Sudha Thirunarayanan
சிறுகதை வரிசை எண்
# 85
ஓர் அழகான மாற்றம்
பொன்மணிக்கு பிடிக்காத விஷயங்கள் இரண்டு: பொங்கல், கூச்சல். ஆனால் இந்த இரண்டுமே அவள் வாழ்க்கையில் இன்றியமையாததாக ஆகி விட்டிருந்தது வருடா வருடம் பொங்கல் திருநாளுக்கு பொன்னத்தூர் கிராமத்திற்கு போயாக வேண்டும்.. மிலிட்டரி அப்பாவின் ரூல். அதை மீறவே முடியாது. வருடம் முழுவதும் விரைப்பான யூனிபார்ம் அணிந்து கொண்டு தேச சேவை செய்வதால் வருட ஆரம்பத்தில் குதூகலமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புவார்.
பொன்மணியின் தந்தை கதிர்வேலும் தாய் காமாட்சியும் இந்த பொங்கல் திருநாளுக்காகவே வருடம் முழுவதும் காத்துக் கொண்டிருப்பார்கள். பொன்னத்தூர் கிராமம் ஓர் அழகிய சிற்றூர்.
அங்கு பொங்கல் திருவிழாவின் கோலாகலம் இன்று வரை குறையவில்லை.
நிலத்தில் விவசாயம் செய்பவர்களும் தான் பொன்னத்தூர் கிராமத்தில் தற்போது வசித்து வந்தனர். அதில் கதிர்வேலின் உறவினர்கள் தான் அதிகம். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் அவர்கள் யாருமே கிராமத்தை விட்டு வெளியேறவில்லை. கதிர்வேல் ஒருவர்தான் தப்பித்தவறி இளவயதில் ஏதோ ஒரு வேகத்தில் போய் பட்டாளத்தில் சேர்ந்து விட்டார். கதிர்வேலின் தந்தை பொன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். அதனால் தான் காமாட்சிக்கும் தன் கிராமத்து திருவிழாக்களில் அவ்வளவு ஆர்வம். கிராமத்தில் இருக்கும் தன் உறவினர்களை ஒருநாளும் மறந்ததில்லை. கதிர்வேலின் மகள் பொன்மணியும் வடக்கே பிறந்து வளர்ந்தாள்.
கதிர்வேலுவும் காமாட்சியும் குழந்தையுடன் பொன்னத்தூர் கிராமத்திற்கு பொங்கல் திருவிழாவிற்கு வருகை தர மறக்கமாட்டார்கள். சிறுமியாக இருந்தவரை பொன்மணியும் கிராமத்துக்கு செல்வதை மிகவும் குதூகலத்துடன் அனுபவித்தாள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு போரடிக்க ஆரம்பித்தது. பொன் மணியின் விருப்பங்களும் சுவையும் மாறத் தொடங்கின. ஆங்கில வழிக் கல்வியும் நவநாகரீகம் அவளை கிராமத்து வாழ்க்கையில் ஒரு சலிப்பை பார்க்க தூண்டியது. பட்டணத்து நாகரீகத்தின் கவர்ச்சியே அவளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. வெள்ளந்தியாய் வெகுளியாய் பழகும் கிராமத்து மக்கள் பொன்மணிக்கு மட்டும் அறிவற்றவர்கள் போல் தோன்றினர். "ஸ்டுப்பிட் வில்லேஜ் பீப்பிள் " என்று அவள் மனதில் தேவையற்ற எண்ணம் குடிபுகுந்து இருந்தது.
"வா புள்ள, போ புள்ள, அயித்த மச்சான் " என்று கிராமத்து மக்கள் பேசுவதும் பொன்மணிக்கு துளிக்கூட பிடிக்கவில்லை. ஆனால் தந்தையை ஒரு நாளும் மீற முடியாது.
தை மாதம் என்றால் பொங்கல் திருவிழா தான், பொங்கல் திருவிழா என்றால் பொன்னத்தூர் கிராமம் தான். இந்தத் திட்டத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் அப்பா, சரியான டெரர், அவருடைய தாட்டியான கன்னங்கரேலென்ற உருவமும், முறுக்கு மீசையும் மிலிட்டரி சீருடையும் பார்ப்பவர்களை மிரளச் செய்யும். கதிர்வேலின் முரட்டு விழி பார்வைக்கு ஒரு கிராமமே அடங்கிவிடும் என்னும்போது பொன்மணி எம்மாத்திரம்.
இத்தனைக்கும் மகள் பெண்மணியை அவர் ஒருமுறை கூட ஒரு வார்த்தை கடிந்து சொன்னதில்லை. ஒரே மகள் என்று ரொம்ப செல்லமும் கொடுத்ததில்லை. ஆனால் அவள் விருப்பங்களுக்கும் குறுக்கே நின்றதில்லை. பொன்மணி தான் விரும்பிய கல்வியை படித்தாள். ஜர்னலிஸம், பத்திரிகை துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற அவா அவளுக்குள் மிகச் சிறு வயதிலிருந்தே வேறூன்றி இருந்தது. பொன்னத்தூர் கிராமத்தில் அவளுடைய அறிவுக்கு தீனி இருக்கலாம் அல்லது கிடைக்கலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லாததால் அங்கு போவதையே அவள் விரும்பவில்லை. பொன்னத்தூர் கிராமம் எவ்வளவு அழகாக இருந்தாலும் எழில் கொஞ்சினாலும் பொன்மணியை பொறுத்தவரை அது ஒரு கச்சடா குப்பை. தன் நண்பர் நண்பிகளிடம் அப்படித்தான் அவள் சொல்லி வைத்து இருந்தாள்.
அதனால் பொன்மணியின் தோழர்களும் தோழிகளும் அவள் பொன்னத்தூர் போகப் போகிறாள் என்றாலே கிண்டலும் கலாட்டாவும் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
'வருடாவருடம் நடக்கும் இந்தக் 'கொடுமை'யில் இருந்து எப்படி விடுபடுவது என்று தான் அவளுக்கு தெரியவில்லை. கிராமத்தில் அழகுக்கும் அமைதிக்கும் எவ்வளவு பேர் ஏங்குகிறார்கள் என்பது பொன்மணிக்கு தெரிய வாய்ப்பில்லை. கிராமம் என்றாலே போர் என்ற எண்ணம் பொன்மணியின் மனதில் ஆழமாக பதிந்து இருந்ததே காரணம்.
எதிரியின் நாடித் துடிப்பை நன்கு அறிந்த கதிர்வேலுவிற்கு மகளின் மன ஓட்டமா புரியாது? இருந்தாலும் புரிந்ததை புரியாதது போல் காட்டிக் கொள்வதில் வல்லவர் அவர். மனைவி காமாட்சியிடமும் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி கூறி வைத்திருந்தார். நிச்சயம் ஒரு நாள் பொன்மணியின் மனம் மாறும், கிராமத்து வாழ்க்கையையும் ரசிக்க தொடங்குவாள், என்று திண்ணமாக அவர் நம்பினார். புது வருடத்தின் தைப்பொங்கல் திருநாள் நெருங்கிக்கொண்டிருந்தது.
பொன்மணி மட்டும் எரிச்சலின் உச்சக்கட்டத்தில் இருந்தாள். இப்பொழுது அவள் சிறுமி அல்ல. எழில் ஓவியமாய் வளர்ந்து நிற்கும் நவநாகரீக யுவதி. ஹிந்தியும் ஆங்கிலமும் அவள் நுனி நாக்கில் விளையாடியது. இன்னும் பஞ்சாபி குஜராத்தி போன்ற மொழிகளையும் கற்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தாள் அவள். பத்திரிகை இயல் படிப்பிற்கு பலமொழிகள் கற்பதும் பேசுவதும் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்பினாள் அவள். அது உண்மைதான். பலதரப்பட்ட மக்களை பார்ப்பதும் செய்திகளை சேகரிப்பதும் படிப்பின் ஒரு பகுதியாக விளங்கியதால் பல மொழிகளை கற்பதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தாள் பொன்மணி.
தந்தை தன்னை துளிக்கூட புரிந்துகொள்ளவே இல்லை என்றே நினைத்துக் கொண்டிருந்தாள் பொன்மணி.
ஊடகத்துறையின் நுணுக்கங்களையும் ஆனால் அதேசமயம் அதில் உள்ள ஆபத்துக்களையும் நன்றாக அறிந்தவர் தான் கதிர்வேல். மகள் பொன்மணியின் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் அவர்.
பட்டத்தின் நூலை விட்டுப் பிடிப்பது போல் பொன்மணியை அவள் போக்கில் விட்டாலும் அவளைத் தகுந்த முறையில் கண்காணித்துக் கொண்டும் இருந்தார் கதிர்வேல். ஒரே மகள் அல்லவா !? பொன்மணி அவர் கண்ணின் மணி. அவருடைய இதய தொட்டிலில் ஆடிக்கொண்டே இருக்கும் செல்ல மகள் அவள். காமாட்சியும் தன் கணவனின் மன குறிப்பை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்வாள்.
"எல்லாம் ரெடி பண்ணிட்டியா பொன்னுமணி ?" என்று மகளை குறுகுறுப்புடன் பார்த்துக்கொண்டே ஆர்வத்துடனும் வினவினார்.
"பண்ணிட்டேன் டாடி" என்று உற்சாகமே இல்லாமல் பதிலுரைத்தாள் பொன்மணி.
பொன்மணியின் உற்சாகமின்மை யை கண்டு கொள்ளாதவாறு மனைவியிடம் பேச தொடங்கினார் கதிர்வேல். "பேக்கரில மூணு கிலோ பிஸ்கட் ஆர்டர் கொடுத்து இருந்தோமே, வந்துடுச்சா காமாக்ஷி? " என்று கேட்டார்.
"நேத்தே கொடுத்துட்டாங்க, எல்லாத்தையும் நீட்டா பேக் பண்ணிட்டேன். "
"சரி சொந்தகாரங்க எல்லாத்துக்கும் துணிமணி எடுத்தோமே அதெல்லாம் பேக் பண்ணியாச்சா?
"எல்லாம் ரெடிங்க, மாமா " காமாட்சி குதுகலத்துடன் ஒரு சிறுமியை போல் பதில் கூறினாள். வருடாவருடம் கிராமத்திற்கு சென்றாலும் ஒவ்வொரு முறையும் முதல் முறை செல்வது போல் ஆர்வத்துடன் கிளம்புவாள் காமாட்சி.
இதுதான் முதல் கோபம் பொன் மணிக்கு. காமாட்சி தன் கணவரை மாமா என்று அழைப்பதும் வாங்க போங்க என்று மரியாதையுடன் பேசுவதும் விளிப்பதும் துளி கூட பிடிக்கவில்லை அவளுக்கு. அவளுடைய தோழிகளின் வீட்டில் 50 வயது பெண்மணிகள் கூட கணவரை பெயர் சொல்லி அழைத்து ஒருமையில் தான் பேசிக்கொண்டிருந்தனர். ஹிந்தியில் அது பாந்தமாக இருந்தது. மேலும் மனைவி எந்தப் பெயரால் தன் கணவனை அழைக்கிறாளோ அந்தப் பெயரால் மற்றவர்கள் அவரை அழைக்க மாட்டார்கள் இது புரியவில்லை பொன்மணிக்கு. நிறைய வேண்டாத எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வைத்திருந்தாள் பொன்மணி
பொன்னத்தூர் கிராமத்திற்கு போனாலும் அங்குள்ளவர்கள் அத்தே, மாமா, மயினி, சித்தப்பு, அப்பத்தா, அம்மாச்சி போன்ற உறவுமுறை சொற்களில் எல்லாம் எல்லோரையும் அழைத்து பேசுவது அவளுக்கு மிகவும் அநாகரிகமாக தோன்றியது. "ஆன்ட்டி அங்கிள்" இந்த இரண்டு வார்த்தைகள் போதாதா அழைப்பதற்கு என்று நினைப்பாள். பொன்மணி இப்படி எல்லாம் பேசுவதை கேட்டு மனதுக்குள் சிரித்துக் கொள்வார் கதிர்வேல்.
"எல்லாம் சகவாச தோஷம்" என்று எண்ணிக் கொள்வார்.
பொன்மணியின் அடுத்த கோபம் பொங்கல் மீது. பொங்கலும் ஒரு உணவா என்பது அவள் கேள்வி. சர்க்கரைப் பொங்கல் வெண்பொங்கல் இரண்டுமே பேத்தல் என்ற எண்ணம் பொன்மணிக்கு தீர்மானமாக இருந்தது. சர்க்கரைப் பொங்கலில் வெறும் அரிசி, நெய், வெல்லம், முந்திரிப்பருப்பு அவ்வளவுதானே? என்பாள் அவள் .
கார்போஹைட்ரேட், கொழுப்பு, சுகர் இதைத் தவிர வேறு என்ன இருக்கிறது என்பது அவள் வாதம்.
வெண்பொங்கல் மட்டும் என்ன வாழ்கிறது? கொஞ்சமே பாசிப்பருப்பு, மிளகு, சீரகம், நிறைய நெய் இவை தானே?
ஆனால் அதை செய்பவர்களின் கைப் பக்குவமும் உறவுகளை மதிக்கும் மனமும், அன்பும், பிரியமும், அக்கறையும் புரியவில்லை பொன்மணிக்கு. மேலும் வெண்பொங்கல் என்றாலும் அதனுடன் கூட பல காய்கறிகள் சேர்ந்த குழம்பும் தானே சேர்த்து சாப்பிடுகிறோம் என்று தாய் காமாட்சி சொன்னாலும் "ஆமாம் வெறும் புளி, கிழங்கு வகைகளை தானே தானாக போடுகிறீர்கள்? " என்று எதிர்வாதம் செய்வாள் பொன்மணி. அதனால் காமாட்சி கிராமத்துக்கு வந்தால் பெண்ணுடன் பேசுவதை குறைத்துக் கொண்டாள்.
இப்படிப்பட்ட கொழுப்புச்சத்து நிறைந்த பொங்கலை பானை நிறைய செய்து வைத்துக்கொண்டு சாமி கும்பிட்ட பின்னர் அத்தை மாமா சித்தப்பா பெரியப்பா இன்னும் நிறைய கிழம் கட்டைகள் எல்லோரும் சேர்ந்து கொண்டு இலையில் அள்ளி வைத்து நெய் ஒழுக சாப்பிடுவது கண்றாவியாக இருக்கும் பொன்மணிக்கு.
"பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்" என்ற கூச்சல் வேறு காதைப் பிளக்கும்.
"பொன்னுத்தாயி நீயும் எடுத்துக்க, சாப்பிடு, இந்தா" என்று மூக்குறிஞ்சி மாமா கைநிறைய பொங்கலை அள்ளி இவள் வாயில் ஊட்டி விட வரும் போது குமட்டிக் கொண்டு வரும் பொன்மணிக்கு. எப்போது பார்த்தாலும் மூக்கை உறிஞ்சிக் கொண்டே இருப்பதனால் முத்து மாமாவின் பெயர் மூக்குறிஞ்சி மாமா என்றே ஆகிவிட்டது.
பொன்மணிக்கு அவர் தன் மூக்கை துடைத்துவிட்டு அந்த கையாலேயே பொங்கலை கொடுக்கிறாரோ என்ற சந்தேகம் பாடாய்படுத்தும். யாரிடமும் சொல்லவும் முடியாது. முத்து மாமாவின் வயது 70. கர்ணனுக்கு இருந்த கவசமும் குண்டலமும் போல் இவருக்கும் கழுத்தில் மப்ளரும் முழுக்கை ஸ்வெட்டரும் இணைபிரியா அணிகலன்கள். ஆஸ்துமா நோயாளி.
அவர் பொன்னுத்தாயி என்று பொன்மணியை கூப்பிடுவது வேறு அவளுக்குப் பிடிக்கவில்லை. "என் பேரு பொன்மணி, கிழவியை கூப்பிடுற மாதிரி பொன்னுத்தாயி ன்னு கூப்பிட்டா எனக்கு பிடிக்கலை. எத்தனை வாட்டி சொல்லுறது?" என்று கடுகடுப்பு காட்டுவாள்.
"கிராமத்துக்கு வந்தாலே இப்படித்தான், மம்மியும் டாடியும் என்னை கண்டுக்கறதே இல்லை" என்று உள்ளுக்குள் குமைவாள். எப்போதடா இங்கிருந்து கிளம்புவோம் என்று தவித்துப் போவாள் பொன்மணி.
கிராமத்தில் செல்போன் டவரும் பாதி சமயம் கிடைக்காது. பிரெண்ட்ஸ்களுடன் நிறைய பேச வேண்டியிருக்கும் பொன்மணிக்கு. இம்முறையும் அதே கதை தான். பொன்மணிக்கு காலேஜ் ப்ராஜெக்ட் வொர்க் நிறைய இருந்தது. மக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கம் எவ்வளவு பேருக்கு இருக்கிறது என்பதை பற்றிய ஒரு சர்வே எடுக்க வேண்டி இருந்தது. வாசித்தல் வாழ்க்கைக்கு எவ்வளவு உபயோகமானது என்பதை பாமர மக்களுக்கு எடுத்து சொல்வதை ஒரு நோக்கமாக வைத்துக் கொண்டிருந்தால் பொன்மணி.
" நம்ம கிராமத்திலேயும் அதை நீ செய்யலாம் பொன்மணி" என்றாள் காமாட்சி .
"எல்லாரும் தான் நம்ம சொந்தகாரங்க நான் சொல்றதை எல்லாம் ஒருத்தரும் கேட்க மாட்டாங்க" என்று பதில் கூறினாள் பொன்மணி.
"அதுக்குத்தான் இந்த தடவை மட்டும் நான் வரல அப்படின்னு சொல்லி பார்த்தேன். நீங்க எங்க விட்டீங்க? " பொன்மணியின் குரலில் கோபம் தெறித்தது. காலேஜ் ப்ராஜெக்ட் வொர்க்கை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு கிராமத்து பிரயாணத்தை தவிர்க்க நினைத்திருந்தாள் பொன்மணி. ஆனால் கதிர்வேல் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்.
இவர்களைப் பார்த்ததும் சொந்தக்காரர்கள் எல்லோருக்கும் ஒரே குதூகலம். "வாங்க வாங்க வா பொன்னுமணி" என்று வாயார அழைத்தனர்.
"எலே , எப்பலே கல்யாண சாப்பாடு போட போறே? மிலிட்டரி மாப்பிள்ளையா? என்று மாமா விசாரித்தார்.
பொன்மணி பல்லைக் கடித்தாள்.
"நான் பிஎச்டி பண்ணனும் அப்புறம்தான் ஷாதி" என்றாள்.
"நம்ம சாதி பையனாவே பாருப்பா" என்றார் மாமா பதிலுக்கு.
எரிச்சல் மேலோங்கியது பொன்மணிக்கு.
"மம்மி டாடி எனக்கு தூக்கம் வருது ரெஸ்ட் எடுக்கணும்"" என்றாள் குரலில் கோபத்தை காட்டி.
"எதுக்கு அம்மி தாடி எல்லாம் சொல்லுது இந்த புள்ள" என்று அதிசயித்தாள் சொந்தக்கார கிழவி ஒருத்தி.
பொன்மணியின் அருகில் வந்து காவிப்பல் தெரிய சிரித்து அவள் கன்னத்தை பிடித்து கிள்ளினாள்.
அப்போது முண்டாசு கட்டிக்கொண்டு ஒரு இளைஞன் அங்கேயே வந்து "ஐயா மருந்து சாப்பிடுங்க" என்று மாமாவிடம் மருந்தை கையில் எடுத்துக் கொடுத்து தண்ணீரும் கொடுத்தான்.
"முத்தாயி போனப்புறம் இந்த தம்பி தான் என்னை நல்லா பார்த்துக்கிடுது. வேளாவேளைக்கு பார்த்து பார்த்து எனக்கு மருந்தை கொண்டு வந்து கொடுத்து சாப்பாடு என்ன சாப்பிடணும் எப்படி சாப்பிடணும்னு கரெக்ட்டா சொல்லும்" என்றவாறே மருந்தை விழுங்கினார் முத்து மாமா.
எக்ஸ்க்யூஸ் மீ" என்று அந்த இளைஞனுடன் பேச நெருங்கும்போது அமுதா பெரியம்மா பொன்மணியின் அருகில் வந்தாள். " வா உனக்கு பிடிச்ச வெஜிடபிள் சூப் வைத்திருக்கிறேன் என்று அன்புடன் பொன்மணியை அழைத்துப் போனாள்.
"ஹாய் பெரியம்மா இதெல்லாம் எப்ப கத்துக்கிட்டீங்க?" என்று வியப்புடன் கேட்டவாறே அவளை பின் தொடர்ந்தாள் பொன்மணி.
இம்முறை பொன்னத்தூர் கிராமம் பொன்மணிக்கு ஒரு புதிய அத்தியாயமாக திகழப் போகிறது. பொன்மணியின் மனதிலும் கலவையான உணர்ச்சிகள் தோன்றின முண்டாசு இளைஞனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு பெரியம்மாவுடன் சென்றாள் அவள்.
காலிஃப்ளவர், பேபிகார்ன் போன்ற காய்கறிகள் சேர்க்கப்பட்ட சூப் மிகச் சுவையாக இருந்தது. "எப்படி பெரியம்மா இவ்வளவு டேஸ்டியாய் செஞ்சி இருக்கீங்க இந்த காய் எல்லாம் கூட இங்கே கிராமத்தில் கிடைக்குதா? என்று ஆச்சரியமாகக் கேட்டாள் பொன்மணி.
"அந்த பிரகாஷ் தம்பி தான் இதெல்லாம் சொல்லிக் கொடுத்தது. பக்கத்து டவுனுக்கு போயி நல்ல காய்கறி எல்லாம் வாங்கிட்டு வரும். "
"ஆச்சரியமா இருக்கே "
ஆமாம் சமைக்கிற படிப்புதான் படிச்சிருக்குது அது"
"கேட்டரிங் படிச்சுட்டு இங்க என்ன பண்றாரு? இந்த ஊரை சேர்ந்தவரா? அவங்க அம்மா அப்பா எல்லாம் இங்க இருக்காங்களா?" கேள்வி மேல் கேள்வி கேட்டாள் பொன்மணி .
"இல்ல பொன்னுமணி இந்த தம்பி மட்டுமில்லை இன்னும் அஞ்சாறு பேர் இவங்க கூட இருக்காங்க எல்லாருமே வேற வேற படிப்பெல்லாம் படிச்சிருக்காங்க போல. சுத்தி இருக்குற மத்த கிராமங்களுக்கு எல்லாம் போய் ஏதோ சொல்லிக் கொடுக்கிறாங்களாம். என்னமோ ஏற்படுத்தறாங்களாமே. ஏதோ ஒரு வார்த்தை சொன்னாங்க" என்றாள் அமுதா பெரியம்மா.
" விழிப்புணர்வா? " அவேர்னஸ் கிரியேட் பண்றாங்க போல " என்றாள் பொன்மணி.
"ஆமா ஆமா அதேதான்" என்றாள் அமுதா பெரியம்மா.
பிரமித்து வியப்பின் எல்லைக்கே போய் விட்டாள் பொன்மணி. இளைஞர் குழு ஒன்று கிராமத்தில் சேவை புரிய வந்திருக்கிறது என்பதை நொடியில் புரிந்து கொண்டாள் பொன்மணி .
இவர்களில் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவளுக்குள் எழுந்தது. கிராமத்தையும் கிராமத்து மக்களையும் பற்றிய தன்னுடைய கண்ணோட்டம் தவறானது என்று லேசாக புரியத் தொடங்கியது பொன்மணிக்கு.
மறுநாள் காலை சீக்கிரமாகவே எழுந்து கொண்டாள் பொன்மணி. பொன்னத்தூர் வந்தால் வெளியில் வராமல் எப்போதும் அறையிலேயே அடைந்து கிடக்கும் மகள், இன்று அலங்கரித்துக்கொண்டு காலையிலேயே எழுந்து வந்ததைப் பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டனர் கதிர் வேலுவும் காமாட்சியும். மகளிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
"அப்பா நான் முத்து மாமாவை பார்த்து விட்டு வருகிறேன்" என்று பொன்மணி கூறியவுடன் அதிர்ச்சியில் இருவரும் மயக்கம் போட்டு விழாத குறை தான். மாமாவின் வீட்டை நோக்கி நடந்தாள் பொன்மணி.
"என்ன மாமா காலைல காபி குடிக்கிறீங்களா? உங்களுக்கு போட்டு தரலாம் என்று தான் சீக்கிரமா எழுந்து வந்தேன்" என்று கூறிய பொன்மணியை அதிசயமாக பார்த்தார் முத்து மாமா.
"காப்பி வெச்சு கொடு புள்ள, உன் கையால குடிச்சு எம்புட்டு நாள் ஆகுது? "
"யாரு தினம் காலைல காபி வைத்துக் கொடுப்பாங்க?" என்று கேட்டுக்கொண்டே கேஸ் அடுப்பை பற்ற வைத்தாள்.
"ராக்காயி வந்து வச்சுக் கொடுக்கும் சில நாள், இல்லாட்டி டீ கடையில போய் குடிச்சிக்கிடுவேன், ஒவ்வொரு நாள் நானே போட்டு குடிச்சிடுவேன். ஆமா இன்னைக்கு என்ன வெள்ளன எழுந்திருச்சு வந்துட்ட?" என்று கேட்டார் முத்து மாமா.
"உங்களோட கொஞ்ச நேரம் பேசிட்டு போலாம்னு தான் வந்தேன் மாமா" என்றாள் பொன்மணி.
"படிப்ப முடிச்சிட்டாயாடா?" என்று மிகவும் வாஞ்சையுடன் வினவினார் முத்து மாமா .
"படிப்புக்கு முடிவேது மாமா? ஆராய்ச்சி படிப்பு படிக்கணும்னு
ஆசையாயிருக்கு மாமா "
"படிச்சுக்கிட்டே இருந்தா எப்ப கல்யாணம் கட்டுறது? "
"படிப்பில நான் இன்னும் நிறைய சாதிக்கணும் மாமா. உங்களுக்கு அதெல்லாம் புரியாது" என்றாள் பொன்மணி .
"ஆமா எழுபது வயசுக்கு எனக்கு ஒன்னும் புரியாது முளைச்சு மூணு இலை விடலை உனக்கு தான் எல்லாம் புரிஞ்சுதோ? " என்றார் மாமா கோபமாக.
"கோச்சுக்காதீங்க மாமா எனக்கு இப்ப கல்யாணத்துல இஷ்டம் இல்லை மாமா " அப்போது "அய்யா" என்ற குரல் வாசலில் கேட்டது. நேற்றுப் பார்த்த அதே முண்டாசு இளைஞன்.
"வாங்க" என்றாள் பொன்மணி அவனைப் பார்த்து.
" ஹலோ வணக்கம் என்றாள் மீண்டும்.
"ஹாய் நான் பிரகாஷ்" என்றான் அவன். "நைஸ் டு மீட் யு, நான் பொன்மணி ஜர்னலிசம் படிக்கிறேன், பொங்கல் திருவிழாவுக்காக டெல்லியிலிருந்து வந்திருக்கேன்" என்று கூறினாள் பொன்மணி.
"நீங்களும் இன்னும் அஞ்சாறு பேர் பிரண்ட்ஸ் இருக்கிறதா எங்க பெரியம்மா சொன்னாங்க. உங்க நேச்சர் ஆப் வொர்க் என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்று வினவினாள் பொன்மணி.
"யா ஷ்யூர், எங்க குரூப்ல நாங்க ஒரு இருபது பேர் இருக்கோம். இங்கே பொன்னத்தூருக்கும் சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் சர்வீஸ் பண்றதுக்கு ஆறு பேர் வந்து இருக்கிறோம். நான், ஹரி, காமேஷ், ரகு,, சிவா, பத்ரி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஃபேக்கல்டில மாஸ்டர்ஸ் டிகிரி வாங்கி இருக்கோம். கிராம மக்களுக்கு சுகாதாரம் மட்டுமில்லை உணவு பழக்கவழக்கங்கள் ஹெல்த்கேர் எல்லாத்தையுமே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி விடுகிறோம். கவனிக்கப்படாமல் இருக்கிற கோயிலில் சீரமைப்பு பணிகள் செய்வது, பள்ளிக்கூடத்தில் வாத்தியார் வரலேன்னா அதற்கு வேண்டியன செய்து டீச்சரை வரவழைப்பது, இப்படி எல்லாமே செய்கிறோம். பக்கத்து கிராமத்தில் ஸ்கூலில் டீச்சர் வராததினால் 2 வருஷமா அந்த ஊர் குழந்தைகள் படிக்கவே இல்லை என்று சொன்னாங்க. உடனடியாக அதற்கு ஒரு டீச்சர் நியமனம் செய்தோம். நாங்க எல்லாருமே ஐடி கம்பெனிகளில் பொறுப்பான வேலையில இருக்கிறவங்க தான். மாதாமாதம் லீவு போட்டுவிட்டு வந்து இந்த வேலைகளைச் செய்கிறோம் அதற்கு எங்க கம்பெனியும் ஒத்துழைப்பு தருது. எங்க குரூப்ல பெண்களும் இருக்காங்க. ஆனால் நாங்க அவங்களை களப்பணி செய்வதற்கு அதிகம் கூப்பிடுவது இல்லை. அவர்களாக விரும்பி வந்தால் தடுப்பதும் இல்லை. நீங்க ஜர்னலிஸம் படிப்பதாக சொன்னீங்க உங்க கருத்து என்னான்னு சொல்லுங்க? " மூச்சுவிடாமல் பேசி நிறுத்தினான் பிரகாஷ்.
"நீங்க ரொம்ப பெரிய சர்வீஸ் பண்றீங்க பிரகாஷ். கிராமத்தை பற்றிய என்னுடைய எண்ணங்களே வேற மாதிரி இருந்தது நகர வாழ்க்கை தான் பெஸ்ட் அப்படின்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா எந்திரத்தனமான நரக வாழ்க்கை அது அப்படின்னு புரிஞ்சு போச்சு இப்போ. சிடியை விட கிராமத்துக்கு தான் நம்முடைய சேவை இப்போது தேவை. எனக்கும் ஒரு ப்ராஜெக்ட் வொர்க் இருக்கு. வாசிப்பை என்கரேஜ் பண்ணனும். புத்தகங்களோட மகத்துவத்தை மக்களுக்கு எளிதாக புரிய வைக்கணும். புத்தகங்கள் படிக்க படிக்க, அதனால மனசு எவ்வளவு விசாலமாகிறது அப்படிங்கற கருத்தை மக்கள் அவர்களாகவே புரிஞ்சுக்கணும். நகரத்தில் படித்தவர்களுக்கு மத்தியில் இது ரொம்ப சுலபம். ஆனால் கிராம மக்களுக்கு தான் இது தேவை என்னுடைய பிராஜக்ட் வொர்க்க மிக நல்ல முறையில் சிறப்பாக செய்வதற்கு நீங்க ஒரு வழிகாட்டியாக அமைந்து விட்டீர்கள் பிரகாஷ்" என்று பொன்மணி நெகிழ்ச்சியுடன் கூறினாள்.
முத்து மாமா இருவர் பேசுவதையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். முன்னேறத் துடிக்கும் இந்த பெண்ணை, கிராம மக்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்க போகும் இந்த பெண்ணை, திருமணம் எனும் பந்தத்தில் இப்போதே ஆட்படுத்த கூடாது என்ற முடிவுக்கு வந்தார் அவர். ஒரு நல்ல சினேகமும் புரிதலும் பூத்தது அங்கே . பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டாள் பொன்மணி. அங்கே மகிழ்ச்சி வெள்ளம் பொங்கலுடன் பொங்கி வழிந்தது.
1951 சொற்கள்.
"ஓர் அழகான மாற்றம் " என்ற தலைப்பில் நான் எழுதி இருக்கும் இந்தக் கதை என் சொந்தக் கற்பனையே என்பதை உறுதியுடன் கூறுகிறேன். இந்தக் கதை இதுவரை எதிலும் வெளியானது இல்லை என்பதையும் உறுதியுடன் கூறுகிறேன்.
நன்றி.
சுதா திருநாராயணன்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்