logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

தங்கே*

சிறுகதை வரிசை எண் # 99


ஆற்றோடு தாமரைக்கு ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றுத் தண்ணீர் மீது அலாதியான பிரியம் அந்த நொடியில் நெஞ்சில் எழுந்தது. வாழ்வில் முன் எப்போதும் இந்த நதியின் மீது அவளுக்கு இவ்வளவு பிரியம் ஏற்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆறு இளம் பச்சை நிறத்தில் சுருள் சுருளான நுரையோடு ஓடிக் கொண்டிருந்தது. அருகே இருந்த சிறிய சுழலுக்குள் விழுந்து எழும் தண்ணீர் , குடை ராட்டினம் சுற்றுவது போல கட கடவென்று சத்தம் கொடுத்தபடியே ஓடுவதைப் பார்ப்பதற்கு மிகுந்த வேடிக்கையாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள் . கரையில் யாரும் இல்லை. எங்கு பார்த்தாலும் தும்பைப் பூவாக பூத்துக் கிடந்தது . மறுகரை வரப்புகளில் நாணல் செடிகளும் , கோங்கு மரங்களும் தலைகளை அசைத்தபடியே தண்ணீருக்குள் முகம் பார்த்துக் களித்தன. இது என்ன மாதம் என்று அவள் யோசித்தாள். சித்திரை மாதம் என்று மனதில் பட்டதும் , ரவியின் நினைவு கூடவே வந்தது. ‘ படு பாவி இந்த கூட்டுக்கு லப் டப் சத்தத்தை மட்டுத் தந்து விட்டு இந்த நதியோடு நதியாக கரைந்து போய் விட்டான். ஏதேதோ நினைத்தவள் , சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டாள். வாழ்வில் இந்த நொடிக்கு மட்டும் சாவென்பதே இல்லை போலும். இந்த முல்லையாற்று ஆற்றுத் தண்ணீர் அத்தனையும் அவளது நெஞ்சுக்குள் பாய்ச்சினாலும் , ,உள்ளேயிருக்கும் அவனைத் தூக்கி வெளியே வீசிவிட முடியாது என்று அவளுக்குத் தெரியும் . தும்பைப் பூக்களின் காலடியில் சிறு சிறு நண்டுக் குஞ்சுகள் தங்களது சின்னஞ் சிறிய கொடுக்குகளை தூக்கிக் கொண்டு பள்ளிப் பிள்ளைகள் அலைந்து திரிந்தன. கீர்த்தி வாசன் கரையை விட்டுக் கொஞ்சம் தள்ளியிருந்த , ஒரு மஞ்சனத்தி மரத்தின் அடியில் நின்று ஆற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவனும் இப்போது ஆற்றுக்குள் இறங்கி , அவளுடன் சேர்ந்து மூழ்கி எழுந்தால் , மிகுந்த ஆசுவாசமாக இருக்குமென்று நினைத்தாள். அவனை அழைக்கலாம் என்று ஒரு யோசனை , அது சரியாகத் தோன்றவில்லை , அதை வேண்டாமென்று விட்டு விட்டாள். அழைத்தாலும் அவன் வரமாட்டான் என்று நினைத்துக் கொண்டாள் . பிள்ளை தோளுக்கு மேல் வளர்ந்து விட்டான். பெரிய ஆளாகி விட்டோம் என்ற நினைப்பு வேறு. இதே ஆற்றில் எத்தனை முறை அவளது கழுத்தை இறுக்கமாக கட்டிக் கொண்டு ‘ அம்மா எத்தாம் பெரிய ஆத்து ‘ என்று இரு கைகளையும் விரித்து அவன் மழலையில் நடுங்கிக் கொண்டே இவன் உளறியிருப்பான் என்பதை நினைக்கும் போது அவளுக்கு உதடுகளில் ஒரு புன்னகை மலர்ந்தது. ரவி இருந்தால் அவனை கரையோரம் தண்ணீரில் பொத்தென்று தூக்கிப் போட்டு விடுவான். அவனை இரண்டு மடக்கு தண்ணீரை குடிக்க விட்டு , பிள்ளை தத்தக்கா பித்தக்கா என்று நீச்சல் அடிக்கும் போது சமயம் பார்த்து , துண்டைப் போட்டு , அவனது மார்போடு சுற்றி அவனிடம் இழுத்துக் கொள்வான். பிள்ளை ‘ வீல் ‘ என்று அலறியபடி பயமும் மிரட்சியுமாக கரைக்கு வரும் போது அவள் ரவியிடம் ‘ ஏய் என்ன தெனாவட்டா ? பிள்ளையை மீன் பிடிக்கிற மாதிரி பிடிச்சு இழுத்துகிட்டிருக்கீங்க ? ’ என்று கேட்பாள். அதற்கு ரவி ‘ உன்னை மாதிரி கரையிலயே பயந்துகிட்டு நிண்டுகிட்டு இருந்தா என்னிக்கு அவன் நீச்சல் பழகுறது. , ஆத்தோட தண்ணீர் அலை மோதிப் போனாலும் , கையில அள்ளித்தான் குளிக்கனும் , விடு , அவனைப் பயமுறுத்தாத , அவனாவது நீச்சலை பழகிக்கிறட்டும் ‘ என்று சொல்லுவான். தாமரை ஓடும் ஆற்றை ஒரு கை அள்ளி உள்ளங்கையில் வைத்துப் பார்க்கிறாள். சுற்றி சுற்றி வரும் நினைவின் சுவாசங்கள். இந்த நதியைப் போலவே நினைவுகளுக்கும் என்றும் சாவில்லை போல என்று அவள் நினைத்துக் கொண்டாள். மீண்டும் ஒரு முறை தண்ணீருக்குள் மூழ்கினாள். இது எத்தனையாவது முறை என்று கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. தண்ணீருக்கும் உள்ளே ஆற்றின் உடல் வெது வெதுப்பாக அவளை ஆதி அந்தமாக தழுவிக் கொண்டது. சிறு வயதில் தன் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு கதைக்காக அவளது வாயையே பார்த்துக் கொண்டிருந்த காலம் குபீரென்று ஞாபகத்திற்குள் வந்தது. அம்மா ‘ ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாரு . ரொம்பப் பேரு பெத்த ராசா . அவருக்கு ஒரு வித்தியாசமான ஆசை இருந்துச்சாம் . ‘ என்னது ‘ ? என்று இவள் கேட்பாள் . அந்த தேசத்துலயே ரொம்ப நீளமான தலை முடி உள்ள கன்னிப் பொன்னைத் தேடி கல்யாணம் செஞ்சிக்கிரனும்னு அவருக்கு ஆசை ‘ இவள் கண் கொட்டாமல் அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள் அம்மா இவளது தலை முடியை வாஞ்சையாகக் கோதி விடுவாள். நன்றாக கட்டியிருந்தாலும் , கருப்பு ரிப்பனை அவிழ்த்து விரல்களாலேயே இவளது முடியை கோதி சீவி விடுவாள்.. ‘ கண்ணே நீ உறங்கு கான மயில் உறங்கு பொன்னே நீ உறங்கு . பூ மரத்து வண்டுறங்கு அவளது விரல்கள் நீளமானவை. வயல்களில் வேலை செய்த கைகள் அவளுடையது. விரல்களெல்லாம் நல்ல திரட்சியான மரச்சீப்பு போல இருக்கும். ‘ பட்டெடுங்க தொட்டி கட்ட எந் தங்கத்துக்கு பவுனு எடுங்க காது குத்த தங்கத்துல தட்டெடுத்து தாய் மாமன் வருவாரு வெள்ளியில பட்டு செஞ்சு விடிகாலை வருவாரு ‘ அம்மாவின் குரல் அவளது தூக்கத்தில் நீண்ட நேரம் கேட்டுக் கொண்டேயிருக்கும் . எப்போது உறக்கம் வந்தது என்று தெரியாது. ஆனால் அவள் அதை கேட்டபடியே உறங்கிப் போயிருப்பாள். தாமரையின் நீண்ட நெளிந்த கருத்த கூந்தல் தானாக அவிழ்ந்து போய் பாதி தண்ணீரின் மேற்பரப்பில் கரடியின் உரித்த தோல் போல மிதந்து கொண்டிருந்தது . முகம் பச்சை அல்லி மலர் போல மிதந்தது . சிறு சிறு அயிரை மீன்கள் அவள் முகத்தையும் கெண்டைக் கால்களையும் தின்று தீர்த்து விடலாம் என்று கூட்டமாக வந்து மொய்த்தன. அப்படியே இந்த ஆற்றுக்கு இரையாகி விட்டால் கூட பரவாயில்லை என்று அவள் நினைத்தாள். தன்னுடைய உருவமும் மனதும் கரைந்து ஏதுமற்றதாகிப் போய்விட வேண்டும் அல்லது எடையற்று சிறிய நீர்க்குமிழ் போல ஆகி காற்றில் பறந்து உடைந்து போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் .. ஒவ்வொரு முறை மூழ்கி எழும் போதும் இது தான் கடைசி முறை என்ற எண்ணம் அவள் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. கல்யாணத்துக்குப் பிறகு ரவியோடு இந்த ஆற்றுக்கு அவள் எத்தனை முறை வந்திருப்பாள்? ! ஒவ்வொரு முறையும் நீச்சல் சொல்லிக் கொடுக்கிறேன் பேர் வழி என்று சொல்லி விட்டு, இவளுடைய சேலையை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு , மறு முனையை அவளுடைய இடுப்பைச் சுற்றி கவனமாக முடிச்சிட்டு விட்டு, அவளை சற்று ஆழமான பகுதி வரைக்கும் அழைத்துச் சொல்வான் . ‘ ம் கையை காலை வீசி நீச்சடிம்மா ‘ என்று சொல்லுவான் .அவளுக்கு அப்படி வராது . துணி மணிகளெல்லாம் தெப்பலாக நனைந்திருக்க அவனது கழுத்தைச் சுற்றி தனது இரண்டு கைகளாலும் வளைத்து பிடித்துக் கொள்வாள். பயம் அடிவயிற்றில் தொற்றிக் கொள்ளும் . அலைமோதும் ஆற்று வெள்ளம் தன்னை அப்படியே அடித்துக் கொண்டு கண்காணாத இடத்திற்கு போய் சேர்த்து விடும் என்று அவனிடம் சொல்வாள். ‘ இப்ப என்னம்மா இங்கயிருந்து நீ இப்பிடியே கிளம்பி போயிட்டேனா , உன்ன நான் வீரபாண்டி அணைக்கட்டுல வந்து சந்திச்சுக்கிறேன் . அப்படியே இரண்டு பேரும் ராத்தலா கிளம்பி , கௌமாரி அம்மன் கோவிலுக்கு போயிட்டு சாமி கும்பிட்டு திரும்பி வந்துருவோம் ‘ அவ்வளவு தான என்று அவன் நக்கலாக சொல்வான். பதிலுக்கு அவள் ‘ என்னை சீக்கிரம் அனுப்பி விடனும்னு ரொம்பத்தான் ஆசை போல இருக்கு ? ’ என்று கேட்பாள். ஆற்றுத் தண்ணீர் அடித்துக் கொண்டு போவது கூட அவளுக்கு பயம் இல்லை . அவனை விட்டுப் பிரிந்து போய் விடுவோமோ என்ற பயம் தான் கலவரப்படுத்தி விடும். தண்ணீருக்குள் நின்றால் , எப்போதும் அவனது கையோடு கை கோர்த்துக் கொள்வாள். எப்படி தண்ணீருக்குள் கூட எவனது கையை ஒரு நொடி கூட விட்டு விடக் கூடாது என்று நினைத்தாலோ , அவனே ஒரு நாள் அவளிடம் வந்து , அவளது கையை விட்டு விட்டு பிரிந்து போய் விடப் போகிறேன் என்று சொன்ன போது தான் அவள் வாழ்க்கை என்றால் என்னவென்று கண்டு கொண்டாள். சனிக் கிழமை அவனுக்கும் பிள்ளைக்கும் விடுமுறை நாள் அது. ரவி ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் விளையாட்டாக நீட்டி ‘ இங்க பாரும்மா , உனக்கும் எனக்கும் ஒரு போட்டி , இதில நான் சொல்றபடி தப்பு இல்லாம எழுது பார்ப்போம் , என்றான் அவன் ‘ அப்படி நான் எழுதிட்டேன்னா ? என்று சொன்னாள் அவள் ‘ அப்டிப நீ எழுதிட்டா , நான் நீ கேட்குறதையெல்லாம் வாங்கித் தர்றேன் ‘ என்றான். சரி விளையாட்டாகத் தான் சொல்கிறான் என்று அவன் சொல்ல , சொல்ல அவள் எழுத ஆரம்பித்தாள். அவன் எப்போதும் இப்படித்தான் அவளிடம் ஏதாவது விளையாட்டாக கலாட்டா செய்து கொண்டேயிருப்பான். அநேகமாக ஒவ்வொரு முறையும் அவள் தான் ஏமாந்து போவாள். சில நேரம் அவன் விளையாட்டுக்காகத்தான் , அப்படி பேசுகிறான் என்று தெரிந்தும் கூட அவள் ஏமாறுவமுவது போல நடித்துக் கொண்டே விட்டுப் பிடிப்பாள். எங்கே போய் விடுவான் இவன். கடைசியில் இங்கே வந்து தானே ஆக வேண்டும் என்ற நினைப்பு எப்போதும் இருக்கும். அவனை முழுதாக நம்பி , அவன் வாழ்க்கைக்குள் அவள் வந்த போது , அவனுக்கு நிரந்தரமாக தொழில் என்று ஒன்றும் அமைந்திருக்கவில்லை. என்ன நம்பிக்கையில் அவனை நம்பி அத்தனையையும் தூக்கிப் போட்டு விட்டு அவனோடு இவள் வந்தாள் என்று நினைத்தால், இப்போதும் கூட அவளுக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கும். இருவரும் பக்கத்து பக்கத்து ஊர்காரர்கள் தான் என்றாலும் , வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஊருக்கு மேற்கே நாலு எட்டு வைத்தால் முதலில் மாணிக்க வாசகர் கோவில் வரும் , அதை தாண்டினால் பதினெட்டாம் கால்வாய் , அப்படியே தெற்கே திரும்பி பார்த்தால் சந்தனம் கோவில் தெற்கே பார்த்தால் பாளையம் வரைக்கும் நெல் வயல்கள் தான் . அப்படியே நாலு எட்டு எடுத்து வைத்து நடந்தால் சிவகாமி அம்மன் கோவில் வந்து விடும். அதையும் தாண்டினால் கரை புரள , என்றும் கருணை வள்ளல் பென்னி குக்கின் பேரைச் சொல்லி ஓடிக் கொண்டிருக்கும் இந்த முல்லைப் பெரியாறு . ஆற்றுப் பாலத்தை தாண்டி தென்னை சூழ்ந்த வயல் பாதையில் நேராக நடந்தால் , நேராக மார்க்கையன் கோட்டையில் கொண்டு போய் விட்டு விடும் . அடுத்தது அவளது ஊர் தான். அம்மாவும் அப்பாவும் அவளை எவ்வளவோ சொல்லி தடுத்துப் பார்த்தார்கள் உருட்டல் மிரட்டல் கெஞ்சல் கெதறல் எதுவுமே இவளிடம் எடுபடவில்லை. ‘ நாம வேற அவங்க வேற ஆளுங்க தாயி . நாம ராமர் சாமி கும்பிடுறவங்க . அவங்க வேற வகையறா. ஆட்டை வெட்டி அப்படியே ரத்தத்தை உறிஞ்சி குடிப்பான் பூசாரி . அருவாள் மேல உட்கார்ந்துட்டு ஆடிப்போற ஏழரசன் கோவில் கும்பிடுறவங்க அவுங்க , எப்படி பார்த்தாலும் நமக்கு ஒத்து வராது அம்மா . நாளைக்கு நாலு எட்டுல நீ இங்க வந்து கண்ணை கசக்கிக்கிட்டு வந்து நின்னேயின்னா அப்பா மனசு தாங்காதும்மா ‘ என்றார் அப்பா . ‘ டியூசன் படிக்கப் போனா பேசாம படிச்சிட்டு வரவேண்டியது தானா . வாத்தியாரு நல்லா சொல்லி குடுக்குறாருன்னா அதுக்காக அவங் கூடவே ஆராச்சும் வாழனும்னு நினைப்பாங்களா ? இதெல்லாம் ஒத்து வராது பாப்பா. ‘ என்று அம்மா கனிவாகப் பேசிப் பார்த்தாள். ஒன்றும் நடக்கவில்லை. அடுத்ததாக அப்பா மிரட்டி கூடப் பார்த்தார். குடும்பத்தோடு நாண்டு செத்துப்போவதாக அம்மா அழுதாள். இவள் மனது எதற்கும் இரங்கவில்லை. ஒரு நாள் வகுப்புக்கு போனவள் வீடு திரும்பவில்லை. அப்படியே கேசுவோடு சென்று விட்டாள். ஒரு வாரம் கழித்து அவர்கள் இருவரும் அவனது வீட்டிற்கு திரும்பிய போது , இரண்டு ஊர்களுக்கும் இடையில் எவ்வளவோ நடந்து முடிந்திருந்தது . போலிஸ் தலையிடாமல் இருந்திருந்தால் வெட்டுக் குத்து வரைக்கும் கூட போயிருக்க வேண்டியது என்று சொல்லிக் கொண்டார்கள். இவளை போலிஸ் ஸ்டேசனுக்குப் பார்க்க வந்த அவளது குடும்பத்தார் எல்லோரும் அவளது பிடிவாதத்தைப் பார்த்து விட்டு , அவனைத்தான் கண்டமானைக்கு திட்டி தீர்த்து விட்டுப் போனார்கள். அம்மா ஸ்டேசன் வாசலியே மண்ணை வாரித் தூற்றி விட்டு ‘ நீ வௌங்க மாட்டேடி வௌங்க மாட்டே ‘ என்று தெலுங்கிலேயே சாபம் கொடுத்து விட்டுப் போனாள். அப்பா நேராக துண்டை உதறி தலையில் போட்டுக் கொண்டு போய் , பெரியாற்றில் கரையில் உட்கார்ந்து கொண்டு , அய்யரை வரச் சொல்லி , மகள் இறந்து போய் விட்டதாக இவள் பெயரைச் சொல்லி , காரியம் செய்து விட்டு , எள்ளும் தண்ணியும் இரைத்து விட்டு வீடு போய் சேர்ந்தார் . அப்படியே வருடக் கணக்காக பேச்சு வார்த்தை விட்டுப் போனது . தலை நாளில் கீர்த்தி வாசன் பிறந்த போது தான் மீண்டும் இவள் வீட்டிற்கு வரப் போக ஆரம்பித்தார்கள். சும்மா சொல்லக் கூடாது . தலை நாளில் மகன் பிறந்த நேரம் புருசனுக்கு மாவட்ட தலைமை கோர்ட்டில் டென் ஏ ஒன்னில் தற்காலிகமாக டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது. சில வருடங்களில் அதுவும் நிரந்தரமாகி விட்டது. அவளும் வீட்டோடு இருந்து விட்டாள். அப்படித்தான் ரவியும் அவளை உள்ளங் கையில் தாங்கினான். தன் வீடு நடந்து போய் விடும் தூரத்தில் தான் இருக்கிறதென்றாலும் அவள் எட்டி கூடப் பார்க்கவில்லை . அம்மாவும் அப்பாவும் பெரியவர்களும் வந்து , இரண்டு குடும்பத்தார்களும் சேர்ந்து இரண்டு சொம்புகளில் நிறைத் தண்ணீர் வைத்து கூடிக் கும்பிட்டார்கள். எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடி கூப்பிட்ட பிறகு தான் தாமரை தன் புருசனோடும் பிள்ளையோடும் ஊரே வேடிக்கை பார்க்க தன் பிறந்த வீட்டுக்குப் போனாள். அவ்வளவு வைராக்கியம் பிடித்தவள் அவள். அவள் என்றுமே மாறவேயில்லை. ஆனால் ரவி கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே வந்திருக்கிறான் இளநீருக்குள் தேரை எப்போது போனதோ அவள் என்ன கண்டாள் ? எத்தனையோ வழக்குகளில் தீர்ப்புகளை நீதிபதிகள் சொல்லச் சொல்ல தட்டச்சு செய்வதால் , ஒரு கட்டத்தில் அவனுக்கு தானே தீர்ப்பு எழுதுவதாக திமிர் வந்து விட்டது அது பேச்சிலும் அவ்வப்போது தலை காட்டியது அப்போதெல்லாம் அவள் தான் , அவன் தலையில் தட்டி ‘ எல்லாம் சிவகாமி அம்மன் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கா . ரொம்ப ஆட வேண்டாம் ‘ என்று புத்தி சொல்லுவாள். அவன் கிண்டலுக்கு சிரிப்பான். அவள் ‘ ஆம்பளைகளாள என்னைக்குமே அடக்க ஒடுக்கமா இருக்க முடியாது ‘ என்று போகிற போக்கில் அவனது இடுப்பை பெலம் கொண்ட மட்டும் கிள்ளி வைத்து விட்டுச் செல்வாள். அவளுக்கு எதுவுமே அவன் போக்கில் மாற்றம் தெரியவில்லையென்றாலும் அவளுக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் அவன் ‘ முன்னைப் போல இல்லை ‘ என்று சொன்னார்கள். அவள் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆற்றுக்குள் இன்னொரு முறை மூழ்கி எழுந்த போது அந்த சுழலுக்குள் செல்லும் தண்ணீரைப் போல தன் வாழ்க்கை ஆகி விட்டது என்று நினைத்துக் கொண்டாள். பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த சுழலுக்கள் இருந்து ஒரு பருத்த தண்ணீர் பாம்பு அவளைத் தாண்டி நீந்திப் போனது . அவள் ஒரு கணம் அதிர்ந்து நின்றாலும் பயத்தில் கத்தவில்லை. நினைவுகள் ஒரு சுழலைப் போல எங்கெங்கோ சுழற்றிக் கொண்டு சென்றது. தான் எழுதிய கடிதத்தை மறுபடியும் வாசித்துப் பார்த்தாள். என்னுடைய உடலும் மனதும், எனக்கு சரீரத்தில் உள்ள நோயின் காரணமாக , தாம்பத்ய உறவிற்கு முழுமையாக ஒத்துழைக்க முடியாத காரணத்தால், என் கணவர் மேற்படி அவருடைய சொந்த சவுகரியத்திற்காக எனது முழு சம்மதத்தின் பேரில் , அவருடன் பணி புரியும் ஆனந்தி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதற்கு எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த திருமணத்திற்கு முழு மனதுடன் நான் சமதிக்கிறேன் என்றும் உறுதியளிக்கிறேன் இது நான் முழு புத்தி சுவாதீனத்துடன் எழுதிக் கொண்ட கடிதம் ஆகும் .. ‘ கடிதத்தை இப்படி முடித்து விட்டு ‘ கீழே உன்னுடைய கையெழுத்தைப் போடு ‘ என்று அவன் சொன்னான் அவளுக்கு மனதுக்குள் ஒரு திடுக்கிடல் எழுந்தது . ஆனாலும் அவன் சொன்னபடி கையெழுத்து போட்டு விட்டு , அவனை அண்ணாந்து பார்த்து சிரித்தாள். அந்த சிரிப்பில் இன்னும் குழந்தைத்தனம் ஒட்டிக் கொண்டு இருந்தது ஏதோ தன்னை வைத்து விளையாடுகிறான் என்றுதான் முதலில் நினைத்தாள். ‘ ஆமா இன்னைக்கு உங்களுக்கு விளையாடறதுக்கு உங்களுக்கு வேற விசயமே கிடைக்கலையா ‘ என்று கேட்டாள். அவன் ‘ நான் நிசமாத்தான் சொல்றேன். கோர்ட்ல ஏங்கூட வேலை பார்க்குற ஆனந்தியை உனக்குத் தெரியும்ல ? அந்தப் புள்ளதான் இப்படி சொல்லுச்சு ‘ என்றான். அவள் ஒரு நிமிடம் பேச்சற்று சிலையாக நின்ற போது ‘ அது நல்ல புள்ளைம்மா , நல்லா கை நிறைய சம்பளம் வாங்குது , நாம எல்லாம் ஒரே வீட்லயே இருந்துக்கலாம்னு வேற சொல்லுது , அதுக்கும் யாரும் சொந்தம்னு சொல்லிக்கறதுக்கு கூட இல்லை ‘ என்றான் இப்போது தான் அவளுக்கு இருதயம் பட்டென்று பிளந்தது போல ஒரு நெஞ்சில் தெறிப்பு உண்டானது. கடிதத்தை சுக்கு நூறாக கிழித்துப் போட்டு விட்டு அழ ஆரம்பித்தாள். ‘ ஏ பைத்தியம் இங்க பாரு , உனக்குப் பிடிச்சிருந்தாதான் அந்தப் புள்ளைய இரண்டாம் கல்யாணம் முடிச்சு நம்ம வீட்ல வச்சுக்கிருவோம் . உனக்குப் பிடிக்கலைன்னா சொல்லு , எங்கேயாவது தேனிப் பக்கம் வீடு பார்த்து வச்க்குறேன். ஆனா சத்தியா உன்னையும் கீர்த்தியையும் மட்டும் எப்பவும் விட்டுறவே மாட்டேன் என்றான். அவள் நிறுத்தி நிதானமாக ‘ நீங்க தாராளமா அவளையே முடிச்சுக்கோங்க ஆனா முதல்ல எனக்கொரு கல்யாணம் பண்ணி வச்சிட்டு , அப்புறம் உங்க கல்யாணத்தை வச்சுக்கோங்க ‘ என்றாள். அவன் அவளை முகத்தோடு சேர்த்து அறைந்தான் அப்போது அவனது முகம் கோபத்தில் உறுமும் பன்றியைப் போல இருந்தது. அவள் பெரும் சப்தமெடுத்து அழ ஆரம்பித்தாள். வெளியே போய் விட்டு அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த கீர்த்தியும் என்னவென்று தெரியாமல் திகைத்துப் போய் அவள் பக்கத்தில் அவளது தோளை பிடித்துக் கொண்டான், அவளது கன்னத்தில் ரவியின் விரல்கள் அப்படியே பதிந்திருந்தன. அவனுக்கும் அழுகை வந்தது- அடுத்த ஆறு மாதங்களுக்கு தாயும் பிள்ளையும் அந்த வீட்டில் இப்படி அழுது கொண்டே தான் இருந்தார்கள். இடையில் ரவி ஒரு நாள் இரண்டு நாள் என்று ஆனந்தியோடு போய் தங்க ஆரம்பித்தான். வீட்டுச் செலவுகளுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தவன் , ஒரு கட்டத்தில் அதையும் நிறுத்தி விட்டான். அவளுக்குச் சாப்பாட்டிற்கும் பிள்ளைக்கு பள்ளிக்கூட பீசு கட்டுவதற்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏதாவது மெட்ரிக் பள்ளியில் ஆசிரியை வேலை கிடைக்குமா என்று தெரிந்தவர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய வீட்டிலும் அவனுடைய வீட்டிலும் கலந்து பேசி , அவளை போலிஸ் ஸ்டேசனில் கம்ப்பெளெயின்ட் கொடுக்கச் சொன்னார்கள். அவள் மறுத்து விட்டாள். அவளது போக்கே அப்படித்தான். அவன் இப்போது எப்படிப் பட்டவனாக மாறிப் போய் விட்டாலும் கல்யாணமான இந்தப் பத்து பதினைந்து வருடங்களாக அவளை நல்ல முறையில் தான் கவனித்துக் கொண்டான். இவளுக்கு நகையெல்லாம் எடுத்துப் போட்டிருக்கிறான். குழந்தை கீர்த்தியையும் நல்ல முறையில் தான் பார்த்துக் கொண்டான். கொஞ்சம் பணத்தின் மீது ஆசைதான் ஆனால் அதற்காக இது வரை பொறந்த வீட்டிலிருந்து அது வாங்கி வா இது வாங்கி வா என்று ஒரு நாளும் விரட்டியதில்லை. இங்கே வேலைக்குப் போ அங்கே வேலைக்குப் போய் சம்பாரித்துக் கொண்டு வா எங்குமே அனுப்பியதில்லை. யாரையும் இவளைப் பற்றி ஒரு வார்த்தை பேசவோ அழுத்தமாக ஒரு பார்வை பார்க்கவோ அவன் கூட விட்டதில்லை. என்னமோ இப்போது நேரம் சரியில்லாமல் போய் விட்டது. சேராத இடத்தில் சேர்ந்து விட்டான். அந்த கை காரி தான் இவனை மயக்கியிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அவளாக நினைத்துக் கொண்டாளா என்ன ? அவளுக்கு நினைப்பே அப்படித்தான் வந்தது. அப்படி நினைப்பு வராமல் இருந்திருந்தால் ஒரு வேளை அவள் செத்துப் போயிருப்பாள். கல்யாணமான புதிதில் பெரிய கோவிலுக்கு சென்றார்கள். அங்கே சிவகாமி அம்மன் சன்னதிக்கு முன்பு நின்று , இவளது தலையில் அடித்து ‘ உன்னைத் தவிர இன்னொருத்தியை நினைக்க மாட்டேன் ‘ என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான். இப்போது அதையும் அவன் மறந்து விட்டான். ஆனால் இவள் மறக்கவில்லை.அன்று பார்த்துக் கொண்டிருந்த தாயும் மறந்திருக்க மாட்டாள். அவள் உலகத்தில் நடப்பது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே தானிருக்கிறாள். ஒரு நாள் அவனுக்கு நன்றாக தலையில் உரைப்பது மாதிரி ஞாபகப் படுத்தி நல்ல புத்தியை கொடுத்து விடுவாள்என்று இவள் நினைத்துக் கொண்டாள். இவளுடைய பிடிவாதத்தைப் பார்த்து அம்மா கதறி அழுதாள். அப்பா அவளை தங்களது வீட்டுக்கு வந்து விடு கூப்பிட்டார். அவள் எங்கேயும் போக மறுத்து விட்டாள். அம்மா ‘ அப்டின்னா அவன் அந்தச் சிறுக்கிய கூப்பிட்டுகிட்டு இந்த வீட்டுப் படியேறி வருவான். நீ அவளையும் சேர்த்து வச்சுகிட்டு குடும்பம் நடத்து ‘ என்று சாபம் கொடுத்து விட்டு புருசனை கையைப் பிடித்து தர தரவென்று இழுத்துக் கொண்டு தன் வீட்டுக்குப் போனாள் அம்மா . அம்மா எதற்கெடுத்தாலும் சாபம் தான் கொடுப்பாள். தாயென்றும் பிள்ளையென்றும் கூட பார்க்க மாட்டாள். அம்மா வாய்க்கு சக்கரை தான் போட வேண்டும் . அவளது சொல்லுக்கு அப்படி ஒரு ராசி . அதற்குப் பிறகு எண்ணி மூன்றாவது நாள் அவன், அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கே வந்து விட்டான். ஆனந்தி ஒரு சிறிய சூட்கேசுடன் இவளது வீட்டுக்குள் படியேறி வந்தாள். முகமெல்லாம் பவுடர் பூச்சும் , சன்ஸ்கீரீனும் பெர்பூயும் மணக்க தாட்டியான உருவமாக இருந்தாள். வந்ததும் குழந்தை கீர்த்திக்கு ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை கொடுத்தாள். அவன் அதை வாங்கி குப்பை கூடையில் விட்டெறிந்தான். ரவி குழந்தையை கன்னத்தில் அறைந்தான். ஆனந்தி அவனை கையைப் பிடித்து தடுத்தாள்.தாமரை அவளைப் பார்த்து ‘அவன் கையை விடுடி தேவடியா , நீ அவனை கட்டிருக்கிறியா ? உரிமையா அவன் கையை புடிக்கிற ? அவன் புள்ளையை அவன் அடிக்கிறான் .நீ யார்டி தடுக்குறதுக்கு சக்களத்தி ‘ என்று அவளது கையை தட்டி விட்டாள். ரவி இவளையும் ஓர் அறை அறைந்தான். தாமரை அவளைப் பார்த்து ‘ இப்ப சந்தோசமாடி தேவிடியா , அவிசாரி முண்டை , இவன் உனக்கு எத்தனாவதுடீ மூணாவதா இல்ல நாலாவதா ? சொல்லுடி என்றாள். ஆனந்தி அமைதியாக நின்றாள். ‘ உனக்கு உலகத்துல வேற ஆம்பளையே கிடைக்கலயாடி ? நானா இருந்தா இன்னேரத்துக்கு நாண்டு கிட்டு செத்துப் போயிருப்பேன்டி ‘ என்றாள். ரவி பாய்ந்து வந்து இவளை மிதித்து தள்ளிய படி இவளைப் பார்த்து ‘ இவ இனிமே இங்க தாண்டி இருப்பா . உனக்கு விருப்பமில்லைன்னா நீ வெளிய போடி ‘ என்று அவளது கழுத்தைப் பிடித்து வாசலுக்கு வெளியே தள்ளினான். பிறகு பையனையும் அவள் மீது பிடித்து தள்ளி விட்டான் . அதற்குள் வாசலில் பெரிய கூட்டம் கூடி விட்டது. தாமரை அம்மா வீட்டுக்குப் போன போது அவள் இதை எதிர்பார்த்திருந்தது போல பலமாக தலையாட்டினாள் . ‘ வா மகளே வா ‘ என்ற படி இவளை உள்ளே கூப்பிட்டாள். கீர்த்தியை கழுத்தைச் சேர்ந்து கட்டிக் கொண்டு அழுது குமித்தாள். . ‘ எல்லாம் தாயி பார்த்திக்கிட்டுத்தான் இருக்கா , படுபாவி , முண்டையை என்னான்னு கேக்காம விடமாட்டா நீ மனசு விட்டுறாத ‘ என்று பெரிய கோவிலை நோக்கி இரு கைகளையும் அகல விரித்து முறையிட்டாள் . ஆனால் அம்பாள் கேட்டது என்னவோ அந்த ஓடு காலியை அல்ல தாமரையின் புருசனைத்தான் அவள் உயிரை உலுக்கி கேட்டாள் இவள் அவனை விலகி வந்த ஆறு மாதத்திற்குள் எங்கெங்கோ ஊர் சுற்றி கொரோனோ என்னும் கொடிய கிருமியை வீட்டுக்கு இழுத்து கொண்டு வந்து விட்டான். இவன் இப்படி இருமிக் கொண்டு , உடம்பில் காய்ச்சலோடு அலைவதை கண்டதும் அவனது ஆசைபெண் ஆனந்தி இரவோடு இரவாக காணாமல் போய் விட்டான். அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் தாமரை கேட்கவில்லை. ‘ இனி என் விதி அவனோட தான் , ஒரு வேளை நானும் அவன் கூடவே போயி சேர்ந்துட்டா , புள்ளையைவாச்சும் நல்ல படியா நீங்க பார்த்துக்கோங்க ‘ என்று சொல்லிய படி , கால் நடையாகவே அழுது கொண்டே புருசன் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டாள் வந்தவளை வா என்று கேட்பதற்கு கூட அங்கே ஒரு நாதியில்லை. தெருவில் ஒரு ஈ குஞ்சும் கூட நடமாடவில்லை. வீட்டுக்குள் நுழைந்த போது ரவி பாதி உணர்வற்ற நிலையில் பலவீனமாகக் கிடந்தான். இரண்டு வார்த்தை பேசுவதற்குள் தொடர்ச்சியாக இருமல் வந்தது . எவளோ ஒருத்தியை நம்பி தான் ஏமாந்து போய் விட்டதாக சொல்லி தாரை தாரையாக கண்ணீர் வடித்தான். கை சாடை போட்டு அவளை அப்படியே திரும்பி போய் விடுமாறு சொன்னான். அவள் அவனது கைகளை அவள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். யார் யாரையோ கெஞ்சிக் கெதறி சின்னமனூர் பெரிய ஆஸ்பத்திரியில் சீட்டு எழுதி வாங்கிக் கொண்டு , ஆம்புலன்ஸ் பிடித்துக் கொண்டு தேனி போய் க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அவனை சேர்த்து விட்டாள். முழுதாக இரண்டு இரவுகளும் இரண்டு பகல்களும் அவனது படுக்கைக்குப் பக்கத்திலேயே கீழே உட்கார்ந்து கொண்டு அவனது கைகளைப் பிடித்தபடியே ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தாள். செத்துப்போய்விடுவோம் போல என்று நினைத்துக் கொண்டிருந்த ரவிக்கும் கூட மூன்றாவது நாள் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. அவள் அப்படி சுவரோரம் அழுது கொண்டே , ஒரு பிரார்த்தனை செய்வதைப் போல உட்கார்ந்திருந்த கோலத்தைப் பார்க்கும் போது ரவிக்கும் இப்படியே செத்துப் போனால் கூட என்னவென்று தோன்றியது. வீட்டிற்கு திரும்பி போனதும் முதலில் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அவன் அவளிடம் சொன்னான். இனி மேல் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமென்று இரண்டு பேரும் சேர்ந்து பேசி முடிவெடுத்தார்கள். அடுத்த வாரம் வரும் கீர்த்தியின் பிறந்த நாளை எப்படி கொண்டாட வேண்டுமென்று சிறிது நேரம் அவளோடு பேசிக் கொண்டிருந்து விட்டு மணி பார்த்தான் . இரவு பன்னி ரெண்டு மணிக்கு மேல் ஆகி விட்டது. ‘ பாத்ரூமுக்கு போடியிட்டு வாரேன் ‘ என்று சொல்லி விட்டு முகத்திற்கு மாட்டியிருந்த மாஸ்க்கை கழற்ற சொன்னான். செவிலி மறுத்து விட்டாள். மாஸ்க்கை கழற்றுவது நல்லதல்ல என்றாள் அவள் . அவன் ‘ அதெல்லாம் ஒன்னுமில்லை சிஸ்டர் , நான் மொத்தமா குணமாயிட்டேன் ‘ என்றபடி அதை கழற்றி படுக்கையின் மீது வைத்து விட்டு தனியாகப் போனான். தாமரை கூட வருகிறேன் என்று சொன்னாள் அவன் மறுத்து விட்டான் . போய் விட்டு ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அவன் திரும்பி வரும் போது முகமெல்லாம் வேர்த்துப் போய் தள்ளாடிக் கொண்டே வந்தான். தாமரை அவனது கோலத்தைப் பார்த்ததும் சட்டென்று எழுந்திருது நடந்தாள். பெட்டுக்கு பக்கத்தில் வருவதற்கு இன்னும் பாதி தூரமே இருக்கும் அவன் தள்ளாடி விட்டான். தாமரை ஓடிப் போய் அவனை தாங்கிப் பிடிப்பதற்குள் முகம் குப்புற கீழே விழுந்து விட்டான். அவ்வளவு தான் அந்த நட்ட நடு சாமத்தில் அவன் உயிர் பிரிந்து விட்டது. தாமரையின் அலறல் இரவெல்லாம் அந்த மருத்துமனைச் சுவர்களில் பட்டு எதிரொலித்துக் கொண்டேயிருந்தது. அவனது உடலை வெள்ளைப் பண்டலைப் போல , பேண்டேஜ் துணியால் சுற்றி கொடுத்து விட்டார்கள். வீட்டுக்கு கூட எடுத்துக் கொண்டு போகமுடியவில்லை. ஆம்புலன்ஸ் நேராக இடுகாட்டுக்குச் சென்றது. நோய் தொற்றுக் காலத்தில் நெருங்கிய சொந்தங்கள் மொத்தமே பத்து இருபது போர்கள் தான் அங்கே கூடியிருந்தார்கள். உடலை இறக்குவதற்கு முன்பு , அந்த இடம் முழுவதும் கிருமி நாசினி மருந்தடிக்கப்பட்டது. அவனுடைய குடும்பத்தாரும் , இவளுடைய குடும்பத்தாரும் தலையிலடித்துக் கொண்டு கதறி அழுதார்கள். தாமரை மகனை கட்டிக் கொண்டு அழுதாள். யாவரும் ரவியின் முகம் கூடப் பார்க்காமல் அவனை குழிக்குள் இறக்கி மண்ணைப் போட்டு மூடினார்கள். பதினாறாம் நாள் ஐயரைக் கூப்பிட்டு முல்லைப் பெரியாற்றங்கரையில் காரியம் செய்து விட்டு , தண்ணீருக்குள் நின்ற படி , ஐந்தாறு மூத்த பெண்கள் அரிவாள்மனையாள் அவளது மஞ்சள் தாலியை கரகரவெ அறுத்து ஆற்றில் விட்டெறிந்தனர். தீக்குள் மூழ்கி எழுவதைப் போல அவள் மூன்று முறை தண்ணீருக்குள் மூழ்கி மூழ்கி எழுந்தாள். கீர்த்தி அவளது அருகில் வந்து , ரவிக்குப் பிடித்தமாக வெள்ளை வேட்டி , வெள்ளைச் சட்டை துண்டு ஆகியவற்றை பெரிய வாழை இலையில் வைத்து , கரைத்த பிண்டத்தோடு சேர்ந்து மிதக்க விட்டான். அவள் அசையாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குப் பிறகு அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வருவது மொத்தமாக குறைந்து போனது. . வேண்டியவர்களின் உயிரையெல்லாம் பறித்துக் கொண்டு கொரோனோ தொற்று இந்த மண்ணை விட்டுப் போய் விட்டது . யாவும் நேற்று நடந்தது போல தான் இருக்கின்றது . ரவி போய் சேர்ந்தும் ஐந்து வருடங்கள் ஆகி விட்டன. தாமரை காலன் ஓவியம் தீட்ட தன்னை ஒப்புக் கொடுத்தவள் போல முதுமையடைந்து வருகிறாள் அவள் கடைசியாக ஆற்றுக்குள் மூழ்கி எழுந்ததும் கரையைப் பார்த்தாள் .கீர்த்தி புது வேட்டி, வெள்ளைச் சட்டை துண்டு சகிதமாக கரையில் நின்றான். ‘ அப்பாவுக்கு சாப்பாடு எங்க ? ‘ என்று அவள் கேட்டாள். அவன் இன்னொரு வாழை இலையை எடுத்து வந்தான். அதில் ரவிக்குப் பிடித்தமான புரோட்டா , பொங்கல் ,வடை என பதார்த்தங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ‘சரி கொடுத்திரு ‘ என்றாள் தாமரை . கீர்த்தி ஆற்றில் இறங்கி , கொஞ்சம் ஆழமான பகுதிக்குச் சென்று முதலில் வேட்டி சட்டையை ஆற்றோடு விட்டான். அவன் கையைப் கொண்டு , தாமரையும் அவன் அருகே வந்து நின்றாள் இரண்டு கைகளையும் ஒன்றாகச் சேர்த்து , தாயும் பிள்ளையும் , வாழை இலையை ஓடும் தண்ணீரில் விட்டார்கள். அது ஒரு சிறிய பச்சைப் படகு போல அசைந்தாடியபடியே ஆற்றுத் தண்ணீரில் மிதந்து போய் கொண்டிருந்தது . சிறிது நேரத்தில் பதார்த்தங்கள் தண்ணீரில் கரைய ஆரம்பித்து விட்டன. இனி அவைகள் தண்ணீரோடு தண்ணீராக ஆற்றில் கரைந்து விடும் . காலி இலை மட்டும் நீரில் ஓடும் வரையிலும் ஓடிக் கொண்டேயிருக்கும். தாயும் மகனும் மெல்லக் கரையேறினார்கள். சிறிது நேரம் கரையில் நின்றபடி தாங்கள் ஆற்றில் விட்ட இலைகளை பார்த்துக் கொண்டே நின்றார்கள். பெரிய பாலத்துக்கும் கீழே போகும் போது , வாழை இலை கண்ணிலிருந்து மறைந்து விட்டது. ஆனால் வேட்டி சட்டை மட்டும் இன்னும் ஆள் போவது போல மிதந்து கொண்டே சென்றது. பார்ப்பதற்கு அச்சு அசலாக ரவி ஆற்றில் மிதந்து செல்வது போலவே இருந்தது. அவர்கள் இருவரும் வைத்த கண்ணை எடுக்காமல் அதைப் பார்த்துக் கொண்டே நின்றார்கள். தங்கேஸ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.