logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

ரா. கர்ணன்

சிறுகதை வரிசை எண் # 97


பூவரசி ======= பூவரசி பெத்த பொம்பள புள்ள, அவ பக்கத்துல கையை காலை ஆட்டிக்கிட்டு கிடக்கு… அத பாத்து.. பாத்து.. பூவரசி முகம் ரோசாவா மலருது… ‘எத்தன வருஷம்.. எம்புட்டு தவம்…’ன்னு மனசுல நெனச்சு, நெஞ்சாங்கூட்டுக்குள்ள இழுத்து வச்சு, சின்ன உசுரோட மொகத்துல கண்ணு, நெத்தி, வாயி, கன்னம்ன்னு முத்தமா கொடுக்குறா… ஆஸ்பத்திரிக்கு வெளிய அடிக்கடி எட்டியும் பாக்குறா… அப்புறம் ‘உங்கப்பா கொஞ்ச நேரத்துல வந்திருவாரு செல்லம்’ன்னு சொல்லி புள்ளயோட ரெண்டு கன்னத்தையும் லேசா அமுக்கி இழுத்து சிரிக்கிறா… நேரம் ஆக.. ஆக.. அவ மனசு குமரேசன அதிகமா தேடுது… ஆஸ்பத்திரியில நேத்து சாயந்திரம் பிள்ளைய பெத்து பாத்திட்டு.., அசதியில பூவரசி தூங்கிட்டா… ராத்திரியெல்லாம் குமரேசனோட ஆத்தா தான் முழுச்சு கெடந்து பிள்ளைய பாத்துக்கிட்டு இருந்துச்சு… அதனால, கொஞ்ச நேரம் கண் அசருவோம்ன்னு, பூவரசி இருக்குற கட்டிலுக்கு கீழ இப்ப தான் அந்தம்மா படுத்துச்சு… கொஞ்ச நேரம் கழிச்சு கட்டிலுக்கு கீழ பூவரசி குனிஞ்சு பாத்தா.. ‘எம் புருஷன் இன்னக்கி வந்திருவாருன்னு காலையில அத்த சொல்லுச்சு.. ஆனா, அவரு இன்னும் வரலையே…, எழுப்பி கேட்கலாமா..?, ஆத்தி.. கத்துமே’ன்னு நெனச்சு பேசாமா இருந்துட்டா… ஆனாலும் அவ மனசு கெடந்து தவிச்சுச்சு.. என்ன சொன்னாலும் பரவாயில்ல.., ஒரு தடவ எழுப்பி கேக்கனும்’ன்னு நெனச்சு, திரும்பவும் கட்டிலுக்கு கீழ குனிஞ்சு, ‘அத்த…’ ன்னு பூவரசி கூப்பிட்டுச்சு.. குமரேசனோட ஆத்தா நல்லா தூக்கிட்டு இருந்துச்சு…, பூவரசி கூப்பிட்டது அந்தம்மா காதுல கேக்கவே இல்ல… அடுத்த முயற்சியா.., அத்தயோட தலைய தொட்டு பூவரசி எழுப்புச்சு… அப்ப, என்னமோ ஏதோன்னு எந்திருச்ச குமரேசனோட ஆத்தா… ‘என்ன தாயி..?’ன்னு வேகமா கேட்டுச்சு.. ‘ஒன்னுமில்ல… உங்க பையன.. அதான் எம்புருஷனை இன்னும் காணோம்’ ன்னு பூவரசி சொல்லுச்சு… ‘அவன் வந்திருவான்… ஒரு வேலையா கேரளாவுக்கு போனவன், அங்க இருந்து வர வேணாமா? வந்திருவான்..’ ன்னு சொல்லிட்டு திரும்பவும் அந்தம்மா படுத்திருச்சு… பூவரசி தன் புள்ளய பாத்தா… அதுவும் தூங்கிட்டு இருந்துச்சு… அப்புறம் அமைதியா முழிச்சு கிடந்த பூவரசி மனசுல பழைய கதையெல்லாம் ஒன்னொன்னா ஞாபகத்துல வந்துச்சு… ஒதவாக்கரை அப்பனுக்கு பொறந்தவ பூவரசி எப்ப பாத்தாலும் சாராய மோகத்துல இருந்த அப்பனால, அவளோட ஆத்தா படாதபாடு பட்டா… ஒரு பொட்டு தங்கம் வீட்டுல இல்ல… எல்லாத்தையும் பூவரசியோட அப்பன் வித்து குடிச்சே அழிச்சிட்டான்… பூவரசி பெரிய மனுஷி ஆனதுக்கு அப்புறம் ‘என் மகளை கட்டிக்கொடுக்கிறேன்’னு சொல்லியும் பலபேருகிட்ட காசு வாங்கி குடிச்சான்.. இதனால பூவரசிக்கு சிக்கல் வர ஆரம்பிச்சுச்சு… அழகுன்னாலும் அழகு… அப்படி ஒரு அழகு அவ… பூவரசிய பாதுகாப்பா வச்சிருந்துச்சு அவளோட ஆத்தா.. அந்த நேரத்துல தான், அதே ஊரு பணக்கார பய ஒருத்தன், பூவரசிய சுத்தி வர ஆரம்பிச்சான்… ‘உன்ன நல்லா பாத்துக்கிருவேன்’னு சொன்னான்… இதை பூவரசி அவளோட ஆத்தாகிட்ட சொன்னா… ‘நல்ல பயனாத்தான் தெரியுது, ஆனா நாமெல்லாம் ஏழைக.., அவனோட குடும்பத்துல உன்ன ஏத்துக்கிற மாட்டாங்க’ன்னு அவளோட ஆத்தா சொல்லுச்சு.. ஆனா, அவன் போட்ட வலையில பூவரசி விழுந்துட்டா.. யாருக்கும் தெரியாம ரெண்டு பேரும் ஒரு நாள் ஓடிட்டாக… அதுக்கப்புறம் ஆறு மாசம் கழிச்சு தான் ஊருக்கு வந்தாக… அந்த பய வீட்டுல வேறு வழியில்லாம ஏத்துக்கிட்டாங்க… பணப்பசை உள்ள பயனாச்சே.., பூவரசியோட அப்பனும் மருமகனை ஏத்துக்கிட்டு, பணத்துக்கு பஞ்சமில்லாம திரிஞ்சாரு… ஆனா, பூவரசியோட ஆத்தாவும், அவளோட உறவுக்காரகளும் கோபப்பட்டு ஒதுங்கி இருந்தாக… மருமகன் காசுல மூச்சுமுட்ட குடிச்சிட்டு திரிஞ்ச பூவரசியை பெத்த அப்பனோட கதை.. மூனே வருஷத்துல குடிஞ்சுபோச்சு… அதுக்கு அப்புறம் பூவரசி அவளோட ஆத்தாவ தேடி வந்தா.. கழுத்து நிறைய நகை, பட்டு சேலையில வந்த அவள பாத்து, அவளோட ஆத்தாவுக்கு சந்தோஷம். நல்லா வாழ்ந்தா சரிதான்னு சொந்தக்காரகளும் ஏத்துக்கிட்டாக… எம் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமஞ்சிருக்குன்னு எல்லாருகிட்டேயும் பூவரசியோட ஆத்தா பெருமையா சொல்லுச்சு… கொஞ்ச நாளு கழிச்சு திரும்பவும் ஆத்தா வீட்டுக்கு வந்த பூவரசி, எதுவும் பேசாம அமைதியா இருந்தா… ‘என்னம்மா..’ன்னு அவளோட ஆத்தா கேட்டதுக்கு, அவ எதுவும் சொல்லாம இருந்தா..., ராத்திரி ஆயிருச்சு.. ஆனா.. அவ அங்கயே உக்காந்திருந்தா… அப்ப, அவளை கூட்டிட்டு போயி கல்யாணம் பன்னிக்கிட்ட பையன் அங்க வந்தான்… ‘வாங்க தம்பி..’ன்னு பூவரசியோட ஆத்தா கூப்பிட்டதும், அவன் சிரிச்சுக்கிட்டே பூவரசியை பார்த்தான்… அவள தனியா கூட்டிட்டு போயி பேசிட்டு, பூவரசியின் ஆத்தாவை ‘அத்தை..’ன்னு பாசமா கூப்பிட்டு, ‘பூவரசி இன்னக்கி இங்கு இருக்கட்டும். நாளைக்கு வரட்டும். பாவம்..., உங்க கூட ஒரு நாள் இருக்கனும்ன்னு விரும்புறா’ன்னு சிரிச்சுக்கிட்டே சொல்லிட்டு போனான்.. அதுக்கு அப்புறமும் பூவரசி எதுவும் பேசாமல் அமைதியா இருந்தா.. அவளோட ஆத்தாவுக்கு எதுவும் புரியல… பக்கத்து தெருவுல பூவரசி கூட படிச்ச பார்வதி இருக்குறா.. அவ வீட்டுக்கு போன பூவரசியோட ஆத்தா, ‘தாயி நீ வந்து பூவரசி கிட்ட பேசி, அவளுக்கு என்ன பிரச்சினைன்னு கேட்டு சொல்லு தாயி’ன்னுச்சு.. சரின்னு பார்வதி வந்து பூவரசிய பாத்து பேசுனா.. ரெண்டு பேரும் பள்ளிக்கூடத்துல ஒன்னா படிச்சத.., அப்ப நடந்த விசயத்தையெல்லாம் பார்வதி சொன்னா.. ‘பூட்ஸ் வாத்தியாரு உக்காந்துக்கிட்டே தூங்குனாரே.., சாப்பாட்டு தட்டுகளை வச்சு அவரு மொகத்துல எப்படி ஒளி அடிச்சோம்…, திடீர்ன்னு அவரு முழிச்சு நம்மள எப்படி விரட்டுனாரு…’ன்னு சொல்லி சிரிச்சா… இதுவரை அமைதியா ஒக்காந்திருந்த பூவரசி.., பள்ளிக்கூட கூத்த கேட்டு படக்குன்னு சிரிச்சா… அப்புறம் ‘ஏண்டி பார்வதி.. உனக்கு எத்தன புள்ளைக..’ன்னு அவள பாத்து கேட்டா…. ‘அடப்போடி.. கல்யாணம் முடிஞ்ச ரெண்டு வருசத்துல ரெண்டு புள்ளைக.., வருசத்துக்கு ஒன்னுன்னு பொறந்துச்சுக.., ரெண்டையும் தூக்கிட்டு திரியுறேன்’ன்னு சொல்லி சிரிச்சா பார்வதி.. அப்புறம், ‘நீ எனக்கு முன்னாடி கல்யாணம் முடிச்சவ.., உனக்கு எத்தனை புள்ளைக’ன்னு பூவரசிய பாத்து பார்வதி கேட்டா… பூவரசி எதுவும் சொல்லாம தலையை கவுந்து ஒக்காந்துட்டா… ‘அடியே பூவரசி.., திடீர்ன்னு உனக்கு என்னாச்சு’ன்னு பார்வதி கேட்டா… ‘அது ஒன்னுமில்ல.., எனக்கு குழந்தை பாக்கியம் இதுவரை கிடைக்கல’ன்னு பூவரசி சோகத்தோட சொல்லுச்சு… ‘இதுக்கெல்லாம் சோகமா..?, உனக்கு கிடைக்க வேண்டிய நேரத்துல கட்டாயம் கிடைக்கும்டி’ன்னு பார்வதி சொன்னா… ‘அப்படியா’ன்னு சொல்லி சத்தமா சிரிச்சா பூவரசி… பார்வதிக்கு ஒன்னும் புரியல… ‘ஏண்டி இப்படி சிரிக்கிற…, எதுன்னாலும் சொல்லுடி, சரிசெய்ய எத்தனையோ வழியிருக்கு’ன்னா பார்வதி.. ‘பலவழி பாத்தாச்சு.. ஒன்னும் முடியலடி’ன்னா பூவரசி ‘நான் உங்கூட படிச்சவ தான.., எங்கிட்ட சொல்லு.., எனக்கு தெரிஞ்சத நான் சொல்றேன்’ன்னு பார்வதி சொன்னா… பார்வதி இப்படி கேட்டதும், மனசுல கெடந்த பாரத்தையெல்லாம் அவகிட்ட இறக்குனா பூவரசி… பார்வதி பயந்துபோனா…, ‘என்னடி இப்படியெல்லாமா நடக்குது?, உன்னோட ஆத்தாட்ட சொல்லுடி’ன்னு சொன்னா… ‘யாரு கிட்ட நான் சொல்ல.., யாரு பேச்சயும் கேக்காம ஓடுன.., நல்லா அனுபவின்னு தான சொல்லுவாக’ன்னு அழுதா பூவரசி… ‘உன்னோட ஆத்தாட்ட நான் சொல்றேன்.., கவலைப்படாத எல்லாம் சரியாயிரும்’ன்னு ஆறுதல் சொல்லிட்டு பார்வதி கிளம்பி போனா… அடுத்த கொஞ்ச நேரத்துல பார்வதி வீட்டுக்கு பூவரசியோட ஆத்தா ஓடுச்சு… ‘என்ன தாயி.. அவ எதுவும் சொன்னாலா?’ன்னு கேட்டுச்சு… ‘ஆமா ஆத்தா… அவள கட்டுனவனுக்கு ஏதோ குறை இருக்காம். இவ ஏதாவது கேட்டா, வீட்டுக்கு வரவே மாட்டானாம். எதுவும் கேட்கக் கூடாது, யாரு கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு, பூவரசி தொடையில சூடு வச்சிருக்கான். இன்னக்கி கூட உங்க வீட்டுக்கு வந்து தனியா கூப்பிட்டு மிரட்டிட்டு போயிருக்கான். யாரு கிட்டயும் சொல்ல முடியாம பூவரசி கவலைப்படுறா.., ஆஸ்பத்திரிக்கு போயி பாத்திட்டு வருவோம்ன்னு மூனு வருஷமா கூப்பிடுறாளாம். ஆனா, அவன் வரவே மாட்டேன்னு சொல்றானாம். அவளுக்கு ஒரு புள்ள பொறந்தா போதும்ன்னு தவியா தவிக்கிறா’ன்னு பார்வதி சொல்லுச்சு… பூவரசியோட ஆத்தாவுக்கு விவரம் புரிஞ்சுச்சு… யாரு யாரு கிட்ட போயோ விளக்கம் கேட்டுச்சு… ‘அப்ப.. பக்கத்து ஊருல இருக்குற சாமியாரு ஒருத்தரை போயி பாத்தா பிரச்சினை தீரும்’ ன்னு ஒரு பொம்பள சொல்லிருக்கு… பூவரசியோட ஆத்தா.. அடுத்த நாளே அந்த சாமியார போயி பாத்து, விசயத்தை சொல்லுச்சு.. பொறுமையா கேட்ட அந்த சாமியாரு, ‘உம் மகள இங்க கூட்டிட்டு வாம்மா சொல்றேன்னு’ சொல்லவும், பூவரசியை யாருக்கும் தெரியாம அந்த சாமியாரிட்ட கூட்டிட்டு போச்சு அவளோட ஆத்தா.. பூவரசியின் கை ரேகையை பாத்த அந்த சாமியாரு, ‘அந்த பையன விட்டு விலகுறது நல்லது’ன்னு சொன்னாரு… அதக் கேட்டு பூவரசி அழுதா… ‘அவனால உனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவே கிடைக்காது. உன் உசுருக்கும் அவனால ஆபத்து இருக்கு. நான் செய்யக்கூடிய பூஜைக்கு ஒவ்வொரு நாளும் நீ வந்தா, உன்னோட வாழ்க்கை சிறப்பா மாறும்’ன்னு பூவரசிய பாத்து சொன்னாரு அந்த சாமியாரு… பூவரசி நம்பலைன்னாலும், மகளுக்கு நல்லது நடந்தா போதும்ன்னு தினமும் சாமியார்ட்ட அவள கூட்டிட்டு போச்சு அவளோட ஆத்தா… ஒரு நாளு பூவரசியோட ஆத்தாவுக்கு உடம்பு சரியில்லை. அன்னக்கி பூவரசி மட்டும் சாமியாரு நடத்தும் பூஜைக்கு தனியா போச்சு… இத நல்ல நேரமா நெனச்ச அந்த சாமியாரு பய, எதையோ குடிக்க கொடுத்து, பூவரசி மயக்கமானதும், அவளோட ஒடம்ப பயன்படுத்திக்கிட்டான்… மயக்கம் தெளிஞ்சு எந்திரிச்ச பூவரசி, அவளுக்கு நடந்த கொடுமையை நெனச்சு கதறுனா… ‘ஏய்.. நான் கடவுளுக்கு சமம். இத்தனை வருஷமா உனக்கு கிடைக்காத சந்தோசத்தை, இப்ப நான் கொடுத்திருக்கேன்’ன்னு சாமியாரு சொன்னதும்.., ‘போடா நாயேன்னு அவனோட மூஞ்சியில காறி துப்பிட்டு’ கிளம்பி வந்தா பூவரசி… அவளுக்கு நடக்குற எதையும் அவளால வெளியில சொல்ல முடியல.. ‘எது எதுவோ கடிச்சு குதறுதுகளே’ன்னு ஆத்தா வீட்டுக்கு வந்து விழுந்து அழுதா.. சாமியாரு கிட்ட போயி வாரான்னு யாரோ சொல்ல, பூவரசிய கட்டிக்கிட்டானே அந்த பயலோட ஆத்தாக்காரி வந்து, பலபேரு முன்னாடி பூவரசியையும், அவளோட ஆத்தாவையும் சொல்லக் கூடாத வார்த்தையெல்லம் சொல்லி அவமானப்படுத்துனா… பூவரசியால தாங்க முடியல.. ‘இந்தாம்மா… நீ பெத்த ஆம்புள புள்ள.., வீராதி வீரங்கட்டுன தாலி’ன்னு, தாலியை அத்து எரிஞ்சிட்டா.. ‘என்ன மாதிரி இன்னொரு பிள்ளைய ஏமாத்திராம அவன பாத்துக்க’ன்னு சொல்லிட்டு விடுவிடுன்னு வீட்டுக்குள்ள போயி கதவை டப்புன்னு அடச்சா பூவரசி… கொஞ்ச நாளுல அந்த சாமியாரு பயலும் போலீசுல சிக்கி, ஜெயில்ல கிடக்கான்னு பூவரசிக்கு தகவல் கெடச்சுச்சு.. இதுக்கிடையே, உடம்புக்கு சரியில்லாம இருந்த அவளோட ஆத்தா.. மகள நெனச்சு நெனச்சே உசுர விட்டுருச்சு… அதுக்கப்புறம் வீட்டுக்குள்ளயே கெடந்தா பூவரசி… இவகூட பள்ளிக்கூடத்துல படிச்ச பார்வதி தான் அடிக்கடி வந்து பாத்திட்டு போவா… அவ தான் ஒரு நாளு சொன்னா.., ‘நீ ஏண்டி வீட்டுக்குள்ளயே கெடக்குற.., நட ந்தது நடந்து போச்சு.., அதுக்காக வாழ்க்க முழுசா வேதனைப்படனுமா?, நானு நம்ம ஊருல இருக்குற பனியன் கம்பெனிக்கு வேலைக்கு போறேன்.., நீயும் எங்கூட வா.., மனசுல இருக்குற கஷ்டமெல்லாம் போயிரும்’ன்னு சொல்லுச்சு.. பார்வதி சொல்றதும் நல்லதுன்னு பூவரசி நெனச்சா.. அப்புறம் பார்வதி கூட பனியன் கம்பெனிக்கு வேலைக்கு போக ஆரம்பிச்சா.. அங்க அஞ்சு, ஆறு ஆம்பிளைகளைத் தவிர பொம்பள பிள்ளைக தான் அதிகம் வேலை பாக்குறாக. அவுக பாட்டுக்கு பேசி சிரிச்சுக்கிட்டு வேலை பாப்பாக… இது பூவரசிக்கு ரெம்ப பிடிச்சிருந்துச்சு.. அஞ்சு, ஆறு ஆம்பிளைக இருக்காங்களே, அவுகள ஒருத்தன் தான் குமரேசன்…, அடுத்த ஊரு பய.. இவனோட பொறந்தது மூனு பொம்பள புள்ளைக. இவந்தான் மூத்தவன். சின்னதா சொந்த வீடு இருக்கு. இவனோட அப்பாவால முடிஞ்சது அவ்வளவுதான்.., பிள்ளைகளை கட்டிக்கொடுக்குறதுக்கு முன்னாலயே அவரு போயி சேந்திட்டாரு.. பாவம் அங்க இங்க வேலை பாத்து, கொஞ்ச கொஞ்சமா சேத்து ஒவ்வொரு தங்கச்சியையும் குமரேசன் கட்டிக்கொடுத்தான்… அதுக்கு அப்புறம் இவனுக்கு கல்யாணம் முடிக்கலாம்ன்னு பாத்தா, வயசு முப்பத்தெட்டு ஆயிருச்சு. தலையில கால்வாசி முடி விழுந்திருச்சு…, ஊர் ஊரா பொண்ணு தேடியும் கிடைக்கல.. அவங்கூட வேலை பாக்குற பிள்ளைக அவன கிண்டலடிப்பாக. அவனுக்கு கோவமே வராது.. சிரிச்சிட்டு போவான்… பலபேரு கிண்டல் செஞ்சாலும், பூவரசி மட்டும் அவங்கிட்ட மரியாதையா பேசும்… அதனால, பூவரசியை பாத்தா அவனுக்கு பிடிக்கும்… ஒருதடவை பூவரசியை பத்தி.. பார்வதி தான் அவங்கிட்ட சொல்லுச்சு... ‘நல்ல புள்ளைக்கு இப்படியெல்லாமா கஷ்டம் வருது, பாவம்’ன்னு அவஞ் சொன்னான்.. அந்த சமயத்துல, ‘அவள நீ கட்டிக்கிறயாண்ணே’ன்னு சும்மா விளையாட்டா கேட்டுச்சு பார்வதி… ‘பார்வதி என்ன இப்படி சொல்ற.., அப்படி புள்ள கிடைக்கணுமே.., அவளுக்கு மொதல்ல என்னைய பிடிக்குமா?’ ன்னு கேட்டான்.. குமரேஷன் இப்படி சொல்லுவான்னு பார்வதி எதிர்பாக்கவே இல்ல.. சந்தோசம் தாங்க முடியாம.. ‘அண்ணே.. பேசாம இருங்க.. அவகிட்ட இப்பவே கேட்டு கல்யாணத்தை முடிச்சிருவோம்’ன்னு சொல்லி சிரிச்சுக்கிட்டே ஓடுனா.. சாயந்திரம் வேலை முடிஞ்சு வீட்டுக்கு போறப்ப, பேச்சுவாக்குல.. குமரேசன கட்டிக்கிறயான்னு பூவரசிகிட்ட, பார்வதி கேட்டுச்சு… ஆனா.. பூவரசி எந்த பதிலும் சொல்லல.. அடுத்த நாளு அவ வேலைக்கும் வரல.. பார்வதிக்கு ரொம்ப கஷ்டமா போச்சு… அன்னக்கி சாயந்திரம், பூவரசியை வீட்டுக்கே போயி பாத்தா… ‘என்னடி.. நான் தப்பா பேசிட்டேன்னு நெனச்சயா?, அதான் வேலைக்கு வரலையா?’ன்னு கேட்டா.. ‘இச்..சே.. அப்படி இல்லடி.., ஏற்கெனவே நான் பாதிக்கப்பட்டவ…, இது அவருக்கு தெரியுமான்னு தெரியலை.., ஒரு நல்ல மனுசங்கிட்ட எதையும் மறச்சு வைக்கிறது தப்பு’ன்னு பூவரசி சொல்லுச்சு… பார்வதி சிரிச்சா.. ‘ஏய்.. நான் ஏற்கெனவே சொல்லிட்டேன்.., அவரு ஒத்துக்கிட்டாரு…, நீ ஒத்துக்கிறயா’ன்னு கேட்டு, பூவரசி முகத்தை உத்து பாத்தா… முகத்த கீழ கவுத்தி, தலையை மெல்ல ஆட்டி.. பூவரசி சிரிச்சுக்கிட்டே சரி..ன்னு சொன்னா… பார்வதி அவளை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தா… கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி, ஒரு சீட்ட கொண்டு வந்து பூவரசிகிட்ட குமரேசன் கொடுத்தான்… ‘இது என்னாது’ன்னு அவ கேட்டா.., ‘ஆஸ்பத்திரியில பாத்த சீட்டு.., எனக்கு எந்த பிரச்சினையும் இல்லையாம்..., நீ திரும்பவும் ஏமாந்திரக் கூடாதில்ல.. அதுக்குதான்’ன்னு சொன்னதும், அவனை கட்டி பிடிச்சு பூவரசி அழுதா… கல்யாணம் முடிஞ்சி ஒரு வருஷம் ஆகுது. இந்தா.., பொம்பள புள்ளய பெத்து, குமரேசன் எப்ப வருவான்னு ஆஸ்பத்திரியில பூவரசி எதிர்பாத்து காத்திருக்கா.. கொஞ்ச நேரம் லேசா அவ கண் அசந்தா… அப்ப மழை பேஞ்சு, அவ நெத்தியில தண்ணி விழுந்தது மாதிரி இருந்துச்சு.. வேகமா முழுச்சு பாத்தா.. பக்கத்துல குமரேசன்… அவ நெத்தியில விழுந்த தண்ணி.., குமரேசன் கண்ணு வழியா பொங்கி வந்த அருவி… ரெண்டு பேரும் அவுக புள்ளைக்கு மாறிமாறி முத்தம் கொடுத்தாக.. அதுல பல முத்தத்தை இவகளும் மாத்திக்கிட்டாக… - ரா.கர்ணன் -

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.