logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 281 - 300 of 727

Year
Award
   

மாதாந்திர பரிசு

  • R. பால கணேஷ்

0   888   0  
  • October 2021

கவிச்சுடர் விருது

  • ப.தனஞ்ஜெயன்

1   1422   0  
  • September 2021

இலக்கியச்சுடர் விருது

  • கோ லீலா

0   1657   0  
  • September 2021

மாதாந்திர பரிசு

  • சம்பத் கிருஷ்ணகுமார்

0   948   0  
  • September 2021

மாதாந்திர பரிசு

  • துளசி வேந்தன்

0   757   0  
  • September 2021

மாதாந்திர பரிசு

  • ம.இராதா

2   969   1  
  • September 2021

மாதாந்திர பரிசு

  • அலர்மேல் மங்கை

0   960   0  
  • September 2021

மாதாந்திர பரிசு

  • பிரபா அன்பு

0   625   0  
  • September 2021

மாதாந்திர பரிசு

  • அறிவுச் செல்வன்

0   838   0  
  • September 2021

மாதாந்திர பரிசு

  • ரிதம் கருணா

0   614   0  
  • September 2021

மாதாந்திர பரிசு

  • சுதா பழனிசாமி

0   1083   0  
  • September 2021

கவிச்சுடர் விருது

  • ஷெண்பா

0   1362   0  
  • August 2021

மாதாந்திர பரிசு

  • நாடன் சூர்யா

0   740   0  
  • August 2021

மாதாந்திர பரிசு

  • ஃபஷ்றி

0   664   0  
  • August 2021

மாதாந்திர பரிசு

  • முத்துக்குமார் சங்கரன்

0   741   0  
  • August 2021

மாதாந்திர பரிசு

  • ஷீபா ராணி

0   614   0  
  • August 2021

மாதாந்திர பரிசு

  • சுதா

0   630   0  
  • August 2021

மாதாந்திர பரிசு

  • ஆர் ஜவஹர் பிரேம்குமார்

0   956   0  
  • August 2021

மாதாந்திர பரிசு

  • இளங்கவி நடுநாட்டுத்தமிழன்

0   845   0  
  • August 2021

மாதாந்திர பரிசு

  • முத்து

0   623   0  
  • August 2021

கவிச்சுடர் விருது

ப.தனஞ்ஜெயன்

கவிச்சுடர் ப.தனஞ்ஜெயன்
....................................................
நமது படைப்பு குழுமம் மாதந்தோறும் அளித்துவரும் சிறந்த கவிஞர்களுக்கான "கவிச்சுடர்" விருதினை இந்த மாதம் சிறந்த படைப்பாளியும், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ப.தனஞ்ஜெயன் அவர்களுக்கு அளிப்பதில் பெருமை கொள்கிறது!

கவிஞர் ப.தனஞ்ஜெயன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் புதுவை மாநிலம் ஏம்பலம் எனும் கிராமம். படைப்பு குழுமத்தின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு இலக்கியத்தில் தனக்கென்று தனி தடம் பதித்து வருகிறார்.

புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் இளநிலை அறிவியல் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் பட்ட மேற்படிப்பை முடித்து, பத்து ஆண்டுகளுக்கு மேல் தனியார் தொழிற்சாலையில் அறிவியல் பிரிவுகளில் பணிசெய்தார்.பிறகு சமூகத்தின் முதுகெலும்பு என்று அழைக்கப்படும் விவசாயத்தில் தடம் பதித்து வருகிறார்.

கவிஞரின் "அமைதியைத் தேடி","முழு இரவின் கடைசித் துளி "என்கிற கவிதைத் தொகுப்பும் "சிவனான்டி" என்கிற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளது

இதனையடுத்து "நிசப்தம் விழுங்கும் காடுகள், கடவுளின் பிரார்த்தனை மற்றும் கருவறை சுவர்கள்"என்கிற மூன்று கவிதை நூல்கள் வெளி வரவிருக்கின்றன!

படைப்பு கல்வெட்டு,படைப்பு தகவு ,ஆனந்த விகடன்,கணையாழி,பேசும் புதிய சக்தி, காக்கை சிறகினிலே,இந்து காமதேனு, காணிநிலம், நடுகல்,ஆவநாழி,கொலுசு,காற்றுவெளி என பல்வேறு பத்திரிக்கை மற்றும் சிற்றிதழ்களில்  இவரது கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் இடம் பெற்று கவனம் பெற்றுள்ளது.

கவிக்கோ அப்துல் ரகுமான்,பாப்லா நெரூதா,மகாகவி பாரதி மற்றும் மலையாள கவிஞர் சச்சிதானந்தன் ஆகியோரின் எழுத்துக்களே தான் கவிதைகள் எழுதக் காரணம் என்று சொல்லும் கவிஞருக்கு பிடித்த நூல்கள் : .பசி, பாரபாஸ், கோபல்லபுரத்து மக்கள், தண்ணீர், ஆலிலையும் நெற்கதிரும், பால்வீதி கவிதை நூல்.

அவரது கவிதைகள் அனைத்தும்,அதீத கற்பனை, நவீனத்துவச்சூழல், ,காதல், உருவேற்றம், இயல்பு, வாழ்க்கை  தினசரி உலகின் நிகழ்வுகளைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும், பால்ய நினைவுகள், முற்போக்கு சிந்தனை, உயிர் நேயம், குறித்த கவிதைகளையும் நிறையவே எழுதி வருகிறார்.

முகநூலில், படைப்பு குழுமத்தை மிகவும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் தொடர்ந்து நேசித்து எழுதிவரும் கவிஞர்.இப்போது நமது படைப்பின் உயரிய விருதான கவிச்சுடர் விருதினையும் பெறுகிறார் என்பதில் படைப்புக்குழுமம் பெருமிதம் கொள்:கிறது.

இனிய வாழ்த்துகள் கவிச்சுடரே!

இனி கவிஞரின் சிலக் கவிதைகளை காண்போம்.....

காலத்தின் சுழற்சியில் தூசிகள் கோள்களாகவும் கோள்கள்: கிரகங்களாகவும் பயணிக்கின்றன... வாழ்க்கையின் சுழற்சியில் பிறப்பும் இறப்பும் நியமிக்கப்பட்ட விதியாக மாறுகிறது. காலத்தின் மீது நாம் பயணிக்கிறோமா? அல்ல்து காலம் நம் மீது பயணிக்கிறதா? கேள்விகளூடே கற்பனைத்தொட்டு நகரும் ஓர் கவிதை!

இருளின் அகாலத்தில்
வெளிச்சத்தின் ரேகைகள்
மிச்சமிருக்கிறது

இருளின் ஊடேயிரங்கும்
விண்மீன் தடயத்தை
விழுங்கி நகர்கிறது இருள்

நிலவு படகு கால நதியில்
திசை மறந்து சூரியனின்
மற்றொரு முகமாய் மலர்கிறது

அணுக்களின் துயிலற்ற பயணத்தில்
ஆழமான மௌனமாய்
நிலவு பூ பூக்கிறது பூமியெங்கும்

நிலவும் சூரியனும் பூத்துக்கொண்டேயிருக்கும்
சூனிய சக்கரத்தில்
பிறந்து பூத்திருக்கிறது
பிறப்பு

இறந்து பூத்திருக்கிறது
இறப்பு
மலர காத்துக்கொண்டேயிருக்கிறது
உயிரெனும் மலர்.

*******************************
காலத்தோடு பேசுவது கவிஞருக்கு பிடித்திருக்கிறது. காலமும் அவரை விட்டு நகர மறுக்கிறது.. காலமும் ஒரு போதைதானோ! 

வாழ்தலே பெரும் போதை
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

சில இடங்களுக்குச் செல்கிறோம்
சிலரைச் சந்திக்கிறோம்
சிலவற்றை ரசிக்கிறோம்
சிலவற்றை வெறுக்கிறோம்
மனிதர்களுக்கான
இடைவெளியை
இறுக்கமாக
அணைத்துக்கொள்கிறது
காலம்
காலத்திடம் நம்மால்
எதுவும் பேச முடியவில்லை
மௌனமாக நம்மோடு
பேசுகிறது காலம்
பெருங்கடல்
மண்
பெருமலைகள்
சிறுமலைகள்
குன்று
மரங்கள்
காதலோடு கேட்கிறது
காலத்தின் குரலை
தினந்தோறும்
இரவில் விண்மீன்களை வாசித்து
காலமதுவை ஊற்றுகிறது காலம்
இரவு பகல் என்ற பெரும் மதுவை
மகிழ்வோடு உண்கிறது
அணுக்கள்
அணுக்கள் சிதைந்து
நூற்றாண்டின் குரலைக் கடந்து
குடிக்கிறது காலமதுவை
காலமது வழிகிறது
முழு ரசனையோடு
உயிர்கள் முழுவதும்.

 *****************************
நம்பிக்கயற்ற பயணமாய் மாறிப் போகிறது இக் காலத்தின் மீது பயணிப்பது! அதிகாரம் படைத்தவனின் அ\சைவுகள் அதிகாரமற்றவனின் குரலை நெறிக்கிறது. சப்தம் போட்டு கேட்க வேண்டியவை சப்தமில்லாமல் முடங்கிப் போகின்றன! இதோ ஒரு அதிகாரமற்றவனின் குரலாய் இக்கவிதை!

ஆயிரக்கணக்கான இன்றைய மரணங்களின் இசை
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

முகம் தெரியாத 
முடிச்சிட்ட கபால குரலின் அதீத வெடிப்பு
நடனமில்லாத பெரும் வாழ்வின்
கால குரல்
அள்ள அள்ளக் குறையாமல்
எரியும் நெருப்பு பேச்சு
ஊடகங்களில் தொலைந்து போய்
கண்சிமிட்டும் தணல் எழுத்து
திசைதோறும் தடுமாறும்
பிண நதி
உறவுகளின் சடங்குகளற்ற
மண்ணின் உபசரிப்பு
தசையும் எலும்பும்
எரிந்தும் அரித்தும்
உணர்வுகளின் மையத்தில்
முடிச்சவிழும் பயணங்கள்
இந்த நூற்றாண்டின் பெரும் சாபம்
எந்த நூற்றாண்டு அரசனின் பாவச்செயல்
கர்மாவாக  எரியும் நெருப்பில்
நாற்றிசையில் சருகுகளாய் வீழும் மனிதர்கள்
வேடிக்கை பார்க்கும் கண்களிலும்
நாசியிலும் ஓர் மௌன திரை
ஸ்தம்பித்த ஓட்டத்தில் கேட்காமலேயே நீண்ட ஓய்வு
உயிரோடு இருப்பதை தொட்டுணரும்
நம்பிக்கையற்ற காலக்கெடு.

 ******************
சிலவற்றை கோடுகளால் வரைந்து குறிப்புகளால் எழுதிவிடலாம்! சிலவற்றை வரையவே முடிவதில்லை! கவிஞரும் ஈரத்தை வரைய சிரமப் படுகிறார்.. இந்த ஈரம் உள்ளத்தில் துளிர்க்கும் அன்பாக இருக்கலாம்!

கருமேகங்களைக் காட்டி
மழையை வரைந்துவிட்டேன்
சூரியனைக் காட்டி
வெப்பத்தை
வரைய முடியவில்லை
என்னால்
பறவையைக் காட்டி
இறகினை வரைந்துவிட்டேன்
இறகினை காட்டி
பறத்தலையும் வரைந்துவிட்டேன்
காற்றை வரைய முடியவில்லை
என்னால்
கடலைக்காட்டி
நீரை வரைந்துவிட்டேன்
கடலின் சுவையை
வரையமுடியவில்லை
என்னால்
ஈரத்தை வரைய
நம்மால் முடியும்
என முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
******************
கவிஞரின் இன்னமும் சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு:


சேரன் தெரு
சோழன் தெரு
பாண்டியன் தெரு
எனப்பெயரிட்ட தெருக்களில்
பிச்சைகேட்ட பிச்சைக்காரன் ஒருவனுக்கு
சல்லிக்காசு கூடத்தேறவில்லை
பொருத்து கொண்டே
நான்காவது தெருவினுள் நுழைந்தவனுக்கு
கொஞ்சம் கூட
சாப்பிட உணவும் கிடைக்கவில்லை
அந்த நான்காவது தெருவின் பெயர்
வள்ளலார் தெரு
சிரித்துக்கொண்டே பெயரற்ற தெருக்களில் நடந்தான் அவன்.

 **************************
மண்வாசனை
−−−−−−−−−−−−−

அழகான பேருந்து பயணத்தில்
ஒவ்வொரு ஊரின் பெயரிலும்
ஒரு வரலாறு இருப்பதை
தாத்தா சொல்வார்
ஒவ்வொரு ஊரின் பெயரும்
அப்படியேதான் இருக்கிறது
கங்கை கொண்ட சோழபுரம்
மணல் மேடு என்று
வளங்களைத்தான் காணோம்
துயரமான
பேருந்து பயணத்தில்
நெஞ்சத்தோடு
காற்று கிழித்து
நீர் வழிந்தது தாத்தாவின்
கண்களில்
சில ஊர்களுக்குப்பிறகு
அவர் நிறுத்தம் வந்தது
நெடுவாசல் நெடுவாசல்
எனக் குரல்கள் கேட்டது
அடைக்கப்பட்ட இதய வாசலோடு
வானத்தைப்பார்த்தவாறே
இறங்கினார் தாத்தா
தாத்தாவின் சொந்த ஊரின் மண்வாசனையை
எடுத்துச்சொல்ல வானம்
மட்டுமே இருந்தது
வழித்துணையாய்!

 *******************

கல்லறை வாசம்
−−−−−−−−−−−−−−−

மனதில் சொட்டும் வார்த்தைகளுக்கு முன்
மண்டியிட்டுக் கிடக்கும்
நிமிட தூரங்களின்
சுனை வீழ்ச்சியாய் நகர்ந்து
ரத்த முடிச்சுகளின் வழியாய்
நிமிர்ந்து பாயும் கால முட்களே
காலத்திலிருந்து பிரிந்து
அவிழ்ந்த சுவடுகளின்
ரகசியத்தில் ஊறும்
பெருங்கிணறாய் உடல்
திணறி எழும் வார்த்தைகளும்
நிலவின் முத்தங்களில்
எரிந்து வழியும் சமவெளியில்
ஒரு ரத்த மௌனம்
கால முட்களில் சவாரி செய்து
மரண ஊற்றில் நனைந்தெழும்
ஆழமான தீராத சுடராய் உயிர்
எரிந்து அடங்கும் எரிகல்லின்
துயரத்தில் புத்துயிர் பெறும்
பிரபஞ்ச கணத்தில்
நடுங்கி அணைந்து செரிக்கும்
ஊற்றுகளின் குரல்.

 ********************

இந்த சாலை எங்குச் சென்று முடியும்
என்று கேட்டான் ஒருவன்
கூட்டத்தின் அருகிலிருந்த
பைத்தியக்காரன் சொன்னான்
கல்லறையில் முடியுமென்று.

*******************************

காதல் செய்
கவிதை எழுது
நீண்ட தூரம் நடந்து செல்
வெப்பத்தை உணர்
நெற்றிப்பொட்டில்
முத்தமிடு
மழையில் நனை
மண் வாசம் கற்றுக்கொள்
பொக்கை கிழவியுடன்
கூடிப்பேசு
நரை மேகத்தின்
உருவங்களை ரசி
திண்ணையில் அமர்
குழந்தையின்
பார்வையில் விழு
நெருக்கடி காலங்களில்
மனிதர்களை சந்தி
நலம் விசாரி
அன்பு கொள்
தேடித்தேடி நேசம் வளர்.

 *********************
பிரபஞ்சத்தின் கணங்கள்
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

பூமி சதைகளில் ஒரு மௌன அதிர்வு
சுழலும் அச்சில்
ஒரு ஆழமான புன்னகை
அதிசயமான உடல் இசை
தட்டாய் சுழல்கிறது
நீர் தெறிக்கும் இசை மோதி மடிகிறது உடலெங்கும்
பூமித்தாயை பிளக்கும்
விதைகளில் இருக்கிறது
பச்சை சதையுதடு
பூமி இருள் குடித்து
பகல் அருந்தி வழிகிறது
மணித்துளிகள்
சாயை கோடுகளில் புறப்பட்டு
நடந்து செல்கிறது பூமி
துணைக்கு சில கோள்களின்
ரீங்காரம்
கோள்களைப் பெற்றெடுத்த
கருவறையா பிரபஞ்சம்
மனித மனதில் எரிகிறது
பிரபஞ்ச விளக்கு
மாயை எண்ணெய்யானது
சாயை திரியானது
இரண்டும் கலந்து மனித உயிரானது
கடந்து செல்ல முனையும்
கோள்களை
கட்டிவைத்துள்ளான் மனிதன்
மனக் கயிற்றைக் கழட்டி எரிந்தால்
ஒளியின் தூரத்தில் தெரிகிறது
முத்திரை
மனித மூச்சில் வழிகிறது
அணுதானியம்
அணுக்களைக் குடித்து   மகிழ்கிறது
வெகுதூரத்தில் கருந்துளை.

***********************

அழகான இரவிற்கு
அற்புதமான இசையைத்
தவளைகள் பாடிற்று
க்ராக் க்ராக் இசை
மேற்கத்திய இசையை விட
லயமானது இரவு
சூனியமான நிலவொளியில்
நேற்று பெய்த ஓயாத மழையின்
சிலிர்ப்புகள்
மின்மினிகளின் ரீங்காரத்தில்
இன்னும் அழகு கூடியது மழை இரவு
சட்டென்று
தலை தூக்கிய பாம்பிற்கு
குழப்பம்
எந்த தவளை கத்துகிறது
எதைப்பிடிப்பது எனத் தள்ளாடியது
தனித்து தவளை வரும் வரை
காத்திருந்தது
மீண்டும் இரவு மழை
மழைக்காலம் முடியும் வரை
தவளை தனித்திருக்கவில்லை
தூரல் இடைவெளியில்
தார்ச் சாலையில் தனித்துச் சிக்கியதவளையைக் 
கவ்விக்கொண்டு
இரை விழுங்குகிறது
பாம்புகள்
தன் கூட்டத்திலிருந்த தவளை
ஒவ்வொன்றாக
வேட்டையாடப்பட்டது தெரியாமல்
மீண்டும் இசைக்கிறது
மீண்டும் பாடுகிறது
தவளைக்கூட்டங்கள்.

 ********************

கடற்கரைக்குச் சென்றேன்
அமைதியாக இல்லை கடல்
பேசிக்கொண்டேயிருக்கிறது
அலை
மணல் துகளில் காலத்தை மீட்டுக்கொண்டு
நரைக்காமல் இசைக்கிறது அலை
ராட்சஸ அலை ஒன்று
மிரட்டிப்போகிறது அவ்வப்பொழுது
எத்தனையோ மனிதர்கள்
வந்தார்கள் போனார்கள்
அனைவரிடமும் பேசிக்கொண்டேயிருந்தது அலை
சற்று யோசித்துவிட்டு
என் அமைதியைக் கடலிடம் கொடுத்துவிட்டு
கடலின் ஓயாத அலையை
நான் எடுத்துக்கொண்டேன்
அலையொன்றை துரத்துகிறது
மனது.

*************************

 
நம்பிக்கையோடு நாட்கள்
சென்றுகொண்டிருக்கிறது
பெறுதலுக்காக
காத்திருக்கிறார்கள்
சில நேரம் பசியற்று
பெரும்பாலும் பசியோடும்
காத்திருக்கிறது கண்கள்
திசை திருப்பும்
பேச்சுகளை மறந்து
தின செய்திகளையும்
ஆதார் அட்டையும்
திரும்பத் திரும்பப் பார்த்தாயிற்று
இருக்கைகளின்
நிதானமான பொய்களை
அறியாமலும்
கறை படிந்த சொற்களை
நம்பி
இன்னும் காத்திருக்கும்
அப்பாவி மக்களை
கடந்து செல்கிறது
இந்த ஐந்தாண்டு.

 
***************************

இருளில் தத்தளித்து
ஒளியில் நனைந்து
மலர்கிறது கண்கள்.

************************

விஷம் எனத்தெரிந்தும் தேனீயைத்
தேன் சுரந்து மலர்ந்து
அழகுடன் அனுமதிக்கிறது மலர்.

 *******************
தன் முழு முகத்தைப்
பார்த்துவிட
ஒரு கடலைத்தேடுகிறது வானம்.

***************************

எளிதில் கடத்தி விடுகிறது
இயல்பாய் ரகசியங்களை இயற்கை
பிற உயிர்களனைத்தும் நிஜத்தின் இருப்பில் 
நிகழ்த்துகிறது இன்றைய பொழுதுகளை
முதல் தோட்டமான 
ஆதாம் ஏவாளின் தோட்டத்தில்
இன்னும் தேடுகிறார்கள் முதல் முத்தங்களை 
மனிதர்கள்
பிற உயிர்களுக்கான முதல் தோட்டத்திற்கு 
வழி சொல்ல அழைத்தது பறவைகள்
பறவைகளின் முதல் தோட்டத்தில் 
கேட்கிறது நிரம்பி வழியும் உணர்வுகளின் சிறகுகள்
அதற்கான பெயரைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அது சுதந்திரமாகப் பறந்து கொண்டேயிருக்கிறது
முதல் கருவறை மகத்தானது
இங்கு முடிவில்லாத கருவறையில்
முடிந்து போகுகிறது நம் வாழ்வு
காட்சிகளாக இடம் பெயர்ந்து
ரேகைகளில் பதிந்து மனிதர்களைப்
படித்துவிட்டு தவிக்கிறது
மொழியின் சுவடுகள்.

 *******************************
இன்னுமோர் சுதந்திரத்திற்கு 
ஒரு கவிதை படலாமா என்றேன்
தலை தொங்கி நூல் நூற்றது
காந்தியின் கைகள்
இடுப்பில் துப்பாக்கி ஏந்தியிருந்த காந்தியைக்கண்டு 
புன்னகைத்தேன்
கவிதையை பாடு என்றது அவரது குரல்.
பசிக்கிடந்து, அடிவாங்கி
போராடி பெற்றதந்த அன்னையின்
கற்பத்தை நள்ளிரவு சுதந்திரம்
சிதைக்கிறது
மதம்தாண்டி சகோதர உணர்வுகளை
வளர்க்க வேண்டிய
புது விதைகள் வேண்டும் என்றால்
சமஸ்கிருதம் தடுக்கிறது என்றேன்
உடனே காந்தி
நான் இட்ட விதைகளெல்லாம் அழிகிறது
இதை உழவனிடம் சேர்த்துவிடு
என்று துப்பாக்கியை தந்தார் காந்தி
நானும் உழவன்தான்
முதலில் கோட்சேக்களை கொன்று உரமாக்குகிறேன் என்றேன்
புன்முறுவலோடு சம்மத்தித்தார் காந்தி
இனி சப்தங்களும் சண்டைகளும்
நம் கையில் தான்
புதுச்செடியொன்று முளைத்துவிட
நீர் கொஞ்சம் ஊற்றிவிடு என்கிறது
காந்தியின் கனவு நிலம்.

********************************
தினம்
−−−−−−

இதுவே கடைசி
எனக் காத்திருக்கும்
நேரத்தில்
மீண்டும் நிலவின்
வெளிச்சம் நழுவி
காயத்தைத் தள்ளுகிறது
எலும்பு நழுவி
நீந்துகிறது
உதிர்ந்த இலையைப்போல
இந்த கரை இத்தனை
வேதனையைச் சுமக்கிறது.

 *********************
ஒவ்வொரு உயிருக்கும்
தனித்தனி மதுவை
தந்திருக்கிறது காலப்பூ.

 ***********************

 

இனிய வாழ்த்துகள் கவிச்சுடரே.

 

 

View

இலக்கியச்சுடர் விருது

கோ லீலா

இலக்கியச்சுடர் விருது - வாருங்கள் வாழ்த்துவோம்
==================================
படைப்பாளி கோ லீலா அவர்கள் இதுவரை இந்த குழுமத்தில் எழுதிய படைப்புகளை ஆய்வு செய்து அவரின் இலக்கியத் திறனை போற்றும் வகையில் அவர்களுக்கு 2021க்கான "இலக்கியச்சுடர்" எனும் உயரிய விருதை அளித்து படைப்பு குழுமம் பெருமை கொள்கிறது.

அவர் இன்னும் பல விருதுகளும் பாராட்டுகளும் இலக்கிய உலகத்தில் பெறவும் மேலும் பல படைப்புகளை இந்த சமூகத்திற்கு தந்து தமிழ் வளர்க்கவும் வாழ்த்துகிறது படைப்பு குழுமம்...

இப்படி விருது பெறுவோர் அனைவரும் நாம் ஒவ்வொரு ஆண்டும் சந்திக்கும் விழாவில் மேடையில் வைத்து சிறப்பிக்கப் படுவதுடன் ஒரு ஆளுமைமிக்க படைப்பாளியின் கையிலிருந்து விருதும் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப் படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...

இனி இந்த விருதை வாங்கப் போகும் எழுத்தாளர் யார் யார் என்பதை உங்களின் படைப்புகளே தீர்மானிக்கும்..
ஆகவே இந்த குழுவில் பதியப்படும் படைப்புகள் யாவும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப் படுகிறது. அதை ஒரு குழு தனியாக இருந்து அலசி ஆராய்ந்து தேர்வு செய்கிறது என்பதை எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நல்ல படைப்புகளை படைப்போம்...
நம் சமூகத்தை நாமே தமிழால் இணைப்போம்...

வாழ்த்துக்கள் இலக்கியச்சுடர் கோ லீலா.

ஒரு மகிழ்ச்சியான செய்தி....
இனி இந்த இலக்கியச்சுடர் விருது பெரும் படைப்பாளிகளை பற்றிய குறிப்பும் நாம் ஆய்வு செய்த முறையையும் இணைத்து இதனுடன் ஒரு கட்டுரை வடிவில் இணைக்கப்படும்.

இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாகவும் மற்ற படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கும். ஒரு படைப்பாளி தனக்கான ஒரு அங்கீகாரம் பெறுவதற்கு எவ்வளவு தூரம் எப்படி எல்லாம் கடந்து வருகிறார் என்பதை மற்றவர்களும் தெரிந்து கொள்தல் அவசியமாகிறது. 

இலக்கியச்சுடர் கோ லீலா – ஒரு அறிமுகம்
***********************************
பெயர்: கோ லீலா 

வசிப்பிடம்: பொள்ளாச்சி

பணி: உதவி செயற்பொறியாளர், நீர்வள ஆதார‌ துறை, பொ.ப.து

படித்தது: B.E ( civil), M.B.A ( systems analysis and HR), PGDDCCS

படித்துக் கொண்டிருப்பது:
**********************
ஓஷோ, மிக்கேல் நைமி, கலீல் ஜிப்ரான், பெரியார், கலைஞர், பாரதி, உமர் கயாம், பாஷோ, பூஸன், ஆண்டன் செக்காவ், தாகூர், பால் சக்காரியா, தாஸ்தாவேஸ்கி, பாரதிதாசன், புவியரசு, கி.ரா, தி.ஜா, ஈரோடு தமிழன்பன், கவிக்கோ அப்துல் ரகுமான், தஞ்சை ப்ரகாஷ், மாட் விக்டோரியா பார்லோ, ஜான் பெல்லமி ஃபாஸ்டர், டேனியல் கோல்மென், அருந்ததி ராய், சலீம் அலி, ராமசந்திர குஹா, தொ.பரமசிவன், மார்க்ஸ், இறையன்பு, வைரமுத்து, தகழி சிவசங்கரன், எஸ்.ரா, Paulo Coelho, Napoleon hill, ஜெயமோகன்... நீளும் பட்டியலில் அடங்கும் மிக்ஸர் மடிச்சி கொடுக்கும் பேப்பரும். 

இலக்கு/முயற்சி/கனவு: 
**********************
தண்ணீர் மற்றும் இயற்கையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மற்றும் வேளாண் காடுகள் உருவாக்குதல்

இயல்பு: 
**********
நிகழ்காலத்தில் வாழ்தலே வாழ்தல் எனும் ஓஷோவின் சொற்களின் வழியே நொடிக்கு நொடி இயற்கையின் இறைத்தன்மையை சுகித்து மகிழ்தல் இயல்பு.

எழுதத் தொடங்கியது: பள்ளி நாட்களில்‌ இருந்து

பெருமிதம்: 
****************
மறைநீர் படித்த பின்பு பலரும் நீரை சிக்கனமாக செலவு செய்யவும், காடுகள் அமைக்க முற்பட்டிருப்பதும்...

#மறைநீர் நூல் கடந்த 20 (2000-2020) ஆண்டுகளில் புத்தியை துலக்கிய புத்தகமாக விகடன் அறிவித்தது... 

ஆயிரம் பிரதிகள் விற்பனையானது...

சர் விஸ்வேஸ்வரய்யா சீர்மிகு பொறியாளர் விருதினை பெற்றது.

தமிழ்நாட்டில் ஹைக்கூ பற்றி ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய பெண்களின் வரிசையில் நான்காவது இடத்தை வகித்து இருப்பது


அவரது படைப்புகள்:
******************
# மறைநீர் 
#ஹைக்கூ தூண்டிலில் ஜென்

கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் வெளி வந்த இதழ்கள் மற்றும் இணைய தளங்கள்:

கவிதைகள்:
***********
படைப்பு கல்வெட்டு
இனிய உதயம்
மின் தமிழ்மேடை - தமிழ் மரபு பன்னாட்டு அமைப்பு
கொலுசு
மக்கள் வெளிச்சம்
பொழில்வாய்ச்சி

கட்டுரைகள்
************
தகவு
இனிய உதயம்
தமிழ் நெஞ்சம்
கலகம் காலண்டிதழ்
திணை காலண்டிதழ்

நூல் விமர்சனம்
***************
தகவு
கணையாழி
தமிழ்நெஞ்சம்

இணைய தளங்கள்
**************************
வாசிப்போம் தமிழ் இலக்கியம் நேசிப்போம்
தி.ஜானகிராமன் இலக்கிய வட்டம்
வாசிப்பை நேசிப்போம்


படைப்பு குழுமத்தில் பங்களிப்பு:
**************************
படைப்பின் பசுமைத் திட்டத்தின் திட்டத் தலைவராக இயங்குதல்.

தினம் கவிதை, கட்டுரை, நூல் விமர்சனம் ஏதாவது ஒரு படைப்பை பதிவிடுதல்.

படைப்பு குழுமத்தின் எந்த முன்னெடுப்பிலும் பங்கேற்று, ஆலோசனையைப் பகிர்தல்.



இலக்கியச்சுடர் கோ லீலா அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
****************************************************
இயற்கையை பெரும்பாலும் சுற்றுலாவாசிகளின் கண்ணோட்டத்தில் காணும் இன்றைய சூழலில் லீலா உணர்வு பூர்வமாக அணுகிறார். இயற்கை கேட்கும் கேள்விகளின் வழியே தன் வாழ்வியலை கட்டமைத்துக் கொண்டு முடிந்தளவு பதில்களை சேகரித்துக் கொண்டே நகர்கிறார். அதற்கு அவர் சார்ந்திருக்கும் பணி... முழு முற்றிலுமாக உதவுகிறது. நீரின் தேவை குறித்து அதன் கவனம் மனிதர்களிடம் குறைவது குறித்து அவரின் மனம் படும் பாடு தான் "மறைநீர்" நூல். அந்த ஒரு நூல் போதும்... இந்த  மானுடத்தின் மீது அவர் கொண்ட மனித நேயம் உணர்ந்து கொள்ள. 

எழுத்து சிறு வயது முதலே அவரைப் பற்றிக் கொண்டாலும்... காலத்தின் ஓட்டத்தில் அதனை அவரும் கெட்டியாக பற்றிக் கொண்டார். தொடர்ந்து இயங்குதலின் வழியே தான் இலட்சியங்கள் சாத்தியம். கனவுகளை விரட்டி பிடிக்க அவர் எடுத்துக் கொண்ட வழி எழுத்து. படைப்பூக்க மனநிலையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளல் எல்லாருக்கும் சாத்தியம் இல்லை. லீலாவுக்கு சாத்தியப் பட்டிருக்கிறது. இயற்கையை நேசிக்கும் தன்மை அவரை தொடர்ந்து படைப்பாளியாக மட்டுமல்லாமல் ஒரு மனித நேயமிக்க மானுட சுடராகவும் வைத்துக் கொண்டிருக்கிறது.  

தைரியத்தின் வழியே வெளிப்படையாக பேசும் சாந்தம் வாய்த்த எழுத்தாளர் என்றால் சாலப்பொருந்தும். தொடர் வாசிப்பின் வழியே தூரங்களை தொட்டுக் கொண்டே இருக்கும் ஆத்மார்த்தமான அன்புள்ளம் கொண்ட மனுஷி என்றால் அதுவும் அப்படியே.

நீரை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம்....இருக்கும் நீரை எப்படியெல்லாம் சுத்திகரிக்கலாம்..... உபயோகப் படுத்தலாம் என்று பல்வேறு வழிமுறைகளை மிக துல்லியமாக.....அக்கறையாக......அற்புதமாக எல்லாருக்கும் புரியும் வகையில் கொடுத்த படைப்பாளி லீலா அவர்களின் சமூக அக்கறைக்கு எப்போதுமே ஒரு ராயல் சல்யூட் நம்மிடம் உண்டு.   

அமுத பாரதி, அறிவுமதி, மு. முருகேஷ், மீனாசந்தர், உதயக்கண்ணன், புதுவைத் தமிழ்மணி போன்றோர் முதல் காலகட்டத்தில் இருந்து இன்னும் இயங்கி வருபவர்கள். இந்நிலையில் கோ.லீலா அவர்கள் குற்ற நற்ற ஆய்வுகளில் இறங்காமல் கவனத்தோடு ஒரு பாராட்டுமுறைத் திறனாய்வை
நிகழ்த்தியுள்ளார். இதன் பொருட்டு ஹைக்கூவையும் ஜென்னையும் நூலின் தேவைக்கேற்ற அளவு கற்றிருப்பதை வரவேற்றுப் பாராட்ட வேண்டும்...என்றும் லீலா தரும் நுட்பத் தெறிப்புகள் மிக அருமையானவை என்றும் லீலா எழுதிய "ஹைக்கூ தூண்டிலில் ஜென்" நூல் பற்றி மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் பாராட்டுகிறார். நாமும் பாராட்டுவோம். இந்த உலகமே பாராட்டட்டும். பாராட்டை விட பொற்கிழி வேறென்ன இருக்கிறது படைப்பாளிக்கு.

எந்த பொருள் பாடும் கவிதையிலும் மெல்ல இயற்கை எட்டிப் பார்க்கும் வேட்கை அவர்பால் அமைந்திட்ட அனுக்கிரகம் என்றே நம்பலாம். புள்ளி விபரங்களில் எப்போதும் தன்னை சமரசம் செய்து கொள்ளாதவர். மேம்போக்கு சிந்தனையில் தன்னை ஒருபோதும் சரிந்து விட அனுமதிக்காக... சுய சிந்தனையோடு ஆழ உழும் அற்புதத்தை தொடர்ந்து கைக்கொள்ள லீலா அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.

நீர் செல்லும் வழியெல்லாம் லீலாவின் எழுதுகோல் செல்வதாகத்தான் படுகிறது. எல்லாரும் மை ஊற்றி எழுத லீலா நீர் ஊற்றி எழுதுகிறார் போல. நீரின் தேவை... பாதுகாப்பு என்று நீர் பற்றிய சிந்தனை மனம் படைத்த கவிஞர்... 100 சதவீதமும் நீரால் ஆனவரோ என்று கூட நகைச்சுவை நர்த்தனம் வீசுகிறது நமக்குள். 

இன்னும் இன்னும் புது புது முயற்சிகளில் தொடர வேண்டும் படைப்பாளி கோ லீலா அவர்களின் படைப்பின் பயணம். 

இவரது இந்த இக்கிய பயணம் மேலும் தொடரவும்.. சிறப்பான படைப்புகளை தொடர்ந்து தமிழுக்கு அளிக்கவும்... படைப்பு குழுமம் அவரை மனதார வாழ்த்துகிறது. மேலும் "இலக்கியச்சுடர்" என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

இத்தகைய ஆக்கப்பூர்வமான ஒரு படைப்பாளி பெறும் படைப்பின் சுடர் விருதுகள் இங்கு எழுதும் அனைவரின் கரங்களையும் தழுவ வேண்டும் என்பதே படைப்பு குழுமத்தின் அவா. அதற்கேற்ப படைப்பாளிகள் தங்கள் சிந்தனை வளத்தையும் உருவாக்கல் திறனையும் மேம்படுத்திக் கொண்டு சமூகத்திற்கான படைப்புகளைப் படைத்து மனிதம் செழிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டு அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறது படைப்பு குழுமம்.


வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#சுடர்_விருது

View

மாதாந்திர பரிசு

சம்பத் கிருஷ்ணகுமார்

View

மாதாந்திர பரிசு

துளசி வேந்தன்

View

மாதாந்திர பரிசு

அலர்மேல் மங்கை

View

மாதாந்திர பரிசு

பிரபா அன்பு

View

மாதாந்திர பரிசு

அறிவுச் செல்வன்

View

மாதாந்திர பரிசு

ரிதம் கருணா

View

மாதாந்திர பரிசு

சுதா பழனிசாமி

View

கவிச்சுடர் விருது

ஷெண்பா

கவிச்சுடர் ஷெண்பா

 நமது படைப்பு குழுமத்தின் இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருதினை கவிஞர் ஷெண்பா என்கிற மஞ்சு கண்ணன் அவர்கள் பெறுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

கேரளா மாநிலம் கோட்டக்கல்லை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞரின் வசிப்பிடம் :கோவையாகும். படித்தது : Diploma in Textile Processing / MA Public Admin / B.Sc - M.Sc Costume Design & Fashion / ISO 9001 Lead
Auditor course வேலை : (1997 - 2017) 20 வருடங்கள் Textile Quality Testing துறையில் SITRA, Intertek India Pvt Ltd, C&A Sourcing
Intl Ltd நிறுவனங்கள்

கவிதைகளின் மீது அளப்பறிய ஆர்வம் கொண்ட கவிஞர்,
படைப்பு குழுமத்தின் கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி 2017 - முதல் பரிசு (நடுவர் : திரு. கலாப்ரியா)
படைப்பு குழுமத்தின் கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி 2019 - சிறப்பு பரிசு (நடுவர் : திரு. யூமா வாசுகி)
படைப்பு குழுமத்தின் சிறந்த பங்களிப்பாளர் விருது - 2019
ரியாத் தமிழ் சங்கம் - முத்தமிழ் கலைஞர் உலகளாவிய கவிதைப் போட்டி - சிறப்பு பரிசு : (நடுவர் : திரு.
கலாப்ரியா)
படைப்பு குழுமத்தின் பிப்ரவரி 2020 - மாதாந்திர சிறந்த படைப்பாளி
படைப்பு குழுமத்தின் கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி 2020 - சிறப்பு பரிசு (நடுவர் : திரு. யவனிகாஸ்ரீராம்) என பல பரிசுகளை வென்றவர்

கவிஞர் எழுதிய '64 கட்டங்களில் தனித்திருக்கும் ராணி' (கவிதைத் தொகுப்பு) படைப்பு குழுமத்தின் வெளியீடாக வந்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் பல சிறந்த கவிதை தொகுப்புகளை வெளியிட்டு முக்கிய இடத்திற்கு நகர்வார் என்று படைப்பு குழுமம் நம்புகிறது.

இனி கவிஞரின் சில கவிதைகளை காண்போம் :

பாதங்களால் நிறைந்த வீடு என்ற ஒரு கவிதைப் போதும் கவிஞரின் எழுத்தாளுமைக்கு! அம்மா வீடு துடைக்கும் போதெல்லாம் அவர் துடைத்தெடுக்கும் தண்ணீர் வாளிக்குள் வீட்டில் நிறைந்த பாதங்களெல்லாம் அதில் வந்து விழுந்து விடுகிறதாம்! ஆனாலும் சத்தியாக்காவின் பாதம் மட்டும் கொஞ்ச நாளாக வாளிக்குள் விழாமல் வீடு முழுவதும் நிறைந்திருக்கிறதாம்! காரணம் என்ன?

வாரமிருமுறை வீடு துடைக்கும்போது
அனைவரின் பாதங்களும் வந்து விழுந்திருக்கும்
அம்மாவின் வாளிக்குள்.
வெயிலால் கறுத்த சொரசொரத்த
பாதம் அப்பாவினுடையது..
எப்போதும் ஈரத்தில் நின்று வெடித்த
பாதங்கள் அம்மாவினுடையதே..
ஒருகாலால் நடக்கும் தாத்தாவினுடையதானது
இரண்டாம் பாதமான ஊன்றுகோல்.
நாள்முழுதும் வீடெங்கும் சுற்றித்திரியும்
தம்பியின் பிஞ்சுப்பாதங்களை
கணக்கிலெடுக்கலாகாது.
சகஜமாய் வந்துபோன சரவணின்
பூட்ஸ் அணிந்த பாதங்களுடன்
சத்யாக்காவின் மருதாணிப் பாதங்கள்
படிதாண்டிய நாளிலிருந்து
துடைப்பதற்கு மனமின்றி அவள்
பாதங்களால் நிறைந்திருக்கிறது வீடு.

========
முன்னாள் காதலர்கள் சந்திக்கும் போது நினைவின் அடுக்குகளில் சுழலும் நீரோட்டத்திற்குள் சிலத் தருணங்களும், பரிதவிப்புகளும் வந்து சிக்கிக் கொள்ளும்... ஆண்கள் எளிதில் கடந்துவிடலாம். ஆனால் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் இருக்கும் போது ... தவிப்பை வார்தைகள் விழுங்குகின்றன!

எதிர்பாரா தருணமொன்றில்
சந்திக்க நேர்கிறதுன்னை..
என்னைக் காண்கையிலெல்லாம்
எப்போதும் மின்னல் தெறிக்கும்
உன் கண்களில் மருளின் இருள்..
கைகளின் நடுக்கத்தை மகளின்
கரங்களை இறுக்கி மறைக்கிறாய்..
எதுவும் சொல்லுமுன் கல்லூரித்
தோழனென அறிமுகம் செய்கிறாய்..
நேரிட்டு முகம் பார்க்கவியலாமல்
பயமும் பதட்டமுமாய் கைப்பையில்
ஏதோ துழவுவதாய் நடிக்கிறாய்..
"மாமாகிட்ட உங்க பேர் சொல்லுங்க"
அவர் சொல்கையில் குட்டி நீயாய்
இருக்கும் பாப்பாவின் பெயர்
நம் மகளுக்காய் யோசித்ததாய்
மட்டும் இருந்துவிடக்கூடாதென்ற
பரிதவிப்பை என்னிடம் கடத்திவிட்டு..

==========
பிள்ளைப் பேறுக்கு ஏங்கும் ஒரு பெண்ணின் மன உளைச்சல்தான் இந்தக் கவிதை!  ஒவ்வொரு விடாயின் போதும் ஏங்கும் மனத்தின் அலைச்சல்! ஒவ்வொரு மாதமும் வேண்டுதலில் தெய்வங்களின் கருணைச் சேகரிப்பு! இவையெல்லாம் விடிவுக்கு வருகிறது... முதுமையின் உதிரப் போக்கு முற்றிலுமாய் நிற்றலால்! வலி மிகுந்த வரிகள்...


கடைசிக்கோடு
ஒருசொட்டுச் சிறுநீர் விட்டு
இருகோடுகள் தெளியக் காத்து
ஒரு கோட்டை வெறித்துப்பார்த்து
விட்டெறியத் தேவையில்லையினி..

இரண்டு, பன்னிரெண்டென நாள்
கணக்குகள் எண்ணி மருத்துவர்
தேடவும் மருந்துகள் உண்ணவும்கூட
அவசியம் இருக்காதுதான்..

இந்த மாசமும் ஒண்ணுமில்லையா
துர்வாசகங்கள் கேட்காமல் தூர்வாரி
செவிப்பறையை ஆணி அறைந்து
சாத்திவிடலாம் நிரந்தரமாய்..

பத்தியமிருந்து உண்ணவும் உடல்
வலி பொருட்படுத்தாது உழைக்கவும்
கனவு கலைக்கவும் வேண்டியிருக்காது
உறைந்துவிட்ட உதிரப்போக்கால்..

மாதத்தில் பாதிநாட்கள் விரதமிருந்தும்
வேண்டுதலை நிராகரித்த கடவுளரை
வேண்டுதலை நிராகரிப்பது இம்முறை
சந்தேகமில்லாமல் அவளுடையதாகிறது.

=============
குழந்தைகளின் மழலை மொழியின் பேரன்பில் திளைக்கிறது இக்குறுங்கவிதை!

நீங்க எவ்ளோ நீளம்??
எனக்கேட்டு கைகளால்
முழம் வைத்து என்னை
அளக்கிறாள் குட்டிம்மா..
பூவாகிறேன் நான்..

=========

64 கட்டங்களில் தனித்திருக்கும் ராணி என்ற கவிதையில் குடும்பம் என்ற கட்டத்தில் நகர்ந்தாடும் ராணியின் பலங்களையும் பலகீனத்தையும் பேசுகிறது கவிதை! அவள் தன் பங்கை சிறப்பாக செய்தாலும் ராஜாவின் கடுஞ்சொல்லால் தன்னை விழுங்க பரமபதம் போல் ஒரு பாம்பு இருந்தால் நன்றாக இருக்குமே எனத் தவிப்பது கவிதையின் சிறப்பு!

எப்போதும் போருக்குப் போகுமுன்
நேற்று நீருற்றிய கவிதைகளில்
பூத்த பூக்களைத் தொடுத்து
தலை நிறைய சூடிக்கொள்கிறாள்..

தானாக உருமாற எதிரியின்
எல்லைவரை பயமின்றி செல்ல
வேண்டுமென்பதை சிப்பாய்க்கும்
கற்றுக் கொடுத்திருக்கிறாள்..

அவள் அருகாமையில் வந்து
செல்கையிலெல்லாம் மூச்சடைக்கிறது
இரு ராஜாக்களுக்கும் ஒருவனுக்கு
பயத்திலும் மற்றவனுக்கு பதட்டத்திலும்..

காப்பதே அவளென்பது அறியாமல்
ஓரடியே நகரும் அதிகாரமுள்ள ராஜா
இயலாமையில் எறிகிறான் வாளொத்த
சொற்களை இவள் ஊர்சுற்றி என..

பரமபத கட்டங்கள் போல்
சதுரங்கத்தில் ஏன் பாம்புகளே
இல்லையென்ற ராணியின் கேள்விக்கு
யாரிடமும் பதிலே இல்லை..

==============
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதில் திளைத்திருக்கும் அந்தவீடு ஒன்றுக்கு மட்டும் தயக்கத்துடனே காத்திருக்கிறது... நீங்களே வாசித்துப் பாருங்கள்:

அவனுக்குப் மிகப் பிடித்த அவல்,
வெல்லம், அச்சுமுறுக்கோடு சீடை,
வெண்ணை, பாயசம், பாசத்தோடு
சமைத்த பாரம்பரிய இனிப்புகள்,
பார்த்துப் பார்த்துச் செய்த ஒப்பனை,
வீடெங்கிலும் வண்ணக் கோலம்,
விதவிதமாய் மணக்கும் பூக்கள்,
சின்னச்சின்ன பச்சரிசிப் பாதங்கள்,
வழக்கப்படி எல்லாம் தயார்தான்..
எங்கள் வீட்டில் கண்ணனாக உலாவர
அடுத்த வீட்டு ஹர்ஷித்தை கொஞ்சநேரம்
இரவல் கேட்பது மட்டும்தான் பாக்கி

======.

பாசத்தின் வெளிப்பாடு என்பது தியாகத்தையும் உள்ளடக்கியதுதான் இல்லையா! இங்கு கவிஞர் தன் அம்மாயின் பாசத்தை ஆட்டுக் கறி குழம்பால் எழுதியிருப்பது காரமா? சுவையா!

அரைக்கிலோ ஆட்டுக்கறிய தேங்கா
செலவு அரைச்சு வெச்சு தண்ணிக் கொழம்பாக்கி ஆவிபறக்க அவிச்ச இட்டிலியோட ஆளுக்கு ரெண்டு
துண்டு அள்ளிப்போட்டு வளர்ற
புள்ள நல்லாச்சாப்பிடுன்னு ஊட்டாத கொறையா சாப்பிடச் சொல்ற
அம்மாயிய நீ சாப்பிடலயான்னா
போடி பொசகெட்டவளே ஞாயித்துக்
கெழம நா விரதம்லன்னு சிரிப்பா..
ஒருகாலத்தில அந்த அரைக்கிலோ கறியையும் அசராம சாப்பிட்ட
அம்மாயி எங்களுக்காகத்தான்
சைவமாச்சுன்னு ஒருநா பெரியய்யன்
சொல்லித் தெரிஞ்சதுக்கப்புறமா
ஆட்டுக்கறி ஏனோ ருசிக்கிறதேயில்லை..

===========
கவிஞரின் மற்ற கவிதைகளையும் காண்போம்::


"அம்மு இது தப்பா எழுதியிருக்க"
"ஓ அப்படியா டீச்சர்" எனக் கேட்டவளை
மடியில் அமர்த்தி எச்சில் தொட்டழித்து
சிலேட்டில் திருத்திச் சொல்லிக் கொடுத்த
ஒன்றாம் வகுப்பு எலக்ட்ரா சிஸ்டர்,

வெள்ளிக்கிழமை மாலை கடைசித்
தமிழ் வகுப்பு கவிதைக்கானதெனச்
சொல்லி "நிலா நீ வானம் நான்" எனும்
உளறல்களுக்கும் கைதட்டி கைநிறைய
மிட்டாய் வழங்கி ஊக்குவித்த தமிழய்யா,

கட்டுரையோ பேச்சோ ஓவியமோபோட்டி
எங்கு நடந்தாலும் கேட்காமலே பேரெழுதி
சொந்த செலவில் பத்திரமாய்க் கூட்டிப் போய்
திரும்ப வீடுவரை கொண்டு வந்துவிட்ட சபாபதி மாஸ்டர்,

ஜாதிமல்லி, மஞ்சளின் வாசனையோடு
சிரித்த முகமாய் தொழில்நுட்ப வரைபடம்
வரையக் கற்றுத்தந்த பிரேமா மிஸ், மாணவிகளையும்
மரியாதையாய் வாங்க போங்கவென அழைத்த கலைமணி சார்,

ஆசிரியர் தினத்தில் நன்றியோடிவர்களை
நினைவுகூர்கையில் வந்து தொலைகிறது
செய்யாத தவறுக்காய் குட்டைப்பாவாடையை
மேலேற்றி நறுக்கென தொடை கிள்ளிய
சொட்டை நாகராஜன் சார் ஞாபகமும்..
========

பரம்பரை வீட்டை விற்கச்
சம்மதிக்காததால் கடைசிவரை
பேசாமலிருந்த மாமாவிற்கும்,
திருமணத்தன்று இனி என்
மொகத்துலயே முழிக்காதேயென
முகம்திருப்பிய தாத்தாவிற்கும்,
உள்ளூரத் தவித்தாலும் வீராப்பாய்
தன்னைத் தவிர்த்த பாட்டிக்கும்,
நல்லாவே இருக்கமாட்ட என்று
மண்வாரித் தூற்றி சாகும்வரை
சாபமிட்ட சித்திக்கும் சேர்த்தேதான்
சோறு வைக்கிறாள் அம்மா..
அமாவாசையன்று

===========

அந்தக் கிறிஸ்துமஸ் முன்னிரவில்
சிவப்பும் வெள்ளையுமான நீண்ட அங்கியுள்
நுழைந்து குஞ்சம் தொங்கும் தொப்பியும்
வெண்பஞ்சு தாடியும் தரித்து சாக்குப்பை வழிந்து நிறைய
அவர்கள் வலிந்து திணித்து அனுப்பிய
மிட்டாய்ப் பரிசுகள் சுமக்க முடியாமல் சுமந்து
பிள்ளைகளுடன் ஜிங்கிள் பெல்ஸ் பாடி
வீடு வீடாக மெர்ரிகிறிஸ்மஸ் முழங்கி பரிசளித்து
பசியில் நடுங்கும் கால்களோடு பாதிநகரம்
சுற்றிக் களைத்து சுயமிக் கொண்டாட்டம்
ப்ரார்த்தனை முடித்து அனைவரும் அவரவர் வீடு
சென்றபின் வியர்த்து விறுவிறுத்து வீதியில்
வேஷம் கலைக்கும்வேளையில் தன்னைப் போலவே
தனித்து விடப்பட்ட ஏசுவைப் பார்த்து
ஏளனமாய்ச் சிரிக்கிறான்
முருகதாஸ் என்னும் சாண்டா க்ளாஸ்.

============

சிந்தாம சாப்பிடு
குட்டிம்மா என்கிறேன்
கண்டிப்பாய்..
அப்புறம் எறும்பெல்லாம்
எப்படிம்மா சாப்பிடும்
என்கிறாள்
அன்பைச் சிந்தி..

=========

கூண்டுக்கிளி.

கூண்டுக்குள்ளிருந்து
சோதிடனைப் பார்த்து
அவன்
சிறையிலிருப்பதாய்
நினைத்துச் சிரித்தது
கிளி.

தினமும் சீட்டுக்கட்டை
கலைத்துப் போட்டும் ரம்மி
விளையாடத் தெரியாதாம்
கிளிக்கு.

உங்க முகராசிக்கு
ஶ்ரீராமரே வந்திருக்கார்
எனும்போது
கீகீ என்றது கிளி
பொய் பொய்
என்றதன் பொருள்.

ஆடி போய் ஆவணி
வந்தா டாப்பா வருவீங்க..
ஆவணியிலும்
நெல்மணி தவிர
வேறேதுவும் வராதென
தெரியாதா கிளிக்கு?


சிவன், முருகன்,
பார்வதியெனச்
சீட்டெடுத்தாலும்
பூனையிடமிருந்து
காப்பாற்றுவதென்னவோ
கூண்டுதான்.

பறக்கத் தெரியும்தான்
எனினும் அவன் பட்டினி
காணச் சகியாமல்
வளர்ந்த சிறகையும்
சுருக்கிக்கொண்டது
கிளி.

===========

அல்லாடத் துவங்குகிறது மனம்,
துக்கத்தால் மூழ்குவதற்கும்
பாடலால் பறப்பதற்குமிடையில்.
இழவு வீட்டில் இளையராஜாவின்
பாடலொன்று எதிர்பாராமல்
காதில் விழுந்த கணத்தில்

============

பூசைகளற்ற பொழுதில்

அப்பாவீட்டு யாகத்துக்கே பேசாம
போயிருக்கலாம் பொழுதே போகாமல்
கொட்டாவி விடுகிறாள் பார்வதி..

அம்மா வீட்டிற்குப் போன வள்ளியும்
தெய்வானையும் வரும் நாளிற்கு
ஆவலாய் காத்திருக்கிறான் முருகன்..

யாரும் வராததை உறுதிப்படுத்தி
அரைமுட்டியை நீட்டி நிமிர்த்தி
ஆசுவாசமாக அமர்கிறான் ஐயப்பன்..

ஊர் சுற்றவில்லை எனினும்
எச்சரிக்கையாக குளிக்கக் கிளம்பிய
விநாயகனுக்கு எட்டவில்லை முதுகு..

குதிரையை அவிழ்த்து விட்டு
கள்ளிறக்கும் தோப்புக்கு காலாற
நடந்து போகிறான் ஐயனார்..

வெறித்த விழியும் துருத்திய
நாக்கும் வலிக்கிறதென கண்ணும்
வாயும் மூடுகிறாள் பத்ரகாளி..

கூழ் குடித்து சலித்துவிட்டதென
சூடானஇட்லி காரச்சட்னி தேடித்
தனியே கிளம்புகிறாள் மகமாயி..

அரிசியே இல்லாத வீடுகளில்
வெண்ணை எப்படித் திருடுவதென
ராதையைக் கேட்கிறான் கண்ணன்..

எரித்த சாம்பலிலும் கொரோனா
இருக்குமோ என்ற பயத்தோடே
சுடுகாட்டில் ஆடுகிறான் சிவன்..

=========

செல்லக்குட்டி புஜ்ஜூக்குட்டி
எனக் கொஞ்சி குழைவான
பருப்புசாதம் ஊட்டி எச்சில்
வழிந்த உடைமாற்றி வாசம்
நுகர்ந்து கன்னக் குழியில்
முத்தமிட்டு தூளியில் இட்டுத்
தாலாட்டி தூங்கும் அழகை
கண்ணார ரசிக்கும் வேளை,
மெதுவாகக் கதவு தட்டி, சாரி
கொஞ்சம் லேட்டாயிருச்சுக்கா..
அம்மு ரொம்ப படுத்திட்டாளா?
எனக்கேட்டவளிடம் உஷ்ஷ் என
தூங்குவதாய் சைகை காட்ட,
நன்றிச் சிரிப்பொன்றுதிர்த்து
மார்போடுதழுவி அவள் அள்ளிச்
சென்றபின் அவ்வளவு எளிதில்
தூக்கம் வருவதில்லை எனக்கு..

=============

நீ முதன்முதலில் பரிசளித்த 
டெடிபியர் அம்முவின் வருகைக்குப்பின் 
கண்ணிழந்து கையிழந்து முடமாகிப்
போனது..

நூற்றுக்கணக்கில் பத்திரப் படுத்தியிருந்த
மினுமினுத்த டெய்ரிமில்க் தாள்கள்
வீடு ஒழிக்கையில் 
குப்பைக்குப்போயிற்று..

காதலைக்கொட்டி கவிதை எழுதியிருந்த
க்ரீட்டிங் கார்டுகள் 
மையழிந்து மையலும் அழிந்து ப
ரணின் ஏதோவொருமூலையில்..

நீ எனக்காகப் பதியன் போட்ட சிவப்பு
ரோஜாத் தொட்டிகளில் ரோஜாக்களுக்குப்
பதிலாக கொத்தமல்லி பூத்திருக்கிறது..

பிறந்தநாட்களில் மணிக்கொருமுறை
நீட்டி திக்குமுக்காட வைத்த குட்டிக்குட்டிப்
பரிசுகள் உடைந்தும் ஒட்டடை அடைந்தும்..

அலுவலகம் செல்லுமுன் இதழ் முத்தமும்
இழுத்தணைத்தலும் கார் சாவி எங்கடி
சனியனேவில் கரைந்து காலமாயிற்று..
அழுக்குநைட்டியுடன் அடுக்களையில் நானும்
கையில் காபியும் செய்தித்தாளுமாய் நீயும்..
மௌனமாய் கடக்கிறது தினங்கள்..
இருப்பினும் எவரேனும் நீங்க லவ் மேரேஜா
எனக்கேட்கையில் விரிந்த புன்னகையுடன்
ஆமாமென்பது காதலில்லாமல் வேறென்ன?

=========

தேவதையல்ல நான்,
ஓர் சூனியக்காரிதான்..
அதிராமல் அன்பு காட்டவும்
உதிராமல் உள்ளம் நீட்டவும்
தெரிந்ததில்லையெனக்கு..
ஒருநாள் நீயறியாமலேயே
உன்னையென் கோட்டைக்கு
மாயக் கம்பளத்திலேற்றி
கடத்திச் செல்வேன்..
தப்பிக்க இயலாதவாறு வசியம்
செய்து வசப்படுத்துவேன்..
கூரிய பார்வையில் அனைத்தும்
பகிர்ந்தென் சூரியனாக்குவேன்..
ரசனைமிகு ரசவாதத்தால்
ரகசியமாய்க் கொல்வேன்..
முற்றும் மறக்கவைத்து
முத்தமிட்டே முக்தி தருவேன்..
அதற்கென்ன..நான் அப்படித்தான்..
ஆமாம்..நான் சூனியக்காரிதான்..
என்னைத் தெ(ரி)ளிந்து கொள்..
இனியும் பிடித்திருந்தால் சொல்.

===========

தொடாதே
என்றவனின்
தீட்டையும்
வெளுத்தான்
வெள்ளாவியில்

==========

மெத்தென்று ஊத்தப்பமாக
மேலே வெங்காயம் பொடி
தூவி நன்கு வெந்திருக்க
வேண்டும் அப்பாவுக்கு..
அதிக கனமில்லாமல் இருபுறமும்
திருப்பி நல்லெண்ணை ஊற்றி
சிவந்து பதமாக இருக்க
வேண்டும் அப்பத்தாவிற்கு..
மணக்க மணக்க தாராளமாய்
நெய் விட்டு அகலமாய் மெலிதாய்
முறுகலாய் தந்தால் அடித்து
நொறுக்குவான் அண்ணன்..
சின்னதாய் எண்ணை இல்லாமல்
மூடிவைத்து ஒருபுறம் இட்லியாவதும்
மறுபுறம் தோசையாவதும்
எனக்கு மிகவும் விருப்பமானது..
அனைவருக்கும் அவரவர்க்குப்
பிடித்த விதமாய் ருசியறிந்து
தோசை சுட்டுத்தரும் அம்மாவிற்கு
பிடித்தது எந்தவிதமென்று
தெரியுமோ என்னவோ கடவுளுக்காவது?

===========

பால்யத்தின் வண்ணங்கள்.

பள்ளிச்சீருடையின் நீலம்,
சிலேட்டுகளின் சாம்பல்,
புத்தக அட்டைகளின் பழுப்பு,
சுதந்திரதி்ன மிட்டாயின் ஆரஞ்சு,
பூவரசம் பீப்பீகளின் பச்சை,
தித்திக்கும் மிட்டாயின் ரோஸ்,
தின்பண்டக் குடலின் மஞ்சள்,
வாலாட்டும் நாய்க்குட்டியின் கருப்பு,
துவர்க்கும் நாவலின் கருநீலம்,
உள்ளங்கைகளின் மருதாணிச் சிவப்பு,
சடை பின்னிச் சூடும் கனகாம்பரம்,
டிசம்பர்ப் பூக்களின் ஊதா,
மற்றும், மனதின்
பால்வெள்ளை நிறத்துடனும்
இருந்தது நம் பால்யம்.

==========

அரளிச் செடிகளின் நிழலில்
இளைப்பாற இயலாமல்
ஒற்றைக் காலில் தவமிருக்கிறார்
நெடுஞ்சாலை அய்யனார்..
விரையும் வாகனங்களை வெறித்தபடி

========

View

மாதாந்திர பரிசு

நாடன் சூர்யா

View

மாதாந்திர பரிசு

முத்துக்குமார் சங்கரன்

View

மாதாந்திர பரிசு

ஆர் ஜவஹர் பிரேம்குமார்

View

மாதாந்திர பரிசு

இளங்கவி நடுநாட்டுத்தமிழன்

View

Showing 281 - 300 of 727 ( for page 15 )