logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

யுவஸ்ரீ மணிவண்ணன்

சிறுகதை வரிசை எண் # 91


சரணாலயம் “ஐயோ… அம்மா… வலிக்குதும்மா… வேணாம்மா…” “விடு கவி அவளை. நான் பேசுறேன் அவட்ட.” கதிரேசன் தன் மனைவியைத் தடுக்க முயன்றார் தான். காவல்துறை ஆய்வாளரான கவிதாவின் பலத்துக்கு முன் கடந்த மூன்று வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்படும் அவரால், அந்த முயற்சியில் வெற்றிபெற இயலவில்லை. கவிதாவின் கைகள் வலித்ததா, இல்லை மகள் தாரிணியைப் பார்த்துப் பரிதாபமாக இருந்ததா எனத் தெரியவில்லை; பெல்ட்டை விட்டெறிந்துவிட்டு சோபாவில் அமர்ந்தார். சுவரோரமாகச் சுருண்டு கிடந்த தன் பதினைந்து வயது மகளின் அருகே சென்று அமர்ந்தார் கதிரேசன். “ஏன் பாப்பா இப்படி பண்ணுன? எதுவா இருந்தாலும் அப்பாட்ட சொல்லுவ தான? இதை ஏன் சொல்லல? விஜயா அத்தைகிட்ட என்ன சொன்ன? அப்பாட்ட சொல்லுடா. நான் என்னன்னு பாக்குறேன்.” என்றபடி அவள் கண்களைத் துடைத்து விட்டார். எழுந்து உட்காரக்கூட சிரமப்பட்டாள், தாரிணி. உடைக்கு வெளியே தெரிந்த இடங்களில் எல்லாம் பட்டை பட்டையாகத் தடித்திருந்தது. அவளுக்கு அம்மா இருக்கும் பக்கம் திரும்பவே பயமாயிருந்தது. அப்பாவின் தோள்களில் முகம்புதைத்து கொண்டாள். “இங்க பாருடா பாப்பா. அப்பாவ பாரு. என்ன நடந்துச்சுனு அப்பாட்ட சொல்லுடா. அப்பா அம்மாகிட்ட பேசுறேன்.” தாரிணி தேம்பியபடி பேச ஆரம்பித்தாள். “அத்தானும் நானும் லவ் பண்றோம்ப்பா.” என்றாள். கவிதாவிற்கு எங்கிருந்துதான் அந்த வேகம் வந்ததோ? கண்மூடி திறக்கும்முன் அவள் அருகில் வந்திருந்தார், “என்னடி சொன்ன? லவ் பண்றீங்களா? உன் வயசென்ன, அவன் வயசென்ன?” தாரிணி அப்பாவின் தோளிலேயே புதைந்து விடுபவள் போல குறுகினாள். “நான் தான் பேசிட்டிருக்கேன்ல கவி. கொஞ்சம் அமைதியா இரு, நான் கேக்குறேன். நீ வேணா உள்ளே ரூம்ல இரு கொஞ்ச நேரம்.” கணவரின் குரல் சற்று நிதானப்படுத்தினாலும், கவிதாவுக்கு கோபம் குறையவில்லை. “நான் இங்க தான் இருப்பேன். அவ என்ன தான் சொல்றான்னு நானும் கேக்குறேன்.” சென்று ,சோபாவில் சாய்ந்தமர்ந்து, கண்களை மூடிக்கொண்டார். மீண்டும் தாரிணி நிமிர்ந்து பார்க்கவே அரை மணி நேரம் ஆனது; என்ன நடந்தது என்று சொல்ல மேலும் ஒரு அரை மணி ஆனது. “என்னை அத்தான் தான டெய்லி டியூஷன் கொண்டு போய் விடுவாங்கள்ல? அப்ப ஒரு நாள் என்னை லவ் பன்றேன்னு சொன்னாங்கப்பா.” கவிதாவின் முகம் இறுகியது. கதிரேசனுக்கும் கோபம்தான். ஆனால் என்ன நடந்ததென முதலில் தெரியவேண்டுமே. அவளை மேலும் பேசத் தூண்டினார். “நான் முதல்ல வேணாம்னு தான் சொன்னேன். அப்புறம் அத்தான் நான் இல்லைனா செத்து போவேன்னு சொன்னாருப்பா. எனக்கும் அத்தானை புடிச்சிருந்துச்சு. என் பிரண்ட்ஸ் எல்லாம் அவரு என்னை இறக்கிவிட வரும்போது பாத்துட்டு, உங்க அத்தான் ஹீரோ மாறி இருக்காருன்னு சொல்லும்போது பெருமையா இருக்கும். நம்ம அத்தை வீட்லயே கல்யாணம் பண்ணி, உங்க பக்கத்துலயே இருந்தா நல்லாருக்கும்னு தோணுச்சு.” பதின்ம வயது பெண்ணின் இரண்டுங்கெட்டான் மனநிலையை பயன்படுத்தி கொண்டுள்ளான். சிறிது நாட்களாகப் படிப்பில் கவனமின்றி இருப்பதும், சமையல் பழகுவதும், சமைத்தததை விஜயா அத்தைக்கு கொடுக்கப் போகிறேன் என்று ஏதாவது டப்பாவில் அடைத்துக் கொண்டு போவதும் ஏனென்று புரிந்தது கதிரேசனுக்கு. தன் மகளைக் குழந்தை என்றே நினைத்து இதையெல்லாம் கவனிக்காமல் விட்டு விட்டாரே. “எப்பலேர்ந்து லவ் பண்றீங்க? அதை என்கிட்டே ஏன் சொல்லல? என்னை நடந்தாலும் என்கிட்டே சொல்லுவ தான?” தன்மையாகத் தான் கேட்டார். “அஞ்சு மாசமாப்பா. அத்தான் தான் யார்ட்டயும் சொல்ல வேண்டாம், அம்மாக்கு தெரிஞ்சா, இப்ப அத்தான் வேலை இல்லாம இருக்கிறத சொல்லி ஒத்துக்க மாட்டாங்க. அவங்க ஐபிஎஸ் ஆகி, ட்ரைனிங்க்லாம் முடிச்சப்புறம் சொல்லிக்கலாம். அதுக்குள்ள எனக்கும் கல்யாண வயசு வந்துரும்னு சொன்னாங்கப்பா.” இதெல்லாம் தெரிந்தவனுக்கு இவள் இன்னும் குழந்தை என்பது தெரியவில்லையா? கதிரேசனுக்கு கோபம் வந்தது; தங்கை மகன் என்று நம்பி வீட்டில் விட்டதற்கு என்ன வேலை செய்திருக்கிறான். தனக்கு மட்டும் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால், தன்பிள்ளையை அவனுடன் டியூஷன் அனுப்பி இருக்க மாட்டாரே. “சரி, இந்த விஷயம் உன் அத்தைக்கு எப்படி தெரிஞ்சுது?” “அத்தைக்கு நான் காய் வெட்டிக் குடுத்துட்டிருக்கும்போது, அவங்க பக்கத்துவீட்டுல இருக்க அக்கா வந்தங்கப்பா. அத்தான் மெய்ன்ஸ் எழுதிருக்காங்கல்ல, அதைப் பத்தி பேசிட்டிருந்தாங்க. அப்ப அந்த அக்கா சொன்னாங்க, ‘வேலை கெடச்சுட்டா சின்ன வயசுன்னுலாம் பாக்காத. நம்ம பக்கம் நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வச்சுட்டு ட்ரைனிங் அனுப்பு. இல்லைனா அங்க போய் ஹிந்திக்காரியா கூட்டிட்டு வந்துற போறான்னு.’ அத்தையும் அதுதான் சரின்னு சொன்னாங்க. எனக்குக் கஷ்டமா போய்டுச்சு. அத்தான் வீட்டுக்கு வந்தவுடனே இதைச் சொல்லி அழுதேன். அதை அத்தை கேட்டுட்டாங்க.” கவிதா அவளின் புஜத்தை அழுத்திப் பிடித்துத் தூக்கும்போது தான், அவர் அறையில் இருந்ததே மற்ற இருவருக்கும் நினைவு வந்தது. “உன் அத்தை உன்னையும் என்னையும் அவ்ளோ அசிங்கமா பேசுனாளே, அப்ப அந்தப் பரதேசி என்ன சொன்னான்? அவ சின்னப் பொண்ணு, புரியாம பேசுறா. இந்த வயசுல வர க்ரஷ்லாம் கொஞ்ச நாள் போச்சுன்னா மறந்துரும்னு சொன்னானே? இப்ப நீ என்னென்னெவோ சொல்லிட்டிருக்க? அவன் உன்ன லவ் பண்ணிருந்தா அவங்க அம்மாட்ட ஏன் அப்படி சொல்லப் போறான்?” இவ்வளவு நேரம் அம்மாவைப் பார்த்தாலே நடுங்கியவளுக்கு, அவளுடைய காதலை அற்பமாகப் பேசவும் கோபம் வந்துவிட்டது,” அவங்க அத்தைக்கும் உங்களுக்கும் பயந்துட்டு தான் அப்படி சொன்னாங்க.” “இப்ப பயந்துட்டு இப்படி சொன்னவன், நாளைக்கு எப்படி உன்ன கல்யாணம் பண்ணிப்பான்?” தன் கைகளைப் பற்றிய கணவனின் கைகளை உதறிவிட்டபடியே பேசினார், கவிதா. “அதெல்லாம் வேலை கெடைச்சுட்டா வந்து பேசுவாங்க. இப்ப அத்தை வீட்டை விட்டுத் தொரத்திட்டா எங்க போவாங்க?” கவிதாவிற்கு ஆயாசமாக இருந்தது. விஜயாவா அவனை வெளியே துரத்துவாள்? மகன் காற்றின்மேல் நடக்கிறேன் என்றால், எத்தனை அடி உயரத்தில் என்றல்லவா கேட்பாள். “சரி, படிக்கன்னு சொல்லி வாங்கி குடுத்த போன்ல உங்க காதலை வளர்த்தீங்கள்ல? அதை எடுத்துட்டு வந்து அவனுக்குக் கால் பண்னு. உனக்கு நான் சொன்னா இந்தக் கிறுக்கு போகாது.” தாரிணிக்கு தன் காதலின் மேல் கொஞ்சம் கூடச் சந்தேகமில்லை. ஆனால் அம்மாவுக்கு நிரூபிக்க வேண்டுமே. அம்மாவுக்கும் அத்தைக்கும் எப்போதுமே ஆகாது. அதனால் தான் இவர்கள் இரண்டு பேரும் இப்படி குதிக்கிறார்கள். இவர்கள் இப்படி சுயநலமாக இல்லாமல் தங்கள் பிள்ளைகளுக்காக யோசித்தால், ஏன் இவ்வளவு பிரச்சனை? இப்படி நினைத்த தாரிணிக்கு, இருபத்திநான்கு வயதான தன் அத்தானுக்கும் பதினைந்து வயதே ஆன தனக்குமான ஒன்பது வயது வித்தியாசம் உறுத்தவில்லை. அவள் அறைக்குள் சென்றவள், தன் அத்தானுக்கு போன் செய்துகொண்டே தான் திரும்பி வந்தாள். அவள் அத்தான் சிலபல முயற்சிகளுக்குப் பிறகு தான் இவள் அழைப்பை ஏற்றான். “ஹலோ... அத்தான்…” அவன் அழைப்பை ஏற்று, இவள் பேச ஆரம்பிக்கும்போதே கவிதா போனைப் பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டார். எங்கோ ஒளிந்து நின்று பேசுவது போல அவள் அத்தானின் குரல் தணிந்து வந்தாலும், எப்போதும் இல்லாத எரிச்சலோடு ஒலித்தது. “ஒரு தடவை எடுக்கலைனா விட மாட்டியா தாரிணி? ஏன் மறுபடி மறுபடி கூப்பிட்டு உயிரை வாங்குற?” தாரிணி விக்கித்து போனாள். அவள் அத்தான் எப்போதும் அவளிடம் இப்படி பேசியதே இல்லை. 'யாரும் அழைக்காத செல்லப்பெயரில் தான் அழைப்பேன்' என்று அவர்கள் தனியாக இருக்கும் சமயங்களில், தாணு என்று தான் அழைப்பான். எல்லாரின் முன்னும் அழைத்தால், சந்தேகம் வந்து இவர்களைப் பிரித்து விடுவார்களாம். தன் பெற்றோரை நிமிர்ந்து பார்க்கவே அவளுக்கு அவமானமாக இருந்தது. “அத்தான்?” அவள் குரலில் இருந்த அதிர்ச்சியை அவன் கண்டுகொள்ளவில்லையா, இல்லை அவனுக்கு அது முக்கியமாகப் படவில்லையா எனத் தெரியவில்லை. மேலும் அவளை உறைநிலைக்குக் கொண்டு செல்லும்படி தான் பேசினான். “என்ன அத்தான்? இப்ப என்ன நடந்துச்சுன்னு இப்படி அழுது என்னை மாட்டிவிட்ட? அம்மா என்னென்னவோ பேசுறாங்க. நான் உன்ன லவ் பண்ணலைன்னு சொன்னாலும் நம்ப மாட்றாங்க. நான் அவங்க சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணலைனா செத்துருவேன்னு மெரட்டுறாங்க.” “நம்ம லவ் பண்றோம் தான அத்தான்?” கிணற்றுக்குள் இருந்து கேட்பது போல் உள்ளடங்கி போனது தாரிணியின் குரல். அவளின் சிலுவையில் கடைசி ஆணியையும் இறக்கினான் அவள் அத்தான், “என்ன லவ் பண்றோம்? என் மாமா மக தானே, அழகா இருக்காளே, நம்மளே கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசைப்பட்டேன். லவ்வும் இல்ல ஒண்ணும் இல்ல. இப்படி வெளிய உளறிட்டு திரியாத. எங்கம்மா, நான் அவங்க சொல்ற பொண்ண தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சத்தியம் பண்ணி குடுத்தப்பறம் தான் மாத்திரைய போட்டுட்டு தூங்குனாங்க. அவங்க மனச உடைக்க என்னால முடியாது.” அவ்வளவு தான். உறைந்துபோய் நின்றிருந்த தாரிணி சில நிமிடங்கள் அசையவே இல்லை. அதனால் தான் தன் தாய்தந்தையின் முகத்தில் இருந்த வேதனையையும், அம்மா அப்பாவிற்கு கண் காட்டியதையும் கவனிக்கவில்லை. கைத்தாங்கலாகத் தன்னை அழைத்துச் சென்ற அப்பா, அவள் அறையில் படுக்க வைத்து, தலைகோதி உறங்க வைத்ததை நாளை யாராவது கேட்டால், அவளுக்கு நினைவிருக்காது தான். அவளது உலகமே ஸ்தம்பித்தார் போலல்லவா இருந்தது? மறுநாள் காலையில் அவள் எழுந்திருக்கும்போதே அவளருகில், கட்டிலில் உமா அத்தை அமர்ந்திருந்தார். இரண்டு நிமிடங்களில் நேற்றைய நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பொங்கியெழ அத்தையை அணைத்துக்கொண்டு ‘ஓ’வென்று அழுதாள். எவ்வளவு நேரம் அழுதாளோ, வேறு யாரும் அவர்களைத் தொந்தரவு செய்யவில்லை. அவள் அழுது அடங்கவும் அத்தை அவள் முகத்தைத் துடைத்து, பல் தேய்க்க அனுப்பி வைத்தார். ‘எப்படி அடித்து வைத்திருக்கிறாள் இந்தப் பிள்ளையை? தவறு செய்து விட்டாள்தான். அதற்காக இப்படியா? வீட்டையும் அவளது ஸ்டேஷன் என்று நினைத்து விட்டாள் போல இந்தக் கவிதா.’ இதே கேள்வியைத் தான் உமாவின் கணவரும் கவிதாவின் அண்ணனுமான நடராஜனும் வெளியே கேட்டுக்கொண்டிருந்தார்; கண்டித்தும் கொண்டிருந்தார். “என்ன கவிதா இது? பொம்பள புள்ளய இப்படி அடிச்சு வச்சுருக்க? நம்ம புள்ள கொழந்த. எவனோ ஒரு பொறம்போக்கு அது மனச கலைச்சான்னா நம்ம புள்ளய அடிக்கிறதா?” அவமானமாக இருந்தது கவிதாவுக்கு. “வேற என்னண்ணா செய்யச் சொல்றீங்க? என்கிட்டே சொல்ல வேணாம்; ஆனா அவங்கப்பா அவளை எப்படி வளத்தார்னு உங்களுக்குத் தெரியும்ல? அவர்கிட்ட சொல்றதுக்கென்ன? அவரு மனசொடிஞ்சு போய்ட்டார். எப்படி இருந்த மனுஷன்? இந்தக் கிட்னி பிரச்சனை வந்ததுல இருந்து தான் அவர் பெருசா வெளிய போறதில்ல. ‘நான் மட்டும் நல்லா இருந்திருந்தா இப்படி ஆகிருக்காதுன்னு’ ராத்திரியெல்லாம் ஒரே புலம்பல். இவ என்னன்னா அவரக்கூட நினைக்காம நேத்து அந்தப் பொம்பளை கால்லயே விழுந்துட்டா. ‘எங்களைப் பிரிச்சுராதீங்க அத்தைனு.’ அதுவும் எப்படி? அந்த நாய் காதலிக்கவே இல்லைனு அவங்கம்மா தலைல அடிச்சு சத்தியம் பண்ண அப்பறம். அந்த விஜயா என்னைக் கேக்குறா, அவ பையன் ஐபிஎஸ் ஆகப் போறன்னால, என் பொண்ணுகிட்ட சொல்லி அவனை வளைச்சுப்போட பாக்குறேனாம். எத்தனை வருஷ வன்மத்தை வச்சிருந்தாளோ? என்மேல இருந்ததெல்லாம் என் புள்ள மேல கொட்டிட்டா. நாங்களே தாரிணியைக் கடிஞ்சு ஒரு வார்த்தை சொன்னதில்லை. அவ என்னென்னவோ சொல்லிட்டா. இவளுக்குப் பாதி புரியக்கூட இல்லை. நேத்து அந்தக் கையாலாகாத்தனத்துல என் புள்ளையவே அடிச்சுட்டேண்ணா. நேத்து அவன் காதலிக்கவே இல்லைனு சொல்லவும் இவ எப்படி துடிச்சு போய்ட்டா தெரியுமாண்ணா? என்னால ஒண்ணுமே பண்ண முடியலையே.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது உமா இவர்கள் அருகில் நின்று கையைப் பிசைந்துகொண்டிருந்தார். இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வந்தவருக்கு, கவிதா நிதானத்தோடு பேசுகிறாள் என்ற நிம்மதியும், அதே சமயம் நாத்தனாரின் வேதனையை மேலும் அதிகரிக்க போகிறோம் என்ற வருத்தமும் சமவிகிதத்தில் இருந்தன. ஏதோ போல அவர் வந்து நிற்கவும், ’ஏதோ சொல்லத் தயங்குகிறாள்’ என்று இருவருக்கும் புரிந்து விட்டது. கவிதா தான் வாய்விட்டுக் கேட்டார், “என்னாச்சு அண்ணி?” “தாரு நாள் தள்ளிப் போய் இருக்கிறா மாதிரி சொல்றா கவிதா.” சட்டென உடலெல்லாம் சில்லிட்டு போனது கவிதாவிற்கு. ‘தான் நினைத்தது போல் தன்பிள்ளை குழந்தை இல்லையோ?’ “அவளைக் கிளம்ப சொல்லுங்க அண்ணி. டாக்டர்ட்ட போய் உறுதிப்படுத்திட்டு, என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்.” வெளியே அவர் குரல் அமைதியாகத் தான் இருந்தது. நடராஜன் தான் தடுத்தார், “முதல்ல மெடிக்கல்ல அந்த அட்டை வாங்கிட்டு வரேன். உறுதியா எதுவும் தெரியாம நம்ம புள்ள பேர கெடுத்துறக் கூடாது. நான் ரூம்க்கு போய் மாப்பிள்ளையையும் கூப்டுட்டு போறேன்” எழுந்த கவிதா மீண்டும் சோபாவில் அமர்ந்துகொண்டார். உமா அவர் கையைப் பிடித்தபடி அருகினில் அமர்ந்தார். “நீ கலங்காத கவிதா. அவளுக்கு அப்படின்னா என்னனு கூடத் தெரியல. எதுக்கும் இருக்கட்டும்னு தான் உங்ககிட்ட சொன்னேன். அப்படியெல்லாம் இருக்காது” அப்படி இருந்துவிடக் கூடாது என்பது தானே கவிதாவின் வேண்டுதலும் கூட. “அவளைத் தனியா விடாதீங்க அண்ணி. கூடவே இருங்க. அவங்க ரெண்டு பேரும் வந்ததும் என்ன பண்றதுன்னு முடிவு பண்ணலாம்.” வெளியே சென்ற இருவரும் வீடு திரும்பும்போது கவிதா, அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலேயே அமைதியாக அமர்ந்திருந்தார். வாங்கி வந்த பொருளை அறைவாயிலில் உமாவிடம் கொடுத்துவிட்டு அவர்களும் வந்து கவிதாவோடு அமர்ந்தனர். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த உமாவின் முகத்தைப் பார்த்த மூவரின் முகத்திலும் ஒவ்வொரு உணர்ச்சி தெரிந்தது. கதிரேசன் முகத்தில் அபரிமிதமான சோர்வும், கவிதாவின் முகத்தில் எல்லையில்லா கோபமும், நடராஜனின் முகத்தில் வேதனையும் தெரிந்தது. அடுத்த நிமிடம் கடந்த மூன்று வருடங்களில் இல்லாத வேகத்தோடு எழுந்து அறைக்குள் செல்ல முற்பட்டார் கதிரேசன். நடராஜன் ஓடிச் சென்று தான் அவரைத் தடுத்தார். “எங்க மாப்பிள்ளை போறீங்க? உங்க முகமே சரியில்ல.” “எங்க போவேன்? இப்படி புள்ளையப் பெத்தா எங்கப் போவேன் நான்? சாவப் போறேன். நாளைக்கு ஊர்ல எல்லாரும் காறித் துப்புவாங்க என் மூஞ்சில. அதையெல்லாம் சகிச்சுக்க எனக்கு மனசுலயும் உடம்புலயும் தெம்பில்லை.” "என்னண்ணா இப்படி பேசுறீங்க? நீங்கக் கொஞ்சம் தைரியமா இருங்கண்ணா. நீங்க இல்லைன்னா கவிதாவையும் தாரிணியையும் யாரு பாத்துப்பா?” இது உமா. “மச்சானும் நீயும் பாத்துகோங்கம்மா. இல்லைன்னா பேசாம ஒரு பாட்டில் பூச்சிமருந்து வாங்கிட்டு வரேன்; குடிச்சுட்டு மூணு பேரும் சாவுறோம்.” சத்தம் கேட்டு வெளியே வந்த தாரிணியின் முகம் பேயறைந்தாற்போல் இருந்தது. நடராஜனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. கவிதா ஏதாவது பேசுவாரா என எதிர்பார்த்தார். அவர் அமைதியாக இருக்கவும், இவரே கேட்டார். “என்ன கவிதா நீயும் அமைதியா இருக்க? மச்சான்கிட்ட பேசு.” “நான் என்ன பேசணும்? சாவணும்னு நெனைக்கிறவங்களைப் புடிச்சு வச்சு என்ன ஆகப் போகுது?” எந்த உணர்ச்சியும் இல்லாமல் ஒலித்தது அவர் குரல். “கவிதா!” என்று அதட்டினார் நடராஜன். அண்ணனை நிமிர்ந்து பார்த்தவர், பிறகு பேசியதெல்லாம் நாற்காலியில் குனிந்து அமர்ந்து சத்தம் இல்லாமல் அழுதுகொண்டிருந்த கணவரைப் பார்த்து மட்டும் தான். “நேத்து வரைக்கும் கொழந்தையா சுத்திட்ருந்த என் பொண்ணு இன்னைக்கு என்னென்னவோ பேசுறா. எவ்ளோ பெரிய பிரச்சனைல மாட்டிட்ருக்கானு நெனச்சாலே எனக்கு நெஞ்செல்லாம் அடைக்கிற மாறி வருது. அவ வாழ்க்கை என்னாகுமோன்னு நான் பதறிட்டுருக்கேன். அவளோட நொடிநேர தடுமாற்றத்தை வச்சு தான், இந்த உலகம் அவ சாவுற வரை அவளை எடைபோடும். இந்தக் கொடூரமான உலகத்துல அவ மிச்ச வாழ்க்கைய வாழ எப்படி தயார் பண்ண போறேன்னு நெனச்சாலே எனக்கு உயிரே போறாப்ல வலிக்குது. என் பொண்ணு வாழ்க்கையை விட இவரு கௌரவம் கெட்டு போச்சுன்னு சாகப் போறேங்குறாரே. இவரைப் பத்தி நான் கவலை போடணுமா? ஏற்கனவே இருக்க பிரச்சனைல, தன் அப்பா சாவுக்குத் தான் தான் காரணம்னு நெனச்சு அவ நொடிச்சு போயிரமாட்டாளா? என் புள்ளய நினைக்காம சாவ போறாரே. எனக்கு இப்ப என் புள்ளைய தவிர யாரையும் பாக்க முடியாது. எனக்கு அவ தான் இப்போதைக்கு முக்கியம். மத்த எல்லாரும் என்ன வேணா பண்ணிக்கோங்க. எனக்குக் கவலை இல்லை.” நீளமாகப் பேசி முடித்தார். அந்த அறையே மௌனத்தில் ஆழ்ந்தது. மெதுவாகத் தன் அம்மாவின் காலுக்கடியில் வந்து அமர்ந்த தாரிணி அவரின் மடியில் முகம் புதைத்தாள். சூடான கண்ணீர் கவிதாவின் மடியை நனைத்தது. அவள் தலையைத் தடவி கொடுத்தபடியே யோசனையில் தான் இருந்தார், கவிதா. “இப்ப என்ன தான்மா பண்ணலாம்? நமக்குத் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தவங்க இருக்காங்க. பாப்பாவை அங்க கூட்டிட்டு போய் இதைச் சரி பண்ணிக்கலாம். அந்தப் பயல ரெண்டு தட்டு தட்டி வச்சிரலாம். அவங்க வீட்ல போய்ப் பேசுவோம். இன்னும் மூணு வருஷத்துல நம்ம பாப்பாக்கும் கல்யாண வயசாயிடும், அவனும் பரீட்சைலாம் முடிஞ்சு வேலைக்குப் போயிடுவான்.” கேள்வியாக நிறுத்தினார் நடராஜன். தாரிணியின் முகத்தை நிமிர்த்திய கவிதா, பூபோல் சிரித்து கொண்டே இருக்கும் தன் மகளின் முகத்தின் தற்போதைய நிலையை வெறுத்தபடி, தன் சேலை தலைப்பால் அவள் முகத்தை அழுந்தத் துடைத்தார். “அம்மா உனக்கு நல்லது மட்டும் தான் நெனப்பேன்னு நம்புறியா பாப்பா?” நம்புகிறேன் என்று சொல்லிவிடேன் என்று இறைஞ்சியது அவர் குரல். “அம்மா, சாரிம்மா. நான் லவ் பண்ணது உண்மை தான். ஆனா நான் எந்தத் தப்பும் பண்ணலம்மா. இது எப்படினே எனக்குத் தெரியலம்மா.” என்று கேவினாள் மகள். மகளின் கன்னத்தைத் தட்டி, “நம்ம அதைப் பத்தி பேசுவோம். அம்மாவும் உன்னை இப்படி அடிச்சுருக்க கூடாது.” சொல்லும்போதே அவர் கண்களிலிருந்து கொட்ட துடித்த கண்ணீரை உள்ளிழுத்து கொண்டார். மகளின் முன்னால் அவர் கலங்கினால், அவளுக்கு யார் தைரியம் அளிப்பது? "இப்ப அத்தையோட உள்ள போய் இரு.” உமாவும் தாரிணியும் உள்ளே செல்லவும் தான் தன் அண்ணன் பக்கம் திரும்பினார். “அந்தப் பொறுக்கி என் பொண்ண ஏமாத்தி இருக்கான். மாமா மகளையே இப்படி பண்ணவன், இன்னும் எத்தனை எடத்துல வாலாட்டுனானோ? அவனுக்கு என் பொண்ணக் கட்டி குடுக்குறதுக்கு இப்பவே நான் அவளைக் கழுத்தை நெறிச்சு கொன்னுடறேன்.” அடக்கப்பட்ட கோபத்தை அவர் குரல் காட்டியது. சிறிது நேர அமைதிக்கு பின், “அப்ப டாக்டரை மட்டும் பாப்போம். யாருக்கும் தெரியாம கருவைக் கலைச்சுரலாம். உனக்கு டிரான்ஸ்பர் கிடைக்குமான்னு பாரு. கொஞ்ச நாள் வெளியூர்ல இருந்தா தான் அவ வாழ்க்கைக்கு நல்லது.” இப்போது கவிதாவின் கோபம் வெளிப்படையாகவே தெரிந்தது. “என் பொண்ணு கொலைக்குத்தம் பண்ண மாறி ஓடி ஒளியணும், கொழந்தைனு கூடப் பாக்காம இப்படி பண்ணவன் இதே ஊர்ல நல்லவன் மாறி வாழணுமா? இப்பவே இப்படி பண்ணவன், இன்னும் பணம், பதவிலாம் வந்தா இன்னும் என்னலாம் பண்ணுவானோ. நான் ஸ்டேஷனுக்கு போன் பண்றேன். போக்சோல கேஸ் கொடுப்போம்.” “அவனைச் சும்மா விட முடியாதுன்னா நம்ம பசங்க நாலு பேர வச்சு கைய காலை உடைச்சுரலாம். அவன் வாழ்க்கை முழுக்க நடக்கவே முடியாம ஆக்குனா, எப்படி போலீஸ் ஆவான்? உன் போலீஸ் வேலைலாம் ஸ்டேஷனோட வச்சுக்க. புள்ள வாழ்க்கையைக் கெடுக்காத. என்ன மாப்பிளை பாத்துட்ருக்கீங்க? சொல்லுங்க.” நடராஜனிடம் இருந்த கொந்தளிப்பு கதிரேசனிடம் இல்லை. “கவி சொல்றது தான் சரி மச்சான். நான் என் பொண்ண பாக்காம என்னென்னவோ யோசிச்சு தடுமாறிட்டேன். என் பொண்ண ஓடி ஒளிய சொன்னா, அவ எப்படி அவ வாழ்க்கையை தைரியமா சந்திப்பா? கவிதா சொன்னது தான் சரி. இவ்வளவு நாள் அவளை உலகம் தெரியாம வளத்துட்டோம். இனிமே தைரியமா வளக்கணும். ஆனா இனிமே யாருக்கும் இப்படி பண்ண தைரியம் வரக் கூடாது. உள்ள போய்க் கொஞ்சம் பாப்பாவைக் கிளம்ப சொல்லுங்க.” கணவனும் மனைவியும் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தனர். மெதுவாக மனைவியின் அருகே நெருங்கி அமர்ந்த கதிரேசன், அவரைத் தன் தோளில் சாய்த்து கொண்டு, முதுகை ஆறுதலாகத் தட்டி கொடுத்தார். திடீரென வெடித்த அழுகையை அடக்கத் தெரியாமல், கணவனின் தோளில் முகம்புதைத்து கண்ணீர்விட்டார் கவிதா. கதிரேசனுக்கும் கண்ணீர் மடை திறந்தது. தங்கள் பிள்ளையைக் கவனமாக வளர்க்கவில்லையே என்ற மறுகலும், தாங்கள் எடுத்த முடிவு சரி தானா என்ற தடுமாற்றமும், இனி தங்கள் பெண்ணின் வாழ்க்கை என்னவாகுமோ என்ற பயமும் அந்தப் பெற்றோரை அலைக்கழித்தது. தாங்கள் நல்ல பெற்றோராக இல்லாததால் தான் இந்த நிலையோ என்ற எண்ணத்தை அவர்களால் உதற முடியவில்லை. அறையிலிருந்து மற்றவர்கள் வெளியே வரும் அரவத்தில் தங்களை சரி செய்து கொண்டு, தங்கள் மகளைத் தாங்கத் தயாராகினர். தங்கள் கலக்கத்தை பார்த்தால், மகள் வருந்துவாளே!

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.