logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

இராம இளங்கோவன்.

சிறுகதை வரிசை எண் # 96


அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதைப் போட்டி: சிறுகதை: இன்னமும் மிச்சமிருக்கிறது….. சமையலறையில் அழுக்குப் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த தேவியின் செல்போன் அலறியது. கையைக் கழுவிக்கொண்டு தன் புடவை முந்தானையில் கைகளைத் துடைத்துக் கொண்டு வந்து செல்போனை எடுத்துப் பேசியவளுக்கு, ஈரக் குலையே நின்று போனது போன்ற பிரமையும், கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலவும், தான் மட்டும் எந்தத் துணையும் இல்லாமல் வேற்றுலகக் கிரகத்தில் தனியாக விடப்பட்டது போலவும், தன் காலுக்குக் கீழே தன்னை மட்டும் கீழே தள்ளிவிட்டு, தரை நழுவி ஓடுவது போலவும் உணர்ந்தாள். இப்படியொரு நிலைக்கு தேவி ஆளானதுக்குக் காரணம் இருந்தது. அரேபியா நாட்டின் குவைத்துக்குக் கட்டடப் பணிக்குச் சென்ற தேவியின் கணவர் செல்வராஜ், ஆறு வருஷத்துக்கு மேல் குவைத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு ஒரு நாள் கட்டடப் பணியில் இருந்த போது, தேவியின் கணவர் செல்வராஜ் கட்டடத்தின் மேலிருந்து தவறி விழுந்து சுயநினைவு இல்லாமல் குவைத்தில் ஒரு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். என்பதைக் கேள்விப் பட்டுத்தான் அதிர்ச்சி அடைந்தாள்.. செல்வராஜிக்கும் தேவிக்கும் இரண்டு மகன்கள். இந்த இரண்டு பிள்ளைகளையும் வளர்த்துப் படிக்க வைக்கவும், குடும்பம் நடத்தவும் கணவன் மனைவி இரண்டு பேரும் வேலை செய்து வாங்கும் கூலியில் வறுமையைச் சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். ‘இந்தியாவில் கஷ்டப் பட்டுப் பாடுபட்டு உழைத்தாலும் வாழ்க்கையில் முன்னேற முடியாது. பிள்ளைகளை வளர்க்க முடியாது. சோற்றுக்கே கஷ்டப் பட வேண்டியது தான். அதனால், வெளிநாட்டு வேலைக்குப் போனால் தம்முடைய கஷ்டமெல்லாம் தீரும்.’ என்று எண்ணிக் கடனை வாங்கிக் கொடுத்து ஏஜெண்ட் மூலமாக குவைத்திற்குக் கட்டட வேலைக்குப் போனவர் தான் இந்தச் செல்வராஜ். குவைத்திற்கு வேலைக்குப் போய் ஐந்தாறு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் வாங்கியக் கடனை அடைக்கவில்லை; பிள்ளைகளோ சின்னஞ் சிறு பிள்ளைகள். வேறு யாருடைய உதவியும் இல்லை. இப்படிப் பட்ட நிலையில் செல்வராஜ் விபத்தில் சிக்கிச் சுய நினைவே இல்லாமல் உயிரிருந்தும் பிணம் போல மருத்துவமனையில் கிடக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு அதிர்ந்து போனாள். “அய்யோ கடவுளே! நான் என்ன பாவம் பண்ணேன்? யாருக்கு என்ன துரோகம் செஞ்சேன்? ஏன் எனக்கு மட்டும் இப்படிப்பட்ட சோதனை? சோதனை மேல சோதனையா கஷ்டத்துக்கு மேல கஷ்டமா வந்து வாழ்க்கையே சோதனையா இருந்தா நான் என்ன பண்ணுவேன்? இனி எப்படிப் பிள்ளைகளை வளர்த்துப் படிக்க வைப்பேன்? எப்படிக் குடும்பத்தை நடத்துவேன்? எப்படி வாங்கியக் கடனை வட்டியோடு அடைப்பேன்? நான் எப்படி உயிர் வாழுவேன்?” என்று தேவி அழுதுப் புலம்பினாள். பல்வேறு எண்ணங்கள் தேவியைத் துளைத்து எடுத்தன. செய்வது அறியாமல் துக்கத்தைத் தாங்க முடியாமல் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் கட்டிப் பிடித்து மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு, “இனிமே எப்படி உங்கள வளர்த்து, படிக்க வச்சு ஆளாக்குவேனோ? எந்த வருமானத்த நம்பி உயிர் வாழுவேனோ?” என்று ஓவென கதறி அழுதாள். ஊரே கூடி நின்று வேடிக்கைப் பார்த்தது. உறவினர்கள் விபரம் தெரிந்து ஓடி வந்தனர். செய்வது அறியாமல் திகைத்தனர். வீடே போன் வந்த கொஞ்சம் நேரத்தில் எழவு வீடு போல துக்கத்தைச் சுமந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நம்பிக்கை என்ற எதிர்கால வாழ்க்கைக்கான வெளிச்சம் தெரியாமலே இருண்டுக் கிடந்தது தேவிக்கு. என்ன தான் முடிவு என்று தெரியவில்லை; ஆனால், தேவிக்கு நெருக்கடியான சூழலும், மிகப் பெரிய சுமையைச் சுமக்கச் சுமையைச் சுமத்த காலம் வெகு தொலைவில் இல்லை. என்பதை ஒரு வாரத்திற்குள் தெரிந்து கொண்டாள். ஆமாம் கணவன் செல்வராஜை ஒப்படைக்கக் காவல் நிலையத்திலிருந்து தேவிக்குப் போன் வந்தது. “தேவிங்கறது யாரும்மா?” “நான் தான் சார்!” “நான் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இன்ஸ்பெக்டர் நவின்குமார் பேசுறேன்; ஸ்டேஷனுக்கு வந்து உன் கணவர் செல்வராஜை அழைச்சிட்டு போம்மா.” “குவைத்தில ஆஸ்பெட்டல்ல இருக்கிறதா போன வாரந்தான் ஃபோன் வந்திச்சு; இப்ப நீங்க போலிஸ் ஸ்டேஷன்ல இருக்கிறதா சொல்றீங்க; எனக்கு ஒன்னுமே புரியலயே சார்? நேரா வீட்டுக்கு வராம போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏன் போனாரு?” “உங்க எல்லாக் கேள்விக்கும் பதில் கிடைச்சிடும் நேரில வாங்க.” என்று இன்ஸ்பெக்டர் நவின்குமார் சொன்னதும் தேவிக்கு ஒரே குழப்பம். ‘போன வாரம் குவைத்தில சுயநினைவு இல்லாமல் மருத்துவ மனையில் இருக்கிறதா? சொன்னாங்க; இப்ப என்னடான்னா போலிஸ் ஸ்டேஷன்ல இருக்கிறதாகவும், வந்து கூட்டிட்டுப் போங்கன்னும் போலிஸ் இன்ஸ்பெக்டர் சொல்றாரே? என்னோட வாழ்வில என்னதான் நடக்குது?” என்று யோசித்துக் குழம்பியவள் உடனே இரண்டு பிள்ளைகளையும், சொந்தக்காரர்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்றாள். அங்கு சக்கர நாற்காலியில் சுய நினைவே இல்லாமல் தலை தொங்கிய நிலையில் கிடந்த செல்வராஜை கண்டு துடித்துப்போய் குழத்தைகளை விட்டு விட்டு ஓடி கட்டிப் பிடித்து அழுதாள். சுய நினைவே இல்லாமல் இருந்த செல்வராஜிடம் எந்த அசைவும் இல்லை. என்று அறிந்து கொண்டாள். “இத பாரும்மா! உன் கணவர் வேலை செய்த குவைத்தில இருக்கும் கம்பனி சட்டச் சிக்கல் வரக்கூடாதுன்னு சட்டப்படி உங்கிட்ட உன் கணவரை ஒப்படைக்க ஸ்டேஷனுக்கு கொண்டு வந்திருக்காங்க. உன் கணவர் கூட வேலை செய்த தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்த மூனு பேரு மூலமா அனுப்பிருக்காங்க; இந்த அக்ரிமெண்ட்டில கையெழுத்துப் போட்டுட்டு உன்னோட கணவரை அழைச்சிட்டு போம்மா!” என்று இன்ஸ்பெக்டர் நவின்குமார் சொன்னதும், “சார்! எனக்கெந்த வேலையுமில்ல; என் புருஷன நம்பித்தான் நான் குடும்பம் நடத்தினேன். இப்ப என்னோட பிள்ளைகளை வளர்ப்பேனா; இல்ல சுய நினைவே இல்லாமல் கிடக்கிற இவரைப் பார்ப்பேனா? எனக்கு யாரு உதவிப் பண்ணுவாங்க? வறுமையில செத்துட்டிருக்கிற நான் எப்படிங்க இவரைப் பார்த்துக்க முடியும்? அதெல்லாம் முடியாதுங்க; நீங்களே ஒரு ஆஸ்பிட்டல்ல சேர்த்திடுங்க; உங்களுக்குப் புண்ணியமா போகும்.” என்று மறுத்தாள் தேவி. தேவிக்கு ஆதரவாகச் சொந்தக்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்து காவல் நிலையத்தையே முற்றுகை இட்டனர். செல்வராஜை அழைத்துப்போக மறுத்தனர். எவ்வளவோ பேசி சமாதானம் செய்து, செல்வராஜை அழைத்துப் போகும்படி இன்ஸ்பெக்டர் நவின் குமார் சொல்லியும் தேவியோ வறுமையைக் காரணங் காட்டிக் கணவனை ஏற்றுக் கொள்ள மறுத்தாள். தேவியின் உறவினர்களும் தேவிக்கு ஆதரவாக இருந்தனர். “இத பாருங்க…. விபத்து சம்மந்தம்மா குவைத்தில நீதிமன்றத்தில வழக்குத் தொடரப் பட்டிருக்கு; வழக்கு வெற்றிப் பெற்றா கோடிக்கணக்கான ரூபாய் கிடைக்கும்; மருத்துவ செலவுக்கு மாதா மாதம் கம்பெனியிலிருந்து ஒரு தொகை அனுப்பச் சொல்றோம்; கவலைப்படாம கூட்டிட்டுப் போங்க”ன்னு இன்ஸ்பெக்டர் நவின்குமார் சொல்லியும் கேட்கவில்லை. “கேஸ தொடர்ந்து யாரு நடத்தறது? கேஸ் ஜெயிக்கும் கோடிக் கணக்கில நஷ்ட ஈடு கிடைக்கும்னு எப்படி நம்பறது சார்? கேஸ் முடியிற வரைக்கும் இவர வச்சி யார் பாத்துக்கறது? வேணாம் சார்! மண் குதிரைய நம்பி ஆற்றில இறங்க முடியாது; நான் வரேன் சார்!” என்று செல்வராஜை வறுமையைக் காரணங் காட்டி அங்கேயே காவல் நிலையத்தில் தேவி விட்டுச் சென்றாள். வேறு வழியில்லாமல் குவைத்தில் செல்வராஜ் கூட வேலைச் செய்தவர்கள், கம்பனி மூலமாக இந்தியாவுக்கு அழைத்து வந்த அன்பரசன், தயாளன், ஆசிர்வாதம் என்ற மூவரும், “சரி சார்! ஆஸ்பெட்டல்ல அட்மிட் பண்ணி, ஆஸ்பெட்டல் செலவு எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை. நாங்க மூவரும் மும்மூர்த்திகளா இருந்து நல்லபடியா மாத்தி மாத்திப் பார்த்துக்கிறோம் சார்; நாங்கள் குவைத்துக்குப் போனாலும் வேலைக்கு ஆள் வைத்துப் பார்த்துக்கிறோம்.” என்று சொன்னதும், “ உலகத்தில மொத்தமா மனிதாபிமானம் அழிந்து போகல; இன்னமும் மிச்சம் இருக்கிறது என்பதற்கு நீங்களே சாட்சி. உங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிய நானும் கண்டிப்பா செய்றேன்.” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் நவின் குமார், குவைத்தில் உள்ள கம்பனி நிறுவனத்திடமும் பேச்சு வார்த்தை நடத்தி மருத்துவச் செலவுகளுக்கு உதவும்படி ஒப்புதலும் பெற்றார். அந்த நிறுவன முதலாளி இடமும் மனிதம் சாகவில்லை; மிச்சமிருப்பதை உணர்ந்தார் இன்ஸ்பெக்டர். பிறகு ஒரு ஆம்புலன்சை வரவைத்துச் செல்வராஜை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஒரு நாள் போவது ஒரு யுகம் போவது போல இருந்தாலும், அன்பரசன், தயாளன், ஆசிர்வாதம் ஆகிய மூவரும் பின் வாங்கவில்லை. அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து சூழ்நிலை, செல்வராஜிடம் உள்ள மாற்றம், முன்னேற்றம் எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு செல்வராஜிக்கு மருத்துவம் செய்யும் டாக்டர், செவிலியர்களிடம் பேசி நிலைமையைத் தெரிந்து கொள்வார் இன்ஸ்பெக்டர் நவின்குமார். இப்படித்தான் பதினைந்து வருஷமா இன்ஸ்பெக்டர் நவின்குமார் நடந்து கொண்டார். அதேபோல் செல்வராஜை பார்க்க வந்த இன்ஸ்பெக்டர் நவின்குமார் அன்பரசன், தயாளன், ஆசிர்வாதம் ஆகியோர் அப்பொழுது இருந்தனர். அதனால் அவர்களிடம், “ ஏங்க இன்னும் எத்தனை வருஷம் தான் இப்படி அவஸ்தை படறது? எந்த முன்னேற்றமும் இல்ல; இனியும் சுய நினைவுக்கு வருவாருன்னு எப்படி நம்பறது? பேசாம சுப்ரீம் கோர்ட்டில கருணைக் கொலை செய்ய மனு செய்தால் என்ன?” என்று கேட்டார். “வேணாம் சார்! அந்தப் பாவம் நமக்கு வேணாம். என்னுடைய தங்கச்சிக்குக் கல்யாண ஏற்பாடு ஆயிடுச்சு; கடன் கேட்ட இடத்தில கடன் கிடைக்கல; ஆயிரம் கேள்விக் கேட்டுப் போதிய ஆவணம் இல்லன்னு மறுத்திட்டாங்க. அப்போ எந்த நிபந்தனையும் இல்லாம, எந்த ஆவணமும் கேட்காம பணம் கொடுத்து உதவக்கூடிய எந்த வசதியும் இல்லாத இவர், சிறுகச் சிறுகச் சேர்த்து ஊருக்கு மனைவிக்கு அனுப்ப வச்சிருந்த பணத்த எனக்குக் கொடுத்து உதவி செய்தவர் சார்! இவரு மட்டும் அப்போ உதவாம போயிருந்தா…. என் தங்கச்சிக் கல்யாணம் நின்னுபோயி, குடும்பத்தில உயிர் பலி ஏற்பட்டிருக்கும். அப்படி நடக்காம தடுத்தவர் சார்! அந்த நன்றி கடனை அடைக்க எனக்குக் கிடைச்ச வாய்ப்பா இப்பப் பார்க்கிறேன் சார்!” என்றார் அன்பரசன். “என்னோட அம்மாவுக்கு ஆர்ட் அட்டாக்; உடனே ஆபரேஷன் செஞ்சாகணும்; ஆபரேஷன் செய்து லட்சக்கணக்கில பணம் செலவு பண்ண அப்போ எங்கிட்டப் பணம் இல்ல. ஆனா, இன்னக்கி என்னோட அம்மா உயிரோட இருக்காங்கன்னா இவர் தான் காரணம் சார்! நான் கேட்காமலேயே பணம் கொடுத்து உதவினார்; கடவுள் கூட கேட்டா தான் வரம் கொடுப்பார். ஆனா, இவர் கேட்காமலேயே உதவக் கூடியவர் சார்! நம்பிக்கையோடு இருப்போம்.” என்றார் தயாளன். “சார்! ஒரு முறை இவரு லீவுல ஊருக்கு வந்திருந்தப்ப என் பையனுக்கு விபத்து ஏற்பட்டு கால் எலும்பு நொறுங்கிப் போச்சு; இவரோட பணத்தைச் செலவு செய்து இரவு பகலா என் பையன் கூட ஆஸ்பெட்டல்ல இருந்து காப்பாத்தி விட்டார் சார்! இன்னக்கி என் மகன் கிரிக்கெட்ல நேஷனல் பிளேயர் சார்! அதுக்குக் காரணம் இவர்தான் சார்; இவரப் போயி…. வேணாம் சார்!” என்று கூறினார் ஆசிர்வாதம். “இவரு பெரிய வசதியானவர் இல்ல சார்! வறுமையில கஷ்டத்த மட்டுமே பார்த்த மனுஷன் சார்; வட்டிக்குக் கடன் வாங்கி ஏஜெண்ட்க்குக் கட்டிதான் குவைத்துக்கு வந்தாரு. அந்தக் கடனைக் கூட இன்னும் அடைக்கல சார்! அப்படிப்பட்ட நிலையில கூட உதவி செய்தவர் சார்! எதைப் பற்றியும் கவலைப்படாமல் உதவக் கூடியவர் சார்! இவரோட மனைவி தான் இவரோட அருமையை புரிஞ்சிக்கல; ஆனா, நாங்க நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்கோம்; பழைய நிலைமைக்கு வருவாருன்னு நாங்க நம்புறோம் சார்! அப்படியே சுய நினைவுக்கு வரலன்னாலும் தானா சாகிற வரைக்கும் நாங்க பார்த்துக்கிறோம் சார்! ஒரு நல்ல மனுஷனுக்குப் பணிவிடை செய்ய எங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பமா நினைக்கிறோம் சார்!” என்று அன்பரசன் சொன்னதும் மற்ற இருவரும் பெருமிதத்தோடு கண்ணில் கண்ணீர் வழிய தலையை ஆட்டி ஆமோதித்தனர். இன்ஸ்பெக்டர் நவின்குமாரைப் பார்த்து, “ஆமாம்” என்று. ‘இன்னும் மொத்தமாய் அழிந்து விடவில்லை; மிச்சமிருக்கிறது மனிதாபிமானம்.’ என்று இன்ஸ்பெக்டர் நவின் குமார் மனசுக்குள் நினைத்தார். ஏறத்தாழ இருபது வருசமாகச் செல்வராஜை அன்பரசன், தயாளன், ஆசிர்வாதம் ஆகிய மூவரும் மாறி மாறிச் செலவுகளைச் செய்து பார்த்துக் கொண்டனர். குவைத்தில் வேலைக்கும் சென்று வந்தனர். இருபது வருசத்திற்குப் பின்னர் சுய நினைவே இல்லாமல் இருந்த செல்வராஜ் சுய நினைவுக்கு வந்தார். குவைத்தில் கூட வேலை செய்த தயாளன் அருகில் இருந்தார். மற்ற அன்பரசன், ஆசிர்வாதம் இருவரும் குவைத்தில் இருந்தனர். உடனே போன் செய்து வரவழைத்தார் தயாளன். இருபதாண்டு கடந்ததால் தானும், தன்னுடைய உடன் வேலை செய்த நண்பர்களும் வயதாகி விட்டதைப் பார்த்தார் செல்வராஜ். “நான் எங்கு இருக்கேன்? நீங்க எப்படி இங்க?” என்று கேட்டதற்கு மூவரும் மாறி மாறி இருபதாண்டாய் நடந்த கதையைக் கூறினர். “நான் தவறி விழுந்தது மட்டும் தான் நினைவில இருக்கு; மற்றது எதுவும் தெரியாது. எனக்காக இருபது வருஷமா ஒரு தவம் இருக்கிறத விட கடினமா எனக்காக துன்பத்த அடைஞ்சிருக்கீங்க; நான் எப்படி உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப் போறேன்? இந்தக் கடனை எப்படி அடைப்பேன்? அடுத்த பிறவியில உங்களுக்குப் பிள்ளையா பிறந்து உங்கள நான் பார்த்துக்கணும். இன்ஸ்பெக்டர் சாருக்கும் என் நன்றி.” என்று செல்வராஜ் கண்கலங்கினார். நண்பர்கள் மூவரும் செல்வராஜை கட்டிப் பிடித்து ஆறுதல் கூறினர். “சரி…. நான் என் மனைவி தேவியைப் பார்க்கணும்; பிள்ளைகளைப் பார்க்கணும். அழைத்து வரமுடியுமா? என்னதான் இருந்தாலும் அவள் என் மனைவி! அவளுடைய வறுமை, கடன் தொல்லை, வேலை இல்லா திண்டாட்டம்; வருமானம் இல்லாத சூழ்நில; சின்ன சின்ன குழந்தைகள் அப்படின்னு அவளை அப்படி பேச வைத்திருக்கு; அவள் என்னை வெறுத்தாலும் நான் வெறுக்க முடியாது. பிளீஸ்…… எப்படியாவது தேடிக் கண்டுபிடிச்சு அழைச்சிட்டு வாங்க.” என்று செல்வராஜ் சொன்னதும், ‘மனித நேயம் மொத்தமாய் அழிந்து விடவில்லை; இன்னமும் மிச்சமிருக்கிறது. அதனால், மேகம் பொழியாத மழையை இங்கே மனித வடிவில் கருணை மழையைப் பொழிந்தனர் என்பதை ஒவ்வொருவரிடமும் உணர முடிந்தது. இருப்பினும், செல்வராஜின் வார்த்தையைக் கேட்டு மூவரும் திகைத்துப்போய் வாயடைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அப்பொழுது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் நவின்குமாரும் திகைத்து நின்றார். கதையாக்கம்: இராம இளங்கோவன், பெங்களூரு. அலைபேசி: 98455 26064. மின்னஞ்சல்: neruppalaipaavalar@gmail.com —------------------------------------------------------------

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.