பாளை ப.இசக்கிராஜன்
சிறுகதை வரிசை எண்
# 76
அப்படி என்ன அவசரம்.
நான் வேலை பார்ப்பது ஒரு சின்ன தனியார் அலுவலகத்தில் தான். அங்கு என்னையும் சேர்த்து மொத்தமே ஐந்து ஊழியர்கள் தான். எங்களது முதலாளி மிகவும் நல்லவர். பெற்ற குழந்தைகளைப் போல் எங்களைப் பார்த்துக் கொள்வார்.
என் மனைவி காந்திமதியின் தம்பி முத்து அரசாங்க அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்கிறான். அவனுக்கு என்ன வேலை என்பது அவனுக்கே தெரியாது. அவன் நினைத்த நேரத்தில் வேலைக்குப் போவான். ஓய்வெடுக்க அடிக்கடி வீட்டிற்கு வந்து விடுவான். சைடு வருமானம், கணக்கில்லாமல் நிறையவே வருகிறது. நானும் அவனைப் போன்ற ஒரு ஊழியன் என்று காந்திமதி நினைக்கிறாள்.
எங்க முதலாளி கொடுக்கும் சில முக்கிய வேலைகளைச் சரியான நேரத்தில் முழுமையாகச் செய்யா விட்டால், அவ்வளவு தான். மனிதர் திருநெல்வேலி மொழியில் இருக்கும் எல்லா கெட்ட வார்த்தைகளாலும் அர்ச்சனை செய்து விடுவார். அந்த வார்த்தைகளை நினைத்தால் இப்போது கூட எனக்கு அடி வயிற்றைக் கலக்குகிறது. அதனால் அவர் "அவசரம்" என்று சொல்லிக் கொடுக்கும் ஒரு வேலையை, எவ்வளவு நேரமானாலும், முடித்து விட்டுத் தான் வீட்டிற்குக் கிளம்புவேன்.
இன்றைக்கு அவசர வேலை ஒன்று கொடுத்துள்ளார். இன்றைக்குள் அதைச் செய்து முடித்தாக வேண்டும். முடித்த பிறகு, சில தகவல்களை சென்னையில் இருக்கும், அரசு அலுவலகம் ஒன்றுக்கு மெயிலில் அனுப்ப வேண்டும். அனுப்பிய பிறகு, முதலாளியிடம் அதை உறுதிப் படுத்த வேண்டும். அதற்குப் பிறகு தான் வீட்டிற்கு வர முடியும்.
முத்துவைப் போல், என்னால் நினைத்த நேரத்திற்கெல்லாம் வேலைக்குப் போக முடியாது, வீட்டுக்கு வர முடியாது என்பதை, எத்தனையோ தடவை காந்திமதியிடம் எடுத்துச் சொல்லி விட்டேன். தனியார் கம்பெனியில் முதலாளி நினைத்தால், தொழிலாளியை, எப்போது வேண்டுமானாலும், வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்பது பற்றியும் சொல்லிவிட்டேன். அவள் ஓரளவு புரிந்து கொண்டாலும், கிளிப் பிள்ளை மாதிரி "சீக்கிரம் வீட்டுக்கு வாங்க, சீக்கிரம் வீட்டுக்கு வாங்க" என்று திரும்பத் திரும்பத் சொல்லி, புலம்புவாள்.
அன்றைக்குப் பார்த்து எனது மனம் ஒரு சம நிலையில் இல்லை. படபடப்பாக இருந்தது. இப்படி ஒரு மன அழுத்தத்தில் இருக்கும்போது தான் காந்திமதியிடம் இருந்து விடாமல் ஃபோன் வந்து கொண்டேயிருந்தது. வழக்கம் போல், "சீக்கிரம் வீட்டுக்கு வாங்க" என்று சொல்லி புலம்பப் போகிறாள். இப்போதுள்ள மன நிலையில், ஃபோனை எடுக்க வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஃபோன் விடாமல் வந்து கொண்டே இருந்தது. ஃபோனை எடுக்கும் வரை, நம்மை இருக்க விட மாட்டாள் என்பது நன்றாகப் புரிந்தது. அவள் சொல்வதைச் சொல்லட்டும்... கேட்டுத் தொலைப்போம் என்று முடிவு செய்து, ஃபோனை எடுத்தேன்.
“என்னங்க.. அத்தை திடீர்னு மூச்சு விட ரொம்ப கஷ்டப் படுதாங்கங்க.. நெஞ்சு வலிக்கிறது என்று வேறு சொல்கிறார்கள். இதை உங்களிடம் சொல்லத்தான் ரொம்ப நேரமா ஃபோன் பண்ணிக் கொண்டே இருக்கிறேன். உங்களைப் பிடிக்க முடியவில்லை. இப்போது தான் கனெக்ஷன் கிடைத்தது. உடனே வீட்டுக்கு கிளம்பி வாங்கங்க…"
"அலுவலகத்தில், நான் இருக்கும் இடத்தில், மொபைல் டவர் சரியாக கிடைக்காதும்மா. அது தான் நீ ஃபோன் போட்ட போது எனக்குக் கிடைக்காமல் இருந்திருக்கிறது. சரி... சரி.. இப்பவே கிளம்பி வீட்டுக்கு வருகிறேன். நீ பயப்படாமல் இரு. அம்மாவின் நெஞ்சை மட்டும் விடாமல் தடவி விட்டுக் கொண்டே இரு.. சரியா…?”
“சரிங்க.. சீக்கிரம் கிளம்பி வாங்கங்க.. பக்கத்து வீடுகளில் எல்லாம் உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு அடைந்து கிடக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் யாருமே இல்லைங்க. தனியாக இருந்து அத்தையைப் பார்த்துக் கொள்ள ரொம்ப பயமா இருக்குங்க."
"பயப்படாம தைரியமா இரும்மா. இதோ இப்பவே கிளம்புகிறேன்" என்றேன். அன்றே செய்து முடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டிருந்த வேலைகளை அப்படியே நிறுத்தினேன். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்ற தகவலை முதலாளியிடம் சொன்னேன். அதற்கு அவர் "செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். உடனே வீட்டுக்குப் போ. முதலில் அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக் கொண்டு போய் கவனி" என்று ஆறுதலாகப் பேசினார்.
என் நண்பன் சண்முகம் எனக்கு மிகவும் நெருக்கமானவன். யார் எந்த உதவி கேட்டாலும் மனமுவந்து உதவுபவன். அவனுக்கு ஃபோன் போட்டு, "ஏ.. சண்முகம். அம்மாவுக்கு நெஞ்சு வலியாம். கூடவே மூச்சுத் திணறலும் இருக்கிறதாம். இப்போது தான் காந்திமதி தகவல் சொன்னாள். கைச் செலவுக்கு கொஞ்சங்கூட என்னிடம் பணம் இல்லை. அதனால் கொஞ்சம் பணத்தோட ஆஸ்பத்திரிக்கு வாயேன்?" என்றேன். அவன் "எந்த ஆஸ்பத்திரி" என்று கேட்டான். நானும் விவரம் சொன்னேன். "அந்த ஆஸ்பத்திரிக்கா?" என்று ஏதோ ஒரு பொடி வைத்துக் கேட்டான். "பணத்துடன் அங்கேயே நேராக வந்து விடுகிறேன். எதுக்கும் பயப் படாதே. பார்த்துக் கொள்ளலாம்" என்று சொல்லி தைரியம் கொடுத்தான்.
அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. கூட வேலை பார்க்கும் கருப்பசாமியிடம் தகவலைச் சொல்லி, அவனது வண்டிச் சாவியைக் கேட்டு வாங்கினேன். அவனைப் பார்த்து "தம்பி .. கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணி உடனே வீட்டுக்கு அனுப்பி வைப்பாயா?" என்று கேட்டேன். அவனும் "அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் அண்ணாச்சி.. அம்மாவுக்கு ஒன்றும் ஆகாது. கவலைப் படாமல் நீங்க வீட்டுக்குப் போங்க" என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தான். ஒரு வித பட படப்புடன் வீட்டுக்குக் கிளம்பினேன்.
வீட்டுக்கு நான் போய்ச் சேருவதற்கும், தம்பி கருப்பசாமி ஏற்பாடு செய்திருந்த தனியார் ஆம்புலன்ஸ் வருவதற்கும் சரியாக இருந்தது. அம்மாவை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றினோம். ஆம்புலன்சில் அம்மாவுக்கு பக்கத்தில் காந்திமதி உட்கார்ந்தாள். வீட்டிலிருந்து சரியாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு பிரபல இருதய ஆஸ்பத்திரி இருக்கிறது. அதை நோக்கி ஆம்புலன்ஸ் கிளம்பியது. மோட்டார் பைக்கில், நானும் பின் தொடர்ந்தேன். எனது இதயத் துடிப்பும் பைக்கின் டப் டப் சத்தம் அளவுக்கு துடித்தது.
நாங்க ஆஸ்பத்திரி போய்ச் சேர்வதற்குள், சண்முகம் அங்கு வந்து சேர்ந்து விட்டான். ரிசப்ஷனில் சொல்லி ஸ்ட்ரெட்சருக்குண்டான ஏற்பாடுகளைச் செய்து விட்டு, எங்களுக்காக போர்டிகோவில் காத்து நின்றான். என்னைப் பார்த்ததும், அருகில் வந்து, ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை கைகளில் திணித்தான். "இப்போதைக்கு இதை வைத்துக் கொள்." என்று பாசத்துடன் கூறினான். பதட்டமாக இருந்த நான் அந்தப் பணத்தை வாங்கி பாதுகாப்பாக வைத்துக் கொண்டேன். எந்தக் கேள்வியும் கேட்காமல் அவசரத்துக்கு பணம் கொடுத்து உதவுகிறானே சண்முகம். அவனுக்குத் தான் எத்தனை பெரிய மனசு என்று நினைதுக்கொண்டு, அவனை மனதுக்குள் வாழ்த்தினேன். கண்களில் வடிந்த நீரை யாரும் பார்ப்பதற்கு முன்பு, கைக் குட்டையால் துடைத்தேன்.
ஆஸ்பத்திரி நல்ல சுத்தமாக பராமரிக்கப் பட்டிருந்தது. அங்குள்ள பணியாளர்கள் பரிவுடன் நடந்து கொண்டார்கள். அந்த சூழ் நிலையே ஆறுதலாக இருந்தது. ரிசப்ஷனில் பணத்தைக் கட்டி, அம்மாவுக்கு அட்மிஷன் போடும் வேலையை விரைந்து முடித்தோம்.
பைக்கை என்னிடம் கொடுத்து விட்டதால், வேறு ஒரு வண்டியில் கருப்பசாமியும் வந்து விட்டான். "உங்களிடம் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்கச் சொல்லி, முதலாளி எனக்கு ஃபோன் பண்ணி சொன்னார்கள்" என்று கூறி பணத்தை என்னிடம் கொடுத்தான். இப்போது என்னால் பேச முடியவில்லை. நா தழு தழுத்தது. நமக்கு உதவ இத்தனை நல் இதயங்களா என நினைத்த போது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது. அதில் கொஞ்சம் என் வாயில் பட்டு உப்பு கரித்தது. உண்மையான உழைப்பிற்கு முதலாளி காட்டுகின்ற அன்பைப் பற்றி பெருமையாக கருப்பசாமி என்னிடம் கூறி நெகிழ்ந்தான்.
அம்மாவோட நல்ல நேரம்.. நாங்கள் சென்ற நேரத்தில் ஆஸ்பத்திரியின் பெரிய டாக்டர் அங்கு இருந்தார். இருதயத்தில் என்ன கோளாறு என்று கண்டு பிடிப்பதிலும், சரியான சிகிச்சையைக் கொடுப்பதிலும், அவர் பெரிய கில்லாடி. அவரது தனி அறையில் வைத்து அம்மாவை நன்றாக சோதனை செய்தார். சரியான நேரத்தில் அம்மாவைக் கூட்டிக் கொண்டு வந்ததற்காக என்னை மிகவும் பாராட்டினார். கொஞ்சம் தாமதமாகிப் போயிருந்தாலும் உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கும் என்றார். அம்மாவை ICU வில் சேர்க்க உடனடி ஏற்பாடு செய்தார்.
சிறிது நேரத்தில் மாத்திரை மருந்து எழுதிய ஒரு சீட்டை என்னிடம் கொடுத்தார்கள். அங்கேயே இருக்கிற ஃபார்மசிக்குப் போனேன். அங்கு கூட்டம் இல்லை. மருந்துகளை வாங்கி் டாக்டரிடம் கொண்டு போய் கொடுத்தேன். ஒன்றிரண்டு விலை உயர்ந்த ஊசிகளை அம்மாவுக்கு உடனே போட்டார்கள்.
ICU வில் அம்மாவுடைய பெட் டிற்கு அருகிலிருந்த திரையில் மேலும் கீழுமாக சில கோடுகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. கண்ணாடிக் கதவு வழியாக, பயத்துடனும், கலங்கிய கண்களுடனும் அந்தக் காட்சியைப் பார்த்தோம். அப்போது எங்களுடைய இதயத் துடிப்பும் வேகமாக ஏறி ஏறி இறங்கியது. இதை எங்களால் நன்றாக உணர முடிந்தது.
நாங்கள் தங்குவதற்கென்று, பக்கத்திலேயே ஒரு அறை ஒதுக்கிக் கொடுத்தார்கள். நானும் மனைவியும், கவலை தோய்ந்த முகங்களுடன் அங்கேயே தங்கினோம். தகவலறிந்து, பல நண்பர்களும் உறவினர்களும் அடுத்தடுத்து வந்த படியே இருந்தார்கள். அம்மாவின் உடல் நலம் பற்றி விசாரித்துச் சென்றார்கள். அவர்களது பாசமான வரவும், அன்பான விசாரிப்புகளும், சலனப்பட்டிருந்த எங்களது மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தன.
எங்க முதலாளி மறுநாள் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். அவர் என்னைப் பார்த்து "செலவைப் பற்றி நீ ஒண்ணும் கவலைப் படாதே.. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒங்க அம்மாவை நல்ல படியாக பார்த்துக்கொள். இந்த டாக்டர் அவரது அப்பாவைக் காட்டிலும் திறமையானவர். ஃபீஸ் கொஞ்சம் அதிகம் போலத் தெரியும். ஆனால் வைத்தியம் நன்றாகப் பார்ப்பார்" என்று தைரியம் கொடுத்தார்.
நண்பன் சண்முகமும், அம்மாவைப் பார்க்க நாள் தோறும், காலையிலும் மாலையிலும் வந்து போனான். என்ன செய்வது, எப்படிச் செய்வது என்று மனது குழம்பிப் போயிருந்த நேரத்தில் சண்முகத்தின் அருகாமையும், முதலாளியின் ஆறுதல் சொற்களும் எனக்கு தெம்பைக் கொடுத்தன.
அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறோம் என்ற தகவல் காந்திமதியின் தம்பி முத்துவுக்கு யார் மூலமாகவோ கிடைத்திருக்கிறது. எங்கே நான் அவனிடம் மருத்துவச் செலவுக்கு பணம் கேட்டு விடுவேனோ என்று பயந்திருக்கிறான். அதனால் குடும்பத்துடன், அவனது மனைவியின் ஊரான தென்காசிக்கு புறப்பட்டுச் சென்று விட்டான். இரண்டு நாள் கழித்து என்னை ஃபோனில் தொடர்பு கொண்டான். அப்போது தான் தகவல் தெரியும் என்ற பெரிய பீடிகையுடன், அம்மாவின் உடல் நலம் பற்றி விசாரித்தான். உடல் நிலை நன்றாக இருக்கிறது என்று கூறி, விசாரிப்புக்கு நன்றியும் தெரிவித்தேன்.
ஆஸ்பத்திரியில் அம்மாவைச் சேர்த்து, ஒரு நாளாச்சு.. ரெண்டு நாளாச்சு... மூணு நாளாச்சு.. 25000, 20000, 10000 என்று பணம் மட்டும் கொஞ்சம் வேகமாகவே கரைந்து கொண்டிருந்தது. மேற் கொண்டு பணத்திற்கு என்ன செய்வது என்ற அழுத்தத்தில் பட படப்பு கூடிக் கொண்டேயிருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவு அறைக்கு உள்ளே போய், அம்மாவைப் பார்க்க நான்காவது நாள் மாலை தான் எனக்கும் காந்திமதிக்கும் அனுமதி கொடுத்தார்கள்.
அன்றைக்குத் தான், படுக்கையிலிருந்து எழுந்து நன்றாக உட்கார அம்மாவால் முடிந்தது. எங்களிடம், நன்றாகப் பேசத் தொடங்கினாள். டாக்டர் அனுமதி கொடுத்திருந்தபடி, காந்திமதி வீட்டுக்குப் போய் சமைத்து சாப்பாடு கொண்டு வந்திருந்தாள். வீட்டுச் சாப்பாட்டை, அம்மாவுக்கு பாசத்துடன் ஊட்டி விட்டாள் காந்திமதி. அம்மாவும் நன்றாகச் சாப்பிட்டாள்.
அம்மாவின் உடல் நலம் முழுமையாகத் தேறி விட்டது என்பதை எங்களால் நன்றாக உணர முடிந்தது. அம்மாவைத் தனி அறைக்கு மாற்றுவது பற்றியோ, டிஸ்சார்ஜ் செய்வது பற்றியோ, யாருமே பேசவில்லை. எப்போது தனி அறைக்கு அனுப்புவீர்கள் என்று நர்சுகளிடம் மெதுவாகக் கேட்டோம். அதற்கு அவர்கள் " எங்களுக்குத் தெரியாதுங்க. எங்களைப் பொறுத்தவரை அம்மா குணமாயிட்டாங்க. எப்போ வேண்டுமானாலும் டாக்டர் போகச் சொல்லி விடுவார். அதுவரை கொஞ்சம் பொறுத்திருங்க" என்று தயங்கித் தயங்கிச் சொன்னார்கள். டாக்டரிடமும் நேரடியாகக் கேட்டோம். அதற்கு அவர் "அம்மாவை இன்னும் இரண்டு நாட்கள் கண்காணிப்போம். அதற்குப் பிறகு நானே சொல்கிறேன்" என்றார்.
டாக்டர் போன பிறகு அம்மா, என் கைகளைப் பிடித்துக் கொண்டு "எனக்குத் தான் இப்போது நல்ல குணமாகி விட்டதேடா. ஒனக்கு இருக்க பணக் கஷ்டத்தில் எதுக்குப் போய் இப்போது அநாவசியமாக இவ்வளவு பணத்தை தண்ணீராய் செலவு செய்கிறாய்? என்னைப் பார். எனக்கு ஒண்ணும் ஆகாது. பயப்படாதே. எனக்கு பேரனோ பேத்தியோ பிறந்து, அவர்களின் கல்யாணத்தைப் பார்க்கும் வரை என் உயிர் இருக்கும். கவலையே படாதே. ஒங்க அப்பா இப்போ இருந்திருந்தால் கூட உன்னைப் போல் இப்படி என்னைக் கவனித்திருக்க மாட்டார்கள். காந்திமதி என் மகளைப் போல் எப்படி பாசமாகவும் பொறுப்பாகவும், கவனித்துக் கொள்கிறாள் பார். எனக்கு இதை விட வேறு என்னப்பா வேண்டும். சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டுப் போப்பா." என்று நிறுத்தி நிதானமாகச் சொன்னாள். தனது மகன் அங்கே இங்கே வட்டிக்கு கடன் வாங்கி நிறைய செலவு செய்கிறானோ என்ற கவலை அவளுக்கு. எனக்கு உதவ நிறைய நல்லிதயங்கள் இருக்கும் போது நான் ஏன் வட்டிக்கு கடன் வாங்கப் போகிறேன். அடுத்து வந்த நாட்களிலும், அம்மாவை டிஸ்சார்ஜ் செய்வது பற்றி டாக்டர் எந்த பதிலும் சொல்லாமல், அமைதியாகவே இருந்தார். இதனால், என்னுடைய இதயத் துடிப்பும், இரத்த அழுத்தமும் ஒவ்வொரு நொடியும் ஏறிக் கொண்டேயிருந்தது. நெஞ்சு பட படவென்று துடிக்க ஆரம்பித்தது.
ஐந்தாம் நாள் இரவு சாப்பிட்டு முடித்த பிறகு, அறையில் நாற்காலியில் கவலையுடன் உட்கார்ந்திருந்தேன். என்னை அறியாமலேயே மயங்கி அப்படியே சாய்ந்து விட்டேன். டாக்டர் வந்து BP, நாடித் துடிப்பு எல்லாம் சரி பார்த்தார். உடனே ICU வில் சேர்க்க வேண்டும் என்று கூறிவிட்டார். "ICU வில் பெட் எதுவும் காலியாக இல்லையே? எப்படி அட்மிஷன் போடுவது" என்று நர்சு கேட்டார். அதைக் கேட்ட டாக்டர், "இவருடைய அம்மா நன்கு குணமடைந்து விட்டார்கள். அதனால் பெரிய அம்மாவை இப்போது டிஸ்சார்ஜ் செய்து விடுங்கள். அந்த பெட்டில் இவரைச் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறியது என் காதுகளில் விழுந்தது.
சிறிது நேரத்தில் அம்மா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போவதை ICU அறையில் இருந்தவாறே CCTV ல் பார்த்தேன். நானும் பெட்டில் படுத்திருந்தவாறே அம்மாவைப் பற்றிய பழைய நினைவுகளை அசை போட்டேன். அம்மாவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போகிறேன் என்று சொன்னபோது, சண்முகம் "அந்த ஆஸ்பத்திரிக்கா" என்று ஒரு இக்கன்னா போட்டு கேட்ட கேள்வி இப்போது நினைவுக்கு வந்தது. அவன் கேள்விக்கான பதில் இப்போது நன்றாகப் புரிந்து விட்டது.
நன்றாகக் குணமடைந்து விட்டாலும், டிஸ்சார்ஜ் ஆக வேண்டும் என்றால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க டாக்டருக்கு வேறு ஒரு நோயாளி சிக்க வேண்டும். அது வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன்.
விடுங்க. அதைப் பற்றி விவாதிக்க இது நேரம் இல்லை. இப்போது அம்மா நன்றாக குணமடைந்து வீட்டிற்கு போயாச்சு அல்லவா? தன்னை வருத்தி என்னை உயர்த்திய அம்மா எப்போதும் மகிழ்ச்சியுடனும் நலத்துடனும் எங்களுடன் இருந்து எங்களை காத்தருள வேண்டும். அது போதும் எனக்கு.
முத்து போன்ற கல் இதயம் கொண்ட மைத்துனன் இருந்தாலும், சண்முகம், கருப்பசாமி போன்ற நல் இதயங்கொண்ட உயிர் நண்பர்களும், நல்ல முதலாளியும் இருக்கும் வரை நான் ஏன் பணம் குறித்து கவலைப் பட வேண்டும்.
- பாளை ப.இசக்கிராஜன்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்