மகா செல்வம்
சிறுகதை வரிசை எண்
# 94
"வேலி"
"ஆன்ட்டி ஆன்ட்டி" என்று வெளியில் இருந்து கூப்பிடும் குரல் கேட்டு குடிசையிலிருந்து வெளியே வந்து பார்த்தாள் மஞ்சுளா. வெளியே , தான் வீட்டு வேலை செய்யும் வேணி அக்காவின் மகள் மகிமா நின்று இருந்தாள்.
என்னடா பாப்பா இம்மாந்தூரம் வீட்டாண்ட வந்திருக்க என்றவளிடம் , தன் கையில் இருந்த பையை எடுத்து நீட்டியவள், அப்பா இன்னைக்கு நண்டு வாங்கிட்டு வந்தாங்களாம். அம்மாவுக்கு இதைக் கழுவி சுத்தம் செய்ய தெரியாதாம், நீங்களும் இன்று வேலைக்கு வரவில்லை என்று கூறி விட்டீர்களாம், அதான் உங்களிடம் கொடுத்து அதை சுத்தம் செய்து வாங்கிட்டு வரச் சொன்னாங்க என்றாள்.
ஆமாடா பாப்பா, பெரியவளுக்கு உடம்பு சுகம் இல்ல, ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டு வந்து இப்பத்தான் மாத்திரை கொடுத்துப் படுக்க வச்சிருக்கேன் . அதான் இன்னைக்கு வேலைக்கு வர முடியலை, நீ கொஞ்ச நேரம் இந்த பெஞ்ச்சுல வந்து உட்காரு கண்ணு, கழுவி உன்கிட்ட கொடுத்து விடுறேன் என்றவாறு, பையை வாங்கி பிரித்து , அதில் இருந்த நண்டை அருகில் இருந்த தட்டில் கொட்டி ஆய்ந்து கழுவ தொடங்கினாள்.
அருகே இருந்த மர பெஞ்சில் அமர்ந்த மகிமா வீட்டை சுற்றும் முற்றும் நோட்டமிட்டாள். ஓலை வேய்ந்த சின்ன வீடு, அதிலும் ஆங்காங்கே ஓட்டைகள், சாணி மொழுகிய தரையும் ஆங்காங்கே உடைந்து போய் கிடந்தது . துணி மூட்டை ஒன்று ஒரு ஓரத்தில் கிடந்தது. வீட்டின் மூலையில் ஒரு கயிற்றுக் கட்டிலில் மஞ்சுளாவின் மூத்த மகள் அகிலா படுத்திருந்தாள். அவளுக்கும் மகிமாவுக்கும் ஒரு வயசுதான் வித்தியாசம். மகிமா பதினொன்றாம் வகுப்பு, அகிலா பத்தாம் வகுப்பு படிக்கின்றாள். மகிமாவின் பழைய துணிகளை அகிலாவுக்கு தான் அம்மா கொடுத்து விடுவாள். கட்டிலில் கிழிந்த நாராக காய்ச்சலில் களைத்து படுத்திருக்கும் அகிலாவை பார்க்கும் போது பாவமாக இருந்தது மகிமாவுக்கு.தன் வயதுடைய அவள் தன்னைப் போல் வசதியாக வாழாமல் கஷ்டப்படுகிறாளே என்று நினைத்தவாறே சற்றே வாய் திறந்தப்படி அயர்ந்து தூங்கும் அவள் முகத்தை பரிவுடன் பார்த்துக் கொண்டிருந்த போது , மஞ்சுளாவின் இளைய மகன் ஆனந்த் வீட்டிற்குள் புத்தகப் பையுடன் நுழைந்தான்.
உள்ளே அமர்ந்திருக்கும் மகிமாவை பார்த்து சிறிது வெட்கப் புன்னகையுடன் சிரித்தவன் அம்மாவிடம் திரும்பி, புத்தக பையில் இருந்து ரிப்போர்ட் கார்டை எடுத்து நீட்டினான். காலையில் "நீ எனக்கு கையெழுத்து போட மறந்துட்டே " டீச்சர் நாளைக்கு கண்டிப்பாக கையெழுத்து வாங்கிட்டு வரணும் சொல்லி இருக்காங்க, நீ இப்பவே போடு இல்லாட்டி நீ மறந்துருவே என்று சொன்னான்.
கை ஈரமா இருக்குடா , இந்த நண்டை கழுவிட்டு உனக்கு நான் கையெழுத்து போட்டு தாரேன், "நீ அங்க வச்சுட்டு போ" என்றவளிடம், இல்ல முடியாது நீ இப்பவே போடு என்று முரண்டு பிடித்தான் ஆனந்த். ஏன்டா என் உசுரை வாங்குற என்று கத்தினாள் மஞ்சுளா. சத்தம் கேட்டு கண் முழித்த அகிலா "ஏம்மா இப்படி கத்திட்டு இருக்க" என்று முனங்கியபடி மறுபுறம் திரும்பி படுத்துக் கொண்டாள்.
"அந்தக் கார்டை என்னிடம் தா" நான் உன் அம்மாவிடம் கையெழுத்து வாங்கி வைக்கிறேன் என்று கைநீட்டிய மகிமாவிடம் கார்டை கொடுத்தவன் , சிரிப்புடன் தலையாட்டிவிட்டு விளையாடிட்டு வரேன்மா என்று மஞ்சுளாவிடம் கூறிவிட்டு வெளியே ஓடி விட்டான்.அவன் கொடுத்த கார்டை வாங்கியவள் அதில் அவன் வாங்கி இருந்த மதிப்பெண்களை பார்த்து ஆச்சரியப்பட்டாள். அனைத்து பாடத்திலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தான் ஆனந்த். பார்த்துக் கொண்டே வந்தவள், இதற்கு முந்தைய தேர்வு முடிவுக்கு மஞ்சுளா போட்டு இருந்த கையெழுத்தை பார்த்து ஆச்சரியப்பட்டாள் . ஆங்கிலத்தில் அழகாக கையெழுத்து போட்டு இருந்தாள் மஞ்சுளா.
"ஆன்ட்டி உங்க கையெழுத்து நல்லா இருக்கு, நீங்க படிச்சு இருக்கீங்களா? என்று சிறிது வியப்புடன் வினவினாள். சிறிது நமட்டு சிரிப்புடன் தலையைசைத்த மஞ்சள் "ஆமா பாப்பா எட்டாங்கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்கேன்" நான் அப்ப பள்ளிக்கூடத்துல நல்லா படிப்பேன் எங்க அப்பா என்னை நல்லா படிடா கண்ணு, நான் எவ்வளவு கஷ்டப்பட்டாவது உன்னை படிக்க வைக்கிறேன்னு தான் சொல்லுச்சு,அப்புறம் என்ன ஆன்ட்டி நீங்க படிச்சிருக்கலாம்ல என்றாள் மகிமா. நான்தான் பாப்பா புத்திக் கெட்டுப் போய் வயசு கோளாறுல கண்டவனை நம்பி ஏமாந்து என் வாழ்க்கையை தொலைச்சுட்டு இப்படி கஷ்டப்படுறேன் என்றவாறு தன் தலையில் அடித்துக் கொண்டாள்.
திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த மகிமாவை பார்த்து சொன்னாள், பாப்பா வாலிப பிள்ளைகள் எல்லாத்துக்கும் அந்த வயசுல புத்தி தடுமாறதான் செய்யும் அலைபாயும் ஆனா நம்ம மனசை அடக்கி கிட்டு படிப்புல கவனம் செலுத்தினால் நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும். இத எங்க அப்பா எனக்கு எவ்வளவோ எடுத்து சொல்லியும் நான் கேட்காம பாழாய் போன ஒருத்தனோட பசப்பு வார்த்தையை நம்பி படிக்கும் போதே அவன் கூட ஓடிப் போயிட்டேன் . அவனும் கொஞ்சம் காலம் என் கூட வாழ்ந்துட்டு ரெண்டு குழந்தைகள் பிறந்ததும் , இன்னொருத்தியை கூட்டிட்டு ஓடிப் போயிட்டான்.
சாப்பாட்டுக்கு வழி இல்லாம, பாலுக்கு அழுகிற குழந்தைக்கு பாலும் கொடுக்க முடியாம பசிக்கு அழுகிற மூத்தவளோட பசியையும் போக்க முடியாம பச்சை உடம்பு வச்சிட்டு எங்கேயும் வேலைக்கு போக முடியாம ரொம்ப கஷ்டப்பட்டேன். குழந்தைகளை கூட்டிட்டு போய் ஏதாவது கோவிலில் போய் பிச்சை எடுக்க உட்கார்ந்திடலாமான்னு கூட சில நேரம் யோசிச்சு இருக்கேன்,இல்லைன்னா ஏதாவது ஆத்துல குளத்துல விழுந்து செத்துப் போய்டலாம்னு கூட நெனச்சேன்.
என் நிலைமையைப் பார்த்துட்டு பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் உதவி பண்ணாங்க. அவங்களையே எவ்வளவு காலத்துக்கு தான் கஷ்டப்படுத்த முடியும்,
நான் கொஞ்சம் உடம்பு தேறுனதும் , உங்க வீட்டுல வீட்டு வேலைக்கு சேர்ந்தேன் .
உன் அம்மா ரொம்ப நல்லவங்க, பிள்ளைகளுக்கு சாப்பாடு துணிமணி எல்லாம் கொடுத்து நல்ல உதவி பண்ணாங்க. இந்த மாதிரி நல்லவங்க இருக்கறதுனால தான் ஏதோ என்னால இந்த பிள்ளைகளை வச்சிட்டு காலத்தை ஓட்ட முடியுது.
நான் பண்ண தப்புக்கு என் பிள்ளைகளும் சேர்ந்து என்னோட கஷ்டப்படுதுங்க,
நான் பட்ட கஷ்டம் என் பிள்ளைகளும் படக்கூடாதுன்னு சொல்லித்தான் ரெண்டு பேரையும் நல்லா படிக்க வச்சு நல்ல நெலமைக்கு கொண்டு வரணும்னு தான் இன்னும் ரெண்டு மூணு வீட்ல பத்து பாத்திரம் தேய்ச்சு கொஞ்சம் காசு சேர்த்து வச்சுட்டு இருக்கேன்.
படிப்புங்குறது கைத்தடி மாதிரி பாப்பா நம்மள எப்பவும் கீழ விழாம தாங்கி பிடிக்கும் , அதை நாம எந்த சூழ்நிலை வந்தாலும் கைவிடாம கெட்டிய பிடிச்சுக்கணும் பாப்பா.இத பெரியவகிட்ட
அடிக்கடி சொல்லுவேன், அவ அதை சரியாக கேட்க கூட மாட்டா, கோபப்படுவா சும்மா சொன்னதையே சொல்லிட்டு இருக்காத மான்னு சொல்லுவா. எனக்குத் தானே தெரியும் படிப்போட அருமை ,ஆம்பளை பிள்ளையை விட பொம்பள பிள்ளைக்கு படிப்பு ரெம்ப அவசியம் பாப்பா என்று கூறி பெருமூச்சு விட்டாள்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மகிமா முகத்தில் பலவித உணர்ச்சிகள் மாறி மாறி மறைந்தது.கழுவி முடித்த நண்டை பாலிதீன் கவரில் போட்டு மகிமாவிடம் நீட்டினாள், "இந்தா கண்ணு கழுவியாச்சு நீ கொண்டு போய் அம்மாவிடம் குடுத்துரு" என்றாள்."சரிங்க ஆன்ட்டி நான் வாரேன்" என்று குடிசையில் இருந்து வெளியில் வந்தாள் மகிமா.பார்த்துப் போ கண்ணு நான் வேணா வீடு வரைக்கும் வந்து விடவா என்றவளிடம் "இல்லை ஆன்ட்டி நான் போய்க்கிறேன், நீங்கள் அகிலாவை பாருங்கள்" என்றாள்.சரிமா பார்த்து போ என்றவாறு குடிசைக்கு வெளியே வந்தவள் குடிசைக்கு ஓரமாக அவள் வளர்த்துக் கொண்டிருக்கும் ரோஜா செடியை ஆடு ஒன்று மேய்ந்து கொண்டிருப்பதை கண்டு பதறிப் போய் அருகில் இருந்த சிறு கம்பை எடுத்து அதை அடித்து விரட்டினாள் .என்னதான் நம்ம வீட்டு ரோஜா செடியா இருந்தாலும் வேலி போட்டு பாதுகாக்கணும் பாப்பா செடிக்கு மட்டுமல்ல நம்ம மனசுக்கும் வேலி போட்டு பாதுகாக்கணும் பாப்பா இல்ல போறது வர்றது எல்லாம் மேஞ்சிட்டு போயிரும் என்று கூறினாள் மஞ்சுளா.
அதை சிறு தலை அசைப்புடன் அமோதிப்பாக தலையாட்டினாள் மகிமா.
மஞ்சுளாவிடமிருந்து விடைபெற்று மனதில் ஏதோ சிறு யோசனையுடன் மெல்ல நடந்து சென்றாள் மகிமா.
அவள் செல்வதற்கும், மஞ்சுளாவின் சிறு கைப்பேசி அழைப்பதற்கும் சரியாக இருந்தது. மகிமாவின் அம்மா வேணி தான் அழைத்திருந்தாள், போனை எடுத்தவள் அக்கா "இப்பதான் பாப்பா நண்டை கழுவி வாங்கிட்டு போனாள்" இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துருவா என்றவள், ஏங்கா நான்தான் வீட்டுக்கு வந்து கழுவி தரேன்னு சொன்னேன்ல நீங்க தான் வேண்டாம் நான் மகிமாவை அனுப்பி விடுறேன் கழுவி கொடுத்தனுப்பு அப்படியே பேச்சு வாக்குல உன் கடந்த காலத்தை பற்றி கொஞ்சம் அழுத்தமாக சொல்லுன்னு சொன்னீங்க, ஏன்னு தெரியலை , இருந்தாலும் நான் சந்தடி சாக்கில் என் கதை முழுவதையும் அவளிடம் சொல்லி இருக்கிறேன் என்றாள்.
காரணமாகத்தான் மஞ்சுளா நான் அப்படி சொன்னேன், நாளைக்கு நீ வீட்டுக்கு வரும்போது விவரம் சொல்லுகிறேன், "அகிலா எப்படி இருக்கிறாள், அவளைப் பார்த்துக் கொள்" ஏதாவது பண உதவி தேவைப்பட்டால் கேளு என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்த வேணியின் மனக்கண்ணின் முன்னே வந்து சென்றது இந்த ஒரு மாத காலமாக மகிமாவின் நடவடிக்கைகளின் மாற்றங்கள்.
அவர்கள் வீட்டுக்கருகே பரட்டை தலையுடனும் கையில் சிகரெட் சகிதமாக ஒரு விடலை பையன் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருப்பதும் அவன் அடிக்கும் ஹாரன் சவுண்ட்க்கு மகிமா எட்டிப் பார்ப்பதையும் வேணி பார்த்தும் பார்க்காதது போல் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.அதை வேணி கண்டித்து இருந்தால் மகிமா காதிலே போட்டுக்கொள்ள மாட்டாள். இந்த காலத்து பிள்ளைகளுக்கு அம்மாக்கள் அறிவுரை சொன்னால் காதில் ஏறாது அனுபவ பாடத்தை கண்டால்தான் அவர்களுக்கு புத்தியில் உரைக்கும் .தடம் மாறும் மகளை நல்வழிப்படுத்த அவளுக்கு தோன்றிய சிறு யோசனை தான் மஞ்சுளாவின் வீட்டிற்கு அனுப்புவது.காதல் ஒன்றும் தவறல்ல அது சரியான காலத்தில் சரியான நபரின் மேல் தோன்ற வேண்டும் இல்லாவிட்டால் மஞ்சுளாவின் வாழ்வை போல் சீரழிந்து விடும். அதற்காகத்தான் வேணி மகிமாவை மஞ்சுளா வீட்டிற்கு அனுப்பினாள்.மஞ்சுளா பட்ட கஷ்டத்தை கேட்ட பிறகு அவள் மனம் மாறிவிட்டால் போதும் என்று நினைத்து பெருமூச்செறிந்தாள்.
வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்த மகிமாமின் மனதில் , தான் செய்து கொண்டிருந்த முட்டாள்தனமான செயல் புரிந்தது, தன் செயலை நினைத்து வெட்கியவள், இனி எக்காலத்திலும் மனம் சஞ்சல படக்கூடாது மஞ்சுளாவின் வாழ்க்கை ஒரு நல்ல பாடம் நமக்கு, நல்ல நேரத்தில் நம்மை அம்மா அந்த வீட்டிற்கு அனுப்பினாள் எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து தப்பிவிட்டேன் நான், என்று நினைத்துக் கொண்டே வந்தவள். தூரத்தில் தன்னைப் பார்த்து கையை அசைத்த அந்த விடலை பையனை பார்த்தாள். கையில் சிகரெட்டுடன் வாயில் இருந்து வளையமாக புகை விட்டபடி நின்றிருந்த அவனைப் பார்க்கும்போது நேற்று வரை நினைத்திருந்த ஹீரோ தோற்றம் போய் இன்று அவள் கண்களுக்கு அவன் வில்லனாக தெரிந்தான். அவனை பார்த்தும் பாராதது போல் அவனை கடந்து, எவ்வித சலனமும் இன்றி இனிமேல் படிப்பில் மட்டும் தான் கவனமாக இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் வேகமாக எட்டு வைத்து நடந்தாள்.
ஆய்ந்து கழுவிய நண்டுக் கழிவுகளை அள்ளி எடுத்து குப்பையில் போடுவதற்கு மஞ்சுளா வெளியே சென்றதும், தன் அம்மா இதுவரை மகிமாவிடம் பேசி அனைத்தையும் கண் திறக்காமலே கேட்டுக் கொண்டிருந்த அகிலா மெதுவாக கண்விழித்து எழுந்தாள். அருகே இருந்த தன் புத்தகப் பையை திறந்து அதிலே ஒரு புத்தகத்தின் உள்ளே மடித்து வைத்திருந்த ஒரு கடிதத்தை வெளியே எடுத்தாள். அது ,அவள் வகுப்பில் கூட படிக்கும் மாணவன் அவளுக்கு கொடுத்த காதல் கடிதம். அதற்கு என்ன பதில் சொல்வது என்ற பயத்திலேயே அவளுக்கு இரவில் காய்ச்சல் வந்து விட்டது. அம்மாவின் கதையை முழுவதும் கேட்ட பிறகு , தான் எடுக்க வேண்டிய முடிவு எது என்பதை தீர்மானித்தவள்,
அந்தக் கடிதத்தை சுக்கு நூறாக கிழித்து வெளியில் வந்து பறக்க விட்டாள். இனிமேல் எவ்வித சலனத்துக்கும் தன் மனதில் இடம் கொடுக்க கூடாது, நன்றாக படித்து, நல்ல நிலைமைக்கு வந்து, அம்மாவை எவ்வித கஷ்டம் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும், என்று மனதில் வைராக்கியத்துடன் அவள் வகுப்பு டீச்சர் முடிக்க சொல்லி இருந்த வீட்டு பாடத்தை எடுத்து மடமடவென்று எழுதத் தொடங்கினாள்.
மஞ்சுளா அவளை அறியாமலேயே அவள் மகள் வாழ்வையும் சேர்த்து நல்வழிப்படுத்தி விட்டாள்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்