பாலமுருகன் கேசவன்
சிறுகதை வரிசை எண்
# 78
சிறுகதை: மாதாவின் சிலுவை
மாரிமுத்து தாத்தா அப்படிச் செய்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒன்றும் விளங்காமல் பட்டர்வெர்த்திலுள்ள சிற்றாலயத்தின் முன் நின்றிருந்தேன். நதியோரத்தில் அமைந்த ஒரு சிறிய குடியிருப்பின் கடைப்பகுதியில் இருக்கும் மாதாவின் சிற்றாலயம். மூன்று வரிசைகளில் ஏழெட்டு வீடுகள் மட்டுமே இருக்கும் பகுதி. அவர்கள்தான் சிற்றாலயத்தைக் கூட்டாக இணைந்து கவனித்துக் கொள்கிறார்கள்.
பெரியப்பா வரும்வரை காத்திருக்கலாம் என முடிவு செய்தேன். உள்ளே நுழைய ஏதோ தடுத்தது; மனம் கனமாக இருந்தது. சிறிது நேரத்தில் இலேசான மழைத்தூறல் தொடங்கியிருந்தது. பக்கத்தில் இருந்த செம்பனை மரங்களின் கிளைகள் காற்றில் அசைந்தன. அவை உண்டாக்கிய சலசலப்பு தனிமைக்கு ஆறுதலாக ஒலித்தது. தெருவிளக்கின் வெளிச்சத்தில் மழைத்தூறலைப் பார்க்க முடிந்தது.
பாட்டி இறந்த பிறகு, கடைசிவரை யார் வீட்டிற்கும் வர மாட்டேன் எனத் தாத்தா அடம்பிடித்து, அவருடைய பழைய வீட்டிலேயே தங்கிவிட்டார். வாரம் ஒருமுறை நானும் அம்மாவும் அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வருவோம். இன்னும் ஏதாவது காற்றாடிகளைப் பழுது பார்ப்பது, ஓடாத வானொலிப் பெட்டியை முழுவதுமாகத் திறந்து வைத்திருப்பது என வீடு அலங்கோலமாகவே இருக்கும். யாரிடமும் பணம் வாங்கமாட்டார்; பழுது பார்ப்பதில் கிடைக்கும் பணத்தையே பயன்படுத்திக் கொண்டார்.
அம்மா வீட்டைச் சுத்தம் செய்து முடிக்கும் வரை தாத்தாவைத் திட்டுவார். வீட்டிலிருந்த தாத்தாவின் தோட்டத்துப் பலகை இருக்கையைச் சுற்றி, அங்குள்ளவர்கள் கொடுத்த பழுதாகிப் போன தொலைக்காட்சி பெட்டிகள் கிடக்கும். வீடு அவருக்கு மட்டும் இடம்விட்டு, மற்ற இடங்கள் பொருள்களால் நிரம்பியிருந்தது.
அம்மா திட்டுவதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், தாத்தா வலது காலை இடது காலின் மீது போட்டுக் கொண்டு வெளியே நெல்லி மரத்தைப் பார்த்தபடி அமர்ந்திருப்பார். அவருக்குக் கோபமெல்லாம் பெரியப்பாவின் மீதுதான் இருந்தது. கடைசிவரை பெரியப்பாவை அவர் மன்னிக்கவே இல்லை. உடலை இருகிப் பிடித்து, அந்த வன்மத்தைத் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டார்.
பெரியப்பா, லில்லி பெரியம்மாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டார். அப்போது எனக்கு பத்து வயதுதான் இருக்கும். பெரியம்மாவிற்குச் சொந்தமான ‘மாக் மண்டின்’ அடுக்குமாடி குடியிருப்பில்தான் பெரியப்பா மதம் மாறுவதைப் பார்த்தேன். அவர் கையில் கட்டியிருந்த சிவப்பு முடிக்கயிறை, ஜேம்ஸ் பாட்டிதான் கத்தரித்தார். அந்த அடுக்குமாடியில் அவருடைய சொல்லுக்குப் பெரிய மதிப்பு இருந்தது.
“ஆண்டவர நீ ஏத்துக்கிறியா?”
“மனப்பூர்வமா ஏத்துக்கிறியா?”
இப்படிச் சில கேள்விகளை ஜேம்ஸ் பாட்டி தொடர்ந்து பெரியப்பாவிடம் கேட்டார்.
“லில்லி உனக்குக் கிடைத்த பெரிய பொக்கிஷம்... அவளை அழவச்சிராத... ஆண்டவரோட சாம்ராஜியத்துல லில்லிக்குப் பெரிய இடம் இருக்கு. அவ்ள தூய்மையானவ அவ...”
ஜேம்ஸ் பாட்டி சொன்னதை அனைவரும் மௌனமாகக் கேட்டனர். லில்லி பெரியம்மா வெட்கத்தால் புன்னகை செய்தார். அங்குள்ள பலருக்கு, லில்லி பெரியம்மா தேவாலயத்தின் மூலமாக மாதப்பொருள்கள் வாங்கிக் கொடுப்பது, தனக்குக் கிடைத்த காப்புறுதி பணத்தில் சிலருக்கு உதவி செய்தது போன்ற காரணத்தால் அவருக்கு நன்றி கடன் பட்டிருந்தனர்.
அருள் பாலிக்கத் தயாராகுவதைப் போல, அவ்விடத்திலிருந்த பலரின் முகம் மாறியது. சிலர் கைகளைப் பிடித்துக் கொண்டு தலையை மேலே தூக்கினர். நான் அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டேன். பிறகு, பெரியப்பா தேவாலய வண்டியில் ஜேம்ஸ் பாட்டியுடன் பக்கத்தில் இருந்த பட்டர்வெர்த் கத்தோலிக்கத் திருச்சபைக்குப் போய்விட்டார். அங்குச் சில பூஜைகள் இருப்பதாகப் பேசிக் கொண்டனர். பெரியப்பா மூன்று வாரங்கள் கத்தோலிக்கத் திருச்சபையில் ஞான வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சியும் பெற்றுவிட்டார்.
“எனக்கு அவரு நல்ல மனுசனா இருந்தா போதும்... மத்தவங்களுக்கு அன்பு செய்ற எல்லாரின் மீது பிதாவும் அன்பு செய்வார்...”
லில்லி பெரியம்மாவின் பேச்சிலும் பார்வையிலும் இருந்த கணிவு எனக்குப் பிடித்திருந்தது. அவரோடே இருக்க வேண்டும் எனத் தோன்றியது. அவர் வைத்திருந்த பேட்டரி விளக்கின் ஒளிப் பாய்ச்சல் சாமி மேடையில் இருந்த சிலுவையின் மீது படர்ந்து ஓர் அமைதியான சூழலை உண்டாக்கும். லில்லி பெரியம்மாவின் வீடு முழுவதும் ஏகாந்தமும் தெய்வீகப் பரவசமும் விரிந்திருப்பதாகவே தோன்றும்.
அன்றிரவு, சுங்கைப்பட்டாணியில் இருந்த தாத்தா, பெரியப்பாவின் வீடு தேடி வந்துவிட்டார். நானும் அம்மாவும் மறுநாள் கிளம்பலாம் எனப் பெரியப்பா வீட்டிலேயே தங்கிவிட்டிருந்தோம். தாத்தாவை அழைத்துவர யாருக்கும் திட்டமில்லை; அவரிடம் சொல்லவுமில்லை. ஆனால், எப்படியோ கேள்விப்பட்டு, தமது நண்பரின் மகனோடு அவ்வளவு தூரம் வீடு வரை வந்துவிட்டார். நான்காவது மாடிக்கு ஏறிவந்து, மூச்சிரைக்க நின்றார்.
“நம்ம தெய்வத்தக் கைவிட்டுட்டள நீ... நம்ம குலசாமி கருப்பரெ பகைச்சிக்கிட்டடே... நாசமா போறவனே...” என்று மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதார். அவருடைய தலைமுடி வெண்பஞ்சுகள் போல தலைக்கு மேல் உப்பியிருந்தன. கண்கள் கலங்கியிருந்தன. வெள்ளை மீசை தாழ்ந்திருந்தது.
“பா! அதுல உங்களுக்கு என்ன? வாழப் போறவங்க அவுங்க... இவ்ள லேட்டா கல்யாணம் பண்ணிருக்காரு... இனிமேலயாவது வாழட்டுமெ...”
அம்மாதான் தாத்தாவை எதிர்த்து முதலில் குரலெழுப்பினார். மற்றவர்கள் அவரைக் கண்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
“ஏய்! உனக்கு என்ன தெரியும்? அந்தக் காலத்துல கப்பல்ல மலாயா வரும்போதே கூட சாமியயும் கூட்டியாந்து காப்பத்தனதுவங்க நாங்க... இப்படி நத்தாத்துல விட்டுரலாமா?”
பெரியப்பாவிற்கு அப்பொழுது 40 வயது இருக்கும். லில்லி பெரியம்மா ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்தவர். அவருடைய மூத்த மகன் தான் ஜோ. கருப்புக் கோடுகளுள்ள ஒரு வெள்ளைச் சட்டையை அணிந்து கொண்டு, என்ன நடக்கிறதெனத் தெரியாமல் அவன் என்னைப் பார்த்தான். நான் ‘அல்ட்ராமேன்’ பாணியில் வலது கையை நிமிர்த்தியும் இடது கையை அதற்குக் கீழே குறுக்காகவும் வைத்துக் காட்டினேன்.
“கடவுள பகைச்சிட்டு என்ன வாழ்க்கடே! பொழப்பு வேணும்னா கடவுள் வேணும்... ஒடம்புக்கு முடியலைன்னா ஆத்தா காளியாத்தான்னு உழுந்து பொலம்பறது... இப்ப உன்னோட வசதிக்குக் கடவுள மாத்திக்கிட்டல...?”
தாத்தா ஆவேசங்கொண்டு வலது காலைத் தூக்கித் தரையில் அடித்தார். அவர் கண்கள் மேலும் கோபத்தாலும் துக்கத்தாலும் கலங்கியிருந்தன. அவர் காலில் செருப்பும் அணிந்திருக்கவில்லை என்பதை நான் மட்டுமே கவனித்தேன். தாத்தா வெகுதூரம் நடக்க முடிந்தவர். எந்தப் பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்த மாட்டார். எங்கு வேண்டுமென்றாலும் நடந்தே போய்விடுவார். அவருடைய வெள்ளைத் தோய்ந்த அந்தக் கால்கள் சுங்கைப்பட்டாணி நகரத்தின் ஒவ்வொரு திசையையும் அறிந்தவை. அவர் அணிந்திருந்த வெள்ளை வேட்டிக் காற்றில் பதைபதைத்தது. அதனை அவர் சரிசெய்து கொள்ளவும் இல்லை.
“நல்லா ஜாபகம் வச்சுக்கோ... இனி இந்த வீட்ட நான் மிதிக்க மாட்டன்டே... உன் கையால ஒரு வாய் சோறு வாங்க மாட்டன்... இது நான் கும்படற சாமி மேல சத்தியம்டே...”
தாத்தா சாபமிடும் தோரணையில் நின்றிருந்தார். கழுத்தில் அணிந்திருந்த உத்திராட்ச மாலையைக் கையில் பத்திரமாகப் பிடித்துக் கொண்டார். பெரியம்மா அழுத முகத்துடன் தாத்தாவை நெருங்கினார். அவர் உடல் மெலிந்து இருந்தார். மார்பகப் புற்றுநோய் காரணமாக வீட்டிலேயே இருந்தார். அவருடைய பார்வையில் இரக்கம் மட்டுமே ததும்பியிருந்தது.
“நீ! என் மூஞ்சிலே முழிச்சிராத... மூதேவி... என் பையன மதம் மாத்திட்டல... நீதான் என்னோட எதிரிடே... என் வீட்டுலேந்து யாரும் உன்னாண்ட பொழங்க மாட்டாங்க... ஏய் புள்ள உன் பையனக் கூட்டிட்டு இந்த வீட்டுலேந்து கெளம்பு...”
தாத்தா அம்மாவிடமும் கடிந்து கொண்டே தடுமாறியவாறு படியிறங்கிப் போனதை அனைவரும் வேடிக்கைப் பார்த்தோம். அவர் ஒவ்வொரு படியின் மீதும் கவனமாகக் கால் வைத்து நடந்தார். பக்கத்தில் இருந்த பிடியையும் அவர் பிடிக்கவில்லை. இன்றும் அந்தக் காட்சி மனத்தினுள் உயிர்ப்புடன் இருக்கிறது.
பெரியப்பா அவர் வைத்திருந்த ஆர்.சி மோட்டரில் சிற்றாலயத்தின் முன்வாசல்வரை வந்துவிட்டார். மோட்டாரிலிருந்து இறங்கிதான் அந்த இரும்புக் கதவைத் தள்ள முடியும். அவர் வாசலிலேயே மோட்டாரை நிறுத்திவிட்டுக் கதவைத் தள்ளினார். திறக்க மறுத்தக் கதவு பெரும் முனகலை உண்டாக்கியது. பெரியப்பாவின் நண்பர் ஜொன்சன்தான் சிற்றாலயத்தைக் கவனித்துக் கொள்பவர். அவரும் இன்னும் வரவில்லை.
“டேய்! தேவாலயக் கதவத் தொட்டாலும் தீட்டா என்ன? ரொம்ப யோசிக்கற?”
என்னைப் பார்த்துதான் அதட்டினார். நான் என்ன செய்வதென்று தெரியாமல் உடனே அவரை நெருங்கி உதவி செய்ய விரைந்தேன்.
“நீயும் ஜோவும் ஒரே மாதிரிதான்டா வளர்ந்திருக்கிங்க...”
பெரியப்பாவின் குரலில் தெம்பில்லை. வெறுப்புடன் இருந்தார். ஜோவிற்குத் தேவாலயம் போவது பிடிக்காது. லில்லி பெரியம்மாவின் மரணத்திற்குப் பிறகு கத்தோலிக்கத் திருச்சபைக்குப் போவதை நிறுத்திக் கொண்டான். அவன் அப்பொழுது ‘பெந்தகஸ்’ சபைக்குப் போய்க் கொண்டிருப்பதாகச் சொன்னான். அதுவும் எப்பொழுதாவது நினைத்தால்தான் போவான்.
“பைபள்தான்டே ஜீசஸ்... அந்த வார்த்தைகள் போதும்டே...” என்பான்.
பெரியம்மா இருக்கும்வரைதான் அந்த வீட்டில் ஜெபம் இருந்தது. அவர்தான் அனைவரையும் வரிசையாக உட்காரச் சொல்லிக் கைகளைப் பிடித்துக் கொண்டு ஜெபிப்பார். ஜெபம் நம்மைப் பலப்படுத்தும் என்பார். நாங்கள் வீட்டுக்குச் சென்றால் ஒரு வெள்ளைத் துணியை எடுத்துத் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு தேவதை போல் அமர்ந்திருப்பார். அவருடைய வீக்கமான கால்கள் மட்டும் பெருத்துக் கிடக்கும். எப்பொழுதும் தன் ஒரு பக்க மார்பகத்தை மறைத்துக் கொள்ளும்படி மேலே துண்டு அல்லது அடர்த்தியான துணியைப் போர்த்தியிருப்பார். அவருடைய இறுக்கமான தோற்றம் முகத்தில் நிலவும் அமைதிக்குப் புறம்பானதாகத் தெரியும். பேசி முடிக்கும் ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் அவர் கர்த்தரை அழைப்பார். “கர்த்தாவே!” என அவருடைய குரல் எப்பொழுதாவது நினைத்துப் பார்த்துக் கொள்ளும்போது ஆறுதலாக இருக்கும்.
“நீங்க வந்தது மாமாவுக்குத் தெரியாம பார்த்துக்கணும்... அப்புறம் என்னய உண்டு இல்லன்னு செஞ்சிடுவாரு...” என லில்லி பெரியம்மா நாங்கள் அவர் வீட்டுக்குப் போகும்போது புலம்புவார். அவருக்குள் அந்த ஆற்றாமை அனல் போலத் தகித்துக் கொண்டிருந்தது. எப்பொழுதுதாவது தாத்தா அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வார் எனப் பெரிதும் நம்பியிருந்தார்.
அம்மாதான் ஒவ்வொருமுறையும் தாத்தாவிற்குத் தெரியாமல் பெரியப்பாவையும் பெரியம்மாவையும் பார்க்க அங்குக் கொண்டு விடும்படி என்னைத் தொந்தரவு செய்தார். வயதானவர்கள் வார்த்தைகளை நம்பக்கூடியவர்கள். பெரியம்மாவிடம் பேசும்போது மனம் இலேசாகிறது எனச் சொல்வார். பெரியம்மாவின் வார்த்தைகள் நம்மை அள்ளி அரவணைத்துக் கொள்ளக்கூடியவை.
“உலகத்துலே ரொம்ப தனிமையானது சிலுவைதான் தெரியுமா? அது எல்லா இடத்துலயும் எல்லா தேவாலயங்களயும் இந்த உலகத்தோட பாவ மூட்டய சுமந்துகிட்டு தனியாதான் நிக்குது...... நீ... நான் எல்லாம் கடைசியில தனிமையிலத்தான் போகணும்...”
அடிக்கடி லில்லி பெரியம்மா இதைத்தான் சொல்வார். பெரியம்மா இருந்தவரை எனக்கெல்லாம் அவர்தான் கதாநாயகி. அவரைப் பார்த்தாலே உடல் சிலிர்க்கும். அவருடைய இருப்பு அவ்வளவு பலமானதாக இருக்கும். இறப்பதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் அவருடைய ஒரு மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்து நீக்கிவிட்டார்கள். சில மாதங்கள் படுக்கைலேயே இருந்தார். யாராவது வீட்டிற்கு வந்தால் அவர்களைக் கவனிக்க முடியவில்லை எனப் பதற்றம் கொள்வார். அதனாலேயே பெரியப்பா யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார். நானும் அம்மாவும் மட்டும் போய்ப் பார்த்துவிட்டு வருவோம்.
“கர்த்தாவே! என் பிள்ளைகளை ஆசிர்வதித்து அவர்களுக்கு நன்மை செய்வாயாக...” என அந்த நிலையிலும் லில்லி பெரியம்மாவின் ஜெபம் எங்களைப் பற்றியதாகத்தான் இருக்கும்.
“எனக்காக ஜெபம் செய்யு... லில்லி செய்யுமே... அந்த மாதிரி... உங்கம்மா இருந்துச்சின்னா வர்றவங்க எல்லாத்தையும் நல்லா பார்த்துக்கும்... காசு கொடுத்து அனுப்பி வைக்கும்... அதோட குரலு அப்படியே மனசல நிக்குது...”
அம்மா ஜோவைப் பார்க்கும்போதெல்லாம் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு ஜெபத்திற்காகக் கெஞ்சுவார்.
“விண்ணுலகில் இருக்கும் எங்கள் தந்தையே... இந்த உயிரை இரட்சியும் ஐயா... கர்த்தாவே இந்த ஆத்துமாவை உமதிடத்தில் ஒப்படைக்கின்றேன்... அவரை உம் கண்களுக்குள் வைத்துக் காத்தருள்வாய் நல்ல பிதாவே...”
ஜோவின் ஜெபத்தைக் கேட்கும்போது இப்பொழுது எனக்கு முன் உயிர்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சிற்றாலயம்தான் நினைவிற்கு வரும். முன்பு ஜோ வீட்டிற்குச் செல்லும்போது லில்லி பெரியம்மா அழைத்து வரும் சிற்றாலயம் இது. பத்து வரிசைகள் கொண்ட நீண்ட நாற்காலிகளோடு அமைதியில் உறைந்திருக்கும் சிறிய ஆலயம். அங்கே என்னையும் ஜோவையும் மண்டியிடச் செய்து லில்லி பெரியம்மா புடவையின் முந்தானையைத் தலையில் முக்காடாக அணிந்து கொண்டு இரு கைகளையும் கூப்பியவாறு ஜெபிப்பார்.
அவருடைய தமிழ் எந்தக் கலப்பும் இல்லாமல் நேர்த்தியாக ஒலிக்கும். அந்தத் தொனி ஜோவிடம் இருந்தது. அவனுடைய குரல் லில்லி பெரியம்மாவின் குரலையும் ஒத்திருந்தது. இப்பொழுது பெரியம்மாவும் இல்லை; ஜோவும் ஜெபிப்பதில்லை.
தாத்தாவின் நினைப்பு வந்தால் உடனே மனம் எங்கிருந்தாலும் சட்டெனப் பயம் கொள்ளும். பெரியப்பா உள்ளே சென்ற பின்னர் இரண்டு வாகனங்கள் வரிசையாக உள்ளே வரத் துவங்கின. நான் வாசற்கதவின் ஓரமே இருந்த மாமரத்தினடியில் இருந்த சிமெண்டு நாற்காலியில் அமர்ந்தேன். இரண்டு நாள்களாக நண்பனின் திருமண ஏற்பாட்டுக் களைப்பு. அம்மா பக்கத்து வீட்டு அண்டியுடன் வருவதாகச் சொல்லிவிட்டதால் நான் மட்டும் நேராக இங்கு வந்துவிட்டேன்.
இப்போது சிற்றாலயத்தின் உள்ளே எல்லோரும் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார்கள். அம்மா, அப்பா, லில்லி பெரியம்மா, ஜோ, பக்கத்து வீட்டுச் சீனன் உட்பட அனைவரும் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார்கள்.
“இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை நம்பாத பாவ ஆன்மாக்களே... அறியாமை என்கிற சாத்தான் உங்களைத் தந்தையிடமிருந்து பிரித்து வைத்திருக்கிறது... சோஸ்த்திரம் ஆண்டவரே!”
லில்லி பெரியம்மா எழுந்து நின்று சிலுவையின் முன் மண்டியிட்டுக் கதறுகிறார்.
மாரிமுத்து தாத்தா, இப்பொழுது சிலுவையில் இருந்தார். அவருடைய இரு கைகளும் சிலுவையின் இரு முனைகளில் ஆணியால் அடிக்கப்பட்டிருந்தன. கீழே லில்லி பெரியம்மா நின்றிருந்தார்.
“மாரிமுத்து... நீ செஞ்ச பாவத்தை எல்லாம் ஆண்டவர் கழுவுகிறார்... உனக்காக சாட்சி சொல்ல நான் இருக்கிறேன்...”
தாத்தாவின் பார்வை வானத்தைப் பார்த்தபடி இருந்தது. சிலுவை, அறையைத் தாண்டி ஓடுகளைத் தாண்டி உயர்ந்திருந்தது.
“விண்ணுலகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, என் மாமா மாரிமுத்துவிற்குத் உமது அருகில் ஓர் இடம் தயார் செய்வாயாக...” என லில்லி பெரியம்மா வானத்தைப் பார்த்துக் கட்டளையிட்டார்.
தாத்தாவின் பாதங்களிலிருந்து தொடர்ந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தேவாலய மணியோசை மூன்று முறை எழுப்பப்பட்டது. சட்டென சிலுவை மறைந்து ஒரு கற்குகையின் முன் நின்றிருந்தோம். பெரும்பெரும் பாறைக்கற்களைக் கொண்டு அடுக்கியது போலத் தோற்றமளித்தது. அதனைச் சுற்றி குறுமரங்களும் புதர் வெளியும் நிறைந்திருந்தன.
நடுவிலிருந்த பாறையொன்றை விலக்கிவிட்டு தாத்தா வந்தார். அவர் முடி வெண்பஞ்சு போல நேர்த்தியாகத் தலையின் மேல் படுத்திருந்தது. அழகாகத் தலை வாரப்பட்டு தெளிந்த கண்களுடன் காட்சியளித்தார். வானத்தைப் பார்த்துக் கைகளை உயர்த்தினார்.
சட்டென விழிக்கும்போது இன்னுமும் மரத்தின் கீழ்தான் அமர்ந்திருந்தேன். சிற்றாலயம் பிரகாசத்துடன் தெரிந்தது. கண்களைக் கசக்கிவிட்டு எழுந்து நின்றேன். மனம் பதற்றத்துடன் துடித்துக் கொண்டிருந்தது. கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.
தாத்தா இரண்டு நாள்களுக்கு முன் பெரியப்பாவைப் பார்க்க ‘மாக் மண்டின்’ வீட்டிற்கு இரண்டாவது முறையாகச் சென்றார். லில்லி பெரியம்மாவின் மரணத்திற்குக்கூட அவர் செல்லவில்லை. எவ்வளவு கெஞ்சியும் வரமாட்டேன் என வீட்டிற்குள்ளே இருந்துவிட்டார். பத்தாண்டுகள் ஆகிவிட்டன.
“என் மயன பார்த்துட்டு வந்துர்றன்...” எனக் கடந்த வாரத்தில் திடீரெனப் பிதற்றிக் கொண்டிருந்தார்.
அவருடைய வரட்டுப் பிடிவாதம் எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் ஏதோ வயது புலம்பல் என விட்டுவிட்டோம். பக்கத்து வீட்டிலுள்ள இளைஞன் ஒருவனின் உதவியுடன் பெரியப்பாவைத் தேடிப் போய்விட்டார். அங்குப் போனதும் பெரியப்பா வீட்டில் இல்லை. உள்ளே போகாமல் வாசல்படியிலேயே இரண்டு மணி நேரம் காத்திருந்தார். கைகள் நடுக்கத்துடன் பசி மயக்கம் ஒரு பக்கம் அழுத்த அப்படியே முதுகைச் சுவருக்கு முட்டுக் கொடுத்துவிட்டு அங்கேயே உட்கார்ந்துவிட்டார்.
பெரியப்பா வீடு வந்ததும் வீட்டுக்குள் அழைத்துச் சென்று உணவெல்லாம் கொடுத்துப் படுக்க வைத்திருக்கிறார். அன்றிரவு அரை மயக்கத்தில் சுவரில் இருந்த பெரியம்மாவின் படத்தையே தாத்தா பார்த்துக் கொண்டிருந்தாராம். அவருடைய கண்கள் அப்படத்தைவிட்டு அகலவேயில்லை.
சட்டென, அம்மா ஒரு வெள்ளை நிறக் காரில் சிற்றாலயத்தின் வாசலில் வந்து இறங்கினார்.
“ஐயோ! எங்கப்பா எங்கடா?”
அம்மா கதறிக் கொண்டு சிற்றாலயத்திற்குள் ஓடினார். தாத்தாவின் உடல் இன்னும் பரிசோதனைக்குப் பின்னர் மருத்துவமனையிலிருந்து கொண்டு வரப்படவில்லை என்பதைச் சொல்வதற்குள் அம்மா பதற்றமாகி உள்ளே ஓடிவிட்டார்.
அம்மாவுடன் வந்த காந்திமதி அண்டி நான் நின்றிருந்த மரத்தடிக்கு வந்தார்.
“என்னடா ஆச்சு? ரெண்டு நாள்ல என்னனவோ நடந்துருச்சி...”
“தாத்தா, சொந்தமா பெரியப்பா வீட்டுக்குப் போய்ட்டாரு அண்டி...”
“அந்த மனுசன் ரோசக்காரரா ஆச்செ...? எப்படி வீட்டுக்குள்ள போனாரு...?”
“பெரியப்பாவ பார்க்கணும்னுகிட்டு இருந்தாரு... நானே கூட்டிட்டுப் போயிருப்பன்...”
“எப்படிடா சொந்தமா செஞ்சிக்கிட்டாரு? நெனைச்சுப் பார்க்க முடியல போ...”
என்ன சொல்வதென்று தெரியவில்லை. வார்த்தைகள் தடுமாறின. தாத்தா, லில்லி பெரியம்மாவின் அறைக்குள் சென்று தூக்கு மாட்டிக் கொண்டார் என்கிற செய்தி பெரும்பாலோருக்குப் பரவிவிட்டது. அந்த அறையில்தான் லில்லி பெரியம்மா புற்றுநோய்ப் பரவி தம் கடைசி காலத்தைக் கழித்தார்.
“அப்பவே நெனைச்சன்... மனுசன் ரோசக்காரன்... செஞ்ச சத்தியம் சும்மாவா? வீட்டுக்குள்ள போய்ட்டாருல... அதான் கடைசி நிமிசத்துலயும் கடவுள விட்டுக் கொடுக்கல பாத்தியா...?”
எனக்கு அவர் சொன்னவை ஏதும் காதில் விழவில்லை. சிற்றாலயத்தின் மேலே எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கும் விளக்கில்லாமல் இருளில் இருந்த சிலுவை மட்டுமே கண்களுக்குத் தெரிந்தது.
* மாக் மண்டின், பட்டர்வெர்த், சுங்கை பட்டாணி - இடங்களின் பெயர்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்