logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 721 - 727 of 727

Year
Award
   

கவிச்சுடர் விருது

  • அன்பில் பிரியன்

0   1167   0  
  • February 2017

கவிச்சுடர் விருது

  • அகதா செந்தில்குமார்

0   1114   0  
  • January 2017

மாதாந்திர பரிசு

  • நிஷா மன்சூர்

0   1301   0  
  • May 2016

மாதாந்திர பரிசு

  • முருக தீட்சண்யா

0   926   0  
  • May 2016

மாதாந்திர பரிசு

  • ஆனந்தி ராமகிருஷ்ணன்

0   920   0  
  • May 2016

மாதாந்திர பரிசு

  • சந்துரு

0   896   0  
  • May 2016

மாதாந்திர பரிசு

  • முருகன் சுந்தரபாண்டியன்

0   1198   0  
  • May 2016

கவிச்சுடர் விருது

அன்பில் பிரியன்

கவிச்சுடர் அன்பில் பிரியன்  ஒரு அறிமுகம்
********************************************************************
அன்பில் பிரியன் இவர் - சர்ப்பத்தின் காதலன் அல்லது சர்ப்பம் இவரின் காதலி என்று கூட சொல்லலாம். இவரின் கவிதைகளில் அதிக பட்சம் சர்ப்த்தையும் ஆதாம்,ஏவாளின் காதலையும் கொண்டாடி கொண்டிருக்கும்.

காதல்கவிதை,பொதுகவிதை என்று இரண்டு விதத்திலும் மிக அற்புதமாக கவிதை படைக்கும் திறன் மிக்கவர். இவரின் கவிதைகள் ஒளிதன்னை மிக்கவை போலவே உணரலாம் எளிதில் எல்லோரையுமே ஊடுருவும் சக்திக்கொண்டவை.

ஒரு நவீன ஓவியத்தை வார்த்தையில் அழகாக வரைய கூடியவர். சில நாட்களுக்கு முன்பு இவர் எழுதிய விலா எலும்பு கவிதை அத்தனை சிறப்பாக அமைத்திருந்தது. ஒரு நாள் காதல்,ஒரு நாள் சமூகமென்று இவரின் கவிதை மாறி மாறி பன்முகத்தையே சாயலாக உடுத்திஇருக்கிறது. இவர் நவம்பர் 2016ல் சிறந்த படைப்பாளி என்ற விருதை படைப்பு குழுமத்தில் பெற்று இருப்பது குறிப்பிட தக்கது.

படைப்பாளி அன்பில் பிரியன் செப் 29.1985ல் பிறந்தவர். வயது வைத்து பார்க்கும்போது இளமையாக தெரிந்தாலும் அவரின் எழுத்துக்கள் ஒரு வளர்ந்த / கைதேர்ந்த ஒரு கவிஞரின் எழுத்தாகவே இருக்கிறது.
இவரின் கவிதைகள் சிலவற்றை உங்கள் பார்வைக்காக மீண்டும் சமர்ப்பிக்கிறோம்:-

தன்னை கடந்து போகும் அத்தனை நிகழ்வுகளையும் எதார்ததனமான பார்வையில் வார்த்தையின் கடைசி ஆழம் வரை சென்று வடிக்கட்டி அதையும் மிக எளிமையாய் தொடுத்து எழுத கூடும் திறன் பெற்றவர். அப்படிப்பட்ட வீரியம் கலந்த கவிதை தான் இந்த ஒருசயனைடு குப்பியின் படைப்பு.

//
நெடுஞ்சாலையில் படிமமான நாயின்மேல்
உன் வாகனத்தை ஏற்றாதே
லொள் லொள் என குரைத்துவிட்டு
மறுபடியும் துயில போகும்

பிளாட்பார்மில் மரித்தவனின் உதட்டில் மொய்க்கின்ற ஈக்கள் மாறி அமர்கையில்
மெல்லியதாய் புன்னகைக்கும்
அந்த முகத்தினை பாரேன்

ஞாயிறு கசாப்பு கடை ஆட்டின் கண்கள்
என் பூச்செடிஒயர்கூடையின்
பசுமையையே பார்க்கிறது
அது மேய்வதற்குள் கறிக்கடையிலிருந்து
திங்கட்கிழமைக்குள் நகர்ந்துவிட வேண்டும்

ஆதிக்கத்தால் குதறப்பட்ட யுவதியின்
கசியும் யோனியை ஒரு முனையால் மூடி
மறுமுனையால் மார்பை மறைக்க பார்க்கிறது
விசும்பும் துப்பட்டா

ஆன்மா ஓய்ந்த பின்னும்
ஏதோ ஒன்றினால் மெய்யில் இயக்கம்
நிகழ்கிறதா என்ன

சாம்பல் தடவுகையில் உம்மென இருந்து
கொதிக்கும்சட்டிக்குள் வந்தவுடன் துள்ளும்
விறால் மீன்
என் நாவினில் கரைவதை பார்க்கிறாய்

சில நொடிகளுக்கு முன்
இதில் கரைந்த சயனைடு குப்பியை
உனக்கு தெரியாதுதானே..
//

ஒரு விலா எலும்பைஉருவி ஒலிஅதிர படைக்கப்பட்ட அற்புத கவிதை. மொழியே நினைத்தாலும் இவரிடம் இருந்து கவிதை திறமையை பிரிக்க முடியாது என சவால் விடுவது போல் இருக்கிறது.

//
என் விலா எலும்புகளிலிருந்து
உனை உருவுகையில் எழும்பிய
சுருக்கென்ற
வலி
நீள்கிறது
நீளட்டும்
அவ்வலியை சுகிக்கதானே
நாம்
கருஈரம் சொட்டும்
பிறந்த கன்றுகுட்டிகளாக
காத்திருந்தோம்
பால்வீதியின் கருவறைக்குள்
மாம்ச ருசியே
உயிரின் இலைகளின் மேல்
நீ சொட்டுகையில்
உன் பச்சை கவிச்சி
நாசியில் தெறிக்கும்
வாசனை திரவியமாகி
நுரையீரல் கிளைக்களுக்குள்
கிறக்கமாய் சுழல்கிறது
என் நிணநீர் நிரப்பிய
உன் எலும்புமஜ்ஜை குழிகளை
முத்தங்களின் கோழை
பசையாகி மூடுகிறது
பௌர்ணமியின் வசியமிடும் மஞ்சள்
பளபள சாக்லெட் கவராக
ஒரே நேரத்தில்
நம் இதயங்களை சுற்றுகையில்
கெட்டிய தேன் தித்திப்பாய்
நமை நாமே சுவைத்துகொண்டோம்
நீ கண்மூடும் வேளையில்
கழுத்து நரம்புகளிலிருந்து
பெருகும் சூடான இரத்தமாய்
உன் கண்களில் மேல் விழுவேன்
மறுகணமே நீ உயிர்த்தெழுந்து
உன் நெஞ்சுஎலும்புக்குள்
தேவனால்கூட பிரிக்க முடியாதவாறு
எனை ஆணியாக்கி ஓங்கி அறைவாய்
பெருங்காதலின் ஒலி அதிர அதிர
//

மழை வந்ததும் கொட்டும் அருவியைப் போல
கை தட்டியதும் உடனே வரும் ஒரு ஓசையைப்போல
கேட்டவுடன் எழுதி தரும் இசைக்கு மெட்டுக்கு எழுதும் ஒரு பாட்டைப்போல
இவரின் கவிதையும் இப்போதைக்குரிய கால கட்டத்தில் சுடச்ச்சுட எழுதியிருக்கிறார் .

//
உள்ளே வைத்து தைக்கப்பட்ட
அறுவைச்சிகிச்சை கத்தரி
ஒவ்வொரு உறுப்பையும்
கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக்கொண்டு இருக்கலாம்
நதியை வன்புணர்ந்த
டெண்டரினுடைய குறியின் மேல்
நெளிவது என்ன
மணலலான புழுதானே?
மலையை விழுங்கும் கிரஷரினுடைய
கிட்னிகுழாயை அடைத்து கிழிக்கிறது
கூரிய ஜல்லிக்கல் ஒன்று
பிளாஸ்டிக் அரிசிகள்
தொண்டையில் நுழைகையில்
உருகி உருகி
தொண்டை தீயும் துர்வாடைக்கு
தட்டே தன் மூக்கை பொத்திக்கொள்கிறது
மலடான விளை நிலங்களில்
தோண்ட தோண்ட எழும்பும்
மண்டை ஒடுகளில்
குழந்தையின் மண்டை ஒடுகளுடைய
பற்களில் நிழலாடுவது எது
ஒரு வாய் சோற்றுக்கான தவிப்பா அல்லது
ஒரு குவளை நீருக்கான தாகமா?
வீசும் காற்றில்
முழுமையாய் விஷம் பரவி முடிவதற்குள்
முத்தங்களை மீதமாக்காதீர்கள்
நண்பர்களே
குறிப்பாக குழந்தைகளிடம்...
//

பறவையின் சிறகில் கவிதை பறப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல
அதுவும் நூறு பறவைகள் ஒரே நேரத்தில் கவிதைகளை சுமந்து பறக்கசெய்தால் மயிலிறகே ஆனாலும் எடை கூடினால்அச்சாணி முறிய தானே செய்யும் என்ற பழமொழிக்கு ஏற்ப இங்கு பறக்க விடுகிறார் ஒரு பறவையின் நினைவுக் கூட்டை

//
எல்லாவற்றின் மீதும்
அமர்ந்து அமர்ந்து சலித்த
நூறு பறவைகள்
ஒரே நேரத்தில்
என் மீது அமர்கின்றன
அமர்ந்திருந்த பறவைகள்
ஏதோ யோசனை வந்ததாய்
ஒரே நேரத்தில்
விர்ரென்று பறக்கையில்
கூடவே நானும் பறக்கிறேன்
அவற்றின் பாதநகங்களில்
என் சட்டையின்காலர் தொங்கியபடியே
இதை ஆச்சர்ய கண்களால்
பார்த்துகொண்டிருந்த உன் மீது
இப்போது
ஒரே நேரத்தில் அமர்கின்றன
வேறு நூறு பறவைகள்
அவசர அவசரமாய்
நீயும் சட்டையை கழற்ற பார்த்தாய்
தப்பிக்கலாமென்று நினைத்தாய்
ஐயோ பாவம்
ம் ம் உன் தலையை தாழ்த்து
மேகத்தின் மீது பட போகிறது...
//

//
ஒரு பறவையின் கனவில்
அப்படி என்னதான் இருக்கும்
சதா இதே யோசனைதான் எனக்கு
ஓடும்போதும்
தலைகீழான ஆசானத்தின்போதும்
கவிதை எழுதும்போதும்
கோல்ப் விளையாடும் போதும்
ஒரு ஜோக்கிற்கு சிரித்த உடனேயும்
போகத்தில் கிளர்ச்சியுறும்போதும்
ஏன்
ஒரு கனவுகாணும்போதும் கூட
சதா இதே யோசனைதான் எனக்கு
ஆழ் அமைதி ததும்பிய ஒரு இரவில்
துயிலில் ஆழ்ந்த
ஒரு பறவையினுடைய
கனவின் உள்ளே இறங்கி பின்னர்
மெதுவாகவே நடக்கிறேன்
பறவையின் உறக்கம் கலையாதபடி
பறவையின் கனவு
அவ்வளவு பெரிய வெளியாக
விரிந்து கொண்டே செல்கிறது
அது இதுவரை உதிர்த்த இறகுகளை
வழியேர பொறுக்கிக் கொண்டே
செல்கிறேன்
அது இதுவரை அமர்ந்த
கிளைகளின் நிழல்கள்
என் குறுக்கே வந்து
காற்றில் அசைந்தபடியே
நடனமாடுகின்றன
அது இதுவரை உண்டு எச்சமிட்டதில்
விருட்சமான மரங்களின் வேர்கள்
நான் நடக்க முடியாதவாறு
என் கால்களை பிரியமாய்
பின்னிக் கொள்கின்றன
அது இதுவரை கூடுகட்டி வசித்து பின்னர் வெட்டப்பட்ட
மரங்கள் தலைவிரிகோலமாய்
பறவையின் மடியில் படுத்தபடியே
அழுதுக் கொண்டிருக்கின்றன
அது இதுவரை ருசித்த வானம்தான்
கனவின் உள்ளேயும் வானமாய்
அது இதுவரை தொட்டு பார்க்க
ஆசைப்பட்ட முகில்கள் அதனோடு
காலாற நடந்தபடியே உலா போகின்றன
அது இதுவரை ருசித்த பழங்களின்
வாசனை என் நாசியை மூச்சடைய
வைக்கிறது
ஒரு பறவையின் கனவில்
அப்படி என்னதான் இல்லை
எல்லாமிருக்கும் பறவையின் கனவில் ஏதோ ஒன்று குறைகிறதென்று
உள்ளே கொண்டு சென்றேன்
ஒரு கூண்டை
பதற்றத்திலும் துயரத்திலும்
உடைந்து போன பறவை
வேகமாக தரையிறங்கியது
மின்சார கம்பிகளை நோக்கியபடி
அவ்வளவு வேகமாய்
தரையிறங்கிய பறவை
தலைகீழாக தொங்கி முடிகிறது.....
//

ஒரு சர்ப்பத்திடமிருந்து விஷம் இல்லாத கவிதையை எப்படி தேடுவது?
அல்லது நல்ல பாம்பு என பெயர் வைத்தாலும் விசமில்லாத சர்ப்பத்தை எங்கே தேடுவது?
என ஞான திருஷ்டிக்கள் பற்றி நாம் ஆராய்ந்து கொண்டிருந்தாலும் அந்த பாம்பையே(சர்ப்பத்தையே) காதலித்து கவிதை மூலமாக அன்பு செலுத்தும் படைப்பாளி அன்பில் பிரியனைக் கண்டு வியப்பின் உச்சத்திற்கே சென்று விட்டோம்.

//
சர்ப்ப கவிதை :
---------------------
கனவிற்குள் வந்த பிராய்டிடம்
நாற்கலியையும்
கோப்பை தேநீரையும் அளித்து
கனவையும் சர்ப்பத்தையும் பற்றிய
சுவாரசிய உரையாடலை தொடங்குகிறேன்
என் அறைக்குள் ரகசியமாய் புகுந்து
சதைபொந்தான என் காதிற்குள் நுழைகிறது
சினையுற்ற சர்ப்பமொன்று
சட்டென பிராய்டு ஏதோ அசம்பாவிதம்
நிகழ்வுற்றதை அறிந்து
நீ இக்கனவிலிருந்து வெளியேறு வெளியேறு
நனவிற்குள் போ என
என்னை அவசரப்படுத்துகிறார்
விழிகள் திறந்து நனவிற்குள்
நான் வருவதற்கும்
அச்சர்ப்பத்தின் வாலின் நுனி
என் காதினுள் முழுமையாய் மறைவதற்கும்
சரியாக இருந்தது
அவ்வளவுதான் அன்றிலிருந்து
அச்சர்ப்பம் எங்கேதான் இருக்கிறதென
எங்கேதான் போனதென
கண்டறியவே முடியவில்லை
எதேச்சையாக ஒரு நாள்
கண்ணாடியில் தலைசீவுகையில்
மூக்கினுள்ளேயிருந்து
ஒரு நாக்கு எட்டி பார்த்தபோதுதான் தெரிந்தது
சர்ப்பம் என் மூக்கிற்கு அருகிலிருந்தது
புணர்ச்சியின்போது என்னுள்ளிருந்து
உஸ் உஸ் சத்தம் கேட்கிறதென
என் காதலி நடுங்கும் குரலால் சொன்னதுபோனதுதான்
உள்ளிருக்கும் சர்ப்பம்
காமத்தால் நிரம்பியிருந்ததை அறிந்தேன்
ஓர் அடைமழைஇரவில்
முட்டைகள் உடையும் சத்தம் கேட்டு
பயத்தோடு கண்விழித்தேன்
ஆம் சினையுற்ற சர்ப்பத்திலிருந்து
சின்னஞ்சிறு பாம்புகுட்டிகள் வெளியேறி
குருதியில் தத்திதத்தி நெளிகின்றன
புழுக்கம் பிசுபிசுக்கும் ஒரு நிசியில்
தெருவில் யாரோ ஒரு நாடோடியின்
மகுடியொசை கேட்கிறது
என் காதின் வழியே பொத் பொத்தென
தரையில் விழுந்து வெளியேறும்
தாய்சர்ப்பத்தையும் அதன் குட்டிகளையும்
பின்தொடர்ந்து போகிறேன்
மகுடிஒசையின் பின்னாலே போகும்
அச்சர்ப்பத்தையும் குட்டிகளையும்
திருப்பி திருப்பி பார்க்கும்
நாடோடியின் முகத்தை
வெளிச்சத்தில் பார்க்கிறேன்
தலையை ஆட்டியபடியே
மகுடியை ஊதிக்கொண்டிருந்தார்
பிராய்டு நாடோடியாக
//

சர்ப்ப கவிதை பல எழுதி இருந்தாலும் ஒரு கவிதை மட்டுமே இப்போது உங்கள் பார்வைக்கு. மேலும் சர்ப்ப கவிதை பற்றி படிக்க விரும்பினால் சர்ப்ப கவிதை என படிப்பதில் தேடினால் அவர் எழுதிய அனைத்து சர்ப்ப கவிதைகளும் கிடைக்கும்.

//
கனவில் இருக்கிறேன்
நீ அழைக்கவே இல்லைதான்
ஆனாலும்
நீதான் அழைக்கிறாயென
இமைகள் திறக்கிறேன்
//

ஒரு கனவு மீன் தூண்டிலில் முனையில் மாட்டி தவிப்பதாய் அத்தனை தவிப்பு.
நீ தான் அழைக்கவேயில்லை ஆனாலும் தூண்டில் முள்ளில் சிக்கி உன் விரல் இடுக்கில் சாவது என்பது அத்தனை பெரும் வருமென்று நினைக்க சொல்லும் இக்கவிதை நீர் அற்ற குளத்தில் புதையல் இருப்பதாய் புரிந்துக் கொள்ள கூடும் .

காதலுக்கு மிக எளிமையான எடுத்துக் காட்டை கொடுத்து விட்ட்டார்.

//
கண்ணீருடன் முத்தமிட்டு கொள்ளும்
மீன்களின் மிருதுவம்
எனது காதல்
//

ஒரு விரிசலில் பூப்பூக்கும் நினைவு தளிர் ஆயிரம் காடுகளை பிரசவித்து விடக்கூடும்.தாக்கு பிடிக்க முடியாத நினைவுகள் விரிசலில் பரவுவது கவிதையின் அலாதி பிரியங்கள் .

உண்மையின் மௌனங்களை கவிதையில் வீசி கண்களை மூட விடாத எழுத்துக்கள் விரிசல்களின் நினைவு துளிர்கள் தான் .

//
எனது துயரம்
எல்லோரையும் இழந்துவிட்ட
ஒரு மரணவீட்டின் விரிசல்களில்
பூக்கும் பசுந்தளிர்கள்
//

இயற்கையில் தொடங்கி சமூகம் வரை தனக்கென ஒரு தனிப் பாணி வகுத்துக் கொண்டும், அதிலே மிகச்சிறப்பாக எழுதிக்கொண்டும் எழுத்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த அற்புதமான படைப்பாளிக்கு கவிச்சுடர் விருதளித்து பெருமை கொள்கிறது படைப்பு குழுமம்.

இந்த கம்பீரமான எழுத்துக்களின் முன் பிரம்மித்து நிற்கும் படைப்புக் குழுமம் கவிச்சுடர் அன்பில் பிரியன் அவர்கள் வருங்கால இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்று அவரது எழுத்துக்கள் உலகெங்கும் பவனி வரவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறது !!

வாழ்த்துக்கள் கவிச்சுடர் அன்பில் பிரியன்

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

கவிச்சுடர் விருது

அகதா செந்தில்குமார்

கவிச்சுடர் அகதா செந்தில்குமார்  ஒரு அறிமுகம்
********************************************************************

பெண்ணியம் பாடும் கவிதைகள் தமிழில் கணக்கற்றவை. ஒரு கவிதாயினி படைக்கும் கவிதைகள் பூவின் மணம் பரப்பிக்கொண்டும் கொலுசுச்சத்தம் ஏந்திக் கொண்டும் வாசிப்பவர் மனதில் சிலசமயங்களில் ஊடுருவலாம். ஆனால் புகையும் கரியும் எரிச்சலும் கண்ணீரும் மௌனமும் மனவலிகளையும் வெப்பமும் ஆட்கொள்ளும் பெண்மையை இந்த சமுதாயம் பாதுகாப்பு வேலியென பாவித்து அடைத்து வைத்திருக்கும் சமையலறை ஜன்னலினூடே விரிகின்ற உலக அவலங்களை கவிதைகளாய் ஒரு வளைக்கரம் படைக்கையில் அந்தப் படைப்பு பலசமயங்களில் வாசிப்பவர் மனதில் ஒரு இடிமின்னல் தாக்குதல் போலவும் இறங்கலாம். அந்தவகையில் கவிதாயினி அகதா செந்தில்குமார் நமது படைப்பு குழுமத்தில் படைத்துக் கொண்டிருக்கும் கவிதைகள் சக படைப்பாளிகளின் மனதிலும் வாசகர்கள் மனதிலும் ஒரு சிறப்பான இடம் பெற்றவை.

அரியலூரைச்சேர்ந்த கவிஞர் அகதா செந்தில்குமார் தற்போது பெரம்பலூரில் ஒரு கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். எளிய வரிகளில் படைக்கப்படும் கவிதைகள் இவரது தீர்க்கமான சமூகப் பார்வையை வெளிப்படுத்துகின்றன.

இப்போதெல்லாம் நவீனத்துவம் பின்நவீனத்துவம் என ஏதேதோ வகைமைகளை கொண்டு பல புது கவிதைகளை எழுதும் எழுத்தாளர்களுக்கு மத்தியில் மக்களின் வாழ்க்கை முறையையும் அதை சார்ந்த வாழ்வியல் முறையையும் எழுதும் ஆற்றல் மட்டுமல்லாது அது மக்களால் புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிய வார்த்தைகளை கொண்டு எழுதிவருவதில் முதன்மையானவராக இருக்கிறார்.

இவரின் கவிதைகள் சிலவற்றை உங்கள் பார்வைக்காக மீண்டும் சமர்ப்பிக்கிறோம்:-

பிறக்குமுன் தாயின் கருப்பையில் பாதுகாப்பாய் இருந்த காலம். பிறந்து வீழ்ந்தபின் சூது கவ்வும் இவ்வுலகில் பெண்மையின் ஏக்கத்தை பிரதிபலிக்க இதைவிட ஒரு அழகான கவிதை கிடைக்குமா ?

//
தட்டான்பூச்சிகளே பழக்கமானதால்
தேள்களை தெரிவுசெய்ய இயலவில்லை
விறகு வேலியே வழக்கமானதால்
சிறகு இருந்தும் பறக்கத்தெரியவில்லை
மீன்களை மட்டுமே சினேகம் கொண்டதால்
பாம்புகளைப் பகுத்தறியத் திராணியில்லை
கல்லூரும் தேரையாக மட்டுமே இருந்ததால்
வல்லூறு இதுவென வகை அறியவில்லை
ஏக்கமாக இருக்கிறதே
கருப்பைப்போல
இன்னோர் இருக்கைக்
கிடைக்காதா?
//

விழாக்காலமும் பெண்மைக்கு வலிமிகு காலம்தான். சுற்றியிருக்கும் மற்றவர்களுக்கு ஓயாத எந்திரமாய் உழைக்கும் பெண்மையின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு நெத்தியடிக் கவிதை...

//
பண்டிகைத்தேதியிலும்
ஓயா எந்திரங்கள்
திறமை இருந்தும்
கொலுபொம்மைகள்
குடும்ப பூஜையில்
கற்பூர வில்லைகள்
ஆயுதங்கள் எனினும்
சமூகப் பகடைக்காய்கள்
எனினும்
பெண்மை வெல்கவென்று
கூத்திடுவோமடா..
எந்திரபூஜை வாழ்த்துக்கள்
எங்களுக்கும்
//

பெண்மையை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என கவியின் வரிகளை மேடையில் மட்டும் பேசிக்கொண்டிருக்கும் இந்த சமுதாயச் சீர்கேடுகளை கவிஞரின் ஒரு சிறுகவிதை நார்நாராய் கிழிக்கிறது. பெண்மையின் தீராத வலியைச் சொல்லும் இக்கவிதையை பாருங்கள் :-

//
போட்டிக்கென
காளிவேஷம் போடுகையில்
அடிவயிற்று வலிகளை
யாரிடமும் சொல்லாமல்
அப்படியே மேடை ஏறியாச்சு
கோப்பையும்
வெற்றியோடு வாங்கியாச்சு
வாங்கி வந்த கோப்பையை
சாமி படத்தின் முன்பு வைக்க
மூன்று நாள் ஆகட்டுமென
அம்மா சொல்லியாச்சு
இன்னும் ஜெயிக்கவே
இல்லைன்னு
இப்போதான் புரிஞ்சுபோச்சு
//

சில கவிதைகளில் ஒரு சிறுதுளிக்கதைகள் போல கதாபாத்திரங்கள் நடமாடி உள்ளத்தைக் கவர்கின்றன. இவரது கவிதைகளில் வரும் சரவணா அண்ணனும் செல்வி அக்காவும் மிசஸ் குமாரும் நம் நாட்டின் அனைத்துத் தெருக்களிலும் நடமாடுகின்றனர். இன்னும் தலைவிரித்தாடும் சாதிக்கொடுமைகள் மற்றும் பெண்களை ஒரு போகப்பொருளாக மட்டும் காணும் ஆண்சார்பு சமூகத்தின் அவலங்களையும் சொல்லும் ஒரு தனிப் பாணிக் கவிதைகள் படைப்பதில் வல்லவர் படைப்பாளி அகதா அவர்கள்...

//
இருவரின் கைகளும்
வெட்டுப்பட்ட நிலையிலும்
சரவணா அண்ணா கையில்
செல்விஎன்றும்
செல்வி அக்காவின்
கையில் சரவணன்
என்று பச்சைக்குத்தியிருந்தது கண்டு
ஊரே உச்சுக்கொட்டி
கௌரவக் கொலை
என்றார்கள்
அவர்கள் காதல்
மேலும் கௌரவப்பட்டிருந்தது
//

இந்த வகை தொடர் கவிதைகள் ஒரு மிக பெரிய சமூக மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது அவர் எழுத்தே உலக அரங்கில் ஒலிக்க செய்யும் காலம் வெகு விரைவில்...

//
கூட்டுக்குடும்பத்தில்
தோசை ஊத்தி
சமையலறைக்கும்
ஹாலுக்கும்
ரன்னெடுத்த மிஸஸ் குமார்
வீட்டாரிடம் கேட்காத கேள்வி
ஒன்று உள்ளது
சமையல்காரி தேவை என்பதற்காக
ஊர்கூடி வாழ்த்த
தாலிகட்டும் கோலாகலத் திருமணம் எதற்கு?
//

தமிழ் மொழியின் இலக்கணத்தை காதல் இலக்கணத்தொடு கற்பிக்கும் ஒரு இளம் காதலர் உரையாடல் ஒரு அழகான கவிதையாய் தருகிறார்:-

//
நம் காதல் வினைத்தொகையே
முக்காலமும் பொருந்தும் என்றாய்
உம்மைத்தொகை விளக்கம் கேட்டால்
இராப்பகல் முத்தம் என்றாய்
அன்மொழித்தொகை
எதுவென்று கேட்டால்
அயல்வீட்டுக் கனிமொழியைப்
பொற்றொடி வந்தாள் என்று
புன்னகை பூக்கிறாய்
உவமைத்தொகை
எதுவென்றால்
நீயே சொல்
உன் பவளவாயால்
என்கிறாய்
பண்புத்தொகையையாவது
பண்பாக உரையென்றால்
போடி கருங்குதிரைஎன்று
பொய்கோபம் கொண்டாய்
//

சம்பிரதாயங்களும் சடங்குகளும் மனிதத்தை வளர்க்கவில்லை எனில் அவைகள் பொய்த்துவிடும் என்னும் நிதர்சனத்தை ஒரு குடும்பத் தலைவியின் எளிய வரிகளில் படைக்கப் பட்டிருக்கும் இந்த கவிதை எவ்வளவு பெரிய வினாவை நம்முள் எழுப்ப வல்ல ஒரு கனமான படைப்பு என்பதை கவனியுங்கள் :-

//
அமாவாசைக்கும்
ஆயுத பூஜைக்கும்
பேசாத சாமிப்படங்களூடு இருக்கும்
அப்பெரியவர் படத்திற்கும்
தவறாமல் படைக்கப்பட்டது
பொறி,சுண்டல்,பலகாரங்கள்
அம்மா தாயே என்று
வீட்டு வாசலில் இரந்து நின்ற
பெரியவருக்கு
சாமி கும்பிட்டதும் வா
என்ற பதிலும் பகிரப்பட்டது
படத்திலிருக்கும் பெரியவரும்
பலகாரங்கள் சாப்பிடவில்லை
சென்ற பெரியவரும் வரவில்லை
வெறிச்சோடியிருக்கிறது மனங்களும்
படைத்த பலகாரங்களைப் போலவே
//

பெரும் மேடையிட்டு மணிக்கணக்கில் பேசப் படும் பெண்மையின் வேதனைகளை கவிதாயினி அகதாவின் அடுக்களையிலே என்கிற இரு கவிதைகள் சவுக்கடிபோல் சமுதாயத்தின் மனசாட்சியை தட்டி எழுப்புகிறது:-

அடுக்களையிலே
------------------------------
வெங்காயத்தை உரிக்கும்போது
துச்சாதனனிடம்
நான் சூட்சுமம்
கேட்டுக்கொள்வேன்
பாவம் வெங்காயத்தைக்
காப்பாற்றத்தான்
எந்த கண்ணனும் இல்லை

எல்லா வேலைகளையும் முடித்து அப்பாடா! என்று அமர்கையில்
எனக்காக மூன்றுமுறை பெருமூச்சு விட்டது குக்கர்
*தசாவதானிகளுக்கு
சவால் விடுகிறேன்
உங்களால் ஒரே நேரத்தில்
பத்து வேலைகளை மட்டுமே இயலும்
எங்களால் நூறு வேலைகள் இயலும்
அகராதிகளே
இன்றிலிருந்துபெண்கள்
என்னும் சொல்லை
சதாவதானிகள்என்க

*அடியே! என்ற சொல்லிற்கு
அப்படியே விட்டுவிட்டு ஓடினால்
வாளி இங்கு நிற்பதில்லை
தோசையல்லவா கருகிவிடும்

அடுக்களையிலே 2
--------------------------------
*சொத்தைப் பிஞ்சு
கத்தரிக்காய்கள்
டாஸ்மாக் வாசலில்
மாணவர் முகங்கள்

*முட்டைக்கோஸை தோலுரிக்கையில்
நாத்தி மற்றவரிடம் தோலுரித்தாள்
அண்ணிக்கு காய் நறுக்கத் தெரியல
*எண்ணெய் தெறித்த
கைவடுக்கள்
வலி தெரியாமல் வளர்த்த
பிறந்த வீட்டை
நினைவுபடுத்த தவறவில்லை

*கைகள் சுட்டு
ஆத்தி ஆத்தி
ஊதி ஊதி
அவசரமாய் கைகளில்
தந்த தேநீரை
வேண்டாம் என்பதும்
ஓங்கி கன்னத்தில்
அறைவதும்
ஒன்றுதான்
//

இல்லற வாழ்வில் தலைவி என்கிற பெயரிட்டு ஏட்டுமொழிகள் மொழியினும் வீட்டுக்குள் பெண்மையின் போராட்டத்துக்கு விடிவுகாலம் வந்துள்ளதா ?
இந்தக்கால ராமன்களும் கோவலன்களும் சிந்தித்திட ஒரு அருமையான கவிதை :-

//
நஞ்சு தீர்ந்ததா
அந்த நாக்கில்
கொத்தித் தீர்த்து
குதறிய பின்பு
சொல்லின் ரணம்
ஆறிடுமோ?
கல்லில் பதித்தது
கரைந்திடுமோ?
மென்மையின் கதவம்
நாப்பிழம்பால் எரிந்தது
கண்மைகள் கதறிய பின்பு
பெண்மைக்கு என்ன வேலை
கண்ணகிபோல் எரிக்கவா முடியும்
சீதைபோல் குளிக்கவா முடியும்
கண்ணீரில் குளித்தது போதும்
இனியாவது
தீப்பிழம்பாய் நடந்திடடி
//

மணமானபின் காதல் எங்கு பறந்து சென்று விடுகிறது ? வீட்டுக்கு வீடு புலம்பும் பெண்மை :-

//
அடுப்படி வந்து
இடுப்பு கிள்ளினாய்
வேலைக்கு இடையில்
அலைபேசியில்
ஐ லவ் யூ சொன்னாய்
வீடு திரும்பும் முன்னே
சமைத்தும் வைத்தாய்
கடைகளுக்கு அழைத்துச்சென்று
புடவைகள் பரிசளித்தாய்
நான் கேட்டு அடம்பிடித்த
அந்தக் கரடிபொம்மையைக்
கடைக்காரனிடம் விலைபேசியபோது
...
...
...
காலிங்பெல் சத்தம்கேட்டு
கதவு திறந்தேன்
கதவைக்கூடத் திறக்காமல்
அப்படி என்ன
அந்த திரைப்படப் பாடலில்
உள்ளதென்றாய்?
வழக்கம்போலவே
வாயைத் திறக்காமல்
தோசை வார்க்க
அடுப்படி சென்றுவிட்டேன்
//

அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான பாசமும் நேசமும் எத்தனை காலமாகினும் வற்றாத நீரொழுக்காய் மனதில் மறையாத மாயம்தனை
பேச்சுத் தமிழிலேயே ஒரு ஒவியமாக்குகிறது இந்த கவிதை :-

//
ஊசிவந்து குத்தையிலே
அலறிநானும் கத்தையிலே
உன் தோள்பட்ட ஆதரவ
எந்த வார்த்தையில நான் எழுத
மாதாந்திர வலிக்கு
கொக்கிப்புழுவா நான் துடிக்க
அறிவியல் கத சொல்லி
தலகோதி தெம்பு சொல்வ
தீட்டுன்னு யார் சொன்னாலும்
திட்டு திட்டுன்னு திட்டிடுவ
பிரசவ வேதனையில் நான் கதற
தனியாத்தான் நீ அழுத
எனக்கு மட்டும் கையழுத்தி
தெளிவு சொன்ன
இத்தன வருசம் கழிச்சு
காய்ச்சலுக்கு ஊசிபோட
தனியாத்தான் போயிருந்தேன்
தைரியத்த நீ கொடுத்த
புருசன்தான் வரட்டுமே
புள்ளதான் வரட்டுமே
ஊசி குத்தும்போது கத்தையிலே
உன்பேர சொல்லி
யப்பான்னுதான் கத்தினேன்
----------------------------------------------

வளைத்தொடித்த வரிகளில்லை ; அகராதி தேட வைக்கும் சொற்களில்லை: ஆனால் படைப்பாளி அகதா அவர்களின் ஒவ்வொரு கவிதையும் பெண்மையின் மென்மையான எளிய சொற்கள் ஏந்திவரும் கனமான படைப்புக்கள். தனக்கென ஒரு தனிப் பாணி வகுத்துக் கொண்டும் எழுத்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த அற்புதமான படைப்பாளிக்கு கவிச்சுடர் விருதளித்து பெருமை கொள்கிறது படைப்பு குழுமம்.

இந்த கம்பீரமான எழுத்துக்களின் முன் பிரம்மித்து நிற்கும் படைப்புக் குழுமம் கவிச்சுடர் அகதா அவர்கள் வருங்கால இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்று அவரது எழுத்துக்கள் உலகெங்கும் பவனி வரவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறது !!

வாழ்த்துக்கள் கவிச்சுடர் அகதா செந்தில்குமார்

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

View

மாதாந்திர பரிசு

நிஷா மன்சூர்

View

மாதாந்திர பரிசு

முருக தீட்சண்யா

View

மாதாந்திர பரிசு

ஆனந்தி ராமகிருஷ்ணன்

View

மாதாந்திர பரிசு

முருகன் சுந்தரபாண்டியன்

View

Showing 721 - 727 of 727 ( for page 37 )