logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

ரா.ஜெயச்சந்திரன்

சிறுகதை வரிசை எண் # 88


தமிழும் அறமும்! "தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!" என்ற பாவேந்தர் பாரதிதாசனின் முழக்கத்தை, தம் வாழ்க்கையின் வேதவாக்காகக் கொண்டு வாழ்பவர், திரு நிலவன்.படிப்பில் படுசுட்டி, தமிழில் படுகெட்டி! படித்த பொறியியல் பட்டத்தைப் பெட்டியில் பூட்டிவிட்டு, பிடித்த தமிழில் வாய்ப்புகள் தேடினார்; நிறுவனங்கள் பட்டத்தையும், பட்டறிவையும் சுட்டிக்காட்டித் தட்டிக் கழித்தன. "கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து," என்ற திருக்குறளுக்கு ஏற்ப, நாளிதழ்களுக்கும் போட்டிகளுக்கும் எழுதி எழுதித் தன் தமிழை மெருகேற்றியவாறே, அவர் தமிழ்ப்பணியில் காலூன்றக் காத்திருந்தார். அப்போதுதான், சிங்கப்பூரில் கொடிகட்டிப் பறக்கும் ‘அறம் தமிழ்த் துணைப்பாட மையம்’ ஒரு விறுவிறுப்பான நேர்காணலை நடத்தியது. அது, வெளிநாட்டில் அமையவிருக்கும் அம்மையத்திற்குத் தகுதிவாய்ந்த தமிழ் ஆசிரியரைத் தேர்ந்தெடுக்கும் தேடல்! அரிய வாய்ப்பு என்பதால், சிங்கப்பூரர்களும், நிரந்தரவாசிகளும், விவரம் தெரியாமல் வெளிநாட்டு ஊழியர்களும் திருவிழாபோல் குவிந்தனர். பேச்சு, எழுத்து, படைப்பாற்றல் மற்றும் ஒழுக்கத்தைப் பரிசோதிக்க, பலகட்ட வடிகட்டல்! வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த நிலவனுக்கு நான்காம் இடமே! தேர்வானவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பும், அனைத்து வேலைகளும் துரிதகதியில் நடந்தன. மறுநாள், அதிகாலை அவர்களுக்கு விமானம். கடைசி நேரத்தில் ஒரு முட்டுக்கட்டை! தேர்வான ஓர் இல்லத்தரசி, குடும்பத்தைப் பிரிந்து, வெளிநாடு செல்ல இயலாத சூழ்நிலை. என்ன செய்வதென்று தெரியாமல், அலுவலகமே விழிபிதுங்கி நின்றது!. "பதறாத காரியம் சிதறாது," என்ற பழமொழிக்கு ஏற்ப சிந்தித்த அந்நிறுவனத்தின் இயக்குனர், அந்த வாய்ப்பை திரு நிலவனுக்கு அளிக்க முடிவெடுத்தார். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்தன. வேலை நியமனக் கடிதம், விமானப் பயணச்சீட்டு, செலவுக்கு அந்நாட்டுப் பணம் போன்ற முக்கிய ஆவணங்கள் அடங்கிய கடிதம் இரவு ஒன்பது மணிக்கு, என் கையில்! நிலவன் உறங்குவதற்குள், அவர் கையில் ஒப்படைக்க, அறக்கப்பறக்க பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். அங்கே, பிரச்சனை ஒரு முதியவர் வடிவத்தில் வந்தது. நடை தளர்ந்தவர், பேருந்திலிருந்து இறங்கியபோது, பேருந்து நிறுத்த மேடையில் தடுமாறிக் குப்புற விழுந்ததில், அவர் முகம் முழுக்க காயங்கள்! பேருந்தில் உள்ள நாங்கள் எல்லோரும், அலறியடித்து ஓடி, அவரைத் தூக்கி, அவசர சிகிச்சை ஊர்தியில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். திரும்பிவந்து பேருந்தில் பார்த்தபோது, எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. திரு நிலவனின் கனவை நனவாக்கும் கடிதம் இருந்த, என் விலை உயர்ந்த தோற்பையை யாரோ களவாடி விட்டார்கள். ஒரு கணம், சிலைபோல் விறைத்து நின்றேன். என்ன செய்வது? யாரிடம் போய்க் கேட்பது, என்று ஒன்றுமே புரியவில்லை. பேருந்து ஓட்டுநரிடம் முறையிட்டபோது, வேண்டுமென்றால் பயணிகள் குறைகேட்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்கலாம், என்று அப்பாவியாய்ப் பதிலளித்தார். மணிமுள் நிற்காமல் கடகடவென விரைகிறது. வேறுவழியின்றி, நிறுவனத்தின் இயக்குநரிடமே முட்டிப் பார்த்தேன்! அவரோ, சிறிதும் சலனமின்றி, "நாளைமுதல் நீங்களும் திரு நிலவனுடன் சேர்ந்து, பொதுச் சேவையையே தொடர மனமார்ந்த வாழ்த்துகள்", என்று கைத்தொலைபேசியோடு எங்கள் வாழ்க்கையையும் துண்டித்தார். "ஓர் உயிர்க்கு நல்லது செய்ததால், எம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை ஏற்புடையதா?," என்று என்னை நானே நொந்துக்கொண்டேன். பிறகு, ஈவிரக்கம் அற்ற மனிதர்களே இவ்வுலகில் ராஜவாழ்வு வாழும்போது, நல்லவர்கள் வாழ வழியில்லாமலாப் போகும்? என்ற மனத்தெளிவுடன், வீட்டிற்குப் போனேன். என் முடிவை ஆமோதிப்பதுபோல், சாரல்மழை பெய்யத் தொடங்கியது. -----------------------------------------------------------------------------------------------------------------

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.