நூல் பெயர் : மரபணுக்கள் (சிறுகதைகள்)
ஆசிரியர் : ராம் பிரசாத்
பதிப்பு : முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் : 134
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ 190
ஆரம்பத்தில் அறிவியல் அல்லது விஞ்ஞானம் என்ற சொல் இயற்பியல், வேதியியல், உயிரியல்
போன்ற அடிப்படை துறைகளைக் குறிக்கவே பயன்பட்டாலும் என்றைக்கு அது அறிவுத்தளங்களைக்
குறிக்கும் சொல்லாக மாறியதோ அன்றிலிருந்தே வாழ்வியல், சமூகவியல், அரசியல், உளவியல்,
இலக்கியம் எனப் பல்வேறு துறைகளுக்கும் பொதுவானதொரு சொல்லாக மாறிவிட்டது. இந்த மாற்றத்தால்
அடிப்படை அறிவியலையும், அவற்றிலிருந்து எழுந்த தொழில்நுட்பங்களையும் இயங்குதளமாகக்
கொண்டு எழுதப்பட்ட அறிமுனைவு, மீபுனைவு என விஞ்ஞான இலக்கிய வகைமைகள் வளர்ந்தன. இதனால்
புறவெளிப் பயணத்தை மையமாக வைத்தே புனையப்பட்ட சிறுகதைகள் அறிவியல் விஞ்ஞானத்தை மையமாக
வைத்து அகவெளிப்பயணத்தில் அரங்கேற்றமாயின. இன்று எதுவெல்லாம் நடக்க சாத்தியமில்லை என்று
நினைக்கிறோமோ அதுவெல்லாம் எதிர்காலத்தில் எளிதாக நடந்து விடக்கூடிய சாத்தியக் கூறுகளை
விஞ்ஞானம் உருவாக்கக்கூடும். அதற்கு இன்றைய கணினிமயமும் இணையப் புரட்சியுமே எடுத்துக்காட்டு.
மரபணுக்கள் வழி எதிர்கால உலகம் எப்படி இருக்கக்கூடும் என்பதற்கான கணிப்பே இந்த நூல்
என்பதை விட, மரபணுக்கள் வழி தகவமைக்கப்படும் எதிர்கால உலகுடன் நாம் எப்படி நம்மை பொருத்திக்கொள்வது
அல்லது பொருந்திப்போவது என்பதைக் குறிப்புணர்த்துவதே இந்த “மரபணுக்கள்” நூல்.
மயிலாடுதுறையைப் பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி
ராம்பிரசாத் அவர்களுக்கு இது பதினான்காம் நூல். கணினி மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும்
இவர் சமூக வலைதளங்கள் மற்றும் இன்றைய இலக்கிய உலகில் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர்.
தமிழ், ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளிலும் சரளமாக இந்திய மற்றும் அமெரிக்க உலகளாவிய
அறிவியல் புனைவிலக்கிய வெளியில் இயங்கும் இவர் படைப்பு பதிப்பகம் மூலம் வெளியிட்ட
“வாவ் சிக்னல்” என்ற விஞ்ஞான சிறுகதை நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின்
விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.