logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 561 - 580 of 727

Year
Award
   

மாதாந்திர பரிசு

  • முனைவர் வே. புகழேந்தி

0   1050   0  
  • June 2019

மாதாந்திர பரிசு

  • சத்யா தமிழச்சி மருதாணி

0   917   0  
  • June 2019

கவிச்சுடர் விருது

  • தனபால் பவானி

0   1092   0  
  • June 2019

மாதாந்திர பரிசு

  • ஷாலுமதி சுரேஷ்

0   1376   0  
  • May 2019

மாதாந்திர பரிசு

  • சோ. நளாயினி

1   1171   0  
  • May 2019

மாதாந்திர பரிசு

  • கதிர்

0   1172   0  
  • May 2019

மாதாந்திர பரிசு

  • கி. கவியரசன்

0   910   0  
  • May 2019

மாதாந்திர பரிசு

  • வட்டூர் அ.கு ரமேஷ்

0   1111   0  
  • May 2019

கவிச்சுடர் விருது

  • ரா.ராஜசேகர்

0   1196   0  
  • May 2019

மாதாந்திர பரிசு

  • சிராப்பள்ளி ப மாதேவன்

0   878   0  
  • April 2019

மாதாந்திர பரிசு

  • கவின் முருகு

0   1237   0  
  • April 2019

மாதாந்திர பரிசு

  • யாழ்ஜீவி

0   965   0  
  • April 2019

மாதாந்திர பரிசு

  • மு.பே சத்திய நேசன்

0   1311   0  
  • April 2019

மாதாந்திர பரிசு

  • கு ப சிவபாலன்

0   1541   0  
  • April 2019

கவிச்சுடர் விருது

  • சிவக்குமார்

0   1031   0  
  • April 2019

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

  • முதல் பரிசு - கார்த்தி

0   1428   0  
  • March 2019

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

  • இரண்டாம் பரிசு - நிலாகண்ணன்

0   939   0  
  • March 2019

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

  • இரண்டாம் பரிசு - மதுசூதன். எஸ்

0   917   0  
  • March 2019

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

  • மூன்றாம் பரிசு - குமரேசன் கிருஷ்ணன்

0   856   0  
  • March 2019

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

  • மூன்றாம் பரிசு - ஜி.சிவக்குமார்

0   1013   0  
  • March 2019

மாதாந்திர பரிசு

முனைவர் வே. புகழேந்தி

View

மாதாந்திர பரிசு

சத்யா தமிழச்சி மருதாணி

View

கவிச்சுடர் விருது

தனபால் பவானி

'ஆடுவது
தாயமென்றாலும் கூட 
மீண்டும் மீண்டும் வெட்டுப்பட்டு
சிறைக்குள் சிக்கிக்கொள்ள
சம்மதிக்கிறது மனது
மகளிடம் மட்டும்' 

- கவிஞர் தனபால் பவானி தன் எழுத்துகளால் நம்மை வசிகரிக்கிறார். 

ஒரு கவிஞன் படைப்புகளோடு பயணிக்கும் போது வார்த்தைகளையும் சேர்த்து சுவாசிக்கத் தொடங்குகிறான்... கவிஞர் தனபால் அவர்களின் வார்த்தைகள் ஆக்ஸிசன் நிறைந்து வெளியாகிறது.

இந்த ஜூன் மாதத்திற்கான கவிச்சுடர் விருதினைப்பெறும் கவிஞர் தனபால் பவானி அவர்கள் ஈரோடு அருகில் உள்ள பவானியை இருப்பிடமாக கொண்டவர். தன் ஊரின் மீது கொண்ட அதீத நேசத்தின் காரணமாகவே தனது பெயருக்கு அருகில் ஊரையும் சேர்த்துக்கொண்டவர். கவிதைகள் மட்டுமல்லாது கட்டுரைகள், பட மற்றும் புத்தக விமர்சனங்கள் என்று பல்வேறு தளங்களிலும் சிறப்பாக எழுதிவருகிறார்.

படைப்பு குழுமம் தொடங்கப்பட்ட ஆரம்பகாலம் முதல் தன்னை இதில் இணைத்துக்கொண்டு பல படைப்புகளை கொடுத்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாத சிறந்த படைப்பாளிகளுள் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். படைப்பின் மீதுகொண்ட அதீத ஈடுபாட்டின் காரணமாக தகவு மாத இணைய இதழில் நிருபர்கள் குழுவில் ஒருவராக இயங்கி பல்வேறு கவிஞர்களை நேர்காணல் செய்திருக்கிறார். 2018ஆம் ஆண்டு தகவு இதழின் சிறந்த பங்களிப்பாளருக்கான விருதும் வழங்கப்பட்டது.

ஆரம்பகாலங்களில் நாளிதழ்களின் இலவச இணைப்புகளில் வரும் சிறு சிறு கவிதைகளைப் படித்து கவிதைகளின் மீது வந்த ஆர்வத்தால் எழுதத் தொடங்கியவர், தான் அன்றாடம் பார்க்கும் காட்சிகளை, கவனிக்கும் விஷயங்களை, எளிய மனிதர்களின் வாழ்வை, சந்திக்கும் சமூகப்பிரச்சனைகளை கவிதைகளாக, கட்டுரைகளாக படைக்கிறார். விரைவில் தன் படைப்புகளை புத்தகங்களாக கொண்டுவர முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.

இனி அவரது படைப்புகளை திறனாய்வோம் வாருங்கள்:

முரட்டு காற்றொன்றின்  வழித்தடங்கள் பாதிப்பின் சுவடுகளாக மாறிவிடுகின்றன... அதனை எதிர்க்கொள்ளும் மூங்கில்காடு முறியும் நிலையிலும் காற்றை உள்வாங்கி வெளிவிடும் மெல்லிசையில் புல்லாங்குழலாகி இந்தக்கவிதை தன்னை சான்றுபடுத்திக்கொள்கிறது...

வழிதெரியாமல் வந்துவிட்ட
சூறைக்காற்று மூங்கில்
காட்டுக்குள் மூர்க்கமாய் நுழைகிறது

காற்றில்
மோதிக்கொள்ளும் சருகுகள்
பயத்தில் படபடக்கின்றன

வேர்களின் விசும்பல்கள்
காடெங்கும் கேட்கிறது

மெல்லிய கிளைகளோ
சட்டென முறிந்து விழுகின்றன

சிறகுகள் வலிக்க
எதிர்க்காற்றில் பறக்கின்றன
பட்டாம்பூச்சிகள்

துளை விழுந்த மூங்கிலுக்குள் 
நுழைந்த வேகமான காற்று 
தென்றலாய் மறுபுறம் வந்தபோது 
மூங்கில் மாறியிருந்தது 
புல்லாங்குழலாய்

----
வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் இடம் இருக்குமென்றால் அது நாம் ஆதியில் தங்கிவாழ்ந்த வீடாக மட்டுமே இருக்கமுடியும். .. அதற்குள்தான் நம் பிள்ளைப்பருவங்கள் இன்னமும் விளையாடிக்கொண்டிருக்கும்... அதன் சுவர்கள் நம் பிஞ்சு விரல்களை பதிவு செய்திருக்கும்... இவற்றை நினைவுக்கூறும் கவிஞர்.. அதிலுள்ள மனித வாழ்வின் அடிமட்ட சோதனையையும் எழுதுகிறார்.. சொந்தவீடு வாடகை வீடாக மாறும் அவஸ்த்தை அதில் வாழ்பவர்கள் மட்டுமே உணரமுடியும். காலம் சுழற்றும்  சூழ்ச்சியில் இடம் மாறி அழகிய வேறொரு சொந்த வீட்டிற்கு திரும்பும் கவிஞர் தன் பிள்ளைகளின் காலடிக்காக ஏங்குகிறார்....

ஆதியில் ஒரு வீடு இருந்தது
பாதியில் இறந்துபோன தாத்தாவின் வீடு
கொலுசுகள் சிணுங்க சிணுங்க
சொந்தங்கள் சிரிக்க சிரிக்க
எங்கள் பாதங்களால் நிறைந்த வீடு அது

கடன் வந்து பாதிவீட்டை 
தின்று செரிக்க
வட்டியும் முதலும் 
மீதிவீட்டை செரித்து ஏப்பம் விட்டது
சொந்த நாட்டில் அகதியும்
சொந்த வீட்டில் வாடகையும்
சொற்களால் சொல்லிவிட முடியாத வலி

மழைவந்தால் மண்சுவர் கரையும் ஓலைக்குடிசைக்குள்
கண்சிமிட்டும் சிம்னி விளக்கின் ஒளியில்
ஒழுகும் இடங்களில் 
பாத்திரங்களை வைத்துவிட்டு
தூக்கமிழந்து உறைந்து ஒடுங்கி நடுங்கிய இரவுகளிலும்
ஈரப்பாதங்களால் 
நிறைந்தே இருந்தது அந்த வீடு

காலப்பெருவெளி அடித்துவந்த வாழ்வில்
வெளியூரில் இருந்தபடியே 
கட்டிமுடிக்க நேர்ந்தது
அடுக்குமாடி வீடொன்றை

வழுக்கும் தரைகளைத் துடைத்தபடி
அப்பாவும் அம்மாவும் வாழுமந்த வீட்டில்
எப்போது நிறையும் எங்கள் பிள்ளைகளின் பாதங்கள்..?\

--------

பெண்களின் காலச் சூழலையும் கால மாற்றங்களையும் காணும் போது ஒரு வெறுமை அதில் நிரம்பியிருக்கும்.  தன் தாயை தமக்கைகளை பார்த்து வளர்ந்தக் கவிஞன் அவர்களைப் போன்றோரின் தன் ஊர்ப் பெண்களின் கால மாற்றத்தையும் கணக்கிட்டு வேதனைக்குள்ளாழும் இந்தக் கவிதை மிகவும் சிறப்பானது...

எப்போது கோலப்போட்டி வைத்தாலும் 
தெருவடைத்து போடும் ரங்கோலியால் 
புருவமுயர்த்த வைக்கும் தேவி 
இப்போது தன் இரண்டாவது மகளுக்கு
சோறூட்டியபடி வேடிக்கை மட்டும் பார்க்கிறாள் 

ஏற்றிக்கட்டிய பாவாடையோடு 
ஆற்றில் இறங்கினால் அரைமணி நேரம்கூட 
மூச்சடக்கும் ஆனந்தி ஒட்டிக்கொண்ட 
ஆஸ்துமாவால் அவதிப்படுகிறாள் 

ஊருக்கே தையல்கலை சொல்லிக்கொடுத்த 
கலைவாணி வாக்கப்பட்டுப்போன இடத்தில் 
சாராயவாடையோடு பீடியிலிருந்து கசியும் 
புகைக்கு நடுவே விறகடுப்பில் 
சமைத்துக்கொண்டிருக்கிறாள் 

தூரிகையெடுத்தால் 
ரவிவர்மனுக்கே சவால்விடும் காயத்ரி 
சாயம்போன அழுக்கு நைட்டியோடு
குடியிருக்கும் வீட்டின் மூலைமுடுக்கெல்லாம் 
ஒட்டடை அடித்துக்கொண்டிருக்கிறாள் 

இளவரசிகளாய்ப் பிறந்து 
ராணிகளாய் வளர்க்கப்பட்ட 
பெண்களின் இன்னொரு பக்கம் 
யாராலும் துடைத்துவிடமுடியாத 
கண்ணீர்துளிகளால் நிரம்பியே இருக்கிறது 

----
வெட்கத் துகள்களுக்குள் ஒளிந்து கிடக்கும் பூகம்பம் என்று காதலை வர்ணிக்கும் கவிஞன் அவளின் கண்கள் கொத்துவதால் காதல் விஷம் ஏறுவதாக சொல்லிவிட்டு சற்றென்று நெகிழ்ந்து அவளது அழகு சலனமற்ற நதியென்றும் அதன் உதடுகளில் கவிதை சிக்கி உடைவதாகக் கூறுவதும்... காதலின் இரண்டாம்கெட்ட நிலையை அழகாக வடித்திருக்கிறார் இந்தக் கவிதையில்....

உன் வெட்கத்தின் துகள்களுக்குள்
ஒளிந்துகிடக்கும் பூகம்பங்களை
சட்டெனக் கட்டவிழ்த்து
நொடியில் நிலைகுலைய வைக்கிறாய்

சட்டையுரித்த பாம்பென 
மினுமினுக்கும் உன்
கண்கள் கொத்துவதால்
உடம்பெங்கும் ஏறுகிறது
அமிர்தமும் விஷமும்

சலனமற்று பாயும் நதியாய்
உன் பேரழகின் 
கரையோரத்தில் பயணித்து 
உதடுகளின் சுழலில் 
சிக்கி உடைகின்றன என் கவிதைகள்

எல்லா மின்னல்களையும்
கண்களுக்குள் வைத்துக்கொண்டு 
மென்பார்வைகளென மொழிபெயர்க்கிறாய்

குடையற்ற பொழுதொன்றில்
பெய்யும் பெருமழையென 
அழகால் மொத்தமாய் நனைத்துவிட்ட உன்னிடம் 
வேறென்ன கேட்டுவிடப்போகிறேன்
முத்தங்களால் துவட்டிவிடு என்பதைத்தவிர...!

----
குற்றமே கொள்கையென வாழும் அரசாங்கத்திடம் நியாயங்களை எப்படி எதிர் பார்க்க முடியும்? மக்களின் விரோத மனப்பான்மைக்கு ஜன நாயகம் என்று பெயரிட்டால் காறித்துப்பத்தான் தோன்றும்.. இதுவும் கவிஞனின் கோபம்தான்....

உங்களிடம் இன்னும் 
லத்திகளும் துப்பாக்கிகளும் 
மீதமிருக்கின்றன அதையும் 
அப்பாவிகள் மீது பிரயோகியுங்கள் 

பள்ளிகளுக்கும் கோவிலுக்கும் 
அருகில் ஆட்சியரின் அனுமதியோடு
சாராயக்கடை திறப்புவிழா 
நடத்துங்கள்  

அம்மணமான விவசாயிகளிடம் 
முண்டாசுகள் அவிழாமல் இருக்கின்றன 
அதை பிடுங்க ஆயுதப்படையை அனுப்புங்கள் 

உரிமைக்காக போராடும் 
மாணவர்களின் மீது 
உங்கள் கையாலாகாத்தனத்தை 
கட்டவிழுங்கள் 

பெண்களிடமும் 
பெரியவர்களிடமும் 
வன்முறையை நிகழ்த்தி 
உங்கள் வீரத்தை 
மெச்சிக்கொள்ளுங்கள் 

இன்னும் வாகனங்களும் 
வாழ்க்கையும் மிச்சமிருக்கின்றன 
அதையும் தீயிட்டுக் கொளுத்துங்கள் 

இறுதியில் இழப்பீடென 
எதையாவது அறிவித்து அதையும் 
உங்கள் சட்டைப்பையில்
திணித்துக்கொள்ளுங்கள் 

விவசாயிகளை மதிக்காத நாட்டில் 
மக்களை மதிக்காத மாநிலத்தில் 
மனிதனாய் வாழ நாதியற்ற ஊரில் 

தமிழ் புத்தாண்டென்ன 
ஆங்கிலப் புத்தாண்டென்ன 
போங்கடா நீங்களும் 
உங்க ஜனநாயகமும் ...!

------
பிணிப்படர்ந்த சூழலில் தொல்லைத்தருவது பிணி மட்டுமில்லை அதனைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளும்தான். அதன் துன்பவியலை கவிதையாக வடித்திருப்பது கவிஞரின் சுவாரசியம்

மெல்லத் தொடங்கும் 
இருளின் அடர்த்திக்குள் 
கருமைகவ்விய அச்சமொன்று
படர்ந்து நிரம்புகிறது

ருசி கேட்கும் நாக்கில்
மீண்டும் மீண்டும் அப்பிக்கொள்கின்றன
ரசத்தின் புளிப்பும்
கொதிநீரின் வழவழப்பும்

படுக்கைக்கும் கழிவறைக்கும்
நீளும் பாதையில் 
தன் அத்தனை முகங்களையும்
காட்டிச் சிரிக்கிறது பிணி

புரண்டுபடுக்கும் தருணங்களில்
மூக்கிலேறி நினைவுகளுக்குள்
கசக்கிறது மாத்திரைகளின் நெடி

அருகிலிருப்பவர்களின் 
கனவுகளோடு சேர்த்து 
உறக்கத்தையும் கலைக்கிறது
இருமல் சத்தம் 

நோய் பூசிய இரவை கடப்பதென்பது
காதலி மடியில் தூங்கி விழிப்பதுபோல 
அத்தனை எளிதல்ல...!

-----
இசைக்குறிப்புகளால் காதலை இசைக்கும் அழகான கவிதையொன்று:

நீ மூச்சுவிடுகிறாய்
ஒரு புல்லாங்குழல் தன்னைத்தானே இசைத்துக்கொள்கிறது

ஒரு வீணை 
கசியவிடும் ஸ்வரங்களென
உனக்குள்ளிருந்து வெளிப்படுகிறது 
உன் வெட்கச்சிணுங்கல்கள்

கூந்தலுக்குள் சிக்கெடுக்கிறாய்
சிதறிவிழும் கவிதைகளில்
ஒளிந்து கிடக்கின்றன சில சிம்பொனிகள்

ஆர்மோனியத்தின் 
கருப்பு வெள்ளை கட்டைகள் 
உனக்கு விரல்களாய்
வாய்த்திருக்கின்றன

யாழொன்றை மீட்டிட 
நீளும் கைகளிலும் ஒட்டிக்கொள்ளும்
உன் மெளனத்தின் பேரழகு

ரசனைக்குறிப்புகளால் எழுதப்பட்ட பெண்களுக்கு நடுவே
இசைக்குறிப்புகளால்  
எழுதப்பட்ட கவிதை நீ

------
மகளிடம் தோற்று விளையாடுவதில் ஒரு சுகம் இருக்கிறது... அவள் உயர்வதற்காக குனியும் தகப்பன் மனசில் ஒரு அழகியல் கவிதை:

ஒவ்வொரு முறை
உருட்டும்போதும்
ஒற்றைப்புள்ளிக்காய் ஏங்குகிறாள் 

தாயம் விழுந்து ஆட்டம் தொடங்கியதும் 
விருத்தங்களைப் பற்றிக்கொண்டு 
கட்டங்களைத் தாண்டிப் பயணிக்கிறாள்

துரத்திவரும் என் காயிடம் வெட்டுப்படாமலிருக்க
லாவகமாய் மலையேறிவிடுகிறாள்

விருத்தம் விழுந்தும் அவளிடம்
வெட்டுப்பட வேண்டுமென்றே
உள்ளிருக்கும் காய்களை நகர்த்துகிறேன்

மூன்று போட்டு வெட்டி சிறைவைத்து 
வெட்டாட்டம் ஆடி வேகமாய் பயணித்து 
தன் காய்களை பழம் எடுக்கிறாள்

ஆடுவது
தாயமென்றாலும் கூட 
மீண்டும் மீண்டும் வெட்டுப்பட்டு
சிறைக்குள் சிக்கிக்கொள்ள
சம்மதிக்கிறது மனது
மகளிடம் மட்டும்

----------
கடவுள்களைத் தேடி  ஒரு மூட்டை கேள்விகளோடு பயணிக்கும் கவிஞன்... பல இடங்களில் அவரைக் கண்டும் காணாதக் கவிஞன் இறுதியாக ஒரு பூங்காவிற்குள் உறங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறான்.. அவரை எழுப்ப மனமில்லாமல் கேள்வி மூட்டையை அவரருகில் வைத்துவிட்டுச் செல்வது ஆயிரம் பொருட்களை உணர்த்தும் கவிதை...

ஒரு மூட்டை நிறைய
கேள்விகளைச் சுமந்தபடி
தெருவில் இறங்கி தேடத்தொடங்கினேன்
கடவுளை

தெருமுனையின் தேநீர்க் கடையில்
பூமாலைகளுக்குள் 
சிறு சிலையாய் இருந்தார் ஒரு கடவுள்

ஊதுபத்தி வாசனையில்
மிதந்தபடி புகைப்படத்தில்
தொங்கிக்கொண்டிருந்தார்
இன்னொரு கடவுள்

மரத்தடி நிழலில் மழுங்க மழுங்க
விழித்தபடி அமர்ந்திருந்தார்
புதிதாய் முளைத்த கடவுளொருவர்

என்னையே இழுத்துக்கொண்டுதானே
போகிறார்களென புலம்பிக்கொண்டிருந்தார்
தேரில் ஊர்வலம் போகுமொறு கடவுள்

கடவுளைத்தேடி களைத்துப்போன
கால்களுக்கு ஓய்வு கொடுக்க
பூங்கா ஒன்றுக்குள் நுழைந்தேன்

அங்கே பக்தர்களின்
வேண்டுதல்கள் நிறைந்த  
மூட்டையைச் சுமந்தபடி
ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார் ஒரு கடவுள்

கேள்விகள் நிரம்பிய 
என் மூட்டையை
அவர் பாதங்களில் வைத்துவிட்டு
திரும்பிவிட்டேன்....!!!

-------

கவிஞரின் அற்புதமான மேலும் சிறந்த சில கவிதைகள்....

கழுத்தறுத்த கத்தி
குரல் நெறித்த தூக்குகயிறு
முகம் சிதைத்த அமிலம்
தேகம் தின்ற தீ
உடலேறிய வாகனம்
பூவைக் கொன்ற காமம்
துரத்தி குத்திய கூர்வாளென
ரத்தத்தின் பிசுபிசுப்பை 
புசிக்கும் யாவற்றிற்கும் தெரியாது
அது பெண்களின் உயிரென்பது

ஆறாம் அறிவில் ஓட்டைவிழுந்த
மூளை துருப்பிடித்த
புத்திக்குள் சாத்தான்கள் புகுந்துகொண்ட
சொற்களால் திட்ட முடியாத
பாவிகளின் கொடூரத்தை 
பார்த்து பார்த்து 
கடந்து கடந்து இதயம்
கனத்துப் போகிறது

***

சொற்கள் நிறைந்த வனமொன்றில்
வழிதவறி வந்துவிட்ட 
ஊமை ஒருவன்

தூக்கிச் சுமக்கும்
மெளனத்தையெல்லாம் 
ஒரு புன்னகையின் வழியாகவோ
ஒரு கண்ணீரின் வழியாகவோ 
இறக்கி வைக்க எத்தனிக்கிறான்

கடக்கும் எதிலும் 
ஏதோவொன்றை தேடுகிறான்
கண்டெடுத்த எதிலும் 
ஏதோவொன்றை இழக்கிறான்

ஒரேநாள் பொழிந்த பெருமழையில் 
வாழ்நாள் வறட்சியை தணிக்கிறான்
ஈரம் சொட்டும் மிச்சங்களில்
வாழ்ந்து விட நினைக்கிறான்

சேர்த்து வைத்த வார்த்தைகளுக்கு 
சிறகுகள் முளைக்கும் முன்
அவள் வந்து விட பார்க்கிறான்
காத்திருக்கும் காலம் யாவையும்
அவள் காலடியில் வைக்கிறான்

***

ஊரறிய அடைகாத்தவள்
வயிற்றுக்குள் தொப்புள்கொடிசுற்றி 
தலைமேலாய் கால்கீழாய் 
கிடந்த என்னை 
இரு உயிருக்கும் ஆபத்து 
என்று சொல்லியும்
வலிபொறுக்கா விடியலொன்றில்
பெரும்பாடுபட்டு பிரசவித்தாள்

எட்டி எட்டி உதைத்த என்னை
இடப்பக்கம் கிடத்தினார்கள்
முக்கி முக்கி பெத்தவள் 
நான் பசியால் அழுததை 
அன்று மட்டும் ரசித்திருப்பாள்

பின்னாளில் வளர்ந்த எனக்கு
ஒரு நன்னாளில் யாருக்கும் தெரியாமல்
சிறகுகளை தந்தவள்
தான் பார்க்காத வானத்தையும்
சேர்த்தே தந்தாள்

கிழிக்கப்படாத நாட்காட்டியில்
மாறாத தேதியைப்போல
அவள்காட்டிய திசைநோக்கி பறக்கும்போதெல்லாம் 
என் சிறகுகளுக்குள் பத்திரமாகவே இருக்கிறது 
அவள் வானத்தோடு சேர்ந்த 
என் வானமும்

***

கோடுகளால் நிறைந்த 
வனமொன்றை வரைந்து 
அதன் நடுவே 
வீடொன்றையும் வரைந்து வைத்திருந்தாள் 
வைஷ்ணவி பாப்பா

உதித்து வரும் சூரியனும்
சிறு நதியில் கவிழ்ந்த 
காகித கப்பலொன்றும்
வாலாட்டியபடி நாய்க்குட்டியும்
குஞ்சுகளுக்கு இரையூட்டும் பறவையும்
தூண்டிலில் மீன் பிடிக்கும் அப்பாவுக்கு 
உதவும் அம்மாவுமென வரைந்துவிட்டு

"இதுதான் என் வீடு நல்லா இருக்கா?" 
எனக் கேட்கிறாள் வைசு
"நீ எங்கே?" எனக்கேட்டால்
"நான் தான் வரைஞ்சிக்கிட்டு இருக்கேனே" என்கிறாள்

நான் ஓவியத்தில் ஒரு புள்ளியாகிப்போகிறேன்

***

இத்தனை 
வருடங்களுக்குப் பிறகு
நீ வந்தபோது நெகிழ்ச்சியால்
நிரம்பியது என் வீடு

உள்நுழைகையில் 
நீ எந்தக்காலெடுத்து வைத்தாயோ தெரியாது 
என்கால்கள் தரையிலில்லாமல் 
இருந்ததை நீ பார்த்திருக்க மாட்டாய்

நீ குடித்துவிட்டு வைத்த பழச்சாற்றின் 
கடைசிச்சொட்டில் 
நூற்றுக்கணக்கான முத்தங்கள் மிதந்ததை 
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை

ஆட்டோகிராப் நோட்டில் 
அடைப்புக்குறிக்குள் நீ எழுதித்தந்த வார்த்தைகளை 
அதே வெட்கத்துடன்தான் இப்போதும் படித்தாய்

புரட்டிப்பார்த்த புகைப்பட தொகுப்பில் 
உன்படத்தில் கசிந்த நினைவுகளின் மேல்
புதுப்பிக்கிறாய் பழைய புன்னகையை

விடைபெற்று வீடுதிரும்ப 
பேருந்தில் புறப்பட்டபோதுதான்
புரிந்துகொண்டேன் 
போய்க்கொண்டிருப்பது 
நீ மட்டுமல்ல என்பதை...!

***

அருகில் வரவேண்டாம் 
அங்கேயே நில்லுங்கள் ...

நீங்கள் சுமந்து வருவது 
என் மீதான பரிவல்ல 
என் வலியின் அடர்த்தியை 
ஆய்வு செய்வதற்கான முயற்சி 

வார்த்தைகளால் நலம் விசாரித்துவிட்டு 
பின்சென்று புன்னகையால் 
கைகுலுக்கிக்கொள்ளும் 
உங்கள் கருணை எனக்கு வேண்டாம் 

கண்ணீரைத் துடைக்க 
நீளும் உங்கள் விரல் 
என் கண்களைக் குத்தி 
குருடாக்க முயல்வதாய்த் தோன்றுகிறதெனக்கு 

குருதி வழிந்தோடும் காயத்தில் 
கூர் தீட்டப்பட்ட ஆயுதத்தால் 
மேலும் குடையும் குரூரத்தை விடக் கொடுமையானது 
பொய் முலாம் பூசிய உங்கள் அன்பு 

ஆகவே ...

அருகில் வர வேண்டாம் 
அங்கேயே நில்லுங்கள் 
என் வாழ்வை நானே 
வாழ்ந்து கொள்கிறேன் 

****

பாட்டி வீட்டிலிருந்து புறப்படும் 
போது கொடுத்தனுப்பிய 
முத்தத்திலிருந்து  இரண்டும் 

பக்கத்துவீட்டு அத்தை 
கொடுத்த ஒற்றை முத்தமும் 

சொந்த பந்தங்கள்  
கொட்டிக்கொடுத்த 
ஒரு கூடை முத்தங்களும் 

பள்ளிக்கு புறப்படுகையில் 
அப்பாவும் அம்மாவும் 
சேர்ந்து கொடுத்த முத்தமுமாய் 

சீருடையணிந்த கால் சட்டைப்பையில் 
முத்தங்களை  
நிறைத்துக்  கொண்டு போகும் குழந்தை 

வகுப்பாசிரியை கொடுத்த முத்தத்தையும் 
சேர்த்து கொண்டுவந்து 
பிரித்துக்கொடுக்கிறது எல்லா பொம்மைகளுக்கும் 

***

வலப்பக்க கதவு வழியே
குயில்களின் சத்தம்
இடப்பக்க ஜன்னல்கள் வழியே
நாய்களின் குரைப்பு
தூரத்தில் கேட்கும்
ரயிலின் ஓசை
ஊஞ்சலில் ஆடும்
குமரியின் சிரிப்பு
புன்னகைக்காத உதடுகளின்
வழியே வந்துவிழும் மெளனம்
புரிந்துகொள்ளாத மனம் உதிர்க்கும்
சொற்கள் நிகழ்த்தும் வன்மம்
எல்லாவற்றையும் சுமந்து கணக்கும்
அடக்க முடியாத பெருங்கோவம்
இவை எல்லாவற்றையும் 
மறக்கச்செய்யும் கடந்து போகும்
தொடர்வண்டியிலிருந்து 
கைகாட்டும் குழந்தை என 
ஒரு விடியல் எப்படி
வேண்டுமானாலும் நிகழும்

***
அவனிடம் கண்களைத்தவிர
எல்லாமே இருந்தன
கைவசம் வைத்திருந்த
கைத்தொழிலை கட்டவிழ்க்கிறான் 
ஓடிக்கொண்டிருக்கும் தொடர்வண்டியினுள்

கொண்டுவந்த பைக்குள்
கைவிட்டெடுக்கும் போதெல்லாம் 
வாத்துபொம்மையும் நாய்க்குட்டியும் 
சிரித்தபடி வெளிவருகின்றன

பலவண்ணங்களில் வைத்திருக்கும் 
விசில்களில் நுழையும் ஒரே காற்று
வெவ்வேறு இசையை 
வெளியிடுகின்றன

கைப்பேசியில் சொருகியிருந்த
ஹெட்போனை காதுகளில் 
வைத்தபடி தன் உலகத்தில்
விளையாடிக்கொண்டிருந்தாள்
அந்தச்சிறுமி

***

தகிக்குமிந்த கோடையில்
வேண்டியபோது நனைந்துகொள்ள 
மெல்லிய மழையொன்றை 
பரிசாக கொடுத்தாய்

பூட்டிய வீட்டின் சாவியைப்போலவே 
அந்த மழையையும் 
எப்போதும் என்னோடு
பத்திரமாகவே வைத்திருந்தேன்

யாரும் தீண்டாமல்
சலனமற்று ஓடுமொரு 
காட்டு நதியைப்போல 
என் தனித்த பயணத்திலும்
உலராமலே இருந்த மழையை

அடர்ந்த இரவொன்றில்
பொழியச் செய்தேன்
வந்துவிழுந்த எல்லா துளிகளிலும்
உன் முத்தங்களின் 
ஈரமும் கலந்தே இருந்தது கூடுதல் சிறப்பு

***

பிரியங்களின் பெருவாசலில் 
தனித்திருப்பது அத்தனை சுலபமல்ல 

தனிமை போர்த்தியபடி 
மெல்ல நகரும் பொழுதுகள் 
நரகத்தை நினைவூட்டும் 

துக்கம் மிகுந்து தூக்கம் துறந்த 
இரவுகளை தலையணைக்கடியில் 
ஒளித்து வைக்கச் சொல்லும் 

பசி நிறைந்த பகல்கள் 
மெளனத்தை சமைத்து
உணவாய்த் திண்ணும் 

பெயரற்ற உருவங்கள் 
மூளை மடிப்புகளில் 
முன்னும் பின்னும் மின்னும் 

அழகிய முரண்களோடு 
அர்த்தமற்ற சண்டைகளால் 
மனம் திணறி பிரிந்திருப்பதை விட 

தனித்தே இருந்துவிடலாமென்றும் 
தோன்றும் ....!

***
தெருவோரத்தில் கடை போட்டு 
கீரை விற்கும் கிழவியிடம் 
பேரம் பேசி இரண்டு ரூபாய் குறைத்து 
வாங்கி வந்துவிட்டேன் 
சில கீரைக்கட்டுகளை 

வீடுகள் நிறைந்த வீதிக்குள் 
வண்டி தள்ளிக்கொண்டு வந்த 
இளநீர் விற்பவரிடம் அவ்வளவு வாதாடி 
ஐந்து ரூபாய் குறைத்தாகிவிட்டது 

கோணிச்சாக்கின் கீழ் அமர்ந்து
செருப்பு தைப்பவரிடம் பிடிவாதமாய் 
பத்து ரூபாயை பிடித்துக் கொண்டுதான் 
மீதம் கொடுத்து வந்தேன் 

நெடுஞ்சாலை ஓரத்தில் பழங்கள் 
விற்கும் விவசாயி ஒருவரிடம் 
நாட்டுநடப்பு பேசியபடி சில பழங்களை 
இனாமாக வாங்கிக்கொண்டேன் 

பெருநகரின் நடுவில் 
கண்ணாடிகளால் எழும்பியிருந்த 
குளிர்சாதன வசதி நிரம்பிய 
அந்த வணிக வளாகத்தினுள்
வாங்கிய பொருள்களுக்கு 
பைசா குறையாமல் 
வரியையும் சேர்த்து கட்ட 
மிகநீண்ட வரிசையில் நின்று 
கடனட்டையோ காசையோ நீட்டிக்கொண்டிருக்கும் 
என்னை என்ன செய்ய...?

***
உடைந்து கிடந்த 
சாக்பீஸ் துண்டுகளால் தெருவோரத்தில் 
வரையத் தொடங்குகிறான் அவன் 
ஒரு கடவுளை

கையில் கடாயுதத்தோடு 
நிற்கும் கடவுளை 
கைப்பேசியில் தற்படம் எடுப்பவர்கள் 
கவனமாய் தவிர்த்து விடுகிறார்கள் ஓவியனை 

வேகமாய் விரைந்து செல்பவர்கள் 
வீசிவிட்டு செல்கிறார்கள் சில சில்லறைகளை 

ஒரு வழியாய் கோடுகளால் முடிவுக்கு வந்த கடவுள் 
மகிழ்ச்சியில் உதிர்க்கிறார் 
பெருமூச்சொன்றை 

ஓவியத்தை கடக்கும் முன் 
குழந்தை ஒன்று கையெடுத்து 
கும்பிட்ட போதுதான் உயிர் வந்தது 
கடவுளுக்கு ...!

***

நடுங்காதே மனமே 
தூரத்தில் தெரிவது 
வேறு யாருமல்ல 
தேனின் தித்திப்பென அடி நாக்கில் 
ஒட்டிக்கிடந்த ஒரு உறவுதான் அது 

பக்கம் நெருங்கி உன்னை
கடந்து போகும் போது 
உடைந்து போகாதே 
உன்னைப்போலவே அந்த உறவும் 
தேனீர் அருந்தவோ  
பசி போக்கவோ வந்திருக்கலாம் 

உன் சந்தோசத்தின் மீதொரு 
பார்வைக் கல்லெறிந்தோ அல்லது 
உண்மையில் பார்க்காமலே கூட 
உன்னைத் தாண்டிப் போயிருக்கலாம் 

கடந்த காலத்தின் நினைவுகளை 
கண்களில் கொண்டுவந்து ஆறிப்போனதாய் 
நினைத்துக் கொண்டிருக்கும் 
காயங்களின் தழும்புகளைத் தடவிப்பார்க்காதே 

கூண்டைத் திறந்துவிடும் 
கைகளென மென்மையாக விலகு 
சிறகுவிரிக்கும் பறவையென 
அவளோ / அவனோ பறக்கட்டும் 
அந்த சந்தோசத்தில் 
உன் சந்தோஷமும் இருக்கிறதென நிம்மதி கொள்...!

***

உயர்ந்து வளர்ந்த மரமொன்றின் 
தனித்த கிளை நான் 
சிறகு விரித்தபடி வந்தமர்ந்த 
சிறு பறவை நீ 

அலகு தவிர்த்து 
கண்களால் கொத்துகிறாய் 
கிளையெங்கும் கசிகிறது காதல் 

பட்டுப்போன மரம் 
துளிர்விடத் தொடங்குகிறது 
உன் பார்வை பட்டுப்போன 
நொடியிலிருந்து  

இளைப்பாற வந்த பறவையின் 
சிறகுக்குள் இளைப்பாறுகின்றன
மரமும் கிளைகளும்

ஒற்றை மரத்திற்கான ஈரம் 
பாய்கிறது மொத்த வேர்களுக்குள் 

இறுதியில் உந்திப் பறக்கிறாய் 
காய்ந்து உதிர்ந்த இலையொன்று 
உயிர்த்தெழுகிறது 

***

லட்சுமி என்றே அழைத்து பழக்கப்பட்ட 
மகாலட்சுமி அக்காவுக்கு
வளர்ச்சியில்லாததால் இன்றுவரை 
கல்யாணமே நடக்கவில்லை

விவாகரத்து வாங்கி வந்ததிலிருந்து 
பிள்ளைகளுக்காகவே 
வாழத்தொடங்கிய வளர்மதி அக்கா 
இப்போதும் பூ கட்டி விற்கிறார்

கணவனை இழந்து 
கட்டில்கடை வைத்து வாழ்க்கை நடத்தும்
தனா அக்காவின் மகளும் 
வாழாமல் வந்துவிட்டதால்
பாரமாகிப்போனாள்

காதலித்தவன் கைவிட்டதால்
தற்கொலையின் விளிம்பு வரை சென்று 
வாழ்வில் அத்தனை பிரியமில்லாத அமுதா அக்கா 
ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்

சொல்லமுடியா சோகங்களால் 
சூழப்பட்ட வலியிலும் வாழ்கிறார்கள் 
என நினைத்துக்கொண்டிருந்த நாளொன்றில்

"பசிக்குது காசு தரியா" 
என பேருந்து நிலையம் அருகே 
கையேந்திய சாந்தி அக்கா 
மனம் பிறழ்ந்து திரிவது
தம்பிகளால் வீட்டைவிட்டு விரட்டப்பட்ட 
காரணமாய் கூட இருக்கலாம்

***
ஆழ்ந்த உறக்கத்தின் 
அர்த்த ராத்திரியில் 
கைப்பேசிக்குள் விழுந்து கிடந்தது 
ஒரு தவறிய அழைப்பு 

நடுநிசியின் பெரு மெளன அமைதியிலும் 
என் செவிப்பறைக்கு எட்டாத 
நொடியில் அது தன் சத்தத்தை 
நிறுத்தியிருக்கக்கூடும் 

சங்கீதம் வழிந்தபடி 
எழுப்பிய அலாரம் 
அரைக்கண்ணில் பார்க்க வைத்தது 
அந்த தவறிய அழைப்பை 

விபரங்கள் எதுமற்ற
அந்த புது எண்ணின் மீது 
குவியும் கவனத்தில்  
தொலைந்துபோன நட்பும் 
உடைந்துபோன உறவுகளும் 
வந்து போகின்றன 

ஆர்வத்தோடும் அன்போடும் 
திருப்பி அழைத்தபோது 
"நீங்கள் அழைத்த எண் தற்போது 
அணைத்து வைப்பட்டிருக்கிறதென" 
வரும் பதிவுக்குரலால் 
 
நீளும் சந்தேகத்தையும் 
குமுறும் குறுகுறுப்பையும் 
பெருகும் பயத்தையும்
எதைக்கொண்டு நிரப்புவது ..?

***
பெரு நகர பேருந்தில் 
நரக பயணத்தில் 
பெண்ணாய் படும் 
அவஸ்தைகளை 
எப்படிச் சொல்ல...?

இருக்கைகள் நிறைந்த 
காலை வேளையில் 
கிடைக்கும் இடைவெளியில் 
என்னை நிறுத்திக்கொள்ள
முயலும் போராட்டத்தை 
எப்படிச் சொல்ல...?

உடைக்குள் ஊடுருவி 
உடல் தேடும் ஒருவனிடம் 
உடலுக்குள் மனுசி என்ற 
மனசொன்று இருப்பதை 
எப்படிச் சொல்ல...?

மல்லிகை கருகும்படி 
முதுகில் மூச்சுக்காற்றை 
ஊசியாய் இறக்கும் ஒருவனிடம் 
உனக்கும் என் வயதிலொரு 
சகோதரி இருப்பாளென 
எப்படிச் சொல்ல...?

கடக்கும் சாக்கில் 
கம்பியை பிடித்தபடி 
பின்னுரசும் ஒருவனிடம்  
பிசுபிசுப்பின் ஈரக்கசிவை 
எப்படிச் சொல்ல...?  

வெக்கை தகிக்கும் வியர்வையில்
வழிந்திறங்கும் துளிகளில் 
வாசம் நுகரும் ஒருவனிடம் 
உதிரம் கசியும் வலியை 
எப்படிச் சொல்ல...?

காலதாமதத்திற்கு காரணம் கேட்டு 
கைப்பேசியில் வந்து குதறும் மேலாளருக்கு 
"அந்த மூன்று நாட்களில்" 
அலுவலகம் வர கொஞ்சம்
தாமதமாகுமென்பதை 
எப்படிச் சொல்ல...???

***

View

மாதாந்திர பரிசு

ஷாலுமதி சுரேஷ்

View

மாதாந்திர பரிசு

சோ. நளாயினி

View

மாதாந்திர பரிசு

கி. கவியரசன்

View

மாதாந்திர பரிசு

வட்டூர் அ.கு ரமேஷ்

View

கவிச்சுடர் விருது

ரா.ராஜசேகர்

கவிச்சுடர் ரா.ராஜசேகர்

அகத்தியன் கமண்டலத்திற்குள் காவிரியை அடக்கியது போல்தான் கவிதைகள் இருக்கவேண்டும். கமண்டலம் சிறியதென்றாலும் அதனுள்ளிருக்கும் அகண்டக்காவிரி ஆயிரம் கதைகளைத் தேக்கி வைத்திருக்கும். அப்படியொரு கவிதைதான் கவிஞர் ரா. ராஜசேகர் அவர்களின் இறகுதிர்தலின் பின்னும் என்ற கவிதை சிறக்கிறது...


மரக்கிளைகளில் 
ஊஞ்சலாடும் கூடொன்றில்
விடப்பட்டிருந்த இறகுகள் சில

பறவைகளின் வசித்தலை
சொல்லிக்கொண்டே இருந்தன
கோடிட்ட இடங்களை
நிரப்புதலைப்போல எப்போதும் 

கலவியின் போதுதிர்ந்ததா?
கவலையினாலுதிர்ந்ததா?
குளிரின் நடுக்கத்திலா?
கொடுவெயிலின் புழுக்கத்திலா?

இறகுதிர்தலின் பின்னும்
என்னென்னவோ... 

மே  மாதத்திற்கான கவிச்சுடர் விருதினைப் பெறும் கவிஞர் ரா. ராஜசேகர் செந்தாரப்பட்டி சேலத்தை சேர்ந்தவர். படித்தது ஆங்கில இலக்கியம் என்றாலும் ஆர்வம் தமிழின்பால்தான். 

சென்னை மாலை முரசு இதழில் 2 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணி புரிந்தவர் திரைத்துறை ஆர்வத்தின் காரணமாக இயக்குனர் துறையில் தற்போது இயங்கி வருகிறார். 

 என்னம்மா கண்ணு, சார்லி சாப்ளின், திருமலை, சுள்ளான் மற்றும் ஆதி படங்களில் பணிபுரிந்துள்ளார். ஜிப்பா ஜிமிக்கி என்றத் திரைப்படம் கவிஞர் இயக்கியதுதான். அது மட்டுமில்லாமல் ட்ராஃபிக் ராமசமி படத்திற்கு வசனம் எழுதியுள்ள கவிஞர் தொடர்ந்து, சசிகுமார் நடிக்கும் ஒரு படத்திற்கும் மற்றும் விமல் நடிக்கும் ஒரு படத்திற்கும் வசனம் எழுதி முடித்திருக்கிறார்..

கல்லூரி காலத்தில் பிள்ளைக்கிறுக்கலாக 'சிம்மாசனப் பூக்கள்' என்னும் ஒரு கவிதை தொகுப்பை எழுதி, வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அணிந்துரையுடன் வெளியிட்டதாகவும் ஆனாலும் தன்னிடம் அதன் ஒரு படிக்கூட இல்லையென்றும் வருத்தபடுகிறார்...  

இனி கவிஞரின் சில கவிதைகளைக் காண்போம்:

தவறான மனிதர்களைக் காட்டு மிராண்டி என்றும் பழமையைப் பேசும் வாழ்க்கையை மீண்டும் கற்காலத்திற்குப் போகிறோம் என்று கிண்டலடிப்பதும் இப்போது சாஜமாகிவிட்டது. ஆனால் காட்டில் வாழ்ந்த ஆதி மனித வாழ்க்கை இப்போதுள்ள நாகரீக வாழ்க்கையைவிட அப்படி என்ன கேவலமாகிவிட்டது? கள்ளமில்லா நேயம் காட்டு மிராண்டிகளாகத் தெரிவது இன்றைய நாகரீகத்தின் அபத்தம் என்பதைத் தவிர வேறில்லை... ஆதிகாலத்திற்குள் நுழையும் கவிஞரோடு நாமும் நுழைவோம் வாருங்கள்...

மீண்டுமொரு கற்காலத்திற்கு...
-----------------------------------------------------

பழைய உலகிற்கு(ள்) பிரவேசம்
மீண்டுமொரு கற்காலத்திற்கு
நடந்தோ பறந்தோ ஊர்ந்தோ
பயணமுறையில் பாதகமின்றி
மூளைக்குள் ஏகும் பயணம்
முடிவிலிதான் எப்போதும்

வார்த்தைகள் முளைக்காத
ஒலியுகம்
மொழிக்கூச்சலற்ற சப்தலோகம்

வெயிலில் குளித்து
மழையால் துவட்டி
காற்றால் உலர்த்தி
காற்றையே உடுத்தி
ஆடைகள் தொலைந்த 
அழகிய நிர்வாணம்
காம அருவியில் குளித்தும்
கற்பழிப்பறுத்த கவின்மனம்

நிழல்வீடுகளில் தங்கி
நிஜமாய் தூங்கி
கனவுகளை மொழிபெயர்க்காமல்
கதவுகளற்ற மூளையில்
திசைகள் திறக்க
அறிவு தெரியாத - தெளியாத மாசற்றதொரு மனம்

பழங்கள் தின்று
கிழங்குகள் மென்று
விலங்குகள் உண்டு
உணவுக்கட்டுப்பாட்டுப்
போலிகளை உடைத்து(ம்)

நெருப்பைச் சீண்டி
நெருப்பைத் தீண்டி
நிஜத்தை தாண்டி

யாரையும் பெயர்சொல்லி அழைத்து
பேதம் பிரசவிக்காது
வேதம் சாதம் சமைக்காது
சாதிகள் வைத்து தைக்காது
சலனமற்ற சனம் சமைத்து

நிலங்களை ஆளாமல்
நினைவுகளில் வாழாமல்

நிர்வாணமாய் வாழ்ந்து
நிர்வாணம்போல வாழ்ந்து
திமிரும் திறமையும் தேக்காத
திடதேசமொன்று செய்ய

பழைய உலகிற்குள் பிரவேசம்
மீண்டுமொரு கற்காலத்திற்கு
நடந்தோ பறந்தோ ஊர்ந்தோ
பயணமுறையில் பாதகமின்றி
மூளைக்குள் ஏகும் பயணம்
முடிவிலிதான் எப்போதும்

----

உடையும் நீர்க்குமிழிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு இசையை கேடும் கவிஞனின் மணம் இசையின் ஆலாபனை...

அடராழத் திரவத்தினுள்ளே
காற்றுக் குமிழ்கள் உடைவதில்
புதிது புதிதாய்
வெவ்வேறு இசையொலிகள்

மெல்லிய வயலின்
மயங்குகிறது திரவம்

வழியும் வீணை
நனைக்கிறது திரவம்

கசியும் புல்லாங்குழலில்
தலையாட்டுகிறது திரவம்

உதிரும் மகுடியில்
மயங்கிவழிகிறது திரவம்

அதிரும் பறையில்
எழுந்தாடுகிறது திரவம்

உடுக்கை,பம்பை,கொம்பு,
பியானோ,ட்ரம்பெட் என
இன்னும் இன்னும்
ஒவ்வோர் இசைக்கருவிக்கேற்ப
வெவ்வேறசைவில் திரவம்

எல்லாக் கருவிகளும்
ஒருசேர இசைக்கப்பட
அதிர்வதா?
அசைவதா?
வழிவதா?
எழுவதா?
மயங்குவதா?

உறைகிறது திரவம்
சந்தோசக் குழப்பத்தில்
பரம்பரைப் பழக்க மேலீட்டில்

-----

சுதந்திரமாகக் கால்கொண்டு நடந்த நதிகள் இப்போது காலுடைந்து ஆங்காங்கே முடங்கி கிடக்கின்றன... பாதைகளை மறிக்கும் தடைகளும் அதிகம்.. அந்த ஊடாக நுழையும் கயிறின் பெயரறியாக் கவிஞனின் புலம்பல்...

இப்போதெல்லாம் கயிறொன்று தெரிகிறது
கண்ணுக்குப் புலப்படாமல்

கரைகளறுக்கும் காட்டாறைக்கூட
கரைதாண்டவிடாமல் கைகட்ட வைக்கிறது
கட்டிப்போடாமல் 

ஊடறுத்து உயரும்
உட்கழிவுகளையெல்லாம்
உள்நுழைவாயிலேயே போடுகிறது
உடைத்து உருத்தெரியாமல்

இக்கயிறொன்றின் பெயர் தேடித்தேடித் தோல்விதான்

இருந்தும்
என் நதியின் எல்லா நீரும்
முகம் காட்டும் கண்ணாடி
அசுத்தப்படுத்தாதீர்கள் எச்சரிக்கை இல்லாமலே
புரிகிறது எல்லோருக்கும் 

-------
சொற்களின் கூட்டத்தில் தொலையாதவன் கவிஞனாகவே இருக்கமுடியாது... சில சொற்கள் மழைப்பூக்களாய் விழுந்து சிலிர்க்கும் சில சொற்கள் வெயிலின் கீற்றாய் தகிக்கும்...மொழி வெளியில் காதலைத் தேடுகிறவன்... சொற்கூட்டங்களில் புதைவது அதிசயமில்லை...

சிறுமழைத் தூறலின் பொடிநடையாய்
பெருமழைத் தூறலின்
பேச்சரட்டையாய்
உன் மொழியாடலின் மடியில்
சிறுமழலையாகும் சொற்கூட்டம்

சில சொற்களின் கைகளில்
மழைப்பூக்கள்

சில சொற்களின் முகங்களில்
வெயிலொளிக் கீற்றுகள்

சில சொற்களின் வெளியில்
புதிதாய் பல வான்வெளிகள்

அன்பில் நனைந்த சொற்களில்
ஈரம் சொட்டினாலும் நடுக்கமில்லை

சினமூறிய சொற்களில்கூட
வெப்பம் துடைத்த குளிர்மூட்டம்

முரண்களின் பேரழகான 
உன் மொழியாடல் கடன்பெற
என்ன செய்ய வேண்டுமுனக்கு?

உன் முகவரித் தேடுகிறேன்
மொழிவெளியில்

மூளைக் கர்ப்பத்துடன் 
உனையேப் பிரசவித்துவிட 
எத்தனிக்கிறேன்
எதுவும் இயலாதெனில்

----------

மணற் துகளொன்றை கையிலெடுத்து விழித்திரைமுன் வைத்து விரிவாகப் பார்க்கிறான். என்ன அதிசயம்! அதற்குள்ளும் துளைகள் பல்கியிருக்கின்றன... அதற்குள் ஊடுருவுகிறான் கவிஞன்... ஒருத்துளையில் மலையொன்றும் ஒருத்துளையில் கடலொன்றும் இருக்கிறது... மற்றுமொரு துளையில் பூமியே கைகால் நீட்டி அமர்ந்திருக்கிறது...காற்றின் துண்டொன்று ஒடு துளையிலும் மழைத்துளிகளின் கலைடாஸ்கோப் சித்திரங்கள் வேறொருத் துளையிலும்...அதில் கவிஞனின் மகளும் விலையாடுகிறாள் இந்தக் கவிதையின் வழியாக....

மணற்பரப்பில் 
ஒரு மனப்பரிசோதனை

துகள்மணலொன்றைத்
தூக்கிப் பிடித்தேன்
விழித்திரை முன்

துகள்மணலின் துளைகள் பெரிது பெரிதாக

ஒரு துளையில்
மலையொன்று ஓய்வெடுத்தது

மறுதுளையில்
பாதிக் கடலொன்று
பாதித் துயிலில்

இன்னொரு துளையில்
பூமி கைகால் நீட்டி
ஆர்ப்பாட்டமாக அமர்ந்த நிலையில்

வேறொரு துளையில்
காற்றின் துண்டொன்று
கழைக்கூத்தாட்டக் கயிறில்

கண்ணினின்று 
மில்லிமீட்டர் தொலைவுக்கு
நகர்த்திய துகள்மணலில்

மழைத்துளிகளின்
கலைடாஸ்கோப் விளையாட்டு

ஒவ்வொரு துகள்துளையாக
உருட்ட உருட்ட
என் மகள் வந்து சிரித்தாள்
ஒரு துளையில்

மணற்துகளது
மலைப் பெருந்துகளானது
கைவிரலிடுக்கிலேயே

மகளிடம் சொன்னேன் :

ஒவ்வொரு மணற்துகள் துளையிலும் 
சென்றமர்ந்து சிரி
மணற்துகள்களெல்லாம்
மலைகளாகி மகிழட்டுமென
-----
சுருக்கங்களை நீவிட்டு நெகிழும் மனதில் எத்தனை ஆர்பாட்டங்கள்....


தோல் சுருங்கிய மனதில்
நீந்தும் நினைவுகள்
சுருக்கங்களை உதைத்தபடி
கூக்குரலெழுப்பும் குதூகலத்தில்

வளர்சிதை மாற்றத்தில்
சுருங்கிய தோலுரித்து
புதுத்தோல் வளர்க்கும் நாழிகைகளில் மனசு

சுருக்கங்கள் நீக்கும் சலவைக்காரர்கள்
புதையுண்டும் மறந்தும் மறைந்தும்
உள் அடியாழத்தில்

சுருக்கமற்றத் தக்கைக் குடுவைகள்
மிதவைக் கூட்டமாய்
ஊர்ந்தும் யோசித்தும் மேலெழுந்தும்
காற்றுக்குமிழ்கள் தேக்கியபடி

தக்கைக்கும் தண்ணீருக்கும்
ஒரே நேரத்தில் சுருக்கங்கள்
ஏதோ ஒரு மீனின் சொடுக்கலில்

சுருக்கங்களும் எப்போதும்
சூழல் கைதிகளே
-------

கதவுகளுக்கும் வெவ்வேறு முகங்கள் இருப்பதாக உணரும் கவிஞன் அதனிடமே பேச்சு வார்த்தை நிகழ்த்துகிறான்.. நீ மரமாய் போனதால் இந்த நிலையென்று அதுவும் புலம்புகிறது...

இந்தக் கதவிற்குத்தான்
எத்தனை முகம்

குடிசையில் குனிந்து பார்க்கும்
அரண்மனையில் 
பிரும்மாண்டம் பேசும்
கடைகளில் வர்த்தகம் செய்யும்
இரவில் காமம் கசியவிடும்
பகலில் ஒளியுடன் பேச்சுவார்த்தை
சாத்தலுக்கேற்ப சத்தம் மாற்றும்
வாய்ப்பமைகையில் திறக்கும்
வாய்ப்பு வழுக்குகையில் அடைக்கும்

எப்படி இப்படி?
கதவிடம் கேட்டால்...

மரத்தைப் பேச வைக்கும்
உன் மனமே காரணம் மனிதா
மற்றபடி
நானெப்போதும் மரமே
மனமும் குணமும் மாற்றுவதில்லை
உன்னைப் போல

மரக்கதவையே நோக்குகையில்

மனதிற்குள்
மரத்தாலாகாத கதவொன்று
திறந்து மூடி திமிர் காட்டியது
------

கவிஞரின் மேலும் சில கவிதைகள்....

திமில்மொழியின் மழைத்துளிகள்
----------------------------------------------------------

வெயில்மழையின் வேகப்பொழிதலில்
பிரவாகமெடுத்தோடும் பெருவெள்ளம்
என்வீட்டின் நடுவறையில் 

உன் குரலில் நனைந்ததாகவே
நிஜமழையின் நீர்த்துளிகளெல்லாம்
ஈரமொழியில் 
என் பெயர் சொல்லியபடியே

வெப்பக்குதிரைகளின் மீதான சவாரி
என் பயணம் எப்போதும்
பாலைநிலக் குரலோசையில்
பனிமுட்டைகள் சேமிக்கிறாய் 
என் குதிரைகளின் குளம்படிகளில்

நெல்லிக்கனி தந்த கிறுக்கன்பு
கிழவிக்கும் ராஜாவுக்குமிடையே
உனக்குமெனக்குமானதைப் போல

பால்வேறுபாடறுத்தோடுகிறது
திமில்மொழி மழைத்துளிகள்
திமிர்க்கூச்சலிட்டபடியே

-----------

சாலையின் உரையாடல்
----------------------

ரயிலின் கூவலில்
குயிலின் குரல்
குயிலின் கூவலில்
ரயில்நீள் சத்தம்

எது எதனிடத்தில்
மாறினாலும்
நீ நீயாகவே
நான் நானாகவே

தூரங்களில் தொடர்ந்திணையும் தார்ச்சாலையின்
இருபுள்ளிகள் எப்போது
சந்தித்திருக்கின்றன?
நேருக்கு நேர்
இணைப்பது மட்டுமே
எவரெவரின் பயணத்தையோ

உன் புள்ளியில் நீயும்
என் புள்ளியில் நானும்
அடர் ஸ்திரம் பேசியபடி நிற்க
நம் நேரிய பயணப்புள்ளிகளில்
நிறைய குரல்கள்
இடம் மாறியும் மாறாமலும்


------------

நிலைப்படி மீதான...
------------------------------------

வாசற்கால் மீதும் 
நிலைப்படி மீதும்
நிற்பதே இல்லை நீள்காதல்

வருவதும் போவதும்
மனிதர்கள் மட்டுமே
இதன் வழியே

மனங்கள் மட்டும்
சிலவேளைகளில் வெளியே
செருப்புகளுடன் 
சிலவேளைகளில் உள்ளே
விருந்துணவுடன்

வைத்துக்கொள்வதே இல்லை
வாசற்காலும் நிலைப்படியும்
எதையும் எப்போதும் மனதில்

எதையும் ஏற்றிக்கொள்ளாததே
எப்போதும் 
நிலைத்து நிற்கக் காரணம்

என் மனக்குரல் கேட்டு
நிலைமாறாதப் பார்வை
இரண்டிடமிருந்தும்

-------------

வெயில்தேசத்தான்
----------------------------------

அக்னி நட்சத்திரக் கூடுடையும்
ஒருமழைப் பொழிதலில்

குடையெறிந்து நனைந்து நடுசாலையில் படுத்து

நடுவிழியில் 
மழைப்பெரும்துளி வாங்கிய சுகஎரிச்சலில்

கட்டைவிரலில் இருந்து உச்சந்தலை வரை
விரவிப் பரவும் மழைவேகத்தில்

பொருளற்ற அடர்மொழியில்
தொடர் கூச்சலிட வேண்டும்
மழையின் காதுக்குள் மட்டும்

இப்படி ஒரு வரம் வாய்க்குமெனக்கு

அன்றுனக்குத் தெரியும் 
நான் யாரென்று

அதுவரை வெயில்தேசத்தானென்றே
என் விலாசமிருந்துவிட்டுப் போகட்டும்

பெருங்கூச்சல் பெருவெளி
-----------------------------------------------

வெப்பக் கதகதப்பை வீசியெறிகிறாய்
ஈரச் சாரல் துளிகள்
ஊர்ந்தோடும் மனவெளியில்
உன் லார்வா சிரிப்பின் சிறகசைப்பில்

மேகப்பொதிக் கூட்டங்கள்
சட்டைப் பைகளில்
பெருமழைப் பெய்வித்தபடி
மிதக்க விடுகிறாய்ப் பெருவிரலசைப்பில்

பேராழிகளின் ஊர்வலம்
உன் பாதப் பதிவுகளில்
ஆனந்தக்கூச்சல் அலைகளுடன்
தரையின் அந்தரங்கம் நனைந்தசைய

இசைப்பேரதிர்வப் பாடல்களின் ஓசை
இண்டு இடுக்குகள் நிறைத்து
மொழிகளின் ஊமைப்பெருவெளியிலும்

உன் ரத்தம் சிலிர்த்துறுதியானது
நீ கோலோச்சிக் கொடியசைக்கும்
இனம் காத்து நிற்றலில்தான்

பாறைப் பெருநாடுகளையும்
பிளந்தெறிகிறது உன் பெருங்குரல்
இதுவே எம் வம்சமென்ற அறிவிப்பில்

இருள்கிழிசல்களை
ஒளிக்கத்திகள்
கிழித்து நிர்மூலமாக்கும்
நிலம் பிரகாசிக்கும்
நிஜ சூரியன் நிலத்தில் முளைக்கும்
நீளும் கிழக்கும் வானும்

வேர்களின் உரைவீச்சில்
கிளைகளும் இலைகளும்
அடரமைதியில் உறையும்

புயலின் மவுனத்தில்
காற்றும் கதறும்

பொறுமையின் புதிர்சிரிப்பில்
அவசரம் விடைபெறும்

இயங்குதலின் அச்சில்
எல்லாம் இங்கே எளிதாகும்

இயல்பு திரியா இயல்பு
எங்கும் விரவிக் கோலோச்சியபடியே

--------

ஆட்டின் கூக்குரலிசை
---------------------

தேடுகிறேன் 
வாய்ப்பமையும் நிமிடங்களெல்லாம்
உறவுக் கூட்டங்களில்

செவிப்பறைவரை அடரமைதியில்
எங்கேனும் உன் குரல் கேட்டிராதாவென

தரையெங்கும் 
கைகள் குவித்து விரித்து அள்ள
ஏதுவாகிறேன்
புதிதாக சிந்தவிருக்கும் நிழல்திரவக்கூட்டத்தையும்
உன் குளிர்ச்சியுணர

புழுக்கை இறுத்தலில்கூட
நேர்த்தியமைப்பாய் நீ
என் செல்ல ஆட்டுக்குட்டியே

ஒரேஒருமுறையேனும்
கூக்குரல் இசையேன் எனக்காக
உனை உண்டவர்களின்
ரத்தநாளங்களில் ஓடிக்கொண்டேனும்

அப்படியே வழிந்தோடிவிடாதே
அகதிகளின் ரத்தக்கண்ணீர்போல
தொண்டைக்குழிக்குள்ளேயே

--------------


குடுவை மனதில்
பிப்பெட் 
பியூரெட் உபகரணங்களின்
கரைசல்கள் துளித்துளியாய்ச் சொட்ட
பால்ய பதின்மப் பருவங்கள்
மிதந்துச் சிரித்தன 
சிறுசிறு குமிழ்களாய்
யதார்த்த நெருப்புச் சூட்டில்
எல்லாம் கரைந்து கரைந்து
கொதித்துக் கொதித்துக்
குமிழ்க் கொப்பளிப்பில்
நிறம் மாறிய கரைசலில்
நிறையவே தொலைந்திருந்தன
நேற்றுடன்


-----------------

வெயிலின் விருந்தோம்பல்
-----------------------------------------------

நாள்கள் சிலவாகவே
மூளைக்கூறுகளின் முழுவெளியெங்கும்
வெயில்பொழிதல் ஒளிப்பெருமின்னலுடன்

கடக்கும் பாதைகளெங்கும்
தூவிக்கிடக்கின்றன
வெயில்பூக்கள்
பேய்மண வீச்சுடன்

ஏரி குளங்களெங்கும்
நிரம்பித் ததும்பி வழிகிறது
வெயில்திரவம்

நிழலொதுக்கும் மரங்களினடியிலும்
வெயில்கூடாரம்

ஒதுங்கி ஒடுங்கி நடுங்கி
பதுங்கினால்
வீடெங்கும் வெயில்காடு

ஆழம்துழாவி அடைந்தபோது
விருந்தோம்பியது
வண்ணதாசனின் வெயிலாபிமானம் 

-----------------
மூளைமிருகம்
மொழிப்பந்தை 
உருட்டி உருட்டி விளையாடி
கனவுநூற்பாலையில்
கால்பந்தாடுகிறது

மனமைதானத்தில்
எழுத்தாலை எழுப்பி
உற்பத்திக்கும் 
உணர்வுத் தயாரிப்பில்
விவசாயக்காடுகளும்கூட

முரண்திறன் முகத்தில்
நிஜம் நிழலின் பிதுக்கம்

கண்ணாடி உலகில்
உடையாமல் கல்லெறிதல்
பெரும் வித்தையே

---------------

View

மாதாந்திர பரிசு

சிராப்பள்ளி ப மாதேவன்

View

மாதாந்திர பரிசு

கவின் முருகு

View

மாதாந்திர பரிசு

மு.பே சத்திய நேசன்

View

மாதாந்திர பரிசு

கு ப சிவபாலன்

View

கவிச்சுடர் விருது

சிவக்குமார்

'வரையத் துவங்குகிறேன்
ஒரு சிறகிலிருந்து செம்போத்தை.
ஒரு சருகிலிருந்து விருட்ஷத்தை.
ஒரு துளியிலிருந்து பெருமழையை,நதியை
ஒரு இதழிலிருந்து மலரை
ஒரு கண்ணீர்த் துளியிலிருந்து நேசத்தை.
காலை நடைப் பயிற்சியின் போது'

முடிவு என்பது ஆரம்பத்தின் முதல் புள்ளி என்ற கோட்பாட்டை அழகாக இந்தக் கவிதையின் மூலம் சித்தரித்திருக்கும் கவிஞர் சிவக்குமார் அவர்கள்தான் ஏப்ரல்  மாதத்திற்கான கவிச்சுடர் விருதை நம்மிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்.

ஆழமான சிந்தனைகளுக்கும் அற்புதமான கற்பனைகளுக்கும் வடிவம் தருவதில் கவிஞர் சிவக்குமார் தனித்துவமாக விளங்குகிறார்... 

தமிழ்நாடு அரசுபொதுப் பணித் துறையில் உதவி நில வேதியியலளாராக பணிபுரியும் கவிஞர் வாசிப்பதிலும் புகைப்படங்கள் எடுப்பதிலும் கூட ஆர்வம் கொண்டவர். இவரது கவிதைகள் 'கணையாழி' ,'ஆனந்தவிகடன்' ,'மற்றும் சிற்றிதழ்களிலும் பயணப்பட்டிருக்கிறது. கவிஞர் மேலும் வனப்பயணங்களில் ஆர்வமுள்ள ஒரு பயணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது கவிதைகளைப் பற்றி ஆய்வோம்:

அடுப்பைப் பற்றவைக்கும் தீக்குச்சியில் தொடங்கும் ஒரு தேநீரின் பயணம் நாம் அருந்துவதற்காக அமர்ந்திருக்கும் அதன் காத்திருப்பில் முடிகிறது. இதுவும் கூட ஒரு ஜென் நிலைதான். ஜென் குருக்கள் தன் சீடர்களுக்கு அளிக்கும் பயிற்சியிகளில் முதன்மையாது தேயிலை நீர் தயாரித்தலாகும்..இந்தக் கவிதையும் நம்மை ஜென் நிலைக்கு கடத்துகிறது....

அடுப்பை பற்ற வைக்கிறீர்கள்.
தீக்குச்சியின் சிறு துளியை
தாவிப் பருகிப் பெருகுகிறது நெருப்பு.
கெட்டிலில் நீரை ஊற்றுகிறீர்கள்
குளுமையையிழந்து குமிழ்குமிழ்களாய்
கூச்சவிட்டபடி
கொதிக்கக் தொடங்குகிறது நீர்.
விடுபடத் துடிக்கும் தவிக்கும் நீரினுள்
தேயிலைகளை இடுகிறீர்கள்.
அங்குமிங்கும் அலைபாயும்
தேயிலைகளின் பச்சை நிறம்
மெல்ல மெல்ல
இளம் பழுப்பிலிருந்து
அடர் பழுப்பிற்கு மாறுகிறது
அடுப்பிலிருந்து கீழிறக்கிய கெட்டிலினுள்
விரிந்த இலைகளுடன் கொதிப்புகளடங்கி
அமைதியில் ஆழ்ந்திருக்கிறது
தேநீராக மாறிய நீர்
காத்திருக்கிறது நமக்காக.
வாருங்கள் நண்பர்களே
துளித்துளியாய்
கொஞ்சம்
ஜென் பருகுவோம்

-----

சாமியாடல் என்பது பக்தியின் ஒரு முக்கிய அம்சமாகவே இருந்து வருகிறது.. அதனைப் பற்றி சொல்லும் கவிஞர் தன் அம்மாவிற்கும் சாமி வரும் என்று தொடங்கி முடிக்குமிடத்தில் யாரும் நினைக்காத வகையில் அழகாக முடித்திருப்பார்.. அந்த சாமியின் மேல் இப்போது அம்மா வந்திருப்பதாகக் கூறும் பொருளோடு.. இதோ அந்தக் கவிதை

அம்மாவுக்கு
அபூர்வமாய் .சாமி வரும்.
விஞ்ச் ஸ்டேஷன் அருகிலிருக்கும் மகிஷாசுரமர்த்தினிதான்

என்பார்கள் காம்பவுண்டில்.
உஸ் உஸ்ஸென்று பெருமுச்செறிந்தபடி
அம்மா சொல்லும் வார்த்தைகளை
பயபக்தியோடு கேட்பார்கள்.
உனக்கு அடுத்தது பையன்தான்னு
கமலாக்கா மேல சாமி வந்துதான் சொன்னது
என்று மரகதக்கா அடிக்கடி சொல்வார்கள்.
கற்பூரம் காட்டி சாமி மலையேறியதும்
அத்தனை களைப்பாயிருக்கும் அம்மாவின்
முகத்தில் அபூர்வமானதொரு
களையிருக்கும்.
நேற்று
மகிஷாசுரமர்த்தனி கோவிலுக்கு போயிருந்தேன்.
கணகணவென்று மணியோசையுடன்
தீபாராதனை ஒளியில்
மகிஷாசுரமர்த்தினி மேல்
அம்மா வந்திருந்தது.

----

கார்ட்டூன் சேனலில் இலயித்திருக்கும் பெண் குழந்தை, இரவு சமையலில் பரபரப்பாய் இருக்கும் மனைவி இவர்களுடன் சர்க்கரை நோய்க்கான மாத்திரை போட்டுக்கொண்டு புத்தகம் படிக்கும் தந்தை ... இவர்களிடம் சாலை விபத்தில் இறந்தவனை பற்றிய செய்தியை எப்படி சொல்லுவீர்கள் என்ற கேள்வியை வைக்கிறார் கவிஞர். ஏனென்றால் இவர்கள் உடலளவில் உறுதியில்லாத நிலையில் மனதளவிலும் அவர்களிடம் பாதிப்பைக் கடத்துவது எவ்வளவு பெரிய கொடுமை...

கார்ட்டுன் சேனலில் சிரித்திருக்கும்
பெண் குழந்தையும்,
இரவுச் சமையலில் பரபரப்பாயிருக்கும் மனைவியும்
சர்க்கரை மாத்திரை போட்டுக் கொண்டு
புத்தகம் படிக்கும் அப்பாவும்
இருக்கும் வீட்டில்
நெரிசல் மிகுந்த சாலையில்
சற்றுமுன்
துடித்தடங்கினவனைப் பற்றிச் சொல்ல
அழைப்பு மணியை அழுத்தும் துணிச்சல்
உங்களில் யாருக்கிருக்கிறது.

---

பெருமழையில் நனைந்த வால்காக்கையொன்றைக் காணும் ஒருவனை தன் அருகில் இருந்தும் அதைப்பற்றி எந்தவித கவலையும் கொள்ளாமல், தனது தாய் கொடுத்த எச்சரிக்கையையும் புறம்தள்ளிவிட்டு அமர்ந்து அலகால் உடலை கோதி ஈரம் உலர்த்தும் அழகில் அவன் அதனை ரசிப்பதில் புத்தனாகிவிடுகிறான் என்ற கற்பனை இயலழகு...

பெருமழை பெய்தோய்ந்த விடியலில்
நடைபயணத்தில்
உங்களுக்கு காண வாய்க்கிறது
மிக அருகிலுள்ள கிளையொன்றிலமர்ந்திருக்கும்
பொன்னிற கதிரொளியில் மினுங்கும் பறவையொன்றை.
அதன் பெயர் வால் காக்கையென்பதை
வெகு சமீபத்தில்தான் அறிந்து கொண்டீர்கள்.
அதன் தனிமையில் பெருந்தன்மையாய்
உங்களை அனுமதித்து
சிறகுகளை உலர்த்த ஆரம்பிக்கிறது.
கூரலகால்
முதலில் முன் பின் கழுத்துப் பகுதிகளின் அடர் கருப்பை
மெதுவாக உரசுகிறது.
வெண் பட்டு சரிகையிட்ட
செம்பழுப்பு வண்ண,இடது,வலது இறக்கைகளை
கையை நீட்டி விரிப்பதைப் போல்
அகல விரித்து சுத்தம் செய்கிறது.
உங்கள் இருப்பை உணர்த்தி எச்சரிக்கும்
காகத்தின் குரலை
சில வினாடிகள் கவனித்து,அலட்சியப்படுத்தி
கழுத்தை வளைத்து செம்பழுப்பு நிற பின்னுடலை
வேகமாக உரசுகிறது.
தனுராசனம் செய்யும்
தேர்ந்த யோகாசனப் பயிற்சியாளனென
அனுபவம் முதிர்ந்த பரத நாட்டிய பெண்மணியென
ராயல் சர்க்கஸின் நெகிழுடல் பெண்ணென
முழு உடலையும் வில்லாக வளைத்து
வாலடியை அலகால் கோதும் தருணத்தில்
பார்த்துக் கொண்டிருக்கும் உங்களையும்
அது புத்தனாக்குகிறது.

----

காட்சிகளை பார்த்து வர்ணிக்கும் கவிஞனின் வரிகளுடன் எதையும் பார்க்க இயலாமல் பார்க்காது பாடும் பார்வையிழந்த குருட்டு பிச்சைக்காரனின் பாடலும் இணைந்து இந்தக்கவிதையை அழகாக்குகிறது...

ராக்கால பூஜைக்கான மணியோசை
பழனி மலையிலிருந்து
அதிர்ந்ததிர்ந்து பரவிக் கொண்டிருந்தது.
யானையின் துதிக்கையென,
மலைப் பாம்பொன்றின் உடலென

காங்கிரீட் சாலையில் நீள்கிறது நீர்த்தாரை.
உலோக உண்டியலின் குலுக்கல்களுடன்
நகரும் இசைக்குழுவில்.உடைந்த குரலில்
பார்வையற்றவர் பாடுகிறார்
நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியைத்தான்
நல்ல அழகி என்பேன்
நல்ல அழகி என்பேன்.

----

வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் அதன் உரிமையாளர்களின் வாயில் நுழைந்து வெளிவராத வாழ்க்கை வாழ்வதென்பதே பெரு வாழ்க்கை. இந்தக் கவிதையில் மகள் நிவேதிதா சுவற்றில் கிறுக்கி வைத்து விடுகிறாள்.. அம்மாவின் விரட்டலில் பயந்த குழந்தையை சேர்த்தனைத்துக் கொள்ளும், தகப்பன் அதன் மனத்துடிப்பை சம நிலையில் கொண்டுவந்த பிறகு ' என்ன வரைந்திருக்கே புரியவில்லைடா' என்று கேட்டவுடன் அதனழகை அவள் விவரிப்பதில் அவளொரு அற்புதம் என்று புரிந்த களிப்பு அவன் மனதில்...

கொஞ்ச நேரம் அசந்துட்டேன்
எப்படி நாசமாக்கியிருக்கா பாருங்க
வீட்டு ஓனர் பார்த்தா திட்ட மாட்டாரா
சமையலறையிலிருந்து வாசிக்கப்பட்ட
குற்றப் பத்திரிக்கையைக் கேட்டு
கண் கலங்கி நின்றவளை
நெருங்கி அணைத்துக் கொண்டதும்
உடல் நடுங்க மடை திறந்து பாய்ந்தது
கண்ணீர் வெள்ளம்.
ஆதி மனிதனின் குகை ஓவியங்களைப் போன்றும்
நவீன ஓவியத்தைப் போன்றும் தோன்றும்படி
குறுக்கும் நெடுக்குமான கோடுகளால்
நிரம்பியிருந்தது சுவர்.
ஒண்ணுமே புரியலையேடா என்றேன்.
மழை நின்று சட்டென வெயிலடிப்பதைப் போல
அழுகை நின்று சிரிப்பில் குலுங்கியது உனதுடல்.
போப்பா உனக்கு ஒண்ணும் தெரியாது
நான் காட்றேன் பாரு என்றாய்
விரிந்த சிறகுகளை 
தலையை லாவகமாய் வளைத்து
சுத்தம் செய்யும் வாத்தும் அதன் துணைகளும்

குலை தள்ளிய தென்னை மரமும்
பாய்மரங்கள் அசைந்தபடி
ஆழ்கடலில் பயணம் செய்யும் கப்பலும்
சூரியனும் நிலவும் நட்சத்திரங்களும்
ஒரே சமயத்தில்
சுவரிலிருந்து வெளிப்பட்ட அற்புதத்தை நிகழ்த்தி
நிவேதிதா,
ஏதுமறியாதது போல் சிரிக்கிறாய்

----

வனப்பயணங்களில் லயிக்கும் ஒருக்கவிஞனின் கற்பனை இப்படித்தான் விரிய முடியும்...


காற்றில் அழைப்பொலியை அதிர விட்டு
இணையின் பதிலொலிக்கு ஏக்கத்துடன் காத்திருக்கும்
செம்போத்து நான்.
நீண்ட நேரமழைத்தும் இணை வாராத ஏமாற்றத்தில்
காற்றை சிதறடித்துக் குரலெழுப்பிப் பறக்கும்
மீன் கொத்தி நான்.
கிரணங்கள் நுழையா அடர் மரமொன்றில்
துணையுடன் சதா பேசிக் கொண்டிருக்கும்
மைனா நான்.

விரலென நீண்டிருக்கும் கிளையொன்றில்
இணையுடன் பரவசமாய் இணையும் மரங்கொத்தி நான்..
உயர்ந்த மரக்கிளையொன்றில்
இணையின் தோள்களில் கண்  மூடி சாய்ந்திருக்கும்
புள்ளி ஆந்தை நான்.
வலது காலை கிளையில் மோதி மோதி
திறந்திருக்கும் இணையின் செவ்வலகில்
கனியூட்டும் பச்சைக் கிளி நான்.
மர உச்சத்தில்
இணையருகிலிருக்க
ஆரஞ்சு மஞ்சள் வர்ண தொண்டை நாண்கள் அதிர அதிர
பாடிக் கொண்டேயிருக்கும் குக்குறுவான் நான்.
அந்தரத்தில் தலைகீழாய்ச் சுழன்று
இணையமர்ந்திருக்கும் மெல்லிய கிளையசைய
அமரும் கரிச்சான் நான்.
பரபரவென தேடியடைந்த இரை துள்ளும் அலகுடன்
கூடு திரும்பும் கொண்டலாத்தியும் நான்தான்.

---------

நம் வீட்டிற்கும் வரும் ஒருவரை சந்திக்கும் முன் இருக்கும் நாம் அவரை சந்திக்கும்போது இருப்பதில்லை என்பதை இந்தக் கவிதையில் அழகாகச் சொல்லியுள்ளார் கவிஞர்...


முன்னறிவிப்பின்றி
நீங்கள் வருவதாக அறிந்த
ஐந்து நிமிடங்களுக்குள் ஒழுங்குபடுத்தப்பட்ட
நீங்கள் அமர்ந்திருக்கும் வரவேற்பறை மட்டுமல்ல
அத்தனை குப்பைகளும் அடைக்கப்பட்டு
நீங்கள் காண முடியாதபடி
தாளிடப்பட்டிருக்கும் படுக்கையறையும்
சேர்ந்ததுதான் என் வீடு.
தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளை
நாகரிகமாகவும்,இதமாகவும்
இப்போது உங்களோடு
அந்த வரவேற்பறையில் அமர்ந்து
பேசிக் கொண்டிருக்கும்
சிவக்குமார் மட்டுமல்ல நான்.

-------

குறுங்கவிதைகள் எழுதுவதிலும் கவிஞர் தன் நேர்த்தியை அழகாக செதுக்குகிறார்...

இதோ சில குறுங்கவிதைகள்:

நள்ளிரவின் நல்இருளில்
விழித்திருந்தோம்
கடிகார முட்களென.

***
கடந்து செல்பவர்களின் கருணைக்கு
சாலையில் காத்திருக்கிறார்கள்
ஓவியனும்,கரிக் கோடுகளாலான கடவுளும்.

***
நெருங்கி வரும் மீன்கள்
அறிவதில்லை
தூண்டில் புழுக்களின் மொழியை

***
எத்தனை புல்லாங்குழல்களை
இழுத்து உடைத்து
சுவைத்துச் சிதைத்து
மிதித்து நடக்கிறது யானை

***
சாலையோரம் ஈரத்தில் ஊறிக் கிடக்கும்
வெதுவெதுப்பான
இளம் பசும் பிண்டத்தில் மறைந்திருக்கிறது
வனமதிருமொரு பெரும் பிளிறல்.

***
குளிருட்டப்பட்ட பெட்டியில் மாலையுடன்
அம்மா பேரமைதியுடன் படுத்திருக்க
ஒளி ஊடுருவும் ஸ்கேல் வழியாக பார்த்துச் சிரித்தபடி
விளையாடிக் கொண்டிருக்கிறது குழந்தை.
பார்த்து நடுங்கிய என் தோள்களில் சாய்ந்து
தேம்பிக் கொண்டிருக்கிறது
மரணம்.

***
விடுபடத் தவிக்கிறது
எவரெவர் விரல்களாலோ
உருட்டி விளையாடும்படி விதிக்கப்பட்ட
யாழி வாய் உருண்டைக் கல்
பறவைகளின் இன்னொலியும்

***

கவிஞரின் மேலும் சில கவிதைகள் :

வாகனத்தை ஓரமாய் நிறுத்தி விட்டு
பதட்டத்துடன் என்னைப் போலவே
அதைக் கையிலெடுக்கிறீர்கள்.
இரண்டாவது வீட்டின் வளர்ப்புப் பூனை
கருப்பும் வெள்ளையும் பிணைந்த
தன் வலது முன்னங்காலால்
அதை தள்ளி விட்டு

மீசைகளுரசும் முகத்தால் புரட்டியதை
நல்லவேளையாக
என்னைப் போல
நீங்கள் பார்த்துப் பதைக்கவில்லை.
கீச்கீச்கீச் என பரபரத்தபடி
கண் விழிக்காத,சிறகுகள் முளைக்காத
தோலுடலுடன் குஞ்சுகளேதும்
அதற்குள் இல்லை
உடைந்த முட்டைகளின் ஈரத்தாலும்
அது நனைந்திருக்கவில்லை.
என்பதை அறிந்ததும்
என்னைப் போலவே ஆசுவாசமடைகிறீர்கள்.
பிரிபிரியாய்த் தொங்கும் பறவைக் கூட்டினை
சாலையோரமாக இறக்கி விட்டு
புன்னகையுடன் வண்டியை உயிர்ப்பிக்கும்
உங்களருகில் வருகிறேன்.
அவசரமேதுமில்லையே
ஒரு தேநீர் அருந்திச் செல்லலாமா?

----
கூரிய முட்கள் நிறைந்த சாட்டைகளைச் 
சுழற்றியபடி வரும் 
இறுகிப் போன உங்களைப் போலில்லை 
அன்றலர்ந்த மலர்களோடு வரும் 
நெகிழ்வான அவன்.
சர்வாலங்கார பூஷிதைகளாக இருக்கும் 

உங்களைப் போலில்லை 
அலங்காரங்களற்ற 
எளிமையான அவன்.
நானறியக் கூடாதென 
நீங்கள் மறைத்த அற்புதங்களின் மீது 
ஒளியைப் பாய்ச்சியவன் அவன்.
மனதெங்கும் பல்லாயிரம் ஆசைகள் 
விரிந்து பரவுகையில்
உங்களைப் போல்
அவனென்னை
தீராத குற்றவுணர்வில் தள்ளுவதில்லை
ஆயிரக்கணக்கில் இருக்கும் உங்களை 
தனியொருவனாக சமாளிக்கும் 
அவனின் சாகசம் 
என்னை எப்போதும் வசீகரித்தபடியே இருக்கிறது
தெய்வங்களென அழைக்கப்படும் 
நீங்கள் சொல்கிறீர்கள் 
அவனை சாத்தானென்று

----
உன்மத்த பித்தேறி,
பெருஞ்செல்வத்தை,தன்மானத்தை,
சுயமரியாதையை,உத்தியோகத்தை
பெற்றோர்களை,நண்பர்களை
உறவினர்களை
குழந்தைகளை,மனைவியை
பணயம் வைத்து தோற்றேன்.
எல்லாம் இழந்தபின்
இறுதியாக
சிதிலமடைந்த உடலுக்குள் தளும்பும் உயிரை
பணயம் வைத்து ஆடுகிறேன்
திசையெல்லாம் அதிரும்படி உரக்கச் சிரித்தபடி
விரல்களுக்கிடையில்
பகடைகளை உருட்டுகிறது
மது

-----

உஷ்ணக் கதிர்களறியா இருட்குளிரும்
ததும்பும் வனத்தின் கர்ப்பத்தினுள்
சில அடிகள் தொலைவில்
மின்னும் கண்களுடன்
அருவியென மதம் வழியும்
பெரும் பிளிறலைக் கண்டதிர்ந்தேன்.
மரணம்
என்னை முத்தமிடக் குனிந்த நொடியில்
சூன்யத்தில் நிலைத்த பார்வை,
வார்த்தைகளைத் தொலைத்த இதழ்கள்,
காலம் உறைந்திருந்திருந்த உடலுடன்
புதரிலிருந்து வெளிப்பட்ட மனிதனை

இருவருமே கண்டோம்.
துதிக்கை முறுக்கி பின் வாங்கி
இருட் பச்சையில் கரைந்து மறைந்தது
பேருருவம்.
உறைந்திருந்த என்னை உலுக்கியது
வனமுதுகுடியின் கனத்த வார்த்தைகள்.
என் முப்பாட்டனின் முப்பாட்டனின்
முப்பாட்டனுமறிந்திருந்த மனிதன்.
தந்தையின் சொல்லுக்காய் தாயைக் கொன்று
தாய்ப் பாசத்தால்
அதே மழுவால்
தன் தலையையும் துண்டித்துக் கொண்டவனின்
தகப்பன்,

----
உங்கள் மகனாயிருக்கலாம்
உங்கள் சகோதரனாயிருக்கலாம்.
உங்கள் நண்பனாயிருக்கலாம்.
உங்கள் கணவனாயிருக்கலாம்.
உடுமலை பேருந்து நிலையத்தின் வாசலில்
சாக்கடையருகில்
அரை நிர்வாணமாக
கால்களை நீட்டியமர்ந்து
தரையை முத்தமிடுவது போல் குனிந்து
திறந்திருந்த வாய் வழியே வழியும்
எச்சிலுடன்
உலகம் மறந்த குடிஞன்(நன்றி கீரனூர் ஜாகிர் ராஜா).
உங்கள் உறவாக இல்லாமலுமிருக்கலாம்.
ஆனால்
உங்களது இலவசங்களில்,
எனது மாத ஊதியத்தில்
காட்டமாக எழுந்து பரவுகிறது
அவனின் வியர்வையின் நெடி.

-----

தடுமாறி, பின் பழகின மென்னொளியில்
தியான மண்டபத்தினுள் அமர்ந்தேன்.
சிறு சிறு ஓசைகளுமடங்கி
மூடிய கண்களுக்குள் இருள் ஒளிர்கையில்,
ஒன்றிரண்டு இருமல்களும்
சிறு குழந்தையொன்றின் அழுகுரலும்
இறுகின அமைதியில்
விழுந்து நொறுங்கிச் சிதறின.
மென்மையாய் நுழைந்து வெளியேறும்
சுவாசத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.
என்னையிழந்து காலமற்ற பெருவெளியில்
கலந்து மறைந்த நேரம்,
புகை வண்டியின் பேரிரைச்சலை,
உயர்ந்து சரிந்த துதிக்கையின்
மரணப் பிளிறலைக் கேட்டதிர்ந்து
திடுக்கிட்டு கண் விழித்தேன்.
கண்ணெதிரே,
அசைவற்றிருந்தது
பாம்பணையில் வீற்றிருந்த கருமை நிற லிங்கம்

-----

அடர்ந்த மரங்களினிடையே சூரியன் மறைந்து
வெளிறிய சாம்பல் நிறத்திற்கு வானம் மாறுகிறது.
சேத்துமடை 10 கிமீ என்றறிவிக்கும் மைல் கல்லின் மீது
மலை அணிலொன்று அமர்ந்திருக்கிறது.
நெட்வொர்க் இன்றி வெறுமையாயிருந்தது அலைபேசி.
கூடடடையும் பறவைகளின் ஒலியில்
அதிர்ந்ததிர்ந்து அமைதியாகிறது சூழல்.
கிளையொன்றை வளைத்தசைத்து
தாவுகிறது சிங்க வால் குரங்கொன்று.
சாம்பல் வானில் கருமை படந்த வேளையில்
தெளிவற்றுக் கேட்கின்ற
வனவிலங்குகளின் குரலொலிகளின் நடுவே
மலைச் சாலையில்
பழுதடைந்த வாகனத்தினுள் அமர்ந்திருக்கிற நீங்கள்,
வன தேவதையின் அழகிய இதழோரங்களில்
உதிரம் கசியும் கோரப் பற்கள் முளைப்பதைப் பார்க்கிறீர்கள்.

----

பாக்காதவங்க வந்து பாத்துக்கங்க
மொகத்த மூடப் போறேன்.
மயான அமைதியைக் கலைத்த
வெட்டியானின் குரலைப் பின் தொடரும்
மதனத்தண்ணனின் கனத்த குரல்
சிவா இங்க வாடா
கடைசி எருவும் வைக்கப்பட்டு 
முகமும் மறைக்கப்பட்ட,
தன்னுடலின் உள்ளே என்னுடலைச் சுமந்தவளின்
பொன்னுடலுக்கு தீயிடுகிறேன்
பற்றியெரியும் நெருப்பில் கருகுகிறதெனதுயிர்.
திடுக்கிட்டு விழித்தெழுந்தபோதுதான் அறிந்தேன்
வீட்டின் மொட்டை மாடியில்
வெறுந்தரையில் படுத்திருப்பதை.
எவ்வளவு கொடிய தீக்கனவென்று
நடுக்கமும் ஆசுவாசமுமாய் உணர்ந்த போது
மொட்டைத் தலையினை நனைத்து
யானுமிட்ட தீயின் வெம்மையுடன் 
கண்களின் வழி இறங்கியது
அதிகாலையின் அடர் பனி

****

View

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

இரண்டாம் பரிசு - நிலாகண்ணன்

View

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

இரண்டாம் பரிசு - மதுசூதன். எஸ்

View

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

மூன்றாம் பரிசு - குமரேசன் கிருஷ்ணன்

View

ஹைநூன் பீவி நினைவு பரிசுப்போட்டி-2019

மூன்றாம் பரிசு - ஜி.சிவக்குமார்

View

Showing 561 - 580 of 727 ( for page 29 )