logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

நிழலி

சிறுகதை வரிசை எண் # 92


மெலிதாக ஒரு நிலச்சரிவு ______________________________ நாளைய கனவுகளை செப்பனிட்டுக் கொண்டு தான் இன்றைய நாளின் பொழுதுகள் முடிவுக்கு வருகிறது. நாளைய நாள் விடியும் விடியாது என்பதெல்லாம் ஒரு நம்பிக்கை. உயிர்கள் அந்த நம்பிக்கையில் தான் கனவுகளோடு லயித்துப் போகின்றன. நம்முடைய கனவுகள் தான் வாழ்வின் முன்னேற்றத்தை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. அதற்கு சிறியது பெரியது என்ற கோட்பாடுகள் இல்லை. அந்தச் சிறுவனின் கனவுகளும் அப்படி தான் பெருங்கோட்டை சுவரென உயரந்து கொண்டிருந்தது. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. எப்படியும் மழை முடிந்ததும் பள்ளி செல்லுதல் என்பது வழக்கமாகிவிடும் என்ற நம்பிக்கையில் தன் விடுமுறை கால வீட்டுப்பாடங்களை செய்து கொண்டிருந்தான். அது அவனுக்கு பிடித்தமானதாகவும் இருந்தது. அதிலும் அவனின் ஓய்வுக்கான பொழுதுகளை ஓவியங்களில் தீர்த்தலை வேலையாகவே கொண்டிருந்தான். அதற்காக தன் அப்பாவிடம் தினமும் கேட்பது ஒன்று தான். அது நீளமான வண்ணப் பென்சில்கள். ஒவ்வொரு நாளும் வீடு திரும்பும் அப்பாவின் பையில் வண்ணப் பென்சில்களை தேடுவான். அப்போதெல்லாம் " மன்னிச்சிக்கோடா கண்ணா வீட்டுக்கு அரிசி பருப்பு வாங்கிட்டேன் இன்னொரு நாளு கூலி அதிகமா கிடைக்கும் போது வாங்கித் தரேன்" என்பது தான். தனியார் பள்ளி மாணவர்கள் போல ஆடம்பர பைகள், சாப்பாட்டு கூடை, அழகான எழுதுகோல் எதையுமே இதுவரை அவன் விரும்பி கேட்டதில்லை. தன்னுடன் விளையாடும் வசதி படைத்த குழந்தைகளின் பொருட்களை பார்த்து அதை அப்பாவிடம் கேட்டு அடம் பிடிக்கும் பழக்கம் என்பதும் சிறிதும் இல்லாதவன். அரசு பள்ளி என்பதால் மதிய உணவிற்காக வீட்டிலிருந்தே ஒரு தட்டை தன் பையில் திணித்துக் கொண்டு சென்றிடுவான். பள்ளியில் கிடைக்கும் இலவச புத்தகம், சீருடைகளேயே வைத்துக் கொள்வான். அதையும் மீறி அவன் தன் அம்மாவிடம் வாங்கிக் கொள்வது ஐந்து ருபாய் காகித பென்சில் தான். அதை பத்திரமாக நீண்ட காலம் பயன்படுத்திக் கொள்வான். அந்த அளவிற்கு தன் குடும்பத்தின் நிலையை அவன் அறிந்திருந்தான். அன்றாட கூலிக்கு அருகில் உள்ள வயலுக்கும், தோப்பிற்கும் செல்லும் அப்பாவிற்கு வேலை அதிகமாக இருந்தாலும் கூலி குறைவு தான். தென்னந்தோப்பிற்கு சுத்தம் செய்ய செய்வதெல்லாம் தேவையற்ற நாட்களாய் தான் கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மரத்திற்கு பத்து ரூபாய், இருபது ரூபாயென பேரம் பேசும் கருணையற்றவர்களோடு போராட வேண்டி இருக்கும். ஒவ்வொரு மரமாக ஏறி மட்டைகளை கழித்து சுத்தம் செய்துவிட்டு இறங்குதல் என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல. நெஞ்சை சரித்துக் கொண்டு ஏறி இறங்க வேண்டும். பத்து மரங்களை ஏறி இறங்கும் போதே தலை சுற்றியதாக சில நாட்கள் அப்பா வீடு வந்துவிடுவார். அந்த குறைந்த வருமானம் எங்களின் உணவுத்தேவையை தீர்த்து விட்டு தன்னை எங்களிடமிருந்து விடுவித்துக் கொள்ளும். இரவெல்லாம் அப்பாவின் உடலுக்கு களிம்பு தேய்ப்பதும், வலி நிவாரண எண்ணெயிட்டு தேய்த்து விடுவதும் அம்மாவின் அன்றாட வேலைகளில் ஒன்று. சில சமயம் பிள்ளைகளை முதுகிலேறி நின்று உடல் முழுவதையும் மிதித்து விட சொல்லுவார். என்றாவது தன் மகன் கேட்ட வண்ணப் பென்சில்களை வாங்கிட வேண்டுமென்ற எண்ணம் அவருக்குள்ளும் இருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு காரணத்தை அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். " கைமாத்து வாங்கின ஆளுக்கு காசு கொடுக்க வேண்டியதா போச்சி இன்னொரு நாளு வாங்கித் தரேன்டா ராசா" என்பார். " உங்கம்மாளுக்கு உடம்புக்கு முடியலனு மருந்து மாத்தர வாங்கியாந்துட்டேன் எஞ்சாமில அப்பாவ கோச்சிக்காத " என்பார். " பால் கடன், மளிகை பொருளென " அவரின் காரணம் தினமும் நீண்டு கொண்டிருப்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாமல் ஒருநாள் அப்பாவிடம் கோவித்துக் கொள்ளவும் செய்தான். மகனின் கோபத்தை குறைக்க இருபது ரூபாயில் சிறிய அளவிலான வண்ணப் பென்சில்கள் அடங்கிய பென்சில் பெட்டியை வாங்கி வந்திருந்தார் அப்பா. கொஞ்சம் அது அவன் கோபத்தை தணித்திருந்தாலும் அவனின் கனவு என்பது அந்த பெரிய நீளமான வண்ணப் பென்சில்களின் மீதே அமர்ந்திருந்தது. விரைவில் அதை வாங்கித் தருவதாக அப்பா சொல்லி நாட்களும் ஆகியிருந்தது. ஆனால் இன்று ஒரு பிடி அப்பாவை பிடித்திருந்தான். " யப்பா இந்த மழையில வீட்டுலயே இருந்து எனக்கு பொழுதே போகல இன்னைக்கு மட்டும் நீ எனக்கு பென்சில் வாங்கிவரலைனா நான் உங்கிட்ட பேசவே மாட்டேன்" என்று முகத்தை திருப்பியவன்‌ தான். எத்தனை நாட்கள் தான் இந்த சிறு பிள்ளையும் காத்திருக்குமென நினைத்தவர் இன்று நிச்சயமாக அதை வாங்கிச் செல்லவும் முடிவெடுத்திருந்தார். மழை தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்து கொண்டிருந்ததில் எங்கும் வேலை என்பதே இல்லை. மலைச்சரிவுகளில் ஏறி ஓடும் ஆடுகளும் , ஆட்களும் யாருமற்று மழை மட்டும் தனித்து நின்று கொண்டிருந்தது. தன் நண்பனிடம் கொஞ்சம் பணத்தை வாங்கி வீட்டிற்கு தேவையான பொருட்களையும்‌, குழந்தை ஆசைப்பட்ட வண்ண பென்சிலையும் வாங்கிட திட்டமிட்டு தான் குடையோடு வெளியே புறப்பட்டிருந்தார் அப்பா. மண்ணை தொட முடியாமல் தடுத்து நிற்கும் அவரது குடையை வேகமாக முட்டிவிட்டு கீழே சரிந்தது மழைத்துளிகள். எங்கும் மண்ணின் நிறமேறிய மழைத்துளிகள் தேங்கி கிடந்தன. அதைத் தாண்டி சேரு சகதிகள் ஒட்டாமல் நண்பனின் வீட்டிற்கு வந்தடைந்தார் அப்பா. நீண்ட நாட்களின் நெருங்கிய நட்பென்பது நண்பரின் உபசரிப்பிலேயே கண்டுகொள்ளலாம்.‌ மழைக்கு இதமாக தேநீரை தாயார் செய்து நண்பர்கள் இருவரும் சிறிது மழையாறிக் கொண்டனர். " இந்த மழையில மெனக்கெட்டு அங்கேருந்து வரியே.. மழ செத்த ஓஞ்சப்புறம் வரக்கூடாதா" என்று நண்பனின் அக்கறை சொற்கள் வெளிவந்தது. " மழைய பாத்த பொழப்பு சும்மா தான் கெடக்கும். ஒன்னும் பொழப்பு இல்லாம தான் வூட்டுல அடுப்பு எரியல. அதான் உங்கிட்ட கைமாத்த எதாவது கெடைக்குமானு வந்தேன்" என்ற போது அப்பாவின் குரலில் தயக்கம் வெளியேறியது. " இதுக்கு தானா இந்த முழுங்கலு. இருந்தா தர போறேன். இதுக்கு இம்புட்டு தயக்கம் வேறயா. " என்றவர் உள்ளே சென்று ஒரு நூறு ரூபாயை கையில் எடுத்து வந்தார். அது அவனுக்கு போதுமானதாக இருக்கும் என்பதும் தனக்கும் தேவை என்பதும் அவரது மனக்கணக்கு. பணத்தை அப்பாவின் கையில் தந்தார். ஆனால் இன்னும் தயங்கிக் கொண்டிருக்கும் அப்பாவின் முகக் குறியீட்டை அறிய முடியாமல் " வேறென்ன வேணும்" என்று நண்பரே கேட்டார். " அது மொவனுக்கு வண்ணப் பென்சிலு வேணுமுனு ரொம்ப நாளாவே கேட்டான். இன்னைக்கு மட்டும் வாங்கிட்டு வரலைனா பேச மாட்டேனு கோசிக்கிட்டான் " " ஏதே... தொற இப்பவே கோசிக்கலாம் செய்யுறாரா.. பெரிய மனுசாட்டம். பரவாயில்லையே." " டே அப்படிலாம் இல்லடா. புள்ள ஆசைப்பட்டு பல நாளா கேட்குறான். நான் எதுக்கும் தெரம் இல்லாதவன். அவன தெனம் ஏமாத்திட்டு கெடக்குறேன்" . " அதுக்கு என்னாதுக்கு சொங்கி போற. இந்தா இன்னும் நூறு ரூபா . இத என் கணக்குல வச்சிக்க வேணா. எம்மருமவனுக்கு நான் வாங்கிக் கொடுத்ததா சொல்லு. மொதல கொடுத்த நூறு கை மாத்து தான் சரியா. நூறு நூறு கொடுக்க நம்மளால முடியாதுடா". என்றவர் விளையாட்டாக சிரிக்கவும் செய்தார். சிறிது நேர உரையாடலுக்குப் பின் இருவரும் விடைபெற தயாரானார்கள். " இங்கேயே பேசிட்டு கெடந்தா அரிசி பருப்பு, உம்புள்ளைக்கு பெனிசிலுலாம் வானத்துல பறந்து போகுமா. எடத்த காலி பண்ணுடா. மழையும் விட்டா மாதிரி இருக்கு " என்ற நண்பனின் அன்பான அதட்டலில் அப்பா அங்கிருந்து கடைக்கு புறப்பட்டார். நீண்ட தூரம் நடந்தே பழகிய கால்கள் என்றாலும் மழையின் குளிரில் நடப்பது மிகவும் வெறுப்பாக தான் இருந்தது. விரைவில் வீடு திரும்ப வேண்டுமென்ற எண்ணம் அவர் கால்களின் வேகத்தை அதிகப்படுத்தியது. நகரங்களில் இருப்பது போல அருகில் கடைகள் இல்லை. அது ஒரு மலைப்பகுதி என்பதால் எல்லாத் தேவைகளுக்கும் குறிப்பிட்ட தொலைவை கடந்தாக வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இருந்தது. நகரங்களில் வீடு வாங்க வசதியில்லாத அல்லது வசதி என்பதே இல்லாத மக்கள் மலைப் பகுதிகளில் தங்கள் இருப்பிடத்தை உருவாக்கி கொண்டனர். அதனால் அன்றாட தேவைகளுக்கு அவர்கள் நடந்தே பழகியிருந்தனர். நடையின் வீச்சே ஓடுவதைப் போன்று இருக்கும். அந்த கால்கள் இப்பொழுது ஒரு பெரிய பல்பொருள் பேரங்காடியை ( சூப்பர் மார்க்கெட்) வந்து சேர்ந்திருந்தது. மக்கள் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கடையை தேடி அலைய வேண்டிய கட்டாயமில்லாத நவீன வசதி தான் இது. தேவையானப் பொருள்களை நாமே தேடி எடுத்து கொண்டு பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் அது கட்டமைக்கப்பட்டிருந்தது. அப்பா தனக்கு தேவையான வீட்டு பொருள்களை வாங்கிய பின் மகனிற்காக வண்ண பென்சில்களை வாங்கினார். அது மிகவும் தரமானதாகவும் நல்ல நீளமுடையதாகவும் இருந்தது. அதை அவர் கைகளில் தொடும் போதே பேரின்பம் ஒன்று தன்னை தொற்றிக் கொண்டு வீடு வருவதாக தோன்றியது. வீடு வந்த போது மகன் தனக்காக வாசல் அமர்ந்திருப்பதை அவர் பார்த்தார். வழக்கம் போல அவன் அப்பாவின் பைகளை துலாவியப் பின் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அப்பா தன் சட்டையின் உள்ளிருந்து பெரிய நீளமான அந்த பென்சில்கள் அடங்கிய பெட்டியை அவர் வெளியே எடுத்த போது குழந்தையின் கனவுகள் வண்ணமாகியது. மண்ணில் விழும் மழை தரைத்தொட்டு மேலெழும்புதல் போல அவன் கால்கள் தரையை தொடாமலே குதித்துக் கொண்டிருந்தது. தன் வாழ்நாளில் முதல் முறையாக மகனுக்கு பரிசாக கொடுத்த அந்த பென்சில்களின் நிறத்தை அப்படியே தன் நினைவுக்குள் பத்திரப்படுத்தினார் அப்பா. அதன் பின் அந்த வண்ணங்கள் வீடெங்கும் பரவியிருந்தது. புத்தகங்களில் தன் பெயரை வண்ணத்தில் எழுதுவதும், எழுதி முடிந்த தேவையற்ற காகிதங்களில் படங்களை வரைந்து வண்ணம் தீட்டுவதுமாக அந்நாள் அவனுக்கு நகர்வதே தெரியாமல் ஓடியது. சுவர்களில் அப்பாவையும் அம்மாவையும் வரைந்து அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டிருப்பதாக தன்னையும் நிறுத்திக்கொண்டது ஓவியம். அன்றெல்லாம் அவனை அப்பாவும் அம்மாவும் கண்டிக்கவேயில்லை. உணவை கூட அவன் நிராகரித்த போது " சின்ன பையன் தானே வெளையாட்டு ஆர்வமென" அப்பா படிந்து பேசினார். இருந்த போதும் சில மணி நேரம் அவன் பென்சில்களை பிடிங்கி வைத்துக் கொண்டு அம்மா அவனை சாப்பிட வைத்தாள். அதிலும் அம்மாவிடமிருந்து வண்ண பெனசில்களை மீட்டு விட வேண்டுமென்ற அவசரமே மிகுதியாக இருந்தது. இதுதான் சமயமென இரண்டு வாய் சோற்றை அதிகமாகவே சாப்பிட வைத்தாள் அம்மா. " யம்மா வயிறே தாங்கலம்மா" என்று குழந்தை கெஞ்சும் வரை அவள் விடவில்லை. " நான் தான் சாப்டேன்லம்மா என்னோட பென்சில கொடும்மா" என்று அம்மாவையே சுற்றி வந்தான். " இதுகப்புறம் என்னாத்துக்குடா உனக்கு பென்சில் தூங்க தானே போற " என்று அம்மா சொன்னபோதும் " நீயி பென்சில கொடுத்தா தான் நா தூங்குவேன் " என்றபடி அடம்பிடித்து வாங்கிக் கொண்டான். இரவு உறங்கச் செல்வதற்கு முன்னும் தன் வரைப்படத் தாளில் கொஞ்சம் வண்ணத்தை நிரப்பிக் கொண்டான். குழந்தைகள் தான் நேசிக்கும் பொம்மைகளை அணைத்துக் கொண்டு தூங்குவது போல அவன் கைகளில் அந்த பென்சில் பெட்டகம் உறங்கச் சென்றது. " கண்ணா தூங்க தானே போற அத உன்னோட புத்தகப் பையில வச்சிட்டு வந்து தூங்கு" என்று இரண்டு மூன்று முறைக்கு மேல் அம்மா சொன்ன போதும் அதை ஏற்கும் திறன் குழந்தையிடம் இல்லை. " சரி விடுடி புதுப்பொருள கண்டா புள்ளைங்க ரெண்டு நாளைக்கு அப்படி தான் பத்திரமா வச்சிகிட்டு இருக்கும். நாலு நாள் போச்சினா அது எந்த மூலையில கேடக்குனு கூட கண்டுக்காம விட்டுடும். வெளையாட்டு புள்ள தானே " என்று மகனுக்கு ஆதரவாக வந்த அப்பா அவன் அந்த பென்சில் பெட்டகத்தை வைத்துக் கொண்டே உறங்க அம்மாவிடம் அனுமதியும் பெற்றுத் தந்திருந்தார். படுத்துக் கொண்டிருந்த குழந்தையின் சிந்தனை ஓட்டம் " நாளைக்கு பள்ளிக்கூடம் தெறந்த பிறகு நம்மோட வண்ண பென்சில எல்லோருக்கும் காட்டனும். நண்பர்கள் மத்தியில் காட்டி மகிழனும் " என்று பலவாறாக கற்பனை செய்து கொண்டிருந்தது. அன்றைய நாள் அவர்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியோடு முடிவுற்றிருந்தது. மறுநாள் விடியலை சந்திக்க உறங்க சென்றார்கள். அம்மா வழக்கம் போல தன் மகனுக்கு கதை சொல்லத் தொடங்கினாள். அவள் கதைக்கு உம் கொட்டியபடி மழை சொட்டிக் கொண்டிருந்தது. குழந்தையோ கதையின் மாந்தர்களுக்கு தன் புதிய வண்ணப் பென்சில்களைக் கொண்டு வண்ணமடித்தபடியே உறங்கிப் போயிருந்தான். ஒவ்வொரு நாளும் நாளை விடியலுக்கான நம்பிக்கை தான் எல்லோரையும் உறங்க வைக்கிறது. அந்த நம்பிக்கையில் தான் அவர்களையும் உறங்க வைத்திருந்தது. *********** முதலில் அந்த மழை கொஞ்சம் மண்ணைத் தான் அடித்துக் கொண்டு சென்றபடி இருந்தது. நள்ளிரவு அல்லது நள்ளிரவுக்கு மேலா சரியான நேரத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் கனவில் கூட ஒரு பேரிடர் நடக்க போவதாக எந்த அசரீரியும் வந்து சொல்லவில்லை. அவர்களின் கனவுகள் அவர்களை இன்னும் ஆழ்ந்து உறங்க வழி செய்திருக்கும். உலகின் இந்த நொடியை மட்டும் தான் நாம் சுகித்துக் கொள்ள இயற்கை நமக்கு உரிமையை தருகிறது. அடுத்த நொடியின் நிகழ்வுகள் அனைத்தும் இயற்கையின் கைபிடிக்குள் இருப்பதை நாம் தான் அறியாமல் இருக்கிறோம். அவ்வப்போது இயற்கை அதை நிரூபித்துவிடவும் செய்கிறது. உயிர்கள் வாழ நிலம் தந்து , நீர் , காற்றென வாழ்வின் ஆதாரங்களை தந்த போதும் இயற்கை அழிப்பதாலோ என்னவோ திடீரென அதற்கு கோபம் வந்துவிடுகிறது. பேரமைதியில் இருந்து பெருஞ்சீற்றத்தோடு உயிர்களை கொன்றுவிட அகலமாக கைகளை விரித்துவிடுகிறது. அப்படி தான் அன்றைய நாளும் இயற்கை அந்த மக்கள் மீது தன் வஞ்சத்தை தீர்க்க தயாராகியிருந்தது. அதற்கு மழை உதவி செய்து கொண்டிருந்தது. தொடர் மழை மணல் குன்றுகளை கரைத்து வெறியேற்றியது. மணல் கரைய கரைய பாறைகள் தங்கள் இடத்திலிருந்து நகரத் தொடங்கியது. அவர்கள் தங்கள் கடைசி மூச்சை சுவாசித்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் தன் அம்மாவை இறுக அணைத்துக் கொண்டனர். இயற்கை தங்கள் மீது தான் அதன் வஞ்சத்தை தீர்க்க போகிறதென்றே அறியாது அவர்கள் நிம்மதியாக உறங்கிக் கிடந்தனர். பெருமழையின் இடையே எழுந்த சத்தங்கள் ஒரு சிலரின் உறக்கத்தை கலைத்தது. அவர்கள் தங்கள் வீட்டு சன்னல் வழி இந்த உலகின் மாற்றத்தை பார்த்தார்கள். இருந்த போதும் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ தங்களை சூழ்கிறதென்ற பயம் இன்னும் அவர்களுக்கு தெரியவில்லை. மீண்டும் தங்கள் படுக்கைக்கே சென்றனர். சிலர் உறக்கம் வராது உலாவிக் கொண்டிருந்தனர். மழை தங்கள் தலையின் மீதே கொட்டுவது போன்ற வேகத்தில் அது வீட்டின் மேற்கூடரையில் விழுந்தது. இந்த மழையின் சப்தத்திற்கு பயந்த குழந்தைகள் " அர்ச்சனா அர்ச்சனா" என்றபடி அம்மாவை அணைத்துக் கொண்டனர். அயர்ந்து உறங்கிய குழந்தைகள் கூட புரண்டு அம்மாவின் அணைப்பை தேடிக் கொண்டிருந்தனர். மணல்கள் உருண்டோடிய பாதை பாறைகள் செல்லவும் வழி வகுத்துக் கொண்டிருந்தது. முதல் அது காட்டின் மரங்களை வேரோடு சாய்ந்து வீசி எறிந்தது. இப்போது அதன் வேகம் மின்னலென படையெடுத்தது. அதன் எண்ணிக்கையை கணக்கிட முடியவில்லை. மலையிலிருந்து கொட்டும் அருவியைப் போல கற்களும் பாறைகளும் பெருங்கோபத்தோடு விழுந்தது. தன் பாதைகளுக்கு இடையூறென அது அத்தனை வளங்களையும் அழித்திட துணிந்தது. திடுமென பேரிடியாய் மக்களின் வீடுகள் நடுங்கத் தொடங்கியது. " அம்மா ஏதோ சப்தம் வருது.. வீடே நிலநடுக்கம் வந்த மாதிரி வீடே அதிருதென எழுந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதராவாக அணைத்துக் கொண்டனர்.‌ தங்கள் நிலையை கண்டுகொள்ள கதவு திறந்து வெளியே பார்க்கும் போது தான் பேராபத்தை அவர்கள் மனம் உணர்ந்தது.‌ அங்கிருந்து வெளியேறி உயிரை பத்திரப்படுத்த அவர்கள் செயல்படும் முன்னே அந்த பெரும்பாறைகள் அவர்கள் வீட்டின் மீது தன் கனத்தை செலுத்தியது. அந்த பாறை இடுக்குகளுக்கிடையே நசுங்கி தன் கடைசி மூச்சை வெளியேற்றிய பல மக்களின் குரலொளி‌ மழைப் பட்டு தெரித்து அந்த பாறை‌ மீதே விழுந்தோடியது. அந்த மழை விண்ணிலிருந்து மண்ணைத் தொடுவதற்குள் அத்தனை வேகமாக எல்லாம் நடந்திருந்தது. மலைகள் தன்னை பாதியாக குறைத்துவிட்ட ஆசுவாசத்தில் பெருமூச்சை விட்டது. அதன் பாதி அந்த மலை மக்களின் மூச்சை முழுதாக நெருக்கியது. அங்கே வாழ்ந்தவர்களின் தடயம் தெரியாமல் சகதி நிலமென அது தன் இயல்பை ஒரு நொடிக்குள் மாற்றி அமைந்திருந்தது. சேரு படிந்த நிலமென பாறைகளை தழுவி செந்நிற நீரோட்டம் ஓடிக்கொண்டேயிருந்தது. எல்லாத் திசைகளிலிலிருந்தும் மரணத்தின் குரல் மேலெழ முடியாமல் அந்த பாறையின் அடியில் நசுங்கிக் கொண்டிருந்தது. உயிர்களின் கெஞ்சலுக்கு செவி கொடுக்காத இயற்கை மீண்டும் பாறைகளாய் நிலத்தில் உருண்டது. அது ஒருமுறை அல்ல. மீண்டும் மீண்டுமென சரிந்து கொண்டேயிருந்தது. வெள்ளத்தோடு அடித்து வேரோடு பெயர்த்துக் கொண்டு வந்த மரங்களும் பாறைகளும் மக்களின் இருப்பிடங்களை மூழ்கடித்தது. இயற்கை தன்னிலைக்கு திரும்பும் வரை அங்கே மலைகள் தலைகீழாக உருண்டு கொண்டிருந்தது. மரத்தின் வேர்கள் உயிர்களின் கழுத்தை நெருக்கி சுற்றி இறுக்கியது. நீரில் முழ்கியவர்களின் உயிர் காற்று குமிழிகளாக வெளியேறத் தவித்தது. காடுகள் தங்களை தானே பிடிங்கி வீசிக் கொண்டிருந்தது. அன்றைய விடியல் வரும் முன்னே எல்லாம் நடந்து முடிந்தது. எஞ்சிய உயிர்கள் அங்கே தங்களை பாதுகாக்க ஓடியது. பாதி உயிரில் துடித்துக் கொண்டிருப்பவர்கள் தங்களை காப்பாற்ற யாராவது வருவார்களாவென மீதி உயிரை உயர்த்திப் பிடித்துக் காத்திருந்தனர். செந்தண்ணீர் சூழ்ந்த இடமெல்லாம் உயிர் கசிந்த நிறம் பரவியிருந்தது. விடியல் நெருங்கும் வேளையில் இந்த மக்களை காப்பாற்ற ஓடிவந்தவர்கள் ஆயிரம் ஆயிரம் கரங்களை நீட்டினார்கள். இருந்தும் தப்பி பிழைத்த மிச்ச கரங்களையே அவர்கள் பிடிக்க நேர்ந்தது. அங்கே அவர்கள் வாழ்ந்த அடையாளமே இல்லாமல் வெறும் பாறையும் உடைந்த மரங்களும் தங்கள் உடலை அகல விரித்து கிடந்தது. அங்கிருந்து தான் பல அழுகுரல் கேட்கத் தொடங்கியது. அது புதைந்தவர்களின் குரலிலிருந்து மண்ணைப் பிளப்பது போல இருந்தது. என்ன செய்வதென தெரியாமல் கால்கள் போகும் திசையெல்லாம் தன் உறவுகளை தேடி அழுது கொண்டே ஓடியவர்கள் ஏதுமற்று அதே இடத்தில் உடைந்து அழத் தொடங்கினார்கள். மீட்புக் குழுக்கள் ஒவ்வொரு திசையிலுமிருந்து உயிருக்கு போராடுபவர்களையும், உயிரற்ற உடலையும் மீட்க களத்தில் இறங்கினார்கள். அங்கே ஓடிக்கொண்டிருந்த செந்தண்ணீர் இன்னும் தன் உடல் சூட்டை சிந்துவதாக அந்த பகுதியில் மேல் படர்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. யாரை எப்படிக் கண்டுபிடிக்கலாம், யார் எங்கே இருக்கிறார்களென கண்டு பிடிக்கவே முடியாத அவல நிலையை எதிர்கொள்ள முடியாமல் மீட்புக் குழுவினர் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களின் கண்கள் மண் மூடிய பரப்பெங்கும் கண்ணீர் சிந்தும் நிர்கதியானவர்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்தது. சதைத்தின்ற இந்த மண்ணின் பெருத்த ஏமப்பென பாறைகள் அவ்வப்போது உருண்டு நகர்ந்து கொண்டிருந்தது. அது தன் பாதையை பல திசைகளிலும் உருவாக்கி அமைதியடைந்த பின் தான் மீட்பு குழுவினர்கள் தங்கள் பணியை துரிதமாக செய்யத் தொடங்கியிருந்தனர். இங்கே இந்த இடத்தில் ஒரு வீடு இருந்திருக்கலாம் என்ற யூகத்திலும் , பலரின் தகவல்களின் அடிப்படையிலும் அவர்கள் அந்த நிலத்தை தோண்டி எடுத்தார்கள். மரணத்தை விழுங்கிய களைப்பில் அந்த மண் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அதன் உறக்கத்தை உடைத்து தோண்டிய போது இந்த வாழ்வின் நிலையாமை அவர்களை பெரிதாக பாதிக்கவும் செய்தது. இந்த உலகின் கடைசி நொடி இது தான் என்பதே கணிக்க முடியாது வாழ்வைத் தான் நாம் நகர்த்திக் கொண்டிருக்கிறோம். நேற்றுவரை , இந்த நொடி வரை நாம் பழகிய ஒருவர் மறு நொடி இறந்து போகிறாரென்ற செய்தி தான் நம் நிமிடங்களை நிரந்தரமற்றதென உணர வைக்கிறது. அப்படி தான் இருந்தது அந்த மண்ணில் புதைந்திருந்த அவர்களின் இறப்பும். அவர்களை தொடவே கைகள் நடுங்கிக் கொண்டு தான் இருந்தது. முழுதாக மண் மூடியிருந்த அவர்களின் உடலை மண் துகள்களின் போர்வையென போர்த்தியிருந்தது. மண்ணை உதறிவிட்டு அவர்களை மேலே தூக்கினார்கள். யாரிடமும் எந்தவித அசைவும் இல்லை. அவர்கள் அப்படியே தான் உறைந்து போயிருந்தனர். நிச்சயமாக அந்த குடும்பத்தின் கடைசி தலைமுறை அவர்களாக இருக்கூடும். தாய் தந்தை மகனாகத்தான் தெரிந்தார்கள். அம்மாவும் அப்பாவும் தன் மகனின் காலடியில் தான் கிடந்தார்கள். அவர்களின் கனவுகள் புதைந்திருந்த கரங்களை அவர்கள் பார்த்திருக்க முடியாது. அந்தக் குழந்தையின் கைகளில் நீளமான வண்ணப் பென்சில் பெட்டியொன்று மண் படிந்திருந்தது. அது தான் அவனின் கடைசிக் கனவை தாங்கியிருக்க வேண்டும். இப்படிக்கு நிழலி 8754568243 03-04-2025

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.