logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

சாய் மீரா

சிறுகதை வரிசை எண் # 90


# யார் பொருட்டு நடந்தது… தாளிடப்படாமலே கிடந்த வீட்டின் கதவை சிறு சலிப்போடு முழுமையாக திறந்தவாறே நீலா வீட்டின் உள்ளே நுழைந்தாள். வீட்டின் வாசலில் அழகான மரக்கட்டையில் செதுக்கிய பெயர்பலகையில் " டாக்டர். பாஸ்கர். எம்.பி.பி.எஸ்., எம்.டி., (குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்) திரு. சிவா . பி.எஸ்.சி., அக்ரி (தாவரங்களின் மருத்துவர்)" என கைப்படையாய் பெயிண்ட் கொண்டு எழுதி இருந்தது. நுழைந்ததும் அவள் யாரையோ தேடுவது போல் எல்லா இடங்களுக்கும் சென்று திரும்பியவள் மொட்டை மாடிக்குச் சென்றாள். அவள் நினைத்தது போலவே பாஸ்கர் அருகில் இருந்த தொட்டி செடியொன்றை வெறித்துப் பார்த்தபடி இருந்தார். புலர்காலை மௌனத்தை கலைத்தபடி நீலா பேசினாள்… " ஐயா, இப்பிடியே இருந்தா எப்பிடி? மூனு நாளு ஆவுது நீங்க சரியா தூங்கல, சரியா சாப்பிடல, இப்பிடியே இருந்துட்டா போன சிவா தம்பி வந்துடவா போகுது. நீங்க மொதல்ல கிளம்பி ஆஸ்பத்திரிக்கு போங்க அங்க போனாலாச்சும் நாலு குழந்தைங்கள பாத்து பேசி ஊசி போட மருந்து குடுக்க னு இருந்தா கொஞ்சம் மனசு ஆறுதலா இருக்குமில்ல?" பாஸ்கரனிடத்தில் எந்த சலனமும் இல்லை. கொஞ்சம் அழுத்தமான குரலில் நீலா கத்தினாள். " என்னதா உத்தேசம் உங்களுக்கு?" பாஸ்கர் தலை திருப்பாது பேசினார்… " நீலா இந்த செண்பகம் பூத்திருச்சு பாரு. இது எப்போ பூக்கும் னு காத்துகிட்டு இருந்தான். இதுல வெட்டுக்கிளி கடிக்குதுனு புகையிலையா கட்டித் தொங்கவிட்டான். செண்பகம் பீடி வாசமா பூக்கப்போவுதுடானு சொன்னே. ஆனா பாரு. செண்பகம் அது வாசத்துல தான் பூத்திருக்கு, பாக்க அவனில்லையே இருந்திருந்தா இன்னேரம் தூங்கிட்டிருக்குற என் மூக்குல கொண்டுவந்து ஒத்தி ஒத்தி வாசம் காமிச்சே வம்பு செய்வான்ல…" என்றார் நீர் பெருகிய விழிகளோடு. நீலா பெருகிய கண்ணீரை விழுங்கியவாறே " போனவன பத்திப் பேசியே இருக்குற எங்கள சாகடிக்காதீங்க, எழுந்து வாங்க " என வம்படியாய் இழுத்துப் போனாள். சாப்பாட்டு மேசையில் நீலா, பாஸ்கர் முன் இருந்த தட்டில் இட்டலி களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். பாஸ்கர் " இந்த மாவுல நாலஞ்சு சங்கு பூவ பறிச்சு போட சொல்லிருப்பான்ல இந்நேரம்" என பேச்சைத் துவங்க… நீலா படக்கெனப் பேசினாள் " ஐயா, நீங்க எத்தன தடவ சொல்லிருக்கீங்க நீயும் எனக்கு மகதான்னு. அப்போ உங்க மக சொல்லுறே… இனி சிவா தம்பியப் பத்தி பேசக் கூடாது, பாத்துக்கோங்க…" என அழுகை பொங்கப் பொங்க பேசினாள். அவள் முகம் பார்த்த பாஸ்கரோ " நா என்ன செய்யிறது சொல்லு, உமா என்ன விட்டுட்டு போனப்ப சிவா ஏன் என் வாழ்க்கைக்குள்ள வரணும்? 12வயசுப் பயல நான் ஏன் வளக்கணும்? இந்த வீட்ட, என்னைய எல்லாத்தையும் பச்சை பசேல்னு மாத்திப்புட்டான்… அவனோட இலக்கியப் பேச்சு என் காதுக்குள்ளயே இருக்குது நீலா… நீ இங்க வேலைக்கு சேந்து ஆறு வருசம் இருக்குமா? உன்னாலயே தாங்க முடியாம அங்க இங்க நின்னு அழுவுற. நான் என்ன செய்ய. கண்ணீரே எனக்கு வரக்கூடாதுனு சத்தியம் வாங்கிருக்கான். இப்போ நா அழறதா வேண்டாமா னு நிக்குறேன்…" நீலா… " மனசு விட்டு அழுதிடுங்க ஐயா… தயவு செஞ்சு சொல்லுறேன் அழுதுருங்க… நாலு நாளா உங்க மொகத்த என்னால பாக்க முடியலிங்க ஐயா… அழுது தீர்த்துடுங்க" என்று சொல்லியபடியே கோ வென அழத்துவங்கிவிட்டாள் நீலா… அவள் தலைக்கு பின்புறமாய் சிவா பட்டதாரியான அன்று எடுக்கப்பட்ட போட்டோவில் பாஸ்கர் தலையில் கருப்புத்தொப்பியுடன் கம்பீரமான சிரிப்புடன் நின்று கொண்டிருந்தார். அவர் தோள் மீது சாய்ந்தபடி கழுத்தைச் சுற்றி கை கோர்த்து நின்றான் சிவா. அவன் படத்தை பார்த்தபடி பாஸ்கர் புலம்பினார்… "சிவா, வந்துடுடா … நான் என்ன டா செய்வே ? இங்க இருக்க செடிகளுக்கெல்லா நான் என்னடா சொல்லுவே… எல்லாத்துக்கும் உயிரு இருக்குதுப்பா…னு உக்காந்து உக்காந்து பேசுவியே… உன்னத் தேடி குருவிங்கள்ளலாம் வந்து வந்து போகுதுங்க மொட்ட மாடில அதுங்களுக்கு யாரு தீணி வைப்பா?... ஐயோ.. எம்புள்ள ஒரு சைக்கிள் கூட கேட்டதில்லையே எங்கிட்ட… நானா வாங்கித் தந்த வண்டியுங்கூட என்னைய எங்காவது கூட்டிட்டு போவனும்னா தான எடுப்ப… ஏன்டா இப்பிடி என்ன விட்டுட்டுப் போன…" எனும் போது வாசலில் ஒரு இருசக்கர வாகனம் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய வாலிபன் வீட்டின் உள்ளே வந்து பாஸ்கரைப் பார்த்து… " அப்பா ஸ்டேஷன்ல இருந்து இன்ஸ்பெக்டர் பேசினாரு… அந்த பைக்காரன் மேல நம்ம சைடுல இருந்து ஒரு கம்பிளெயின்ட் குடுக்க சொல்லுறாங்க ப்பா, நீங்க வந்தீங்கன்னா குடுத்திட்டு வந்திடலாம். அப்பறோம் நம்ம டியூசன் சென்டர் பசங்க எல்லாம் சிவாக்கு நினைவஞ்சலி செலுத்தனும் னு கேட்டுட்டே இருக்காங்க நீங்க வந்தா தான் டியூசன் சென்டர் திறக்க முடியும், என்னப்பா செய்யட்டும்? சொன்னீங்கன்னா நான், அபி, பிரபா, தினேஷ் எல்லாருக்கும் சொல்லிடுவேன். பரிட்சை நெருங்குற நேரம் ப்பா" எனச் சொல்லிக் கொண்டிருந்த போது பாஸ்கருக்கு பின் புறமாக இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் செய்திகள் வாசித்துக் கொண்டிருந்த பெண்ணின் குரல் ஒலித்தது… " வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே நிறைமாத கர்ப்பிணி பெண் பலி… இருசக்கர வாகனத்தில் வந்த பத்தொன்பது வயது நிரம்பிய கல்லூரி மாணவன் போதையில் இருந்ததாகத் தகவல்" பாஸ்கர் ஆவேசம் வந்தவர் போல் படு கோவமாகத் திரும்பியபடி " வெண்ணை மகனுக, இஷ்ட மயித்துக்கு வண்டிய வாங்கிக் குடுத்திடுறானுக… மகனுகளுக்கு… அந்த நாயுக இருக்குற எல்லாத்தையும் சாவடிக்குதுக…வாடா சக்தி போவோம். கம்பிளெயிண்ட் குடுப்பேன் அவன் மேல இல்ல… அவனுக்கு அத வாங்கிக்குடுத்த அப்பன் மேலயும் ஆத்தா மேலயும்… விடமாட்டேன் லைசென்ஸ் இல்லாத நாயி… அப்பன் பேருல வண்டி எடுத்து ரைடு போகச்சொல்லுதோ? எம்புள்ளய கொண்ணுட்டானுக… விடமாட்டேன். நம்ம டியூசன் பசங்க எவனும் இனி பைக் ல வரக்கூடாதுனு சொல்லிடு, எவனையாச்சும் பைக்கோட பாத்தேன்… அவனுக அப்பனாத்தா மேலயும் கேஸ் போடுவேன்" என்றபடி வேகமாக சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினார். வீட்டு வாசலில் பாதி நெளிந்து உடைந்த நிலையில் சைக்கிள் ஒன்று கிடந்தது. சாய் மீரா.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • Anitha babu Avatar
    Anitha babu - 2 months ago
    நல்ல கதை கரு அருமையான ப்ளோ👏🏻👏🏻👏🏻 பரிசு பெற வாழ்த்துக்கள் தங்கையே 💖💖