அருண்மொழி வில்லாளன்
கவிதை வரிசை எண்
# 236
மாண்புமிகு மகளிர்
பாட்டால் பெண்களை பண்புடன் உயர்வாய் போற்றி/
ஏட்டில் பெண்ணியம் எடுத்துரைக்கும் மாய உலகில்/
வரலாற்றை மாற்றிய வஞ்சகர்களின் புகழாரங்களை நினைக்க/
நிரந்தர ஏமாற்றம் நித்தம் நெஞ்சை பிசைகிறது/
ஏற்றம் கண்டு இம்மையில் இன்பம் சேர்க்க/
மாற்றம் வேண்டும் மண்ணுலகில் மனிதம் வாழ்வதற்கே/
மதுவாய் மாதுவாய் மங்கையை வர்ணித்தது போதும்/
புதுமைப்பெண் இவள் புரட்சிகள் செய்ய வல்லவள்/
பூவென்றுச் சொல்லி பூவையரைப் புகழ்வதை விடுத்து/
தீயென்று எண்ணிப்பார்த்தால் தீண்ட மறுப்பான் கயவன்/
மூடர்கள் மத்தியில் முடங்கிக்கிடந்த பெண்ணறம் தழைக்க/
வேடதாரிகளின் முகத்திரையை வேரறுக்கத் துணிந்திடடி கண்ணம்மா/
பிரசவிக்கும் வலிகள் பிரபஞ்சத்தில் மங்காத வானவில்லாய்/
முரசு கொட்டட்டும் முன்னேறும் நேரமிது கண்ணே/
அடுக்களையே கோவிலாக அடைபட்ட நாட்கள் போகட்டும்/
படுக்கைக்கு மட்டுமே பாவை தேவையென்பது மாறட்டும்/
நிராகரிக்கப்பட்ட உரிமைகள் நிரந்தரமல்ல உணர்ந்திடு பெண்ணே/
பராசக்தியாய் உருமாறி பாரினில் போராடத் துணிந்தெழு/
கசிந்துக் கொண்டிருக்கும் கண்ணீரைத் துடைத்தெழு அன்பே/
விசித்திரப் புவியிது வேற்றுமையில் உறவாட விரும்புது/
அகிலத்தின் பெருஞ்சக்தியாய் ஆற்றலைக் கொண்ட தேவியே/
சகித்து வாழ்ந்து சஞ்சலங்களில் வீணே சுழலாதே/
ஆணாதிக்க சமூகத்தில் ஆணிவேராம் பெண்ணின் அடிமைத்தனம்/
பேணாத பெண்ணறம் பேச்சளவில் உள்ளதடி கண்மணியே/
அருண்மொழி வில்லாளன்
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்