முத்து (Maari Muthu)
சிறுகதை வரிசை எண்
# 84
கதை தலைப்பு: கரகோச கேள்வி
கதாசிரியர். : முத்து
ஊருக்கு வெளியே மெயின் ரோட்டின் மேல் பல ஏக்கர்ல கட்டப்பட்டிருந்த பிரம்மாண்ட கல்லூரி.
உள்ளே கூட்ட அரங்கில், தமிழ் துறை மாணவர்கள் பேனர் கட்டிக் கொண்டிருக்க.. வேறு கல்லூரியில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், தங்களுக்கான இருக்கைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்து கொண்டிருந்தனர். உடன் வந்து இருந்த பேராசிரியர்கள் மாணவர்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர்.
வெளியே ஏராளமான மாணவ மாணவிகள் வாசல் கதவின் இரண்டு பக்கவாட்டிலும் தங்கள் காலணிகளை வரிசையாக கழட்டி வைத்துவிட்டு சின்ன சின்ன குழுக்களாக அரங்கினுள் சென்று கொண்டிருந்தனர்.
அரங்கின் முற்றத்தில் மாணவிகள் சிலர் தாங்கள் போட்ட கோலத்திற்கு வர்ணங்கள் சேர்த்து கொண்டிருந்தனர். மிக அழகான கோலம். பாரதியார் பாரதியாரை சுற்றி தேசியக்கொடி என்று மிகவும் ரசனையுடன் இருந்தது. அதுவும் சிவப்பு கலரில் ‘நான் வீழ்வேன் என நினைத்தாயோ’ என்ற வாசகம் வேறு, கடந்து போகிற அனைவரையும் படித்துப் பார்க்க வைத்தது.
அந்தக் கோலத்தில் மயங்கிய ஒரு மாணவன். அதை வேடிக்கை பார்த்தபடியே அரங்கினுள் நுழைந்தான்.கோலம் போட்டுக் கொண்டிருந்த ஒரு மாணவியும் இந்த மாணவனை பார்த்துக்கொண்டு இருந்தார். இதனை கவனித்த அந்த கல்லூரி பேராசிரியர் “ஏய் இருடா! நீ இந்த காலேஜ் தான? அப்படியே.. பராக்கு பாத்துட்டு உள்ள போயிடறது, மத்த பசங்கலாம் எவ்வளவு ஒழுக்கமா செருப்பை கழட்டி போட்டுட்டு உள்ள போறாங்க? உங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் மண்டையில் ஏற மாட்டேங்குது ” என்று சொல்லவும் வேகமாக “சரிங்க மேம்” என்று சொல்லி செருப்பை கழட்டிவிட்டு உள்ளே சென்றான்”
வண்ணமிட்ட கோலத்தை மாணவிகள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பேராசிரியை "கோலம் போட்டாச்சுனா எல்லாம் உள்ள போங்கபா நேரமாயிருச்சு சீப் கெஸ்ட் வந்துருவாங்க.” என்று சொல்லவும். வெளியில் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் அவசரத்தில் ஒரே பக்கமாக தங்கள் காலணிகளை குண்டக்க மண்டக்க என விட்டுச் சென்று கொண்டிருந்தனர். அதை பார்த்த பேராசிரியை "பொம்பள புள்ளைங்க எல்லாம் வலது பக்கம் செருப்ப போடுங்கம்மா ஒவ்வொரு ஆளுக்கும் தனித்தனியா சொல்லனுமா?" என்று திட்டிக் கொண்டிருக்க. ஒரு கருப்பு நிற கார் வந்து நின்றது. அந்த இடம் சற்று பரபரப்பானது இரண்டு உதவி பேராசிரியர்கள் வேகமாக காரின் அருகில் வந்தனர். அதே வினாடிகளில் முக்கிய சிறப்பு விருந்தினரை வரவேற்க பேராசிரியர்களும் , சேலை கட்டிய ஐந்து மாணவிகளும் வாயிற் கதவின் அருகில் எதிர்பார்ப்போடு நின்று கொண்டிருந்தனர். வந்திருப்பது ஒரு பிரபலமான எழுத்தாளர். அவரைக் காணும் ஆவலில் அனைவரும் காரின் கதவை பார்த்துக் கொண்டிருந்தனர். காரின் கதவு திறக்கப்பட்டது. காரினுள் இருந்து கருப்பு கலர் சட்டை அணிந்த வெள்ளை நிற மனிதர் சிரித்த முகத்துடன் இறங்கினார். துணை பேராசிரியர்கள் வணக்கம் வைப்பதற்கு உள்ளாகவே எழுத்தாளர் வணக்கம் வைத்தார். மரியாதை மிகுந்த மனிதராக தென்பட்டார். துணை பேராசிரியர்களும் வணக்கம் வைத்து இன்முகத்துடன் வரவேற்றுச் சென்றனர். வரவேற்பிற்காக நின்றிருந்த ஐந்து மாணவிகளும் ஒரே நேரத்தில் கைகளைக் கூப்பி" வணக்கம் ஐயா" என்று சொல்லவும் பேராசிரியையும் "வணக்கம் ஐயா வாங்க" என்று கூறினார். எழுத்தாளர் மாணவிகளுக்கு ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு பேராசிரியருக்கும் ஒரு வணக்கத்தை வைத்தார். எழுத்தாளருடன் இன்னும் இரண்டு பேரும் வந்திருந்தனர் ஆனால் கண்டுகொள்ளும் அளவிற்கு அவர்கள் இன்னும் புகழ் பெறவில்லை. அதனால் இவர்களுக்கு அவர்கள் ஒட்டுண்ணிகள் போலத்தான் தெரிந்தார்கள். எழுத்தாளர் நேராக உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு சிறப்பு விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்ட முன் வரிசையில் அமர வைக்கப்பட்டார். அப்போது பேராசிரியையிடம் ஒரு இளம் பேராசிரியர் “மேடம் ஆரம்பிச்சுடலாமா” என்று கேட்க “ஆ.. ஆரம்பிக்கலாம்” என்று சொன்னதும், தமிழ்தாய் வாழ்த்து அறிவிக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்றனர், சிலர் திருதிருவன முழித்துக் கொண்டும், சிலர் கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டும், சிலர் தப்பு தப்பா உச்சரித்து கூட்டத்தோடு கூட்டமாய் முணங்கி கொண்டிருக்க தமிழ் தாய் வாழ்த்து நிறைவுற்றது.
தமிழ்த்துறைத் தலைவர் ஒலிவாங்கியை பிடித்து வரவேற்புரையை தொடங்கினார். அனைவருக்கும் வணக்கம் “புரியாத பிரியம் பிரியும் போது புரியும், குறை கண்டு நிறை காண்போம், இக்கால கதைகள், , சின்னதாய் ஒரு சலனம் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்” என்று அவரது எழுத்து பணி பற்றியும் அவருடனான பயணங்கள் பற்றியும் சிலாகித்து பேசி. முக்கிய சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் எழுத்தாளரை மேடைக்கு அழைத்தார். பலத்த கரகோஷத்துடன் எழுத்தாளர் பெருமிதத்தோடு மேடை ஏறி மாணவர்களுக்கு இரு கரம் கூப்பி வணக்கத்தை தெரிவித்தார். மேடையில் போடப்பட்டிருந்த ஐந்து இருக்கைகளில் அவருக்கென போடப்பட்டிருந்த நடு இருக்கையில் அமர்ந்து கொண்டார். மேலும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் மேடைக்கு வரிசையாக அழைக்க, மேடையில் போட்டிருந்த ஐந்து இருக்கைகளும் நிறைந்தது. தமிழ் துறை தலைவரும் விடைபெற்றார்.
நெறியாளரின் குரல் ஒலித்தது “தற்போது நம் முன் பேச வருபவர் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல ஆகச்சிறந்த சமூக செயற்பாட்டாளராகவும் தலைசிறந்த பேச்சாளராகவும் வலம் வருகிறார்.” என்று அவரது புகழுரைத்து எழுத்தாளரின் பெயரை உச்சரித்து, பேச வரும்படி பணித்தார். மீண்டும் பலத்த கரகோஷத்தோடு மாணவர்கள் ஆர்ப்பரிக்க.. இருக்கையில் இருந்து எழுந்து வந்த எழுத்தாளர் ஒலிவாங்கியை கையில் எடுத்து பேச ஆரம்பித்தார்.
“என் அன்பு மாணவச் செல்வங்களுக்கும், என் மாணவச் செல்வங்களை தலைசிறந்தவர்களாக உருவாக்கிட களப்பணி ஆற்றும் பேராசிரியர்களுக்கும், உதவி பேராசிரியர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் மற்றும் என்னோடு பயணிக்கும் சக தோழர்களுக்கும் என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஒடுக்கு முறை என்கிற தலைப்பில் நீங்கள் பேச வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். எனது பேச்சை துவங்குவதற்கு முன்னால் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன் மாணவர்கள் யார் வேண்டுமானாலும் அதற்கு பதில் சொல்லலாம்.” என்று சொன்னதும் மாணவர்கள் என்ன கேள்வி கேட்கப் போகிறார் என்று உன்னிப்பாக பார்த்தனர் “அடிப்படை உரிமையினா உங்களைப் பொறுத்த வரைக்கும் எது அடிப்படை உரிமை யாராவது இரண்டு பேர் சொல்லுங்க பாப்போம்” என்று மாணவர்களை பார்த்து கேட்டார் மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் யாரும் எழுந்து பதில் சொல்லவில்லை. “சும்மா தயங்காம சொல்லுங்க நீங்க தப்பாவே சொன்னாலும் பரவால்ல எந்திரிச்சு சொல்லுங்க” என்றார் அப்போதும் யாரும் எந்திரிக்கவில்லை. உடனே அவராக ஒரு மாணவியை பார்த்து “நீ சொல்லுப்பா” என்று நிர்பந்திக்க அந்தப் பெண் தயக்கத்துடன் எழுந்து “எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலங்கயா அடிப்படை உரிமைனா எதுல எந்த இடத்தில கேக்குறீங்க? அது தெரிஞ்சா கொஞ்சம் சொல்றதுக்கு ஈசியா இருக்குங்கய்யா” என்று சொல்லவும் சரி நீ உட்காருப்பா என்று சொல்லிவிட்டு ஒரு மாணவனை எழுந்திரிக்க சொன்னார் அவர் எழுந்திருக்க மறுக்க, தொடர்ந்து வற்புறுத்தி அந்த மாணவனை எழ வைத்தார். அந்த மாணவன் சற்று தடுமாற்றத்துடன் “வணக்கம் ஐயா பொதுவா கேட்டா எப்படி சொல்ல முடியும் ஐயா ஒவ்வொரு இடத்திலும் வேற வேற அடிப்படை உரிமைகள் இருக்குது ” என்று பதிலளித்தார். அந்த மாணவனை பார்த்து “சரி உட்காரு பா” என்று சொல்ல மாணவன் அமர்ந்தான். அடுத்து என்ன பேச போகிறார் என்று மாணவர்கள் பெரும்பாலானோர் ஆர்வமாக கவனித்தனர். எழுத்தாளர் தொடர்ந்தார் “அடிப்படை உரிமைனா என்ன என்று கேட்டதும் நீங்கள் திருப்பி என்னை கேள்வி கேட்டீர்கள் அல்லவா அந்த கேள்வி கேட்கும் உரிமையே மிகப்பெரிய அடிப்படை உரிமை தான்” என்று ஆரம்பித்து வரலாற்றுச் சம்பவங்கள் ஏராளமான வற்றை பட்டியலிட்டார். “ஒரு காலத்தில் உடன்கட்டை ஏறுதல் என்கிற ஒரு முறை இருந்தது கணவன் இறந்தவுடன் அவனோடு சேர்த்து அவன் மனைவியையும் உயிரோடு எரித்து விடுவார்கள். ஒரு பெண்ணாக பிறந்தவள் வாழும் உரிமை கூட இல்லாமல் இருந்தாள்.” என்று பேசிய எழுத்தாளர் மன்னர் காலத்தில் தொடங்கி பண்ணையார் காலம் தொட்டு இக்காலத்துக்கு வந்திருந்தார் . இவருடைய பேச்சுநடை மாணவர்களை கூர்மையாக கவனிக்க வைத்தது.
“அது மட்டும் இல்ல இன்னைக்கி கலர் கலரா ஷூ போடுறோம் விதவிதமா செருப்பு போடுறோம். வீட்டுக்குள்ள ஒரு செருப்பு வீட்டுக்கு வெளியில ஒரு செருப்பு. இந்த காலத்துல இதைத்தான் நீங்க பாத்து இருக்கீங்க.! ஆ..னால் ஒரு காலத்துல ஒடுக்கப்பட்டவர்கள், அதாவது அவங்க மொழியில சொல்லனும்னா கீழ் சாதியினர் யாரும் காலில் செருப்பு போடக்கூடாதுங்குற எழுதப்படாத சட்டம் எழுதப்பட்ட சட்டத்தை விட கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. மீறி செருப்பு போட்டு நடந்தா குத்தம் என்று சொல்லி. கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டாங்க அவமானப்படுத்தப்பட்டாங்க. அப்படி அடிபட்டு மிதிபட்டு வாங்குன உரிமை தான் இன்னைக்கு நாம சாதாரணமா பயன்படுத்துற செருப்பு. அதுமட்டுமில்லை முடி வெட்றவங்க முடிவெட்டுற தொழில் தான் பார்க்கணும். சாக்கடை அல்ரவங்க சாக்கடையதான் அல்லனும். அடிமையா விவசாயம் பாக்குறவங்க அடிமையா மட்டும் தான் இருக்கணும். தப்பி தவறி கூட பள்ளிக்கூடம் பக்கம் போயிறக்கூடாது மீறி போன அங்கேயும் சாதிய அடக்குமுறை தீண்டாமை.” என்று ஆக்ரோஷத்தின் உச்சத்திற்கே சென்ற எழுத்தாளர், ஆதிக்க சாதியினர் எதற்கெல்லாம் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர் எந்த உரிமையெல்லாம் நாம் இழந்திருந்தோம் நம்மை எதற்காகவெல்லாம் அடித்தார்கள். அடக்கினார்கள் என்று ரொம்ப எளிதா ஒரு கவிஞர் அவருடைய கவிதையில பதிவு பண்ணி இருக்கிறார். எப்படி தெரியுமா?.
‘கோவிலுக்குள் சென்றாலும் அடி
குளத்திற்குள் இறங்கினாலும் அடி
காலணி அணிந்தாலும் அடி
மேலாடை போட்டாலும் அடி
தெருமாறி நடந்தாலும் அடி.
குலத்தொழில் மாற்றினாலும் அடி
படிக்க முயற்சித்ததற்கும் அடி
வணிகம் செய்ய முனைந்ததற்கும் அடி
கட்டிய கைகளை இறக்கியதற்கும் அடி
தலை நிமிர்ந்து பார்த்ததற்கும் அடி
அடிப்படை உரிமை கேட்டதற்கும் அடி
அடக்குமுறை எதிர்த்ததற்கும் அடி.!?
அடித்தடித்தே அடிமையாக்கினார்கள்
அடி எடுத்து வைத்தோம்
அடிமைத்தனத்தை மாற்றி அமைத்தோம்
மேலும் சில அடி எடுத்து வைப்போம்
அடிமைத்தனத்தை வேரறுப்போம்.
அப்படின்னு முடிச்சிருப்பாரு. இந்த கவிதையில் நன்றாக கவனித்தீர்களா மாணவர்களே.. ஒரு காலத்தில் அடிப்படை உரிமையை கேட்டாலே அடிதான். அவர்களைத் தவிர எல்லோரும் கோமணம் தான் கட்டணும் மேல சட்ட போடக்கூடாது ஆம்பள இல்ல ஒரு சமூகத்தின் பொம்பளைங்களுக்கும் அந்த நிலைமை இருந்துச்சு, எவ்வளவு வேதனையான விஷயம்? அந்த கவிதையில் இன்னொரு முக்கியமான விஷயம் ஒளிஞ்சிருக்குது. நல்லா கவனிங்க மாணவச் செல்வங்களே.. சில அடி நம்ம முன்னெடுத்து வச்சதுனால அடிமைத்தனத்தை மாற்றிதான் அமைச்சிருக்கோம் இன்னும் முழுசா ஒழிக்கல புரியுதா.? அடுத்து சொல்றார் பாருங்க மேலும் சில அடி எடுத்து வைப்போம் அடிமைத்தனத்தை வேர்ரருப்போம்னு, அப்படின்னா என்ன சொல்றாரு? இன்னுமும் நம்ம ஒரு சில இடங்களில் அடிமைப்பட்டு தான் இருக்கிறோம். அவங்க தெருவுல நடக்க கூடாதுன்னு சொன்ன மாதிரி.. நீ செருப்பு கூட போடக்கூடாதுடானு சொன்ன மாதிரி இன்னும் பல விஷயங்கள்ல இப்பவும் கூட மூடநம்பிக்கைகள் மூலமாகவும் பிற்போக்குவாதிகளின் ஆதிக்கம் காரணமாகவும் நமது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. அதை இனம் கண்டு அதற்கு இறையாகாமல் அதனை வேரறுக்க வேண்டுமென கூறுகிறார் அந்தக் கவிஞர். அத நாம புரிஞ்சுகிட்டு இந்த டிவி ஸ்மார்ட்போனில் நேரத்தை செலவிடுவதை குறைத்துக்கொண்டு ரொம்ப கவனமா இருக்க வேண்டிய முக்கியமான கால கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை பதிவு பண்ணிட்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்..” என்று ஆக்ரோஷமாக பேசி முடித்ததும் ஆரவாரத்துடன் கர ஒலிகள் காதை பிளந்தது. மாணவர்களின் கரகோஷ ஓசையில். மகிழ்ச்சியின் உச்சத்தில் பெருமிதத்தில் மிதந்த எழுத்தாளர். மாணவர்களை பார்த்தபடியே தனது இருக்கையின் முன் வநது. அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை கைகூப்பி நன்றி தெரிவித்து அமர்ந்தார். அனைவரின் கைத்தட்டல் ஓசையும் நிற்க ஒரு மாணவரின் கைத்தட்டல் மட்டும் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது எழுத்தாளரின் கண்கள் அவன் இருக்கும் திசை நோக்கி சென்றது. அந்த மாணவனின் கைகள் நிற்காமல் உரக்க கைகளை தட்டியது. அவனது கண்கள் கூர்மையாக எழுத்தாளரின் கால்களை பார்த்துக் கொண்டிருந்தது. அதனை கவனித்த எழுத்தாளர் அவன் கண்களில் இருந்து பார்வையை இறக்கி தன் காலை பார்த்தார்.!
காலில் செருப்பு!? அவருக்கு ஒன்று உரைக்க ஆரம்பித்தது.
கணப் பொழுதில் அவரது மனதில் ஒரு காட்சி வந்து சென்றது. தான் காரில் இருந்து இறங்கியதும் நேராக உள்ளே வந்தபோது. வெளியில் கழட்டி போடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான செருப்புகளை கண்டும் அதை மனதில் ஏற்றாமல் கெத்தாக உள்ளே வந்தது ஞாபகம் வந்தது. அத்தனை செருப்புகளும் அவரை ஒரு அரை அரைந்தது போல் இருந்தது. கைத்தட்டும் ஓசை குறைந்தது. விவரிக்க முடியாத ஒரு வித உணர்வு அவருள் உருவாகியது. நிச்சயமாக அந்த மாணவனின் பார்வை ஏதோ ஒன்றை மட்டும் சொல்லவில்லை.. என்பதை உணர்ந்த எழுத்தாளரின் கண்கள் யோசித்தபடியே தன் அருகில் அமர்ந்திருந்த மற்றவர்களின் கால்களை கவனித்தது. அனைவரும் ஷூ மற்றும் செருப்பை போட்டு அமர்ந்திருந்தனர். எதிரே முன் வரிசையில் அமர்ந்திருந்த சக தோழர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் கால்களையும் கவனித்தார். அவர்களுடைய கால்களிலும் காலணி இருந்தது. அப்படியே பக்கவாட்டில் மாணவர்களின் கால்களையும் பார்த்தார்!? ஆனால் சற்று நிமிர்ந்து அவர்களின் முகத்தை பார்க்க முடிய வில்லை!? குற்ற உணர்ச்சியில் கண்கள் தடுமாறியது. உடலுக்குள் ஆயிரக்கணக்கான எறும்புகள் ஊர்ந்து செல்வதை போல உணர்ந்தார்.
நெறியாளர் அடுத்த பேச்சாளரை பேசுவதற்கு அழைக்க. அவரும் சென்று தன் பங்கிற்கு ஏதேதோ வரலாற்று சம்பவங்களை சுட்டிக்காட்டி புரட்சிகரமாய் பேசினார். நம் எழுத்தாளருக்கோ அது எதுவும் கேட்கவில்லை. அந்த ஒற்றை மாணவனின் கைத்தட்டல் ஓசையும் அவன் பார்வையில் இருந்த கேள்விகளும் மட்டுமே காதில் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது.!?
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்