கே.ஆனந்தன்
சிறுகதை வரிசை எண்
# 100
உசத்தி
டீ கடை.மணி காலை பத்தரை இருக்கும்.
கடைக்குள் நுழைந்தார்கள் வரதராஜனும்,அப்துல்லாவும்.
"கணேசா.ரெண்டு டீ போடு.."சொன்ன வரதராஜன் அப்போதுதான் கணேசன் சூடாக போட்ட வடையில் நான்கு எடுத்து இரண்டை அப்துல்லாவுக்கு தந்து விட்டு தான் இரண்டை கடித்தான்.
வடை சாப்பிட்டுக் கொண்டே வரதராஜன் முகத்தைப் பார்த்த அப்துல்லா வரதராஜன் முகம் வாடி இருப்பதைப் பார்த்து கேட்டான்.
"என்னாச்சி வரதா?.உன் முகம் ரொம்ப வாடிப் போய் இருக்கே.என்ன பிரசினை?."
"எல்லாம் பணப் பிரசினைதான் மச்சான்.இன்னைக்கு பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் இருபதாயிரம் கட்டணும்.இன்னைக்குதான் கடைசி நாள்."சோகமாக சொன்னான் வரதராஜன்.
வரதராஜனும்,அப்துல்லாவும் நெருங்கிய நண்பர்கள்.உண்மையை சொல்லப் போனால் அவர்களின் நட்பையும் மீறி சொந்தக்காரர்கள் போலத்தான் ஒருவருக்கொருவர் பழகிக் கொள்வார்கள்.
இருவரும் ஒருவரை ஒருவர் 'மாமன்,மச்சான்' முறை வைத்துதான் கூப்பிட்டுக் கொள்வார்கள்.அத்தனை நெருக்கம்.
அதற்குள் கணேசன் டீயை கொண்டு வந்து வைக்க இருவரும் ஆளுக்கொன்றை எடுத்துக் கொண்டார்கள்.
"மனுஷனா மச்சான் நீ?.பையன் படிப்பு விஷயம்.இவ்வளவு அஜாக்கிரதையாவா இருப்ப?.பணம் ரெடி பண்ணாம என்ன பண்ணுட்டு இருந்தே?."உரிமை கலந்து சற்றே கோபத்துடன் கேட்டான் அப்துல்லா.
"அட நான் நம்ம கதிரேசன்கிட்ட பத்து நாளா கேட்டுட்டுதாம்பா இருந்தேன்.இன்னைக்கு தரேன்,நாளைக்கு தரேன்னு இழுத்தடிச்சவன் நேத்து இல்லைனு கைய விரிச்சுட்டான்.அவன் உறுதியா தர்றேன்னு சொன்னதை நம்பி நானும் கொஞ்சம் ஏமாந்துட்டேன்."
"பையன் படிப்பு விஷயத்துல இப்படி ஏமாந்திருக்கியே.பையன் ஸ்கூல் போனானா இல்லியா?."
"இல்லப்பா.இன்னைக்கு வீட்லதான் இருக்கான்.."
"சரி.ஒரு நிமிஷம் இரு." என்ற அப்துல்லா தன் செல்லை எடுத்து யாருக்கோ ஃபோன் செய்தான்.
"சரிண்ணே..சரிண்ணே.ரொம்ப தேங்க்ஸ்ணே.என் ஃப்ரென்ட் வரதராஜன்னு ஒருத்தரை அனுப்பறேன்.நல்ல மனுஷன்.அதெல்லாம் சரியா திருப்பிடுவான்.."என்றவன் "வட்டி கொஞ்சம் பார்த்து பண்ணி கொடுங்க.." சொல்லிவிட்டு செல்லை கட் செய்தான்.
"எங்கிட்ட முதல்லயே சொல்றதுக்கென்ன?.அரூர்ல பரசுராமன்னு ஒருத்தர்.ஃபைனான்ஸ் பண்றார்.நம்ம ஃப்ரெண்டுதான்.அவர்ட்ட சொல்லிருக்கேன்.தர்றதா சொல்லிருக்கார்.மொதல்ல போய் வாங்கிட்டு வத்து பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டு.வட்டி அடுத்தவங்களுக்கு மூணு ரூபா.எனக்காக பாதியா குறைச்சுக்கிட்டார்."
"ரொம்ப தேங்க்ஸ்டா.."
"போடா.மொதல்ல வாங்கிட்டு வந்து பணத்தை கட்டு.." என்றான்.
டீக்கும்,வடைக்கும் பணம் வாங்க வந்த கணேசன்"ஆஹா..ஃப்ரென்ட்ஸ்னா இப்படி இல்ல இருக்கணும்.."சொல்லிக் கொண்டே அடுத்த டீ போட போனான்..
வரதராஜனுக்கு விவசாயம்தான் தொழில்.நஞ்சையும் புஞ்சையுமாம் ஐந்து ஏக்கர் இருக்கிறது.மழைக்காலங்களில் நெல்லும்,கரும்புமாய் விளையும்.கோடை காலங்களில் கரம்பாய் கிடக்கும்.வரதராஜன் அதை வைத்துதான் பிழைப்பை ஓட்டுகிறான்.
அப்துல்லாவுக்கு கசாப்பு தொழில்.தினம் இரண்டு ஆடுகள் ஓடும்.ஞாயிற்றுக்கிழமை மட்டும் கூடுதலாக இன்னும் மூன்று ஆடுகள்.அதில்லாமல் நிலமும் இரண்டு ஏக்கர் இருக்கிறது.
அது ரமலான் மாதம்.
அன்று அப்துல்லாவின் வீட்டுக்கு வந்தான் வரதராஜன்.
"அடடே.என்னடா இந்த பக்கம்?.அதும் திடீர்னு?."
"சும்மாதான் மச்சான்."என்ற வரதராஜன் அங்கிருந்த சேர் ஒன்றில் உட்கார்ந்தான்.
"வாங்கண்ணா."என்ற அப்துல்லாவின் மனைவி ஃபரிதா,கையில் இருந்த எலுமிச்சை ஜூசை கொடுத்தாள்.
"நீங்க இந்த மாசம் நோன்பிருக்கறதால எச்சில் கூட விழுங்க மாட்டீங்கள்ல?.உங்கள பார்க்க வச்சிட்டே குடிக்கணும்."ஜூசை வாங்கிக் கொண்டே சொன்னான் வரதராஜன்.
"பேசாம குடிடா.அது தெரிஞ்ச விஷயம்தான?."
ஜூசை குடித்த வரதராஜன் டம்ளரை ஃபரிதாவிடம் கொடுக்க அதை வாங்கிக் கொண்டவள் உள்ளே போனாள்.
"சொல்லு.என்ன திடீர்னு வந்திருக்க?."
"மச்சான்.நாளைக்கு சாயங்கால நோன்பு கஞ்சி நான் குடுக்கலாம்னு இருக்கேன்டா."
அவன் சொன்னதும் ஆச்சரியமாக பார்த்தான் அப்துல்லா.
"என்னடா சொல்ற?."
"ஆமாப்பா.தீபாவளிக்கும்,பொங்க
லுக்கும் அதிரசம்,முறுக்கும் நாங்க உங்களுக்கு தர்றதும்,ரம்ஜான், பக்ரீத்துக்கு பிரியாணி நீங்க எங்களுக்கு தர்றதும் வருஷா வருஷம் நடக்கறதுதான்.ஆனா ஒரு வருஷமும் நோன்பு கஞ்சி குடுத்ததில்ல. அதை இந்த வருஷம் கொடுக்கலாம்னு இருக்கேன்.."
அவன் சொல்ல சொல்ல சந்தோஷமாகவும்,நெகிழ்ச்சியாகவும் இருந்தது.
"கேக்கறதுக்கே சந்தோஷமா இருக்கு வரதா.எத்தனை இன கலவரங்கள் வந்தாலும் இது வரைக்கும் நம்மூர்ல ஒண்ணும் வந்ததில்ல.காரணம் நாம இரண்டு வேற மதம்னு யாரும் நினைச்சதில்ல.அண்ணன் தம்பியாதான் இது வரை பழகிட்டு இருக்கோம்.நம்ம உறவு இப்படியே இருக்கணும் வரதா.." நெகிழ்ச்சியாய் சொன்னான் அப்துல்லா.
"அதுக்குதான் இது அப்துல்லா.இன்னும் வலுப்படணும்னு ஆசை.மரம் எவ்வளவு வலுவா இருந்தாலும் வேர்ல தண்ணி ஊத்துனாதான் இன்னும் பல வருடங்களுக்கு பலமா வாழும்.இத வேர்ல தண்ணி ஊத்தற மாதிரி."
"சந்தோஷம்.ஆனா நீயே கஷ்டப்படறியேப்பா.."
"என்ன ணெலவு ஆகிடப் போகுது?.நம்மூல்ல இருபது குடும்பம் இருக்கீங்க.என்ன ஒரு நூறு பேர் இருப்பீங்களா?.பத்தாயிரம் ரூபா ஆகுமா?.பார்த்துக்கலாம் விடுப்பா."
அப்துல்லா ஃபரீதாவை பார்த்தான் பெருமையாய்.அவள் முகத்திலும் சந்தோஷம்..
பேசிக் கொண்டே வரதராஜனும்,அப்துல்லாவும் வெளியில் வர,அங்கே நின்றிருந்தார் பரந்மாமன்.
பரந்தாமன் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர்.பெரிய புள்ளி.வசதி இருந்தாலும் அதை தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல் அனைவரிடமும் சகஜமாக பழக கூடியவர்.தன்னால் முடிந்த உதவியை அனைவருக்கும் செய்ய கூடியவர்.
அதனாலேயே அவரை அனைவருக்கும் பிடிக்கும்.நான்காவது முறையாக அன்னபோஸ்டாக பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் அவர் ஜெயிக்க இதுதான் காரணம்.
"என்னப்பா ரெண்டு பேரும் சேர்த்து வர்றீங்க?."
வரதராஜன் எல்லாம் சொன்னான்.
"அடடே.நல்ல விஷயமாச்சே.நானும் சேர்ந்துக்கறேன்.
"வேணாம் தலைவரே.நான் மட்டும் தனியா செய்ய ஆசைப்படறேன்.நீங்க பண்ண ஆசைப்பட்டா இன்னொரு நாள் பண்ணிக்கோங்க."
"சரிப்பா.நான் இன்னொரு நாள் பண்ணிக்கறேன். "
சொன்ன மாதிரியே அடுத்த நாள் வரதராஜன் செய்ய,அடுத்த வாரம் ஒரு நாள் பரந்தாமன் செய்தார்.
பதினைந்து நாள் ஓடி இருந்தது..
வயலில் அறுவடை நடப்பதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த பரந்தாமனிடம் மூச்சிறைக்க வேகமாக ஓடி வந்து நின்ற கணேசன் மூச்சிறைக்க சொன்னான்..
"தலைவரே..நம்ம ஆளுங்களுக்கும், பாய் ஆளுங்களுக்கும் சண்டை..சீக்கிரம் வாங்க.மத கலவரமா மாறிடும் போல இருக்கு.வெட்டு குத்து நடக்கும் போல இருக்கு.."
அவன் சொன்னதும் தூக்கி வாரிப் போட்டது பரந்தாமனுக்கு..
"என்னடா சொல்ற?.." அதிர்ச்சியாக கேட்டார்.
"ஆமா தலைவரே.போற வழியில எல்லாம் சொல்றேன்.நம்ம கோயிலுக்கு பக்கத்துலதான் சண்டை போட்டுட்டு இருக்காங்க..வாங்க..நீங்க வந்தாதான் அமைதி ஆவாங்க.."
"வாடா.." என்றவர் சட்டையை மாட்டிக் கொண்டு வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார்..
அவரை வேகமாக பின் தொடர்ந்தான் கணேசன்.
இந்துக்கள்,முஸ்லீம்கள் என அனைவரும் கலந்து ஒண்றாக வாழும் ஊர் அது.கொஞ்சம் கிறிஸ்துவர்களும் உண்டு.
"சொல்லுடா.என்ன பிரசினை?."
"நம்ம வரதராஜனுக்கும்,அப்துல் பாய்க்கும்தான் மொதல்ல வாய் சண்டை ஆரம்பிச்சது தலைவரே."
"என்ன சண்டை?.." நடையை வேகப்படுத்திக் கொண்டே கேட்டார்.
'சீக்கிரம் போகணும்..போறதுக்குள்ள அங்க வெட்டு, குத்துனு ஒண்ணும் ஆகாம இருக்கணும் முருகா.." இஷ்ட தெய்வம் முருகனை வேண்டிக் கொண்டே நடையை எட்டிப் போட்டார் பரந்தாமன்.
"ஆரம்பத்துல ரெண்டு பேரும் ஜாலியாத்தான் பேசிகிட்டு இருந்தாங்க.நம்ம ராமு டீ கடை இருக்கில்ல.அங்கதான் உக்காந்து ஆளுக்கொரு டீயையும்,வடையையும் சாப்பிட்டுக்கிட்டே ஜாலியா பேசிட்டு இருந்திருக்காங்க..திடீர்னு பேச்சு இராமாயணம்,மகாபாரதம் பக்கம் போச்சு.எல்லா கதையையும் சொன்ன வரதராஜன் பேச்சு. சாமி பக்கம் போச்சு.வரதராஜன் பேச்சு வாக்குல எங்க சாமிதான் பெரிசு..மத்த சாமிலாம் எங்க சாமிக்கு கீழதான்னு சொன்னான். "
"அடப்பாவி.இவனெதுக்கு அப்டி சொன்னான்?..அது சரி.உனக்கெப்படி இது தெரியும்?.."
"நானும்தான் பக்கத்துல இருந்தேனே தலைவரே.."
"ம்..மேல சொல்லு.." இன்னும் ஐந்து நிமிடம் நடைதான்.கோயில் வந்து விடும்.வெயில் வேறு உச்சியை பிளந்து கொண்டிருந்தது.
"அவன் அப்படி சொன்னதும் பக்கதுல இருந்த அப்துல்லா சும்மா இருப்பாரா?..எங்க அல்லாதான் உசத்தினு சொல்ல ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் ஆயிடுச்சி.."
"சரிடா.நீ பக்கத்துலதான இருந்த?.தடுக்கலியா?.."
"ஐயோ தலைவரே நான் எவ்வளவோ தடுத்தேன்.ரெண்டு பேரும் கேக்கல.என்ன தள்ளி விட்டுட்டு சண்டை போடறாங்க.நான் என்ன செய்ய முடியும்?.."
அவர்கள் இருவரையும் நன்றாக தெரியும் பரந்தாமனுக்கு.இருவரும் மாமா,மச்சான் என்று உறவு முறை சொல்லி பழகி வந்தவர்கள்தான்..
அவர்கள் மட்டுமல்ல.அங்கிருந்த அனைவரும் ஜாதி மதம் பார்க்காமல், ' மாமா,மச்சான், அண்ணன்,தம்பி, சித்தப்பா,பெரியப்பா ' என்று உறவு சொல்லி கூப்பிட்டவர்கள்தான்..பழகியவர்கள்தான்..
பொங்கலுக்கும்,தீபாவளிக்கும் சர்க்கரை பொங்கலும்,அதிரசமும்,முறுக்கும்,மைசூர் பாகும்,குலோப் ஜாமூனும், ரம்ஜானுக்கும்,பக்ரீத்துக்கும்,ரம்ஜாடனுக்கும் பிரியாணியும் இங்கிருந்து அங்கும்,அங்கிருந்து இங்கும் வருவது வாடிக்கைதான்.அப்படி 'ஒண்ணும்,மண்ணுமாய் ' பழகியவர்கள்தான் இன்று யார் உசத்தி என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்..
போன மாதம் இதே வரதராஜன் வீட்டில் நடந்த திருமணத்தில் உடனிருந்து எல்லா வேலைகளையும் செய்தான் அப்துல்..
அதே போல ஆறு மாதம் முன்பு அப்துலின் அப்பா கௌஸ் பாய் இறந்த போது ஆறுதலாய் உடனிருந்து அடக்கம் செய்யும் வரை இருந்துவிட்டு தோழனாய் ஆறுதல் சொல்லிவிட்டு கடைசியாய் வந்தான் வரதராஜன் ..
அப்படிப் பட்டவர்கள்தான் இன்று அடித்துக் கொள்கிறார்கள்..
ம்..உணர்வுகள் தூண்டிவிடப்படும்போது உறவுகள் அடிபட்டு அனாதையாகி நின்று விடுகிறது..
"அப்போ வரதராஜ்க்கு ஆதரவா கொஞ்சம் பேரும்,அப்துல்க்கு ஆதரவா கொஞ்சம் பேரும் சுத்தி நின்னு பேண ஆரம்பிச்சாங்க.பேச்சு சண்டையா மாறுச்சு.சண்டை வாக்கு வாதமா மாறி கை கலப்பா ஆயிடுச்சி.."
அவன் சொல்ல சொல்ல பதறியது பரந்தாமனுக்கு..இதயம் வேகமாக துடித்தது.' ஐயோ..பெருசா ஒண்ணும் ஆகிடக் கூடாதே ' என்று தவிப்பாய் இருந்தது.
நடையை இன்னும் எட்டிப் போட்டார்..
"கணேசா..நான் அங்க போறேன்..நீ ஒண்ணு செய்..வேகமா போய் நம்ம ஊர் கவுண்டர் கதிரேசன்ட்ட சொல்லி அவரையும் கூட்டிட்டு வா..இங்க பக்கம்தானே அவர் வீடு?.."
"சரி தலைவரே.." சொன்ன கணேசன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.
பன்னிரெண்டு மணி வெயில் வேறு மண்டையை பிளந்தது.
'அவனவன் ஒழைச்சாதான் அவனவனுக்கு சோறு.பொழப்ப பாக்காம ஒஞ்சாதி உசத்தியா,ஏஞ் சாதி ஒசத்தியா,உன் மதம் ஒசத்தியா இல்ல என் மதம் ஒசத்தியானு சண்னை போட்டுட்டு இருக்காங்க..பொழப்பத்த பசங்க..' நினைத்துக் கொண்டே நடந்தார்..
"என்ன தலைவரே.இந்த மண்டைய பொளக்கற வெயில்ல எங்க இப்படி வெறைக்க வெறைக்க வேகமா போயிட்டிருக்கீங்க?.." எதிரில் வந்த நடேசன் கேட்டார்..
பக்கத்து நிலத்துக்காரர்..புஞ்சையும்,நஞ்சையுமாக இருபத்தைந்து ஏக்கருக்கு மேல் இருக்கும்.ஊரின் பெரிய புள்ளிகளில் ஒருவர்..
"வயல்ல அறுவடை நடந்துட்டு இருக்கு.அத விட்டுட்டு வேகமா போயிட்டு இருக்கீங்க?."
"பெரிய பிரசினை நடேசா.."
"பெரிய பிரசினையா?.என்னது?.."
"சொல்லிட்டு இருக்க நேரமில்லபா..வந்தது வந்துட்ட.நல்லதுதான்..நீயும் வா என் கூட.."
" பிரசினையா?..நம்மூர்ல அப்படி என்ன அவ்வளவு பெரிய பிரசினை?." நடேசன் புரியாமல் கேட்க," அட வானு சொல்றேன்ல.." ஒன்றும் புரியாமல் பேந்த, பேந்த முழித்துக் கொண்டிருந்தவரை இழுத்துக் கொண்டு நடந்தார் பரந்தாமன்..
கோயில்..அம்மன் கோயில்..பக்கத்திலேயே இருநூறு வருட ஆலமரம் ஒன்று பெரிதாய் வளர்ந்து கிளை பரப்பி நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது..
அதன் அடியில் இருந்துதான் இரண்டு தரப்பினரும் ஒருவர் மேல் ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தனர்..
"டேய்..நிறுத்துங்கடா.நிறுத்துங்கடா.."
சத்தமாய் கத்தினார்..
ஊஹூம்..அவர் பேச்சு யார் காதிலும் விழுந்த மாதிரி தெரியவில்லை..
"டேய் பைத்தியக்கார பசங்களா..நிறுத்துங்கடா.." திடீரென அவர்களின் மத்தியில் ஓடியவர் சத்தமாக கத்தினார்.
அவரை கண்டதும் திகைத்த கூட்டம் சற்றே அமைதியானது..
"என்னடா பிரசினை உங்களுக்கு?.." கூட்டத்தின் முன் பகுதியில் இருந்த வரதனையும்,அப்துலையும் பார்த்து கேட்டார்..
அப்துல் முந்திக் கொண்டு பதில் சொன்னான்..
"எங்க உயிரே அல்லாதான்..அப்படிப்பட்ட எங்க கடவுளை இவன் இழிவா,கேவலமா பேசறான் தலைவரே.எங்க சாமிலாம் ஒண்ணுமே இல்லியாம்.அது பொய்யாம்.சக்தி இல்லாத கடவுளாம்..அவன் கும்பிடற அவங்க சாமிதான் உசத்தியாம்..உண்மையான கடவுளாம்.எங்கிட்டயே சொல்றான் தலைவரே.." வரதராஜனை கை காட்டி கோபமாய் சொன்னான் அப்துல்..
அவன் சொன்னதும் வரதராஜனை கோபமாக பார்த்தார் ..
"நீ சொன்னியாடா அப்புடி?.."
"சொன்னேன் இல்லேங்கல..ஆனா ஏன் சொன்னேன்னு கேளுங்க தலைவரே.ராமாயணம்,மகாபாரதம்லாம் பொய்ங்கறான்..ராமர் கற்பனைனு சொல்றான்.ராமர் கடவுள்தானே.அப்புறம் அவர் ஏன் தன் பொண்டாட்டி சீதை மேல சந்தேகப்பட்டு தீக்குளிக்க சொன்னார்னு கேக்கறான்..அதுமட்டுமில்ல..இன்ணொன்னு சொன்னான்.அத சொல்லவே நாக்கு கூசுது.."
"அப்புடி என்னடா சொன்னான்?."
"மகாபாரதத்துல குந்தி தேவிக்கு எத்தனை புருஷன்?..திரௌபதிக்கு எத்தனை புருஷன்?.அப்ப அவங்க யாரு?..'னு கேட்டு கேவலமா சிரிக்கறான் தலைவரே.."
"அதுல எழுதி இருக்கறததான சொன்னேன்?.." இடையில் புகுந்தான் அப்துல்..
"அப்ப அதுலதான ராமர்,கிருஷ்ணர் எல்லா கடவுள்களும் வர்றாங்க..அவங்கள பொய்னு சொல்ற நீ இத மட்டும் எட்டி உண்மைனு நம்பற?..அப்ப உன் குரான்ல எழுதி இருக்கறது எல்லாம் உண்மையா?.." பதிலுக்கு கத்தினான் வரதராஜன் ..
"ஆமா..உண்மைதான்..'' சொன்ன அப்துலை " டேய்..நீங்க ரெண்டு பேரும் இப்ப நிறுத்தப் போறீங்களா இல்லையா?.." அவர் சத்தம் போட்டதும் அமைதியானார்கள் இருவரும்..
அதற்குள் நடேசனை அழைத்துக் கொண்டு வந்து விட்டிருந்தான் கணேசன்..
"பாருங்கய்யா இவங்க கூத்த.." தலையிலடித்தபடி கதிரேசன்,நடேசன் இருவரிடமும் சொன்ன கணேசன்,
"டேய்..அவங்கவங்க சாமி அவங்கவங்களுக்கு பெரிசுதான்.இதுல என்ன உசத்தி மட்டம்னு பேசிக்கிட்டு..ஒருத்தரோட நம்பிக்கையையும்,உணர்வுகளையும்,நம்பிக்கையையும் புண்படுத்தவோ,தாழ்த்தி பேசவோ இன்னொருத்தருக்கு என்ன உரிமை இருக்கு?.அவங்கவங்க கடவுள் அவங்கவங்களுக்கு உசத்தி..அவங்கவங்க மதம் அவங்களுக்கு பெரிசு..வரதா,அப்துல்..உங்க ரெண்டு பேருக்கும்தான் சொல்றேன்..புரியுதா?.."
"எந்த கடவுளோ மதமோ,அடுத்த கடவுளையோ,மதத்தையோ தாழ்த்தி பேச சொல்லல..எல்லா மதமும் அன்பையும்,நேர்மையையும்,ஒழுக்கத்தையும்,அடுத்தவங்களுக்கு உதவி செய்யறதையும்தான் போதிக்குது..அடிச்சிக்க சொல்லல.."
மொத்த கூட்டமும் அவர் சொல்வதையே அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தது..
"வரதா..நீ அவங்க மதம் கடவுள் பத்தி தாழ்த்தி பேசி இருக்கியே..உனக்கு உன் மதம், கடவுள் பத்தி எல்லாம் முழுசா தெரியுமா?..எல்லாம் படிச்சிருக்கியா?..அப்துல். உன்னையும்தான் கேக்கறேன்..உனக்கு உன் மதம்,சாமி எல்லாம் முழுசா தெரியுமா?..சொல்லுங்கப்பா.." இருவரும் பதில் பேசாமல் தலை குனிந்து நின்றார்கள்..
"உங்களுக்கு உங்க கடவுள்,மதம் பத்தியே முழுசா தெரியலயே..அப்புறம் எப்படி நீங்க அடுத்த மதத்த பத்தி,கடவுள் பத்தி பேசலாம்?.."
"அடுத்தவங்களை மதிக்காத,பொறுமை இல்லாத,சகிப்புத் தன்மை இல்லாத உங்களுக்கு உங்க மதமும்,கடவுளும் இதுவா கத்துக் கொடுத்தாங்க?.அப்போ நீங்க ரெண்டு பேரும் உங்க கடவுளையும்,மதத்தையுமே முழுசா மதிக்கலைனு அர்த்தம்.."
"கரெக்டா சொன்னீங்க .." என்றார் நடேசன்..
"நேத்து வரைக்கும் தாயா,புள்ளையாதானேடா பழகிட்டு இருந்தீங்க.அந்த உறவு முறை என்னாச்சு?.மனுஷனை விட எந்த கடவுளும் பெரிசில்ல..டேய் வரதா.நீ வயல்ல இறங்கி வேலை செஞ்சாதான் உனக்கு சோறு..அப்துல்..நீ கத்தி பிடிச்சு கசாப்பு போட்டாதான் உனக்கு சாப்பாடு..முருகனோ,ராமனோ,விநாயகனோ,அல்லாவோ வரப்போறது இல்ல..புரிஞ்சுக்கோங்க.."
மொத்த கூட்டமும் அமைதியாக நின்றது..
திடீரென்று கூட்டத்தில் பரபரப்பு..
கூட்டத்தில் இருந்த ஒருவன் மயங்கி சரிந்தான்.
"முருகா..முருகா.." எதிரில் இருந்த நசீம் ஓடினான்..
அவன் தலையை தூக்கி தன் தொடையில் வைத்துக் கொண்டு," ஐயோ..நம்ம முருகனுக்கு ஹார்ட் அட்டாக்.வலியில துடிக்கிறான்..உடனே ஹாஸ்பிடல் போகணுமே.." பதறினான்..
பரந்தாமனும்,நடேசனும்,கதிரேசனும் வேகமாக அங்கே போனார்கள்..
"நசீம்..இரு..என்னோட பைக் இருக்கு..அதுல போகலாம்.." பக்கத்தில் இருந்த இன்னொருவன் சொல்ல,
"சரி ராபர்ட்..சீக்கிரமா கொண்டு வா போ.." நசீம் சொல்ல வேகமாக ராபர்ட் கொண்டு வந்த பைக்கில் முருகனை ஏற்றிக் கொண்டு கிளம்பினார்கள் நசீமும்,ராபர்ட்டும்..
முருகன் வீட்டுக்கு தகவல் சொல்ல ஒரு ஆளை அனுப்பி விட்டு சொன்னார் பரந்தாமன்..
"பார்த்தீங்களாடா..இந்த அன்பும்,மனிதநேயமும்தான் கடவுள்.ஒருத்தனுக்கு தேரத்துக்கு உதவி செய்யறவன்தான் சாமி..இதோ..இந்த முருகன் உயிரை காப்பாத்த எந்த கடவுளும் வரல..ஆனா உதவி பண்ணாங்களே..அவங்கதான் சாமி..முருகன் உயிருக்காக அவனை காப்பாத்தணும்னு அன்போட பதறினானே நசீம்..அவன்தான் கடவுள்..இதுக்கு பெரிசா எந்த சாமியும் இல்ல..மதமும் இல்ல..அன்பும்,மனித நேயமும்தான் எல்லாத்த விட உசத்தி..புரிஞ்சதா."
"புரிஞ்சது தலைவரே..எல்லாரும் எங்கள மன்னிச்சிடுங்க.."என்ற வரதராஜன் அப்துலை கட்டித்தழுவிக்கொள்ள,அப்துலும் சந்தோஷமாய் தழுவிக் கொண்டான்..
கே.ஆனந்தன்
கூக்கடப்பட்டி-636903
பேதாதம்பட்டி (போஸ்ட்)
பாப்பிரெட்டிப்பட்டி (வட்டம்)
தர்மபுரி (மாவட்டம்)
செல்-96555 04725
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்