லட்சுமி பாலா
சிறுகதை வரிசை எண்
# 93
சீல போராட்டம்
“ஏட்டி செல்லத்தாயி இன்னும் என்னடி மசமசன்னு நின்னுக்கிட்டு இருக்க? வேகமா வேலையைப் பாரு” என்று அதட்டினாள் பானு.
நிமிர்ந்து நின்று பானுவைப் பார்த்த செல்லத்தாயி, “இன்னும் எத்தனை நாளைக்கு தான் நமக்கு இந்த பொழப்பு பானு” என்று கலங்கிய குரலில் அவளைப் பார்த்தாள்.
அதற்கு சிரித்துக் கொண்ட பானு, “போராட்டம்.... அது மட்டும் தான் நமக்கு ஒரே தீர்வு” என்றாள்.
“ம்ச்... நடக்குறத பேசு பானு. நம்மாள அவுகள ஏதிர்த்து கூட பேச முடியல. இதில் போராட்டமா?” என்றாள் சோகமான குரலில்.
“ஏன் முடியாது? நாம பண்ணுவோம். புடவைக்கு போராட்டம்” என்று சொல்லி பளிச்சென்று சிரித்தாள் பானு.
அவளின் பேச்சு திசை மாறிப்போவதைக் கண்டு பதறிய செல்லத்தாயி, “சரி சரி வேகமா நாத்தை நடு. பெரிய மனுசருக எல்லாம் வர்ற நேரமாச்சு” என்று சொல்லிக் கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தாள் செல்லத்தாயி.
“ஏட்டி இதென்னடி புதுக்கதையா இருக்கு. நீ தானே நிதமும் இதெல்லாம் ஒரு பொழப்பான்னு கேட்ட?” என்று தன் கன்னத்தில் கைவைத்தபடி கேட்டாள் பானு.
“ம்ச்... வேலையைப் பாரு பானு” என்று அதற்கு அவள் அதட்ட, அவளும் தன் வேலையில் கவனமானாள்.
பின் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மெதுவாக இருவரும் தங்கள் வீட்டை நோக்கி நடந்தனர்.
அப்போது தன் பேச்சை ஆரம்பித்த செல்லத்தாயி, “என்னோட அப்பாரு, சீமைக்கு அவரு முதலாளி கூட போனாருல்ல, நேத்து தான் திரும்பி வந்தாரு” என்றாள்.
“ஓ... கத அப்படி போகுதா... செல்லத்தாயி அப்பாரு வரும் போது நூல் புடவையோட வந்துருப்பாரே!” என்று பானு கேட்க, வெட்கத்துடன் தன் தலையை ஆட்டினாள் பானு.
“ஆமாம்டி சீல கொள்ளை அழகு” என்றாள் புன்னகை முகமாக.
புது துணிமணிகள் எல்லாம் அவர்களுக்கு எட்டாக் கனி தான். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும். அதுவும் அவர்கள் வேலை செய்யும் வீட்டில் இருந்து தான் எடுத்துத் தருவர். சிலருக்கு அதுவும் கிடைக்காது. முதலாளியின் மனைவி அல்லது தயார் பயன்படுத்திய துணிகளே கிடைக்கும்.
செல்லத்தாயின் தந்தை, பத்து மக்களை பெற்றிருந்தாலும், அவருக்கு செல்லத்தாயி என்றுமே செல்லம் தான். காரணம் அவளே கடைக்குட்டி. தன் முதலாளி எங்கு சென்றாலும் சுமை தூக்கியாக செல்பவர். சீமைக்கு செல்லும் போதெல்லாம் காசை சேர்த்து வைத்து, தன் கடைக்குட்டிக்கு சேலை வாங்கிவிடுவார். அதுவும் செல்லத்தாயிக்கு சேலை என்றால் உயிர். ஆனால் அதனுடன் சேர்ந்து வலியும் உள்ளது.
“நீ கொடுத்து வச்சவடி” என்று சொல்லி சிலாகித்தாள் பானு.
இப்போது செல்லத்தாயின் முகத்தில் கசந்த புன்னகை, “என்ன கொடுத்து வச்சி என்ன பயன் பானு” என்றாள்.
“ம்ச்... அதுக்குத் தான் சொல்றேன் புடவைக்கு போராட்டம் பண்ணுவோம்” என்றாள் பானு.
“ஏட்டி நீ ஒருத்தி எப்ப பார்த்தாலும் போராட்டம் போராட்டம்ன்னு சொல்லிக்கிட்டு திரியிரவ. முட்டியில இருக்கும் சீல கணுக்காலுக்கு வந்தா, நம்ம ஊரு பெரிய மனுசருகளுக்கு எல்லாம் ஆவாதாம்” என்றாள் செல்லத்தாயி.
“அடியாத்தி! நாம சீல கட்டுனா அவுகளுக்கு ஆகாதா? ஆனா அவுக வீட்டு பொம்பளைங்க சீல எல்லாம் கணுக்காலுக்கு இருக்கு தானே!” என்றாள் முகத்தை சுழித்தபடி.
“பெரியவுக சொன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும் பானு” என்றாள் செல்லத்தாயி.
அவளை முறைத்த பானு, “இதை யாரு உன்கிட்ட சொன்னா?” என்றாள்.
“வேற யாரு என்னோட அப்பாரு தான். ஆனா அவரு வாங்கிட்டு வந்த சீலைய கணுக்கால் வரைக்கும் கட்டி பார்க்கணும்னு எனக்கு ஆச பானு” என்றாள் செல்லத்தாயி.
“அப்ப அதை செய்ய வேண்டியது தான. நமக்கு சுதந்திரம் கிடைச்சு ரெண்டு வருஷம் ஆகிடுச்சு செல்லத்தாயி. நாம யாருக்கும் அடிமை இல்ல. சுதந்திர இந்தியாவில் இருக்கோம். நீ என்ன பண்ணனும்னு நினைக்குறியோ அதைப் பண்ணு” என்றாள் பானு.
“சரி, வா என் வீட்டுக்குப் போலாம். இப்ப என் வீட்ல யாரும் இருக்க மாட்டாக” என்றாள் செல்லத்தாயி.
உடனே இருவரும் செல்லத்தாயின் கூரை வீட்டிற்குள் சென்று தங்களது சேலையை கணுக்கால் அளவுக்கு கட்டிப்பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
செல்லத்தாயிக்கு உலகையே வென்றுவிட்ட மகிழ்ச்சி. “இப்ப நாம சீமையில் இருந்திருந்தா புகைப்படம் எடுத்திருக்கலாம் புள்ள” என்று குறைப்பட்டுக் கொண்டாள்.
“ம்... இப்படி சீலை கட்டுறது எவ்வளவு நல்லா இருக்கு. கண்ட கண்ட மனுஷனுங்க கொள்ளிப் பார்வைக்கு பயந்து பயந்து நடக்க வேண்டியது இல்ல” என்றாள் பானு.
இவர்கள் இருக்கும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் அனைவரும் முட்டிக்கு மேல் மட்டுமே புடவை கட்ட வேண்டும் என்ற சட்டம் வெள்ளைக்காரன் காலத்திலையே வாய்மொழி சட்டமாக இருந்து வந்தது. அதை உடைக்க இருபெண்கள் தயாராகிவிட்டனர்.
அவளின் கருத்திற்கு தன் தலையை ஆட்டிக்கொண்ட பானு, “ஆனா வீட்டுக்குள்ள மட்டும் தான் நம்மாள இப்படி இருக்க முடியும்” என்றாள் சோகமாக.
“ஏன் நாம வெளிய வரமுடியாது? நாம என்ன சபிக்கப்பட்டவர்களா? நிதமும் வரப்பில் நிற்கும், ஆண்டைகளின் வக்கிரப் பார்வைக்கு தீனியாக்கப்படும் நம்ம பொழப்பு இதோட போகட்டும்” என்று வீராவேசமாகப் பேசினாள் பானு.
“ஏட்டி, நீ பேசுறதெல்லாம் கேட்க நல்லாத் தான் இருக்கு. ஆனா நாம கணுக்கால் அளவுக்கு சீலை கட்டுனா, ஊரு பெரியவுக, நம்ம தொலை உரிச்சு புடுவானுக” என்று பயந்த குரலில் கூறினாள் செல்லத்தாயி.
“என்ன தான் ஆகுதுன்னு பார்ப்போம். வா நாம வெளிய போகலாம்” என்று சொல்லி செல்லத்தாயின் கையைப் பிடித்துக் கொண்டு வெளியே சென்றாள் பானு.
சுதந்திரம் கிடைத்து இரண்டு ஆண்டுகள் சென்றிருந்தாலும், இப்போது தான் முதன்முதலாக சுதந்திரம் கிடைத்தது போல இருபெண்களுக்குமே அவ்வளவு மகிழ்ச்சி.
இருவரையும் பார்த்த செல்லத்தாயின் முதல் அண்ணன், “சாதாரண நூல் புடவையில் கூட தேவதைகள் வலம் வருவாங்க போல. அத இன்னைக்கு தான் நான் பாக்குறேன்” என்றதும் அவர்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, “அண்னே!” என்று இருவரும் கண்கள் கலங்க அவரைப் பார்க்க, “நல்லா இருங்க ஆத்தா...” என்று சொல்லிவிட்டு அவர் சென்றார்.
“வீட்டுக்குப் போகலாம் பானு. இப்ப என் அண்னேங்கக்காட்டி சும்மா போயிட்டாரு. இதுவே என் அப்பாரா இருந்த அவ்வளவு தான்” என்று கவலை அடைந்தாள் செல்லத்தாயி.
“ஏட்டி செல்லத்தாயி மாற்றம் வேணும்னு சொன்ன தானே” என்று பானு கேட்க.
“சரி சரி வா போலாம்” என்று பானுவின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.
விளைவு அவர்கள் இருவரையும் ஊர் பஞ்சாயத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. அப்படி இருந்தும் தங்களது நூல் புடவையை இருவருமே கணுக்காலில் இருந்து மேலே ஏற்றவில்லை.
எதிரிப்படையை சமாளிக்கும் அனைத்து திறமையும் உடையவர்கள் போலவே இருபெண்களும் அவையோரைப் பார்த்தனர். ஊர்ப் பெரியோர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் மட்டுமே ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருந்தனர்.
பின் அதில் ஒருவர், “ரெண்டு பொட்டச்சிகளுக்கும் எவ்வளவு திண்ணக்கம். ஊரு கட்டுப்பாட்டை மதிக்காமல், இப்படி ஒரு அசிங்கத்தை செய்திட்டு வந்து நிக்குறீங்க” என்று கொந்தளித்தார்.
அதற்கு சிறிதும் அசராத பானு, “நாங்க வாங்குற தினக்கூலிக்கு எங்களால் முடிஞ்சது நூல் சீலை தான். பட்டுப்பீதாம்பரத்துக்கு நாங்க ஆசைப்படல. எங்களுக்கு எது வசதியோ அதுக்கு ஏத்த மாதிரி புடவை கட்டுறோம். அதில் உங்க குறுக்கீடு வேண்டாமே ஐயா” என்று பணிவுடன் தான் பேசினாள்.
ஆனால் அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது, “இவளிடம் என்ன பேச்சு. ரெண்டு சிறுக்கிகளுக்கும் நூறு நூறு சவுக்கடியைக் கொடுப்போம்” என்று ஒரு பெரியவர் மீசையை முறுக்கியபடி கத்தினார்.
அதில் செல்லத்தாயின் குடும்பமும் பானுவின் குடும்பமும் துக்கத்தில் கதற ஆரம்பித்தனர். ஆனால் இரு பெண்களுமே எரிமலையே வந்தாலும் அதை ஏற்க தயாராகி இருந்தனர்.
திடீரென்று கூட்டத்தில் சலசலப்பு, செல்லத்தாயின் மூத்த அண்ணனுடன் இன்னும் ஆண்கள் பலர் கூடி வந்து, “எங்க வீட்டுப் பெண்டுக மேல கையை வச்சா, நடக்குறதே வேற” என்று கொந்தளித்தனர். அதனைக் கேட்டு, ஒடுக்கப்பட்ட பெண்களும் சிலர் முன்னுக்கு வந்து, “நாங்களும் இனி கணுக்காலுக்கு சீலை கட்டப்போறோம். அதை தடுத்தா போராட்டாம் வெடிக்கும்” என்றனர்.
ஒடுக்கப்பவர்கள் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க, அந்த குரல் சிங்கத்தின் கர்ஜனையை விட மிகப்பெரியதாக எதிரொலித்தது. ஊர் பெரியவர்களும் அதனைப் பார்த்து அரண்டனர்.
பானு செல்லத்தாயைப் பார்த்து, “மாற்றம் உருவாகிடுச்சு” என்று கூறி சிரிக்க, பதிலுக்கு அவளும் புன்னகை செய்தாள்.
முழங்கால் சேலை கணுக்காலுக்கு இறங்கிய அழகான மாற்றம் அன்றில் இருந்து துவங்கியது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்