logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 701 - 720 of 727

Year
Award
   

மாதாந்திர பரிசு

  • சக்தி அருளானந்தம்

0   1048   0  
  • February 2018

மாதாந்திர பரிசு

  • நிவேதா சுப்பிரமணியம்

0   1181   0  
  • February 2018

மாதாந்திர பரிசு

  • ரா. ராஜசேகர்

0   933   0  
  • February 2018

மாதாந்திர பரிசு

  • சப்னா செய்ன்

0   1126   0  
  • February 2018

கவிச்சுடர் விருது

  • குறிஞ்சி நாடன்

0   1152   0  
  • January 2018

மாதாந்திர பரிசு

  • மதுசூதன். எஸ்

0   889   0  
  • January 2018

மாதாந்திர பரிசு

  • மலர்

0   876   0  
  • January 2018

மாதாந்திர பரிசு

  • சத்யா

0   881   0  
  • January 2018

மாதாந்திர பரிசு

  • ர மதன் குமார்

0   1204   0  
  • January 2018

மாதாந்திர பரிசு

  • வ முகிலழகி

0   905   0  
  • January 2018

கவிச்சுடர் விருது

  • ஸ்டெல்லா தமிழரசி ர

0   1196   0  
  • December 2017

கவிச்சுடர் விருது

  • கார்த்திக் திலகன்

0   1068   0  
  • November 2017

கவிச்சுடர் விருது

  • கோ.ஸ்ரீதரன்

0   1587   0  
  • October 2017

கவிச்சுடர் விருது

  • சுரேஷ் பரதன்

0   1244   0  
  • September 2017

கவிச்சுடர் விருது

  • நிலாகண்ணன்

0   1733   0  
  • August 2017

கவிச்சுடர் விருது

  • சியாமளா ராஜசேகர்

0   1269   0  
  • July 2017

கவிச்சுடர் விருது

  • ராம் பெரியசாமி

0   1131   0  
  • June 2017

கவிச்சுடர் விருது

  • ரோஷான் ஏ.ஜிப்ரி

0   1337   0  
  • May 2017

கவிச்சுடர் விருது

  • வேதா நாயக்

0   1048   0  
  • April 2017

கவிச்சுடர் விருது

  • ஆண்டன் பெனி

1   1743   0  
  • March 2017

மாதாந்திர பரிசு

சக்தி அருளானந்தம்

View

மாதாந்திர பரிசு

நிவேதா சுப்பிரமணியம்

View

மாதாந்திர பரிசு

ரா. ராஜசேகர்

View

மாதாந்திர பரிசு

சப்னா செய்ன்

View

கவிச்சுடர் விருது

குறிஞ்சி நாடன்

கவிச்சுடர் குறிஞ்சி நாடன் ஒரு அறிமுகம்
********************************************************
படைப்பு குழுமத்தால் இம்முறை கவிச்சுடர் விருது பெறும் படைப்பாளி குறிஞ்சி நாடன் அவர்களின் இயற்பெயர் தியாகராஜன். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இந்த திருச்சிக் காரர் உதகையில் வளர்ந்தவர் . தற்போது பணி நிமித்தமாக அயல்நாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இவர் ஜாதி மத இன பேதங்களை மறந்த வாழ்க்கை முறையை அமைத்து வாழ்ந்து வருபவர். பல கவியரங்குகளிலும் தனது கவித்திறனை காண்பித்துக் கொண்டிருக்கும் இவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினரும் கூட. இவரது பல கவிதைகள் பிரபல பத்திரிக்கைகள்/நாளிதழ்கள் மற்றும் பல்வேறு இலக்கியச் சிற்றிதழ்களிலும் வெளியாகியுள்ளன. வேலைப்பளு காரணமாக இலக்கிய எழுத்துக்களில் கொஞ்சம் ஓய்ந்திருந்த இவர் நமது படைப்புக் குழுமத்தால் ஈர்க்கப் பட்டு மீண்டும் எழுத்துலகுக்கு வந்து தனது படைப்புக்களால் படைப்பு வாசகர்களின் உள்ளங்களை கவர்ந்து கொண்டிருப்பவர்.

சமூக மிருகம் என்கிற மனித சமுகத்தை இவரது கவிக்கண்கள் பார்க்கும்வெவ்வேறு கோணங்களில் உதயமாகின்றன பல்வேறு கவிதைகள். அந்தப் படைப்புக்களில் ஒரு சிறப்பான படைப்பு :-

ஏ சமூக மிருகமே!
-----------------------

அவசரமாய் நீ
அபிநயம் புரிந்து
அகிலம் வென்றவன்
என்கின்றாய்.
தலைகணம்தான் உன்
முடி அதைச் சூடி
தரணி யாள்கிற
கோவென்றாய்.
நிதர்சன வெளியில்
எடுத்துப் போட்டால்
நெருப்பாய் சுடும் உன்
லாவணிகள்.
கரிசனம் ஏதும்
காட்டியதுண்டா
இயற்கையெலாம் உன்
காலணிகள்.

தங்க முட்டை
வாத்தைக் கொன்று
தரித்திரனாய் பசி
தீர்கின்றாய்.
அங்கம் முழுதும்
பங்கம் வந்தால்
ஆண்டவனை நீ
நோகின்றாய்.
காற்றுதான் உன்
உயிரின் ஊற்று
கசடாய் மாற்றி
இழுக்கின்றாய்.
தண்ணீர் இன்றி
தாகம் தீரேன்
வல்லமையை நான்
ஏற்கின்றேன்.

கூட்டுப் புழுவின்
குட்டி வீட்டை
கல்லறை யாக்கி
பட்டென்றாய்.
கூட்டை உடைத்து
உணவைத் திருடி
சுவைக்கும் மருந்து
தேன் என்றாய்.
மாட்டைக் கறந்து
கன்றை ஏய்த்து
புரதச் சத்து
பாலென்பாய்.
ஏட்டைப் புரட்டு
மரத்தின் பிணத்தில்
எழுதிய சரித்திரம்
நீ நண்பா.

நிலத்தைப் பிரித்து
வேலியமைத்து
எனது உனது
என்கின்றாய்.
குணத்தை நிறத்தை
இனத்தை மதத்தை
வகுத்துச் சிதறிப்
பிரிகின்றாய்.
எல்லைக் கோடு
தொல்லை அதைத்தான்
தேசப் பற்றாய்க்
கொள்கின்றாய்.
உன்னைப் போல்தான்
அவனும் மனிதன்
அவனை நீயேன்
கொல்கின்றாய்?

ஆயிரம் கோடி
உயிர்களின் பூமி
அதிலே நீயும்
ஒரு விலங்கு.
அன்பு அறிவு
ஒழுக்க வாழ்வு
அனைத்திலும் உண்டு
அதை விரும்பு.
செத்தால் நீயும்
மண்ணாய்ப் போவாய்
உடலும் உடன்வர
மறுக்கிறது.
ஆறாம் அறிவை
ஆற்றில் கழுவு
அழுக்காய் கருப்பாய்
இருக்கிறது.


கடவுளின் பெயரால் இச்சமுதாயத்தில் நமக்குள் நாமே பிளவுபட்டுக்கிடக்கும் நிலையை நாம் கண்ணுற்று வருகிறோம். மானுடத்தின் மேன்மைக்காகவும் அமைதி நிறைந்த வாழ்வுக்காகவும் நமக்காக நாமே தோற்றுவித்த வழிமுறைகள்தாம் இந்த மதங்கள். காலத்தாலும் தூரத்தாலும் இம்மதங்களின் வழிபாட்டு முறைகளும் தேவ நாமங்களும் வேறுபட்டுப் போயிருந்தாலும் மனிதனை மென்மையாக வைக்கும் நோக்கத்துடன் மட்டுமே படைக்கப் பட்டவை. அப்படிப் பட்ட மதங்களின் பெயராலேயே இன்று மனிதனின் வாழ்க்கை அமைதியும் நன்மையையும் இழந்த ஒரு போராட்டக் காலமாகிவிட்ட நிலைமையும் காண்கிறோம். படைப்பாளி குறிஞ்சி நாடனின் கடவுளைப் பற்றிய ஒரு கவிதையைக் காணுங்கள் :-

நான்தான் கடவுள் என்று
முறைப்படி
அறிவிக்கவில்லை நான்.
நீங்களாகவே
கண்டுபிடிக்கட்டுமென்று
காத்திருந்தேன்.
நீங்களோ
வேறு எதையோ
கடவுளென்று கூத்தாடி
என்னைப் போட்டுடைத்தீர்கள்.
உங்களைச் சந்திக்காமலேயே செத்த
சாமானியனாகி விட்டேன் நான்!

பள்ளி செல்லும் பால்ய காலத்தில் மட்டுமே மனிதன் உண்மையில் வாழ்க்கையை வாழ்கிறான். அந்தக் களங்கமில்லா வயதில் பள்ளிசெல்லும் மகள் சின்றில்லாவின் வகுப்பறை என்கிற இந்த கவிதையை வாசிக்கும் எவருக்கும் மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்கிற வேட்கை ஏற்படும் என்பதில் ஐயமில்லை. வீட்டுப் பாடங்களும் தேர்வுகளும் இல்லாத ஒரு பள்ளிப் பருவம் :-

சின்றில்லாவின் வகுப்பறை
----------------------------------------------------

வீடு திரும்பியதும்
தன் வகுப்பறைக்குள் சென்று
கதவடைத்துக் கொள்கிறாள்
சின்றில்லா!

குட்டி உலகமொன்று
வெளிச்சத்தோடு விரிகிறது!

இல்லாத மூக்குக்கண்ணாடியை சரிசெய்தபடி
விதுலா மிஸ்ஸின் மிடுக்கோடு
பாடம் நடத்தத் தொடங்குகிறாள்!

வகுப்பில்
பூனைக்குட்டியும்
சில தேவதைகளும் படிக்கிறார்கள்!

சுற்றுச்சுவர் நான்கும்
சித்திர எழுத்துக்களால்
நிறைகின்றன!

பதில் சொல்லாத தேவதைக்கு
ஒரு பென்சிலை பரிசளித்து
இது அடுத்தமுறை
நீ சொல்லப்போகும்
சரியான பதிலுக்கு என்கிறாள்.

கணக்கு புரியாத
பூனைக்குட்டியை
செல்லமாய்த் தட்டி
நாளைக்கு
உங்க அம்மாவை கூட்டிவா என்கிறாள்.

தலையில் தானே குட்டிக்கொண்டு
வாய்ப்பாட்டை
மனப்பாடம் செய்யும்
இன்னொரு தேவதையை அழைத்து
தனது இசைக்கேற்ப
ஏழாம் வாய்ப்பாட்டைப் பாடச்சொல்கிறாள்.
இசையாய் பரவுகிறது
ஏழாம் வாய்ப்பாடு!

சூரியமண்டலத்தை
மடியில் பரப்பி
ஆளுக்கு கொஞ்சம்
நட்சத்திரங்களை
அள்ளிக்கொள்ளச் சொல்கிறாள்.

பானிபட்டுப் போரில்
இரத்தவாடை வீசுமென்று
வெள்ளைப் புறாவோன்றின் கதையை சொல்லத் தொடங்குகிறாள்.

அழகான ஓவியத்திலிருந்து
வண்ணங்களை அள்ளி
தேவதைகளின் வெள்ளுடைகளில் பூசிவிட்டு
கன்னம் குழிவிழ சிரிக்கிறாள்!

வகுப்பு முடிவுக்கு வருகிறது.
தேர்வு அறிவிப்புக்கு
காதுதீட்டி காத்திருக்கிறார்கள்
தேவதைகள்.

இனி தேர்வுகளே கிடையாதென்று அறிவித்துவிட்டு
குதூகலதத்தை கண்களில் நிரப்பிக்கொண்டு
அறையைத் திறக்கிறாள்
என் சின்றில்லா.

எழுதப் படாத வீட்டுப்பாடங்களை
நான் எப்படி நினைவூட்டுவது?

இறைபக்தியும் வணிக நோக்கத்தை கவசமாக அணிந்து கொள்ளும் அவத்தைக் கண்ணுறும் கவிஞரின் ஒரு கவிதை :-
புதுப்பிப்பு.
------------

கரடு முரடான நிகழ்வுகளை
அலங்கோலமாய் வரைந்து
புரதானம் ஒரு கல்வெட்டைத் தந்தது
வாசிக்கத் தெரியாதவனிடம்.

சிதிலமடைதலின் உன்னதத்தைப்
பதைப்புடன் இழந்த புணரமைப்பில்
ஆதியின் மலர்கள்
பாடம் செய்யப்பட்டன.

ஆன்மாக்கள் சம்மணமிட்டிருந்த
சுண்ணாம்புக் கற்களில்
கான்கிரீட் ஏறுகிறது.

களவுபோயிருந்த கலசம்
தான் பொருந்தியிருந்த இடத்தை
நிரந்தரமாய் இழக்கிறது.

கிழக்கு பார்த்த
ஒரு தூண் சாய்க்கப்படும்போது
அது தாங்கியிருந்த
காலமும் சரிகிறது.

தலைமுறை மசக்கையில்
ஓய்வெடுத்தப் பொந்தினை
புறத்தே பட்சிகள் தேடுகின்றன.

மதில்பற்றி ஊடாடிய வேர்
சுடரில் பசைபோக்கி
சுள்ளியாகிறது.

தன் வீட்டை
யாரோ ஆக்கிரமித்துவிட்டதாய்
அழுதுகொண்டே
வெளியேறுகிறது இறை.

பிறகு

வரிசையில் நிற்கின்றன
அர்ச்சனைத் தட்டுகள்.
பிரமாண்டம் தொனிக்கிறது கோபுரம்,
ஒரு வணிக வளாகத்தைப்போல!


மனிதன் வாழ்வில் செய்வதனைத்தும் ஒரு தேடல்தான். முடிவற்ற அந்தத் தேடல் அவனது வாழ்வு முற்றுப் பெறுகையில் முற்றுப் பெறுமோ ? தோல்விகள் என்று வாழ்க்கையில் பெயரரிடப் படும் எல்லா செயல்களும் மானுட மனத்தின் தேடல்கள் என்கிறார் கவிஞர் ::-

சுழன்று கொண்டிருந்த தட்டிலிருந்து
வடித்துப் பருகிக்கொண்டிருந்தேன் இசையை.

எனது நாயும்
வாலில் அமர்ந்த ஈயைக் கவ்வ
வட்டமடித்துக் கொண்டிருந்தது.
இசையைப்பருகும் முகபாவனையொடு.

மின்வெட்டு
இசையின் குரலை
காற்றின் பிளவில் பதுக்க,
நாயைத்துரத்தி
இசையை மீட்கப்புறப்பட்டேன்.

இப்படித்தான்
அன்று
சுடரைத்தேடி
திரியைப் பிரிந்து சென்றேன் .
மௌன இருட்டில் திரும்பியபோது
திரியைத் திண்றுவிட்டிருந்தது விளக்கு.

ஒருமுறை
வானம் அறுந்து விழுந்த போதும்
உடைமாற்றிப்போன ஓடையில்
மேகம் கிடைக்குமென
தூண்டிலிட்டேன்.
வசமாய் மாட்டிக்கொண்டது எனது நிழல்.

இதையெல்லாம்
நீங்கள் தோல்வி என்கிறீர்கள்.
நான் தேடல் என்கிறேன் .

உடைதல் என்பது அழிவா இழப்பா மாற்றமா தோற்றமா ? இந்தப் பிரபஞ்சமும் பூமியும் எல்லாம் ஒரு உடைதலின் விளைவே. உடைதல் என்னும் ஒரு சொல்லுக்கு கவிஞர் சொல்லும் அழகான விளக்கம் பாரீர் ::-

உடைந்தால்
அழுது
உடையாதே.

உடைதல்
இழப்பல்ல
மாற்றம்.

நெபுலா உடைந்து
புவி வந்தது
பனிக்குடம் உடைந்து
நீ வந்தாய்.

எது உடைந்தாலும்
மனம் உடையாதே.
மனம் உடைந்தால்
நீ உடைவாய்.

உடைதல் இழப்பல்ல
மாற்றம்.
அதைக் காண
நீ உடையாதிருக்க வேண்டும்.

உடைந்த குடமொன்றில்
மண் நிரப்பி
செடி நட்டு
பூந்தொட்டி என்று
பெயர் சூட்டுகிறான் பார்
அந்த
நெட்டிக் கிழவன்.

சொர்க்கம் என்பது என்ன? மனிதன் தேடித்திரியும் சொர்க்கத்தை எங்கு காண முடியும் ? ஒரு கிராமத்து மொழி கொஞ்சும் இந்த அழகான கவிதையினை வாசித்துப் பார்த்துவிட்டு சொல்லுங்களேன்:-
ஓலக் குடில்
-----------------------

ஓலக்குடிலுக்குள்ளே ஒன்னுமே
-- இல்லையினு
சீலக்கருவாச்சி சொன்னதயா
--எண்ணிநின்னே?

காலையில உதிச்சதுமே கதிரரசங்
--கதவுதட்டி
மூல முடுக்கெல்லாம் பரவுறத பாக்கலியா?

ஊருக்கே பொதுவாக ஒத்தமழை
-- பெய்யயில
ஒனக்கும் எனக்கு மட்டும் உள்ளவந்து
-- பெய்யலையா?

மலையேறி வரச்சொல்லி மாநிலமே
-- காத்திருக்க
முழுநெலவு ஓடியாந்து கூரமேல நிக்கலியா!

சனமெல்லாம் மணலள்ளி மச்சிவூடு
--- கட்டுதுக
நதிவத்தி போச்சுதுன்னு அப்புறமா
--- கத்துதுக.
ஒத்தப் புடிகூட ஓடமண்ணு இங்கயில்ல
ஒனக்கும் எனக்குந்தான்டி பாவத்துல
-- பங்குயில்ல!

ஓலக் குடிசக்குள்ள ஒளிச்சுவைக்க
-- ஒன்னுமில்ல
ஒன்னையத் தவர இங்கக் களவாடத்
-- தங்கமில்ல!

ஒனக்குன்னு சேத்துவைக்க ஒத்தணா
-- காசுயில்ல
உசுரகூட. எடுத்துக்க ஒசந்தது பாசம்புள்ளே!

நெத்திலி கொழம்போட நெல்லு சோறாக்கி
பச்சமுத்தம் தந்துகிட்டு பரிமாறி பசியாறி
வெத்தலையில் நீ செவந்து பக்கம்வந்து
-- நிக்கயிலே
ஓலக் குடுசதான் உண்மையில சொர்க்கம்
-- புள்ளே!

மானுடத்தை அறியாமை இருளில் இருந்து வெளிக் கொணர அவ்வப்போது இந்தப் பூவுலகின் வெவ்வேறு மூலைகளில் தோன்றி மறையும் ஞானிகளையும் தெய்வமாக்கி அவர்களின் போதனைகளை வெறும் எடுகளுக்குள் பதுக்கி வைத்து வேடிக்கை பார்க்கும் உலகமிது . கவிஞர் குறிஞ்சி நாடனின் மற்றுமொரு சாடல் கவிதை:-

புத்தனைத் தொலைத்த
போதி பற்றிய குறிப்புகள்.
-----------------------------

# உன்னை மனிதனாக்க நினைத்த.
புத்தனை
நீ கடவுளாக்கினாய்.
மனிதனாக்கும் சூட்சமம்
கல்லானது.

# புத்தன் மறைந்ததாய்ச் சொல்லாதே
நீ மறுத்த உலகத்தில்
இன்னும்
போதித்துக்
கொண்டுதானிருக்கிறான்.

# துறந்தா வாழ்ந்தான் புத்தன்
ஆசையை ஒழிக்கும்
பேராசை அவனுக்கு.

# உனக்கு மரம் யாவும் மரம்தான்
போதியென்றாலும்
சிலுவைகள் செய்து
புத்தனை அறைவாய்.

# அரசு துறந்தான்
ஆசை துறந்தான்
அவன் ஆடை துறந்ததுதான்
பிடித்தது உனக்கு.
நிர்வாணமாய் அலைகிறாய்.

# ஆசைப் படுபவனுக்கும்
ஏக்கப் படுபவனுக்கும்
வித்தியாசம் தெரியாததால்
வேறு வழியின்றி
கடவுளானான் புத்தன்.

# அறுக்கப்பட்ட போதிமரத்தின்
அடிக்கட்டையில் அமர்ந்து
மீண்டும்
சித்தார்த்தனாகிக்
கொண்டிருக்கிறான்
புத்தன்.

# ஒரு நாடு முழுவதும்
பௌத்தம்
இனவெறி போதித்தது.
புத்தன்
வெளியேறிவிட்டதை அறியாமல்
தினந்தோறும் மணியடிக்கிறான்
அந்த பிக்கு.

# அமைதி குறித்த
துள்ளிசையின் ஒரு துளி
அவனது மூடிய இமையில் விழுந்து
கன்னத்தில் வழிந்ததும்
தேனீர் கடையை நேக்கி
நடையைக் கட்டுகிறான்
புத்தன்.

படைப்புக் குழுமம் அறிவித்திருந்த &ldquoநதிக்கரை ஞாபகங்கள்&rdquo கவிதைப் போட்டியின் தலைப்பு முக நூல் கவிஞர்களின் எண்ண ஓட்டத்தின் வெவ்வேறு கோணங்களை படம் பிடித்து வாசகர் முன்னே வைக்க காரணமாக இருந்தது. கவிஞர் குறிஞ்சி நாடனின் &ldquoநதிக்கரை ஞாபகங்களை&rdquo கீழே பார்ப்போம் :-

நதிக்கரை ஞாபகங்கள்.
------------------------------------------

நதியும் நதிக்கரையும்
பால்யத்தின் ஞாபகத்தில்
உறைந்து கிடக்கும் தாகநாளில்
நதிகளற்ற தேசத்து யாத்ரீகன் கேட்கிறான்,
உன் நாகரீகத்தைச் செதுக்கிய நதிகள் எங்கே?

முதலில் நான் கூவத்தைக் காட்டியிருக்கக் கூடாது
நதியின் தொழுநோய் இதுவென்று
மூக்கைப் பிடித்தபடி ஒரு கோக் அடித்தான்.
நீ குடித்ததுதான் தாமிரபரணி நதியென்றேன்!

மணல் வண்டிக்கடியில் கண்ணீரைப்போல் வடிந்த
பாலாற்றைப் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
கரையைத்தோண்டிக் கதறக்கதற புதைத்தோமே
அந்தப் பெண்ணையாற்றின் சமாதியைக் கண்டான்!

காவிரி கைதான இட.த்தைப் பார்த்து
நதி கன்னடம் பேசியதா என்றான்!
வைகைக் கரையில் கிடந்த
கேரளத்து வதந்திகளைக் காறித்துப்பிவிட்டு
நதிகளின் புத்திரர்கள் எங்கே எனத்தேட...
மூட்டைத்தூக்கும் நெட்டிக்கிழவனை காட்டினேன்!

சட்டென மகாநதிகள் தூரமா என்றான்.
அஞ்சலகம் அழைத்துச்சென்று
கங்கையை வாங்கி கையில் திணித்தேன்.

குறிப்பேட்டை எடுத்துக் குறித்தான்
மகாநதிகள்தான் இந்த நாட்டை ஆளுகின்றன!?

குறிஞ்சி நாடனின் கவித் திறனுக்கு எடுத்துக் காட்டாக இனியும் பல் கவிதைகளை சொல்லிக் கொண்டே போகலாம். கட்டுரை மிக நீண்டு விடும் என்கிற காரணத்தால் குறிஞ்சி நாடனின் மேலும் சில கவிதைகளையும் சில வரிகளையும் குறிப்பிடாமல் விட முடியவில்லை. படைப்புக் குழுமத்தின் அனைத்து படைப்பாளிகளின் சிந்தைக்காக கீழே கொடுக்கிறோம் -
மனிதர்களாய் இருந்தோம் .
கடல்
நனைத்து நனைத்து
மீனவர்களாக்கிவிட்டது!
காத்திருக்க வைத்து
கரை எங்கள் பெண்களை
மீன்காரிகளாக்கிவிட்டது.
எங்கள் குழந்தைகளை
அகதிகளாக்கியதுதான்
யாரென்று தெரியவில்லை!
************************************************

புழுதியில் குளித்த பூவைப்போல
நெகிழிக் குப்பை சேகரிக்கும் சிறுமி,
எதையும் தரமுடியாது வெட்கித் தலைகுனியும் எனக்கு
கோணிப்பை நிரம்ப பரிதவிப்பைத் தந்துவிட்டு
வியர்த்த கைகளில்
எதிர்காலத்தை
இழுத்துச் செல்கிறாள்.
*********************************************************

அரபு நாடுகளின் பாலை வனங்களை தங்களது வேர்வையை உதிரமாக்கி உழைப்பால் சோலைவனங்களாக்கிக் கொண்டிருக்கும் இந்தியக் குடிமக்கள் காணும் உண்மையான சோலை வனம் எங்குள்ளது ?
பாலைவனச்சோலை.
------------------------
ஐநூறடி உயரத்தில்
ஊசலாடும் சாரத்தில் வௌலாலைப்போல் தொங்கிக்கொண்டிருக்கிறான்
இராமநாதபுரத்து சண்டியன்.

தண்டச்சோறு பட்டம் வழங்கி கால்கட்டுபோட்டால்
அடங்குவானென்று
அசலூரில் இவனை
துபாய் மாப்பிள்ளையாக்கியிருந்தார் அப்பா!

திருச்சி ஏஜெண்டுக்கு
அம்மாவின் தாலிசரடையும்
புதுப்பொண்ணின் ஆரத்தையும் விற்று
அறுபதாயிரம் அழுதுவிட்டு
இதோ
ஐநூறடி உயரத்தில்
ஊசலாடும் சாரத்தில்
வௌலாலைப்போல....

தமிழரசி உண்டாகியிருக்காடா!
வந்த மூன்றுமாதத்தில் இனிப்பு அனுப்பினாள் அம்மா!

அலைபேசியில்
தினமும் அழும் தமிழரசியை கொஞ்சிக்கொஞ்சி தூங்கவைத்துவிட்டு
இவன் அழத்தொடங்குவான்!

இது பேறுகாலம்
அதனால்தான்
கீழே
கப்பூஸ் பொட்டலத்திற்கு அடியில் வைத்த அலைபேசிக்கு பெரம்பலூர் சண்டியனின் காதுகளைக் காவல் வைத்திருந்தான்.

அரேபியப் பகல் அனலாய் எரிக்க
முரட்டுச் சீருடைக்கு வெளியே
அவனது தாய்ப்பால்
உருகி வழிந்துகொண்டிருந்தது.

தலைக்குமேல் தாழ்வாய் பறக்கும்
விமானத்தின் பேரிரைச்சல்
புதிதாய் வரும்
துபாய் மாப்பிள்ளைகளின் கதறலைப்போல் கேட்டது அவனுக்கு.

பெரம்பலூர் சகா
கீழிருந்து கத்தினான்.
பொட்ட புள்ளே பொறந்திருக்காம் மாப்ளேய்.....

வைகை ஈரமாயிருந்த காலத்தின் கீழைக்காற்று
காதுக்குள் புகுந்து
சில்லிட வைத்தாற்போல்
குளிர்ந்தான்.

வெள்ளிக்கிழமை அறையில் வாங்கிவைத்த கிலுகிலுப்பையை
இங்கிருந்தே எடுத்து
இராமநாதபுரத்தில் ஆட்டினான்!.

தோளைத் தட்டிவிட்டுக்கொண்டு
எம்பி
சூரியனைத் தொட்டு
மத்தாப்பாய் பொறிபறக்க
இணைத்து பற்றவைத்தான்
இரும்புச்சட்டங்களை.

அன்று மாலை
அவன்
அனுப்பிய முத்தங்கள்
அலைபேசி கோபுரத்தில் மோதி
உதிர்ந்து
பூக்களாய் பூத்தன.

அதைத்தான்
பாலைவனச்சோலை
என்று
எல்லோரும் அழைக்கிறார்கள்!

எவ்வளவோ படைப்புகளை நம் குழுமத்தில் பதிந்திருந்தாலும் அதையெல்லாம் இங்கே எடுத்து சொல்ல இயலாத காரணத்தாலும் சில வரிகளை மட்டும் துளிகளாக தருகிறோம்.

//
தேசத்தின் வயல்வெளிகளெங்கும்
நீ
விளைவிக்கத் தவறிய பயிர்களையெல்லாம்
தழுவித் தழுவி
அழுகிறது உன் ஆவி!
//

//
விட்டுக்கொடுப்பது
உரிமையுடன் தட்டிப்பறிப்பது!
விலங்குதான் இது
நீ இழுத்தால் உடைந்துவிடும்
ஆனால்
இங்கு
விலங்குடைதல் சாபம்!
//

//
எத்தனை அலங்காரம்
எத்தனை அகங்காரம்
விட்டிலைவிட
கொஞ்சநாள்
அதிகமாய் வாழ்பவனுக்கு!
//

//
அவள்
சுருட்டி வைத்திருந்த இருட்டு
சுட்டுவிரலாய் என்னை நோக்கி நீண்டது
//

//
நம் கனவு
அருகில்தான் உலவிக்கொண்டிருக்க வேண்டும்.
பூக்களை விலக்கிக்கொண்டு,
மகள் வாசம் வீசுகிறது பார்!
//

படைப்பாளி குறிஞ்சி நாடன் அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

மாதாந்திர பரிசு

மதுசூதன். எஸ்

View

மாதாந்திர பரிசு

ர மதன் குமார்

View

கவிச்சுடர் விருது

ஸ்டெல்லா தமிழரசி ர

கவிச்சுடர் ஸ்டெல்லா தமிழரசி ர  ஒரு அறிமுகம்
***************************************************

//

இதோ பசிக்கிறது.
ஒர் கவிதையை தின்றுக்
கொண்டிருக்கிறேன்.

//

படைப்புக் குழுமத்தால் கவிச்சுடர் விருது பெறும் படைப்பாளி ஸ்டெல்லா தமிழரசி எழுதிய ஒரு கவிதையை மேலே வாசித்தீர்கள். கவிதைகளை தின்றுக் கொண்டிருக்கும் அளவிற்கு கவிதை சுவைப்பவர். மகாகவி பாரதி பிறந்த மாதமான டிசம்பரில் ஒரு கவிதாயினிக்கு கவிச்சுடர் விருது அளிக்கப் படுவதில் படைப்பு குழுமம் மிகுந்த பெருமை கொள்கிறது. பாரதி கண்ட புதுமைப்பெண்ணின் சிந்தனை கொண்ட படைப்பாளி ஸ்டெல்லா தமிழரசி அவர்கள்
தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். வடசென்னையில் வசிப்பவர். ஒரு காலத்தில் கவிதை என்றாலே காதல் கவிதைதான் என்று காதல் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அவரது திருமணமும் காதல் திருமணம்தான்.

கவிக்கோவின் “அவளுக்கு நிலா” என்ற புத்தகத்தை விரும்பி வாசித்தவர் பின்பு அதன் ஈடுபாட்டில் தனது மகளுக்கு நிலா என பெயரிட்டு மகிழ்ந்தவர். கவிதைமேல் எவ்வளவு தாகம் கொண்டுள்ளார் என்பது இந்த ஒரு சம்பவமே சாட்சி. முக நூலில் அவர் பலவருடங்களாக கவிதை எழுதி வருகிறார். அத்துடன் பல வார/மாத இதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் இவரது கவிதையை எப்போதுமே காணலாம்.

இவரது கவிதை பயணம் 6ஆவது படிக்கும் போது தீக்குச்சி என்னும் ஒரு காதல் சார்ந்த சமூக கவிதையின் தொடக்கத்தில் பிறந்தது. பள்ளியின் ஆங்கில ஆசிரியர்தான் ஸ்டெல்லா தமிழரசிக்கு கவிதை எழுத அதிகம் சொல்லி கொடுத்தவர்.

இவருக்கு முதல் கைத்தட்டலும், முதல் பாராட்டும் கவிதையின் இடம் தான் தொடங்கியது. அப்போது அவருக்கு ஒரு பென்சில் பரிசளிக்கப்பட்டது குறிப்பிட்ட தக்கது. அதனால்தான் என்னவோ இப்பொது வரை படைப்பாளி ஸ்டெல்லா தமிழரசி பென்சிலை மிக அதிகமாக காதலிப்பவராம்.வட சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
முக நூலிலும் நமது படைப்புக் குழுமத்திலும் எழுதிவரும் இவரது வாழ்வியல்/சமூகம்/ காதல் கவிதைகளுக்கு மிக பெரிய வரவேற்பு இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

பள்ளிப் பருவத்திலிருந்தே கவிதைகள் மீது ஆர்வம் கொண்ட இவர் நிறைய கவிதைகள் எழுதி வந்துள்ளார். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்...

நம் நாட்டைக்காக்கும் போர்வீரனுக்கு எவ்வளவு மரியாதையும் அன்பையும் செலுத்த வேண்டுமோ அவ்வளவு அன்பையும் நேசிப்பையும் நம் வீட்டைக்காக்கும் ஒரு கூர்க்காவுக்கும் கொடுக்கும் ஒரு வாழ்வியல் நிறைந்த சமூக கவிதையை இங்கே கீழே காண்போம்..

//
சலாம்
----------

எனதுவீட்டை நன்கு அடையாளம் அறிந்த
பெயர்தெரியாத கூர்க்காவின்
மாத சந்திப்பு இது...

பொன்முறுவலோடு
எனது வீட்டின் கதவை தட்டும்
அவர் கைகளுக்கு என்னால்
மாதம் பத்து ரூபாய் மட்டுமே
தர முடிகிறது..

நள்ளிரவு நேரத்தில்
கூர்க்காவின் தடி என் வீட்டு கதவை
இரண்டு முறைதட்டுவதோ
அல்லது அவரின் விசில்
சத்தம் என் வீட்டு தெருவைகடக்கும் போது
சற்று வேகமாகவோ கேட்டதேயில்லை...

அவரின் வருகையை
இதுவரை உணர முடியாத எனக்கு
அவருக்கு முன் வந்து போன
குடுகுடுப்பைகாரனின் சத்தம்
அச்சுறுதலின் தூக்கத்தை வரவழைத்துவிடும்

இரவில் வந்தாரா
வரவில்லையாயென்ற கேள்விக்குறி
அவரின் ஒற்றை புன்னகையில்
சிதைத்துவிடவே செய்கிறது...

இதுவரை எதுவுமே
பேசாத அவரின் வார்த்தைகள் தவிர
எல்லாமே பேசி நலம் விசாரிக்கும்
மௌனம் அவ்வளவு அழகு...

அவரின் மாதந்திர சந்திப்பு
என்பது செடியில் பூத்த
புதுரோஜாவை பார்ப்பதுப்போன்ற
அலாதியின்பம்...

பத்து ரூபாயோடு
எனக்கு சலாம் வைக்கும் கைகளுக்கு
எந்த கபட தன்மையையும்
உணந்ததேயில்லை நான்

மீண்டும்
அவரைகான அடுத்த மாதம்
ஏதோ ஒரு நாளில்
கையில் பத்துரூபாய் நோட்டை
சுமந்தவளாய்
நின்று கொண்டிருக்க வேண்டும்

எனக்கான சலாம் அவரிடமிருந்து
பெருவதற்கு..

//

இயற்கையை அழிக்கும் மனித பிம்பத்தை தேடி திரியும் ஒரு சமூக அவலத்தை/கொடூரத்தை குழந்தை மன வாயிலாக சொல்லி இருக்கும் நேர்த்தி மிகவும் தேர்ந்த ஒரு கவிஞரின் பார்வையை பதிவு செய்யும் வித்தையை இப்படைப்பில் காணலாம்.

//
அந்த
யாரும் மற்ற
நதிக்கரையில்

சின்ன சின்ன
நண்டுகள்,
சுருண்டு படுத்துகிடக்கும்
நத்தைகள்...

புதைமணல்
பொக்கிஷமாய்
வண்ண கூழாங்கல்
துணைக்கு கொஞ்சம்
சங்கு...

இரு இதழ்
மடித்தது போல
அந்த சோழிகள்...

வலதுபுற
தென்னை.
சிலு சிலு
காற்று...

துவைத்த ஆடை
ஈரம் உலர
கொடிமரத் தொங்கல்

வெகு தூரத்தில்
நீயும் நானும்
தோள் சாய்ந்தது
போல உள்ள
அந்த புகைபடத்தை
பார்த்து கேட்க ஆரம்பித்துவிடுவான்...
மகன்-

அம்மா, இதற்கு
பெயர்தான் ஆற்றங்கரையா,??

அவனுக்கு எப்படி
புரியவைக்க
மணல் கொள்ளை
கொண்ட அந்த
பாதள பள்ளம் தான்
அந்த ஆற்றங்கரையென்று...

//

தனக்குள் பேசும் ஒரு யுக்தி கவிஞர்களுக்கு உரிய பாணி அதிலும் தத்துவார்த்தம் மிகுந்தும் அதில் பொருள் பொதிந்து சொல்வது கவிதையில் தனி மரபாக போற்றப்பட்டு இன்றளவும் இருக்கிறது அப்படிப்பட்ட பாணியில் இரு அதியற்புத கவிதையை பார்க்கலாம்.

//
இந்த சுவர் தடுப்புச்சுவரல்ல
எனக்கான
உலகத்தின்
மதில் சுவர்

நான்
எங்கு சென்றாலும்
இச்சுவரை சுமந்து
செல்ல முற்படுகிறேன்
இச்சுவரை நான்காய்
பிரித்து அவசர
கூடாரமிட்டு அதின்
நுழைவுவாயிலில்
பைத்தியங்கள் ஜாக்கிரதையென
ஒர் அறிமுக பலகையை
விளம்பரம் செய்கிறேன்...

என்னைப்பார்ந்து
பயந்து ஒடிய
அத்தனை அறிவாளிகளுமே
எதிர்கால பைத்தியங்கள்தான்
ஏனேனில் நானும் ஒருகாலத்தில்
அறிவாளி பட்டம்பெற்ற
நபரின் கடைசி மனிதன்

என்னை இப்போது
ஆராய்ச்சி செய்து
எப்படி பைத்தியமானாயென
கட்டுரை எழுதும்
வருங்கால எழுத்தாளனின்
பேனா முனையில்
கேள்விக்குறியாய் அமர்ந்திருக்கிறேன்...

வினாவ தொடங்கின
அவனுக்கு பதிலளிக்க
விருப்பமில்லையெனினும்
அவன் வைத்திருந்த
பேனாவிற்கு பதிலளிக்க
எனக்கு பேராசை

அப்பேனாவை வாங்கி
எழுத முற்பட்ட போது
அந்த எழுத்தாளர் பயந்து
சற்று பின்நோக்கி
ஒருசாக்பிஸ் துண்டை
எனதறையில்
தூக்கிப் போட்டார்...

அந்த சாக்பிஸ் துண்டை
கையில் எடுத்து
என் சுதந்திர எல்லைக்கோடான
மதில் சுவரில் கிறுக்கி வைத்தேன்

எவராலும்
புரிந்துக் கொள்ள இயலா
கவிதையை

ஒருவேளை
அதை மொழிப்பெயர்ப்பு
செய்ய எந்த எழுத்தாளர்
முன்வருகிறாறோ
அவரும் என்னைப்போலவே
ஓர் சுவரை சுமந்து நிற்பார்
அதன் நுழைவுவாயிலில்
கட்டாயம்
பைத்தியங்கள் ஜாக்கிரதை யென
விளம்பரம் செய்யப்பட்டிருக்கும்...
//

//


இப்பொழுது நீங்கள்
என் பூத உடலைப்பார்த்து
எனக்காக அழுவதைப்போல்
அழுதவள்தான் நான் கூட
முன்பொரு காலத்தில்!

நேற்றுவரை என் முதுகுக்கு பின்னால்
கூர் கத்தியில் கிழித்து கொண்டிருந்த பேரன்பு
பூங்கொத்தோடு முதல் ஆளாய்
முதல் வரிசையில்
என் முன்னாங்கால் இடது பக்கத்தில்
தலை கவிழ்ந்து அழுது கொண்டிருக்கிறது
இனி யார் முதுகில்
குத்தப்போகிறோமென்று...

நீ இறந்ததும் இறந்துவிடுவேன்
என்று சத்தியம் உரைத்த நண்பன்
பாண்டியன் கடையில் இறால் பிரியாணி
ஆர்டர் செய்து கொண்டிருக்கிறான்

எனக்கான Rip களை பார்த்து
அவசர அவசரமாய் ஒடி வரும்
உண்மை காதலனுக்காக தான்
என் மெட்டி விரல் காத்து கொண்டிருந்தது

என் பேரன்பு கணத்தை
கனமாக பேச தொடங்கும் போது
யாருக்கும் தெரியாமல்
ஒருரோஜா மாலையோடு
அவன் கண்ணீர் கசியும் ஒற்றைதுளியில்
நான் புனிதமாவேன்...

இப்போது என்னை தூக்குங்கள்
நான் ஈகோ அற்று
மிக லேசாக படுத்திருக்கிறேன்!
//

அழகியலை அதன் அழகு மாறாமல் சொல்லும் லாவகம் இக்கவிதையின் வாயிலாக காற்றில் வாசம் வீசி செல்லும் ஒரு குளிர் தென்றல் போல சொல்லாமல் சொல்லி விட்டு செல்கிறார்...

//
அடிக்கடி
கனவில் பாதி தூரம் பயணிப்பதாய்ச் சொல்லும்
வண்ணத்துப்பூச்சிக்கு
ஓர் இறகில்லை...

ஒற்றை இறக்கையோடு
மற்றொன்றை
சரிவர தேட முடியவில்லையென்ற குற்றச்சாட்டு
கடிதம்மூலம் தெரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது கனவில்...

இறக்கையை தேடி அலையும்
வண்ணத்துப்பூச்சியின் காவலாளிப் போலவே திரிகிறேன்...

மகளின் நோட்டு புத்தகத்தில்
மறைந்து வைத்து
"சாமி எப்படியாச்சுஇதை காசாக்கிடுனு
வானத்தைப் பார்த்து வேண்டி நிற்கும்"
அவளை

எதுவும்கேட்காமல்
திறந்து பார்த்தேன்
ஒற்றைசிறகு எப்படியோ காசாக மாறுமென்ற
நம்பிக்கை தெரிந்தது...

இறக்கையைதிருடி
வண்ணத்துப்பூச்சிக்கும்

மகளின் நம்பிக்கைக்கு நூறுரூபாயும்
கொடுத்தும்
பறக்கவிட்டேன்
இரவுகளின் கனவுபொழுதை
//

பெண்ணியத்தையும் அதன் வலிமிகுந்த வாழ்வியலையும் வெளியே சொல்லமுடியாத சில சூழல்களையும் இவ்வளவு எளிமையாக வலிமையாக சொல்ல முடியும் என்று நிரூபிக்கும் ஒரு கவிதை இது...

//

திடீரென எனதுபறவை
வயதிற்கு வந்துவிட்டது
தண்ணீர் ஊற்ற எந்த பறவையை
அத்தை பறவையாய் அழைக்கலாமென்று
சிந்தனை செய்கிறேன்

சிட்டுக்குருவி...
சிறிய பறவை
தேவையில்லையென்று மனம் சொல்கிறது

புறா
அழகு ஆபாத்தானது வேண்டாமென்கிறது

கிளி,அல்லது மயில்
அவர்களை அழைக்க தகுதியற்றவர்களாகிறேன்

கழுகு அல்லது பருந்து
அய்யையோ வேண்டவே வேண்டாம்
பார்வையில் கொத்தி திண்ணும் வகையை சார்ந்தவைகள் அவை

இப்போது என்ன செய்வதென்ற
கேள்விக்கு பதில் ஒன்றே ஒன்றுதான்
வயதிற்கு வந்ததை மறைத்துவிடுவோம்
உதிரக்கசிவு இறக்கையில் படாமல் பார்த்துக்
கொள்ளட்டும் செல்லப் பறவை
//

படைப்பாளியின் சில கவிமழை துளிகளை உங்கள் பார்வையில் நனைய விடுகிறோம்...

//
வெட்க மழையில்
நனைத்துவிட்டு போகிறாய்
உன் ஒற்றை புன்னகையில்
எப்படி துவட்டிக்கொள்ள
முடியும் என்னால்?
//

//
என்னை பு(ர)சித்துக்கொள்
அதுவே உனக்கு நான் வழங்கும் பாவமன்னிப்புதான்.
//

//
அலைகளின் பெருத்த சத்தம் நான்
மொழிபெயர்ப்பு செய்ய முடியாத
வானிலை எச்சரிக்கை நீ!
//

//
இலையுதிர்கால மரங்களைப்போல
ஆடை உதிர்ப்போம் வா
காதல் துளிர்க்கட்டும்
பட்டாம்பூச்சி கனத்துகிடக்கிறது.!
//

//
ஒரே பறவையின்
இறக்கைகள் நாம்
நீ வலதாகவும்
நான் இடதாகவும்
பறக்கிறோம்
//

//
மூங்கிலாய்
அசைகிறேன் நான்!
புல்லாங்குழலாய்
வாசிக்கிறாய் நீ!
//

//
எந்த இசைக்கருவியின்
நரம்பு நீ?
மீட்டவே தெரியவில்லை எனக்கு..?
//

//
மெழுவர்த்தியின் சாயலை போர்த்திக்கொள்கிறேன்
இப்போது
உனக்காக உருகவா?
இல்லை எனக்காக எரியவா?
//

இவரது பல படைப்புகளை சாதாரணமாக கடந்து விட முடியாது எளிமையாக இருந்தாலும் அதற்குள் பல பரிமாணங்களை உள்ளடக்கி எழுதுவதில் மிகவும் கைதேர்ந்தவர். இப்படிப்பட்ட பலகவிதைகள் இருப்பினும் எல்லாவற்றையும் இங்கே எடுத்து எழுத்தமுடியாத காரணத்தால் இன்னும் ஒரு கவிதையோடு நிறைவு செய்கிறோம்...


ஒர் கனவை
சாதாரணமாக கடந்து விடமுடியாது
--------------------------------------------------------

மார்கழி குளிர்போர்த்திய சாலையில்
வெறுமனே படுத்திருக்கும் யாரோ ஒருவரின் குளிருக்கு தார்பாய் கிடைத்தது போல
அத்தனை கதகதப்பு அக்கனவுக்கு

கோடை வெயிலில்
மயங்கி கிடக்கும் யாரோ ஒருவரின்
தொண்டைக்கு பன்னீர் சோடா இறங்குவது போன்று அத்தனை சுகம் அக் கனவுக்கு

நீண்ட நாள் ஆறா காயத்தில்
விரல் தொடமல் மயிற்பீலீயில்
மருந்திடும் சுகம் அக் கனவுக்கு

பள்ளி முடிந்ததும் ஒடி வந்து
தாயை தழுவும் குழந்தையின் சுகம் அக் கனவுக்கு

ஓர் மதியத்தின் நடுவெய்யிலில்
என் பின்னே நன்றியோடு ஓடிவரும்
குட்டி நாயின்
நுனி நாக்கு எச்சிலில்
நனைந்த சுகம் அக் கனவுக்கு

மிகக்கடுமையாக
பேசிக்கொணடிருக்கும் வேளையில்
முந்தானை இழுத்து சிரிக்கும்
குழந்தையின் முகசுகம் அக்கனவுக்கு

யாருமே இல்லாத பெருந்துயரில்
தோள்சாய்ந்து அழ கிடைத்த நட்பின் சுகம்
அக்கனவுக்கு

அம்மாவின் விரல்
கேசம் கோதும் சுகம்
அப்பாவின் ஆசை குட்டின் சுகம்....

அக் கனவு...
அக் கனவு...
அக் கனவு...

கடைசியாய்...,
வாழ்வை மிக நிம்மதியாய் வாழ்ந்து முடித்த
ஒற்றை நிமிடத்தின்
"ம்"சுகத்தின் பேரன்பு அக்கனவு.

அதனால்தான் சொல்கிறேன்
ஒரு கனவை கடப்பது அவ்வளவு எளிதல்ல.
//

~~~~~~~~~~~~~~~~~~~~~~

படைப்பாளி ஸ்டெல்லா தமிழரசி அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

View

கவிச்சுடர் விருது

கார்த்திக் திலகன்

கவிச்சுடர் கார்த்திக் திலகன்  ஒரு அறிமுகம்
***************************************************

//
இரண்டிரண்டாக
வாக்கியங்களை நறுக்கி
மாயப்புனைவின் மிளகுத்தூளை
அங்குமிங்குமாக தூவி
கைபேசி தொடுதிரையின்
மின்னணு வெப்பத்தில்
நீ விரும்பி சுவைப்பாயே என்று
உனக்காக
சூடான கவிதைகளை
சமைத்துக் கொண்டிருக்கிறேன்
அதற்குள் என்ன அவசரம்
இருந்து சாப்பிட்டுவிட்டுப் போ
நண்பா
நாமெல்லாம் தட்டு நிறைய
பசியை கொடுத்தாலே
அள்ளி அள்ளி புசிக்கிற ஜாதி...
//

படைப்புக் குழுமத்தால் கவிச்சுடர் விருது பெறும் கவிஞர் கார்த்திக் திலகன் எழுதிய ஒரு கவிதையின் சில வரிகளை மேலே வாசித்தீர்கள். எழுதாமல் இருப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று எழுதி கேட்கும் அளவுக்கு எழுத்தின் தாகத்தால் உந்தப் பட்டு தற்போது நவீனக்கவிதைகளை படைத்துக் கொண்டிருக்கின்ற இந்த 44 வயது கடலூர் கவிஞர் துணை வட்டாட்சியர் என்கிற பொறுப்பான ஒரு அரசு அதிகாரியும் ஆவார். கார்த்திகேயன் என்கிற இயற்பெயரை கார்த்திக் எனச்சுருக்கி மனைவியின் மீது வைத்திருக்கும் பேரன்பு காரணமாக திலகம் என்கிற மனைவியின் பெயரை திலகன் என்று மாற்றி கார்த்திக் திலகன் என்ற புனைபெயரில் எழுதுகிறார்.

பல பிரபலமான நாளிதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் எழுதி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கும் கார்த்திக் திலகன் முக நூலிலும் நமது படைப்புக் குழுமத்திலும் பெரும் வாசகர் வட்டத்தை வைத்திருப்பவர். பள்ளிப் பருவத்திலிருந்தே கவிதைகள் மீது ஆர்வம் கொண்ட இவர் புலன் உதிர் காலம் என்கிற தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். கவிஞனின் தலையாயப் பணி மொழிக்கு வெளியே அலைந்து கொண்டிருக்கும் கவிதையை மொழிக்கு உள்ளே கூட்டிவந்து உட்கார வைப்பதுதான் என்கிறார் இவர்.

சொற்களை இவர் ஆட்டிப் படைக்கிறாரா இல்லை சொற்களால் இவர் ஆட்டுவிக்கப் படுகிறாரா என வாசிப்பவர்களை அசத்த வைக்கும் சொற்களின் சிலம்பாட்டக்காரர். பொன்னிறமாக வறுத்தெடுத்த முத்தங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?

//

என் எதிரில் இருந்த
கோப்பையில்
கவிதையின் மது...
ஐநூறு ஆண்டு
பழமையான சொற்களை
மனதுக்கடியில்
புளிக்க வைத்து
தயாரித்தது....
ஒரு வெள்ளித் தட்டில்
பொன்னிறமாக வறுத்த
இரண்டு முத்தங்கள்...
ஒரு வாய் மதுவுக்கு
ஒருகடி முத்தம்...
சமையலறையில் இருந்து
உன் குரல் கேட்கிறது
முத்தம் போதுமா
இன்னும் இரண்டு
பொறிக்கட்டுமா என்று
எப்படிச் சொல்வது
இன்னும்
இருநூறு ஆண்டு
கழித்துக் கேட்டாலும்
இரண்டுமே எனக்கு
சலிக்காது என்று..
//


மொழி சிலசமயங்களில் மொழியாமல் இருக்கும் போதோ சிறு துளியாக விழும்போதோ அதன் ஊடுருவல் மிகச்சக்தி வாய்ந்தது. உம் எனும் சிறு சொல் பல்வேறு நிகழ்வுகளில் பல்வேறு அர்த்தங்களை அணிந்து கொண்டு வாழ்வின் கணங்களை எப்படி நகர்த்துகிறது பாருங்கள். அவரது கவிதை ஆயுதங்களில் ஒரு ஈட்டியாகப் பாயும் ஒரு கவிதை;-

//

கதை சொல்லிகளை விட
உம் கொட்டிகள்தான்
நம்மை அதிகம் கவர்ந்துவிடுகிறார்கள்
சிறுபொழுதின் காம்புகளில் கூட
சில்வண்டுகளைப் போல்
அமர்ந்துவிடுகின்றன
இந்த உம் கள்
நெகு நெகுவென்று
பிரிந்து செல்லும்
கதைகளின் கிளைமீது...
கேசம் கலைய கிடக்கும்
காரிகையின் இதழ் மீது...
அதிகாரத்தின் பாதுகைகள்
நசுக்குகிற சிறுநீரக நுண்குழல்களின் மீது....
வாழ்வை அரவை செய்யும்
இயந்திரங்களின் ஒலி மீது...
அவைகள் பசியோடு அமர்கின்றன
கதைகளுக்கு உம்கொட்டியபடி
உறக்கமென்னும்
நாவாயின் சுக்கானை
காற்றுவீசும் திசையில்
லாவகமாக திருப்புகின்றனர்
குழந்தைகள்
படுக்கையில்
கொட்டப்படும் உம்கள்
சொர்க்கத்தின் படப்பைக்குள்
செம்மீன்களாய் சேகரமாகின்றன
அதிகாரத்தின்
உம்களுக்கு எதிராக
அடக்கமுடியாமல்
அழுதுவிடுகின்றன
எளியவனின்
சிறுநீரக நுண்குழல்கள்
இயந்திரங்கள் கொட்டுகிற
உம் களில் அரைபடுகின்றன
உழைப்பாளியின்
அந்தியும் பகலும்...
இப்படிதான் இன்று
என்னருகில் செல்பேசிக்கொண்டிருந்த
உம்கொட்டியின் கன்னம்
சட்டென்று வியர்த்துவிட்டது
அவன் கனவின் லங்கோட்டை
யார் பிடித்து இழுத்ததோ
மறு முனையில்......
//


நலிவடைந்து வரும் கிராமியக் கலைகளும் கலைஞர்களும் கவிஞரின் பார்வையில் ஒரு வாழ்வியல் கவிதையாக பரிணமிக்கிறது . விளிம்பு நிலை மனிதர்களின் அவல நிலைகளை பாடாத கவிஞர்களும் உண்டோ ? இந்த உருக்கமான கவிதை கவிஞரின் மனித நேயத்துக்கு எடுத்துக் காட்டு :-

//

தெரு மேடையில்
ஆடுவதற்கு முன் திரைக்குள்
அவன் ஒத்திகை பழகும் போதே
குரல் கேட்டு ஆர்ப்பரிக்கும் கூட்டம்
கையிலேந்திய மரக்கத்தியை
சுழற்றி சுழற்றி சிவன் வேடத்தில்
அவன் அடவு கட்டினால்
காற்றில் மிதக்கும் படகா
காணத்தில் மிதக்கும் உடலா
அந்த சிவனே கெட்டான்டா
என்பார்கள் பெருசுகள்
ஆறுகால பூஜையோடு
சிவன் நன்றாகத்தான் இருக்கிறான்
எங்கள் ஊரில்
இவன்தான் கெட்டுப்போனான்
நலிவடைந்த கலைஞனுக்கான
நானூறு ரூபாய் பென்சனில்
பொலிவிழந்து போனது
அவன் பிழைப்பு..
திருமணமே செய்துகொள்ளாத
அவன் சொல்வான்
தான் கலியாணஞ் செய்து கொண்ட காதலி கலைதான் என்று
நீரில் மிதக்கும் நீண்ட ஜடாமுடியை
அலைகள் தாலாட்ட ஒருநாள்
குளத்தில் மிதந்த
தெருக்கூத்து மகாராஜாவை
ஊரே சுற்றி நின்று
வேடிக்கை பார்த்தது
மின்னலை போல ஆடியபாதத்திலிருந்து
மின்சாரத்தை பருகிக் கொண்டன
மீன்குஞ்சுகள்
நிரம்பிய கூட்டத்தை கண்டதும்
நீர்த்திரைக்கு பின்னாலிருந்து
மானசீகமாக ஒலிக்கிறது
அவன் குரல்
தந்தானே தந்தானே என்று...
அவனுக்கு எதையுமே தராத சிவனே
அவன் ஆன்மாவுக்காவது
அமைதியை தா...
//


சில உணர்வுகளுக்கு மாற்றீடு கிடையாது. ஒரு கவிஞன் என்றாலே தனிமைஎன்னும் உணர்வை எப்போதும் தன காதலைப் போல் தன் மனதுக்குள் பொத்தி வைத்திருப்பவன். கவிஞனின் தனிமையை அவனால் விட்டுபிரிய நேரும் என்கிற போது அதற்கு மாற்றாக அவனால் எதை அங்கு வைத்துவிட்டு வரமுடியும் ? ஒரு அழகான கவிதை..தனிமையின் இனிமையோடு..

//

இரண்டு சூரியன்கள்
பிரகாசிக்கும் அளவுக்கு
என் வானம் ஒன்றும்
அவ்வளவு பெரியதல்ல
அப்படியும் இரண்டாவது சூரியன்
வந்துவிட்டால்
முதலாவது சூரியன் தானே
காற்றில் கரைந்துவிடுகிறது
எதையும் மாற்றீடு செய்துவிட்டு
பதிலிகளை வைத்துவிட முடிகிறது
துக்கம் இருந்த இடத்தில் அன்பை
மகிழ்ச்சி இருந்த இடத்தில்
அற உணர்வை
காதல் இருந்த இடத்தில் ரகசியங்களை
பிரிவு இருந்த இடத்தில் இசையை
எல்லாம் எளிதாக இருக்கிறது
ஆனால்
நான் தனிமையை
காலி செய்துவிட்ட பிறகு
தனிமை இருந்த இடம் மட்டும்
காலியாகவே இருக்கிறது
ஏனென்று தெரியவில்லை
//


மானுடனுக்கு அன்பைப் பகிர்வதற்காகவே இயற்கை படைக்கப் பட்டிருக்கிறது. கவிஞன் தன்னையே கைவிட்டு நிராதரவான நிலைமையில் அன்பின் பசியாற காதலிபோல் இயற்கையை அழைக்கும் குரலுக்கு நம்பிக்கை உணவாகக் கிடைக்க கவிஞரின் எழுதுகோல் வடித்த கவிதையொன்றை பாருங்கள் ;-

//

என்னை நானே கைவிடுவது
எத்தனை துயரார்ந்தது.
கடவுள் என்னை
கைவிடுவதை விட
அது கொடுமையானது.
அப்படியொரு நிராதரவான கணத்தில்தான் எனது தேடல் துவங்கியது.
தாங்கமுடியாத அன்பின்பசி எனக்கு.
நீலமலையின் குறுக்கே
அடிவானமெங்கும்
கிளைகள் பிரிந்து
பரபரவென ஓடும் மின்னலைப்போல,
நான் தேடத்துவங்கினேன்.
அதோ அந்த மலைமேலே,
மேகத்தை ஒரு பாத்திரத்திலெடுத்து
கூழ்பிசைந்து கொண்டிருந்தவளை கண்டேன்.
அவள் தலை எங்கும் ஆயிரம் கண்கள்.
அவள் பார்வையின் விள்ளல்களை வாரிவாரி விழுங்கியும்
அடங்கவே இல்லை என்
அன்பின் பசி.
அம்மா... என்று வானம் அதிர
அழைக்கிறேன்.
மாயத் தொப்புள் கொடியை
பிடித்துக்கொண்டு அவள் குரல்
மலைஇறங்கி வந்தது என்னிடம்.
அவள் குரலை பிடித்துக்கொண்டு
அழத் தொடங்கினேன்.
பசுவின் பின்கால்களுக்கிடையில்
பிறந்து விழுந்த இளங்கன்றைப்போல,
தட்டுத்தடுமாறி
எனக்குள் எழுகிறது
ஒரு புதிய நம்பிக்கை....
//


தாயன்புக்கு நிகர் உண்டோ? மண்ணையும் மொழியையும் தாயாக ஏற்றுக் கொண்ட கவிஞன் என்றுமே தாய்க்கு முன்னால் ஒரு சிறு மழலையாக இருக்க ஆசைப்படுகிறான். வளர்ந்த பருவத்தில் தாயன்பை தூர நின்று பார்த்து ஏங்கும் ஒரு குழந்தையாய் மனதுக்குள் மாறிவிடும் கவிஞனின் உணர்வின் வெளிப்பாட்டை திரு கார்திக் திலகன் அவர்களது இந்தக் கவிதை மூலம் நம்மையும் ஈனக வைக்கிறார் ;;-

//

என் குளிர் கண்ணாடியை
எடுத்து அணிந்து கொண்டாள்
என் குட்டி மகள்
என் பெரிய சப்பாத்துகளில்
கால்களை நுழைத்துக் கொண்டு
இடுப்பில் கைவைத்து
என்னைப் போலவே
நடந்துகாட்டுகிறாள் அவள்
பேத்தியை அள்ளி
மடியிலிட்டு கொஞ்சுகிறாள்
என் அம்மா
என் மகளின் வயதில்
அம்மா எனக்கு வாங்கித்தந்த
சப்பாத்துக்கள்
குட்டி குட்டி நிலாக்களைப்போல
இருக்கும்
என்ன ஆச்சரியம்
அந்த குட்டி நிலாக்களுக்குள்
என் கால்கள் இப்போது
எளிதாக நுழைந்துகொண்டன
அடிவானில் பதுங்கும்
சிவந்த முட்டை உடைந்து
உன்
பழைய கொஞ்சல்கள் எல்லாம்
என்னை நோக்கி
பறந்து வருவது போல்
ஏக்கமாக இருக்கிறது
அம்மா என்னையும்
ஒருமுறை கொஞ்சேன்......
//


அதிகாலை என்பது மனிதனுக்கு தன் பிறப்பை நினைவூட்டும் நேரமோ ? வாழ்க்கை உயிர்களுக்கு ஊட்டும் தாய்ப்பாலின் சுவையோ ? மனித நேயம் ஒவ்வொரு மனதுக்குள்ளும் மலரத் துவங்கும் நேரமோ ? கார்திக் திலகனின் அனுபவம் ஒரு கவிதையாய்..

//

காலை பனியில் மங்கலாக கண்விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தன
கனரக வாகனங்களின் முகப்பு விளக்குகள்
பனிக்குல்லாய் அணிந்து கொண்டு நடைப்பயிற்சி போகிற முதியவர்கள்
பனிக்குள்ளிருந்து
வெளியே வருகிறார்கள்
பின்பு பனிக்குள்ளேயே போய்விடுகிறார்கள்
அவர்களின் இதயக்கடிகாரத்திலிருந்து
இயந்திரக்குருவி
காலக்கிரமமாக வெளியே வந்து
கூவி விட்டு உள்ளே போகிறது
வங்கியில் வேலை பார்க்கும் பெண்
தன் செல்ல நாயை அழைத்து வந்திருக்கிறாள்
என்னை கண்டதும் முகம் மலர்த்தி
குசலம் விசாரிக்கிறாள்
என் முகத்தை பார்த்து
வினோத ஒலி எழுப்பிய நாய்
என் கால்களை நக்கிவிட்டது
அந்த எச்சிலின் ஈரம்
எனக்கு புரியவைத்துவிட்டது
எச்சில் என்பது ஒரு மொழி என்பதையும்
ஈரம் என்பது ஒரு வார்த்தை
என்பதையும்
கிழக்கிலிருந்து
பனிக்குல்லாய் அணிந்து வந்த முதியவரின் பெயரைக் கேட்டேன்
சூரியன் என்றார் அவர்
இன்று பனிகொஞ்சம் அதிகம்
என்று முணுமுணுத்தது
அவரின் செம்பழுப்பு நிற உதடுகள்..
//


கணவன் மனைவி அன்பின் கொடுக்கல் வாங்கல் அனைத்தும் மனதுக்குள் அவர்கள் அமைத்திருக்கும் ஒரு ரசசிய சுரங்கப்பாதை வழியாகவே நடைபெறுவதுதான்.. அந்த ரகசிய சுரங்கப் பாதை பகிரங்கமாக திறக்கப் படும் கணம் என்பது அவளின் நோயுற்ற நிலையில்தான். ஆறுதல் தேறுதல் என்பதெல்லாம் இருவருக்குமிடையே வெளிப்படும் இருவழி பரிமாற்றம். இல்லத்தரசியின் நோயுற்ற நிலைகண்டு இயலாது நிற்கும் ஒரு கணவனின் நிலையை வலிகளின் வரிகளில் பதிவு செய்கிறார் கவிஞர் ;;-

//

நோயுற்ற மனைவியின் கை
குழந்தையின் கைபோல இருக்கிறது.
எடுத்து நெஞ்சில் வைத்துக்கொள்ள ஏதுவாக...
எத்தனை கோபத்தில் அவள்
இருக மூடி வைத்திருந்தாலும்
என்னைக் கண்டதும் அவள்
மனதின் தாழ் சட்டென தெறித்துவிடும்.
எனக்கான வீடு அவள் மனம்தான்
என்று நம்புகிறேன்.
இரண்டு மனங்களுக்கிடையே
ரகசிய சுரங்கவழி ஒன்றிருக்கிறது.
யாருமே சொல்ல முடியாத
ஆறுதல்களை
அதன் வழியேதான் நாங்கள்
எடுத்துச் செல்வோம்.
இன்று அவள் நோயுற்றிருக்கிறாள்.
ரகசிய பாதையின் கதவுகளை
பகிரங்கமாக திறக்கிறேன் நான்
அழுகையால்...
கடவுள் நம் கூடவே இருக்கிறார்
கவலையை விடு என்று,
கண்களை துடைக்கிறாள் அவள்.
யாருக்கு யார் ஆறுதல் சொல்வது?
இந்த தலைகீழ் விகிதங்களை
என்னதான் செய்வது என்று
கைகளை பிசைகிறது விதி.....
//


மானுடம் பிறந்த போதே காதலும் பிறந்து விட்டது. காலப்போக்கில் ஜாதி மத இனமென்று மனிதன் பின்னிய மாயவலைகளில் அவனே வீழ்ந்து விடுகிற கொடுமையை நாம் காண்கிறோம். வாழ்நாட்களில் சாகடிக்கப்பட்ட காதல் இறந்தபின் உயிர்பெறுகிறது . சாதிக் கொடுமையாலோ சமூக ஏற்றத்தாழ்வின் அவலத்தாலோ கொலைசெய்யப் பட்ட ஒரு காதலை இரு பிணங்களாய் சுமந்து செல்லும் அமரர் ஊர்தியின் ஓட்டுனரின் பார்வையாக ஒரு கவிதை கண்ணீரை அணிந்து கொண்டு வடிக்கப்ப்பட்டுள்ளது;-

//

அமரர் ஊர்தியில்
ஓட்டுனன் வேலை அவனுக்கு.
என்றாலும் குடிப்பழக்கமில்லை.
ஆனால், சவபயணங்களின் போது
சாராயத்தில் ஊறவைத்தது போல
விரைப்பாக இருக்கும்
அவன் மனம்.
ஒவ்வொரு உடலுக்கும்
ஒரு மணம் இருப்பதைப் போல,
ஒவ்வொரு சவத்திற்கும்
ஒரு மணம் இருக்கிறது
என்பான் அவன்.
அன்று அவனுக்கு வாய்த்தது
கட்டிக்கொண்டே தீக்குளித்து இறந்து போன
காதலர்களின் இரட்டைச் சவம்.
எரிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டதாம்.
இறுதிவரை பிரிக்கவேமுடியவில்லை
சவங்களை.
நண்பர்கள் மட்டுமே கூட இருந்தனர்.
அவர்களின் கண்களில் வரிசைகட்டிய நீர்முல்லைகளின்
மணம் என்னவோ செய்தது.
கண்ணீர் என்பது வெறும் திரவம் மட்டுமே அல்ல என்று அவனுக்கு
அப்போது தோன்றியது.
தார்ச்சாலை என்கிற
இரவின் படிமத்தின்மீது
ஊர்ந்து கொண்டிருந்தது வாகனம்.
தழுவியஉடல்களில்
சிக்கிக்கொண்ட
மரணத்தின் எலும்புகள்
முறியும் ஓசை
கேட்டுக்கொண்டே இருந்தது
வாகனம் குலுங்கும் போது....
முத்தங்களின் கருகல் வாசனை
அவன் மூக்கைத் துளைத்தது.
கடைசிவரை அவன்
திரும்பிப் பார்க்கவே இல்லை.
ஆன்மாக்களின் புணர்ச்சியை பார்ப்பது
அத்தனை நாகரிகமில்லை என்று
நினைத்தான் போலும். 
மறுநாள் காலை மனைவியை
அழைத்து -
அம்மு நான் இனி அந்த
வேலைக்கு போகலடா
என்றான் விட்டத்தை வெறித்தபடி....
//


உலகையும் உயிர்களையும் மனிதர்களையும் படைத்த இறைவனுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கும் நையாண்டி வேடமிட்டு வரும் நெத்தியடிக் கவிதை ஒன்று:-

//

இந்த பூமியை வானமென்னும் கிண்ணத்தை கொண்டு
மூடிவைத்து விட்டுப் போன இறைவன்
திரும்பி வந்து பார்ப்பதற்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டது இங்கே.
காளான்களைப் போல குப் என முளைத்து விட்டன கட்டிடங்கள்.
அதில் ஒரு சிப்பிக்குள் அமர்ந்தபடி குட்டி கடவுளுக்கு
முலையூட்டுகிறாள் தாயொருத்தி
கடவுளை வளர்த்து வளர்த்து மனிதனாக்கும்
துர்தேவதைகள்தான் இந்த தாய்தந்தையர்கள்.
கடவுளே வானத்து கிண்ணத்தை
திறந்து திறந்து
பார்த்துக் கொண்டு
அந்தரத்திலேயே தொங்கியபடி
அருள்பாலித்துக் கொண்டிரு!
பூமிக்குள் இறங்கி வந்து விடாதே!
உன்னை பலவந்தமாக கொன்றுவிட்டு
உன் உடலுக்குள் கூடு பாய இங்கே மனிதர்கள் காத்திருக்கிறார்கள்.
ஏதோ உன் அந்தரங்க தோழன் என்பதால் நானிதை சொல்லும்படி ஆயிற்று.
சூதானமாக பிழைத்துக்கொள்.
நீ நினைப்பதைப் போல புனிதர்களாக இருப்பதற்கு
அவர்கள் கடவுளர்களல்ல மனிதர்கள் மா...மனிதர்கள்.
//


கவிச்சுடர் கார்த்திக் திலகனின் கவிதைளை எல்லாம் இங்கு எடுத்தியம்புவது என்பது கடினம் என்பதால் படைப்பின் படைப்பாளிகளுக்காக சொற்களால் சிலம்பமாடும் அவரின் சில கவிதைகளிலிருந்து சில வைர வரிகளை மட்டும் தருகிறோம்.;-

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உதிரத்துளிகளை ஒன்றாக்கி
ஒரு பெண்ணை செய்வது எளிது...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சற்றுமுன்பு
அவ்வழியேதான்
ஒரு கவிதைப்பாகன்
வார்த்தைகளை
ஓட்டிச்சென்றிருக்கிறான்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இரவுக்குள் இருந்து ஒரு பகலை வெளியில்
எடுத்து கைதட்டல் வாங்கும் வித்தைக்காரன்தானே
இந்த சூரியன்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான் கவிதையுற்றிருக்கிறேன்.
அவள் கருவுற்றிருக்கிறாள்.
எனக்கு இப்போது முடிந்து விடும்.
அவளுக்கு பத்து மாதம் ஆகும்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படைப்பாளி கார்த்திக் திலகன் அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

View

கவிச்சுடர் விருது

கோ.ஸ்ரீதரன்

கவிச்சுடர் கோ.ஸ்ரீதரன்  ஒரு அறிமுகம்
********************************************************
பெயர் : கோ.ஸ்ரீதரன்
பிறப்பிடம்: சென்னை
வசிப்பிடம் : சென்னை
வேலை: சுய தொழில் - கட்டுமான நிறுவனம்.

இதுவரை வாங்கிய விருதுகள் & பரிசுகள்: கடந்த ஜனவரி மாதம் 2017 ஆண்டு இவர் படைப்பில் மாதாந்திர சிறந்த படைப்பாளியாக தேர்வு.


வண்ணதாசன்
புத்தகமொன்றில்
பரகாய பிரவேசம்
செய்திருந்தேன்
தொடர்ந்தழைத்த
அழைப்புமணியால்
வேறு வழியின்றி
என்னை விடுத்து
வாசல் நோக்கி சென்றது
என் ஆறடி கூடு ......

படைப்பாளி கோ.ஸ்ரீதரன் எழுதியிருக்கும் ஒரு குறுங்கவிதை மேலே நீங்கள் வாசித்தது. வண்ணதாசனின் கோடிக்கணக்கான வாசகர்களில் ஒருவராக அறிமுகப் படுத்திகொள்ளும் இந்த வாழ்வியல் கவிஞரை படைப்பு குழுமத்தை ஆதரித்து வரும் படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்ய அவசியமில்லை. நாவல் மரத்தில் ஏறிநிற்கும் ஒரு சிறுவன் மரத்தின் கிளைகளைக் குலுக்கி நாவல் கனிகளை கீழே உதிர்த்துகின்ற லாவகத்தில் இவரின் கவிதைகள் படைப்புக் குழுமத்தில் பதிவிடப் படுகின்றன. நாவல் கனிகளை ஆவலுடன் பொறுக்க ஓடிவரும் சிறுவர்களைப் போல வாசகர்கள் இவரது கவிதை பதிந்த உடனேயே வந்து தங்களின் கருத்தையோ விருப்பக் குறியீடுகளையோ இடுவது படைப்பில் கண்கூடு. என்றாலும் நாள்தோறும் இந்த குடும்பத்தில் இணைந்து வந்துகொண்டிருக்கின்ற புதிய படைப்பாளிகளின் கவனத்துக்காக படைப்புக் குழுமத்தால் கவிச்சுடர் விருது அளிக்கப்படும் படைப்பாளி திரு கோ.ஸ்ரீதரனைப் பற்றிய ஒரு அறிமுகக்கட்டுரை அவசியமாகிறது.

திரு கோ.ஸ்ரீதரன் அவர்கள் சென்னைவாழ் ஒரு நடுத்தர குடும்பத்து தலைவர். ஒரு கட்டுமானத்துறை பொறியாளர். எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரியும் 42 வயதான இந்த அம்பத்தூர் கவிஞர் பிறந்து வளர்ந்ததே சென்னைப் பெருநகரம்தான். சிறுவயது முதலே வாசிப்பில் ஆர்வமுள்ள இவரது இல்லத்தில் ஒரு சிறு நூலகத்தின் அளவுக்கு புத்தகங்களை சேர்த்து வைத்திருக்கிறார். முகநூல் வழி எழுத்துப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள இவரது சில கவிதைகள் பிரபல தமிழ் இதழ்களில் வந்துள்ளன. நமது படைப்பு குழுமம் மாதந்தோறும் அறிவிக்கும் நல்ல படைப்பாளிகளின் வரிசையில் இவரும் ஒருவர். படைப்பின் மின்னிதழ்களில் இவரது கவிதைகள் இடம் பெறுவதை நம் படைப்பாளி நண்பர்கள் அறிவார்கள். படைப்பாளி கோ.ஸ்ரீதரன் படைத்து சமர்ப்பித்த அனைத்து கவிதைகளையும் இங்கு குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் அது மிக மிக நீண்ட கட்டுரையாக முடியும். எனவே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற முறையில் சில கவிதைகளை மட்டும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
சென்னை மாநகரத்தில் பிறந்து வளர்ந்த படைப்பாளி கோ.ஸ்ரீதரன் படைக்கும் கவிதைகளை வாசிக்கும்போது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் சுற்றி வந்த ஒரு முதுபெரும் அனுபவக் கவிஞரின் எழுத்துக்களோ என ஆச்சரியப் பட்டுப் போகிறோம். காலங்கள் கடந்த ஒரு தமிழ் கிராமத்தில் இற்றுக் கொண்டிருக்கும் மண்ணின் மணத்தை கீழே காணும் ஒரு கவிதையில் அனுபவியுங்கள்-
அரிசி, பருப்பு உலர்த்தியிருந்த
முன் முற்றத்தில்;
மேயவரும் மயில்களை,
தொங்கும் காதின் தங்க பாம்படத்தை
கழட்டி வீசி விரட்டியபடி
கால்நீட்டி கிடக்கிறாள்
செட்டிநாட்டு கிழட்டு ஆச்சி;
மானுடம் வந்து புழங்க ஏங்கும்,
வௌவால்கள் வாசம்பண்ணும்
அந்த நாட்டு கோட்டையின்
முன் முற்றத்து ஒற்றை குண்டு பல்பின்
சன்னமான வெளிச்சத்தில்தான்
நானும் , பெரியாச்சியும், சில மயில்களும்
பத்தொன்பதாம் நூற்றாண்டில்
கொஞ்ச நேரம் கூடி வாழ்ந்திருந்தோம்....


கோ.ஸ்ரீதரன் அவர்களது எழுத்துக்கள் மிக எளிதான வார்த்தைகளால் புனையப் பட்டவை. ஆனால் மிக ஆழ்ந்த கருத்துச் செறிவு கொண்ட கனமான கவிதைகளை அவர் வடிக்கும் அழகே தனி. மகாத்மா காந்தி கனவு கண்ட கிராமத்து இந்தியாவின் இப்போதைய நிலைமையை அவர் எடுத்துரைக்கும் கவிதைப் பாருங்கள்:-

மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில்
மந்தை,மந்தையாய் ஜனங்களினூடே,
இந்தியதாயவளை இனங்கண்டுகொண்டேன்;
இளம்பிள்ளைவாதம் வந்த கால்களுடன்,
ஊனமுற்றோரின் கைப்பெடல் மிதிவண்டியில்,
முட்டும் மூத்திரத்தை அடக்கிகொண்டு,
எதிரிலுள்ள கழிவறைக்குள்
வண்டியுடன் தன்னையும் தள்ளிவிட,
கண்டுகொள்ளமால் கடந்துபோகும்
தன் பிள்ளைகள் ஒவ்வொன்றிடமும்
கெஞ்சியபடி கிடக்கிறாள்...

பெண்மையை என்றும் மதிக்கும்மென்ற நம் பண்பாட்டு வாதத்தை இன்றைய நம் பெண்மக்கள் நாள்தோறும் அனுபவிக்கும் அவல நிமிடங்கள் தவிடு பொடியாக்கும் இந்தக்கவிதை நம் சமுதாயத்துக்கு ஒரு சவுக்கடி:-

முதலில் மஞ்சுளா
அப்புறம் அகல்யா
கடைசியாய் கரோலின்
எவளுமே துணைக்கு வர தயங்க;
மைதானத்தில் கபடியாடும்,
தாழ்வாரத்தில் திரியும் அத்தனை
சக மாணவன்களையும்
சத்தமின்றி சபித்தபடி;
அந்த நூற்று சொச்சம்
ஜோடி ஆண் கண்களையும் கடந்து;
கறுப்பு நெகிழி பையொன்றுடன்
மாணவிகள் கழிவறைக்குள் தன்னை
அவசரமாய் அடைத்து கொண்டாள்;
பெருமூச்சுடன் வெளிவந்த பின்
அந்த இருநூற்று சொச்ச கண்கள்
அவள் பின்புறத்தை மட்டுமே மேய்வதாய்
தானே கருதி கொண்டாலும்,
பைக்குள் மறைத்திருந்த
பிரத்யேக மானமதை தன்னில்
மறைத்து விட்டதில்,
அல்ப ஆறுதல் அவளுக்கு ......

வாழ்வியல் கவிதைகள் வடிப்பதில் வல்லவர் படைப்பாளி கோ.ஸ்ரீதரன். முதுமையின் யதார்த்தத்தை இதைவிட எப்படி கூறிவிட முடியும் ?

முப்பது சொச்சம் முதியவர்கள்
ஒண்டியிருக்கும் அந்த அனாதைகள்
இல்லத்தில்;
நெஞ்சு சளியடைத்து
நேற்று இறந்திருந்தார்
முதியவர் முனுசாமி;
பிணத்தை சுற்றி
மௌனமாய்
அமர்ந்திருந்த
மிச்ச முதியவர்கள்
சலனமற்ற
அப்பிணத்தின் முகத்தில்
தன் முகத்தை
பொருத்தி பார்த்து கொள்வது
தன்னிச்சை செயலாயிருந்தது ....

சகமனிதனின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனிதன் மட்டுமே மனிதத்தையும் நேசிப்பான். வாழ்க்கை எனும் பயணத்தில் நம்மோடு பயணிக்கும் சக பயணியை கண்டும் காணாமலிருப்பது இந்த நடைமுறை வாழ்வியலின் சிக்கலோ என எண்ணத் தோன்றுகிறது. ஒரு சிறு பயண அனுபவம் சிறு கவிதையாய் உங்கள் முன்:-

நீண்டதொரு பேருந்து பயணத்தில்
தன் காச நோய் மனைவியின் லயமான
இருமலையும்;
ஓடிபோய் வாழாவெட்டியாகிவிட்ட
தன் மூத்த மகள் மஞ்சுவையும்;
இளம்பிள்ளை வாதம் வந்தும்
சோடா கம்பனி ஒன்றில்
சொற்பமாய் சம்பாதிக்கும்
தன் இளைய மகனையும்;
சில எம்.ஜி.ஆர் பாடல்களையும்;
கூடவே கொஞ்சம் மல்லாக்கொட்டை
ஓடுகளையும்,
என் வசம் கொட்டிவிட்டு
விழுப்புரத்திலயே இறங்கி
சென்றுவிட்டார் அந்த சக பயணி;
இத்தனைக்கும் தூங்குவதாய் பாசாங்கு
வேறு பண்ணியிருந்தேன்;
திருச்சி வந்தும் இறக்க முடியலயே...

மானுட உறவுகளை மையமாக வைத்து பல்வேறு கவிஞர்களால் பல்வேறு விதமாக வடிக்கப் படும் கவிதைகள் உலவும் இவ்வேளையில் படைப்பாளி கோ.ஸ்ரீதரன் பாணிக் கவிதைகளின் வீச்சில் மனித உறவுகளின் வலிமை பலவீனம் கோபதாபங்கள் என்று பல்வேறு சாரங்களை காணலாம். முதலில் ஒரு சிறு குழந்தையில் தெய்வத்தைக் காணும் ஒரு சிறு கவிதை;-

தூக்கத்தில் கடவுள் வந்து
விளையாடியதாய்
வெள்ளந்தி அறிக்கை
விடுகிறது குழந்தை;
மறுப்பேதும் சொல்லாமல்
சிரித்தபடி அமைதியாய்
ஆமோதிக்கிறோம் நாம்;
பராகிரமங்கள் கண்டபின்னும்
கோமாளியாகிறார் கடவுள்
கடவுளிடம்....

ஒரு நடுத்தரக் குடும்பத்தின் இல்லத்தரசி பற்றிய இந்த கவிதை நம் அனைவரின் இல்லத்தின் சமையல்கட்டுக்குள் எட்டிப்பார்க்கலாம்:--

மாத கடைசி மளிகை பாக்கி;
மாமியாரின் ஆஞ்சியோ;
மகனின் ஐஐடி கோச்சிங்;
மகளின் அதிக உதிரம்;
வேளை கெட்ட வேளையில்
புருஷனின் சல்லாபம்;
மெனோபாஸ் அறிகுறி;
சமீபத்தில் மூழ்கிபோன மூக்குத்தி;
அத்தனை வெறுப்பு சலிப்புகளை
அடித்து , அறைந்து
துவைத்து
நைலான் கொடியில் காயபோட்ட
இந்த துணிகளின் மீதே
காட்டியிருந்தாள்;
குடும்ப கவலைகளை
கர்ம சிரத்தையாய்
கடித்து பிடித்திருக்கின்றன
துணி கிளிப்கள் ....

அடுத்து குடும்பத் தலைவன் என்றழைக்கப் படும் தந்தைக் கவிதைகள் இரண்டு. ஒன்று பணி ஓய்வு எனும் முதல் கட்ட வாழ்வின் நுழைவாயிலில் நிற்கும் ஒரு பிதா. இரண்டாவது கவிதையில் தனது அப்பாவிடம் கற்றுக் கொண்ட பாடங்களை கற்றுக் கொண்டு முதிர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கும் அப்பா: 

டாம்பீகமும் ,கம்பீரமும்
அதிகப்படி ஆண்மையும்
கொண்ட தகப்பன்;
அழ வைப்பதை
வாடிக்கையாய்
வைத்திருந்தான்;
வழக்கம் போல மூக்கை
சிந்தி சுவற்றில் வீசி
கடந்து போயினர்
எம் வீட்டு பெண்டுகள்;
தினம் நூறு கையெழுத்தை
பதறாமல் போட்ட கை;
பணி முடிந்த இறுதி நாளில்,
தன் கடைசி தஸ்தாவேஜூகளை
ஒப்படைக்கும் சம்பிரதாய
கையெழுத்தை அந்த தடி
கோடு போட்ட நோட்டில்
நடுங்கியபடி , கலக்கமாய்
கிறுக்கியே வரைந்திருந்தன;
தன் பெயரில் வரும் பிரதாண
கொம்பை போட மறந்திருந்தான்;
ஆம் ,
அவன் கொம்புதான்
இன்றோடு உடைந்ததே ......
(2)

கணக்குகளே பார்த்ததில்லை
ஆனால் ஊதுபத்தியை கூட
விலைபார்த்தே எடுக்கிறேன்
யமகாவில் நூற்று சொச்சம்
ஓட்டி மகிழ்ந்தவன்தான்;
மகனின் பல்சர் பின்னிருக்கையில்
பதட்டுத்துடனே பயணிக்கிறேன்;
இரவாட்டம் பார்ப்பது என் வாடிக்கைதான்
தாமதமாய் வரும் மகனை வாயிற்படியிலே
நிற்க வைக்கிறேன்;
கசங்கிபோன ,காலர் வெளுத்த பனியனில்
என் மானமொன்றும் போவதில்லை;
மூன்று நாள் நரைத்த முட்தாடியில்
எந்த அசூயையுமில்லை ;
ஜக்கிவாசுதேவ் சுகமாய் பேசுகிறார்;
சிறிய துரதிர்ஷடமும் குலதெய்வத்துக்கு
கொண்டு செல்கிறது ;
தூக்கி கொஞ்சிய மகளிடம் பாசமிருந்தும்
ஏனோ இடைவெளி ;
இளசுகள் பேச்சில் செறிவு புலப்படவில்லை;
சமீபத்திய ஹிட்பாடல் காதில் நெருப்பாய்;
இளையராஜாவைத் தவிர எவனையும் விலக்கிவிடுகிறேன்;
பாசமலர் பார்த்து கொஞ்சமாய் கசிகிறேன்;
என்ன சொல்ல ,
நான் என் அப்பாவாகி கொண்டிருக்கிறேன்...

காதல் திருமணங்கள் அனைத்தும் மங்களமாக முடிவதில்லை. அதிலும் ஜாதி எனும் கொடும் தீயில் யாகம் வளர்த்த திருமணங்களின் கதி இப்படித்தான் நம் நாட்டில் இருக்குமோ? ஒரு எளிய கவிதையில் கோபத்தின் கனல் :-

திருமணங்கள் சுவர்க்கத்தில்
நிச்சயிக்கபடுகின்றன என்பது
சர்வ நிச்சயமாய் தெளிவானபின்;
எனக்கான சுவர்க்கத்தை
என் ஊர் காவல் ஆணையர்
அலுவலகத்தில் நானே
படைத்திருந்தேன்;
காக்கி உடுப்பில் பூ தூவி
வாழ்த்தினர் தேவர்கள்;
வெள்ளை டாடா சுமோவில்
வீச்சரிவாளோடு
எதிர்பார்த்து கிடக்கின்றனர்
அசுரர்கள் .....

விவசாய நிலங்கள் எல்லாம் நகரமயமாகும் அவசர வேளைலில் எங்கே தேடுவோம் நம் இயற்கை நமக்களித்த செல்வங்களை ? வாசியுங்கள் அந்த அவலங்களை இரு கவிதைகள் வடிவத்தில் :-
(1)
நானும் அந்த வெள்ளை கொக்கும்
இதே ஏரியில்தான்
மீன்பிடித்து தின்றிருந்தோம்;
வரிசையையாய் பச்சைநிற கொடிகள்
நடப்பட்டிருந்த கிழக்கு பக்கம் நான் நிற்க,
கடைகோடி சிவப்பு கொடிகளாடும்
மேற்கு முனையில்
அது வானில் வட்டமடித்து கொண்டிருக்கிறது;
இடையிலிலுள்ள எல்லைகல் நடபட்ட
செவ்வக நிலங்களில்தான்
மீன்கள் இருந்தது ....

(2)

தானிருந்த காட்டை
துதிக்கை வழி
துழாவி தேடியபடியிருக்கிறது ;
துதிக்கை துளை
அடைத்து கொண்டிருக்கும்
இரண்டு நாணய பில்லைகள்
அகன்ற கானகமதை
அப்பட்டமாய்
மறைத்து போட்டது .....

படைப்பாளி கோ.ஸ்ரீதரன் அவர்களது வாழ்வியல் கவிதைகளை வாசிக்கும்போதே நாம் அந்த வரிகளுக்கிடையே உலாவரத் துவங்கி விடுவோம். ஒவ்வொரு சொற்களும் நம்மோடு நம் சொந்தங்களைப் போல நம் முன்னே உட்கார்ந்து உறவாடத் துவங்கி விடுகின்றன. ஊடலும் கூடலும் இவரின் கவிதைகள் வடிவில் உங்கள் இல்லங்களின் உணவு மேசைகளின் மேல் பரிமாறத் தயாராக இருக்கலாம். உங்கள் சொந்தங்களையும் நட்புக்களையும் சந்திக்கும்போது அவர்கள் நெற்றியிலும் கோ.ஸ்ரீதரனின் கவிதை வரிகள் தெரிந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை . எனவே உங்கள் வாசிப்புக்காக சில கவிதைகளை கீழே கொடுக்கிறோம் 

பிரில்கிரீம்
வாசமாய் அப்பா;
விரலி மஞ்சள்
மணமாய் அம்மா;
சித்தனாதன் விபூதியாய்
பாட்டன்;
குட்டிகூரா பவுடராய்
பாட்டி;
கோல்டு பிளேக்
வீச்சமாய் மாமா;
வேப்பெண்ணையாய்
பால்ய தோழி;
ஜான்சன் சோப்
வாசனையாய் மகள்;
மெலிதான பழவாடை
திரவியமாய் மனைவி ;
கெரோசின் நாற்றமாய்
மெக்கானிக் மணி;
துவைக்காத காலுறையாய்
சக பணியாளனொருவன்;
நாசிக்குள் வாசங்களாய்
வசித்து கொண்டிருக்கின்றன
நான் ஊடாடும்
உறவுகள் சில;
சுய வாசம்
சூட்சுமமாய்
சுணங்கியே உள்ளது .....
*********************************************
அப்போதெல்லாம்
இப்போது போல்
என் எண்ணங்களில்
சொற்கள் சங்கீதமாயிருந்ததில்லை;
அப்படியே இருந்தாலும்
அழகு நேர்த்தியுடன்
அதை கவிதையாய் எழுத
திறனுமிருந்ததில்லை;
நண்பன் ஒருவனுக்கு
இரங்கற்பா
படைத்திருக்கிறேன் இன்று,
ஆம் அவ்வளவு
அழகாய் வந்திருக்கிறது;
அவனிருந்திருந்தால்
கண்டிப்பாய்
அவன் பாணியில் பாராட்டியிருப்பான்;
நிச்சயமாய் என் கோப்பையில்
உயர் ரக சீமைமதுவை
நிரப்பியவண்ணமிருந்திருப்பான்
அவனுக்கிருந்த ஆயிரம் கடனில்
மற்றுமொன்று ஏற்றி.....
***************************************************************
பத்துதலை பூதமொன்று திண்ணையில்
காத்திருப்பதாய் கதைவிட்டு
ஒரு வட்டில் சோற்றை ஊட்டியிருந்தாள் பாட்டி;
பாதியிடித்த கொட்டை பாக்கு,
காற்றில் பக்கம் பறக்கும் திறந்த கல்கி ,
கிணற்றின் மேல் ஈரம்பிழியாமல் கொசுவிவைத்த ஒன்பது கெஜ சீலை
மற்றும் பல்செட் கழற்ற மறந்து
ரேழி படிகட்டில்
தலைக்கடியில் உள்ளங்கை வைத்து
அவள் அசந்து தூங்கிபோனபின்னர்;
தெருவில் சோன்பப்படி காரன் பத்துமுறை
மணியடித்தும் என்னை
படிதாண்ட விடலயே
அந்த பத்து தலை பூதம்...

*******************************************************
எல்லா கல்யாண வைபவங்களிலும்
அதுவரை சீந்துவாரில்லாமலும்
அன்றைக்கு மட்டும்
புத்தாடைகளுடனும்
எழுந்து நடக்க முடியாத
முதியவரொருவர்
முன் வரிசையில்
அமர்ந்திருக்கிறார்....

சங்கத் தமிழ் மணம் கமழும் இலக்கிய வீதிகளில் மாறி வரும் காலங்களின் வண்ண அணிந்து உலாவரும் படைப்பாளிகளின் நடுவே அதோ ஒய்யாரமாக நடைபோடும் கோ.ஸ்ரீதரன் என்கிற அந்த இளம் படைப்பாளியின் ஆற்றலை இனம்கண்டு கொண்டு அவருக்கு கவிச்சுடர் என்கிற விருதினை அளித்து பெருமைப் படுத்துவதில் உவகையடைகிறது படைப்புக் குழுமம். அவரது எழுத்துப் பணிகள் மென்மேலும் சிறக்கவும், அந்தக் கவிபொறியாளனின் கவிதை கட்டுமானப் பணிகள் சிகரம் தொட்டு சிறப்பு காணவும் படைப்புக் குழுமம் வாழ்த்துகிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

கவிச்சுடர் விருது

சுரேஷ் பரதன்

கவிச்சுடர் சுரேஷ் பரதன்  ஒரு அறிமுகம்
********************************************************************************
பெயர் : சுரேஷ் பரதன்
பிறப்பிடம்: திருநெல்வேலி
வசிப்பிடம் : புது டெல்லி
வேலை: மத்திய அரசாங்கப்பணி

இதுவரை வாங்கிய விருதுகள் & பரிசுகள்:
ஈரோடு தமிழன்பன் விருது மற்றும் படைப்பு குழுமம் நடத்திய மகளதிகாரம் பரிசுப்போட்டியில் முதல் பரிசு மற்றும் கடந்த டிசம்பர் மாதம் 2016 ஆண்டு இவர் படைப்பில் மாதாந்திர சிறந்த படைப்பாளியாக தேர்வு.

பணிச்சுமையும் மனச்சுமையும் கூடிவிட்ட இன்றைய இயந்திர வாழ்தல் நடைமுறையில் தனி அருகே விழுந்தோ அடிபட்டோ குற்றுயிராகிக்கிடக்கும் சகமனிதனைத் தூக்கிவிடும் முன்பாக அவனை செல்போனில் படம்பிடித்து சமூகக் கடமையாற்றியதாய் திருப்திப்பட்டுக்கொள்ளும் இந்நவநாகரீகச் சமூகத்தில் ஒரு மனிதனை இலகுறச் செய்யவும் அவனுக்கு அவனுடைய சமூகப் பொறுப்பை உணர்த்தவும் கவிதைகளால் முடியும் என்றால் அக்கவிதைகளும் அம்மாதிரியான கவிதைகளைப் படைக்கும் ஒவ்வொருவரும் கொண்டாடப்பட வேண்டியவர்களே. அந்த வகையில் இம்முறை படைப்புக்குழுமம் தன் கொண்டாட்டத்திற்காக தெரிவு செய்திருக்கும் படைப்பாளி சுரேஷ் பரதன்.

புதுக்கவிதைகள், நவீனத்துவக் கவிதைகள், பின் நவீனத்துவ கவிதைகள் மற்றும் மரபு கவிதைகள் என்று நம் தமிழ் மொழி இலக்கியத்தின் புதுப்புது பரிமாணங்களில் படைப்புக்களை படைத்துக் கொண்டிருக்கும் நம் குழுமத்தின் படைப்பாளிகளின் நடுவே ஒரு மாபெரும் நவீனத்துவக் கவிஞராக உலா வரும் ஒரு படைப்பாளிதான் இந்த மாதம் நம் குழுமத்தால் கவிச்சுடர் விருது பெறுகிறார். படைப்பாளி சுரேஷ் பரதன் அவர்கள் பற்றி படைப்பு குழுமத்தை ஆதரித்து வரும் படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்ய அவசியமில்லை என்றாலும் நாள்தோறும் இந்த குடும்பத்தில் இணைந்து வந்துகொண்டிருக்கின்ற புதிய படைப்பாளிகளின் கவனத்துக்காக ஒரு அறிமுகக்கட்டுரை அவசியமாகிறது.

திருநெல்வேலியில் பிறந்த இவர் தற்போது தில்லி மாநகரில் மத்திய அரசாங்கப்பணியில் இருக்கிறார். தம் இளவயதிலேயே தமிழார்வம் மிளிர, இவர் வண்ணாரப்பேட்டை கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பாக இயங்கி வந்த “எரிதழல்” என்னும் பத்திரிக்கையை கையழுத்துப் பிரதியாக 1990 களிலேயே மாத இதழாக நடத்தியவர். அப்பத்திரிக்கைக்காக சிலசு, தமயந்தி போன்ற ஆளுமைகளிடம் நேர்காணல் நடத்தி இலக்கியப்பணி புரிந்தவர்.இந்நாட்களைப் போல கணினி வசதியற்ற அந்நாட்களில் ஒரு பத்திரிக்கையை கையெழுத்துப் பிரதியாக நடத்துவதென்பது எந்த ஒரு மிகைப்படுத்தலுக்கும் உட்படுத்தாது நெஞ்சார பாராட்டத்தக்கதே. அந்தக் கால கட்டங்களிலேயே ஐம்பதிற்கும் மேலான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை பத்திரிக்கையில் எழுதிச் சாதித்தவரான படைப்பாளி சுரேஷ் பரதன் அவர்களுக்கு இம்மாதத்திற்கான கவிச்சுடர் விருதை வழங்குவதில் பேருவகை அடைகிறது படைப்புக் குழுமம்.

குழந்தைப் பருவத்திற்கும் பதின்மதிற்கும் இடையிலான சில ஆண்டுகள் மட்டுமேயான நாம் நம்மைக் கண்டு உணராத ஒரு பருவம் அத்தனை ரம்மியமானது. அவசரங்களில் நாம் கவனியாது போன ஒரு மேகப்பொதிமத்தைப் போலானதொரு அப்பருவத்தில் தன் எதிர்ப்பால் தோழன்களை, சிநேகிதிகளை ஒவ்வொரு நாளும் புதியதாகப் பார்த்து வியந்து அவர்தம் இணையை எங்கப்பாவும் உங்கப்பாவும் ஒரே கலர் சட்டை என தமக்குள்ளான ஒத்த புரிதலை நிறங்களில் துவங்கி செறிவேற்றிக்கொள்ளும் காலம். அத்தகைய உறவின் எழிலை, பூரணத்தை, ஒரு குழந்தையின் கிறுக்கலைப் போன்றதொரு வாழ்வியலை பின்வரும் கவிதையில் நீங்கள் உணரலாம்.

//
எனக்கு பால்ய கால சிநேகிதி
ஒருத்தி இருந்தாள்.
அவளாலேயே எனக்கும் ஒரு
பால்ய காலம் என்றொன்றிருந்தது.
நானும் அவளும் விளையாடிய
கதைகளை நான் கூறுவேனாயின்
உங்களின் காதுகளில்
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
பாடலின் லாலாலா
கேட்கக்கூடும் அல்லது
அப்பாடலின் திரைவடிவம்
உங்கள் விழிகளில் தோன்றி
ஒரு நமுட்டுச் சிரிப்பைத் தரக்கூடும்
எனவே அவற்றைச் சொல்லாமலே
விடுகிறேன்.
என் பால்ய கால சிநேகிதியை
நீங்கள் நினைக்கிற மாதிரி
நான் காதலிக்கவேயில்லை.
ஆனாலும் என் பால்ய கால சிநேகிதி
என் நெஞ்சில் இன்றும் இருக்கிறாள்.
விளையாட்டுகளின் போது
கதவுகளுக்குப் பின்னால் ஒளிவது மாதிரி
என் மனக்கதவுகளுக்குப் பின்னால்
ஒளிந்திருக்கிறாள்.
என்னுடன் கண்ணாமூச்சி
ஆடத்தான் செய்கிறாள் அவ்வப்போது.
இப்பொழுதும் சிநேகிதிகள்
இருக்கிறார்களெனக்கு.
இவர்களில் ஒருவர் கூட
பால்ய கால சிநேகிதியின் இடத்தை
நிரப்பவில்லை என்பது கூடுதல் தகவல்.
//

கவிதைகளில் அரசியலைத் தவிர்ப்போம் என்றாலும் அரசியல் என்றால் என்ன அது எதிலிருந்து துவங்குகிறது என்ற கேள்வி நமக்குள்ளாக எழும்புவதையும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. நாம் வாழும் சூழல். நம்மைச் சுற்றிய பரப்பு. அதன் மீதான அடுத்தவரின் மேவுதல், அதன் தொடர்ச்சியாக நம் எதிர்வினை இவையெல்லாம்தான் அரசியல். நாம் மட்டுமின்றி நம்மைச்சூழ்ந்த பல்லுயிர்களையும் இணைத்து பெருவாழ்வைக் கடந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம்தான் எத்தனை உன்மத்தம் வாய்ந்தது. ஒரு வெள்ளந்திப் பெண்ணையும் வெள்ளைப் பசுவையும் பாடுபொருளாக்கி அவர்களின் உணர்வுகளுக்கு முன்னால் வெறும் ஏட்டில் எழுதப்பட்ட ஆதி.. அந்தம், வாகனம், தெய்வக் குற்றம் எல்லாம் வரிசைகட்டித் தோற்றுப்போய் விடுவதாகவே எடுத்துக்கொள்ளலாம் இக்கவிதையில்.

//
வீட்டில் இருக்கும்
பசுவோடு கூடவே வளர்ந்த
மேலத்தெரு கோதையக்கா
வெளிநாட்டில் வேலைசெய்யும்
கீழத்தெரு மணியழகனை
மணமுடித்து அவன் வாழும்
வெளிநாட்டில் குடித்தனம்
பண்ணப் போனவள்
பூ மாதிரி அவளை தாங்கும்
அவனிடம் அடம்பிடித்து
ஊருக்கே மொத்தமாய்த்
திரும்பி வந்தாள்
அவளின்றி மெலிந்துகிடக்கும்
பசுவைப் பேண
அதுவின்றி தான் மெலிந்த
சோகம் புரிந்து!
//

ரத்தமும் சதையுமான உறவுகள் சூழ உப்பும் உரைப்புமாக அவர்களோடு அமர்ந்து உண்டு.... உறங்கி..... சுகித்து... வெட்கி... மருகி... இப்படியான ஒரு வாழ்தல் சுகத்தை அடிப்படைத் தேவைக்காகவோ அல்லது நிர்பந்தத்தின் காரணமாகவோ விலகி பொருளீட்டப் புறம் சென்ற ஒருவரது மன ஓட்டத்தைப் புறாவின் மூலமாக நமக்குள் கடத்துகிறார் கவிஞர்.இக்கவிதையினைப் படித்து முடித்து நிமிரும் பொழுது ச்சை.... என்னடா வாழ்க்கை இது...என்று எல்லா இறுமாப்புகளையும் தூக்கிஎறிந்துவிட்டு ஓடோடி உறவுகளோடு கூடிக் கொண்டாடிவிடத் தோன்றுகிறது.

//
வெகுதூரம் பயணித்து
வந்த அயர்ச்சியோ அல்லது
மீண்டுமொரு நீண்ட
பறத்தலுக்கான ஆயத்தமோ
எதிர்வீட்டு ஜன்னல் கம்பியில்
அமர்ந்து தன் சிறகுகளை
அலகால் கோதிக் கொண்டிருக்கும்
சாம்பல் நிற புறாவொன்றுக்கு
தேவையென்ன இருக்கக்கூடும்
வயல்வெளிகளோ நீர்நிலைகளோ ஏதுமற்ற ,
பொருளீட்ட நான்
புலம்பெயர்ந்து வந்த
இந்த பெரு நகரத்தில்,
நானோ நீங்களோ வீசியெறியும்
ஒரு கைக்குத்தளவு சிறு தானியங்களை
கொத்தித் தின்னுவதைத் தவிர.
//

ஒரு அடையாளத்தை அகற்றிவிடுதல் என்பது அத்தனை எளிதான செயல் அல்ல. அது மனிதன் தொடங்கி நம் வீட்டுப் புழக்கடையில் நிற்கும் மரம் வரைக்கும் நம் வாழ்வியலோடு பிணைந்த எதுவாக இருப்பினும் சரி. உருவாக்கப்பட்ட எல்லாம் இழந்தோ... கழன்றோ.. தீர்ந்தோ.. பிரிந்தோ போகவேண்டும் என்ற நிர்பந்தகளைக் கடந்து அவைகள் பதியமிட்டுச் செல்லும் ஞாபகச் சுவடுகளை மட்டும் அத்தனை எளிதில் பிய்த்தெறிய முடிவதில்லை. இக்கவிதையில் வரும் அப்பாவின் மடிப்புக்கலையாத சட்டையைப் போலவும் அதனைச் சார்ந்த அம்மாவின் ஈர ஞாபகங்களைப் போலவும்...

//
அப்பாவின் வெள்ளைச் சட்டைகள்
இரண்டையும்
அகலக்கரை நாலு முழ வேட்டிகள்
இரண்டையும்
அலமாரியில் இன்னமும் பத்திரமாய்
வைத்திருக்கிறாள் அம்மா.
பண்டிகைப் பொழுதுகளில் அவற்றை
எனையழைத்து உடுத்தச் சொல்லி
அழகு பார்ப்பவளுக்கு என்னுருவில்
அப்பாவைப் பார்ப்பது போல்
இருக்கக் கூடும்.
அப்பாவின் வேட்டி சட்டையணிவதினால
நீயொன்றும் அப்பாவாய் ஆகிவிட ஒருநாளும் முடியாது என்றவள்
கண்கலங்கக் கூறுவது வழக்கம்
ஒவ்வொரு முறையும் தவறாமல்.
அது உண்மையும் கூட.
இறந்துபோன அப்பாவை
என் மூலம் அவளும்
கண்ணாடி முன் நானும்
இன்னுமொருமுறை
பாரத்துவிடவே துடிக்கிறோம்
பொய்யெனத் தெரிந்தும்.
//

கவிதைக்கு மெய்யும் அழகு..! மட்டுமல்லாமல் மெய்யே அழகு என்று சில கவிதைகள் சண்டித்தனம் செய்து மெய்சிலிர்க்கச் செய்பவை. எவ்வாறு ஒரு முதல் மழைத்துளி உங்களை சிலிர்க்கச் செய்கிறதோ, எவ்வாறு ஒரு மழைக்குப் பிறகான மண்வாசனை உங்களை கிளர்ந்தெழச் செய்கிறதோ, எவ்வாறு மழையினூடான ஒரு பயணம் உங்களை இலகுவாக்குகிறதோ.. எவ்வாறு மழையோடு கலந்த இசை பரவசப்படுத்துகிறதோ, அவ்வாறே இன்ன உணர்வுதான் என்று பிரித்துணர முடியாத ஒரு மோன நிலைக்குள் வாசிப்பவரை உட்படுத்தும் கவிதை இது. கவிதைகள் எழுதும்போது தான் உணர்வதை, அக்கவிதைகள் வாசிக்கப்படும் பொழுதும் உணர்ந்து கொள்ளப்பட்டால் அதுவே அக்கவிதைக்கான பூரண வெற்றி. அம்மட்டில் இக்கவிதையின் மூலமாக வெற்றியைத் திகட்டத் திளைக்கக் கொண்டாடலாம் கவிச்சுடர். சுரேஷ் பரதன் அவர்கள்.

//
தூறலாய்ச் சிதறும் மழையின் நடுவில்
நனைதலின் சுகத்தில் நடக்கையில்
மேல்விழும் சிறு சிறு துளிகள்
ஏற்படுத்தும் சிலிர்ப்புகளில்
பூப்பூவாய்ப் பூக்கின்றன ஞாபகத் துளிகள்.
ஒரு துளி உன் முதல் ஸ்பரிசத்தை
இன்னொன்று முதல் முத்தத்தை
அடுத்ததோ சேர்ந்தருந்திய மாலைநேரத் தேநீரை
இப்படியிப்படி ஒவ்வொரு துளியிலும்
ஒவ்வொரு ஞாபகங்கள்.
ஞாபகத்தின் அடுக்குகளைத்
தட்டிக் கலைத்தபடி செல்கிறது
சேறை வாரியிறைத்துக் கடக்கும்
மகிழுந்தொன்று.
கலைந்து கிடக்கும் ஞாபகங்களைச்
சீட்டுக்கட்டுக் கோபுரமாய் மீண்டும்
முதலிலிருந்து அடுக்கத்
துவங்குகிறேன்.
மீண்டும் கலைக்க வரும்
இன்னொரு மகிழுந்து
அல்லது
கன்னத்தில் வழியும் கண்ணீரோடு
இறுக அணைத்து நீ கொடுத்த
கடைசி முத்தத்தின்
சூடான நினைவின் சிறு கீற்று.
//

அவருக்கு படைப்பு குழுமத்தில் மாதாந்திர சிறந்த படைப்பாளியாக தேர்வுபெற செய்த கவிதை இதோ... (டிசம்பர் - 2016)

//
பிரிவுழிக் கலங்கல்
=================
தூரத்தில் கேட்கிறது
துயரத்தில் இசைக்கும்
ஓர் ஆலாபனை பாடகனின்
முகாரி ராகங்கள்.

நிலவைக் காட்டி ஊட்டிய
வட்டமுதை மறுதலித்து
முலைப்பாலுண்ட அயர்ச்சியில்
தொட்டிலில் தூங்குகிறது
நம் குழந்தை.

நீயில்லாத இந்த இரவுகளில்
நாம் கூடிக்களித்த கட்டிலின்
கேலிகளில் தூக்கமின்றி
விடிகின்றன பொழுதுகள்.

பொருள்வயின் பிரிவில்
உன் அருகாமை
அனுதினமும் வாய்க்காது
எனத்தெரிந்தும்
அதனையே ஆராதிக்கிறது
அபலையாய் இந்த மனது.
//

நம் படைப்புக்குழுமம் நடத்திய மகளதிகாரம் பரிசுப்போட்டியில் அவர் கவிதை எழுதி முதல் பரிசு 1500 ரூபாய் தட்டிச்சென்ற கவிதை இதோ...

//
மகளதிகாரம்
-------------------------
புத்தகங்களும் பொம்மைகளும்
கொண்ட உன் அலமாரிக்கருகில்
நீ நெருங்கும் ஒவ்வொருமுறையும்
எதையெடுப்பாயென
நகங்கடிக்கத் துவங்குகின்றன
பொம்மைகளும் புத்தகங்களும்.

வளர்ந்துவிட்டாயென எண்ணும்போது
குதூகலிக்கிறது உன் குறும்புகள்.
குழந்தையென கொண்டபோது
தகர்க்கிறது உன் தர்க்கங்கள்.

பிறந்தநாள் பரிசாய்
நம்தெருவோரம் நடுவற்கு மரக்கன்றொன்றை
வாங்கித்தரக் கேட்போது
தெரிகிறது நீ எவ்வளவு
வளர்ந்து விட்டாயென.

எங்கள் மகளென்பது போய்
உந்தன் தாய்தந்தையென்பதை
எங்களடையாளமாய் மாற்றிவருகிறாய்
நீ உன் ஒவ்வொரு செயலிலும்.
//

இன்னும் அவரின் சில படைப்புகள் உங்கள் பார்வைக்கு:

//
அம்மாவின் காதல்
================
சொத்துக்களுக்காக
முட்டிக்கொண்டிருந்த
மாமன்களிடம்
வலுவாய்ச் சண்டையிட்டு
அவள் பங்கிற்காய்
அம்மாச்சியை மட்டும்
கேட்டுப் பெற்று
வீட்டிற்கு அழைத்து வந்த
அப்பாவிற்கு
தினந்தோறும் ஆக்கிப்போடும்
வெஞ்சனங்களில்
நிறைந்திருக்கிறது
அம்மாவின் காதல் ருசி!
//

//
சன்னல் திரை விலக்கி
வெளிச்சத்தை பரவவிடுதல் போல
குவளைத் தேநீரில் படடந்திருக்கும்
பாலாடையை விலக்கிப் பருகுதல் போல
குளியலறை கண்ணாடியில்
படர்ந்திருக்கும் நீராவியைத் துடைத்து
பளிச்சென முகம்பார்த்தல் போல
மனத்திரை படரந்திருக்கும்
ஒட்டடைகளை கலைத்துவிடப்
பார்க்கிறேன்.
எண்திசையெங்கிலும் தன்
கால்களை பரப்பியபடி
நினைவெச்சில் திரவம் வடித்து
இடையறாது மாயவலை பின்னிக் கொண்டிருக்கிறது மனச்சிலந்தி.
அவ்வலையில் சிறு பூச்சியென
நானே சிக்கிக் கொள்ள
என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப்
பிய்த்துண்ணுகிறது.
மீதமின்றி இரையாகிறது
வாழவந்த பெருவாழ்வு.
//

//
கனவைச் சுமக்கும் குழந்தை
=========================
அலுங்காமல் குலுங்காமல்
ஒரு கனவை தன் கையிலேந்தி
தத்தித்தத்தி நடக்கிறதோர்
குழந்தை.
கனவைச் சுமப்பதால் அதன்
கைகள் வலிக்காதென
நினைத்துவிடக் கூடாது.
அக்கனவு அக்குழந்தையின்
பல நாட்களுக்கான
இரவு உறக்கங்களை சுமந்திருக்கிறது.
தன் தந்தைக்கு இக்கனவை
அக்குழந்தை சொன்ன
அந்த இரவில் அவனும்
தூக்கமிழந்தானே
அவனது மனக் கிலேசங்களும்
இக்கனவில் தான் நிறைந்திருக்கிறது.
தன் குழந்தையின் இக்கனவை
நிறைவேற்ற அவனெடுக்கும்
உச்சபட்ச முயற்சிகளின் எடையையும்
அக்கனவுடன் சேர்த்தே
இனி அக்குழந்தைதான் சுமக்கவேண்டியிருக்கும்.
கனவின் கனம் கூடக்கூட
அக்கனவை அக்குழந்தை
யாரிடமாவது இறக்கிவைக்கக் கூடும்.
அக்குழந்தையிடம் அதன்
தந்தை இறக்கி வைத்ததது போல.
அத்தந்தையிடம் அக்குழந்தையின்
பாட்டன் இறக்கி வைத்தது போல.
ஒரு பரம்பரை சுமந்த கனவு
கையிலேந்தினால் கனக்காமல்
என்ன செய்யும்.
//

//
பிரமிக்கவைக்கும் அந்த ஏரியின்
மொத்த நீரையும் விழுங்கிக்கொள்ளும்
தீராத் தாகத்தோடு இருக்கும்
நீங்கள் ஏரியை அடையுமுன்னர்
நானந்த ஏரியின்
மறுகரைக்கு விரையவேண்டும்.
அதற்காக அந்தக் குடிசையின்
சுவரோரத்தில் லாந்தர் ஒளிச்சுடரில்
படித்துக் கொண்டிருந்த
சிறுவனிடம் அவனுடைய
நோட்டுப் புத்தகத்தின்
எழுதாத பக்கத்தினை கிழித்து செய்த
காகித கப்பலில் ஏறி
சென்று கொண்டிருக்கிறேன்.
முன்பொரு நாளில்
எழுதிய பக்கத்தில் செய்த
கப்பலில் இருந்த
அவனுடைய கவிதை
என்னை விழுங்கிவிடாமலிருக்க
நான் பெரும் பிரயத்தனம்
பண்ணவேண்டியிருந்து.
நீங்கள் ஏரியை
அடைந்து நீரையள்ளக்
குனிந்த அந்தப் பொழுதில்
எதிர்க்கரையில் கப்பலை விட்டு நானிறங்கிய
அதிர்வில் எழுந்த அலையில்
நீர்பரப்பில் பிரதிபலித்த
உங்கள் பிம்பத்திற்கு
உங்களை விழுங்கும்
பெரும்பசி உண்டாகி
அது உங்களை
விழுங்கவும் துவங்கியிருந்தது.
//

//
முற்றிலுமாய்ச் சிதிலமடைந்திருக்கிறது
அவ்வீடு.
தலைமுறைகள் பல கண்டதாய்
இருந்திருக்கும் தான்.
நீண்டு காரை பெயர்ந்து போயிருக்கும்
அத்திண்ணையில்
பூவேலைப்பாடு நிறைந்த
அந்நான்கு தூண்களைச் சுற்றி
இன்னும் மெல்லமாய் கேட்கின்றன
அவ்வீட்டு அல்லது அக்கம்பக்கக்
குழந்தைகளின் விளையாட்டு பாட்டொலிகள்.
உள்ளேயும் நிறைந்திருக்கலாம்
அங்கே வாழ்ந்தவர்களின்
சிரிப்பொலிகள்
கோபக் கூப்பாடுகள்
காதல் சரசத்தில் சிணுங்கிய
கட்டிலின் க்ரீச்சொலிகள்.
எத்தனை ஜனனங்கள்
மற்றும் மரணங்கள்
பார்த்தந்த வீடு யார் சொல்லக்கூடும்.
அத்தனைக்குமான அழுகையொலிகள்
இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கலாம்
அதன் சுவர்களுக்குள்.
அத்தனையையும் தன்
சிதிலமடையா நினைவுகளில்
பொதிந்த படி
காத்திருக்கிறது அவ்வீடு
தன்னை நிராதரவாய்
விட்டுப் போனவர்களின்
வம்சாவளியில் யாரேனும்
தன் கதவைத் திறக்கக்கூடுமோர்
நந்நாளுக்கென.
//

இப்படியாகத் தன்னை உருவகப் பொருளாக்கிக் கொண்டு தன் முன்னாலிருக்கும் சமூகத்திற்கு மிகுந்த பொறுப்புணர்வோடும் அக்கறையோடும் தன் எழுத்துக்களின் மூலமாக வாழ்வியல் சங்கதிகளைப் பட்டியலிட்டுக் கடத்தும் படைப்பாளி சுரேஷ் பரதன் அவர்களை மனமாரப் பாராட்டி மகிழ்கிறது படைப்புக்குழுமம். அவர் மென்மேலும் சிறந்த படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகிற்குக் கொடுத்து இன்னும் உச்சங்களைத் தொடவேண்டும் என உளப்பூர்வமாக வாழ்த்திமகிழ்கிறது படைப்புக்குழுமம்.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

கவிச்சுடர் விருது

நிலாகண்ணன்

கவிச்சுடர் நிலாகண்ணன்  ஒரு அறிமுகம்
*********************************************************
பெயர் : நிலாகண்ணன்
இயற் பெயர்: கண்ணதாசன்
பிறப்பிடம்: காரைக்குடி
வசிப்பிடம் : சென்னை
வேலை: சுயதொழில்
இதுவரை வாங்கிய விருதுகள் & பரிசுகள்: ஈரோடு தமிழன்பன் விருது
மற்றும் படைப்பு குழுமம் நடத்திய கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டியில் முதல் பரிசு (பாவலர் அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்பட்டது.) மற்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் 2016 ஆண்டு இவர் படைப்பில் மாதாந்திர சிறந்த படைப்பாளியாக தேர்வு.

பணிச்சுமையும் மனச்சுமையும் கூடிவிட்ட இன்றைய இயந்திர வாழ்தல் நடைமுறையில் தனி அருகே விழுந்தோ அடிபட்டோ குற்றுயிராகிக்கிடக்கும் சகமனிதனைத் தூக்கிவிடும் முன்பாக அவனை செல்போனில் படம்பிடித்து சமூகக் கடமையாற்றியதாய் திருப்திப்பட்டுக்கொள்ளும் இந்நவநாகரீகச் சமூகத்தில் ஒரு மனிதனை இலகுறச் செய்யவும் அவனுக்கு அவனுடைய சமூகப் பொறுப்பை உணர்த்தவும் கவிதைகளால் முடியும் என்றால் அக்கவிதைகளும் அம்மாதிரியான கவிதைகளைப் படைக்கும் ஒவ்வொருவரும் கொண்டாடப்பட வேண்டியவர்களே. அந்த வகையில் இம்முறை படைப்புக்குழுமம் தன் கொண்டாட்டத்திற்காக தெரிவு செய்திருக்கும் படைப்பாளி நிலாகண்ணன்.

புதுக்கவிதைகள், நவீனத்துவக் கவிதைகள், பின் நவீனத்துவ கவிதைகள் மற்றும் மரபு கவிதைகள் என்று நம் தமிழ் மொழி இலக்கியத்தின் புதுப்புது பரிமாணங்களில் படைப்புக்களை படைத்துக் கொண்டிருக்கும் நம் குழுமத்தின் படைப்பாளிகளின் நடுவே ஒரு மாபெரும் நவீனத்துவக் கவிஞராக உலா வரும் ஒரு படைப்பாளிதான் இந்த மாதம் நம் குழுமத்தால் கவிச்சுடர் விருது பெறுகிறார். படைப்பாளி நிலாகண்ணன் அவர்கள் பற்றி படைப்பு குழுமத்தை ஆதரித்து வரும் படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்ய அவசியமில்லை என்றாலும் நாள்தோறும் இந்த குடும்பத்தில் இணைந்து வந்துகொண்டிருக்கின்ற புதிய படைப்பாளிகளின் கவனத்துக்காக ஒரு அறிமுகக்கட்டுரை அவசியமாகிறது.

காரைக்குடியைத் தன் பிறப்பிடமாகவும் சென்னையைத் தன் வசிப்பிடமாகவும் கொண்டு மகிழ்வுந்து ஒட்டுனராக சுயதொழில் செய்துவரும் இப்பின்நவீனத்துவப் படைப்பாளி சமீபகாலமாக பிரபல வாரப்பத்திரிக்கைகளைத் தன் மென்சோகம் இழையும், நுண்ணியமனிதம் அலர்ந்து கமழும் கவிதைகளால் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். படைப்புக்குழுமம் நடத்திய நதிக்கரை ஞாபகங்கள் கவிதைப் போட்டியில் கவிஞர்.அறிவுமதி அவர்களால் முதற்பரிசிற்குத் தெரிவு செய்யப்பட்ட இவரது கவிதை இவரின் படைப்பாற்றலுக்கு மற்றொரு சான்று. படைப்புக் குழுமம் வெளியிடும் மாதாந்திர மின்னிதழ்களில் இவரது கவிதை தவிர்க்க முடியாத ஒன்று.

இவர் எழுதத் தொடங்கிய காலத்தில் வழமையான பாணியில் மூன்றுவரி ஆச்சரியக் குறிகளோடு எழுதப்பட்டிருப்பினும் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குப் பிறகு இவரது படைப்புகளின் விசுவரூபம் பலரையும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஆழ்ந்த வாசிப்பின் மீதுள்ள ஈடுபாடும் தன்னைச் சுயமாக மதிப்பீட்டுக் கொண்டு தன்முனைப்போடு எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ளும் திறனுமே இவரை இந்த நிலைக்கு உயர்த்தியது என்று கருதிக்கொள்ளவே தோன்றுகிறது.

விளிம்பு நிலை மனிதர்களுக்கான இவரது படைப்புகளில் அவர்களின் உழைப்பின் மணத்தை, இயலாமையின் வெளிப்பாடை அழகாக வெளிக்கொணர்ந்திருப்பார். சமூகத்தின் இவர்களது மீதான அலட்சியத்தை, பொறுப்பின்மையை எளிய மொழியாலும் செறிந்த கருத்தாலும் உருவாக்கப்பட்ட கவிதைகள் கொண்டு எடுத்துரைக்கும் விதம் அழகு. அதற்குச் சான்றாகவே கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் கவிதை.

//
சில்லறை மீன் வியாபாரி விபத்துக்குள்ளாகிக் கிடக்கின்றான்
கூடையிலிருந்து சிதறிய மீன்கள்
அவன் குருதியில் நீந்திக்களிக்கின்றது.
பாவம் வியாபாரிதான்
காற்றுகுடித்து மூர்ச்சையானான்..
தவிர
வண்ணமீன்கள் சுற்றும் தட்டைப்பேழைக்குள்
நான் என் சைக்கிள் பெல்லை அடித்தபடி கவனமாய் நீந்திவந்தேன் என் வீட்டிற்கு,,,
//

ஒரு விபத்தின் கோரமுகத்தை மனிதர்கள் எவ்வளவு அலட்சியமாக கடந்துபோகிறார்கள் என்பதை முகத்திரையைக் கிழிப்பதைப் போன்று அப்பட்டமாகச் சொன்ன கவிதை அது.

பதின்வயதுகளில் மனிதனாகப் பிறந்த எவரும் கடந்துவரும் காதல். வெறுமனே எதிர்பாலின ஈர்ப்பு என்று சுயமாகச் சமாதானப்படுத்திக் கொண்டாலும் பின்வரும் நாட்களில் அந்தப் பெண்ணைக்காணும் போது இனம்புரியாத எதுவோ ஒன்று நமக்குள் சுழலும். ஒரு மெல்லிசைப் பின்னணியில் தேவதைகள் சூழ கனவுலகிற்குள் சஞ்சரிக்கத் துவங்க நிகழ்காலப் பெருவாகனமொன்று கடந்துபோக நம்முள் அனைத்தும் கடந்துபோய்விடும். இத்தகைய அழகான வாழ்வியல் நிகழ்வை கவிஞர் எத்தனை நயமாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

//
வாழ்தல் குறித்த துயரங்களை
முகக்குறிப்பி்லுணர்த்தி
கண்ணீருக்கான மதகுகளை
மெல்லத் திறந்துவிட்டபடி நிற்கிறாள்
பழைய காதலி
பழைய கண்ணீர்தான்
புதிய காயங்களை திறந்துவைக்கிறது.
மனிதப்பாதங்களற்ற தீவில்
அவளை உறங்கவைத்து
புல்லாங்குழல் நிறைந்த ஒரு இசைத்தட்டை
அவள் வாதையின் மீது
சுழலவிடத் தோன்றுகிறது.
அல்லது
யாரும் அறியாமல்
அவளையொரு புறாவாக மாற்றி
வானில் வீசி பறக்கவிட
வேண்டுமெனத் தோன்றுகிறது..
அதுவும் தரையிறங்காத புறாவாக.
ஓரிடத்தில் காலூன்றி
வேறுவேறு திசையில் கரையும்
இரட்டை ஊதுபத்திகளைப்போல
தன்னிலை இழந்து
காலத்தின் முன் கரைந்துநிற்கிறோம்.
இருத்தலின் கதவை அழுது திறக்கிறது
அவள் இடுப்பிலிருக்கும் குழந்தை.
.
.
புறா சிறகுகளுடைந்து
இசைத்தட்டின் மீது விழுகிறது
//

வாசிக்கும் ஒவ்வொருவரும் இது எனக்கான கவிதை என்று அடித்துக்கொள்ளும் கவிதை இது.

ஒரு நடுத்தரக் குடும்பத்தின் கணவன் மனைவியிடையே நிகழும் ஊடல் என்பதற்கான மாதிரிகளைப் பட்டியலிடுகிறார் கவிஞர். அவர்மீதான பிணக்கை எத்தகைய வலிமிகுத் துயர வரிகளால் வரிசைப்படுத்தி அதனைச் சமாதானப்படுத்தத் தன் குழந்தையின் மூலமாக ஒற்றை முத்தம் ஒன்றை அனுப்பி தீர்த்துக் கொள்கிறார். பேசுவதால் வரும் பிணக்கை பேசாமலேயே முடிவுக்குக் கொண்டுவரும் அழகியலை இக்கவிதையில் நம்மால் சிலாகிக்க முடிகிறது. இவரது வழமையான வாசகர்கள் மத்தியில் மீண்டும் சிம்மாசனமிட்டு அமர்ந்த கவிதை இது.

//
மனைவியுடனான ஊடலுக்குப்பின்
வருகின்ற இரவென்பது ஒரு மாதிரி
அது சதையோடு சேர்த்து வெட்டிக்கொண்ட
நகத்துண்டு மாதிரி
சரிகை பிரிக்கப்படாத
எதிரியின் பரிசுப்பொருள் மாதிரி
எழவு வாசலில்
பறையின் இடைப்பட்ட அமைதி மாதிரி
இரட்டை ஆயுள் கைதியின்
கையில் கிடைத்த கரித்துண்டு மாதிரி
உதவிக்காக நண்பனை அழைக்கும்போது
தொலைபேசி அணைக்கப்பட்டதைச்
சொல்லும் பெண்குரல் மாதிரி
காக்கையின் கால்களுக்கும்
அலகுக்கும் நடுவில்சிக்கிய
சதைத்துண்டு மாதிரி
இல்லறத்தில்
குழந்தைகள்தான் மீட்பின் பாடல்
விடுதலையின் தாழ் திறக்குமோசை
குழந்தைகள்தான்
சமாதானத்தின் சொற்கள்.
என்இரண்டு சொற்களையும்
அப்பெரும் மௌனத்திடம்
அனுப்பிவைத்தேன்
திரும்பிவந்த சொற்களிடம் இருந்தது
அவள் கொடுத்தனுப்பிய முன்மாதிரி அற்ற
புதுமாதிரியான ஒற்றைமுத்தம்
அன்பின் நிமித்தமாய்..
//

அவருக்கு படைப்பு குழுமத்தில் மாதாந்திர சிறந்த படைப்பாளியாக தேர்வுபெற செய்த கவிதை இதோ... (ஆகஸ்ட் - 2016)

//
அம்மா
விறகு வெட்டச்சென்ற
அந்தப்பால்யத்தின்
பகல்பொழுது துயரமானது.
நீண்ட நேரமாகியும்
வீடுவராதவளை
நீலம் பாய்ந்த உடலோடு
தூக்கிவந்தார்கள்.

அந்தப்பாதை முழுவதும்
சுடுமணலில் உதிர்ந்துகிடந்தது
எனக்காக அவள்
மடியில் கட்டியிருந்த நாவற்பழங்கள்
//

நம் படைப்புக்குழுமம் நடத்திய கவிக்கோ பிறந்த பரிசுப்போட்டியில் நதிக்கரை ஞாபகங்கள்
என்ற தலைப்புக்கு அவர் கவிதை எழுதி பாவலர்/பாடலாசிரியர் அறிவுமதி அவர்களால் முதல் பரிசு 5000 ரூபாய் தட்டிச்சென்ற கவிதை இதோ...

//
நதிக்கரை ஞாபகங்கள்
------------------------------------------
வண்ணாத்தியின் விரல் பிடித்தபடிதான்
ஊருக்குள்வந்தது ஒரு வெயில் நதி
சலவைக்காரனின் கைகளுக்குள்
ஒரு ரேகையைப்போல் ஓடிக்கொண்டிருந்த அந்த நதியை
அவர்களிடமிருந்து நாம்தான் பிரித்தோம்.
ஒவ்வொருவரின் வீட்டுக்கும் துணியெடுக்க
நம் வாசலுக்கே வந்து நின்றது நதி.
நம் பாட்டனின் இறுதிச்சடங்கில் உடைக்கவோ ஊற்றவோ
பானைக்குத் தேவையாய் இருந்தது நதி.
இலை எடுத்து நகர்ந்தது நதி
நம் பாவங்களைச்சுமந்த படி
நதியை முன்னேறவிடாது வழிமறித்து நின்றோம்.
நதியை தூமத்துணி துவைக்கப்பணித்தோம்.
நதியை அதன் போக்கில் விட்டதேயில்லை நாம்.
எதிர்படும்போதெல்லாம்
அடிமை நதியாய் அது
தலைகுனிந்தே நகர்ந்தது பிடித்திருந்தது நமக்கு
நாம் தள்ளிவைத்த நதி
இன்று நம்மைத்தள்ளிவைக்க
ஊர்க்கோடியில் அவர்கள் விட்டுப்போன கழுதைகளுக்கு
மணம் முடித்து மழைக்காக ஏங்கிநிற்கிறோம்
சட்டையில் இருக்கும் சலவைக்குறியீடாய் மட்டுமே
எஞ்சிவிட்டது இறுதியில் நதி
//

இன்னும் அவரின் சில படைப்புகள் உங்கள் பார்வைக்கு:

//
பதிமூன்று வேகத்தடைகளுக்கப்பால்

வட்டநாதங்கிசுழற்றி
ரகசிய அறை திறக்கும் பழைய வில்லனைப்போல
மார்புக்கு நேரிடை வழிவளை (ஸ்டேரிங்)
சுழற்றி வாழ்வைத்திறக்கின்றோம் அனுதினம்.

சிவப்பு எம்மை வறுமையின் கோட்டில் நிறுத்திவைக்கையில்
ஓடிவந்து யாசிப்பவர்களுக்கு
கொய்து தரவியலாது சிக்னல் கம்பத்தில்
கனிகி்றதொரு ஆரஞ்சு.

உந்து விசைதரும் எம் குழந்தைகளின்
கையிலோடும் பச்சை நரம்புகள் என
கலைந்த நூற்கண்டாக
குலைந்து கிடக்கும் நகரத்துச்சாலையில்
முடிவின்றி அலைந்து திரிகின்றோம்

இந்த நள்ளிரவு முதல் டீசலுக்காக
நீங்கள் குறைத்த ஆறு காசுகளில்
அரை டஜன் ஆப்பிளும் நான்கு ரொட்டியும்
வாங்க முடியுமெனில்...
பதிமூன்று வேகத்தடைகளுக்கப்பால் பட்டினிச்சித்திரங்களாய் படுத்துறங்கும்
என் குழந்தைகளின் காத்திருந்த வயிற்றில்
முத்தமிட்டு எழுப்பிடுவேன் நான்.
//

//
நான்கு இட்லிகளை
பார்சல் கட்டி வாங்கிக்கொண்ட
வடக்கத்தி பெண்ணின்
சிவந்துமெலிந்த இடதுதோள் மீது
வடைகேட்டு அழும்
ஒரு சிறுமி சாய்ந்திருக்கிறாள்

பனியைப்போன்று
கண்ணீர் ததும்பியிருந்த அதன்
மல்லிகை மொட்டுக்
கண்களைப்பிடுங்கி
அவள் அம்மாவின் கூந்தலில் சூடி
எனதறைக்கு
அழைத்துப்போகிறேன் நான்.

கண்களற்ற அக்குழந்தை
உங்களிடம் கைக்குட்டை
விற்று வரும் போது
அழுக்குத்தெரியாத நிறம் தேடுவதுபோல்
அவள் கைகளைத்தொட்டுத்தடவி
ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள்

கைக்குட்டை நல்லது சமயத்தில்
முகத்தை மறைத்துக்கொள்ளவும்
//

//
பச்சை நுங்குகளென
பருவம்துருத்த ஒட்ட மடை வயலுக்கு எருக்கொட்டப்போகிறாய்...
மாடுகளை ஓட்டிக்கொண்டு
நானும் பின்தொடர்கிறேன்...
ஊரறியாமல் நாம் காதல் வளர்க்கவே
நம் கால்நடைகள் சாணமிடுகிறது.
//

//
என் மனைவியின் கண்ணீர்
மல்லிகைவாசம் கொண்டது

மரணத்தின் கரங்களிலிருந்து
நானவளை மீட்பேன் என நம்பியிருந்தாள்
நான் அவளின்
சாகசக்காரனாயிருந்தேன்.

அவள் நோய் தீர்வதற்கான பூ
எந்த மலையிலும் பூத்திருக்கவில்லை
பின்னிரவுகளில் வரும்
மல்லிகைவாசத்திற்கு கண்ணீரே
காரணமாக
வாதை எங்கள் கூடாரமானது

ரத்தம் சுண்டிய அந்த
உள்ளங்கை குளிர்மையை
அதிகநேரம் பற்றிக்கொண்டிருந்தேன்
நோய் பீடித்த அவளின்
வெளிரிய கருவிழியிரண்டும்
ஒவ்வாத
மாத்திரைகளைப்போலிருந்தன

மணற்கடிகாரமென
கவிழ்த்துவைக்கப்பட்ட
குளுக்கோஸ் பாட்டிலில்
அவள் காலம் சொட்டியது

வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள் மருத்துவமனை
ஜன்னலின் வழியாக
ஒரு பறவையாகி பறந்துபோனாள்

எனக்காக
வெந்நீர் வைத்து
விரல்சுட்டுக்கொண்டவளை
இப்போது தகனமேடையில்
வைத்துவிட்டு தனியாக நிற்கிறேன்

என் முன்னால் நெருப்பு
நான் அவளுடைய சாகசக்காரன்
//

இப்படியாகத் தன்னை உருவகப் பொருளாக்கிக் கொண்டு தன் முன்னாலிருக்கும் சமூகத்திற்கு மிகுந்த பொறுப்புணர்வோடும் அக்கறையோடும் தன் எழுத்துக்களின் மூலமாக வாழ்வியல் சங்கதிகளைப் பட்டியலிட்டுக் கடத்தும் படைப்பாளி நிலாகண்ணன் அவர்களை மனமாரப் பாராட்டி மகிழ்கிறது படைப்புக்குழுமம். அவர் மென்மேலும் சிறந்த படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகிற்குக் கொடுத்து இன்னும் உச்சங்களைத் தொடவேண்டும் என உளப்பூர்வமாக வாழ்த்திமகிழ்கிறது படைப்புக்குழுமம்.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

கவிச்சுடர் விருது

சியாமளா ராஜசேகர்

கவிச்சுடர் சியாமளா ராஜசேகர் ஒரு அறிமுகம்
*****************************************************************
பெயர்: சியாமளா ராஜசேகர்
ஊர்: சென்னை

புதுக்கவிதைகள், நவீனத்துவக் கவிதைகள், பின் நவீனத்துவ கவிதைகள் என்று நம் தமிழ் மொழி இலக்கியத்தின் புதுப்புது பரிமாணங்களில் படைப்புக்களை படைத்துக் கொண்டிருக்கும் நம் குழுமத்தின் படைப்பாளிகளின் நடுவே ஒரு மாபெரும் மரபுக் கவிஞராக உலா வரும் ஒரு படைப்பாளிதான் இந்த மாதம் நம் குழுமத்தால் கவிச்சுடர் விருது பெறுகிறார். படைப்பாளி சியாமளா ராஜசேகர் அவர்கள் பற்றி படைப்பு குழுமத்தை ஆதரித்து வரும் படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்ய அவசியமில்லை என்றாலும் நாள்தோறும் இந்த குடும்பத்தில் இணைந்து வந்துகொண்டிருக்கின்ற புதிய படைப்பாளிகளின் கவனத்துக்காக ஒரு அறிமுகக்கட்டுரை அவசியமாகிறது.

படைப்பாளி சியாமளா ராஜசேகர் அவர்கள் சென்னைவாழ் இல்லத்தரசி. கவிதைகள் மட்டுமல்லாது சிறுகதைகள் எழுதுவதிலும் கைதேர்ந்த படைப்பாளி. வானொலி , தொலைக்காட்சி, பத்திரிக்கைகள், சமுகவலைத்தளங்கள் என்று பற்பல ஊடகங்களிலிருந்தும் நிறைய பரிசுகள் பெற்றிருக்கும் இவரது மரபுக் கவிதைகள் மிகப் பிரபலமானவை.

நமது படைப்பு குழுமம் நடத்திய பரிசு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மரபு கவிதைகளில் விருப்பம் மிகுந்த இவர் பைந்தமிழ்ச்சோலையில் பாவலர் மா. வரதராசன் அவர்களிடம் பயிற்சி பெற்று பாவலர் பட்டத் தேர்வு எழுதி "பைந்தமிழ்ச் செம்மல் " என்ற பட்டமும் பெற்றவர்.  சமீபத்தில் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 90 -ம் பிறந்தநாளை முன்னிட்டு இணைய தளத்தில் நடந்த நிலைத்தகவல் போட்டியில் முதல் பரிசை இசைஞானி இளையராஜா அவர்களின் திருக்கரங்களால் பெற்றவர். இக்கவிதாயினியின் படைப்புக்கள் கல்கி, இலக்கியச்சோலை போன்ற தமிழ் இதழ்களில் மட்டுமல்ல மகளிர் இதழ்களான மங்கையர் மலர் , அவள் விகடன் , சிநேகிதி, பாவையர் மலர் , வாரமலர் , பிரியமான தோழி போன்ற இதழ்களிலும் தொடர்ந்து அச்சாகி வருகின்றன.
 
படைப்பாளி சியாமளா ராஜசேகர் அவர்கள் நம் படைப்புக் குழுமம் துவங்கிய நாளிலிருந்து பல்வேறு மரபு இலக்கணங்கள் பொருந்த படைத்து சமர்ப்பித்த அனைத்து கவிதைகளையும் இங்கு குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் அது மிக மிக நீண்ட கட்டுரையாக முடியும். எனவே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற முறையில் சில மரபுக் கவிதைகளை மட்டும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
இவர் படைத்த வெண்பாக்கள் அனைத்துமே குழுமத்தில் நண்பர்களின் வெகுவான பாராட்டுக்களை பெற்றவையாகும். இதில் நேரிசை வெண்பா நான்கு அடிகளுடன் ஈற்றடி முச்சீராய் , ஏனைய அடிகள் நாற்சீராய் ,அடிதோறும் பொழிப்பு மோனை , ஈரடிக்கோர் எதுகையோ , நான்கடிக்கோர் எதுகையோ கொண்டு , தனிச்சொல் முன்னடிகளின் எதுகை பெற்று , வெண்டளையான் அமைந்து , ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள் , மலர் , காசு , பிறப்பு என்னும் வாய்ப்பாட்டுல் ஒன்றினைக் கொண்டு முடியும் . இன்றைய வாழ்வியலை மரபுக் கவிதையிலும் கொணர்ந்து புகை பிடித்தல் என்கிற கொடிய பழக்கத்தை விடச்சொல்லும் ஒரு நேரிசை வெண்பாவை கீழே கொடுக்கிறோம் ;-

இருவிரலி டுக்கில் எழும்பிப் புகைந்தே
உருக்குலைத்(து) ஆளை ஒழிக்கும் - வருந்துயர்
எண்ணித் தவிர்த்திடு, என்றும் நலங்கெடுக்கும்
வெண்சுருட்டே வேண்டாம் விடு.

இதழகல் வெண்பா எனப்படும் உதடுகள் குவியாமலும் , ஒட்டாமலும் பாடும் வெண்பாவில் வரக்கூடா எழுத்துகள் ப , ம , வ ...வர்க்க எழுத்துகள் . உகர , ஊகார , ஒகர ,ஓகார , ஔகார எழுத்துகளும் வரக்கூடா . இத்தனை இலக்கணக் கட்டுக்குள் நம் கவிச்சுடர் சியாமளா ராஜசேகர் அவர்கள் படைத்த அழகான இதழகல் வெண்பா ஒன்றை காண்போம்

கண்ணேநின் கட்டழகைக் கண்டதிலே ஏங்கிநின்றேன்
எண்ணத்தில் தித்தித்தாய் ஏந்திழையே!- தண்நிலா
காய்கிறதே! தாரகையும் கண்ணடித்தே செல்கிறதே!
தேய்ந்தேனென் ஏக்கத்தைத் தீர்.

எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எனும் அரையடிக்கு நான்கு சீர்கள் , ஓரடிக்கு எட்டுசீர்கள் , முதல் மற்றும் ஐந்தாம் சீர் மோனையால் இணைந்து அடிதோறும் எதுகையைப் பெற்று , அரையடிக்கு காய் காய் மா தேமா என்ற சீர் வரையறையைக் கொண்டு நான்கடிகளைப் பெற்று வரும் . ஏ , ஆ ,ஆல் , ஓ , வாழி என்பனவற்றுள் ஒன்றைக் கொண்டு முடியும் மரபுமுறையில் இவரின் படைப்பு ஒன்று:-

கண்டதுமே கடலலைகள் கவரு முள்ளம்
***காற்றுவந்து வருடிவிட்டுக் காதல் சொல்லும் !
மண்குவித்து வீடுகட்டும் மழலைச் செல்வம்
***மழைவந்து கலைத்துவிட்டால் வருமோ தூக்கம் ?
வெண்ணிலவு வரும்நேரம் வெள்ளி பூக்கும்
***வெள்ளளையும் துள்ளிவந்தே எட்டிப் பார்க்கும் !
வெண்முகிலும் வானத்தில் விரைந்தே ஓடும்
***விளையாடத் துணைதேடும் விரட்டிச் சென்றே !

காதலன் காதலியை வர்ணித்துப் பாடும் ஒரு அழகான காவடிசிந்து. எளிமையான கவி மொழியில் அந்தக் காதலன் பாடும் போது வாசிப்பவர் தனை மறந்து தம் காதல் அனுபவங்களை அசைபோட துவங்கிவிடும் வல்லமை கொண்டுட அந்த காவடிச்சிந்து இதோ கீழே காண்க:-

தென்றலும் பூவுடன் கூடுதே - உனைத்
தேடிக்கண் கள்நிதம் வாடுதே - என்
தேவதை யுன்நிழ லாடுதே - உன்
சின்னஞ்சிறு கண்கொஞ்சிட
தென்னங்கிளி கொஞ்சும்மொழி
தேனூற என்மன மாடுதே - தக
தித்தோமெ னத்தாளம் போடுதே !


நாட்டுப்புற இலக்கியமாக தொன்றுதொட்டே உலவிவரும் கும்மிசிந்துப் பாட்டுக்கள் நம் தமிழில் பெருமையையும் தமிழர் வாழ்வின் பண்பாட்டையும் வெளிபடுத்துகின்றவை. படைப்பாளி சியாமளா ராஜசேகர் அவர்களின் கீழே காணும் கும்மிசிந்து மரபுக் கவிதையொன்றை வாசிக்கும்போது நமக்கு கும்மியடிக்கும் ஆவல் தோன்றினால் ஆச்சரியப்படுவதற்கில்லை;-

முத்துப் பல்லக்கினில் ஏறி வந்தாள் - மாரி
>>>>முன்னைவினை தீர்க்கத் தேடி வந்தாள்
தித்திக்கும் செந்தமிழ்ப் பாடலினைக் - கேட்டு
>>>>சிந்தைக் குளிர்ந்தவள் ஓடி வந்தாள் !!

பம்பை உடுக்கையின் சத்தத்திலே - தேவி
>>>>பாங்குடன் வீதியில் ஆடி வந்தாள்
கும்மிக் கொட்டிப் பெண்கள் பாடிச்செல்ல - அன்னை
>>>>கொஞ்சும் சிரிப்புடன் கூட வந்தாள் !!

இப்படி ஆயிரக்கணக்கான மரபு கவிதைகளை இந்த காலத்திலும் இலக்கணம் மாறாமல் எழுதும் வெகுசிலரில் மிக குறிப்பிட்டு கூறும்படி இவரது எழுத்து பிரமிக்க வைக்கிறது...
இவர் எழுதிய இன்னும் சில கவிதைகளை உங்கள் பார்வைக்காக படையல் வைக்கிறோம். மேலும் ஒவ்வொரு கவிதைக்கு கீழேயும் அதற்கான பொது இலக்கணத்தையும் கொடுத்துள்ளோம் காரணம் மரபு கவிதைகள் மேல் காதல் கொண்டவர்கள் இன்னும் பலவகையான நுணுக்கங்களையும் அதன் இலக்கணத்தையும் அறிந்து கொண்டு பயனுள்ள வகையில் எழுதி பழகலாமே...

இப்போது கவிச்சுடர் சியாமளா ராஜசேகர் அவர்கள் எழுதிய மேலும் பல மரபு மாணிக்கங்களை பார்ப்போம்...

1. நேரிசை ஆசிரியப்பா
 ``````````````````````````````````
விண்ணி லுலவும் மேகங் கண்டு
வண்ணப் பாவால் வனைந்திட நினைத்துப்
பண்ணிய முயற்சியில் பலமுறை தோற்க
எண்ணம் பலித்திட இறைவனை இறைஞ்சித்
திண்ணிய நெஞ்சுடன் திரும்பவும் முயலப்
பெண்ணென் எழுத்தில் பிழைக ளகன்று
வெண்முகில் மனத்தில் விரியக்
கண்குளிர் காட்சியாய்க் கவிதை பிறந்ததே!

பொது இலக்கணம்
``````````````````````````````
 அடிக்கு நான்கு சீர்களுடன், ஈற்றயலடி முச்சீராய் மாச்சீர் , விளச்சீர்களைப் பெற்றுவரும்.
இரண்டடிகளுக்கு ஓரெதுகையும், அடிதோறும் பொழிப்பு மோனையும் பெற்றுவரும் .மூன்றடி முதல் 
வரையறையின்றி வரும் . ஏ, ஓ , ஆ . ஆல் , ஆன் என்ற ஈற்றுச்சீருடன் முடியும் .( ஏகாரம் பெரும்பான்மை )


2. வெளி விருத்தம்
------------------------------
உறக்கம் தவிர்த்தாய் ஊணும் மறந்தாய் - பிள்ளைக்காக
சிறப்பாய் வளர்க்க தெய்வம் தொழுதாய் - பிள்ளைக்காக
அறப்பா லூட்டி அன்பை விதைத்தாய் - பிள்ளைக்காக
இறக்கும் வரையில் இமைபோல் வாழ்ந்தாய் - பிள்ளைக்காக !

பொது இலக்கணம்
``````````````````````````````
நான்கடிகள் , அடிக்கு நான்கு சீர்கள் . நான்கடிக்கும் ஓரெதுகை , அடிகளின் ஈற்றில் தனிச்சொல் ஒன்று
நான்கடிகளிலும் வரவேண்டும். ஒழுங்கமைந்த சீரமைப்புடன் வரவேண்டும் .( வெண்டளை கட்டாயமில்லை )


3. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ( விளம் மா விளம் மா விளம் காய் )
 `````````````````````````````````````````````````````````````````
சென்றதை யெண்ணிச் சிலிர்த்திடும் நெஞ்சம்
***தேன்மழைச் சாரலிலே !
தென்றலும் தழுவ தேகமும் குளிர்ந்து
***செவ்விதழ் துடித்திடுதே !
முன்பனிக் காலம் முகிலினம் கூட
***முகத்திரை போட்டிடுதே !
பொன்னிற வானம் புதுவடி வோடு
***பூத்திடும் பொலிவுடனே !

பொது இலக்கணம்
``````````````````````````````
ஆறு சீர்கள் பெற்று , முதல் சீரும் , ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து , அடிதோறும் எதுகையைப் பெற்று வரும் .
நான்கு சீர்களை அரையடியாகவும் , அடுத்த இரண்டு சீர்களை அரையடியாகவும் மடக்கி எழுதலாம் . தொடர்ச்சியாகவும்
எழுதலாம் . ஏகாரத்தில் ஈற்றுச்சீர் முடிதல் சிறப்பு .


4. .அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ( காய் காய் காய் காய் மா தேமா )
  ````````````````````````````````````````````````````````````````````
தன்தேவை தனைச்சுருக்கித் தன்பிள்ளை நலம்பேணும்
****தந்தை வுள்ளம் !
துன்பங்க ளண்டாமல் முப்போதும் இமைபோலத்
****துணையாய்க் காக்கும் !
அன்பாக அரவணைத்துப் பல்கலைகள் பயிற்றுவித்தே
****ஆன்றோ னாக்கும் !
பொன்னாட்டில் தந்தையரின் பாசத்திற் கீடுண்டோ
****புகல்வாய் நெஞ்சே !


பொது இலக்கணம்
`````````````````````````````
ஆறு சீர்கள் பெற்று , முதல் சீரும் , ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து , அடிதோறும் எதுகையைப் பெற்று வரும் .
நான்கு சீர்களை அரையடியாகவும் , அடுத்த இரண்டு சீர்களை அரையடியாகவும் மடக்கி எழுதலாம் . தொடர்ச்சியாகவும்
எழுதலாம் . ஓரடிக்கு காய் காய் காய் காய் மா தேமா என்ற சீர் வரைமுறையில் வரும் .ஏகாரத்தில் ஈற்றுச்சீர் முடிதல் சிறப்பு .
.ஆ , ஆல் , ஓ , வாழி இவற்றுள் ஒன்றைக் கொண்டும் முடியலாம் .


5. எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ( விளம் மா விளம் மா விளம் விளம் மா )
  ````````````````````````````````````````````````````````````````
காதலில் திளைக்கும் காளையர் உள்ளம்
***கன்னியின் பார்வையை விரும்பும் !
காதலைச் சொல்ல வார்த்தைக ளின்றிக்
***கண்களால் காவியம் பேசும் !
காதலே சுவாசக் காற்றெனக் கொண்டு
***காலமும் வாழ்ந்திடத் துடிக்கும் !
காதலின் நேசம் கலங்கரை விளக்காய்க்
***காட்டிடும் வழியினை நன்றே !!!

பொது இலக்கணம்
``````````````````````````````
விளம் மா விளம் மா விளம் விளம் மா என்ற ஏழு சீர்கள் பெற்று முதல் மற்றும் ஐந்தாம் சீர் மோனையால்
இணைந்து , அடிதோறும் எதுகையைப் பெற்று நான்கடிகளில் வரும் . ஏகாரத்தில் முடிதல் சிறப்பு .
நான்கு சீர்களை அரையடியாகவும், அடுத்த மூன்று சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதப்பெறும்.

6. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 ``````````````````````````````````````````````````````````````````
சிரம்மேலே கரங்கூப்பிச் சேவித்து நின்றேன்
***செவ்வேளே! வேலென்று சிரித்தபடி வந்தாய்
அரவணைப்பில் விழிகசிய அகங்குளிர்ந்து நின்றேன்
*** அலையுமுளம் அடங்கிடவே அருளாசி தந்தாய்
இரவுபகல் மறவாமல் இசைந்துருகிப் பாட
***இனியேனும் திருப்புகழை எந்நாவில் தாராய்
பரமசிவ மைந்தனுன்றன் பதமலரைப் பற்றப்
***பரமபத வாழ்வுதனைப் பரிவுடனே அருளே !

பொது இலக்கணம்
``````````````````````````````
அரையடிக்கு நான்கு சீர்கள் , ஓரடிக்கு எட்டுசீர்கள் , முதல் மற்றும் ஐந்தாம் சீர் மோனையால் இணைந்து
அடிதோறும் எதுகையைப் பெற்று , அரையடிக்கு காய் காய் காய் தேமா என்ற சீர் வரையறையைக் கொண்டு
நான்கடிகளைப் பெற்று வரும் . ஏ , ஆ ,ஆல் , ஓ , வாழி என்பனவற்றுள் ஒன்றைக் கொண்டு முடியும் .( ஈக்காரத்தில் முடிதல் சிறப்பு )

7. கட்டளை கலித்துறை
  ``````````````````````````````````
முயற்சி யுடனே முனைந்தால் எதையும் முடித்திடலாம்
அயரா உழைப்பே அரிய பலனை அளித்திடுமாம்
சுயமாய் உழைத்தால் துயரும் தொலைந்து சுமைகுறையும்
வியக்கும் படியாய் விடியல் மலர்ந்து விரிந்திடுமே !

பொது இலக்கணம்
`````````````````````````````````
நான்கடிகள், ஓரடிக்கு ஐந்து சீர்கள் . 1,3, 5 -ம் சீர்கள் மோனையால் இணைந்து, அடிதோறும் ஒரே எதுகையைப் பெற்று வரும் .ஐந்து சீர்களும் வெண்டளையால் இணையப் பெறும். ( அடியின் ஈற்றுச் சீருக்கும் , அடுத்த அடியின் முதற்சீருக்கும் வெண்டளைப் பார்க்க வேண்டியதில்லை .ஐந்தாம் சீர் விளங்காய்ச்சீர் பெறும் .
பாடல் நேரசையில் தொடங்கினால் ஒற்றெழுத்துகளை நீக்கி 16 எழுத்துக்களையும் , நிரையசையில் தொடங்கினால் 17 எழுத்துகளையும் பெறும் . ஈற்றுச்சீர் ஏகாரம் மட்டுமே பெற்று வருவது .கட்டளை கலித்துறை ஆகும் .

8. இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா
  `````````````````````````````````````````````````````````````
பட்டுடலை மூடிப் பருவமங்கை போலொளிரும்
வட்டநிலா வானில் வளையவரும் போதினிலே
தொட்டுவிடத் தான்துடிக்கும் சுற்றிவரும் மேகங்கள்
கட்டுக் குலைந்தவையும் காணாமற் போனதெங்கே
சுட்டனவோ விண்மீன்கள் சுண்டி யிழுத்தனவோ ?
சொட்டுந் துளிகள் சுகமாய் நனைத்தனவோ ?
வெட்டிய மின்னலால் வெட்கத்தில் ஓடினவோ ?
முட்டிமோதிப் பேரிடியாய் முத்தமிட்டுக் கொண்டனவே !

பொது இலக்கணம்
````````````````````````````````
எட்டடிகள் கொண்டதாய்,( இரண்டு தரவுகள்) ஓரடிக்கு நான்கு சீர்கள் பெற்று
முதல் மற்றும் மூன்றாம் சீர் மோனையால் இணைந்து, எட்டடிகளும் ஒரே எதுகையைப் பெற்றும்,
அடிதோறும் வெண்டளை (கட்டாயம்) பயின்றும் , ஈற்றுச்சீர் ஏகாரம் பெற்றும், பெறாமலும்,
வருவது "இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா" !


9 . இன்னிசை வெண்பா !
   ````````````````````````````````
கண்ணன் குழலோசை காற்றில் மிதந்துவரப்
பண்ணினைக் கேட்டுப் பரவசத்தால் நெக்குருகி
வண்ணமலர் சூடிய வஞ்சியவள் வாய்திறந்து
கண்ணா வெனவழைப்பாள் காண் .

பொது இலக்கணம்
`````````````````````````````
நான்கு அடிகளுடன் ஈற்றடி முச்சீராய் , ஏனைய அடிகள் நாற்சீராய் ,அடிதோறும் பொழிப்பு மோனை , ஈரடிக்கோர் எதுகையோ , நான்கடிக்கோர் எதுகையோ கொண்டு , தனிச்சொல் இன்றி , வெண்டளையான் அமைந்து , ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள் , மலர் , காசு , பிறப்பு என்னும் வாய்ப்பாட்டுள் ஒன்றினைக் கொண்டு முடியும் .


10. ஒற்றிலா வெண்பா
   -------------------------------
மயிலினி லேறி மருத மலையி
லொயிலா யருளு மொளியே! - கயிலாய
வாசனா மீசனுமை மாதவ பாலகனே
நேசமுட னாளவா நீ.

பொது இலக்கணம்
```````````````````````````````
ஒற்று எழுத்துகளே இல்லாமல் அதாவது, புணர்ச்சியில் ஒற்றை மறைத்து, வல்லினம் மிகுமிடங்களில் ஒற்று வருவதைக் கருத்தில் கொண்டு முழுவதுமாய் ஒற்றில்லாமல், வெண்பா விதிகளுக்குட்பட்டு எழுத வேண்டும். இதுவே
‪ஒற்றிலாவெண்பா‬ ஆகும்.


11. சிலேடை வெண்பா
------------------------------------
எண்ண இனித்திடும் யாவும் மறந்திடும்
வண்ணம் பலவாய் வளையவரும் ! -கண்பட்டால்
வேதனைதான், என்றும் விரும்பும் பணத்துக்குக்
காதலும் ஒப்பாகும் காண் .


12. வெண்கலிப்பா !
   ````````````````````````
வேர்ப்பலா அருகிருக்க வேப்பமரத் தின்கனியை
யார்விரும்பிச் சுவைத்திடுவர் ? எவருமிலர் என்பதுண்மை!
இன்சொற்கள் அகத்திருக்க இன்னாச்சொல் பேசுவதால்
என்னபயன் சிந்திப்பீர் ஏற்று .

பொது இலக்கணம்
````````````````````````````````
நான்கு அடிகள் முதல் பல அடிகள் கொண்டது. நான்கு சீர்கள் , முதல் மற்றும் மூன்றாம் சீர்கள் மோனையால் இணைந்து
இரண்டு அடிகளுக்கு ஒரு எதுகையைப் பெற்று , ஈற்றடி முச்சீராய் நாள் , மலர் , காசு , பிறப்பு இவற்றில் ஒன்றைக் கொண்டு வரும் . கலித்தளையானும் , கலித்தளையுடன் வெண்டளை விரவியும் வரும் .

13. காப்பியக் கலித்துறை
  ``````````````````````````````````
அல்லும் பகலும் அமுதாயினிக் கின்ற தேவே
கல்லும் கசிய கனிவாயுனைப் பாடு வேனே
தில்லை சிவனுன் திருத்தாளினைப் பற்றி நின்றேன்
செல்லும் வழிக்குத் தெளிவாயெனைச் சுட்டு வாயே ! .

பொது இலக்கணம்
``````````````````````````````
ஓரடிக்கு ஐந்து சீர்கள் . முதல் மற்றும் மூன்றாம் சீர் மோனையால் இணைந்து ஓரடிக்கு
தேமா புளிமா புளிமாங்கனி தேம தேமா என்ற சீர்வரையறையைப் பெற்றும் , அடிதோறும் ஒரே எதுகையைப் பெற்றும் வரும் .
ஈற்றுச்சீர் ஏகாரம் இருப்பின் நன்று .

14. கட்டளைக் கலிப்பா
------------------------------------
கன்னிப் பெண்மனம் கன்னலோ நாவலோ
***கண்டு கொண்டதும் காதலைப் பூட்டிடு !
சின்ன வாயினில் செவ்விதழ் பூத்திட
***செல்ல சண்டையைச் செவ்வியே போட்டிடு !
பின்னிப் போட்டதும் பின்னலில் வெண்ணிறப்
***பிச்சிப் பூவினைப் பெட்புடன் சூட்டிடு !
மின்னல் கீற்றென வெட்டிடும் பார்வையில்
***வீழ்ந்த உள்ளமும் மெல்லவே பூக்குமே !!

பொது இலக்கணம்
``````````````````````````````
எண்சீர்கள் கொண்டது.நான்கு அடிகள் கொண்டது. நான்கு சீர்களை அரையடியாகவும் , அடுத்த நான்கு சீர்களை
அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதலாம். முதல் மற்றும் ஐந்தாம் சீர் மோனையால் இணைந்து நான்கடிகளுக்கும்
ஒரே எதுகை பெற்றும் வரும் . அறையடிக்கு நேரசைyil தொடங்க 11 எழுத்துகளும் , நிரையசையில் தொடங்க 12 எழுத்துகளும் ( ஒற்று நீங்கலாக ) வரும் . ஈற்றுச்சீர் ஏகாரம் பெறும்.


15. வஞ்சி விருத்தம்
-------------------------------
காடு கரையை அழித்துவிட்டு
வீடு கட்ட விழையாமல்
பாடு பட்டுப் பயிரிட்டால்
கேடு நீங்கிப் பிழைத்திடலாம் !!

பொது இலக்கணம்
`````````````````````````````
அளவொத்த மூன்று சீர்களுடன் , நான்கு அடிகள் பெற்று நான்கு அடிகளும் ஒரே எதுகை பெற்று வருவது
வஞ்சி விருத்தம். முதற்சீர் தேமா , இரண்டாம் சீர் தேமா அல்லது புளிமா , மூன்றாம் சீர் காய்ச்சீர் ஒன்றுமாக
அமைதல் வேண்டும்,

16 .வஞ்சித் தாழிசை
.  `````````````````````````
விரைவுட னலைகளும்
கரைதொட வருகையில்
நுரைத்திடு மெழிலுடன்
இரைந்திடுந் தரங்கமே !

உதித்திடும் பொழுதினில்
கதிர்க்குளித் தெழும்பிடப்
புதிரென விளங்கிடும்
அதிசயம் தரங்கமே !

நிலவத னொளிதனில்
சலதரம் மிளிர்ந்திடப்
புலவரும் புகழ்ந்திட
இலங்கிடும் தரங்கமே !


பொது இலக்கணம்
-------------------------------
இருசீர்கள் கொண்டதாய், நான்கு அடிகள் கொண்டு, நான்டிகளும் ஒரே எதுகையைப் பெற்றும்,
ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வருவது,(கட்டாயம்) வஞ்சித் தாழிசை ஆகும்.



17. ஒயிற்கும்மி !
  ````````````````````
சின்னச்சின் னப்பதம் மெல்லவைத் துக்கண்ணன்
சிங்கார மாய்நடை போட்டுவந் தான்
சிரமீதினில் மயில்பீலியும் திருமேனியில் மணியாரமும்
செவ்வாயில் வெண்ணையும் உண்டுவந் தான்!

புல்லாங்கு ழல்கையில் வைத்திருந் தான்மாயப்
பூங்காற்றை ஊதியே கட்டிப்போட் டான்
புகழாரமும் மலர்மாலையும் தினம்சூடிட வருவானுளம்
பூரிப்பில் கொஞ்சிம கிழ்ந்திடு வான் !

பின்னல்ச டைதனைப் பற்றியி ழுத்திட்டுப்
பெண்டிர்ம னந்தனைக் கொய்துவிட் டான்
பிருந்தாவனந் தனில்கோபியர் இவன்லீலையில் அலைபாய்ந்திடப்
பெற்றது பேறென எண்ணவைத் தான் !

கள்ளச்சி ரிப்புடன் செய்யுங்கு றும்புகள்
கண்கள்ர சித்திட ஆனந்த மே
கனிவாய்நிதம் புகழ்பாடிட மதுராபுரி களித்தாடிடக்
கற்கண்டாய் நெஞ்சமும் தித்திக்கு மே !

18. இலாவணி
```````````````````````````
ஆகாய ஓடையிலே ஆனந்தமாய் நீந்துகின்ற
   அற்புதக்கார் மேகங்களே வாங்க வாங்க !
சாகாமல் காத்திடவே சாரல்மழை கொட்டச்செய்துத்
   தாகத்தைத் தீர்த்துவிட்டுப் போங்க போங்க !!

ஏரிகுளம் வற்றிப்போச்சு ஏருழவன் வாழ்வும்போச்சு
   இந்நிலையை மாற்றிடவே வாராய் வாராய் !
மாரிமனம் வச்சிடம்மா மண்ணுயிர்கள் காத்திடம்மா
   மண்குளிர இக்கணமே தாராய் தாராய் !!

19. வளையற் சிந்து
  ``````````````````````````````
கண்ணன்முகம் கண்டவுடன்
களிப்பினிலே பூப்பாள் - அவள்
காதலுடன் பார்ப்பாள் - பல
கதைகளையும் கேட்பாள் - பின்
கவினிதழில் சிரிப்புதிர்த்துக்
கன்னத்தினைச் சாய்ப்பாள் !

வெண்ணிலவு வதனத்திலே
விற்புருவம் ஆடும் - கீழ்
விழியிரண்டும் தேடும் - வாய்
மெல்லிசையும் பாடும் - அவள்
வெண்டைவிரல் அபிநயத்தில்
விளங்குமெழில் கூடும்!

வண்ணவண்ண கனவுவந்து
மனம்மயங்கச் செய்யும் - அடை
மழைநினைவில் பெய்யும் - பெரு
மகிழ்விலுளம் கொய்யும் - அவன்
வடிவழகில் தனைமறந்து
வட்டமிடும் மெய்யும்!

பண்ணிசைத்தே அவன்பாடிட
பளிங்குமுகம் பூக்கும் - அதில்
பனித்துளியாய் வேர்க்கும் - அவள்
பட்டுடலும் ஆர்க்கும் - நிதம்
பகலிரவும் உணர்வலைகள்
பரவசத்தில் ஈர்க்கும்!

இப்படி பல்லாயிரக்கணக்கான மரபு கவிதைகளை எழுதி இந்த காலத்தில் இவருக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு நவீன இலக்கிய உலகிலும் தனக்கென ஒரு மரபு இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு உலகத்தரம் வாய்ந்த எழுத்தாளர் இவர் என்பது இவரின் எழுத்துக்களே சொல்லும்...

இந்த மரபு மரகதங்கள் மின்னும் எழுத்துக்களின் முன் பிரம்மித்து நிற்கும் படைப்புக் குழுமம் சியாமளா ராஜசேகர் அவர்களை வாழ்த்தி, வருங்கால இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்று அவரது எழுத்துக்கள் உலகெங்கும் பவனி வரவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறது !!

வாழ்த்துக்கள் கவிச்சுடர் சியாமளா ராஜசேகர்.

இதுநாள்வரை இந்த கவிச்சுடர் விருது புதுக்கவிதைகளை எழுதிய கவிஞர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது. முதல்முறையாக மரபிற்கு கொடுக்கப்படுவதில் பெருமை அடைகிறது படைப்பு குழுமம். இந்த விருது மரபின் மேல் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு உந்துதலையும் உற்சாகத்தையும் வரவைக்கும் என்று நம்புகிறோம். மேலும் நாம் மரபிற்கு எதிரானவர்கள் அல்ல அதையும் ஆதரிக்கும் வளர்க்கும் எண்ணம் கொண்டவர்களே என்பதும் இப்போது எல்லோருக்கும் புரியும். மரபையும் முறைப்படி எழுதினால் அதை ஆதரிக்க படைப்பு முன்னிற்கும் என்பது இக்கட்டுரையை சாட்சி..

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

கவிச்சுடர் விருது

ராம் பெரியசாமி

கவிச்சுடர் ராம் பெரியசாமி  ஒரு அறிமுகம்
********************************************************
பெயர்: ராம் பெரியசாமி
ஊர்: நெய்வேலி, கடலூர் மாவட்டம்

படைப்பு எனும் இந்த முகநூல் குழுமம் தொடங்கிய நாட்களிருந்து ஒவ்வொரு படைப்பாளியும் தத்தம் பாணிகளில் எழுதி முத்திரை பதித்து வருவது கண்கூடு. அந்த வரிசையில் இந்த மாதம் கவிச்சுடர் பெறும்படைப்பாளி ராம் பெரியசாமி அவர்களைப் பற்றியும், படைப்பு குழுமத்தை ஆதரித்து வரும் படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்ய அவசியமில்லை என்றாலும் நாள்தோறும் இந்த குடும்பத்தில் இணைந்துவந்துகொண்டிருக்கின்ற புதிய படைப்பாளிகளின் கவனத்துக்காக ஒரு அறிமுகக்கட்டுரை அவசியமாகிறது.

இலக்கிய ஞானம் நிறைந்த ஒரு திரைப்பட இயக்குனர் இவர். பிரபல திரைப்பட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும் இணை இயக்குனராகவும் பணியாற்றி இன்று இயக்குனராக அறிமுகமாகும் தினங்களை எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு இலக்கிய இயக்குனரை இவர்.. திரைப்படத்துறையில் பணியாற்றிக் கொண்டே இலக்கியத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு எண்ணிலடங்கா நற்படைப்புகளை இந்த தமிழ் சமூகத்திற்கு தந்து எல்லோரையும் தன் எழுத்தாற்றலால் திரும்பி பார்க்க வைத்தவர்...

இக்குழுமத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறந்த படைப்பாளியாக தேர்வு செய்யப்பட இவர் இப்போது பல படிகளை தாண்டி வந்து இன்று கவிச்சுடர் விருதுபெறும் நிலைக்கு உயர்த்து இருக்கிறார்.

இவரின் ஒவ்வொரு கவிதைகளையும் படைப்பு குழுமம் மிக நுண்ணிய முறையில் ஆராய்ந்து இவருக்கு இவ்விருதை அளிப்பதில் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.

கவிச்சுடர் ராம் பெரியசாமி கவிதையும் அவர் பார்வையும் :
------------------------------------------------------------------------
//
அந்த கடைசிச் சொல்
-------------------------------
உலகத்தின் ஒட்டுமொத்த
பேரிரைச்சல்களுக்கு நடுவில்
எறும்பு பாஷை இவர்களுக்கு
மட்டும் எப்படி தெரிந்தது….

ஏன் சிரித்தார்கள்
எதற்காக கிண்டலடித்தார்கள்
ஏன் வெட்கம் கொண்டார்கள்
எதற்காக கைதட்டிக்கொண்டார்கள்…

கணநேரத்தில் ஆச்சர்யங்களை
மிதக்கவிட்டு
காற்றை வசமாக்கிக்கொண்டார்கள்..
ஒருவனின் அழுகை
மற்றவர்களின் கரங்களுக்குள் தெளிக்கப்பட்டதும்
இதயங்களால்
ஆறுதலளிக்கிறார்கள்….

அவ்வொருவனின் அழுகையோடு பிரிகையில்
வானத்தில் நிறப்பிரிகை
சிறுதுளிகளை சிந்தியது…
அழுகைக்கான அந்த
ஒருவனின் கடைசிச்சொல்
என்னவாக இருந்திருக்கும்
என்பதில் தொடங்கும்முன்…

ஊமைகளென்றும்
வாயில்லா பூச்சிகளென்றும்
பாவங்கள் என்றும்
உச் கொட்டி சிலர்
நெடுநேரமாக பேசிக் கொண்டேயிருந்தார்கள்...
அந்த கடைசிச் சொல்
காற்றிலே தன்னை மறைத்துக்கொண்டது
//

ஒரு கடைசிச்சொல் வாழ்வில் எப்படி இருக்குமென்று கவிஞருக்குத்தான் தெரியும் அல்லது அவரால்தான் அனுமானிக்க முடியும்... அதையும் கவிதையில் இப்படி கொண்டுவர இவரால்தான் முடியும்...

//
நெற்றி சுருக்கி
கண்கள் குறுக்கி
இடக்கைக் கொண்டு
ஔியை மறைத்து
கண்களை விரித்து
உற்று நோக்கி
கால்கடுக்க நின்று
வழிநெடுகிலும் வழிந்தோடும் வெறுமையை
சுமந்து ஏக்கமாய் நீ வருகையில்
உனைக்காணாது
உன் வீட்டு சிட்டுக்குருவி
தெருவரை தேடிக்கொண்டே சுற்றிக்கொண்டிருக்கிறது
//

தேடல் என்பது எவ்வளவு சுகமானது, யார் யாரோ யாரையோ தேடிக்கொண்டிருக்க இங்கே சிட்டிக்குருவிகளில் கூட ஒரு வாழ்க்கை இருப்பதாக தேடிக்கொண்டிருக்கிறார் .

//
வெள்ளைச்சட்டை
நீலநிற ஜீன்ஸ்
வகிடுல்லாமல்
குவித்து சீவிய
குதிரைக்கொண்டை
நுனிநாக்கில்
ஆங்கிலம்
கட்ஷீ
படபடவென பட்டாம்பூச்சிபோல்
காரிலிருந்து இறங்கியவள்
பனிக்கூழ் கடைக்குச்சென்று
வாங்கியவள் சுவைத்துக்கொண்டே
வெளிவருகையில்
அழுக்குநிற
குட்டிப்பெண்ணொருத்தி
ஐவ்விரல்களை நீட்டியபடி
யாசகம் செய்த நிமிடத்தில்
அவளுக்கும் பனிக்கூழை
ஒன்றினை வாங்கித்தருகையில்
குட்டிப்பெண் சுவைத்தபோது
மழை சற்று தடுமாறி அழகியலாய்
பனிக்கூழை நக்கிச்செல்கிறது
//

இப்படியான அழகியலையும் வாழ்வியலையும் தன் பாணியில் கவிதையாக மாற்றுவதில் மிக கெட்டிக்காரர் இவர்.

//
இந்த மயானத்தின்
சதுர அடிகள்
இறந்த உடல்களால்
பத்திரமாய்
பதிவு செய்யப்பட்டது....
வில்லங்கம் வைத்து
வாங்கியவரையும்
விற்றவரையும் கொண்டு
கிரையம்
செய்யப்பட்டது.....
கடவுள்
ஆத்மாக்களுக்கு
பட்டா
வழங்கிக்கொண்டிருந்தார்.
//

கடவுள் ஆத்மாக்களுக்கு பட்டா வழங்கிக்கொண்டிருந்தார்-இப்படியாக முடிக்க பட்ட இந்த கவிதை எல்லோரின் மனதையும் பிழிந்து கொண்டிருக்க வாய்ப்பு அதிகம்.குடிசை மாற்று வாரியத்தின் கீழாய் இடம் இல்லாதவர்கள் கூட கடவுளின் கையெழுத்தில் தனக்கான குழியை முன்பதிவு செய்துக்கொண்டிருப்பது பெரும் துயரத்திற்கு மனித சிந்தனைக்குமே நகர்த்தி செல்லும் கவிதையாய் பிறந்திருக்கிறது.

//
நாங்கள் மரங்களுக்கு
மத்தியில் வாழ்கிறோம்...
நீங்கள் நூலகங்களுக்கு
மத்தியில் வாழுகிறீர்கள்...

நாங்கள் பூக்களையும்
சருகுகள் என்கிறோம்...
நீங்கள் சருகுகளை
கவிதைகள் என்பீர்கள்...

நாங்கள் கிளைகளை
விறகுகள் என்கிறோம்..
நீங்கள் விறகுகளை
சிறுகதைகள் என்பீர்கள்..

நாங்கள் பூமியின் கைகளை வேர்கள் என்கிறோம்..
நீங்கள் வேர்களை
இலக்கியங்கள் என்பீர்கள்...

நாங்கள் பறவை கூட்டினை
உறவுகள் என்கிறோம்..
நீங்கள் உறவுகளை
நாவல்கள் என்பீீர்கள்...

நாங்கள் மரங்களை வெட்டுவோம்...
மரக்கன்றுகளை நடுவோம் என்கிறோம்.....
நீங்கள் நூலகங்களை
அமைத்து ......
புத்தகங்களை அடுக்குவோம் என்பீர்கள்....

வாசகனும் பறவைகளும்
தீர்ந்துக் கொண்டிருக்கையில்
ஒரு புத்தகம்
பல மரங்கள்
என எப்போது சொல்லப்போகிறீர்கள்.....
//

ஒரு எழுத்தாளனின் பார்வை மற்ற மனிதர்களின் பார்வையை விட மிகவும் வித்தியாசமானது என்பது இம்மாதிரியான எழுத்துக்களே எடுத்துக்காட்டிச் செல்கின்றன...

//
முத்துராமனாகிய நான்
பெரியசாமிக்கு
மகனாகி..
இருபத்தியாறாம் வயதில்
சித்தப்பாவாகி
முப்பதாம் வயதில்
அப்பாவாகி
முப்பத்தைந்தாம் வயதில்
பெரியப்பாவாகி...
ஐம்பதாம் வயதில்
சம்பந்தியாகி
மாமனராகி
ஐம்பத்திரண்டாம் வயதில்
தாத்தாவாகி
பின்னொரு மூணு வருடங்களில்
கிழவனாகி
அறுபத்தைந்தாம் வருடத்தில்
பிணமாகிப்போனவனுக்கு
எந்த வயதில்
மனிதனாக இருந்தோமென
ஞாபகங்களில்லை
//

ஞாபக நதியில் நீந்தும் வாழ்வை கரைசேர்த்து கண்ணீரில் நீராட்டி கலக்கத்தையும் வாழ்வையும் ஒப்பிவித்து செல்லும் இம்மாதிரியான வாழ்வியல் கவிதைகளே இவரை அடையாளம் காண உதவும்...

இவரின் கவித்துவத்திற்கு மகுடமாக இருக்கும் மற்ற சில படைப்புகளையும் பார்ப்போம்...

//
என் அப்பாவோ
அம்மாவோ மழையைப்பற்றி என்னிடம் பேசியதில்லை..
குடைப்பிடிக்கவே
நிறைய கற்றுத்தந்தார்கள்..

சிலநேரம் சேலையால்
அம்மாவும்
சிலநேரம் சிவப்புதுண்டால்
அப்பாவும்
எனை நனைக்காமல்
நனைந்து வருவார்கள்...

காலையில் பெய்கிற மழை
வேலையை கெடுப்பதாக
அப்பாவிடம் திட்டு வாங்கும்...
மாலையில் பெய்கிற மழை
பிள்ளை நடந்தே வருவானென
அம்மாவிடம் திட்டு வாங்கும்...

சாரல்மழைகளாய் பெய்யும்போதெல்லாம்
கோழிக்கு நேரும் சூட்டிற்காக
அப்பத்தாவிடம் திட்டு வாங்கும்...

மின்சாரத்துண்டிப்புக்கு
துணைப்போகும் இரவு மழையை
அப்பாவும் அம்மாவும்
அப்பத்தாவும் நாங்களும்
சேர்ந்தே திட்டிவிடுவோம்...

அதன் அழுகையொலி
எங்கள் வீட்டு பாத்திரத்தின்
மேல் ஒலியெழுப்பும்...

மழை எங்கள் வீட்டில்
தெரியாமல் தவறுகள் செய்யும்
குழந்தை் போலாகிவிட்டது...

இந்த தங்கமான மழையை
அது பெய்து தரும் நீரை
நாங்கள் ஒரு போதும்
வீணாக்கியதுமில்லை
புறக்கணித்ததுமில்லை...
//

//
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் உங்களின்
நாக்கை சற்று நீளமாக்கி தெருவரைக்கும் கூட்டிக்கொண்டே செல்லுங்கள்...
வழியில் வருகிற
பரவிக்கிடக்கின்ற
கதைகளை சுவைத்துக்கொண்டே செல்லுங்கள்...
அக்கதைகளை மெருகேற்றி
உங்களால் முடிந்தவரை
நீட்டிச்சென்று தொடர்கதையாய் ஆக்குங்கள்...
பின்னொருநாளில் நாக்கை சுருட்டி மடக்கி வைத்து
எதிர்ப்பார்ப்புடன் வீதிகளில்
வலம் வருவீர்கள்...
சில எச்சில்களின்
எச்சங்கள் உங்கள் மீது
தெறிக்கும்...
தானாகவே உணர்வீர்கள்
அதில் உங்களுடையதும் கலந்திருக்கும்...
//

//குருதிப்பிழை அவனுக்கு
உடலெங்கும் வியாபித்திருக்கும் சேற்றுக்கொடிகளை
அறுத்தெடுக்க மீளவே முடிவதில்லை...
படித்துறை பாசிகளை
சொற்களின் வீச்சில்
ருசியூட்டிய நாக்குகளின்
நீளங்களில் வசவுகளாய்
குடிபுகுந்து கயிற்றில்
தொங்கவிடப்பட்டிருக்கிறது.
உயிரின் வெப்பம்
உயிரின் குளிர்
இரண்டிலும் தொப்புள்கொடி
நீட்சியின் பிறப்பில்
வேசியின் மகனாகிறான்
பெயர் மரித்துக்கொண்டே
போகும் கணத்தில்
உயிர் இழுத்துக்கொண்டே
போகிறது அவனை
மிருகங்களில்லா
வனாந்திரத்தை நோக்கி
//

//

கட்டண கழிப்பறை
------------------------
இரும்புத்தகரத்தாலான
கிழிசல்களுடன்
கதவொன்றைப்பற்றிய
அறையின் மேல்பகுதியும்
கீழ்பகுதியும் வெற்றிடம்கொண்டு
வாடிக்கையாளனின் முகமட்டும் மறைத்தலானகழிவறையின் துருப்பிடித்த தாழ்பாள்
கடந்தகாலத்தில் துளைகளுக்குள் பொருந்தி
நிகழ்காலத்தில் புகமுடியாதன் வயது
பல வருடங்களாகியது…
பான்பராக் குட்கா ஹான்சின் எச்சில் கறைகளும்
புகையிலையின் நெடிய வாடைகளின் வீச்சமும்
மஞ்சள் பூஞ்சையழுக்கேறி
உள்வாய் குழாயினுள்ளே
புகமுடியா பலமலக்கழிவுகளின்
மிதத்தலின் அருவருப்பிலும்
சாயங்கள் போனச்சுவரின்
மேனிகளில் தீண்டப்பட்ட
பெண்ணுடலுக்கான
வர்ணனைகளும்
சம்பாஷனைகளோடு
சில பெயர்களும்
தெளிவு வரைப்படங்களும்
அலைபேசி எண்களுமாய்
மென்புறுவலோடு ரசித்தபடி
படித்துக்கொண்டே
சிகரெட்டை புகைத்துக்கொண்டிருக்கிறான் மானிடனொருவன்
கட்டணக்கழிப்பறையின்
நுழைவுக்கட்டணத்தின் ஐந்துரூபாயில் மனிதம்
மலங்களாகியது.
//

இப்படி பல்லாயிரக்கணக்கான நவீன கவிதைகளை எழுதி இந்த காலத்தில் இவருக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு நவீன இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு உலகத்தரம் வாய்ந்த எழுத்தாளர் இவர் என்பது இவரின் எழுத்துக்களே சொல்லும்...
இந்த இரசனையான எழுத்துக்களின் முன் பிரம்மித்து நிற்கும் படைப்புக் குழுமம் கவிச்சுடர் ராம் பெரியசாமி அவர்களை வாழ்த்தி, வருங்கால இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்று அவரது எழுத்துக்கள் உலகெங்கும் பவனி வரவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறது !!

வாழ்த்துக்கள் கவிச்சுடர் ராம் பெரியசாமி

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

View

கவிச்சுடர் விருது

ரோஷான் ஏ.ஜிப்ரி

கவிச்சுடர் ரோஷான் ஏ.ஜிப்ரி  ஒரு அறிமுகம்
********************************************************
பெயர்: ரோஷான் ஏ.ஜிப்ரி
ஊர்: வாங்காமம், இறக்காமம் - இலங்கை.

கிழக்கிலங்கையின் மருதமுனையை பிறப்பிடமாகவும் இறக்காமத்தை வாழ்விடமாகவும் தற்போது தொழில் நிமித்தம் மத்தியகிழக்கு நாடான கட்டாரில் வசிக்கிறார்.

1989,இல் வீரகேசரி வார வெளியீடு பத்திரிக்கை ஊடாக ஆரம்பமானது இவரது கவிதை அடி எடுப்பு. முதல் கவிதை முன் அறிக்கை ! இதுவரை 1000 க்கு மேற்பட்ட கவிதைகள் எழுதி இருக்கிறார். இவரது கவிதைகளுக்கு களம் தந்த வாரப் பத்திரிகைகளின் எண்ணிக்கை சுமார் 25 க்கு மேல் இருக்கிறது. கவிதைகள் மட்டுமல்லாது சிறுகதைகள் மற்றும் நாடகங்கள் எழுதுவதிலும் கைதேர்ந்தவர்... இதுவரை இவர் எழுதிய ஐந்து சிறு கதைகள் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. மூன்று வானொலி நாடகங்கள் எழுதப்பட்டு இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கின்றன. பல தளத்திலும் முகநூலிலும் தொடர்ச்சியாக எழுதி வரும் இவர்
2014இல் எழுதிய அலகுகளால் செதுக்கிய கூடு என்ற கவிதை உலகப்புகழ் பெற்றது... மேலும் அதே தலைப்பில் ஒரு நூலும் திரு.அமிர்த கணேசன்(அகன்) அவர்களால் வெளியிடப்பட்டு அக்கவிதைக்கு பெருமை சேர்க்கப்பட்டது...

சர்வேதச மட்டத்தில் பல விருதுகளும் பரிசுகளும் பெற்று இருக்கிறார்... அதில் முக்கியமாக
மென்பா மணி, சொல்லாக்க செம்மல் , ஈரோடு தமிழன்பன் விருது போன்ற விருதுகள் அதனுள் அடங்கும்... மேலும் நமது படைப்பு குழுமம் 2016இல் சிறந்த படைப்பாளிக்கான சான்றிதழும் தந்து சிறப்பித்தது. அது மட்டுமல்லாமல் இப்போது நமது குழுமத்தால் தரப்படும் உயரிய விருதான கவிச்சுடர் விருதையும் பெற்று இருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான படைப்புகளை நம் கவிச்சுடர் எழுதி இருந்தாலும் படைப்பில் அவர் எழுதிய சில படைப்புகளை உங்கள் பார்வைக்கு மீண்டும் படையல் வைக்கிறோம்...

கவிச்சுடர் ரோஷான் ஏ.ஜிப்ரி கவிதையும் அவர் பார்வையும் :
------------------------------------------------------------------------
வாழ்வியலை அதன் செழுமை... துயரம்... இன்பம்...இவை எதுவும் மாறாமல் அப்படியே அச்சு அசலாகப் பந்திவைப்பதில் இக்கவிஞருக்கு நிகர் இவரே.... இவரின் கீழ்க்கோடிட்ட கவிதை இவரது சுயம் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் கவிதையில்

எனது சுயம்
-----------------

உங்களுக்கு தெரிந்திருக்கும்
என்பதெல்லாம்
எனக்கு தெரியாது
எனது முகம்
கனவுகளால் பூசப்பட்டது

அது எனக்கானது மட்டுமே
நான்
பார்த்து பார்த்து
பவுடர் பூசுவேன்
தேவையற்ற முடிகளை
சிரைத்தும் வீசுவேன்
ஒட்ட தெரிந்த எனக்கு
கத்தரிக்க தெரியாதா?

உங்களுடைய கவலை
உங்களிடம் இருக்கட்டும்
என்னுடய கனவு
என்னுடனயே கிடக்கட்டும்
ஆலோசனையென்று யாரும் அத்துமீற வேண்டாம்
அனுதாபம் என்று
ஒத்து ஊதவும் வேண்டாம்
கண்ணாடியாய் இருக்கும்
எதுவும்
கண்ணாடி இல்லை
அதற்கு பின்னாடி இருப்பதை
முன்னாடி காட்டத்தெரியாது
எனக்கு அது தேவையுமில்லை

ஆயாசம் கொள்ளாத
சங்கற்பத்தில்
என் இருப்பு திடமானது
பிடியிறுக என்கை பற்றியவன்
என்னுடன் இருக்கிறான்
காலுன்றிக் கொள்ள சதுப்புகளை சமீபிக்க விரும்பவில்லை
மலைகளை அண்மித்துக் கொண்டிருக்கிறேன்
பூரிப்பில் ஆழ்த்திடும் காலங்களை
தேடிக்கொண்டிருக்கும்
கணப்பொழுது நான்

யாருமற்ற தனித்தலில்
வாழ்வை தேடியலைந்து
இடி,முழக்கங்களோடு
பரஸ்பரமானவன்

தோற்பதாயின்
மரணக் கரங்கள் முன் மட்டுமே
உங்களிடமல்ல....,
என்ற இடத்தில்தான்
இறையாசி பெற்றவனாய்
நான்
எப்போழுதும் நிற்பேன்!

தன் சுயநலத்திற்காக ஒருவரது ஏழ்மையையோ... இயலாமையையோ குத்திப்பார்த்து ரத்தம் சுவைக்கும் மனிதர்களுக்காக இப்படி எழுதியிருப்பார் என நினைக்கத் தோன்றுகிறது. அன்பு செய்யுங்கள்... அன்பை மட்டுமே எவ்வித எதிர்பார்ப்புகளின்றிச் செய்யுங்கள் எனச் சுயம்புவாகவும் கொஞ்சம் சூடாகவும் சொல்லும் இக்கவிதை.

எப்படிப் பரப்பினாயோ
வேர்களை
உன்னை எண்ணிப் பார்த்தாலே
எனக்குள் பூக்காலம்
தொடங்கி விடுகிறது
உன் இதழ் உதிர்த்த
ஈர புன்னகைகளின் முன்
கடல்கள் தாண்டிய தூரம்
கடக்கும் தூரமாகி விட
மனம் ஒரு தும்பியாக
மடி தாவுகிறேன்.....

கடலென்ன தூரம்... காற்றுக்கென்ன வேலி... எத்தனை தடைகளையும் மீறி எண்ண அலைகளுக்கு எங்குள்ளது தடைகள்... ? பூக்காலம் எத்தனை ரம்மியமாயிருக்கிறது இக்கவிதையில்... படிப்பவரும் இக்கவிதையினை முடித்தப் பிறகு ஒரு தும்பியாக உணர்ந்தால் வியப்பேதும் இல்லை....

கதவினை திறக்கும்போது
ஒரு மூலை பூனையாய் ஒளிந்து கொள்வதுபோல்
கதவினை சாத்தும்போது
ஒரு தனிமை பூதமாய் வெளியே வருகிறது
பூட்டை முன்னால் விட்டு
சாவியை பின்னால் வைக்கிறது
பீதியில் உறைய வைக்கும் இரவுகள்

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உழலும் கொடிந்த வாழ்க்கையைச் சொல்லும் இக்கவிதை ஒரு விருதுக்காக எடுக்கப்பட்ட சினிமாவைப் போலத் தோன்றினாலும் அதன் உள்ளர்த்தங்கள் வெகு ஆழமானவை. வெகு சிலரே இக்கவிதையின் ஆழம் உணர்ந்துகொள்ள முடியும். நேர்த்தியான வாசிப்பாளன் ஒருவனாலேயே இக்கவிதையை உணர முடியும்... படித்து முடித்தவுடன் மரணம் நம்மீதும் கவிழ்ந்து கொள்வதைப் போல ஒரு உணர்வு...!!

பிச்சைக்காரன் மட்டுமல்ல,
பஸ்ஸை தவறவிட்ட பயணியும்
படுத்துறங்கி பசியாறும் மடமாகி
தரிப்பிடத்தில் தனித்து நிற்கும்
நிழல் வாகை நிழலில்
சிற்றெறும்பின் யோசனையேனும்
தோன்றாத ஒரு
சீர் யோகி
சிறுநீர் கழித்திருக்கிறான்
சுத்தப் படுத்துவதாயின்
எங்கிருந்து தொடங்குவது
என்ற கேள்வியுடன்
முற்றுப் பெறுகிறது தெரு....

சமகால நிகழ்வுகளைச் சொல்லும் ஒரு கவிதை. எப்படியெல்லாம் நம்மைச் சுத்தம் செய்து கொண்டு நம் சுற்றுப்புறங்களை ஒழித்து அழிக்கிறோம் என்ற அவலங்களைப் பாடியிருக்கிறார். எல்லோரும் விளையாட... தானியங்களை உலர்த்த... நின்று வியாபாரம் செய்ய... பொழுது போக்க என அழகாயிருந்த தெருக்களின் அவலக்கோலத்தை அப்படியே பதிவு செய்திருக்கிறார்...

நிலை
--------
எண்ணங்களால் உயர
என்னதான்
கிளைபரப்பினாலும்
வெட்டி விட்டுப் போகும் இடத்தில்
வேர்கள் எப்போதையும்போல்
வேறுபட்டுத்தான் போகின்றன...

--- என்ற துளிக்கவிதையில் உலகத்தையே அதன் வேருக்குள் அடைத்து விட்டார் தனது வரிகளில்..

அவன் மதுவை
தினமும் குடித்து நடந்தான்
ஆடிப் போனது குடும்பம்!

வன்முறை.
********
மிகச் சாமர்த்தியமாய்
அல்லாமல்....,
மிக சாதாரணமாய்
நடந்து விடுகிறன
கொலைகளும் கூட..

சாட்சிகளற்ற
சந்தடிகளில்
அவர்கள்
ஆக்கி வைத்திருக்கும்
யாழ் அறுந்த
பாழ் நிலத்தில்
பழையபடி!

-- இப்படி சில கவிதைகளில் சமூக சிந்தனைகளையும் ஆங்காங்கே தூவி செல்வது ஒரு எழுத்தாளருக்கு உள்ள பொறுப்பை நமக்கு உணர்த்தியவராக காட்டுகிறார்...

இவரின் கவித்திறமைக்கு சான்றாக இருக்கும் சில கவிதைகளின் தொகுப்பு இதோ:

//
கனவுகளின் வழிப்போக்கன்
-----------------------------------------
ஓய்வுக்கு சிறு ஒதுக்குப்புறம்
கூடவே
ஆயாசம் மிகு
ஆழ்ந்த உறக்கம்
வழமை போலவே அது
வாய்த்து விடுகிறது எனக்கு

கனவுகளை அழைத்தபடி
இரவுகளை நான்
கடந்துகொண்டிருக்கிறேன்
அதுவே பிடித்தும் போனது

சொப்பனங்களில் லயித்தல்
மிக அலாதியான அனுபவம்
வேற்று கிரகமாய்
கிரகித்து வைத்திருக்கும்
விசித்திர உலகது

எவரின் அச்சுறுத்தலுக்கும்
அடி பணியவோ
ஏமாற்றங்களில்
அழுது குனியவோ
தேவையற்ற தேசம் அது

காயங்களை மறந்தும்
கண்டங்களை கடந்தும்
பின்பு வெவ்வேறு பாகங்களுக்கு என
பறந்தும் விடுகிறேன்

ஆச்சரியமாய் இருந்தது
நேற்றிரவு நான் போய் வந்த புலம்
அங்கு
மனிதர்கள் வாழ்ந்தார்கள்
குளிர வைத்து கொட்டும் மழை போல்

மெல்லிய காற்றுடன்
மழையும் முளைத்தது
குடை கொண்டு போகாததால் தெப்பமாய்
நனைந்தும் விட்டேன்
இங்கிருக்கு எந்த முகங்களும் இல்லாத ஊராய் இருந்தது அவ்விடம்

திரும்புகையில்
ஊரில் உள்ளோரை
அழைத்துச் செல்லும்
ஆவலுடன்
விளக்க தேடினேன்
வியர்வையில் குளித்தபடி
அவர்கள் அனைவரும் ஊரில்
செத்துக் கிடந்த குளங்களை அடக்கம் செய்து கொண்டிருந்தார்கள்!
//

//
மெழுகின் கரைதல்!
-----------------------------
உன் குருத்து மணல் சிரிப்புகளுக்காய்
புதைகின்றன என் பொழுதுகளின் காலடிகள்
தனிமை வெளிகடந்த வெம்மைக்குள்
கால மெழுகு கரைகிறது என்னுடன்...,
நினைவுகளின் ஈறுகளுக்குள் அசைபோடப்படுகிறது
பாலியத்தின் பசி
விரதப் பொழுதுகளில்..,
நுரைத்து,நுரைத்து வழிகிறது இளமையின்
மதுக்கோப்பை
சட்டங்களுக்குள் மௌனித்த ஓவியங்களில் ஒன்றாய் என் ஆசைகளையும் ஒருமுகப்படுத்தி புன்னகைக்கும் பாவனையுடன்
காலத்தின் முகச்சுவரில் தொங்கவிட்டிருக்கிறேன்
நிலவைப் போலவே
நினைத்து
என்னையும்
ரசித்து மகிழ்கிறாய்
கிரகித்து நீ
உணரும் கணம் இருண்டு கிடக்கலாம் என் வானம்
அப்போது.......,
பௌர்ணமியாய் என்னுடன் பயணிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை
ஒரு விடிவெள்ளியாய் மின்னியேனும்
கை தாங்கலாய்
அழைத்துச் செல்
அந்திமத் தெருவரை!
//

//

எத்தனைமுறை பெருக்கினாலும்
அறைக்குள் படிந்திருக்கும்
தனிமையை
கூட்டித்தள்ள முடியவில்லை!

//

முகங்களால் அலங்கரிப்பவன்.
*******************
நாற்பதை தாண்டியும்
நரை விழும்வரை உழைத்து
நகலும்,அசலுமாய்
நான் சொந்தமாய்
முகங்களை அலங்கரித்து
கடை வைத்திருக்கிறேன்
**
குழந்தைகளின்
முகங்களோடு இருக்கும்
உறக்கம் தவிர்த்து
ஏனைய எல்லா நேரங்களிலும்
ஏலவிற்பனை கூடமாய்
திறந்தே இருக்கிறது
உங்கள் தேவைக்காய்
**
காதலோடு
காமத்தோடு
கர்வத்தோடு
பாசிச வெறியோடு
பயபக்தி அற்ற ஜதியோடு
மதம் பிடித்தபடி
மண் திருடியபடி
களவாடியபடி
கைக்கூலி கேட்டபடி
விசுவாசம் துறந்தபடி
வேட்டையாட அலைந்தபடி
ஏமாற்றியபடி
எதிலியாய் தொலைந்தபடி என..
**
இவற்றில்
உனக்கு எந்த முகத்தை
தந்துதவலாம் சொல்லு?
ஆனால்
இதில் எது
மனிதனின் முகம் என்று மட்டும்
கேட்டுவிடாதே!
**
அதை இறந்துபோன
மனிதர் ஒருவர்
ஏற்கெனவே வாங்கி சென்று விட்டார்!
//

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்படி பல்லாயிரக்கணக்கான நவீன கவிதைகளை எழுதி இந்த காலத்தில் இவருக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு நவீன இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு உலகத்தரம் வாய்ந்த எழுத்தாளர் இவர் என்பது இவரின் எழுத்துக்களே சொல்லும்...

இந்த இரசனையான எழுத்துக்களின் முன் பிரம்மித்து நிற்கும் படைப்புக் குழுமம் கவிச்சுடர் ரோஷான் ஏ.ஜிப்ரி அவர்களை வாழ்த்தி, வருங்கால இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்று அவரது எழுத்துக்கள் உலகெங்கும் பவனி வரவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறது !!

வாழ்த்துக்கள் கவிச்சுடர் ரோஷான் ஏ.ஜிப்ரி

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

கவிச்சுடர் விருது

வேதா நாயக்

கவிச்சுடர் வேதா நாயக் – ஒரு அறிமுகம் ********************************************************  படைப்பு எனும் இந்த முகநூல் குழுமம் தொடங்கிய நாட்களிருந்து ஒவ்வொரு படைப்பாளியும் தத்தம் பாணிகளில் எழுதி முத்திரை பதித்து வருவது கண்கூடு. அந்த வரிசையில் இந்த மாதம் கவிச்சுடர் பெறும்படைப்பாளி வேதா நாயக் அவர்களைப் பற்றியும் படைப்பு குழுமத்தை ஆதரித்து வரும் படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்ய அவசியமில்லை என்றாலும் நாள்தோறும் இந்த குடும்பத்தில் இணைந்துவந்துகொண்டிருக்கின்ற புதிய படைப்பாளிகளின் கவனத்துக்காக ஒரு அறிமுகக்கட்டுரை அவசியமாகிறது.  கவிஞர் வேதா நாயக் இயற் பெயர் வேத நாயகம், வேலூர் அருகே உள்ள போளூர் கிராமத்தில் பிறந்தவர். வயது 41, இந்திய அளவில் பிரசித்தி பெறவே தன் பெயரை நாயக் என மாற்றிக் கொண்டார். அந்த அளவு இந்திய மரபில் விருப்புடையவர். நாற்பது வயதுடைய இவரின் எழுத்து எண்பது வயதின் அனுபவம் நிறைந்து காணப்படுவது இவருடைய எழுத்துக்கு ஒரு சான்று. அவரது தங்கை மகள் பெயர் ஹேமா. தனது தங்கை மகள் மேல் மிக்க நேசங்கொண்டவர். ஆதலால் தனது கவிதைகளை ஹேமா என்ற பெயரிழும் எழுதி வருபவர். மேலுமிவர் மஹாபாரதத்தில் அர்ஜூனன், பீமன் ஆகியோரின் வாழ்க்கையை ஒற்றி சிறுகதைகள் எழுதி வருகிறார் மேலும் இவர் சமஸ்கிருத மொழி இலக்கியத்தில் ஈடுபாடுடையுவர். இவரது பெரும்பாலான படைப்புகளில் சமஸ்கிருத மொழி சொற்கள் வர இவையே காரணம்.  திருவண்ணாமலை இவரது விருப்பத் தளம். அது போல் மலை பிரதேசங்களை மிகவும் விரும்புவார். திரைத்துறையிலும் ஈடுபாடுடைய வேதா, தற்சமயம் சில இயக்குனர்களோடு அவர்களது கதைவிவாதங்களிலும் பங்கேற்கிறார். தற்சமயம் சில படங்களில் பாடல் எழுதவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். கோட்பாடுகள் மீது ஈடுபாடு இல்லாதவர். பெரும்பாலும் உணர்வின் மொழியையே கவிதைகளில் புதைப்பவர். நீர் நிலைகள் குறித்த பெருங்கட்டுரைகளை தனது முகநூலில் எழுதியுள்ளார். குறைந்த ஊதியத்தில் பணியாற்றினாலும், தினசரி முப்பது ரூபாய் என்ற கணக்கில் புத்தகங்களுக்காக சேமித்து வைத்து சென்னை புத்தகக் கண் காட்சியில்வருடந்தோறும் நூல்கள் வாங்குவார். அந்த அளவு இலக்கியத்தின் மேல் அதீத ஈடுபாடுடையுவர்.  வேனிற் காலங்களை பெரும்பாலும் வெறுக்கும் வேதா, தன் கவிதைகளில் வேனிற் கால எரிச்சல் பற்றி பெரிதும் குறைபடுகிறார். எழுத்தாளர்கள் ஜெயமோகன், ஜி. குப்புசாமி ஆகியோர் மீது அதிகஈடுபாடுடையவர். ஜப்பானிய சிறார் இலக்கியங்களையும் , காமிக்ஸ் புத்தகங்களையும் குழந்தையை போல் இன்றும் ஈடுபாடோடு தேடி வாங்கி படிப்பவர். இலக்கிய நாட்டத்தோடு வரும் இளந் தலைமுறைக்கு,வேதா படிக்கக் கூறும் நூல்களில் காமிக்ஸ்கள் நிச்சயம் அடங்கும். சங்க தமிழ் இலக்கியங்களில் வேதா கொண்ட ஈடுபாட்டிற்கு வேதாவின் மிதியடி, பச்சை குத்துவது போன்ற கட்டுரைகளே பெரும் உதாரணங்கள். படைப்பில் இவர் இயற்றிய மற்ற கவிதைகளைப் பற்றி முதலில் பார்ப்போம்.   கவிச்சுடர் வேதா நாயக் கவிதையும் அவர் பார்வையும் : ------------------------------------------------------------------------  மென்மையின் சூட்டை குளிர்வித்தல் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நான்கைந்துகளை  அடைக்கக் கொள்ளுமாறு சாணம் மெழுகிய உள்ளறை, எச்சத்தினை விளக்குமாற்றின்  அடிக்கட்டையில் அழுத்தி எடுக்க முயன்றும் இன்னுங் கசப்பாய் அடியில் படிந்திருத்தலால் கிழிந்த புத்தகங்களின் கனத்த அட்டைப்பாவி நாளான செய்தித்தாள் மேற்பரத்தி, சுவாச இடையூறு ஏற்படா வண்ணம்  வளி நுழைய சின்னஞ்சிறு இடைவெளி, மூடாப்புக்காய் இரும்புத் தகடு, அதன் மேல் சாற்ற கருங்கல் பலகை(தேடுவதொன்றும் அவ்வளவு எளிதல்ல) என முன் தயாரிப்புகளை  தகர்த்தெறிகின்றன வயலில் நெற்கதிர்களை தின்று கொழுத்த வெள்ளெலிகள்; கரும்புத் தோட்டத்தில் நள்ளிரவில் அடிவயிற்றை கலக்கும் குரலில் ஊளையிடும் குள்ள நரிகள்; ஆங்காங்கே மேயும் பாம்புகளென இத்தனைத் தடைகளையும்  தாண்டியான பின் பகல்களில் கோழியை மிதிக்கும் சேவல்களும்  காபந்து பண்ணிக்கொள்கின்றன பரஸ்பரம்..., இருள்சாயத்துவங்கும் நேரத்திற்கு வெகு அருகே கூச்சலிடுவாள் அம்மா' வழக்கமா வெக்கற  இடத்துல காணோம், போய் தேடுங்க'., சனியன் பிடிச்ச கோழி  இட்டிருப்பதெல்லாம் கத்தாழை செடி அருகேயும், ஆள் நுழைய இயலா முள் நிரம்பிய  புதராயும், நெடிது வளர்ந்த புற்றின் ஓரமாகவும் தான் என்பது எத்தனை அபஸ்வரமானது என  முட்டையை உடைத்து ஒரே வாயில்  விழுங்கி விட்டு தேகப்பயற்சி செய்பவனுக்கு தெரியவா போகிறது?  ஒரு கவிதையின் வெற்றி என்பது சொல்லாடலின் சூட்சமத்தில் இருக்கிறது.அதை சரியாக பயன் படுத்தும் போது கவிதையின் வெற்றியை பார்க்க நேரிடலம்.சில கவிதைகளை கேள்வியில் முடிப்பது சிந்தனை தூண்டும் செயலாகும்.இன்னும் இந்த உலகத்திற்கு இரண்டு வகை யான மனிதர்கள் மட்டுமே தேவை.  ஒன்றுகேள்வியை கேட்பவர்கள்.இன்னொன்று கேள்விக்கான பதிலை தேடிகொண்டே இருப்பவர்கள் இப்படி கேள்விகளையும் கேள்விக்கான தேடல்களையும் கொண்டவர் தான் வேதா.  ------------------------------------  வினோதரச மகரந்தத்துகள் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ வீட்டிலிருந்து கொணர மறந்த இளைஞனொருவன் சட்டைக்காலரை கைக்குட்டையென பாவித்து அவசரமாய் வழியும் வியர்வையை அழிக்கிறான்.  குடை எடுத்துவர மறந்த  எழுபது வயது மனைவியை தூஷித்தபடி அண்ணாந்தபடி பார்த்தவாறு இருக்க வைத்து கண்களில்  சொட்டு மருந்தை விடுகிறான் ஒரு கிழவன்.  இலவச இணைப்பின் உபயத்தில் நீண்ட நேரமாய் கைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் மாணவியானவள் செவி, கன்னம் வழிஒழுகிய வியர்வையை கைபேசியின் திரை முழுக்க ஒட்டிக் கொண்டிருப்பதை கண்ணுற்று  அசூயையாய் பிருஷ்டத்தில் தேய்த்து மீண்டும் உரையாடலை தொடர்கிறாள்.  வெள்ளரிப் பிஞ்சுகளை நெடுக்கக் கீறி உப்பு மிளகு தடவி விற்பவன்  சட்டையின் ஐந்து பொத்தான்களை கழற்றி விட்டு ஐஸ்கிரீம் கடையிலிருந்து பனிக்கட்டிகளை வாங்கி சிறு துண்டில் முடிச்சிட்டு கன்னத்திலும், மார்பிலும் அறைந்து கொள்கிறான்.  குளிர் சாதனம் பொருத்தப்பட்ட  காரின் உள்ளே பசி கிள்ளும் வயிற்றோடு பணக்காரத் தம்பதிகள் சாலையோர உணவக பசியாறலுக்காக கதவு திறக்கையில் அனற் காற்று முகத்தில் அறையப்பெற்று ஸ்தம்பித்து இரண்டு கணங்கள் தயங்கிப்பின் வெளிவருகிறார்கள்.  சிறு குழந்தை ஒன்றின் வியர்த்தலை சேலைத் தலைப்பில் அழுந்தத் துடைத்த பின் பாலியஸ்டரின் வெம்மையில் மேலும் வீறிட்டு அழுவதை தாளாமல் கண்கள் பனிக்க செய்வதறியாமல் திகைக்கிறாள் தாயொருவள்.  ஜன்னலோர இருக்கைக்கு தாவியேறி அமர்ந்த பின் வெயிலின் வெம்மையில் மூச்சுத்திணறி இத காற்றுக்கேங்கிய நிறைசூலிக்கென விட்டுக்கொடுக்கும்  ஒரு தறுதலைக்காகவேனும் என்றோ ஒரு நாள் மழை பெய்யக் கூடும்.  கவிதையை படித்துக்கொண்டே இருக்கும் போது அதன் காட்சிகளை கண்முன்னே பார்க்குமாறு எழுதுவதென்பது மிகச்சிறந்த ஆளுமைதிறன்.  ஒரு பேச்சாளர் பேசும் போது எப்படி அவை முழுக்கஆளுமை செய்கிறாரோ அப்படியே தான் கவிஞர்களும் படிக்கும்போது கவிதையை நடந்துக்கொண்டிருக்கும் செயல் போல் உணர்த்தி விடும் திறமை மிக்கவராக இருக்க வேண்டும். அப்படியான திறன் கொண்டவர் தான் நம் வேதா. இவரின் தீரா காதல் மனிதர்களை விட அதிகமாய் புத்தகத்திடம்தான் செலவு செய்கிறார்.  ஒரு மீனும், ஒரு பறவையும் எப்போதும் தடயங்களை  விட்டுச் செல்வதில்லை  வேதாவின் பார்வைக்கோணேம் மிக அழகான ஆழமான படிமத்தை போர்த்திக் கொண்டிருக்கும்.வேதா நல்ல கவிஞன்,தேர்ந்த வாசிப்பு மிக்கவர் என்பதைவிட அவர் நல்ல புகைப்பட ரசனையாளர் கூட இவர்கவிதையில் பதியப்படும் படங்கள் வித்தியாசம் கொண்டவை எனப்பதைவிட பிரம்மாண்டம் நிறைந்தவை. கவிதைகளைவிட புகைப்படத்திற்கான தேடல் நேரம் அதிகம் என்பதை பார்க்கும் போதே அனுமானித்துக் கொள்ளலாம்.  "சட்டகத்தின் இருப்பிடமும்  குழைந்த சோற்றுப் பருக்கையும்"என்ற கவியதையின் மூலம் நமக்கு சொல்லித்தருகிறார்...  "சில ஓவியங்கள் உங்களது  பார்வைக்குப் பட்டு விழிகளைத் துளைத்து  பின் மண்டை வழியே  வெளியேறி விடத்தான் துடிக்கிறது"  என்று தொடங்கும் இக்கவிதையில் உலக கவிஞர்களின் உயர்ந்த பார்வையின் வரிசைக்கு நம்மை அழைத்து போகிறார்...  இவரின் சில உலகத்தரம் வாய்ந்த ஆளுமை நிறைந்த கவிதைகளை உங்களுக்காக மீண்டும் சமர்ப்பிக்கிறோம்...  ஒரு நத்தையை, ஆமையைப் போல்  உள்ளுக்கிழுத்தலில்  கழுத்தோரங்களிலும், கைகளிலும் சிராய்ப்பு ஏற்படுகிறது.., ஒரு பூனையை, புலியைப் போல் பதுங்குகையில் பிருஷ்டம்  முட்களால் குத்தப்படுகிறது.., அரிமா போல் கர்ச்சிக்க முனைகையில் சிசு தேம்புவது போல் குரலெழும்புகிறது.., ஒரு வரையாடு உச்சியை அடைய  தம் கால்களை எவ்வாறு  லாவகத்துடன் பயன்படுத்துகிறதோ அதே போல் நகலெடுத்தலில் சில சிக்கல்கள்  இருப்பதால் அசலின் மூலமாய் எல்லாம் இழப்பதென்றாலும் ஏற்பே. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  தீர்க்கவியலா நோயின் ஒற்றைக் குரைப்பொலி கைகளை இறுகப்பற்றி மெலிதாய் நீவி  ஒன்றுமில்லை பயப்படும்படி எனவும்., கண்கள் மூடி பிதற்றும் வார்த்தைகளை அருகமர்ந்து அணைப்பதே போலச் செய்து உம் ' காரத்தை அதிகப்படியாய் செவிகளில் படும்படி ஒலிக்க செய வேண்டும்., வேண்டுமெனில் ஆடைகளைத் தளர்த்தி வியர்வை துளிர்க்கும் இடங்களை குறிவைத்து பனை மட்டை விசிறியால்  ஆசுவாசப்படுத்தலாம்... கண்டிப்பாக மின் விசிறி பயன்படுத்துதல்  தவிர்க்கப்படுகிறது.., உங்களது அன்புக்குகந்தவர் எனில் சில நிமிடங்கள் அணைத்தபடி உடன் படுத்திருப்பது சாலச் சிறந்தது... விடுபட்டு எழுந்து 'உனது நோய்மை  என்னையும் கபளீகரம் செய்து விட்டது பார்' என நம்மை தொட்டுப் பார்த்து  உறுதி செய்து கொள்ளச் செய்யலாம்.., படுக்கையிலிருந்து எழ முயற்சித்து தளர்ந்து கீழே விழ நேர்ந்தால் கரம் நீட்டி உறுதியான விரலில்  ஏதோ ஒன்றை நீட்டி பிடித்தெழும்ப வைத்து காதோரம் ' உனது வெளிறிய உதடையும்; நடுங்கும் கால்களையும் ,  பஞ்சடைத்த செவிகளையும், குழைந்த நீர் சேர்ந்த விழிகளையும் நான் முன்பு பெற்றிருந்தேன், இப்போது கனவு போல் எனக்கு தெரிவது போல் நீயும் விரைவில் தெளிவாய்' என்று தெளிவாய் சொல்லி விடலாம்.., மருந்தெனக் கொள்வது  மனம் எனும் நாணல்  சூறைக்கு வளைந்து தருதலாம். --------------------------  இசைக்கும் எனக்கும்  யாதொரு இணைப்புமில்லை... பிணக்குமில்லை. கேட்பதை உள்வாங்க  நேரமுமில்லை... போர் நிகழ்கிறது, காற்றின் ஈரப்பதம் கூட வற்றி தன்நிலை இழக்கிறது... நின்ற இடத்திலேயே  தலையுடன் காதையும் ஆட்டியபடி உடல் நடுங்க நின்றிருக்கும்  வயோதிக நாய் என்னென்ன  நினைத்துக் கொண்டிருக்குமோ அறியேன்... மனக்கண்ணில் ரொட்டிகளும், என்புத் துண்டுகளாக மிதக்கும்  காட்சி வரும் வரை அவ்விடத்தை விட்டு நகராமல் இருக்கும் என்பது  நிச்சயமாகையில்  அந்நாயும் நானும் சந்திக்கும்  புள்ளியிலிருந்து விலகி, எனைப் பரவசப்படுத்தும்  இசைக் கோர்வை ஒன்றுக்காக ஏங்கி நின்ற இடத்திலிருந்து  விலகாமல் காத்திருக்கும்  பொருளீட்டும் பெயரற்ற அறிவிலிக்கு என்ன பெயர்? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~  ஆதுர மொழிகள் தூவிப் பொழிந்து சிறிது, சிறிதாக உறைந்த நிலையை உருக்கலாமென எண்ணம் ஏற்றி வெவ்வேறு இடங்களுக்கு, வெவ்வேறு காலங்களில்  வெவ்வேறு எனது மனநிலைகளில் கைப்பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு அலைந்தேன்... உணவகங்கள், நடைபாதைகள், திரையரங்கம், பேருந்து நிறுத்தங்கள், கடலோரங்கள், ஆறுகள் என... ஏதோ ஓர் அற்பக் காரணத்தை முன்னிறுத்தி அதற்கு பின்பு உறுமும் புலியாய் பதுங்கிக் கிடந்து முகம் தூக்கி வைத்திருப்பவளை சமாதானங் கொள்ள எந்த ஆயுதமும்  சரியாய் செயற்படவில்லை... கொஞ்சங் கொஞ்சமாய்ச் சூடேறி சோற்றுலையின் கொதிநிலைக்கு  ஒவ்வொரு நாளாய் மெருகேறும் தங்கமாய் ஆகிறாள்... கை நிறைய கூழாங்கற்கள் நிரப்பி சறுக்கு மரத்தின் மேல் முனையில்  கடினப்பட்டு மேலேறி உருட்டி விட்டபின் கடகடத்து வழுக்கி இன்னும் மூளியாகும்  அவசரத்தோடு  தரை மேல் சிதறும் ஒலியால் குலைந்த அவளை ஆற்றுப்படுத்திப் புன்னகைக்க  செய்தது குழந்தைகள் விளையாடும் பூங்கா ஒன்றில்தான் என்பதை நினைவு கூர்கிறேன். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  இப்படி பல்லாயிரக்கணக்கான நவீன கவிதைகளை எழுதி இந்த காலத்தில் இவருக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு நவீன இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு உலகத்தரம் வாய்ந்த எழுத்தாளர் இவர் என்பது இவரின் எழுத்துக்களே சொல்லும்...  இந்த இரசனையான எழுத்துக்களின் முன் பிரம்மித்து நிற்கும் படைப்புக் குழுமம் கவிச்சுடர் வேதா நாயக் அவர்களை வாழ்த்தி வருங்கால இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்று அவரது எழுத்துக்கள் உலகெங்கும் பவனி வரவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறது !!  வாழ்த்துக்கள் கவிச்சுடர் வேதா நாயக்  வளர்வோம் வளர்ப்போம், படைப்பு குழுமம்.

View

கவிச்சுடர் விருது

ஆண்டன் பெனி

கவிச்சுடர் ஆண்டன் பெனி  ஒரு அறிமுகம்
*************************************************************

படைப்பு எனும் இந்த முகநூல் குழுமம் தொடங்கிய நாட்களிருந்து ஒவ்வொரு படைப்பாளியும் தத்தம் பாணிகளில் எழுதி முத்திரை பதித்து வருவது கண்கூடு. அந்த வரிசையில் இந்த மாதம் கவிச்சுடர் பெறும் படைப்பாளி ஆண்டன் பெனி அவர்களைப் பற்றி படைப்பு குழுமத்தை ஆதரித்து வரும் படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்ய அவசியமில்லை என்றாலும் நாள்தோறும் இந்த குடும்பத்தில் இணைந்து வந்துகொண்டிருக்கின்ற புதிய படைப்பாளிகளின் கவனத்துக்காக ஒரு அறிமுகக்கட்டுரை அவசியமாகிறது.

கவிஞர் ஆண்டன் பெனி அவர்கள் தமிழ்நாடு அரசின் ஒரு உயர்பதவி வகிக்கும் ஒரு அதிகாரி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இவர் முக நூல் தவிர பற்பல வலைத்தள இலக்கிய ஏடுகளிலும் தமிழ் நாட்டின் பழம்பெரும் வார இதழ்களிலும் தொடர்ந்து கவிதைகள் படைத்து வருபவர். ஆண்டன் என்கிற மகனின் பெயரையும் பெனி என்கிற மகளின் பெயரையும் சேர்த்து ஆண்டன் பெனி என்கிற புனைப்பெயரில் தற்போது கவிதைகள் படைத்துவரும் இவரின் இயற்பெயர் திரு ரவிக்குமார். ஆண்டன் பெனி என்கிற புனைப்பெயர் தவிர இவர் முன்பு புதிய கோடங்கி என்றும் பட்டினத்தார் என்றும் புனைப்பெயர்களில் இவர் படைத்து வந்த பல கவிதைகள் இலக்கிய வலைத்தளங்களில் பிரபலமானவை.

படைப்பு குடும்பத்தில் மகளதிகாரம் என்கிற பரிசுப்போட்டி நடத்த காரணகர்த்தாவாக விளங்கியவர். இதுவே படைப்பு குழுமத்திகின் முதல் பரிசுப்போட்டியாகவும் இருந்தது. அந்த போட்டிக்கு பிறகு அவர் தொடர்ச்சியாக எழுதி வருகின்ற மகளதிகாரம் கவிதைத் தொடர் இன்று வலைத்தளங்களில் வைரலாகி வாட்சப் என்கிற அலைபேசி தொடர்பு குழுமங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெரிதாக பேசப் பட்டு வருகிறது என்பது எல்லோரும் அறிவர்.

படைப்பில் இவர் சமர்ப்பித்த கவிதைகளில் படைப்பாளி நண்பர்களுக்கு மிகவும் பரிச்சயமான மகளதிகாரக் கவிதைகள் பற்றி கூறும் முன்பு இவர் இயற்றிய மற்ற கவிதைகளைப் பற்றி முதலில் பார்ப்போம். பள்ளிப்பருவ நாட்களின் நினைவலைகளில் என்றென்றும் அசைபோட வைக்கும் முதல்காதல் பற்றி இவரின் ஒரு கவிதையை வாசிக்கும்போது படைப்பாளிகள் தங்களின் மலரும் நினைவுகளுக்கு சென்று வர செய்து விடும் இந்த கவிதையை பாருங்கள்:-

என் அறையெங்கும் இறைந்துகிடக்கிறாள்...
****************************************************************
ஊரிலிருந்து முத்துராசு
என் விலாசம் தேடி வந்திருந்தான்.
பள்ளியின் வேப்பங்கன்று
பெரிய மரமாக வளர்ந்துவிட்டதாம்.
பிரம்பெடுத்து ஓடஓட விரட்டிய
எட்டாம் வகுப்பு சார் போன வாரம்
சிறு விபத்தொன்றில்
படுத்த படுக்கையாகிவிட்டாராம்.
நன்கொடையில் புதிதாகக் கட்டப்பட்ட
மூன்றாம் வகுப்பு கட்டிடத்தின் கல்வெட்டில்
என் பெயரை முதல்ல போடவச்சதே இவன்தானாம்.
புதுப்புது சாரும் புதுப்புது டீச்சருமா
உள்ளூரிலேயே இருக்கும் அவனை
வேற்றாளாகப் பார்ப்பதாகவும்.
சிறுபிள்ளையின் குதூகலத்தில்
விடிய விடிய
அவனே கொண்டு வந்திருந்த
கருப்பட்டி மிட்டாய் தீரும்வரை பேசியவன்,
ஒரு நீளப் பெருமூச்சில் தன்னை
ஆசுவாசப்படுத்திக்கொண்டு...
அவனோட முத்துமாரி வாக்கப்பட்டுப்போன இடத்தில்
வாழப்பிடிக்காம வந்துவிட்டதாகச் சொன்னபோது
கண்கலங்கியிருந்தான்.
ஊருக்குத் திரும்பும் போது
சுற்றிலும் எச்சரிக்கையுடன் பார்த்துவிட்டு
சன்னமான குரலில்
ஒம் மல்லிகாதான் எங்கஇருக்கான்னு
இதுவரை தெரியலடா… எனச்சொல்லி
அழத்தெரியாத எனக்கு
என் நினைவெங்கும் மல்லிகாவை
இறைத்துவிட்டுப் போயிருந்தான்.

மானிடர் மத்தியில் நித்தம் செத்துக் கொண்டிருக்கும் மனிதம்...நான் எனது என்கிற சுயநலம் பொங்கி நிற்கும் இந்த காலத்துக்கேற்ற ஒரு கவிதையை ஒரு விபத்தில் இறக்கும் நாயின் அவல நிகழ்வாக சித்தரிக்கும் இவரின் கவிதை சுயநல மனிதர்கள் முகத்தில் வீசப்படும் ஒரு அமில வீச்சாய் வந்து தெறிக்கிறது:-

பூத்துக் குலுங்கும் யோசனை மரங்கள்
**************************************************************
வாகனம் ஒன்றில் அடிபட்டு
நாயொன்று துடிதுடித்தது.
அடையாளம் தெரிந்தும்
அடிபட்ட நாயால்
மோதிய வாகனத்தை
அடையாளம் காட்ட முடியவில்லை.
நாயின் வலிமிகுந்த
குரைத்தல் கேட்டு
நாய்களின் பெருங்கூட்டம் கூடிற்று.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக
குரைக்கத் துவங்கின.
முதலில் குரைத்த நாய்
மோதிய வாகனத்தின் எண் கேட்டது.
இன்னொன்று போக்குவரத்தைக் குறை கூறியது.
மற்றொன்று பார்த்து வந்திருக்கலாமே என்று யோசனை சொன்னது.
வேறொன்று முன்னம் நடந்த
இதுபோன்றதொரு விபத்தை விவரித்தது.
மீத நாய்களெல்லாம்
புதிதாக என்ன சொல்லலாம் என்று
யோசனையில் இருந்த நிலையில் தான்
அடிப்பட்ட நாயின் உயிர் பிரிந்தது.
அது தெரிந்ததும் உடன் கலையத் தொடங்கின
எதெற்காகவோ கூடின நாய்களெல்லாம்...
அவைகளுக்குத்தான் வேலையுமில்லை,
நிற்க நேரமுமில்லையே.

சமுதாய அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மனிதனை கதாநாயகனாக சித்தரிக்கும் இந்தியக் கலைகளின் வெளிப்பாடுகள் தமிழ் நாட்டுக்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் சூழல்களை நிர்ணயிப்பதே திரைப்பட மாயைகள்தாம் என்பது வரலாறு. அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதென்பது வெறும் இரண்டரை மணிநேர இருட்டில் காணும் கனவாகவே ஒரு சாதாரண குடிமகனுக்கு இன்றும் இருந்து வருகிறது என்பதை கீழே காணும் அருமையான கவிதை மூலம் சித்தரிக்கிறார்...

அநீதிக்கு எதிராக முத்துராசுடன் இப்படியாக நாமும்
************************************************************************
தவறவிட்ட பேருந்துக்கு
அடுத்த பேருந்து வரும் வரை
ஒரு குளிர்சாதன திரையரங்கில்
காத்திருப்பதென உத்தேசம் முத்துராசுவுக்கு.
விளக்கு அணைக்கப்பட்டதும் உள்ளுர் விளம்பரங்களின்
படையெடுப்பினைத் தொடர்ந்து
அகன்ற திரையொன்றில் சினிமா காட்டினார்கள்.
கதாநாயகனவன் இடைவேளை வரை
ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளையாக
உறவுகளோடும் கதாநாயகியோடும்
ஆடி ஓடிக்கழித்தான்.
ஒரு முக்கியத் திருப்பத்தில்
விளக்குகள் ஔிர்ந்ததும் இடைவேளை வந்தது.
கேண்டீனில்
காற்றுப் பொட்டலங்களில்
விதிக்கப்பட்டிருந்த விலைகளின்
அநீதியைத் தட்டிக்கேட்க முத்துராசு பொங்கியபோது
அப்போது யாரும் அவனுக்குத் துணை வரவில்லை.
கதாநாயகன் தன் வழக்கமாக,
இடைவேளைக்குப் பின்னரே
அநீதியைக் கண்டு பொங்கினான்.
கூடுதல் ஒலியமைப்பின் கதாநாயகனின்
அநீதிக்கெதிரான அதிரும் சத்தம் கேட்டதுமே
கேண்டீன் கதவுகள் மூடத்துவங்கின.
கதாநாயகன் துணையுடன்
கதவைத்திறந்து பார்த்த முத்துராசுவுக்கு
அந்தப் பயம் பிடித்திருந்தது.

அதே முத்துராசு என்கிற பெயரில் மற்றுமொரு சமூக அவலமான ஒதுக்கப்பட்ட சாதிகள் என்கிற பெயரில் ஆண்டாண்டுகாலமாக இழைக்கப்படும் அநீதிகளை ஒரு எளிய நிகழ்வுக் கவிதையாய் தருகிறார்...

மஞ்சளாற்றுத் துயரத்தில் முத்துராசு மகன்
*****************************************************************
காலஞ்சென்ற முத்துராசு மகன்
பள்ளியில் வாந்தியெடுத்துவிட்டதால்
வகுப்பாசிரியர் இரண்டு மாணவர்களின் துணையோடு
அவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.
என்னத்த தின்னு தொலைச்ச எடுபட்ட பயலே?
பாதியில் வீடுவந்த மகனை சின்னத்தாயி கடிந்தாள்.
‘ஸ்கூல் பாத்ரூம்ல ஒன்னுக்கு போனேம்மா
நாத்தம் கொடல பொறட்டிடுச்சி
நானென்ன செய்ய?’ என்ற மகனிடம் கேட்டாள்,
கழுவத்தான் வேண்டாம்,
பெஞ்ச மூத்துரத்துல
ஒரு போணி தண்ணி ஊத்துறதுக்கு,
உங்கப்பன் செத்தபின்னாடி
ஆளில்லையா அங்க?
---------------------------------------------------------
அறிஞர் அண்ணாவின் செவ்வாழை சிறுகதையை நினைவுபடுத்தும் உழைக்கும் வறியவன் உழைப்பால் விளையும் பலன்கள் அவன் குடும்பத்தை அடைவதில்லை என்கிற சமுதாய அவலத்தை வலிமிகு வரிகளால் விவரிக்கிறது கீழே காணும் பலூன்காரன் கவிதை:-

பலூன்காரனுக்கு மூன்று குழந்தைகள்
************************************************************
பலூன்கள் வலுவிழந்து
காற்று வெளியேறும் முன்னமே
வெடிக்க வைத்தும்,
நூலறுத்து பறக்கவிட்டும்,
தேய்த்து ஒலியெழுப்பியும்,
விளையாடிக் கொள்ளத்
தெரிந்திருக்கிறது குழந்தைகளுக்கு.
விற்பனையாகாது வீடு திரும்பும் பலூன்களுக்கு
உள்ளுக்குள் முட்டும் காற்றினை இறக்கிவிட்டு
சற்றே ஓய்ந்து கொள்ளத் தெரிவதில்லை.
பலூன் ஒன்றினைத் தொட்டுவிடத் தவிக்கும்
பலூன்காரன் குழந்தைகளின்
ஏக்கப் பெருமூச்சின் வெளி அழுத்தம் உணர்ந்ததுமே
ஒன்றிரண்டு பலூன்கள் இரவோடு இரவாக
வெடித்துச் சிதறி தாங்களாகவே
மாய்த்துக் கொள்கின்றன.
காலையில் உடைந்துகிடக்கும்
பலூன் சதையில் சிறுமுட்டை செய்து
தலைக்குப் பதில் நெற்றியில்
விதியென அடித்துக் கொள்கிறார்கள்
அவன் குழந்தைகள்.

--------------------------------------------------

புவியெங்கும் பெண்மையின் பெருமை எழுத்துக்களில் மட்டுமே பெரிதாக பேசப்படுகின்ற இந்தக் காலத்தில்தான் மிருக வெறி பிடித்த காமுகர்களின் வன்புணர்வுக் கொடுமைகளும் பொது இடங்களில் கூட கண்கூடாக நடக்கும் அவலங்களை ஒரு கவிதையாக கொடுத்திருக்கிறார் நமது கவிச்சுடர் :-

இருள்சூழ் வேட்டை
***************************
அவன் கொழுத்த செம்மறியாடு போலிருந்தான்
தன் ஆந்தைக் கண்களை வெளியெங்கும்
அகோரப் பசியின்பொருட்டு மேயவிட்டிருந்தான்
மேலாடையைத் திறந்துவிட்டு
காட்டெருமையின் திமிலையொத்த
தன் புஜங்களில் மூக்கணாங்கயிறாகத் தொங்கும்
தங்கச்செயினை வறண்டு கிடந்த அந்த இருளிலும்
வெளிச்சமிட்டிருந்தான்.
ஒரு முதிர்ந்த பூம்பூம் மாடாக அவன் தலை
நிலையில்லாது ஆடிக்கொண்டிருந்தது.
எச்சிலும் தீர்ந்தபின் குரல்வளையை
தண்ணீர்விட்டு நனைத்துக் கொண்டான்.
நீலகிரியின் மூடிய பனிமூட்டத்தை விலக்கி
வெளிப்படும் சருகுமான் போல்
இரயில் பெட்டிக்குள் ஒய்யாரமாக நுழைந்த அவள்
வேட்டைக்கு அவன் விரித்து வைத்திருந்த
முப்பின்னல் நரம்பு வலையை உணர்ந்ததும்
இரயில் பூச்சியாக தன்னைத் தானே சுற்றிக்கொண்டாள்.
கடவாயின் ஓரங்களில் வளர்ந்திருந்த
அவன் கோரைப்பற்கள்
வெகுநேரக் காத்திருப்புக்குப் பிறகே
உள்ளிழுத்துக் கொண்டன.

கவிச்சுடர் ஆண்டன் பெனி அவர்களின் மகளதிகாரக் கவிதைகள் பெருவாரியாகப் பாராட்டுக்களைக் குவித்துக் கொண்டிருக்கும் வேளையிலும் அவரது மகன் பற்றிய கவிதைகளும் வாசகர்களால் பாராட்டப்படுவது படைப்பு நண்பர்கள அறிந்ததே. அப்படி ஒரு மகன் கவிதையையும் கீழே தருகிறோம் :-

மகன் நிமித்தம்
***********************
மகன் என் தோள் மீதேறி
தன் இரு கைகளையும் தூக்கி நிற்கையில்..
வானத்தில் அவன் விரல் நுனித் தடம்..!
***
மகனுக்கு
தலை வாருவதைக் கூடத் தவிர்க்கிறேன்...
அவனுள் என்னைத் திணித்து விடாதிருக்க..!
***
என் தந்தையின் தவறுகள்
என நினைப்பதை
நான் மகனுக்குச் செய்யாமல் இருக்கிறேன்
ஒரு தந்தை மகனுக்காற்றும் உதவியாக.
***
மகனை நெஞ்சோடு
இருத்திப் பழகிய பின்
மருத்துவப் பரிசோதனை
தேவையற்றதாகிவிடுகிறது…
***
மழை நாட்களில்
குடும்பத்தையே
காகிதக் கப்பலில் ஏற்றி
வீட்டுக் கரையிலிருந்து
கை காட்டுகிறான் மகன்…

நாதியற்றுப் போன நம் நாட்டு நதிகளின் நிலைமையை பற்றி இவர் எழுதிய ஒரு கவிதையை அவர் முடித்து வைக்கும் வரிகள் வலி(மை)மிக்கவை:-

இப்படியாக வாழ்ந்தோடிய
என் ஞாபக நதியொன்றின்
நினைவுகளின் மீதும்
உருண்டு திரிகின்றன
வாகனங்களின் காற்றடித்த உருளைகள்
இப்போதும் மாதம் முப்போதும்.

மகளதிகாரக் கவிஞரின் மகளதிகாரத் தொடர் கவிதைகளின் சிலவரிகளை இங்கே மீண்டும் உங்களின் பார்வைக்காக சமர்ப்பிக்காவிட்டால் இந்த கட்டுரை முடிவுபெறாது:-

கண்ணாமூச்சி விளையாட்டில்
நான் அப்பா என்பதால்
தேடிக்கொண்டேயிருப்பேன்
அவள் மகள் என்பதால்
தானாகவே வந்து கண்படுவாள்.

ஒற்றைமணிக் கொலுசுதான்
மகள் விளையாட விளையாட
கோவில் பிரகாரமாகிவிடுகிறது
வீடு.

அப்பா எனக்கும்
தலைவாரிப் பூச்சூட்டிப்
பொட்டிட்டுப் போகிறாள்
அத் தருணத்திலிருந்து
நான் தாயுமானவன்.

என்ன பெயர் கொண்டு அழைத்தாலும்
திரும்பிப் பார்க்கிறாள்
அவளுக்கென்று வைத்தபெயரோ
அப்படியே இருக்கிறது.

கோபம் என்றால்
முட்டிக்குள் முகம் புதைத்து
மௌனமாகிறாள்
மகிழ்ச்சியென்றால்
கைகளுக்குள் முகம் புதைத்து
அமைதியாகிறாள்
இவ்வளவுதானே தியானம் என்பதும்.

ரயில் சாளரக் கம்பிகளில்
தொக்கி நிற்கும்
சாரல் மழைத்துளிகளை
மகள் சேகரிக்கத் துவங்குகியதும்
விரும்பிப் பெய்கிறது
ஒரு பெருமழை.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்… என்று துவங்கிய
இன்றைய கதையில் இருந்த ஒரு பொய்க்காக
குட்டி இளவரசி கோபத்தில் இருக்கிறாள்.
ஒரு நாட்டுல ஒரு ராஜா எனத்திருத்தம் செய்து
அவள் கோபம் குறையக் காத்திருக்கிறேன்.

அவள் காலடித் தடங்களைக்
கவர்ந்து செல்லவே
பெய்யத் துவங்குகிறது
மீண்டுமொரு சாரல் மழை.

வீட்டில் பகல் முழுதும் ஒரு கலவரக்காரியின் ஆரவார நடைபோடும் மகளின் செல்லக் கலவரங்களை அடக்க முடியாத காவல்காரனாக திகழ்கிறார் இக்கவிஞர். விரல்நுனியில் மருந்து தேய்த்து அமுதமேந்தி வரும் பூமியில் பிறப்பெடுக்கும் மகளை ஒரு தேவதையாகப் பார்க்கும் இக்கவிஞரின் ஆளுமையை அடக்க பிரம்பேந்திய ஆசிரியையாக அந்தச் செல்ல மகள் வேடமிடுவதாக குற்றமும் சாட்டுகின்றார் இந்த அப்பா கவிஞர். அவரது வாரத்தில் மகளோடு விளையாடக் கிடைக்கும் ஞாயிறை எட்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று எண்ணிக்கையை கூட்டுகின்றார். சிரிப்பின் ரகசியங்களை தன்னோடு பகிர்ந்து கொள்ளும் மகள் தனது தேம்பலுக்கான காரணத்தை மட்டும் தன தோழிமூலம் அறிவிப்பது ஏனென்று தெரியாமல் திகைத்து நிற்கின்றார் தந்தையான இக்கவிஞர். மகளின் பிஞ்சுகால்தடங்கள் விட்டுச்செல்லும் முத்தத்துளிகளை குனித்து அள்ளும்போது சுட்டபழத்தையும் சுடாத பழத்தையும் அள்ளுகின்ற அவ்வைபிராட்டியாக மாறும் இந்த கவிஞரின் மகளதிகார முத்துக்கள் விரைவில் ஒரு தொகுப்பாக வெளிவரக் காத்திருக்கிறது.

இவருடைய தனித்தன்மை வாய்ந்த கவிநடையும் சொற்களின் சேர்மானமும் பல பாடுபொருள்களில் பல கவிஞர்களை மிரள வைத்துள்ளன... இவரது பல படைப்புகள் ஆனந்த விகடன் போன்ற பல முன்னனணி பத்திரிக்கைகளிலும் வெளிவந்திருப்பது இவர் கவித்துவத்திற்கு சான்றுகளாகும். மேலும் பாவலர் அறிவுமதி அவர்கள் தமிழ் மிக சிறந்த ஐம்பது கவிஞர்களின் கவிதைகளை தேர்வு செய்து வெளியிட்ட கவிதை நூலில் இவர் கவிதை இடம்பெற்றது இவரின் சாதனைகளின் ஒரு மகுடமும் மைல்கல்லுமே ஆகும்.

இவரது கவித்துவத்திற்கும் பாடுபொருளின் பார்வைக்கும் ஒரு படைப்பை பார்ப்போம்...

தனிமையின் இரவுகள்
*******************************
வெளிக்காற்றினை முற்றிலும் தடைசெய்த
குளிரூட்டப்பட்ட அறைக்குள்
வௌவால்களையொத்த திரைச்சீலைகள்
தலைகீழாகப் படபடக்கிறது.
ஒற்றைக்கண் ஆந்தையின்
ஔியூட்டப்பட்ட விழி
மஞ்சள் நிறத்தில் இரவுவிளக்காக
என்னை உற்றுநோக்கியபடியே இருக்கிறது.
கண்ணாடிகள் பூத்த
மேல்சுற்று அலங்கார வளைவுகளில்
வெளிமரங்களின்
நிழல் பாவைக்கூத்தில்
இராவண வதைப்படலங்கள்
காட்சியாகின்றன.
வனாந்திரத்தின் கோரக் காட்சிகளிலிருந்து
என்னை விடுவிக்க
தலையணைக்குள் முகம் புதைத்தால்
உன் விரகதாபத்தின்
சிற்றிழைகளின் வழிப்பாயும்
உயரழுத்த மின்சாரம்
இன்னுமாய் வதைக்கிறது.
உன்னிலிருந்து என்னை வலிய விடுவித்து
வனாந்திரத்திற்கே மீண்டும் வந்து
இரவுக்கே என்னைத் திண்ணக் கொடுக்கிறேன்
--------------------------------------

வெட்கச்சாட்டு திருமணச்சாரி என்று இவர்தம் கவிதைகளில் வெளிப்படும் புதுமையான சொற்களால் விளையாடியும் வாரத்துக்கு எட்டுநாட்கள் என்று எண்ணிக்கை கற்பித்தும் குட் நைட் என்பது ஆண்பால் என்றும் புதுமையான சிந்தனைகளையால் கவி புனையும் இக்கவிஞரின் எழுத்துப்பணிகள் மென்மேலும் வளர்ந்து பூத்துக் குலுங்க கவிச்சுடர் விருதினை அளித்து பெருமைப் படுவதில் பெருமிதம் கொள்கிறது படைப்புக் குழுமம்.

இந்த கம்பீரமான எழுத்துக்களின் முன் பிரம்மித்து நிற்கும் படைப்புக் குழுமம் கவிச்சுடர் ஆண்டன் பெனி அவர்கள் வருங்கால இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்று அவரது எழுத்துக்கள் உலகெங்கும் பவனி வரவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறது !!

வாழ்த்துக்கள் கவிச்சுடர் ஆண்டன் பெனி

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

Showing 701 - 720 of 727 ( for page 36 )