சாமி கிரிஷ்
சிறுகதை வரிசை எண்
# 74
சுழல்
- சாமி கிரிஷ்
வேலை செய்ததற்கான கூலி வாங்க பெரிய வீட்டின் முன் கைகளை பிசைந்துகொண்டு நின்றாள் மலர். கூலி எப்போதும் நாளாகிதான் கிடைக்கும் என்றாலும் கறிச்சோறு கேட்டு கேட்டுப் பார்த்து இன்று அழுதேவிட்ட தனது மகள் அமுதாவின் ஆசையின் பொருட்டு விடியலிலேயே பெரிய வீட்டு வாசலை மிதித்திருந்தாள். அவள் வந்தது தெரிந்தும் பெரிய வீட்டின் மூத்த மருமகள் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றது மலரின் மனதை சுட்டாலும் மகள் கேட்ட கறிக்குழம்பு வீட்டில் வேக வேண்டுமேயென்று மனதை தேற்றியபடி நின்றாள் மலர். இந்த பெரிய வீட்டு பெண்கள் நடந்துகொள்வதைப் பார்க்கும் போதெல்லாம் 'இவளுவளுக்கு மட்டும் ஏதாவது வித்தியாசமா இருக்குமோ' மலர் வெகுளியாய் நினைத்துக் கொள்வதுண்டு. 'வீ்ட்டுக்கு வந்தவள ஒப்புக்கு அழைக்காட்டியும் பரவால்ல. வாசல்ல ஆளு நிக்கிதுனு உள்ள இருக்குற ஆம்பிளகிட்டயாவது சொல்லலாம்ல' அவள் நினைத்து நொந்து கொண்டிருக்கும்போதே பல்லுக்குச்சியோடு வண்டிவிட்டு இறங்கிய பெரிய வீட்டின் மூத்த மகன் துரை 'என்ன மலரு..காலங்காத்தாலயே' என்றான். விசயத்தை சொன்னதும் 'தேங்கா பணம் இன்னும் வரலியே.. வந்ததும் நானே கொண்டாந்து தர்றேன்..இப்போதைக்கி கொழம்பு கொஞ்சம் தரச்சொல்றேன் கொண்டு போறீயா' என்றான். சோத்துக்கு வழிபண்ண வேலைக்கி போனா இவுங்க கொழம்ப ஊத்தியே காச கழிச்சுப்புடுவாவ போலியே' உள்ளுக்குள் மலர் நினைத்தாலும் பெரிய வீட்டு குழம்பின் ருசியை அவ்வப்போது ருசித்திருந்த அவளின் நாக்கு ஆசையோடு எட்டிப் பார்த்தது. துரை வீட்டுக்குள் போன கொஞ்ச நேரத்தில் வெளியே வந்த அவன் மனைவி ஏதும் பேசாது முகத்தைக்கூட பார்க்காமல் குழம்பை தந்துவிட்டுபோனது மலருக்கு முகத்தில் அறைந்தது போலிருந்தது. 'மக்க மனுசங்ககூட பழகுனாதானே மட்டு மரியாத தெரியும். இவுக வீட்டு கொழம்ப நம்பித்தான் ஊருக்காரங்க உயிரு ஒட்டிக்கிட்டு கெடக்காக்கும். உள்ளூர்ல வாழனுங்குற ஆசயிலத்தான் இவுக வீட்டு கொல்லயில வேல பாக்குறோம். என்னமோ இவுங்க சோறு போட்டு வளக்குற நாய் மாறில்ல நெனக்கிறாவ' உள்ளுக்குள் புழுங்கியவள் குழம்பை அந்த வீட்டு வாசல்லயே கொட்ட நினைத்தாள். 'பொழப்புல மண்ணு விழுந்துடுமே' என்பதால் வழியில் யார்வீட்டு குப்பையிலோ கொட்டியவள் விறுவிறுவென வீட்டுக்கு வந்தாள். இரண்டு தக்காளிகளையும் நான்கைந்து மிளகாய்களையும் எடுத்து அம்மியில் வைத்தவள் பெரிய வீட்டு மருமகளின் நினைப்பில் துவையலை அரைத்தாள்.
விடியற்காலையிலேயே பெரிய வீட்டுக்கு சென்றுவிட்டதால் குடிதண்ணீர் கூட பிடிக்க முடியவில்லை. இந்நேரத்துக்கு தெருக்குழாய் தண்ணீர் நின்றிருக்கும். எந்நேரமும் தண்ணீர் வரக்கூடிய ஆழ்துளை கிணறுடன் கூடிய குடி தண்ணீர் தொட்டிகூட பெரிய வீட்டை ஒட்டியே இருந்தது. மலர் வீட்டிலிருந்து நடந்தால் கிட்டத்தட்ட முக்கால் கிலோ மீட்டர் வரும். காலிக்குடங்களை அள்ளிக்கொண்டவள் நினைப்பு கனக்க நடந்தாள். 'எந்த நேரமும் தண்ணி வரக்கூடிய இந்த தொட்டிய ஊருக்கு நடுவால வைக்காம அதயும் கொண்டே பெரிய வீட்டு அடுப்பாம்படியிலதான் வைக்கனுமோ.. ஊருல இருக்குல மத்த பொம்பளைங்க எம்புட்டு தூரம் வேணுனாலும் நடக்கலாம். ஆனா பெரிய வீட்டு பொம்பளைக மட்டும் பத்தடிக்கு மேல நடந்தா அவளுக பாதம் நோகிடுமாடுக்கும்.. இவுளுக நோவமா வாழுறதுக்காக ஊருல இருக்க எல்லாவளும் கஷ்டப்படனும். அப்டியே நடந்துபோயி நின்னாலும்.. இவ்ளோ தூரம் நடந்தே வந்துருக்குதே சனம் புடிச்சுட்டு போகுதுனு விடுவாளுவளா.. அவளுவ புடிச்ச மிச்சத்ததான் அடுத்தவங்க புடிச்சு குடிக்கனும்னு ஆங்காரம் பண்ணுவாளுங்க. அதுலயும் இந்த நடு மருமவ இருக்காளே அவ பொறந்த வீட்ல பொழச்ச பொழப்பென்ன. இப்ப வாழுற வாழ்க்கை என்ன' குடம் குடமாய் கழுவி ஊற்றினாள் மலர். 'கறிக்கஞ்சி கேட்டழுத புள்ளக்கி வாய்க்கு ருசியா ஆக்கிப்போட முடியுதா.. இம்புட்டு பாடுபட்டு என்ன புண்ணியம். இவிங்ககிட்ட வேலைக்குப்போறது ஒரு பாடுனா..அதுக்கு கூலி வாங்கி சேக்குறது இன்னொரு பாடு. இப்டி அலஞ்சி அலஞ்சியே ஒடம்பு ஓடானதுதான் மிச்சம்..சரி நமக்கு இன்னைக்கி வாய்ச்சது ஒடச்ச ரசம்தான் என்றவள் மதிய உணவுக்கு மறுபடியும் அம்மியை அரைக்க ஆரம்பித்தாள்.
காலையில் அரைத்த துவையலைத் தொட்டுக்கொண்டு ரசத்தை ஊற்றி மகளும் தாயும் சாப்பிட்டார்கள். இருவரும் வீட்டில் இருக்கும் பகல் பொழுதுகள் அரிதானவை. அப்படியான தருணங்களில் இருவரும் தொலைக்காட்சி பார்ப்பது வழக்கம். மலருக்கு தொலைக்காட்சியில் சினிமா பார்ப்பதென்றால் கொள்ளைப் பிரியம். தொலைக்காட்சியை ஓட விட்டதும் மலரின் நினைப்பு திரும்பவும் பெரிய வீட்டிற்கு ஓடியது. முன்பெல்லாம் ஊரில் பெரிய வீட்டில் மட்டும்தான் தொலைக்காட்சி இருந்தது. ஊர் பிள்ளைகளே அந்த வீட்டின் வாசலிலும் திண்ணையிலுமே தவம் கிடப்பார்கள். பெரிய வீட்டு மனிதர்கள் மனது வைத்தால் மட்டுமே படம் பார்க்கும் வரம் அவர்களுக்கு கிடைக்கும். அவர்களுக்கு பிடிக்காதவர்கள் யாரும் வந்துவிட்டால் அடுத்த நொடியே காட்சி நிறுத்தப்படும். பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இதயங்களே நின்றுபோனதுபோல உணர்வார்கள். குறிப்பாக சண்டைக் காட்சியோ அல்லது உச்சக் காட்சியிலோ நிறுத்தப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கும். வேண்டுமென்றே நிகழ்த்தப்படும் இதுமாதிரியான குரூரங்கள் சிறுவர்களை அதிகமாகக் காயப்படுத்தும். அப்போது பெரிய வீட்டின் மூத்த மகனுக்கு மட்டுமே திருமணமாகியிருந்தது. புதிதாய் வந்திருந்த மருமகள் எதைக் கற்றுக்கொண்டாலோ இல்லையோ சிறுவர்களின் மகிழ்ச்சியை மனசாட்சியின்றி அறுக்கக் கற்றுக்கொண்டாள். ஒருநாள் விஜயகாந்த் நடித்த அலெக்சாண்டர் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. சண்டைக் காட்சிகளைப் பார்த்து சிறுவர்கள் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள். மலரின் மகள் அமுதா மிக மெதுவாக அடியெடுத்து வைத்து பூனையின் லாவகத்தோடு பெரிய வீட்டின் திண்ணையில் போய் அமர்ந்தாள். அப்போதும் முக்கியமான சண்டைக்காட்சிதான் ஓடிக்கொண்டிருந்தது. அவள் வந்ததை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட மூத்த மருமகள் அவசரமாய் ஓடிவந்து தொலைக்காட்சியை நிறுத்தினாள். அமுதாவின் மேல் அவளுக்கு அப்படி ஒன்றும் விரோதமில்லை. அவளைப் பொறுத்தவரை நிறுத்துவதற்கு சாக்காய் யாராவது வந்துவிட வேண்டும். படம் பார்த்தவர்கள் அமுதாவையே ஒரு மாதிரி பார்த்தார்கள். அந்த பார்வையில் தெரிந்த வெறுப்பின் வெப்பத்தில் அழுகையே வந்துவிட ஓடி வந்தவளை மலரால் எவ்வளவு முயன்றும் தேற்ற முடியவில்லை. அன்றைக்கு முடிவெடுத்தாள். 'இந்த வருசம் ஒழுகுற கூரைய சரி செய்றமோ இல்லையோ ஒரு டிவிப்பொட்டிய வாங்கிப்புடனு'. ஆனால் ஏழைகள் எண்ணம் என்றைக்கு நினைத்த நாளில் ஈடேறியிருக்கிறது. வருடங்கள் தள்ளிப்போனதுதான் மிச்சம். கடைசியில் அரசாங்கம் வழங்கிய இலவச தொலைக்காட்சி வந்துதான் அவர்களது கனவிற்கு வண்ணம் தீட்டியது. இப்படியாய் எல்லோர் வீட்டிற்கும் தொலைக்காட்சி வந்ததில் பெரிய வீட்டு பெண்களின் ஆணவம் கொஞ்சம் குறைந்தாலும் பணம் மற்றும் சொத்துகளின் திமிர் அவர்களை மற்ற பெண்களோடு இயல்பாக பழகுவதைத் தடுத்தது. அவர்களின் திமிர் அடங்கும் நாளுக்காக மலரோடு சேர்ந்து ஊர் பெண்களே காத்திருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த திமிர் அவர்களுக்கு எப்படி உருவாகிறது என்பது பற்றி அவ்வப்போது மலர் யோசிப்பாள். ஊரின் எந்த நல்லது கெட்டதுகளிலும் பெரிய வீட்டு பெண்களை பார்ப்பது அரிது. அத்திப் பூத்தாற்போல் வந்தாலும் அம்பாசிடர் காரில் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. அவர்கள் இந்த ஊரின் சக பெண்களோடு நிற்பதையே மரியாதைக் குறைவாக நினைத்தார்கள். ஊரில் முக்கால்வாசி சொத்துகளும் நிலங்களும் அவர்களுடையதுதான். ஆனால் அவை இருக்கும் இடங்களுக்கு எப்படி செல்வது என்கிற வழிகூட அவர்களுக்குத் தெரியாது. அந்த அளவுக்கு வெளி உலகம் தெரியாமல்தான் வாழ்ந்தார்கள். வீட்டைவிட்டு வெளியே வராமல் அலுங்காது குலுங்காது அதிக அனுபவமின்றி வாழ்வதைத்தான் அவர்கள் கௌரவமான வாழ்வெனவும் நம்பியிருந்தனர்.
கொஞ்ச நேரம் தூங்கி எழுந்த மலர் பாயிலேயே சற்று நேரம் உட்கார்ந்திருந்தாள். வீட்டில் சாமான் ஏதும் இல்லாத நினைப்பு எழவே எழுந்து அரிசிப்பானையை துழாவினாள். அப்போதுதான் அரிசியும் தீரப்போவது தெரிந்தது. 'ரேசனுல பொருள் வாங்க வேற பணம் பொரட்டனுமே' என புலம்பினாள். இருந்த சில்லரைகளை எண்ணியவள் 'முட்ட வாங்கியாது புள்ளைக்கி பொறுச்சி குடுக்கலாம்' என்று வாசலுக்கு வந்தாள். கிடந்த குப்பைகளை ஓரமாய் கூட்டி வைத்துவிட்டு விளையாடிக்கொண்டிருந்த மகளிடம் சொல்லிவிட்டு கடைத்தெரு பக்கமாய் நடந்தாள்.
மலரின் கணவன் துரையன் இருந்தவரை வீட்டுக்காக எது செய்கிறானோ இல்லையோ இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கால் கிலோவாது ஆட்டுக்கறி வாங்கி வந்துவிடுவான். அவன் சம்பாத்தியத்தில் அதுதான் சாத்தியமானது. மாட்டுச் சந்தைகளில் தரகு வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தவன் ஒருமுறை மாடுகள் ஏற்றிச்செல்லும் லாரியின் டாப்பில் உட்கார்ந்து செல்கையில் சாலையில் நீட்டிருந்த மரக்கிளையால் தலையில் அடிபட்டு செத்துப்போனான். அவன் இறந்தபிறகு மலரின் அலைச்சல் இன்னும் அதிகமானது. வயல் வேலை கொல்லை வேலையென்று உழைத்துவிட்டு வந்தோமோ சமைத்து உண்டு உறங்கினோமா என்று இருக்க முடியாது. சோற்றுக்கும் குழம்புக்குமான பொருள்களை வாங்கி வருவதற்காக கடைகளுக்கும் சேர்த்து அவள் அலைய வேண்டியிருந்தது.
இருந்த காசுக்கு மூன்று முட்டைகள் மட்டுமே வாங்க முடிந்தது. 'சனங்க என்னத்துக்கு இந்த பாடுபடுது. எல்லாம் இந்த ஒரு சாண் வயித்துக்குதானே. நம்ம வயிறு பொறுத்துக்கும் பச்சப் புள்ள வயித்துக்கு என்ன தெரியும். எனக்கு தர வேண்டிய நூறுவா காசா இல்ல பெரிய வீட்ல. எல்லா வேணும்னு பண்றது..' முட்டையை வாங்கிக்கொண்டு பொறிந்துகொண்டே வந்த மலரின் மனது பெரிய வீட்டு மருமகளின் செய்கையில் நிலைத்து நின்றது. 'அவளுவளுக்கு என்ன எல்லா சாமானும் நேரா அடுப்பாம்படிக்கே வந்துடும். நமக்கு அப்டியா ஒவ்வொன்னா ஒரு ரூவாயிக்கும் ரெண்டு ரூவாயிக்குமா வாங்கி சேக்குறதுக்குள்ள நாக்குத் தள்ளிப்போகுது. இதுல நம்மள வேற பெரிய வீட்டுக்காரிவ ரொம்ப எளப்பமா பாக்குறாளுவ. அவளுவ இந்த கடத்தெருவ கண்டிருப்பாளுவளா. வாசலுக்கு வரதே நோவுதும்பாளுங்க. தெருவுல வர்றதே என்னமோ தேரு வர்றமாதிரி வருசத்துக்கு ஒருக்கா நடந்தாதான் உண்டு. அப்டியே வந்தாலும் நடந்தா வருவாளுங்க. ட்ராக்டருல ஏறிக்கிட்டுதான் நகருவாளுங்க.. அவுக வீட்டுலதான் எல்லா வசதியும் இருக்குன்னு காட்டிகிட்டு மத்த சனங்கள பாக்குற பார்வ இருக்கே. இந்த தெருக்காரியளும் என்னமோ அவளுவளதான் பெரிய கதயா பேசித் திரிவாளுங்க. அவுக பெரும அவுகளுக்கு நம்ம வறும நம்மளுக்குனு போவாம பேச்சி என்ன வேண்டிக்கெடக்கு..' மனதிற்குள் பேசிக்கொண்டவள்.. 'நமக்குனு ஒரு காலம் வராமயா போப்போது' புலம்பியபடியே நடந்தாள்.
இரண்டு நாட்களாகவே வானம் மப்பு போட்டுக் கிடந்தது. மழைக்காலம்தான் என்றாலும் மழை வருவது போல தெரியவில்லை. வானத்தை நிமிர்ந்து பார்த்த மலர் 'நல்ல மழ ஒன்னு நின்னு பேஞ்சா கள கொத்துற வேலயாவுது இருக்கும்னு' வானத்திடம் வேண்டுதல் வைத்தாள். அவள் வேண்டியதுதான் தாமதம் அதுவரை மப்பாய் இருந்த வானம் வெயிலடிக்கத் தொடங்கியது. இப்படி 'வெயிலும் மப்புமா இருக்குறது நல்லா படலயே' என்று எண்ணியவள் பக்கத்து வீட்டு மாரியிடம் 'என்னடி மாரி வானம் ரெண்டு நாளா ஒருமாரி கொணட்டுது' என்றாள். 'ஆமாக்கா என்னனு தெரில.. ஆனா ஏதோ பெசல் வரப்போறதா நேத்து வேலைத்தளையில பேசிக்கிட்டாவக்கா' என்றவளை மறித்து 'என்னது பெசலா.. நாலு தூத்த போட்டாலே நனஞ்சுப்போற வீடு காய நாலு நாளு ஆவுமே. இதுல பெசலு வந்தா என்னத்துக்கு ஆவும். வீடு மேயுறத ஒரு வருசம் தள்ளிப்போடலாம்னு பாத்தா.. முடியாது போலருக்கே.. பொழச்சிக் கெடக்க மழய கேட்டா பொல்லாத வானம் பெசல கொண்டுவந்து பொழப்புல மண்ணள்ளி போட்டுடும் போலயே' மீண்டும் வானத்தைப் பார்த்து புலம்பியவளின் காதில் மெல்லியதாய் கேட்டது 'பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு' என்கிற விளம்பரம். விளம்பர சைக்கிள் அருகில் வருவதற்குள் மலரும் மற்ற சனங்களும் சைக்கிளை நெருங்கி ஓடினார்கள். விளம்பரம் இப்படியாய் ஒலித்தது. 'பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. இன்று இரவு நமது பகுதிக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயலின் வேகம் 140 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் எல்லோரும் வீட்டை விட்டு வெளியேறி பள்ளிக்கூடங்களில் தங்கிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்படிக்கு நெசவூர் ஊராட்சி மன்றத் தலைவர்". அறிவிப்பை கேட்ட மலருக்கு ஒன்றுமே புரியவில்லை. 'நேத்துதானே கூரைய அடுத்த வருசம் பின்னிக்கிலாம்னு ஆதரவா நெனச்சோம். அதுக்குள்ள இந்த பெசலு வந்து இப்படி பொழப்புல இடி விழ வைக்குதே' புலம்பினாள். வீட்டின் கூரையை பின்னுவது குறித்து மலருக்கு எழுந்த நினைப்பு பெரிய வீட்டு தென்னந்தோப்புக்கு கூட்டிச் சென்றது. ஊரில் முக்கால்வாசி கூரை வீடுகள்தான். அந்த வீடுகளுக்கான கீற்றுகளை பெரிய வீட்டு தென்னந்தோப்பில் இருந்துதான் மக்கள் விலைக்கு வாங்குவார்கள். விவசாய வேலை இல்லாத நாள்களில் மலர் கீற்று பின்னும் வேலைக்குச் செல்வாள். அந்த வேலை வருடம் முழுவதும் இருக்கும். அப்படி கீற்று பின்னும் நேரங்களில் மலர் 'இந்த பெரிய வீட்டு மருமவளுங்க நம்மள எளக்காரமா நெனக்கிறதுக்கு இதுதான் காரணம்.. அவுங்க வீட்டு நெலத்துல கூலி வேல செஞ்சுதான் நாம பொழைக்கிறோம்.. அதோட நம்ம வீட்டுக் கூரைங்க நஞ்சு போச்சுன்னா அதுக்கான கீத்துகளயும் அவுங்க தோப்புதானே தருது. இந்த நெலமதான்.. அதாவது நாம போட்டுத் தர்ற நெழலுதான் இந்த ஊரு சனமே வாழுதுங்குற நெனப்புதான் அவளுவள மத்தவங்கள எளப்பமா பாக்க வைக்கிது' என்று தனக்குத்தானே பேசிக்கொள்வாள். உடனே 'ஆனா கீத்த என்ன சும்மாவா தர்றாங்க காசு குடுத்துதானே வாங்குறோம்' என்பதை மட்டும் அருகில் இருப்பவருக்கும் கேட்கும்படியாகக் கூறுவாள். மலர் இப்படியாக நினைப்பது ஒருவகையில் சரிதான் என்றாலும் இந்த தென்னந்தோப்பை வைத்துதான் பெரிய வீடே பிழைத்து வருகிறது என்பதுதான் உண்மை. மற்ற விவசாயங்களில் வருமானம் வந்தாலும் அதிலெல்லாம் வருடம் ஒருமுறைதான் பணம் பார்க்க முடியும். ஆனால் தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் நிகழ்வு அடிக்கடி நடக்கும். அதன்மூலம் வரும் வருமானம்தான் பெரிய வீட்டினை தினசரியும் வளமாக வைத்திருந்தது.
இருக்கும் காலநிலையைப் பார்த்தால் புயல் வருவதற்கான சுவடே தெரியவில்லை. ஆனால் ஒருநேரம் சுள்ளென்றும் மறுநேரம் மப்பாகவும் வெயில் காட்டிய குழப்பம் மக்களின் மனதில் இலேசான தயக்கத்தையும் உண்டு பண்ணியது. ஊரில் நிறைய பேருக்கு புயல் வரப்போகிறது என்பது குறித்து பயம் இருந்தாலும் ஒரு சிலர் இந்த ஊருக்கு மழை வருவதே அரிது. இதில் எங்கே புயல் வரப்போகுது என்பது போல நம்பிக்கையற்றும் திரிந்தனர். அப்படி பயந்தவர்கள் எல்லோருமே மலரைப் போலவே தங்களது வீட்டின் கூரையை நினைத்தே பயந்தார்கள். ஆனால் 'பெரிய வீட்டு ஆட்களுக்கு இது குறித்தெல்லாம் என்ன கவலை இருக்கப்போகுது' என்பது மலரின் எண்ணமாக இருந்தது. பெரிய வீட்டு ஆட்களும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தார்கள். அவர்கள் வீட்டில் எப்போதாவது வரும் மழையைப் பற்றி பேசுவதுபோலத்தான் புயல் குறித்தும் பேசிக்கொண்டனர். இவ்வளவு பெரிய மெத்தை வீட்டை எந்த புயலும் அசைக்க முடியாது என்பது அவர்களின் நினைப்பாக இருந்தது.
நேரம் ஆக ஆக ஊர் மக்களின் எண்ணத்திலும் மாற்றம் வரத் தொடங்கியது. வானிலையும் அதற்கு ஏற்ப மாறத் தொடங்கியது. இரவு ஏழு மணிக்கெல்லாம் ஊர் அசையாத அமைதியில் ஆழ்ந்திருந்தது. அந்த அமைதி புயலுக்கு பின்பான அமைதி போல தெரிந்தது. அந்த அமைதியில் மனிதர்கள் தங்கள் இதயத் துடிப்புகள்கூட வெளியில் கேட்பதாய் உணர்ந்தனர். நிறைய நேரங்களில் மனிதர்கள் அமைதியை எண்ணித்தான் பயப்படுகிறார்கள். இரைச்சல்கள் கொடுக்கும் அதிருப்தியைவிட அமைதி கொடுக்கும் பயம் அவர்கள் நிம்மதியை கெடுத்துவிடுகிறது. உண்மையில் இரைச்சல்களைவிட அமைதியில்தான் நாம் அதிகம் யோசிக்கிறோம். இரைச்சல்களில் கவனம் முழுக்க நமக்கு சத்தங்களின்மீது இருக்கிறது. ஆனால் அமைதியிலோ எண்ணங்கள் பலவற்றையும் சுற்றி சுழன்றோடுகிறது. அந்த எண்ணங்கள்கூட அமைதியில் தோன்றும் பயத்தை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளும் தற்காப்புகள்தான். ஆனால் அந்த தற்காப்புகளே சமயங்களில் பயங்களை அதிகப்படுத்தவும் செய்துவிடுகின்றன. 'புயல் வருமா..வராதா.. அப்படியே வந்தால் அது என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்..' புயல் பற்றிய அனுபவம் கொண்ட வயதானவர்களும் அதை கதையாக மட்டுமே கேட்டிருந்த நடுத்தர வயதினரும் புயல் என்பதை காற்றின் வகைகளில் ஒன்றென்று மட்டுமே அறிந்து வைத்திருந்த சிறு பிள்ளைகளுமென ஊரே புயல் வரும் பாதையை உற்றுப் பார்த்தடியிருந்தனர்.
ஊர் மக்கள் தங்குவதற்காக பள்ளிக்கூடக் கட்டிடம் திறந்துவிடப்பட்டிருந்தது. அதிலும் ஒரு கட்டிடம்தான் மெத்தைக் கட்டிடம்..மற்றொன்று பழைய ஓட்டுக்கட்டிடம். பள்ளிக்கூடம் இருந்த தெருவிலிருந்த ஒரு சிலர் வந்து தங்கத் தொடங்கினர். மலருக்கு பள்ளிக்கூடத்தின் மெத்தைக் கட்டிடத்தை நினைத்தாலே பெரிய வீட்டின் மெத்தை வீடுதான் நினைவுக்கு வந்தது. 'அங்க போயி நான் தங்குறதா' இன்னைக்கு எப்பேர்பட்ட புயல் வந்தாலும் யாரு போயி எங்க தங்குனாலும் நான் ஏமுட்டு வீட்ட விட்டு எங்கயும் நகரமாட்டேன் ' புயல் குறித்த பயத்தில் அலைபாய்ந்த தன் மனதிற்கு நங்கூரமிட்டுக் கொண்டாள்.
இரவு பத்து மணியிருக்கும். ஊர் மக்கள் எல்லோரும் வீட்டுக்குள் அடைந்துகொண்டாலும் அவர்கள் நினைப்பெல்லாம் வெளியே நிலவப்போகும் புயல் பற்றியே இருந்தது. நெடுநேரமாய் நிலவிய அமைதியை காற்று கலைக்கத் தொடங்கியது. கிட்டத்தட்ட காற்றின் உறுமலை போன்றிருந்தது அந்த சத்தம். இன்னும் சொல்லப்போனால் காற்று பசிக்கு அழுதால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அந்த குரல். காற்றின் உறுமல் கொடுத்த கூடுதல் பயத்தில் வீட்டுக்குள் இருந்தவர்களில் பாதிப்பேர் பள்ளிக்கூடம் நோக்கி ஓடத்தொடங்கினார்கள். என்ன ஆனாலும் பரவாயில்லையென்று மலர் மட்டும் தனது முடிவில் உறுதியாயிருந்தாள். அவளின் உறுதியை நைந்து போயிருந்த வீட்டின் மோட்டுவளையின் கீற்றொன்றை காற்று பிய்த்தெடுத்து குழைத்தது. ஒரு கீற்று பறந்ததுதான் தாமதம் மோட்டுவளையின் மொத்தக் கீற்றும் காற்றில் பறந்தது. இப்போது காற்றின் அலறல் யானையின் பிளிறல் காதருகே கேட்பதுபோல பீதியைக் கிளப்பியது. மலரின் கண்கள் தன்னையறியாமல் காலடியிலேயே நின்ற மகளை நினைத்து கசியத் தொடங்கியது. அந்த அழுகையின் உப்பை மோட்டு வழியே ஊற்றிய மழை அதிகப்படுத்தியது. வீட்டில் கிடந்த பொருள்களை எதை எங்கே வைப்பது என்று புரியவில்லை. எதுபோனாலும் பரவாயில்லையென இருந்த ஒரேயொரு தகரப்பெட்டிக்குள் மகளின் புத்தகங்களை அடுக்கிப் பூட்டினாள். நடுவீட்டில் நின்றிருந்தவர்களின் கணுக்காலைத் தாண்டி மழைநீர் ஏறிக்கொண்டிருந்தது. வெளியே காற்றின் வேகத்தில் கீற்றுகள், ஓடுகள், மரங்கள், செடிகள் என எல்லாமும் பறந்து கொண்டிருந்தன. மழையின் சத்தமும் காற்றின் இரைச்சலும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் நிகழ்ந்து கொண்டிருந்தது. முழங்கால் அளவு தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் தனது வாழ்வையெண்ணி மலர் நொந்துகொண்டாள். 'என்னைக்காது வர்ற புயல்கூட ஏழைகளத்தான் பாதிக்குமா' என்கிற சிந்தனை நடுங்கிக் கொண்டிருந்த அவளது மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
அதிகாலை நான்கு மணியிருக்கும். இரவெல்லாம் தண்ணீரில் நின்றதில் இருவரின் கால்களும் நன்றாக ஊறிப்போய் விறைத்து விட்டிருந்தன. காற்று சற்று தணிந்து மீண்டும் அமைதி நிலவியது. இந்த அமைதி கிட்டத்தட்ட புயலுக்கு முன்பிருந்த அதே அமைதிதான். காற்று நின்றுவிட்ட தைரியத்தில் வாசலுக்கு வந்து பார்த்தாள் மலர். தன் வீட்டு வேப்பமரம் காற்று தள்ளியதில் ஒரு பக்கமாய் சாய்ந்து வேரறுந்துவிடக்கூடிய தள்ளாட்டத்தில் நின்றது. பக்கத்து வீட்டு மரங்களும் சாயும் தருவாயில் நின்றிருந்தன. 'பரவால்ல இந்த புயல் இதோட போனதே' இளைப்பாறியபடி அவள் வீட்டுக்குள் போனதுதான் தாமதம். அடுத்த கணமே காற்று தனது உறுமலை மீண்டும் தொடர்ந்தது. இம்முறை முன்பைவிட மிக ஆக்ரோசமாய். முடிந்தது என்ற நிம்மதி பெருமூச்சு முடியும் முன்னே மீண்டும் தொடங்கிய புயலை கெட்ட வார்த்தைகளில் திட்டினாள் மலர். அவள் பொதுவாக மகளின் முன் கெட்ட வார்த்தைகள் பேசாதவள். புயல் தந்த அழுத்தம் அவளின் மனநிலையை பிறழச் செய்திருந்தது. ஒருவழியாய் காற்றின் வேகம் குறைந்து மழை மட்டும் தூறிக் கொண்டிருந்தது. ஏழு மணியிருக்கும். மகளோடு வெளியே வந்த மலருக்கு தன் வீட்டு வாசலையே அடையாளம் தெரியவில்லை. தப்பித்தது என அவள் நினைத்த வேப்ப மரம் வேரோடு முறிந்து கிடந்தது. முருங்கை மரமும் பூவரச மரமும் இருந்த இடத்தில் இல்லாமல் சற்று தூரத்தில் வீசிக் கிடந்தன. அழுதுகொண்டே உறுதியாய் நின்ற தனது வீட்டின் சுவரை தடவிக் கொடுத்தாள். பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்த மக்களைப் பார்ப்பதற்காக தெருவின் பிரதான சாலைக்கு வந்தாள். சாலையில் மலர் கண்ட காட்சியை அவளாலேயே நம்ப முடியவில்லை. இந்த ஊரிலேயே பிறந்து இங்கேயே வாக்கப்பட்டுவிட்ட மலரின் இந்த நாற்பத்து இரண்டு ஆண்டுகளில் அவள் காணாத காட்சி கண்முன் நிகழ்ந்து கொண்டிருந்தது. பெரிய வீட்டின் மூன்று மருமகள்களும் தளர்ந்த தோற்றத்தோடு ஓட்டமும் நடையுமாய் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களின் தோற்றத்தில் தங்கள் வாழ்வில் இடி விழுந்த சோகம். மலர் அவர்களின் கால்களை கவனித்தாள். செருப்புகூட இல்லை. அவர்களைப் பார்த்து மலர் முதன்முதலாய் பரிதாபப்பட்டாள். அவளோடு சேர்ந்து ஊரே அவர்களை வேடிக்கைப் பார்த்தது. என்ன விசயமென்று தெரியாமல் ஒருவொருக்கொருவர் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தலையில் துண்டைப் போட்டவாறு பெரிய வீட்டின் மூத்த மகன் "அய்யோ இந்த பாழாப்போன புயலு எங்க வாழ்க்கையில மண்ணள்ளி போட்ருச்சே.. மொத்த தென்னம்புள்ளயும் போச்சே" என அழுதுக்கொண்டே ஓடினார். விசயத்தை தெரிந்துகொண்ட மலர் சாலையின் நடுவே நின்றுகொண்டு பெரிய வீட்டுப் பெண்கள் தூரத்தில் நடந்தோடியதை வெறித்தவாறு பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவள் பார்வையின் அர்த்தம் 'ஆகாயத்தில் பறந்தவர்களை இந்த இயற்கை இவ்வளவு சீக்கிரம் தரையில் விழ வைத்துவிடுமா' என்பதாக இருந்தது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்