P.சுஜாதா
சிறுகதை வரிசை எண்
# 101
தலைப்பு : மரம்???
அன்றைய பொழுது அழகாக விடிந்தது. காக்கைகள் கரைந்து கொண்டிருந்தன. பறவைகள் அங்குமிங்குமாக பறந்து ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. எங்கோ தொலைவில் இரயில் சத்தம் தெளிவாக கேட்டது. தெருவில் ஒரு கீரைக்காரம்மா கீரைகளின் பெயரை சொல்லிக் கொண்டே போய்க் கொண்டிருந்தாள். சீக்கிரம் எழுந்துவிட்ட சரளா ஒருவித படப்படப்புடன் காணப்பட்டாள்.
அவளது கணவன் செந்தில் ஞாயிற்றுக் கிழமை என்பதால் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். இன்று தாமதமாக எழுந்திரிக்க வேண்டுமென்று நேற்று இரவே முடிவு செய்திருந்தான். ஆனால் அவன் ஆசையில் மண் விழுந்தது. சரளா வந்து அவனை எழுப்பினாள்.
“சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு கிளம்புங்க” என்று அவசரப்படுத்தினாள்.
செந்தில் அரை தூக்கத்தில் குழப்பத்தோடு கண்விழித்தான், இன்னைக்கு தான் ஆபிஸ் இல்லையே கொஞ்ச நேரம் தூங்கினால் என்னவாம்? ஏன் இப்படி அவசர அவசரமாக எழுப்புகிறாள்? என்று ஒன்றும் புரியாமல் மெல்ல கண்களை திறந்தான்.
அவள் வந்து எழுப்பி, அவன் எழும்பவில்லை என்றால் சரளா பத்ரகாளியாக மாறிவிடுவாள். அதனால் பேசாமல் எழுந்து பல்துலக்கி விட்டு பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நின்றான். வீட்டின் முன்னாலிருந்த புங்கை மரம் அசைந்து சில்லென்ற காற்று முகத்தில் பட்டது. “குட்மார்னிங்” என்று சொல்வது போல் கிளைகள் அசைந்தன. அது அவனுக்கு ரொம்ப பிடிக்கும். பதிலுக்கு அவனும் தலையாட்டிவிட்டு முகத்தை துடைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்யலாம் என முடிவு செய்தான்.
உடனே சரளா “என்னங்க ஏதாவது வாக்கிங், எக்ஸர்ஸைஸ்னு வெளியே கிளம்பிடாதீங்க”. என்றாள்.
“மணி எட்டு தானே ஆகுது. இப்ப என்ன உயிர் போற அவசரம்? கொஞ்ச நேரம் எக்ஸர்ஸைஸ் பண்ணா உனக்கென்ன? அப்படி என்ன தலைப் போற காரியம்”, என்று கேட்டான்;
வேகமா காபி டம்ளரை கொண்டு வந்து என் கையில் கொடுத்துவிட்டு, முந்தானையால் கையில் இருந்த ஈரத்தை துடைத்தபடியே போனில் உள்ள ஒரு குறுஞ்செய்தியை எடுத்து காண்பித்தாள்.
“மறந்துட்டீங்களா? இன்னைக்கு நம்ம அப்பார்ட்மெண்ட்ல அஸோசியேஷன் மீட்டிங். நியாபகம் இல்லையா?. அதுக்கு ரெடியாக வேண்டாமா? அதுக்குத் தான் சீக்கரமா எழுப்பினேன்”, என்றாள்.
“ஆமா அதுக்கென்ன இப்போ? பதினோரு மணிக்கு தான மீட்டிங்? இப்பவே எதுக்கு ஆர்பாட்டம் பண்ற?” என்று எரிச்சலோடு கேட்டான்.
“சீக்கரமா குளிச்சி கிளம்பிட்டீங்கன்னா மீட்டிங்ல என்ன பேசணும்னு ஒருவாட்டி பேசி பார்த்துக்கலாமேன்னு தான் எழுப்பினேன்’, என்றாள்.
கடுப்பாகிய செந்தில் காபியை வேண்டா வெறுப்புடன் குடித்துவிட்டு, டவலை எடுத்துக் கொண்டு, குளிக்க சென்றான். குளியலறை ஜன்னலுக்கு வெளியே அழகாய் இரண்டு புறாக்கள் அமர்ந்துக் கொண்டு அவர்கள் பாஷையில் பேசிக் கொண்டிருந்தன. எதிர்புறத்தில் உள்ள ஒரு கோவிலிலிருந்து அவைகள் தவறாமல் தினமும் காலையில் இங்கு வந்துவிடும். காலையில் இந்த பறவைகளை பார்ப்பதே ஒரு தனி அழகு தான் என்று நினைத்துக் கொண்டே ஒரு மக் தண்ணீரை தலையில் ஊற்றினான். சில்லென்று தண்ணீர் உச்சந்தலையில் பட்டதும் உடல் முழுக்க சிலிர்த்தது. ஆனால் சுகமாக தான் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் நிதானமாக குளித்தான். அதற்குள் “என்னங்க எவ்வளவு நேரமா குளிப்பீங்க? சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க” என்றாள் சரளா.
இவகிட்ட வாய குடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்னு முடிவு பண்ணியவன், தலையை துவட்டிக் கொண்டே பால்கனியில் வந்து நின்றான். மரத்திலிருந்து காக்கைகள் இங்குமங்குமாக பறந்து கொண்டிருந்தன. ஒரு காக்கை மட்டும்
இவர்கள் வீட்டு பால்கனியில் வந்து உட்காருவதும் திரும்ப செல்வதுமாக இருந்தது. ஏனோ தெரியவில்லை, திடீரென்று இறந்துப் போன அவன் அப்பா நியாபகத்தில் வந்து போனார்.
“என்னங்க இட்லி ரெடி, சூடா இருக்கும் போதே வந்து சாப்பிடுங்க” என்று பறந்து வந்த சரளாவின் ஆர்டர், அவன் நினைவலைகளை கலைத்தது.
டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான். இரண்டு இட்லியை நிம்மதியாக சாப்பிட்டிருப்பான். மூன்றாவது இட்லியை தொடுவதற்குள் சட்னி கொஞ்சம் வைத்துவிட்டு மீண்டும் ஆரம்பித்தாள்.
“என்னங்க இன்னைக்கு மீட்டிங்ல எப்படியாவது பேசி ஒரு முடிவு எடுங்க” என்றாள். அவன் மௌனமாகவே சாப்பிடுவது அவளுக்கு எரிச்சலூட்டியது.
“என்னங்க பேசுவீங்கல்ல?” என்று இழுத்தாள்.
சாப்பிடறத நிறுத்திவிட்டு அவளை முறைந்தான் “இப்போ சாப்பிடவா? இல்ல பேசவா?” என்று கோபமாக கேட்டான்.
கொஞ்சம் அதிர்ந்தவள் “சரி……சரி……..சாப்பிடுங்க. அப்புறம் பேசிக்கலாம்”, என்று கூறிவிட்டு கிச்சனுக்கு போய் விட்டாள்.
சாப்பிட்டு விட்டு அன்றைய செய்திதாளையும் மொபைலையும் எடுத்துக் கொண்டு சோபாவில் போய் அமர்ந்தான்.
ஒரு இருபது நிமிடம் கழித்து சரளா மெல்ல அருகில் வந்து அமர்ந்தாள்.
அவன் “என்ன?” என்பது போல் நிமிர்ந்து பார்த்தான்.
“கோவிச்சுக்காம நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க”, என்றாள்.
“சரி சொல்லு”, என்றான் இல்லையென்றாலும் இன்று அவனை அவள் விடப் போவதில்லை.
“எப்படியாவது இன்னைக்கு மீட்டிங்கல பேசி வீட்டுக்கு முன்னாடி இருக்கிற மரத்தை வெட்டறதுக்கு முடிவு பண்ணிடுங்க. கிளை பால்கனி வரை வந்துடுச்சு. விட்டா வீட்டுக்குள்ளேயே வந்திடும் போல” என்றாள். கீழ கார், டூவீலர்னு எதுவுமே நிறுத்த முடியல. காக்கா ஒரே அசிங்கம் பண்ணிடறது. பகல்ல மர நிழல்ல “பிச்சைக்காரன் குப்பை அள்ளறவங்க, கீரைக்காரம்மா, மீன்காரம்மா எல்லாம் வந்து உட்கார்றாங்க இத்தன லட்சம் போட்டு வாங்கின அப்பார்ட்மண்ட் அழகே போயிடுச்சு”, என்றாள்.
ஒன்றும் சொல்லாமல் அவளை பார்த்தேன். இவளுக்கு மரம் பிரச்சனையா? அல்லது எல்லாரும் மரநிழல்ல வந்து உட்காருது பிரச்சனையா? அவனுக்கு புரியவில்லை. இதைப் பற்றி மீட்டிங்கல பேசினால் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்களோ? அப்படியே மீட்டிங்ல பேசாம வந்துட்டா இவ பேய் மாதிரி ஆடுவாளே என்ன பண்றதுன்னு யோசித்துக் கொண்டிருந்தான்.
அவன் தயங்குவதை பார்த்து…….மீண்டும் ஆரம்பித்தாள் “வேணா இப்படி சொல்லுங்களேன். மரத்தின் கிளை எங்க பால்கனி வரை வந்துடுச்சி, பூச்சி, குளவின்னு அதிகமாக இன்செக்ட்ஸ் வீட்டுக்குள்ள வருது, அணில், காக்கா தொல்லை தாங்க முடியலை சொல்லுங்க” என்றாள்.
இப்படி போய் மீட்டிங்ல சொன்னா என்னை எவ்வளவு கேவலமா பார்ப்பாங்கன்னு நினைத்தான், செந்தில்.
அவன் புருவங்கள் உயர்வதை கண்டு கடுப்புடன் கத்த ஆரம்பித்தாள்.
“நீங்களா கஷ்டப்படறீங்க? சுத்தம் பண்றது நான். நீங்க எல்லோரும் வெளியே போயிடறீங்க. நான் தான் இங்க கிடந்து அல்லாடறேன். நாள் பூரா வீட்டை சுத்தம் பண்ணி, சுத்தம் பண்ணி டயர்டா ஆகுது உங்களுக்கென்ன? வாய்த்தொறந்து பேசக்கூட கஷ்டப்படறீங்க” என்று அனத்தினாள்.
அவன் பதிலேதும் சொல்லாமல் சன்னல் வழியே தெரியும் மரத்தை வெறித்து பார்த்தான். “வேண்டாம், என்னை விட்டுவிடு” என்று அது அவனிடம் கெஞ்சுவதுப் போல் உணர்ந்தான்.
மீண்டும் ஆரம்பித்தாள் “மீட்டிங்குக்கு நானும் வர்றேன். நீங்க ஏதாவது மறந்துட்டா நான் எடுத்துக் கொடுக்கிறேன்”, என்றாள்.
இவளுக்கு வேற வேலையே இல்லை. எப்பபாரு ஏதாவது ஒரு ஏழரையை இழுத்துக் கொண்டு வர்றதே வேலையாப் போச்சு, என்று எரிச்சலுடன் பேப்பர் படிப்பதுப் போல் முகத்தை மறைத்துக் கொண்டான்.
பத்து நிமிடம் கூட ஆயிருக்காது. “இந்தாங்க இந்த ஷர்ட்டைப் போட்டுக்கோங்க. அந்த சுடுமூஞ்சி பிரசிடெண்ட் உங்க கிட்ட மட்டும் தான் நல்லா பேசுவாரு. அவரை எப்படியாவது கன்வின்ஸ் பண்ணிடுங்க” என்று கூறினாள். ஆபிஸ்ல அவன் எத்தனையோ மீட்டிங்ஸ் சக்ஸஸ்ஃபுல்லா நடத்தியிருக்கிறான். ஆனா இன்னைக்கு மீட்டிங்ல எப்படி பேசறதுன்னே தெரியாம முழிச்சிக்கிட்டிருந்தான். மரம் வெட்றத பத்தி பேசினா மற்றவர்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னே தெரியல! முக்கியமா பிரஸிடென்ட் ஜேக்கப் கடுப்பாகி விடுவார். கோபம் சட்டென்று வந்துவிடும். சுருக்குன்னு மூஞ்சியில அடிச்சா மாதிரி ஏதாவது சொல்லிடுவார்.
உண்மையில் ஜேக்கப் ரொம்ப நல்ல மனிதர் தான். மிகவும் நேர்மையானவர்.
ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வைஸ் பிரஸிடென்ட்டா இருக்கார். அப்பார்ட்மெண்ட்ல யாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் உடனே முன்வந்து செய்வார். ஆனா ரொம்ப சிரிக்கமாட்டார். ஸ்டிரிக்ட்டா இருப்பார். அப்பார்ண்ட்மென்ட் சம்மந்தமான எந்த நியாயமான கோரிக்கையையும் உடனே நிறைவேற்றிவிடுவார். தவறென்று தோன்றினால் நறுக்கென்று ஏதாவது சொல்லி விடுவார். இந்த கட்டிடத்தில் ஒன்பது பெரிய அப்பார்மெண்ட்கள் இருக்கின்றது, ஜேக்கப் தான் முதன்முதலாக குடிவந்தவர் அவர் தான் நான்கு மரங்களை நட்டு வைத்தார். இரண்டு, செடியிலே பட்டுபோய்விட்டது. வளர்ந்த இரணடு மரங்களில் ஒன்று வர்தா புயலில் விழுந்துவிட்டது. மீதம் இருக்கின்ற ஒரு மரத்திற்குதான் இந்த அக்கபோர்.
ஜேக்கப்பை, சரளாவுக்கு சுத்தமா பிடிக்காது ஒருமுறை எதற்கோ சட்டென்று அவளிடம் முகத்தை காட்டிவிட்டார். அன்றிலிருந்து இவளுக்கும் அவருக்கும் ஆகாது. அதிலிருந்து அவரை கண்டாள் எரிச்சலைடைவாள், அவர் வச்ச அந்த மரத்தை எப்படியாவது வெட்டிவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தாள் என்பது தான் உண்மை.
செந்தில் பதிலேதும் சொல்லாமல் இருப்பது அவளுக்கு சந்தேகத்தை உண்டு பண்ணியது. அவசர அவசரமாக சமைத்துக் கொண்டே கிச்சன்ல இருந்து “நான் எதிர்வீட்டு சுதா அக்காகிட்டயும், மேல் வீட்ல கமலா அக்காகிட்டயும், கீழ்வீட்டு மூர்த்தி சார்கிட்டயும் சொல்லிட்டேன். அவர்களும் மரத்தை வெட்டிடலாம்னு சொல்லிட்டாங்க. ஒண்ணாம் நம்பர் ஓனர் சீங்கப்பூர்ல இருக்கிறதனால் அவர் அப்ஜெக்ட் பண்ணமாட்டார். மூணாம் நம்பர் புருஷோத்தமன் உங்க பிரண்டு. மெஜாரிட்டியா எல்லோருக்கும் ஓகே தான். அந்த சிடுமூஞ்சி ஜேக்கப்பையும், செக்ரட்டரியையும் ஒத்துக்க வைக்க வேண்டியது உங்க பொறுப்பு. இன்னைக்கு எப்படியாவது மரத்தை வெட்டறது பற்றி முடிவு எடுக்காம வீட்டுக்குள் வராதீங்க” என்று படபடன்னு கடுகு மாதிரி பொறிஞ்சிட்டா.
"சரி எத்தனை முறை சொல்லுவ. தொணத்தொணன்னு உயிர வாங்காத பேசாம வேலைய பாரு” என்றான் செந்தில்.
அவளும் விடாமல், “எனக்கென்ன வந்தது? தினமும் நீங்க காரையும் டுவீலரையும் கழுவித் துடைக்கிறத பார்க்கும்போது எனக்கு மனசு கஷ்டமா இருக்குதுன்னு உங்களுக்கு என்ன தெரியும் ன்னு” ஒரு பிட்ட வேற போட்டாள்.
செந்தில் வீட்டிலிருந்து வெளியே மெதுவா எட்டிப் பார்த்தான். மீட்டிங் நடக்குற மாதிரி எந்த அறிகுறியும் தெரியல.
கூடவே வந்த சரளாவும் “என்னங்க இவங்க யாரையும் காணோம்? மீட்டிங் நடக்குமா? நடக்காதா?” என்று கவலையோடு கேட்டாள்…
“கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணு பார்க்கலாம்” என்றான். பதினோரு மணிக்கு மேல் ஒவ்வொரு தலையாக தென்பட்டது. ஒரு வழியாக பதிணொன்றரை மணிக்கு மீட்டிங் ஆரம்பித்தது. சென்ற மாத கணக்குகள் செலவீனங்கள், கையிருப்பு அனைத்தையும் பற்றி ஜேக்கப் வாசித்தார்.
உடனே செக்ரட்டரி ராமநாதன் “குட் ஜாப் சார்” ன்னு சொல்லிவிட்டு மேலேயுள்ள வாட்டர் டாங்கை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் மோட்டருக்கு புது காயில் போடுவது பற்றியும் பேசினார்.
ஜேக்கப் “ஓகே சார். உடனே செய்திடலாம்” என்று ஆமோதித்தார்
அதற்குள் சரளா கேளுங்க, நீங்க கேளுங்கன்னு கண்களால் செந்திலுக்கு சைகை காட்டினாள்.
அடுத்ததாக புருஷோத்தமன் “மேலே மொட்டை மாடியில் ஒரு லைட் எக்ஸ்ட்ராவா போட்டால், ஈவ்னிங் வாக்கிங் போறவங்களுக்கு வசதியா இருக்கும்” என்றார்.
"சரி சார். அதற்கென்ன போட்டிடலாம்”, என்றார் ஜேக்கப்.
மேல் வீட்டு கமலா “எங்க பாத்ரும்ல தண்ணீர் ரொம்ப கொஞ்சமா வருது வாட்டர் ஃப்ளோ சரியா இல்ல சார்” என்றாள். உடனே இரண்டாவது மாடியில் உள்ள மற்ற இரண்டு வீட்டில் உள்ளவர்களும் “ஆமா சார். சில சமயம் வாஷிங் மெஷின் கூட போட முடியல” என்றார்கள்.
உடனே ராமநாதனை பார்த்து ஜேக்கப் சொன்னார் “சார் ப்ளம்பர் நாகராஜனுக்கு போன் பண்ணி நாளைக்கே வந்து செக் பண்ண சொல்லுங்க”, என்றார். அவரும் “சரி” என்றார்.
சரளா மீண்டும் செந்திலை முறைத்தாள். அவன் மெதுவாக தொண்டையை கனைத்துக் கொண்டு “சார் ஒரு சின்ன பிராப்ளம்” என்றான்.
உடனே “சொல்லுங்க செந்தில்” என்றார். அவன் மீது ஜேக்கப்புக்கு ஒரு தனி மரியாதை உண்டு.
செந்தில் தயக்கத்துடன் “அந்த முன்னாடி இருக்கிற புங்க மரத்தை வெட்டிடலாம் சார்”. என்று மெல்ல சொன்னான். எல்லோரும் அவனை ஒரு மாதிரியாக பார்த்தனர். அது அவனுக்கு ஒரு சங்கடத்தை உருவாக்கியது. ஜேக்கப் முகம் சட்டென்று இறுகியது அவனுக்கு என்ன செய்யறதுன்னே தெரியல.
உடனே ராமநாதன் ஆபத்தில் உதவுவது போல், “சார், அதான் ஏற்கனவே பலமுறை மீட்டிங்ல பேசிட்டோமே”, என்றார்.
“பேசினோம் சார். ஆனா வெட்டலாம்னு முடிவு எடுக்கலையே”, என்றான்.
“ஆமா, இவ்வளவு வளர்ந்த மரத்தை எப்படி சார் வெட்டறது? அது பெரிய அஃபன்ஸ். அது சரியா வராது” என்றார் ஜேக்கப் இறுகிய முகத்துடன்.
உடனே சரளா ஆரம்பித்தாள் “சார் உங்க வீட்டு பால்கனி அந்த பக்கம் இருக்கு. எங்க வீட்டு பால்கனி தான் ரோட் ஃபேஸிங். எங்களுக்கு தான் கஷ்டம். உங்களுக்கு அது புரியாது. வீட்ல ஒரு பொருள் வைக்க முடியல பால்கனியில காக்கா அசிங்கம் பண்ணிடுது. நிறைய பூச்சிகள் குளவின்னு வீட்டுக்குள் வருது”, என்றாள்.
இவர்கள் இருவரையும் ஒரு பூச்சியை பார்ப்பது போல அனைவரும் பார்த்தனர். மரத்தை வெட்டறதுக்கு ஒத்துக்குவாங்கன்னு சொன்ன எந்த வீட்டு ஆட்களும் வாயை திறக்கவேயில்லை. ஏன் என்றால் ஜேக்கப் சாருக்கு ஒரு விஷயம் சரியென்று பட்டால் உடனே அதை செயல்படுத்திவிடுவார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஒரு நிமிட அமைதிக்கு பின் மீண்டும் சரளா சொன்னாள் “கமலா அக்காகிட்ட கூட கேளுங்க. எவ்வளவு பிரச்சனை ஃபேஸ் பண்றாங்கன்னு”, என்றாள்.
கமலா அக்காவும் “ஆமா கஷ்டமாத்தான் இருக்குன்னு” சொல்லிவிட்டு உடனே வாயை மூடிக்கொண்டு விட்டாள். சரளா விடவில்லை, “மூர்த்தி சார் நீங்க சொல்லுங்களேன்”, என்றாள்.
மூர்த்தி மெதுவாக ஆரம்பித்தார், ‘பகல்ல ரொம்ப தொந்திரவா இருக்கு சார். போறவங்க வர்றவங்க, குப்பை அள்ளுவங்க, பத்தா குறைக்கு, தள்ளு வண்டியில ஒரு டெய்லர்னு மர நிழல்ல வந்து உட்கார்ந்துக்கிறாங்க. இங்கேயே சாப்பிடறாங்க. நம்ம பார்க்கிங் ஏரியாவில் உள்ள குழாய்ல தண்ணீர் பிடித்து குடிக்கிறேன்னு உள்ள வந்துட்டுப் போறாங்க” என்றார்.
இப்போதான் சரளாவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.
கோபமான ஜேக்கப் செருமிக் கொண்டே ஆரம்பித்தார். “மூர்த்தி சார். அவங்க ரோட்ல விழற நிழல்ல தானே கொஞ்ச நேரம் நிக்கிறாங்க. கொஞ்ச நேரம்
நின்றுவிட்டு போயிட போறாங்க. நாள் பூரா இங்கேயே இருந்தா நாம கேட்கலாம். அது ஒண்ணும் பெரிய கொலை குற்றம் இல்லையே? அந்த டெய்லர்கிட்ட வேற எங்கேயாவது போய் உட்கார சொல்லிடலாம். இந்த தெருவிலேயே நம்ம அப்பார்மெண்ட் முன்னால மட்டும் தான் மரம் இருக்கிறது. அந்த நிழல்ல கொஞ்சநேரம் நிற்பதற்குக்கூட விடலைன்னா அது நியாயமா மூர்த்தி சார்? நீங்களே சொல்லுங்க”. என்றார்.
சரளா பிடிவாதமாக மீண்டும் ஆரம்பித்தாள் “டூவீலர், கார் கூட நிறுத்த முடியல. ஒவ்வொரு முறையும் வண்டி எடுக்கும் போதும் க்ளீன் பண்ண வேண்டியதா இருக்கு. வேலைக்கு கிளம்பற நேரத்தில் அவருக்கு க்ளீன் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்க பார்க்கிங் முன்னாடி மரம் இல்லாததால் உங்களுக்கு அந்த கஷ்டம் புரியாது சார்” என்றாள் கடுகடுப்புடன்.
நானே க்ளீன் பண்றத கஷ்டமா நினைக்கல இவ ஏன் என்னை வம்புக்கிழுக்கிறாள் என்று மனதுக்குள் நினைத்தான் செந்தில்.
அந்த நேரத்தில் “எக்ஸ்க்யூஸ் மீ”, என்று சரியான டைமிங்ல என்ட்ரி கொடுத்தார்கள் எட்டாம் நம்பர் வீட்டு சீதா மேடம். அவர் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பிரான்ச் மேனேஜர். ரொம்ப தைரியமான பெண்மணி.
“செந்தில் சார். மரம் நல்லா வளர்ந்திருக்கு இப்போ அடிக்கிற வெயில் எவ்வளவு கொடுமையா இருக்குன்னு நமக்கே தெரியும். நமக்கு வசதி இருக்கிறதால நாம் ஏஸி போட்டுக்கிறோம். ஏழை மக்கள் கொஞ்சம் நேரம் மரநிழலில் இளைப்பாறிட்டு போயிட போறாங்க. இங்கேயே தங்கினா தானே நமக்கு பிரச்சனை அதுக்காக மரத்தை வெட்டனும்னு அவசியம் இல்லையே வேண்டுமானால் உங்க பால்கனி வரை வருகிற கிளையை கொஞ்சமா கழித்து விட்டுக்கோங்க. கார், டூவிலர்க்கு கவர் போட்டுங்கோங்க. இல்லன்னா வாட்ச்மேன் கிட்ட சொல்லி உங்க வண்டிய கழுவி துடைச்சி வைக்க சொல்லிடலாம் சார்” என்று சிரிச்சிக்கிட்டே கூறினார், சீதா மேடம்.
சரளா சளைக்கவில்லைஇ “மேடம் 3,5,6,7,8 ன்னு எல்லார் வீட்லயும் இரண்டு பேரும் வேலைக்கு போயிடறீங்க. நானும், கமலா அக்காவும், மூர்த்திசாரும் தான் இந்த பிரச்சனையை சந்திக்கிறோம்”, என்றாள்.
சீதா மேடம், டென்ஷன் ஆகாம சிரிக்கிட்டே சென்னார்கள் “நீங்க சொல்றது சரிதான் சரளா. வேலைக்குப் போற நாங்க ஏற்கனவே வீடு, ஆபிஸ்னு ஆயிரத்தெட்டு பிரச்சனைகளை ஒவ்வொரு நாளும் சந்திக்கின்றோம். அதனால இதை ஒரு பிரச்சனையா பார்க்க எங்களுக்கு நேரமில்லை. நீங்க வீட்லயே இருக்கிறதால தான் உங்களுக்கு இது பெரிய பிரச்சனயா தெரியுது” என்றார்.
சரளாவுக்கு முகம் சுருங்கிவிட்டது. என்ன சொல்றதுன்னே தெரியாம சிறுபிள்ளைத்தனமா “போனவாரம் கூட என்னை குளவி கொட்டி விட்டது என்றாள்”.
செந்திலுக்கே அவள் சொன்னது அபத்தமாக தெரிந்தது. மற்றவர்களை கேட்கவே வேண்டாம் கடுப்பாகி இருப்பார்கள்.
உடனே சீதா மேடம் நக்கலாக சிரித்து கொண்டே “என்ன செந்தில் சார். ஒரு நெட் டோர் போட்டுக் கொடுத்திட்டீங்கன்னா மேடம்க்கு ஸேப்டியா இருக்கும்ல. வேணும்னா சொல்லுங்க அஸ்ஸோஸியேஷன் செலவிலேயே போட்டுக் கொடுத்திடலாம். என்ன சொல்றீங்க ஜேக்கப் சார்,” என்றார்.
உடனே “ஓகே மேடம்” என்றார் ஜேக்கப். அவருக்கு மரத்தை வெட்டக் கூடாது அவ்வளவு தான்.
செந்திலுக்கும் நெட் போடற ஐடியா சரி என்று தோன்றியது.
ஆனா சரளா எரிச்சலுடன் மூர்த்தி பக்கம் திரும்பி “சார் நீங்க சொல்லுங்க” என்றாள்.
அவரை பேசவே விடாமல் சீதா மேடம் குறுக்கிட்டார். “மூர்த்தி சார், நீங்க எங்க சார் வீட்ல இருக்கீங்க? மகள் வீடு, மகன் வீடுன்னு அமெரிக்கா, ஜெர்மனின்னு சம்மர்ல ஃபாரின் டிரிப் போயிடறீங்க. சென்னை வெயில்ல போய் பாருங்க. அப்போ புரியும் நிழலின் அருமை. எல்லாத்துக்கும் மேலா காக்கா,
சீட்டுக்குருவிக்கு எல்லாம் தண்ணீர் வைக்க ஆரம்பிச்சதே நீங்கதான், உங்கள பார்த்து தான் நாங்களே கத்துக்கிட்டோம். நீங்க ஊருக்கு போகும் பொதெல்லாம் அதுங்க உங்கள ரொம்ப மிஸ் பண்ணுதுங்க”, என்றார் கனிவுடன்.
மூர்த்திக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. மனைவி இறந்ததும் தனிமையை போக்க அடிக்கடி இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வெளிநாட்டுக்கு பயணம் சென்று விடுவார். குளிர் காலத்தில் கண்டிப்பா இங்கே வந்திடுவார் அவரால் மறுத்துப் பேச முடியாமல் அமைதியாகி விட்டார்.
உடனே ராமநாதன், “சரளா மேடம், நீங்க கொஞ்சம் மனசு வச்சீங்கன்னா இந்த விஷயத்தை பெரிய பிரச்சனையாக்காம சால்வ் பண்ணிடலாம். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க மேடம்” என்றார்.
ஜேக்கப் சீரியஸான முகத்துடன், “நன்றாக வளர்ந்த மரத்தை அவ்வளவு ஈஸியா வெட்டமுடியாது. மரத்தை வெட்டுனும்னா சென்னை கார்ப்பரேஷனுக்கு இன்பார்ம் பண்ணனும். சரியான காரணம் இல்லாம நல்லா வளர்ந்த மரத்தை வெட்ட முடியாது. நாமதான் அட்ஜெஸ்ட் பண்ணனும்”, என்றதும் எல்லோரும் ‘சரி’ என்றார்கள்.
தனக்கும் நியாயமாக பட்டதால் செந்திலும் அவனை அறியாமல் “ஒகே சார்” என்று கூறிவிட்டான்.
ஜேக்கப் ஸ்ரிடிக்டா “இதற்கு மேல் இத பற்றிப் யாரும் பேச வேண்டாம். செந்தில்! நெட் போடனும்னாலும் போட்டுக்கலாம், இல்ல வேற ஐடியா இருந்தாலும் சொல்லுங்க செஞ்சிடலாம்”, என்றார்.
“சரி சார்” என்று செந்தில் சொன்னதும் சரளா கோபத்துடன் விருட்டென்று எழுந்து வீட்டுக்குள் போய்விட்டாள்.
உடனே சீதா மேடம் “என்ன செந்தில் சார், மேடம் ரொம்ப சூடாயிட்டாங்க போல. போய் சமாதானப்படுத்துங்கன்னு”, சொன்னதும் எல்லோரும் சிரித்து விட்டார்கள்.
கூட்டம் கலைந்ததும் மெல்ல வீட்டுக்குள் நுழைந்தான். சரளா அடுப்பங்கரையில் கோபமாக பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டது.
மெதுவாக டூவீலர் சாவியை மட்டும் எடுத்துக் கொண்டு சத்தம் போடாமல் வெளியே வந்து விட்டான்.
வண்டியை எடுக்க போகும் போது காகம் ஒன்று சீட்டில் அமர்ந்துக் கொண்டு அவனை பார்த்தது. அது அவனிடம் சந்தோஷமாக “எங்கள் இருக்குமிடத்தை காப்பாற்றி கொடுத்தற்கு தாங்ஸ்” என்று சொல்வது போல் இருந்தது.
சட்டென்று மரத்தில் இருந்து சில பூக்களும், இலைகளும் அவன் மீது உதிர்ந்தன. நிமிர்ந்து பார்த்தான். கிளைகளை அசைத்து மரம் தனக்கு நன்றி சொல்வதுப் போல் உணர்ந்தான்.
இனி என்ன ஆனாலும் மரத்தை வெட்டுவதில்லை என்ற தீர்க்கமான முடிவுடன் நகர்ந்தான். இப்போது தான் மனசுக்குள் ஏதோ ஒரு பாரம் குறைந்து இலேசானது போல் உணர்ந்தான்.
முற்றும்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்