L.Gopalakrishnan
சிறுகதை வரிசை எண்
# 79
ஒரு நாள்
அந்த நிறுவனத்தை நாளிதழ் ஒன்றில் வந்திருந்த வரி விளம்பரத்தை வைத்து மணி கண்டு பிடித்திருந்தான். நிறுவனத்துக்குப் பெயர் எதுவும் இருக்கவில்லை. அப்பொழுது கல்லூரி முதலாம் ஆண்டின் இரண்டாவது பருவத்தேர்வு முற்றுப்பெற்று இருந்தது. அடுத்த பருவ காலத்திற்கு சுத்தமாக ஒரு மாதத்திற்கு மேல் இருந்தது. எதையாவது உருப்படியாக செய்து இந்த பருவ விடுமுறையை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று இரண்டாம் பருவத் தேர்வின் தொடக்கத்திலேயே ஒரு முடிவுக்கு வந்திருந்தான். அவனுடைய குடும்பத்தில் இரண்டாவது ஆளாக கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறான். அவனுடைய அக்கா பானு ஏற்கெனவே ஒரு பட்டப் படிப்பை முடித்துவிட்டு முதுகலையில் படித்துக் கொண்டிருக்கிறாள். இருவருக்கும் இடையே மூன்று வருட வித்தியாசம். அம்மாவும் அப்பாவும் தினக்கூலிகள். காடு மேடுகளில் கிடைத்த வேலைக்கு சுணக்கம் இன்றி போய்க் கொண்டிருப்பவர்கள். இருவரது சாதிப் பத்திரங்களிலும் எம் பி சி என்று பதியப்பட்டிருந்தது. மணி பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இருந்தே ஒரு குறிப்பிட்ட வசனத்தைப் பலரிடமிருந்தும் திரும்பத் திரும்பக் கேட்டு வந்திருக்கிறான். தன்னுடைய சாதிக்கு ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலே நல்ல வேலையைப் பிடித்து விடலாமாம். தனக்கு மட்டுமல்ல தன்னுடைய அக்காவுக்கும் அப்படித்தானாம். பள்ளி நாட்களிலேயே தன்னுடைய சாதியின் 'இடம்' குறித்தெல்லாம் அவனுக்கு நிறையக் கற்பிக்கப்பட்டிருந்தது. அவனுடைய சாதியைக் காட்டிலும் வேறு பெரிய சாதிகளும் உண்டாம். அவர்களுக்கெல்லாம் இவர்களைப் போல வேலை விஷயங்களில் சுலபமாக எதுவும் கிடைக்காதாம். அப்படியென்றால் அவர்களை எப்படி மேல் சாதி என்று அழைக்க முடியும்! அவனுடைய சிறு வயதுகளில் மண்டையைக் குடைந்து கொண்டிருந்த பல சமாச்சாரங்களில் இதுவும் ஒன்று. தன்னுடைய அம்மா, அப்பாவிடம் இது குறித்துக் கேட்டு ஒரு நாளும் அவனால் எந்தத் தெளிவான பதிலையும் பெற முடிந்ததில்லை. கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களைக் கேட்பதற்கும் துணிச்சல் வந்திருக்கவில்லை. இத்தனைக்கும் சுலபமாக வேலை வாங்கும் விஷயத்தை முதலில் அவனுக்கு அறிமுகப்படுத்தியவர்களே அவர்கள்தாம். இருந்தாலும் அவர்களைக் கேட்கத் தோன்றவில்லை. பாடப் புத்தகங்களிலெல்லாம்கூட சந்தேகம் கேட்பது என்பது அவனுக்கு ஒரு அதிகப்படியாகவே மனதுக்குள் விழுந்திருந்தது. தன்னுடன் படிக்கும் பையன்களும், புள்ளைகளும் எழுந்து நின்று சந்தேகம் கேட்டால் தொடர்ந்து அவர்கள் உட்காரும் வரை வாயொட்டாது அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பான். எப்படி அவர்களால் இப்படி துணிச்சலாகக் கேட்க முடிகிறது. சில சமயங்களில் கேள்வியாளர்கள் ,ஆசிரியர்களின் புதிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது அடி வாங்கிய சம்பவங்களும் உண்டு. வம்பை விலை கொடுத்து ஏன் வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொள்வான். வகுப்பில் புரியாத விஷயங்களை சில சமயம் வகுப்புத் தோழர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான்.
வீட்டில் அக்கா இருந்தாலும் அவளிடம் கேட்பதற்குப் பெரும்பாலும் அவன் அதை விரும்ப மாட்டான். நீயா, நானா என்று எல்லா விஷயங்களிலும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும்போது இப்படி உதவி கேட்க நேர்ந்தால், தன்னுடைய நிலைமை கீழிறங்கி விடக்கூடும் என்று உள்ளூர அவனுடைய எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.
இளம் வயதுகளில் பானுவும் அவள் அம்மாவும் சேர்ந்து கூலி வேலைக்குப் போய் வருவதுண்டு. பள்ளி நாட்களில் அவள் எந்தக் காரணத்தைக் கொண்டும் விடுப்பு எடுத்து இருந்ததில்லை. சனி, ஞாயிறு விடுமுறைகளிலும் அரசு விடுமுறை நாள்களிலும் வாய்ப்பு வந்தால் அம்மாவுடன் மிகவும் ஆர்வமுடன் வேலைக் காட்டுக்குக் கிளம்பி விடுவாள். பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பும்போதும், வேலைக் காட்டுக்குக் கிளம்பும்போதும் அந்த முகம் ஒரே சாயலைத்தான் கொண்டிருக்கும். வீட்டை விட்டு எங்கே கிளம்பினாலும் வீடடையும்போது தன்னால் எதையாவது தேடிக் கொள்ள முடியும் என்பதை அந்தப் பருவத்திலேயே புரிந்து வைத்திருந்தாள்போல. வேலை நாட்களில் பள்ளி நாட்களைப் போலன்றி வீடு திரும்பும் போது முகம் வாடியிருக்கும். அவளைப் பார்க்கும் மற்றவர்களுக்குத்தான் அது. உடனடியாக கை, கால், முகம் கழுவி எப்பொழுதும் போல புத்துணர்ச்சிக்குத் திரும்பி விடுவாள். அதற்கு முன்னதாக தம்பிக்குப் பிடித்த பிஸ்கட்டும், சாக்லேட் மிட்டாய்களும் தம்பியின் கைகளில் திணித்திருப்பாள். பயல் எங்கேயாவது விளையாடப் போயிருந்தால் அவனுடைய பள்ளிக்கூடத்துப் பையில் அலுங்காமல் திணித்து விடுவாள். ஆரம்ப நாட்களில் அவன் வீடு அடையும் போது அக்காவிடம் குலைந்தபடி 'அந்த விஷயம்' எங்கே, எங்கே என்று கேட்டு நச்சரிக்கத் தொடங்குவான். சிறிது நேரம் போக்குக் காட்டிவிட்டு பிறகு உண்மையை உடைத்து விடுவாள். அவளுக்கும் சிறிது தீனி கிடைக்கும். ஆசையாய் வாங்கி வாயில் போட்டுக் கொள்வாள். சில சமயம் அம்மாவுக்கும் அவளுடைய கையில் இருந்து ஒரு 'கிள்ளு' கிடைக்கும். என்றென்றைக்கும் விடுபட்டு இருப்பது அவர்களுடைய அப்பா தான். மதியத்துக்கு மேல் அவர் வேறொரு உலகத்துக்குப் போய் விடுவதால் இந்த மாதிரி சமாச்சாரங்கள் அவரை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. ஆரம்பத்தில் அவள் போட்டிருந்த சிறு முயற்சிகள் பலனளிக்காது போயிருந்ததால் பிறகு அதை கைவிட்டு விட்டாள். அம்மாவுக்கு இரு வேறு உலகங்களையும் சற்று தொலைவில் நின்று அததற்கு உரித்தான அம்சங்களுடன் பார்ப்பதற்கான நிதானமும், பொறுமையும் கைவரப் பெற்றிருந்தது.
ஒரு விடுமுறை நாளில் வழக்கமான கூட்டாளிகள் இல்லாததால் அம்மா, அக்காவுடன் மணியும் வேலைக்காட்டுக்கு புறப்பட்டிருந்தான். வீட்டிலிருந்து நேரத்திலேயே புறப்பட்டு காடு, காடாக வெகு நேரம் போய்க் கொண்டிருந்தனர். முதலில் மூன்று பேராகப் புறப்பட்டவர்கள் சிறிது சிறிதாக ஒரு சாரைபோல நகரும் கூட்டத்தை உருவாக்கி இருந்தனர். வயதான பெண்களும், நடுத்தரப் பெண்களும், இளம் பெண்களுமாக ஒரு கலவையாக பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் ஓட்டமும் நடையுமாக போய்க் கொண்டிருந்தனர். அவ்வாறு நிறையப் பெண்களுடன் புழங்காத இடங்கள் வழியாகப் போய்க்கொண்டிருப்பது மணிக்கு புதிய அனுபவமாக இருந்தது. முகம் தெரியாத மனுஷிகளுக்கு நடுவே அப்பொழுது சொந்த அம்மாவிடமும் அக்காவிடமும் கூட ஒரு வித விலகல் தன்மையை அவனால் உணர முடிந்தது. தன்னுடைய வாழ்வில் இதுவரை அனுபவித்திராத ஒன்றாக அது இருந்தது. தன்னை போலவே இன்னொரு பையனும் அந்த கூட்டத்தில் வந்து கொண்டிருந்ததை சிறிது நேரம் கழித்துத்தான் அவனுக்குத் தெரிய கிடைத்தது. இருவருக்கும் இடையே சற்று இடைவெளி இருந்தது. அந்தப் புதியவனை இப்பொழுதுதான் முதல்முறையாக பார்க்கிறான். ஆனால் அவனோ இவனைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. அவன் யார் யாரிடமோ பேச்சுக் கொடுத்தபடி இருந்தான். பதிலுக்கு அவனை மடக்கும் விதமாக சில பெண்கள் எதை எதையோ பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தனர். அவன் எல்லோருக்கும் ஈடு கொடுத்து நடந்து கொள்வதைப் பார்த்தால் தன்னைப்போல முதல் முறையாக வந்தவனாக இருக்கவே முடியாது. நொடிக்கு நொடி அந்த காட்டு சூழல் மணியை நெருக்கிக் கொண்டு போவது போல இருந்தது. தான் ஏன்தான் அம்மா, அக்காவுடன் வருவதற்கு முடிவு எடுத்தோமோ என்று யோசிப்பதற்கு அவனுக்கு வெகு நேரம் ஆகியிருக்கவில்லை. வேலைக்காடு தூரம் என்பதை அவர்கள் சொல்லி இருந்தாலும் வழியில் இவ்வளவு அமளி துமளி இருக்கும் என்று ஏன் சொல்லாமல் போனார்கள் என்று ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. அந்தப் புதியவன் நிச்சயம் அவனுக்கு ஒரு மரண அடி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏறுவெயில் வேறு பின் மண்டையைக் காய்ச்சத் தொடங்கியிருந்தது. 'இந்தக் காடுதானோ, இந்தக் காடுதானோ' என்று போட்ட மனக்கணக்குகள் எதுவும் பலிதமாகாது தொடர்ந்து நடைகள் போய்க் கொண்டிருந்தது. தண்ணீர்த் தாகம் வேறு தொண்டையை சோதிக்கத் தொடங்கியிருந்தது. தண்ணீர் எங்கு கிடைக்கும் என்றும் தெரியவில்லை. யாரிடம் கேட்பது என்றும் புரியவில்லை. இந்த அக்கா சனியனுக்குத் தாகமே எடுக்காதா? கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர் இருப்பதற்கான சூழலையும் காணோம். கால்களும் வேறு துவளத் தொடங்கி விட்டது. உண்மையில், அவன் இன்று யார் முகத்தில் விழித்தானோ என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை எல்லை மீறிப் போய்க் கொண்டிருந்தது.
பனை மரங்கள் வரிசையாக போய்க் கொண்டிருந்த ஒரு காடு வந்ததும் அந்த சாரைக் கூட்டம் ஒரு கிடைக்கு வந்திருந்தது. மணி எவ்வளவு என்று தெரியவில்லை. வீடாக இருந்தால் சுவர்க் கடிகாரம் இருக்கும். சூரியன் கீழ் வானத்திலிருந்து கணிசமான தொலைவில் மேலேறி நேருக்கு நேர் பார்க்க முடியாத ஆகிருதியில் திளைத்துக் கொண்டிருந்தது. தொண்டை வறட்சி இயல்பாக பேச முடியாமல் செய்திருந்தது. சற்றுத் தள்ளி ஒரு பனைமரத்தடியில் ஒரு குடம் வைக்கப்பட்டிருந்தது. அவனுக்கு அதை பார்ப்பதற்கு சொர்க்கத்தை பார்ப்பது போல இருந்தது. அவனுடைய கால்கள் அவனுடைய கட்டுப்பாட்டிலேயே இல்லாமல் குடத்தை நோக்கி நகரத் தொடங்கியது. அதற்குள் அம்மாவிடமிருந்து அவனைத் தடுக்கும் விதமாக ஒரு குரல் கிளம்பியிருந்தது. அம்மாவிடமிருந்து இதுவரை கேட்டிராத ஒரு வித அமுங்கிய குரல். அம்மாவை எரிச்சலுடன் பார்த்தபோது ஏதோ சைகை செய்வது தெரிந்தது. இதற்கிடையில் குடத்தைப் பார்த்தபோது அந்த புதியவன் சாவதானமாக தண்ணீர் குடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அம்மாவின் மீது வெறி தலைக்கேறி இருந்தது. மனதிற்குள் அம்மா மீது ஒரு கெட்ட வார்த்தையை ஓடவிட்டான். என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று குடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். சிறிய கிண்ணம் போன்ற ஒரு பாத்திரம் குடத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. அந்த மயிராண்டியையும் காணோம். கிண்ணத்தில் கை வைக்கப் போகும்போது மறுபடியும் சன்னமான ஒரு குரல் ஒலித்தது. புதிய குரலாக இருந்ததால் நிற்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. திடகாத்திரமான ஒரு பெண்மணி ஓடிவந்து கைகளைத் துடைத்துக்கொண்டு அவசர அவசரமாக மொடக்,மொடக் என்று குடிக்கத் தொடங்கி இருந்தார். ஆத்திரத்தில் அவனுக்கு கண்களில் ஈரம் படரத் தொடங்கியிருந்தது. இரண்டு டம்ளர்கள் குடித்துவிட்டு மூன்றாவது டம்ளரை மோந்து சிறிது தண்ணீர் விட்டு, மணியுடைய கையை தேய்த்து கழுவச் சொல்லிவிட்டு பிறகு டம்ளரை கையில் கொடுத்திருந்தார். குடித்து முடிக்கும் வரை அங்கேயே இருந்து மறுபடியும் வேண்டுமா என்று கேட்டுவிட்டு, டம்ளரை வாங்கி தண்ணீர் மோந்து கொடுத்தார். சற்றேறக்குறைய இரண்டு டம்ளர்கள் உள்ளே சென்ற பின்பே அந்த நீண்ட கிறக்கம் மெதுவாக தணியத் தொடங்கி இருந்தது. மோட்டு வாயை ஈரக் கையால் துடைத்தபடி அம்மாவைத் தேடிய போது தலைக்கு குடுமி முடிந்தபடி தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. அக்காவைப் பார்த்தால் அவளை அந்த கூட்டத்தில் காணோம். திடீரென்று ஒரு பனைமரத்தடியிலிருந்து எழுந்து பாவாடையைக் கீழே இழுத்து விட்டவாறு அம்மாவை அணுகத் தொடங்கினாள்.சிறிது தெம்பு வந்த நிம்மதியில் அவர்களை நோக்கி செல்லத் தொடங்கினான்.
அதற்குள் ஒரு பெருங்கூட்டமே கடலைக் காட்டுக்குள் இறங்கி இருந்தது. கண்மூடித் திறப்பதற்குள் இத்தனை கூட்டம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. அந்த காட்டுவெளி சிறிது நேரத்துக்குள் சந்தையடியாக மாறியிருந்தது. எந்த குரலையும் இனம் கண்டுணர முடியாதபடி குரல்களின் கூட்டுக் கலவையாக மாறியிருந்தது. எல்லோருமே பெண்கள். இனி வேலை முடியும் வரை தனியாக வீட்டுக்கு செல்ல முடியாது. அப்படியே செல்ல முடிந்தாலும் அம்மா விடாது. பனைமரத்தடியைத் தவிர வேறு எங்கும் நிழல்களைத் காணோம். இந்த வெயிலில் எப்படி அம்மாவும், அக்காவும் தினமும் வேலை செய்ய முடிகிறது என்ற எண்ணம் எழுந்தது. பழைய லுங்கித் துணிகளை தலையில் சுற்றிக் கட்டி இருந்தனர். வீட்டில் அவன் பார்க்கும் அக்கா இல்லை இவள். இவ்வளவு அந்நியத் தன்மை இந்த நாளின் தொடக்கத்திலேயே தனக்கு ஏன் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. தனக்கு மறுபடியும் தாகம் எடுத்தால் தானாகவே எழுந்து சென்று தாகத்தைத் தீர்த்துக் கொள்ள முடியாது போலவும் தெரிந்தது. நடந்து முடிந்திருந்த சம்பவங்களிலிருந்து அப்படித்தான் அவனால் ஒரு முடிவுக்கு வந்திருக்க முடிந்தது. அம்மாவைக் கேட்டாலும் உடனடியாக தீர்வு கிடைக்குமா என்றும் தோன்றவில்லை. எண்ணங்கள் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்த போது மறுபடியும் இரண்டு பெண்கள் பனைமரசாரி வழியாக இரண்டு குடங்களுடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. தனது கைகளை சுத்தமாக கழுவியவர்களாகத்தான் அவர்கள் இருப்பார்கள். அவர்கள் பக்கத்தில் நெருங்கியதும் அவனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். தன்னுடைய பெயரையும் பள்ளிக்கூடப் பெயரையும் சொன்னதற்கு முதலில் அம்மா, அப்பாவைக் குறித்துக் கேட்டு தெரிந்து கொண்டனர். தாகமாக இருந்தால் யாரையாவது கூப்பிடும்படி சொல்லிவிட்டு அவர்களும் காட்டுக்குள் இறங்கினர். சரி என்று சொல்லிவிட்டு அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். காட்டுக்குள் அவ்வப்பொழுது யார், யாரோ வேலை வாங்கும் சத்தம் வெவ்வேறு சுருதிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆறுதலான ஒரு வார்த்தைக்காக அம்மாவையோ அக்காவையோ எதிர்பார்த்து நிழலில் ஒதுங்கி இருந்தான். காய்ந்து தொங்கிக் கொண்டிருக்கும் பனையோலைகள் சிறிய காற்றுக்கு சரசரவென சத்தங்களை எழுப்பியபடி இருந்தது. ஒரு சில காகங்கள் இனம் புரியாத மொழியில் கரைந்து கொண்டு கிடந்தது. வானம் மேகத் திட்டுகள் எதுவும் இன்றி வெறுமைக் கோலம் பூண்டிருந்தது. நிமிடத்திற்கு நிமிடம் வெக்கை மண்ணில் இருந்து கசிந்து கொண்டிருந்தது. முதுகுப் பகுதியில் வியர்வைத் துளிகள் சிற்றோடை போல வடிய தொடங்கியது. நெற்றியிலும், கழுத்திலும் வியர்வையின் கசகசப்பு தாளமுடியாது போய்க் கொண்டிருந்தது. தானும் அந்த பெண்களைப் போல ஒரு கடினமான வேலையை செய்து கொண்டிருப்பது போல தோன்றியது. தன்னுடைய அக்காவின் நினைவு வந்ததும் கூட்டத்தில் எங்காவது தட்டுப்படுகிறாளா என்று பார்த்தான். அவளைப் போலவே பல அக்காக்கள் காய்ப் பம்பலில் ஈடுபட்டிருந்ததால் சட்டென தெரிந்து கொள்ள முடியவில்லை. பேசாவிட்டாலும் அவளைக் கண்டுபிடித்து விட்டால்கூட ஒரு ஆறுதலாக இருக்கும் என்று தோன்றியது. வேறு யாருடைய பார்வையும் அவன் மீது ஒரு பரிவைக் கொண்டு வந்திருக்கவில்லை. அதை மாற்றுவதற்கு அவன் அவர்களிடம் என்ன செய்து காட்டினால் ஆகும் என்றும் தெரியவில்லை. அவ்வப்பொழுது அவனைக் கண்டும் காணாமலும் சிலர் வந்து தண்ணீர் குடித்துவிட்டுச் சென்றனர். ஒரு சிலருக்கு யாரோ ஒருவர் கிண்ணத்தில், தனக்கு நேர்ந்தது போலவே, நீர் எடுத்துத் தருவதும் இன்னும் சிலருக்கு வாயில் குவிக்கப்பட்டிருந்த கரங்கள் வழியாகத் தண்ணீர் சென்று கொண்டிருந்ததையும் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். சிலர் குனிந்தபடி வாய் வழியாக ஒற்றைக் கையை மட்டும் பயன்படுத்தினர். இரண்டு விதங்களிலும் பனைமர மறைவில் நின்றபடி கற்பனையில் தாகம் தீர்த்துக் கொள்ளப் பார்த்தான். முழங்கை வழியாக தப்பிய நீர்த்துளிகள் வடிந்து கொண்டிருந்தது.
சூரியன் நடு உச்சியைத் தாண்டத் தொடங்கியிருந்தபோது எல்லோருக்கும் சாப்பிடுவதற்கு அனுமதி கிடைத்திருந்தது. அவரவர்க்கு ஏற்றபடி தனித்தனியாகவோ, குழுக்களாகவோ உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் மூவருக்கும் சிறிதாக ஒரு நிழல் இடம் கிடைத்தது. அம்மாவும் அக்காவும் வியர்வையில் குளித்திருந்தனர். தலைக்கட்டுகளை அவிழ்த்து ஒரு பக்கமாக காயப் போட்டனர். பானு தம்பியை பார்த்து சிரிக்க முயன்றாள். அவனால் சிரிக்க முடியவில்லை. இருவரிடமிருந்தும் புறப்பட்டிருந்த உடலின் கதம்ப மணம் அவனுடைய மூக்கை சிறிது சுளிக்கச் செய்தது. அவனையறியாது சிறிது நகர்ந்து உட்கார்ந்து கொண்டான். சற்று வயதானவர்கள் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டனர். ஊர் வம்புடன் சேர்த்து சாப்பாட்டை வாயில் போட்டுக் கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் முதன் முதலாக பார்ப்பதால் அவனுக்கு எல்லாமே புதிதாக இருந்தது. வேலையாட்களைப் பண்ணாட்டு செய்து கொண்டிருந்த இரண்டு மூன்று பேரை எங்கோ காணவில்லை. அந்த இடத்துப் பெண்கள் திடீர் திடீரென தோன்றுவதும் மறைவதும் பயலைக் கிளர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. வெட்டப்பட்டு காய்ந்திருந்த சிறிய பனையோலையை எடுத்து பானு விசிறத் தொடங்கினாள். சிறிய காற்று முகத்தில் கணநேரப் புன்னகையைக் கொண்டு வந்தது. நாம் எப்பொழுது வீட்டுக்கு போவோம் என்று அம்மாவிடம் கேட்டவுடன் பள்ளிக்கூடம் விடும் நேரத்துக்கு சற்று கழித்து இங்கிருந்து புறப்பட்டு விடலாம் என்று சொல்லிவிட்டு, அவனுடைய கையைப் பிடித்து இழுத்து சேலை முந்தானையால் நெற்றி, கன்னங்களை அழுந்தத் தேய்த்தார். சேலைக்குள் நாம்பியிருந்த கையளவு காய்களை எடுத்து டவுசர் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும்படி மெதுவாகச் சொன்னார். ஆசையில் இரண்டு மூன்று காய்களின் தொலிகளைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டான். முத்துக்கள் நுரையுடன் வாயில் அரைபட்டு பச்சை மணத்துடன் தொண்டைக்குள் இறங்கியது. அக்கா பங்காக அவளிடமிருந்தும் சிறிது காய்கள் கிடைத்தது. காய்கள் கைகளில் இருந்து மாறும் போது அவளிடமிருந்து மறுபடியும் அதே சிரிப்பு. அவனிடமிருந்து மகிழ்ச்சியில் சிறிய புன்னகை ஒன்று வரலாமோ வேண்டாமோ எனும்படிக்கு கிளம்பி இருந்தது. அக்காவின் முகத்தைப் பார்த்தால் அவ்வப்பொழுது முத்துக்களை பதம் பார்த்திருந்ததைப் போல இருந்தது. கைவிரல்களின் அடிப்புறத்தில் மெல்லிய சிவப்பில் நீர்க்கொப்புளங்களும் சிராய்ப்புகளும் ஏற்பட்டிருந்தது. அம்மாவின் கையைப் பார்த்தபோது அந்த வடுக்களைக் காணோம். உள்ளங்கையும் விரல்களும் சேருமிடத்தில் கல்லைப் போன்ற சொரசொரப்பு காணப்பட்டது. அது பல நாட்களாக இருந்து வருவதைப்போல முற்றியிருந்தது. அம்மாவிடமும், அக்காவிடமும் காலையில் ஏற்பட்டிருந்த கோபம் அப்பொழுது முற்றாகத் தொலைந்திருந்தது. இனி எப்படியாவது பொழுதை சமாளித்து விட முடியும் என்று நம்ப முடிந்தது. காலையிலிருந்து இவ்வளவு நேரத்தில் அந்த இடம் மிகவும் பழக்கப்பட்டுப் போயிருந்தது. எதையேனும் விளையாடியபடியோ, வேவு பார்த்தபடியோ பொழுதை இனிமையாக்கிக் கொள்ளவும் முடியும்.
வீடு திரும்பும் போது மணிக்கு பலவிதங்களில் மகிழ்ச்சியான மனநிலைகள் வந்திருந்தது. சுட்டெரிக்கும் சூரியன் இப்பொழுது எங்கோ தொலைவில் இறங்கியிருந்தது. காற்றும் லேசாகக் கிடைத்தது. இப்பொழுது அந்தப் பாதையில் அவன் புதியவன் அல்ல. ஒரு சில பெண்கள்கூட அவனிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கியிருந்தனர். தயக்கமின்றி அவர்களுடன் பேசவும் முடிந்தது. இருந்தாலும் ஏதோ ஒரு இடைவெளி மட்டும் சன்னமாக இருந்துகொண்டிருந்தது. அதை இப்போதைக்கு எதுவும் செய்வதற்கு இல்லை. அக்காவும் அம்மாவும் சன்னமாக நடை போட்டுக் கொண்டிருந்தனர். வீட்டில் புறப்பட்டதிலிருந்து இப்பொழுதுதான் அவனால் அவர்களை இயல்பாகப் பார்க்க முடிந்தது. சிறிது சிறிதாக ஆட்கள் குறையத் தொடங்கி ஒரு சமயம் அவர்கள் மூவர் மட்டுமே மிஞ்சியிருந்தனர். இப்பொழுது தான் முழுமையான இயல்பு நிலைக்கு அவர்கள் திரும்பி இருப்பது போன்ற ஒரு மயக்கம் அவனுக்கு ஏற்பட்டது. ஊகங்கள் தம்முடைய பாட்டுக்கு மனிதர்களை பல வழிகளிலும் இழுத்துச் செல்லக்கூடும். ஊருக்குள் நுழைந்ததும் வழக்கமான கடையில் வெள்ளைச் சர்க்கரையும் டீத்தூளும் அம்மா வாங்கினார். கடன் அட்டை இருந்தது. அம்மா வாங்கிய பிறகு வழக்கம் போல அக்கா வாங்குவதற்குப் படி ஏறும்போது வலுக்கட்டாயமாக இன்றைக்கு எதுவும் வேண்டாம் என்று தடுத்து விட்டிருந்தான். பானுவுக்கு தம்பியின் காரியம் ஆச்சரியமாக இருந்தது. அம்மாவும் கேட்டதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. 'ஏண்டா தம்பி, ஏண்டா தம்பி' என்று வீடு சேரும் வரை அக்கா பல்லவி பாடிக் கொண்டே வந்தாள். தன்னிடம் உருக்கொண்டிருந்த கனத்த மனத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மண்தடத்தில் அங்கும் இங்கும் திரிந்தபடி நடந்து கொண்டிருந்தான்.
அதற்குப் பிறகு அவர்களுடன் சென்றிருந்த நினைவு எதுவும் மணிக்கு இல்லை. அந்த ஒரு நாளே வாழ்வின் முக்கியமான சில விஷயங்களை அனுபவித்துத் தெரிந்து கொள்வதற்குப் போதுமானதாக இருந்தது. அக்கா இருக்கும் குடும்பத்தில்தான் தானும் இருக்கிறோம் என்ற நினைவும் அக்காவை போல அந்த குடும்பத்தில் ஒரு பையன் என்ற வகையில் தனக்கும் சில பொறுப்புகள் இருக்கக்கூடும் எனவும் அவைகளை சிறப்புடன் செய்து கொண்டு போக வேண்டும் என்றெல்லாம் பல கணக்குகளை போட்டுக் கொண்டிருந்ததை அந்த இரு பெண்களும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அக்கா அவனுக்கு வாங்கிக் கொடுத்திருக்கும் நொறுக்கு தீனிகள்தான் எத்தனை, எத்தனை! இப்பொழுது தம்பி என்ற வகையில் அவனும் தனது அக்காவுக்காக எதையாவது செய்தாக வேண்டிய கட்டத்தில் இருக்கிறான்....
அக்காவுக்காக சில வேலைகளை செய்து பார்த்திருந்த மணிக்கு பிறகு வந்த மேல்நிலை வகுப்புகளில் தன்னுடைய படிப்புக்கான செலவினங்களில் கணிசமான சில பகுதிகளை சுய சார்புடன் செய்து கொண்டு போகும் அளவுக்கு அவனை அந்த உழைப்பு உயர்த்தி இருந்தது.
ஓய்வு நேரங்களில் பணம் வரும் வழி குறித்த பல விஷயங்களை அவனால் கிரகித்துக் கொள்ள முடிந்தது. அவனது ஆலோசனைகள் ஏராளமான நண்பர்களுக்குக் கலங்கரை விளக்கமாக இருந்துள்ளது. அக்கா, அம்மாவிடம் வெகு நாட்களாக ஒரு சிறிய தொங்கட்டான் வேண்டுமென்று அவ்வப்பொழுது ஒரு கோரிக்கையாக வைத்து வருவதை கவனித்து வந்திருந்தவனுக்கு அந்த நாளிதழின் பகட்டான விளம்பரம் மிகப்பெரிய வெளிச்சத்தைப் பாய்ச்சி இருந்தது. அந்த வெளிச்சத்தின் மையப் புள்ளியிலிருந்து அழகிய தொங்கட்டான்கள் அணிந்த தனது அன்புக்குரிய அக்கா முகம் முழுக்க பூவாக சிரித்தவாறு அவனை நோக்கி நடை பயிலத் தொடங்கி இருந்ததை அவனால் தெளிவாகப் பார்க்க முடிந்தது
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்