமம் கவிச்சுடர் அன்பில் பிரியன் அவர்கள் வருங்கால இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்று அவரது எழுத்துக்கள் உலகெங்கும் பவனி வரவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறது !!

வாழ்த்துக்கள் கவிச்சுடர் அன்பில் பிரியன்

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

கவிச்சுடர் விருது

அகதா செந்தில்குமார்

கவிச்சுடர் அகதா செந்தில்குமார்  ஒரு அறிமுகம்
********************************************************************

பெண்ணியம் பாடும் கவிதைகள் தமிழில் கணக்கற்றவை. ஒரு கவிதாயினி படைக்கும் கவிதைகள் பூவின் மணம் பரப்பிக்கொண்டும் கொலுசுச்சத்தம் ஏந்திக் கொண்டும் வாசிப்பவர் மனதில் சிலசமயங்களில் ஊடுருவலாம். ஆனால் புகையும் கரியும் எரிச்சலும் கண்ணீரும் மௌனமும் மனவலிகளையும் வெப்பமும் ஆட்கொள்ளும் பெண்மையை இந்த சமுதாயம் பாதுகாப்பு வேலியென பாவித்து அடைத்து வைத்திருக்கும் சமையலறை ஜன்னலினூடே விரிகின்ற உலக அவலங்களை கவிதைகளாய் ஒரு வளைக்கரம் படைக்கையில் அந்தப் படைப்பு பலசமயங்களில் வாசிப்பவர் மனதில் ஒரு இடிமின்னல் தாக்குதல் போலவும் இறங்கலாம். அந்தவகையில் கவிதாயினி அகதா செந்தில்குமார் நமது படைப்பு குழுமத்தில் படைத்துக் கொண்டிருக்கும் கவிதைகள் சக படைப்பாளிகளின் மனதிலும் வாசகர்கள் மனதிலும் ஒரு சிறப்பான இடம் பெற்றவை.

அரியலூரைச்சேர்ந்த கவிஞர் அகதா செந்தில்குமார் தற்போது பெரம்பலூரில் ஒரு கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். எளிய வரிகளில் படைக்கப்படும் கவிதைகள் இவரது தீர்க்கமான சமூகப் பார்வையை வெளிப்படுத்துகின்றன.

இப்போதெல்லாம் நவீனத்துவம் பின்நவீனத்துவம் என ஏதேதோ வகைமைகளை கொண்டு பல புது கவிதைகளை எழுதும் எழுத்தாளர்களுக்கு மத்தியில் மக்களின் வாழ்க்கை முறையையும் அதை சார்ந்த வாழ்வியல் முறையையும் எழுதும் ஆற்றல் மட்டுமல்லாது அது மக்களால் புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிய வார்த்தைகளை கொண்டு எழுதிவருவதில் முதன்மையானவராக இருக்கிறார்.

இவரின் கவிதைகள் சிலவற்றை உங்கள் பார்வைக்காக மீண்டும் சமர்ப்பிக்கிறோம்:-

பிறக்குமுன் தாயின் கருப்பையில் பாதுகாப்பாய் இருந்த காலம். பிறந்து வீழ்ந்தபின் சூது கவ்வும் இவ்வுலகில் பெண்மையின் ஏக்கத்தை பிரதிபலிக்க இதைவிட ஒரு அழகான கவிதை கிடைக்குமா ?

//
தட்டான்பூச்சிகளே பழக்கமானதால்
தேள்களை தெரிவுசெய்ய இயலவில்லை
விறகு வேலியே வழக்கமானதால்
சிறகு இருந்தும் பறக்கத்தெரியவில்லை
மீன்களை மட்டுமே சினேகம் கொண்டதால்
பாம்புகளைப் பகுத்தறியத் திராணியில்லை
கல்லூரும் தேரையாக மட்டுமே இருந்ததால்
வல்லூறு இதுவென வகை அறியவில்லை
ஏக்கமாக இருக்கிறதே
கருப்பைப்போல
இன்னோர் இருக்கைக்
கிடைக்காதா?
//

விழாக்காலமும் பெண்மைக்கு வலிமிகு காலம்தான். சுற்றியிருக்கும் மற்றவர்களுக்கு ஓயாத எந்திரமாய் உழைக்கும் பெண்மையின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு நெத்தியடிக் கவிதை...

//
பண்டிகைத்தேதியிலும்
ஓயா எந்திரங்கள்
திறமை இருந்தும்
கொலுபொம்மைகள்
குடும்ப பூஜையில்
கற்பூர வில்லைகள்
ஆயுதங்கள் எனினும்
சமூகப் பகடைக்காய்கள்
எனினும்
பெண்மை வெல்கவென்று
கூத்திடுவோமடா..
எந்திரபூஜை வாழ்த்துக்கள்
எங்களுக்கும்
//

பெண்மையை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என கவியின் வரிகளை மேடையில் மட்டும் பேசிக்கொண்டிருக்கும் இந்த சமுதாயச் சீர்கேடுகளை கவிஞரின் ஒரு சிறுகவிதை நார்நாராய் கிழிக்கிறது. பெண்மையின் தீராத வலியைச் சொல்லும் இக்கவிதையை பாருங்கள் :-

//
போட்டிக்கென
காளிவேஷம் போடுகையில்
அடிவயிற்று வலிகளை
யாரிடமும் சொல்லாமல்
அப்படியே மேடை ஏறியாச்சு
கோப்பையும்
வெற்றியோடு வாங்கியாச்சு
வாங்கி வந்த கோப்பையை
சாமி படத்தின் முன்பு வைக்க
மூன்று நாள் ஆகட்டுமென
அம்மா சொல்லியாச்சு
இன்னும் ஜெயிக்கவே
இல்லைன்னு
இப்போதான் புரிஞ்சுபோச்சு
//

சில கவிதைகளில் ஒரு சிறுதுளிக்கதைகள் போல கதாபாத்திரங்கள் நடமாடி உள்ளத்தைக் கவர்கின்றன. இவரது கவிதைகளில் வரும் சரவணா அண்ணனும் செல்வி அக்காவும் மிசஸ் குமாரும் நம் நாட்டின் அனைத்துத் தெருக்களிலும் நடமாடுகின்றனர். இன்னும் தலைவிரித்தாடும் சாதிக்கொடுமைகள் மற்றும் பெண்களை ஒரு போகப்பொருளாக மட்டும் காணும் ஆண்சார்பு சமூகத்தின் அவலங்களையும் சொல்லும் ஒரு தனிப் பாணிக் கவிதைகள் படைப்பதில் வல்லவர் படைப்பாளி அகதா அவர்கள்...

//
இருவரின் கைகளும்
வெட்டுப்பட்ட நிலையிலும்
சரவணா அண்ணா கையில்
செல்விஎன்றும்
செல்வி அக்காவின்
கையில் சரவணன்
என்று பச்சைக்குத்தியிருந்தது கண்டு
ஊரே உச்சுக்கொட்டி
கௌரவக் கொலை
என்றார்கள்
அவர்கள் காதல்
மேலும் கௌரவப்பட்டிருந்தது
//

இந்த வகை தொடர் கவிதைகள் ஒரு மிக பெரிய சமூக மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது அவர் எழுத்தே உலக அரங்கில் ஒலிக்க செய்யும் காலம் வெகு விரைவில்...

//
கூட்டுக்குடும்பத்தில்
தோசை ஊத்தி
சமையலறைக்கும்
ஹாலுக்கும்
ரன்னெடுத்த மிஸஸ் குமார்
வீட்டாரிடம் கேட்காத கேள்வி
ஒன்று உள்ளது
சமையல்காரி தேவை என்பதற்காக
ஊர்கூடி வாழ்த்த
தாலிகட்டும் கோலாகலத் திருமணம் எதற்கு?
//

தமிழ் மொழியின் இலக்கணத்தை காதல் இலக்கணத்தொடு கற்பிக்கும் ஒரு இளம் காதலர் உரையாடல் ஒரு அழகான கவிதையாய் தருகிறார்:-

//
நம் காதல் வினைத்தொகையே
முக்காலமும் பொருந்தும் என்றாய்
உம்மைத்தொகை விளக்கம் கேட்டால்
இராப்பகல் முத்தம் என்றாய்
அன்மொழித்தொகை
எதுவென்று கேட்டால்
அயல்வீட்டுக் கனிமொழியைப்
பொற்றொடி வந்தாள் என்று
புன்னகை பூக்கிறாய்
உவமைத்தொகை
எதுவென்றால்
நீயே சொல்
உன் பவளவாயால்
என்கிறாய்
பண்புத்தொகையையாவது
பண்பாக உரையென்றால்
போடி கருங்குதிரைஎன்று
பொய்கோபம் கொண்டாய்
//

சம்பிரதாயங்களும் சடங்குகளும் மனிதத்தை வளர்க்கவில்லை எனில் அவைகள் பொய்த்துவிடும் என்னும் நிதர்சனத்தை ஒரு குடும்பத் தலைவியின் எளிய வரிகளில் படைக்கப் பட்டிருக்கும் இந்த கவிதை எவ்வளவு பெரிய வினாவை நம்முள் எழுப்ப வல்ல ஒரு கனமான படைப்பு என்பதை கவனியுங்கள் :-

//
அமாவாசைக்கும்
ஆயுத பூஜைக்கும்
பேசாத சாமிப்படங்களூடு இருக்கும்
அப்பெரியவர் படத்திற்கும்
தவறாமல் படைக்கப்பட்டது
பொறி,சுண்டல்,பலகாரங்கள்
அம்மா தாயே என்று
வீட்டு வாசலில் இரந்து நின்ற
பெரியவருக்கு
சாமி கும்பிட்டதும் வா
என்ற பதிலும் பகிரப்பட்டது
படத்திலிருக்கும் பெரியவரும்
பலகாரங்கள் சாப்பிடவில்லை
சென்ற பெரியவரும் வரவில்லை
வெறிச்சோடியிருக்கிறது மனங்களும்
படைத்த பலகாரங்களைப் போலவே
//

பெரும் மேடையிட்டு மணிக்கணக்கில் பேசப் படும் பெண்மையின் வேதனைகளை கவிதாயினி அகதாவின் அடுக்களையிலே என்கிற இரு கவிதைகள் சவுக்கடிபோல் சமுதாயத்தின் மனசாட்சியை தட்டி எழுப்புகிறது:-

அடுக்களையிலே
------------------------------
வெங்காயத்தை உரிக்கும்போது
துச்சாதனனிடம்
நான் சூட்சுமம்
கேட்டுக்கொள்வேன்
பாவம் வெங்காயத்தைக்
காப்பாற்றத்தான்
எந்த கண்ணனும் இல்லை

எல்லா வேலைகளையும் முடித்து அப்பாடா! என்று அமர்கையில்
எனக்காக மூன்றுமுறை பெருமூச்சு விட்டது குக்கர்
*தசாவதானிகளுக்கு
சவால் விடுகிறேன்
உங்களால் ஒரே நேரத்தில்
பத்து வேலைகளை மட்டுமே இயலும்
எங்களால் நூறு வேலைகள் இயலும்
அகராதிகளே
இன்றிலிருந்துபெண்கள்
என்னும் சொல்லை
சதாவதானிகள்என்க

*அடியே! என்ற சொல்லிற்கு
அப்படியே விட்டுவிட்டு ஓடினால்
வாளி இங்கு நிற்பதில்லை
தோசையல்லவா கருகிவிடும்

அடுக்களையிலே 2
--------------------------------
*சொத்தைப் பிஞ்சு
கத்தரிக்காய்கள்
டாஸ்மாக் வாசலில்
மாணவர் முகங்கள்

*முட்டைக்கோஸை தோலுரிக்கையில்
நாத்தி மற்றவரிடம் தோலுரித்தாள்
அண்ணிக்கு காய் நறுக்கத் தெரியல
*எண்ணெய் தெறித்த
கைவடுக்கள்
வலி தெரியாமல் வளர்த்த
பிறந்த வீட்டை
நினைவுபடுத்த தவறவில்லை

*கைகள் சுட்டு
ஆத்தி ஆத்தி
ஊதி ஊதி
அவசரமாய் கைகளில்
தந்த தேநீரை
வேண்டாம் என்பதும்
ஓங்கி கன்னத்தில்
அறைவதும்
ஒன்றுதான்
//

இல்லற வாழ்வில் தலைவி என்கிற பெயரிட்டு ஏட்டுமொழிகள் மொழியினும் வீட்டுக்குள் பெண்மையின் போராட்டத்துக்கு விடிவுகாலம் வந்துள்ளதா ?
இந்தக்கால ராமன்களும் கோவலன்களும் சிந்தித்திட ஒரு அருமையான கவிதை :-

//
நஞ்சு தீர்ந்ததா
அந்த நாக்கில்
கொத்தித் தீர்த்து
குதறிய பின்பு
சொல்லின் ரணம்
ஆறிடுமோ?
கல்லில் பதித்தது
கரைந்திடுமோ?
மென்மையின் கதவம்
நாப்பிழம்பால் எரிந்தது
கண்மைகள் கதறிய பின்பு
பெண்மைக்கு என்ன வேலை
கண்ணகிபோல் எரிக்கவா முடியும்
சீதைபோல் குளிக்கவா முடியும்
கண்ணீரில் குளித்தது போதும்
இனியாவது
தீப்பிழம்பாய் நடந்திடடி
//

மணமானபின் காதல் எங்கு பறந்து சென்று விடுகிறது ? வீட்டுக்கு வீடு புலம்பும் பெண்மை :-

//
அடுப்படி வந்து
இடுப்பு கிள்ளினாய்
வேலைக்கு இடையில்
அலைபேசியில்
ஐ லவ் யூ சொன்னாய்
வீடு திரும்பும் முன்னே
சமைத்தும் வைத்தாய்
கடைகளுக்கு அழைத்துச்சென்று
புடவைகள் பரிசளித்தாய்
நான் கேட்டு அடம்பிடித்த
அந்தக் கரடிபொம்மையைக்
கடைக்காரனிடம் விலைபேசியபோது
...
...
...
காலிங்பெல் சத்தம்கேட்டு
கதவு திறந்தேன்
கதவைக்கூடத் திறக்காமல்
அப்படி என்ன
அந்த திரைப்படப் பாடலில்
உள்ளதென்றாய்?
வழக்கம்போலவே
வாயைத் திறக்காமல்
தோசை வார்க்க
அடுப்படி சென்றுவிட்டேன்
//

அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான பாசமும் நேசமும் எத்தனை காலமாகினும் வற்றாத நீரொழுக்காய் மனதில் மறையாத மாயம்தனை
பேச்சுத் தமிழிலேயே ஒரு ஒவியமாக்குகிறது இந்த கவிதை :-

//
ஊசிவந்து குத்தையிலே
அலறிநானும் கத்தையிலே
உன் தோள்பட்ட ஆதரவ
எந்த வார்த்தையில நான் எழுத
மாதாந்திர வலிக்கு
கொக்கிப்புழுவா நான் துடிக்க
அறிவியல் கத சொல்லி
தலகோதி தெம்பு சொல்வ
தீட்டுன்னு யார் சொன்னாலும்
திட்டு திட்டுன்னு திட்டிடுவ
பிரசவ வேதனையில் நான் கதற
தனியாத்தான் நீ அழுத
எனக்கு மட்டும் கையழுத்தி
தெளிவு சொன்ன
இத்தன வருசம் கழிச்சு
காய்ச்சலுக்கு ஊசிபோட
தனியாத்தான் போயிருந்தேன்
தைரியத்த நீ கொடுத்த
புருசன்தான் வரட்டுமே
புள்ளதான் வரட்டுமே
ஊசி குத்தும்போது கத்தையிலே
உன்பேர சொல்லி
யப்பான்னுதான் கத்தினேன்
----------------------------------------------

வளைத்தொடித்த வரிகளில்லை ; அகராதி தேட வைக்கும் சொற்களில்லை: ஆனால் படைப்பாளி அகதா அவர்களின் ஒவ்வொரு கவிதையும் பெண்மையின் மென்மையான எளிய சொற்கள் ஏந்திவரும் கனமான படைப்புக்கள். தனக்கென ஒரு தனிப் பாணி வகுத்துக் கொண்டும் எழுத்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த அற்புதமான படைப்பாளிக்கு கவிச்சுடர் விருதளித்து பெருமை கொள்கிறது படைப்பு குழுமம்.

இந்த கம்பீரமான எழுத்துக்களின் முன் பிரம்மித்து நிற்கும் படைப்புக் குழுமம் கவிச்சுடர் அகதா அவர்கள் வருங்கால இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்று அவரது எழுத்துக்கள் உலகெங்கும் பவனி வரவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறது !!

வாழ்த்துக்கள் கவிச்சுடர் அகதா செந்தில்குமார்

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

மாதாந்திர பரிசு

நிஷா மன்சூர்

View

மாதாந்திர பரிசு

முருக தீட்சண்யா

View

மாதாந்திர பரிசு

ஆனந்தி ராமகிருஷ்ணன்

View

மாதாந்திர பரிசு

முருகன் சுந்தரபாண்டியன்

View

Showing 841 - 849 of 849 ( for page 43 )