S. Sethuraman
சிறுகதை வரிசை எண்
# 95
ஜங்காலகி
பஸ் புறப்பட்டு, வேகமும் எடுத்து விட்டது!
இனி ஓடிப் பயனில்லை. இரைத்தது சரவணனுக்கு.
'சே ! அந்தக் குடிகாரன் மட்டும் குறுக்கே வந்து விழாமலிருந்திருந்தால் ஏறியிருப்பேனே !
ஹூம் ! அடுத்த பஸ் எப்போ வருமோ ? பேசாமல் அடையாறு போய் இன்னொரு பஸ் புடிக்க வேண்டியது தான் !'
கைக்கெட்டாத பேருந்து, இப்போது பார்வைக்கும்
எட்டவில்லை !
கடும் வெயில். பஸ் ஸ்டாப்புக்கருகே பரந்து விரிந்திருந்த மரநிழலின் விளிம்பிற்கு வந்தான்.
இரைப்பு ஓரளவு குறைந்திருந்தது.
நன்றாக நகர்ந்து நிழலில் நின்று கொண்டான்.
சற்றுத் தள்ளி மரத்தடியில் பெண்ணொருத்தி நின்றிருப்பதை இப்போது தான் கவனித்தான்.
அவள் எதிரே பாறாங்கல்லின் மேலே உட்கார்ந்திருந்தான் ஓர் ஆள்
கற்சிலை போன்ற தேகம்;
திரண்டிருந்த தசைகளை எடுத்துக் காட்டின மணிமாலைகள். கையில் ஒரு சிறு கோல்.
அந்தப் பெண் தன்னையே நோக்குவதைத் தெரிந்து கொண்ட சரவணன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
சற்றைக்கெல்லாம் காய்ந்த சருகுகளின் மீது "சரக் சரக்" என்ற காலடி ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தான். அவனை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தாள் அவள்.
அவளை முந்திக்கொண்டு பாய்ந்து வந்தான், பாறாங்கல்லில் உட்கார்ந்திருந்த அந்தப் பேர்வழி. சரவணனுக்கு மிக அருகில் வந்து நின்று கொண்டு விட்டான்.
"மணி என்னா ?"... சிவப்பூறிய கண்களைக் கொட்டியபடி கேட்டான். சரவணன் வேண்டா வெறுப்பாக ரிஸ்ட் வாட்சைப் பார்த்தான்-
"மூணு ஆகப்போவுது"..
"அடியாறு-- என்னா பஸ்ஸு?"....... "அஞ்சு "...
"ஜோஷியம் பாக்குறியா?"...
"வேணாம் - எனக்கே ஜோசியம் பாக்கத் தெரியும்."
"கை பாக்குறியா?"....
பஸ்ஸைக் கோட்டை விட்டுவிட்ட ஏமாற்றத்திலிருந்த சரவணன் பேசவில்லை.
நேரம் ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆள் இன்னும் நெருங்கி வருவதைக் கண்டதும் "கடு கடு" வென முறைத்துப் பார்த்தான். அவ்வளவுதான்- படபடவென்று நடையைக் கட்டி விட்டான், அந்தக் குறி சொல்பவன்.
"நல்ல வேளை,நீங்க வந்தீங்க. இம்மா நேரம் தனியா மாட்டிகிட்டுத் தவிச்சுக் கிட்டிருந்தேன்"--முகத்தில் வழிந்த வியர்வையைக் கைக்குட்டையால் ஒற்றிக் கொண்டே சொன்னாள் அந்தப் பெண்.
பௌடர் திட்டுத்திட்டாகத் தெரிந்தது. நெடுநேரமாக நிற்கிறாள் போலும்...
"தோ ஓடறாரே அந்த ஆள், ஒங்களைக் கண்டதும் -----"
மூச்சு வாங்கியது; தொடர்ந்து பேசினாள்.:
"வந்தாரு; எதிர்ல குந்திக்கின்னாரு; கையக் காட்னாரு; கண்ணக் காட்னாரு"---
கொஞ்சம் நிறுத்திக் கொண்டு, சாலை முனையில் அவன் திரும்பிச் சென்றதைப் பார்த்த பிறகே
தொடர்ந்தாள்: "ஒரே பயமாப் போயிடுச்சு!"
சரவணன் கூலிங் கிளாஸ்
அணிந்திருந்ததால் அவளுடைய முகம் மட்டுமே அதில் ப்ரதிபலித்தது. அவனுடைய முகபாவத்தைக் காண முடியவில்லை.
அவனோ தலையை ஆட்டி விட்டு, பஸ் வரவேண்டிய திசையை நோக்கினான்.
எதிர்த் திசையிலிருந்தும் பஸ் ஓடியதாகத் தெரியவில்லை.
எப்போதாவது "சர் சர்" என்று இருபுறமும் "டூ வீலர்கள்" பறந்தன.
'என்ன ஆகிவிட்டது, ஜனநடமாட்டமே இல்லை?
படைபதைக்கும் வெயிலுக்குப் பயந்து எல்லாரும் வீட்டில் அடைந்து கிடக்கிறார்களா !..
இல்லை-இந்த ரூட்டில் ஏதாவது ஊர்கோலமா?..
என்ன இது , பஸ் வராதா ?'
அந்த எண்ணத்தை உதறி விடுவது போல் தலையை ஒரு குலுக்குக்குலுக்கிக் கொண்டான்.
'சே ! அந்த பஸ்ஸைத் தவற விட்டுவிட்டோமே !'
விசித்திரமான அவனது அசைவுகளைக் கண்டு அவள் வியப்படைகிறாளோ ! என்று தோன்றியது.
காரணம் ----
அவள் முகத்தில் ஒருவித மலர்ச்சியைக் கண்டான்.
அவள் பார்வை, சாலையின் எதிர்ப் பக்கத்தில் நிலைத்திருந்தது.
ஒரு வாலிபன் வந்து கொண்டிருந்தான்.
பெண்ணின் அதரங்கள் விரிந்தன.
குறுக்கே கடந்து இவர்கள் நின்றிருந்த இடத்தை நெருங்கி விட்டான் அவன் . அவள் முகத்தில் அரும்பிய முறுவல், கன்னத்துக் குழிகளை வெளிப்படுத்தியதைச் சரவணன் கவனிக்கத் தவறவில்லை.
வாலிபன் மிக அருகில் வந்து விட்டான்.
பெண்ணின் பற்கள் நன்றாகவே தெரியத் தொடங்கின.
மரநிழலுக்கு வந்து விட்டான், அந்த வற்றல்.
கையில் பெரிய பொட்டலம்.
பெண், மெல்லத் திரும்பினாள்.
நடக்கத் தொடங்கினாள். இருவரும் மரத்தடிக்குச் சென்று விட்டனர்....
'டிர் டெட் ..டிர்ர் டெட் !'
சாலைத் திருப்பத்தில் பஸ்ஸின் 'முகம்' தெரிந்தது.
துள்ளிப் பாய்ந்தான் சரவணன்.
அதன் முழு உடலும் வெளிப்பட்டது. போர்டில் புழுதி படித்திருந்தாலும் 'அடையாறு வரை' என்ற வாசகம் தென்பூட்டியது.
உற்சாகத்துடன் கையைக் காட்டிக் கொண்டே ஓடினான்.
அப்பாடா ! வந்து நின்றது.
புழுதி பறந்தது.
விருட்டென்று பின் வழியாக ஏறினான்.
அடையாற்றுக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டான்;
முன்னோக்கி நகர்ந்தான்.
பஸ் புறப்பட்ட வேகம் அவனை உந்தித்தள்ளி ஸீட்டில் உட்கார வைத்து விட்டது.
முன் ஸீட்டில் அந்த ஜோடி....
தமக்கு நேரே வந்து நின்றதால் வசதியாக முன் வழியாக ஏறி விட்டிருந்தார்கள்.
நடத்துநர், "டிக்கெட்"என்று கேட்டபடி வந்து நின்றதையும் கவனியாமல் இருவரும் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.
"எங்க போகணும்?"
கண்டக்டரின் கடுமையான குரல் கேட்டு நிமிர்ந்தான் வற்றல்.
"ரெண்டு அடையார்."
ஓட்டுநரையும் சேர்த்து ஆறே பேர் அந்தப் பேருந்தில் !
குலுக்கல் கூடுதலாகவே இருந்தது.
எனவே கிசுகிசுப்பை நிறுத்தி விட்டு உரக்கவே பேசத் தொடங்கி விட்டனர் அவ்விருவரும்.
"ஏன் இம்மா லேட்டு ? "-
கொஞ்சினாள் காதலி.
"எவ்ளோ லேட்டு ?
சொல்லு பாப்போம்."
"எவ்ளோவா !"-
கைகளை விரித்து
"இவ்ளோ" !
என்று ஒழுங்கு காட்டினாள்;
"கேப்பியே !" என்று ஊடினாள்.
பின்னர் அந்த வற்றலின் மீது சாய்ந்து கொண்டு விட்டாள்.
ஜோடிப் பொருத்தம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்,
'காதலுக்குக் கண் இல்லை' என்பார்கள்-அந்த நரம்பனின் கண்களில் காதல் இல்லையே !
அடுத்த கேள்வி சரவணனைப் பற்றியது!
நரம்பன் கேட்டான்:
"சரி !அது யாரு ?"
"அது'ன்னா ?"
"அதான்- நான் பஸ் ஸ்டாப்புக்கு வந்தப்போ
உன் பக்கத்துல நின்னுகிட்டு இருந்துச்சே ,
அந்தக் கறுப்புக் கண்ணாடி?"..
துணுக்குற்ற சரவணன், தன் கண்ணாடியை ஒரு முறை தொட்டுக் கொண்டான்.
பெண்ணின் பதில் அவனை உலுக்கியே விட்டது!—
"ஹூம் ! அதுவா !
சரியான ஜொள்ளு"...
"என்னா கேட்டான் ?"
"பஸ் ஸ்டாப்புல தான் நின்னுகிட்டிருந்தான்.
என்னைப் பாத்ததும் நெழலுக்கு வந்து ரொம்ப வழிஞ்சான்."
"அப்டியா ! "
"ஆமாம்,
எல்லாம் உன்னால தான்.
இப்படியா லேட்டா வரது?"
தொடர்ந்து அவள் சொன்னதைக் கேட்டு நிலைகுலைந்து போய் விட்டான் சரவணன்.!
"நீ மட்டும் இன்னும் அஞ்சு நிமிஷம் லேட் பண்ணியிருந்தே,
அந்தக் கறுப்புக் கண்ணாடியைத் தட்டி விட்டு ,அவன் கண்ணையும் பிச்சு எறிஞ்சிருப்பேன்!"--------
எதிர்பாராத அதிர்ச்சியால் உறைந்தே போய் விட்டிருந்த சரவணன்,
அவர்கள் எப்போது பஸ்ஸை விட்டு இறங்கினார்கள் என்பதைக் கூடக் கவனிக்கவில்லைகரைத்து வைத்திருந்த ஒரு பக்கெட் சாணத்தை அவன் மேல் கொட்டி அசிங்கப்படுத்தி விட்டாள் அந்த " ஜங்காலகி!"-------
அதற்குப் பிறகு ஒரு வாரம் எதுவுமே ஓடவில்லை சரவணனுக்கு.
அந்த அவமானத்தை மறக்க முயலும்போதெல்லாம் அது தந்த உணர்வதிர்ச்சி வேதனையை அதிகமாக்கியது.
பீச் மணலில் அமர்ந்திருந்தான்.
சீறிக்கொண்டு கரையை நோக்கி வந்த அலைகள், உருக்குலைந்து வெறும் நுரையை ஒதுக்கி விட்டு மறைந்த காட்சி,
திடீரென்று சிந்தனை ஓட்டத்தில் ஒரு புதிய திருப்பத்தைத் தந்தது.
அந்த நிகழ்வை மறித்துப் பார்த்தான்:
ஆம். அந்தப் பெண், ஆண் வர்க்கத்தையே வெறுப்பவளாகத் தோன்றினாள்.
எப்போதோ ஏற்பட்ட அதிர்ச்சி, வக்கிரமான அந்த மனப்போக்குக்குக் காரணமாக இருக்கலாம்.
குறி சொல்ல வந்தவனிடம் கொண்ட தேவையற்ற அச்சம் , சரவணனைப் பற்றிய அப்பட்டமான பொய், வற்றல் வாலிபனுடன் ஊடியிருப்பது போல் செய்யும் அலைக்கழிப்பு ---
இவையனைத்துக்குமே காரணம், மனத்தளவில் உள்ள ஒருவகை வெறுப்புக்
கோளாறு!..
சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஒருவர் சொன்ன சம்பவம், அண்மையில் அவனுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை ஒத்திருந்தது:
கடற்கரை மணலில் நடந்து கொண்டிருந்தார் அவர்.
எதிரே வந்து கொண்டிருந்த பெண்ணொருத்தி நின்று விட்டாள். அவரைப் பார்த்துச் சிரித்தாள். சற்றே வியப்புற்ற நண்பர், மரியாதைக்காகப் பதிலுக்குப் புன்முறுவல் செய்தார். " பளார்" என்று அறைந்து விட்டுப் போய் விட்டாள் அவள்!...
முற்றிலும் எதிர்பாராத அதிர்ச்சி...
கன்னத்தைத் தடவியபடி நின்றிருந்தார்.
'இது கனவா ? உண்மையில் நடந்ததா ?'..
சற்றுத் தொலைவிலிருந்து இதைப் பார்த்திருந்த ஒருவர் நண்பர் அருகில் வந்தார்.
"பாவம் ,
மனநிலை சரியில்லாத பொண்ணு.
கிட்ட வந்து சிரிக்கும்; பதிலுக்குச் சிரிக்கறவங்க கன்னத்துல அறைஞ்சுடும்!"----
"சரவணா, 'அமைதியைத் தர பீச்சுல தான் அமைதியை இழந்தேன்'னு ரொம்ப நாள் நினச்சு வேதனை பட்டிருக்கேன்.
அப்படி இல்லப்பா !--
இது ஊழாற்றல் !
பீச் என்ன செய்யும் ?"
வாழ்வியல் மெய்ம்மை ஒன்று பளிச்சிட்டது: உலகில் ஒவ்வொருவரும் ஏதோ காரணத்தால் அவரவர் போக்கில் நடந்து கொள்கிறார்கள். மணலில் அமர்ந்து கடலைப் பார்ப்பது போல் இந்த நாடகத்தில் பங்கேற்காமல் பார்வையாளராக இருப்பது தான் விவேகமான செயல்!***
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்