தமயந்தி
சிறுகதை வரிசை எண்
# 83
“ மருந்து “
ஆசிரியர் மரு. ஆ.தமயந்தி
வாழ்த்துகள் ராணி, உங்களுக்கு இரட்டை குழந்தைகள் என்று ஸ்கேன் பார்த்துக் கொண்டே கூறினாள் Dr.ரோஷினி, லட்சுமி மருத்துவமனையில் அம்மாவும் மகளும் மகப்பேறு மருத்துவர்களாக பணிபுரிகின்றனர். டாக்டர்.லட்சுமிக்கு தனது மகளும் மகப்பேறு மருத்துவராக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
மகள் சுறுசுறுப்பாகவும், திறம்படவும் வேலை செய்வதில் மிக்க மகிழ்ச்சி.
அறுவை சிகிச்சையைக் கூட அசால்டாக செய்துவிடுவாள் டாக்டர். ரோஷினி.
ஆனால் மாத்திரைகளை மட்டும் மிட்டாய் போல வருபவர்களுக்கெல்லாம் கொடுப்பது அவ்வளவாக Dr.லட்சுமிக்கு பிடிப்பதில்லை.
தேவைப்படுபவர்களுக்கு ஹார்மோன் மாத்திரைகள் எல்லாம் கொடு, எல்லோருக்கும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று Dr. லட்சுமி கூறுவார்.
ஆனால் ரோஷினியோ, அம்மா அதனால ஒன்னும் ஆகாது. இந்த மாத்திரையெல்லாம் நல்லது தான் என்று கூறிவிட்டு நகர்ந்து விடுவாள்.
இவளுக்காகவே, ஒரு பலகையில் “மருந்தை அதிகமாக பயன்படுத்தாதீர்கள் அறிவோடு பயன்படுத்துங்கள் “ ( Use drugs wisely not widely ) என்ற வாசகத்தை எழுதி, புறநோயாளிகள் பகுதியில் வைத்திருந்தார்.
இரட்டை குழந்தை என்று தெரிந்தவுடன் ராணிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட வேகமாக தனது கணவர் சுரேஷிற்கு இனிப்பு வாங்கிக்கொண்டு புறப்பட்டாள்.
சுரேஷ் மருந்துக் கடை வைத்திருப்பவர், ராணியின் குரல் கேட்டு திரும்பினார்.
ஸ்கேன் பார்க்க என்னுடன் வாங்கன்னு கூப்பிட்டால், வேலை நிறைய இருக்குனு இங்க வந்துட்டீங்க.
ஆனா நான் உங்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்ல வந்து இருக்கேன், என்று கூறிக் கொண்டே இரண்டு லட்டுகளை கொடுத்தாள்.
அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்ட சுரேஷிற்கு மகிழ்ச்சி தாங்காமல், அந்த இடத்திலேயே ராணியை தூக்கிக் கொண்டான்.
இருவரும் சேர்ந்து அனைவருக்குமே இனிப்பை வழங்கிக் கொண்டிருந்தனர். தனக்குப் பிடித்த மருத்துவரான டாக்டர் ரவியுடமும் இனிப்பை கொடுக்க கிளம்பினான் சுரேஷ்.
செய்தியை கேட்டு மகிழ்ந்தவர் இரண்டு லட்டுகளையும் எடுத்துக் கொண்டே உங்கள் உறவுகளில் நிறைய இரட்டை குழந்தைகள் இருக்கிறதா? என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
இல்ல டாக்டர் இதுதான் முதல் முறை…. இதைக் கேட்டதும் டாக்டர் ரவி கொஞ்சம் யோசித்து விட்டு, அண்டம் வெளியேறுவதை தூண்டும் (Ovulation) ஏதேனும் மாத்திரைகள் சாப்பிட்டீர்களா என்று கேட்டார் ராணியை பார்த்து,
அதெல்லாம் எனக்கு என்னன்னு தெரியல டாக்டர் ஆனால், Dr. ரோஷினி கிட்ட , கருத்தரிப்பதற்கு முன்னாடி யோசனைகளுக்காக சென்றிருந்தேன் அப்ப எனக்கு மாத்திரைகளும் கொடுத்தாங்க.
Clomiphene citrate -மாத்திரை பெயர் என்று அருகில் இருந்த சுரேஷ் கூறினான்.
மறுநாள், சுரேஷ்.,டாக்டர் ரவியிடம் வந்து, என்ன ஆச்சு டாக்டர்?
நீங்க இரட்டை குழந்தைகள் என்று சொன்னவுடனேயே யோசிச்ச மாதிரி இருந்தது. எதுவும் பிரச்சனையா என்று கேட்டான்.
ஒன்னும் இல்லப்பா, இயற்கையா இரட்டை குழந்தைகள் பிறப்பது என்பது அரிதாக நடக்கிற ஒரு விஷயம்.
ஆனா இப்ப நிறைய இரட்டை குழந்தைகள் இருக்கு. அதுக்கு காரணம், உள்ளே நுழைந்ததுமே என்ன ஏதுன்னு கேட்காம எல்லாருக்கும் தேவையில்லாத மாத்திரைகள் கொடுத்துடறாங்க.
Clomiphene citrate tablet அண்டம் வெளியாகிறதுல பிரச்சினை இருக்குற பெண்களுக்கு கொடுக்கலாம்,
எந்த பிரச்சனையும் இல்லாமல் ஏற்கனவே அண்டம் வெளியாகும் பொழுது நாம் ஏன் அதை தூண்டனும், இயற்கையா எல்லாம் நடக்கும் பொழுது இதெல்லாம் தேவையில்லையே.
எல்லாருக்கும் இரட்டை குழந்தைகளை தாங்குகின்ற சக்தி இருக்காது.
ஒரு சிலருக்கு இதய நோய் வருவதற்கு கூட வாய்ப்பு இருக்கு அதைத்தான் யோசிச்சேன் நான்.
ராணிய பாத்தா ஏற்கனவே கொஞ்சம் பலவீனமா இருக்கா, ரத்த சோகையும் இருக்கு, கவனமா பாத்துக்கோ என்று கூறினார் டாக்டர் ரவி.
என்ன டாக்டர் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுப்பது அவ்வளவு பெரிய கஷ்டமான விஷயமா? என்று கேட்டான் சுரேஷ்.
பொதுவாகவே கருத்தரிக்கிற பெண்களுக்கு நிறைய உடல் மாற்றங்கள் ஏற்படும். ரத்தத்தின் கன அளவு, கருத்தரித்த பெண்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கும், அவ்வளவு ரத்தத்தையும் ஒவ்வொரு முறையும் வெளித்தள்ளும் பொழுது இதய தசைகள் அதிக வேலை செய்ய வேண்டி இருக்கும்.
இரட்டைக் குழந்தைகள் என்றால் இரண்டு மடங்கு வேலை செய்ய வேண்டி இருக்கும், இதனால் தசைகள் பலவீனமடையலாம்.
சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு விரிந்த நிலை இதயத்தசை நோய் (Dilated cardiomyopathy) ஏற்படலாம்.
சரி., நீ கவனமா பாத்துக்கோ என்று கூறி விட்டு அவர் தனது வேலையை தொடர்ந்தார்.
மருத்துவர் பரிந்துரைச்சீட்டு கூட இல்லாமல் சர்வ சாதாரணமாக, என்ன மாத்திரைகளை வேண்டுமானாலும் மக்களுக்கு எடுத்துக் கொடுப்பான் சுரேஷ், ஆனால் நல்ல திறமையுள்ள டாக்டர் ரோஷினி அவர்கள் கொடுத்த மாத்திரையிலேயே இத்தனை பிரச்சனை இருப்பதாக டாக்டர் ரவி கூறும் பொழுது அவன் சிறிது அதிர்ந்து போனான்.
இரட்டை குழந்தைகள் பிறக்கப் போகிறது என்று மகிழ்வதா, அம்மாவிற்கு எந்த பிரச்சினையும் நிகழக் கூடாது என்று பயப்படுவதா என்று தெரியாமல் குழம்பிப் போய் இருந்தான்.
டாக்டர்., இன்னொரு பெண் குழந்தையும், பிறப்புறுப்பு கொஞ்சம் ஆண் போல இருக்குனு அட்மிட் ஆகியிருக்கு., என்ற செய்தியைக் கேட்டு டாக்டர் திவ்யாவிற்கு கோபமே வந்துவிட்டது.
இந்த டாக்டர்ஸ் கொஞ்சம் கூட யோசிக்காம, கர்ப்பமா இருக்கேன்னு யாராவது உள்ளே நுழைந்தாலே, Progesterone போன்ற ஹார்மோன் மருந்துகளை கொடுத்துடறாங்க.
ஆனா அதுக்கப்புறம் அந்த குழந்தைகளுக்கு வருகிற பிரச்சனைகளை நாமதான் பார்க்க வேண்டி இருக்கு.
யாருக்கு தேவைப்படுதோ அவங்களுக்கு தான் மருந்து, எதுக்கு எல்லாத்துக்கும் கொடுக்குறாங்கன்னு புரியல,..
இப்ப இருக்கிற நிறைய மருத்துவர்கள், மருந்துகளை கையாளுகிற விதமே சரியில்ல…. என்று கோபமாக பேசிக்கொண்டே குழந்தையைப் பார்க்க சென்றாள் குழந்தை மருத்துவர்.திவ்யா.
சென்னை, எக்மோர் குழந்தை மருத்துவமனையில் தினம் தினம் இதுபோன்று குழந்தைகள் அனுமதிக்கப்படுவதை பார்த்து, பார்த்து தான், மருத்துவர் திவ்யா இப்படி எல்லாம் பேசிக் கொண்டே குழந்தையைப் பார்க்கச் சென்றார் .
நான்கு அறுவை சிகிச்சைகளை அசால்டாக செய்து முடித்துவிட்டு டாக்டர்.ரோஷினி சிரித்துக்கொண்டே அறுவை சிகிச்சை அரங்கத்திலிருந்து வெளியே வந்தாள், உடன் வந்த டாக்டர் லட்சுமி, பாப்பா எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு, மூன்று தம்பதியினர் காத்துட்டு இருக்காங்க, நீ பார்த்துக்கோ என்று கூறிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டாள்,
திருமணமாகி மூன்றே மாதத்தில் கருத்தரித்த மகிழ்ச்சியோடு அமர்ந்திருந்தனர் ஒரு தம்பதியினர்.
அவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்றவாறு, இப்ப நான் கொடுக்கிற மாத்திரைகள் எல்லாம் ஒழுங்கா சாப்பிடுங்க எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று கூறிக்கொண்டே, மருந்து எழுதும் சீட்டை எடுத்து எழுத தொடங்கினாள் டாக்டர் ரோஷினி.
அப்பொழுது அலைபேசி சத்தம் கேட்டது, ஹாய் ரம்யா எப்படி இருக்க? என்ன ஆச்சு?டெலிவரி ஆயிடுச்சா என்று ஆர்வமாக, துணுக்குத்தனத்தோடு கடகடவென்று கேள்விகள் கேட்டாள் டாக்டர் ரோஷினி.
ம்ம், டெலிவரி ஆயிடுச்சு என்று மெதுவாக கூறினாள் ரம்யா.
குழந்தை பிறந்ததை ஏன் இவ்வளவு சோகமா சொல்ற?, என்ன குழந்தை என்று ஆசையோடும் துருதுருப்போடும் கேட்டாள் டாக்டர் ரோஷினி.
எதிர் முனையில் சிறிது நேரம் எந்த பதிலும் இல்லாமல் இருந்தது.
மெதுவாக ஒரு குரல் கேட்டது., என்ன குழந்தை என்ற கேள்விக்கு தான் என்ன பதில் சொல்றதுன்னே தெரியல, பெண் குழந்தை தான் ஆனால் கொஞ்சம் பிறப்புறுப்பு ஆணுறுப்பு போல இருக்கு என்று கூறிவிட்டு அழத் தொடங்கினாள், மாத்திரைகளை எழுதிக் கொண்டே பேசிக் கொண்டிருந்த ரோஷினிக்கு சிறிதாக கைகள் நடுங்க ஆரம்பித்தது.
எதிரில் இருந்த தம்பதிகளைப் பார்த்து, இதுக்கு முன்னாடி உங்களுக்கு ஏதாவது கருக்கலைப்பு ஏற்பட்டு இருக்கா?
இல்ல டாக்டர், இப்பதான் கல்யாணம் ஆச்சு, இதான் முதல் முறை கருத்தரிப்பு
அடிவயிறு வலி, நெடுந்தூரப் பயணம் இந்த மாதிரி ஏதாவது…
எந்த பிரச்சனையும் இல்ல டாக்டர் நல்லா இருக்கு ., உங்ககிட்ட கர்ப்பகால அறிவுரைகளை கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு வந்தோம்
அப்படின்னா இப்போதைக்கு உங்களுக்கு எந்த மருந்துகளும் தேவையில்லை. நல்ல சத்துள்ள உணவுகளை உண்ணுங்க, சத்து மாத்திரை மட்டும் கொஞ்சமா எழுதி தருகிறேன், என்று கூறினாள்.
ஏதோ பிரஜஸ்டான் மாத்திரை சாப்பிடணும்னு சொன்னாங்களே என்று தம்பதியினர் கேட்க,
தேவைப்படும் பொழுது மருந்துகள் எடுத்துக் கொண்டால் போதும், உங்களுக்கு இப்போதைக்கு மருந்துகள் தேவை இல்லை என்று உறுதியாக பதில் அளித்தாள்.
அவள் உட்கார்ந்து இருந்த இருக்கைக்கு மேலே பெரிதாக எழுதி இருந்தது “மருந்துகளை அதிகமாக பயன்படுத்தாதீர்கள், அறிவோடு பயன்படுத்துங்கள்” என்று…( Use Drugs wisely, not widely )
ஆசிரியர் குறிப்பு:
மரு. ஆ. தமயந்தி., MD Physiology
உடலியங்கியல் துறை,
உதவிப் பேராசிரியர்,
C&D மருத்துவர் குடியிருப்பு,
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை & கல்லூரி,
கிருஷ்ணகிரி - 635115
Cell number: 9994860209
E-mail: dhamayamurali86@gmail.com
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்