சிறுகதை
நம்பிக்கை
என்னம்மா, எல்லோரும் கும்பலா வந்திருக்கீங்க?
ஆண்டி, பூங்கிளி எங்கே போயிருக்கான்னு தெரியமா உங்களுக்கு
அவளும் அவள் பிரண்டு செங்கனியும் ஒரு பங்ஷனுக்குப் போறோமம்மா ன்னு சொன்னா, ஏம்மா கேக்கிறீங்க.
இதோ பாருங்க செங்கனி இங்கே எங்களோடு இருக்கிறா.
அப்படின்னா
உங்களுக்கு ஒன்னுமே தெரியாதா ஆண்டி. அவளும் முத்தழகும் ரொம்ப நாளா காதலிக்கிறாங்க.
என்னம்மா சொல்றீங்க என்னைய கோட்டா பண்ணுறீங்களா?
இல்லம்மா, நெஜமாத்தான் சொல்றோம். உங்ககிட்ட சொல்லவேயில்லையா அவ.
சரி இப்ப அவ எங்கே?
அவளும் முத்தழகும் எந்த ஊருக்குப் போனாங்கன்னு தெரியாது. ஆனா அவங்க ஒரு முடிவோடத்தான் போயிருக்காங்க. அதை உங்ககிட்ட சொல்லிட்டுப் போலாமேன்னு தான். ஏன்னா நீங்களும் பூங்கிளியும் எங்க எல்லோருக்கும் பாசமானவங்க என்று தான் இதைச் சொல்ல இங்கே வந்தோம்.
என்னம்மா எல்லோரும் இப்படியொரு குண்டைத் தூக்கி போட்டுட்டீங்க.
மாமா கிட்டே சொல்லி என்ன பண்ணணுமோ அதைச் செய்து அவளைக் கண்டுபிடியுங்க. நாங்க வரோம் என்று சொல்லி அவர்கள் நடையைக் கட்டினர்.
வந்த பெண்கள் பூங்கிளியின் தோழிகள் தான். அவர்களிடம்கூட சொல்லாமல் இவள் எங்கே போனாள்.? சரி அவர் வந்ததும் சொல்லித் தேடச் சொல்லுவோம் என கவலையுடன் அமர்ந்தாள் செங்கமலத்தம்மா.
பூங்கிளி, என்னோடு வருவதற்கு பயப்படுகிறாயா நீ?
உன்னோடு வருவதற்கு நான் பயப்பட மாட்டேன். பெற்றோரிடம் சொல்லாமல் ஓடி வருகிறேனே என்று தான்.
நானும் நீயும் எப்போது தேடினாலும் வேலை கிடைக்கும். நாம் சென்னை பங்களுரு ,மும்பை போன்ற நகரங்களுக்குச் சென்றால் கண்டு பிடித்து விடுவார்கள். அதனால் நாம் புனே போகிறோம். அங்கு எனது நெருங்கிய நண்பன் சேகரன் இருக்கிறான். எனக்கு ஒரு கம்பெனியில் ரெபர் பண்ணுகிறேன் என்றிருக்கிறான்.
எனக்கும் தான் ஒருத்தி இருக்கிறாள் சித்திரை என்று பெயர் அவளும் நீ சொன்னது போலவே சொல்லியிருக்கிறாள்.
என்ன கம்பெனி என்று கேட்டாயா?
ஓ...காக்னிசென்ட் என்றாள்.
என்ன ஆச்சரியம், சேகரனும் அதே தான் சொன்னான். பார்த்தாயா, நம் வாழ்வு இனி சிறக்கும் என்பதற்கு இந்த ஒற்றுமையே சான்று.
ப்ளைட்டில் செல்கிறோம் என்று யாருக்காவது சொன்னாயா பூங்கிளி.
இல்லையே என் நெருங்கிய தோழி செங்கனியிடம்கூட சொல்லவில்லை நான். நீங்கள்?
நான் சேகரனிடம் மட்டும் தான் சொல்லியிருக்கிறேன். அவன் நமக்காக ஒரு கேட்டட் கம்யூனிட்டியில் தனி வீடு பார்த்து வைத்திருக்கிறான்.
ப்ளைட் எத்தனை மணிக்குப் போகும்
இதோ 20 நிமிடத்தில் புனே விமான நிலையம் வந்து விடும்.
பூங்கிளி சற்றே கவலையை மறந்து விமானம் இறங்குவதையும் கீழேயுள்ள காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
என்னை நம்பி வந்திருக்கிறாள், இவள் எவ்வளவு நல்லவள், அழகி என்பது அவளுக்குத் தெரியாது. என் உள்ளம் கொள்ளை கொண்டவளல்லவா
விமான நிலைய வாசலிலேயே காத்திருந்தான் தன் மனைவியுடன் சேகரன். எங்களைப் பார்த்ததும் ஓடோடி வந்தான்.
முத்தழகு நீ என் கல்யாணத்திற்குக் கூட வரவில்லை. அதனால் தான் நான் இப்போது என் மனைவியுடன் வந்துள்ளேன். இவள் பெயர் பூங்குழலி.
என்ன பொருத்தம் பார்த்தீர்களா முத்தழகு. உங்கள் நண்பர் உங்கள் வருங்கால மனைவியின் பெயரை ஒத்த என்னைத் திருமணம் செய்துள்ளது ஆச்சரியம் தானே. நீங்கள் இருவரும் நட்பின் அடையாளம் தான்.
பூங்குழலி, வருங்கால மனைவி என்றாய். நாளைய மறுநாள் இவர்களுக்குத் திருமணம் நிச்சயித்திருக்கிறோமே நாம்.
ஆமாம் ஆமாம். அதுவும் சரி தான். இரண்டு நாளில் பூங்கிளியும் அதிகாரப்பூர்வ மனைவியாகிவிடுவாள்.
சரி வாருங்கள் கார் ரெடியாக இருக்கிறது. வீட்டிற்குப் போகலாம்
சேகரா, வீடு இங்கிருந்து எவ்வளவு தூரம்?
ஐந்து கிலோ மீட்டர்கள் தான்.
கார் வீட்டை அடைந்தது. வீடு ஒரு கேட்டட் கம்யூனிட்டியில் இருப்பதால் அருமையாகக் கட்டமைக்கப் பட்டிருந்தது
பூங்கிளியின் அப்பா சிங்கமுத்து வீட்டில் நுழையும்போதே தன் மனைவி செங்கமலம் கவலையுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். அவள் எப்போதும் கலகலப்பாய் இருப்பவளாயிற்றே.
இன்று என்ன வந்தது?
செங்கமலம், ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறாய், என்ன விஷயம்
பூங்கிளி...
பூங்கிளிக்கென்ன?
பூங்கிளி ஒரு பையனோடு எங்கோ சென்று விட்டாளாம். அவளது தோழிகள் சற்று முன்னர் தான் வந்து சொன்னார்கள்
எங்கே என்று அவர்களுக்குத் தெரியாதா?
அவள் உயிர்த்தோழி செங்கனிக்குக் கூட விவரம் சொல்லவில்லையாம். அதுதான் கவலைப்படுகிறேன்.
அந்தப் பையனைப் பற்றித் தெரியுமா?
அந்தப் பெண்களிடம் நான் அதைக் கேட்கவில்லை. எனக்கு இருந்த குழப்பத்தில் அதை விட்டுவிட்டேன். அந்தப் பெண்கள் தான் மாமாவிடம் சொல்லித் தேடச் சொல்லுங்கள் என்றனர்.
சரி அந்த செங்கனியிடம் அந்தப் பையனைப் பற்றிக் கேள்.
இப்போதே கேட்கிறேன் என்றவள் தன் அலைபேசியை எடுத்து உயிர்ப்பித்தாள்.
செங்கனியா?
ஆமாம் ஆண்டி.
கொஞ்ச நேரம் முன்பு நீங்கள் முத்தழகுன்னு ஒரு பையனைப் பற்றிச் சொன்னீர்களே. அந்தப் பையனைப் பற்றிய விவரங்கள் உனக்குத் தெரியுமாம்மா
தெரியும் ஆண்டி. எங்கள் வகுப்பிலேயே முத்தழகு தான் முதல் மாணவன். மிகுந்த அறிவாளி. பூங்கிளி கூட இரண்டு அல்லது மூன்றாவதாகத்தான் மதிப்பெண் எடுப்பாள்.
அது சரி. அவன் பெற்றோர் பற்றி
அப்பா இறந்து விட்டார் முன்பே. அம்மா தான் முத்தழகை வளர்த்தது. அவர்கள் ஒரு பள்ளியில் இடைநிலை தமிழ் ஆசிரியை.
ஒரு சிறிய வீடு அவர்கள் சொந்தம். மற்றபடி பெரிய சொத்தெல்லாம் இல்லை. முத்தழகு தங்கமான இளைஞன். அதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.
அவர்கள் எங்கே போயிருப்பார்கள்?
சொல்ல முடியாது ஆண்டி. யாரிடமும் அவர்கள் சொல்லவில்லை.
ஆனால் அவர்கள் இருவரும் எளிதாக வேலை தேடிக் கொள்ள முடியும் என்பது மட்டும் தெரியும். அதற்கான திறமை இருவரிடமும் இருக்கிறது. என்ற செங்கனி அலைபேசியை அணைத்தாள்.
ஸ்பீக்கரில் போட்டுப் பேசியதால் இந்த உரையாடல் முழுவதையும்
சிங்கமுத்துவும் கேட்டுக் கொண்டிருந்தார்.
அவர்கள் நமது பிரிவு சாதியா என்று கேட்கவில்லையே நீ.
ஏங்க, இப்போ அதுவா முக்கியம். பெண்ணை எங்கே தேடுவது என்பது தானே முக்கியம்.
மோசமான பையன் இல்லை என்பதாலும், திறமையானவன் என்பதாலும் நமக்கு இப்போதைக்குக் கவலை இல்லை. என்றாலும் நான் சில வழிகளில் முயற்சிக்கிறேன். சென்னை, மும்பை, பங்களூரு நகரங்களில் தான் இருப்பார்கள். பூங்கிளியே நம்மைத் தொடர்பு கொள்ளலாம். அதுவரை நீ பேசாமலிரு.
நம்மிடம்கூட சொல்லாமல் போயிருக்கிறாளே என்ற வருத்தம் தான். ஆனால் பூங்கிளி நல்ல பெண். அதில் எனக்குக் கவலையில்லை. அந்தப் பெண் சொன்ன தகவல்கள் நன்றாய்த்தான் இருந்தது. சரி பார்ப்போம்.
செங்கனி பூங்கிளி வீட்டிற்கு வந்து சென்ற பிறகு, அவள் நேராக முத்தழகு வீட்டிற்குச் சென்றாள். அவள் குடும்பம் முத்தழகு குடும்பத்தாருடன் பழக்கமான குடும்பம் என்பதால் தான் முத்தழகும், பூங்கிளியும் அவளிடம்கூட சொல்லாமல் சென்றனர்.
அங்கிள்,
என்னம்மா செங்கனி
முத்தழகும் பூங்கிளியும் எங்கோ சேர்ந்து சென்று விட்டனர். எந்த இடம் என்று தெரியவில்லை
என்ன சொல்கிறாய் நீ. உனக்கும் தெரியாதா? உனக்கு அவளும் நெருங்கிய தோழி தானே
அதனால் தான் அவர்கள் இருவரும் என்னிடமும் சொல்லவில்லை.
அவர்கள் குடும்பத்தில் சொல்லிவிட்டாயாம்மா
சொல்லிவிட்டுத்தான் இங்கு வருகிறேன்.
அவர்கள் எங்களிடம் சண்டையிட வருவார்களா? ஏனெனில் அவர்கள் உயர் குடும்பத்தார். அதனால் தான் கேட்டேன்.
அவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை அங்கிள்.
என்றாலும் திருமணம் என்று வரும்போது குணம் வெளிப்படலாம் இல்லையா? என்றார் கவலையுடன் சரவணன்.
கவலைப்படாதீர்கள் அங்கிள். நான் முத்தழகின் நல்ல குணம் பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறேன்.
நீங்களும் பாருங்கள். முத்தழகு உங்களுக்கு போன் பேசலாம்.
என்ன செங்கனி, என்ன சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்று அங்கு வந்தார் முத்தழகின் அம்மா பாக்கியம்
உன் பையன் பூங்கிளியைக் கூட்டிக் கொண்டு எங்கேயோ ஓடிப் போய் விட்டானாம்.
என்னங்க இப்படிச் சொல்றீங்க.
ஆமாம் இப்போ என்ன செய்வதாம்.
முத்தழகு கூப்பிடும்வரை காத்திருப்போம்.
அவர்களுக்கு எங்கே பூங்கிளி குடும்பத்தார் தங்களைத் திட்டுவார்களோ என்ற பயம். தன் மகனைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அவன் எப்படியும் சமாளித்துக் கொள்வான் என்று தெரியும்.
முத்தழகும் பூங்கிளியும் புனே வந்த மறுநாள் சேகரன் ரிஜிஸ்டர் பேரேஜ் சம்பந்தமாக எல்லாப் பணிகளையும் முன்பேசெய்து வைத்திருந்தான்..அதற்கு அடுத்த நாள் திருமணம் என்று நிச்சயிககப்பட்டிருந்தது.
முத்தழகு எனக்கு பயமாயிருக்கிறது. அப்பா அம்மாவிடம் சொல்லாமல் நாம் திருமணம் செய்து கொள்வதா?
நாம் சொல்லாமல் இருக்கப் போவதில்லை. சில காலம் போகட்டும் பிறகு சொல்லலாம். நானும் தானே என் பெற்றோரிடம் சொல்லவில்லை. எங்கள் வீட்டில் உங்கள் வீட்டாரைப்பற்றி பயம் வந்திருக்கும். பாவம் அவர்கள். அவர்களை இக்கட்டில் மாட்டி விட்டேன்.
அடுத்த நாள் பூங்குழலி பூங்கிளியை அலங்கரிக்கும் இடம் கூட்டிச் சென்று அலங்காரம் முடித்து நால்வரும் ரிஜிஸ்திரார் ஆபிஸ் சென்றனர். சேகரன் முன்பே சொல்லி வைத்திருந்ததால் எல்லா ஏற்பாடுகளும் முடித்து ரிஜிஸ்திரார் தாலி எடுத்துக் கொடுக்க தாலியை பூங்கிளி கழுத்தில் கட்டினான் முத்தழகு.
பூங்கிளியின் உடல் நடுங்கியது. அதை உணர்ந்த முத்தழகு அவள் கையை அழுத்திக் கொடுத்தான். பூங்குழலி அவளை அணைத்து ஆறுதல் சொன்னாள்.
நால்வரும் ஒரு உயர்தர ஓட்டலுக்குச் சென்றனர். அங்கே முன்பே ஆர்டர் செய்திருந்ததால் சைவ உணவுகளும் அசைவ உணவுகளும் தயாராயிருந்தது. சேகரனின் கம்பெனியிலிருந்து அவன் நண்பர்களும் பூங்குழலியின் தோழிகளும் வந்திருந்தனர்.
அவர்கள் பரிசுப் பொருட்களை தம்பதியரிடம் கொடுத்தனர். தெரியாத உறவுகள் தான். என்றாலும் ஒரு கலகலப்பு அங்கிருந்தது. சேகரனின் நண்பன் ஒருவன் நாளை இவர்களுக்கு இண்டர்வ்யூ இருக்கிறது.
என்னப்பா நீ அவர்கள் இன்று தான் திருமணம் செய்திருக்கிறார்கள். அதற்குள் இண்டர்வ்யூ என்கிறாய் என்று சொல்ல அங்கே ஒரே ஆரவாரம் தான்.
பூங்கிளிக்கு அதற்கு அடுத்த நாள் இண்டர்வ்யூவாம்.
மகிழ்ச்சி மீது மகிழ்ச்சி தான்.
இவர்களுக்கு பார்த்து வைத்திருந்த அந்தத் தனி வீட்டில் இவர்களை விட்டுவிட்டு அறிவுரைகள் சொல்லிவிட்டு அனைவரும் திரும்பிச் சென்றனர்.
அந்த வீட்டை வாடகைக்கு விட்டவர் எல்லா சாதனங்களையும் அதில் வைத்திருந்ததால் இவர்களுக்கு ஒரு கஷ்டமுமில்லாதிருந்தது.
முதலிரவுக்கும் சேகரன் ஏற்பாடு செய்திருந்தான்.
பூங்கிளி தான் அச்சப் பார்வையிலிருந்தாள். முத்தழகுக்கும் சற்று உதறலாகத் தானிருந்தது. அவன் பெற்றோரைப் பற்றிய கவலை.
சேகரனும் பூங்குழலியும் இவர்களை சமாதானப்படுத்தி சந்தோஷமாயிருங்கள் என்று சொல்லிப் புறப்பட்டனர்
முத்தழகு பூங்கிளியை அமைதிப்படுத்தி தங்கள் குடும்பத் திட்டங்களைப் பற்றி ஆராய்ந்து அப்படியே மகிழ்ச்சியாகவும் அந்த முதலிரவு முடிந்தது.
பூங்கிளி தன் அம்மாவை வீட்டில் அப்பா இல்லாத நேரமாய்ப் பார்த்து அலைபேசியில் அழைத்து அம்மா என்னை மன்னித்து விடுங்கள். உங்களைப் பிரிந்து வந்ததில் எனக்கும் துன்பம்தான். வேறு வழியில்லை என்பதால் தான். நாங்கள் இங்கே ஒரு வீட்டில் தான் இருக்கிறோம். எங்கள் இருவருக்குமே வேலை கிடைத்து விட்டது. இன்று சில நாட்களில் விரிவாகப் பேசுகிறேன். அப்பாவிடம் சொல்கிற விதத்தில் சொல்லுங்கள். நீங்கள் என் செல்ல அம்மா தான் எப்போதும்.
ஆமாம் எங்கிருந்து பேசுகிறாய்.
அதை இப்போது கேட்காதீர்கள் என்றவள் அலைபேசியை அணைத்தாள்.
சிங்கமுத்து என்றால் அலைபேசி எங்கிருந்து இயங்குகிறது என்று தெரிந்து கொள்வார். ஆனால் செங்கமலம் அவ்வளவு விஷயம் தெரிந்தவள் இல்லை.
தன் கணவர் வந்ததும் தன் மகள் சொன்னதையெல்லாம் அவரிடம் சொன்னாள். இன்னும் சில நாட்களில் விவரமாக நம்மிடம் பேசுவாளாம் என்றாள்.
திருமணமும் செய்து கொண்டார்களோ?
அது தெரியவில்லை.
என்ன அம்மா நீ.
நம் பெண் புத்திசாலிங்க. அவள் நேர்வழியில் தான் செல்வாள். நாம் கவலைப் பட வேண்டியதில்லை.
இதே போல் முத்தழகும் தன் தாயிடம் பேசி விவரம் தெரிவித்தான். திருமணம் ஆனதை மட்டும் சொல்லவில்லை.
அன்று வந்த பெண்கள் பூங்கிளி பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் பூங்கிளி வீட்டிற்கு வந்தார்கள்
என்ன ஆண்டி ஏதாவது செய்தி தெரிந்ததா?
அவள் எங்கிருந்தாலும் தன்னைப் பார்த்துக் கொள்வாள் என்ற தைரியம் எனக்கு இருக்கிறது பெண்களே.
அவர்கள் திருமணம் செய்து கொண்டால்?
திருமணம் செய்து கொள்ளட்டுமே. செங்கனி தான் சொன்னாளே முத்தழகு நல்ல இளைஞன் என்று. பிறகெதற்கு நான் பயப்பட வேண்டும்.
என்ன ஆண்டி இப்படிப் பேசுகிறீர்கள். ஒவ்வொரு பெற்றோர் எப்படி பயப்படுவார்கள் நீங்கள் என்னவென்றால்... என்றாள் வினிதா.
அவர்கள் வேறு சாதியாய் இருந்தால்
இருந்தால் என்ன? மனிதர்கள் தானே.
ஐயோ, இந்த ஆண்டியிடம் நாம் பேசமுடியாது போவோம் நாம் வாருங்கள் என்று எல்லோரும் நடையைக் கட்டினர்.
செங்கமலத்தின் நினைவுகள் வேகமாகப் பறந்தன. நான் அவர்கள் சென்ற வழியை விட்டு கரடு முரடாய் இருந்தாலும் குறுக்கு வழியில் அவர்களுக்கு முன்பாகச் செல்வதுபோல் சென்று அவர்கள் வரும்போது அவர்களை வரவேற்று நல் விருந்து படைக்கும் பெண்ணாக இருக்க வேண்டும் என்ற கனவில் அவள் ஆழ்ந்திருந்தாள்.
என்ன மறுபடியும் யோசனை என்றார் வெளியிலிருந்து வந்த சிங்கமுத்து.
அந்தப் பெண்கள் மறுபடியும் வந்து என்னை ஆழம் பார்த்தார்கள். நான் அவர்களைப் பந்தாடி விட்டேன்.
பந்தாடி விட்டாயா
ஆம் என் பெண்ணைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம். நான் விடுவேனா. என் பெண்ணைப் பற்றி எனக்குத் தெரியும் என்றேன்.
அவர்கள் திருமணம் செய்து கொண்டால் என்றாள் ஒருத்தி
செய்யட்டுமே. செங்கனி தான் முத்தழகு நல்ல இளைஞன் என்று சொன்னாளே என்றேன். அதிர்ந்து இங்கிருந்து ஓடிவிட்டார்கள்.
செங்கமலம் உண்மையாகத் தான் சொல்கிறாயா, அல்லது விளையாட்டா?
இல்லை. அவர்களுக்கு நாம் மணம் முடித்து வைக்கலாம் என்று தான் நினைக்கிறேன்.
வினிதா சொன்னது போல் அவர்கள் திருமணம் செய்திருந்தால்
செய்தால் என்ன? நாம் இங்கு கூட்டி வந்து மறுபடியும் வரவேற்பு செய்து விடுவோம்.
நான் உன்னைப் பற்றித் தான் கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன். அப்பா இப்போது தான் நிம்மதியாயிற்று.
சரி நாம் முத்தழகு வீட்டிற்குச் செல்வோமா
போவோமே.
அடுத்த நாள் சிங்கமுத்துவும் செங்கமலமும் தங்களுடன் தன் உறவினர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு முத்தழகு வீட்டிற்குச் சென்றனர். உறவினர்கள் சரவணனின் வீட்டைப் பார்த்து முகம் சுழித்தனர்.
சிங்கமுத்து முன்பே சொல்லியிருந்ததால் அவர் விருப்பத்திற்கு மாறாக நடக்க யாருக்கும் தெம்பில்லை.
இவர்கள் கும்பலாக வருவதைப் பார்த்த சரவணனை பயம் தொற்றிக் கொண்டது. அவரும் பாக்கியமும் மிகவும் பயந்து போய் நின்றிருந்தனர்.
வந்தவர்கள் உட்காருவதற்கு ஒன்றிரண்டு நாற்காலிகளைத் தவிர வீட்டில் வசதியில்லை. செங்கமலத்தம்மாள் தானே சென்று அங்கிருந்த பாய்களை எடுத்து வந்து கீழே போட்டு எல்லோரையும் அதில் உட்காரச் சொன்னாள்.
எல்லாரும் அமர்ந்தும் சரவணனும் பாக்கியமும் நின்று கொண்டிருந்தார்கள்.
அவர்களை உட்காரச் சொல்லி வற்புறுத்தவும் அவர்களும் அடக்கமாக ஒரு ஓரமாக உட்கார்ந்தனர்.
நாங்கள் எதற்கு வந்திருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியும் எங்கள் மகனும் உங்கள் மகளும் சேர்ந்து எங்கேயோ போய் விட்டார்கள். அதைக் கேட்பதற்காகத் தானே
அவர்களை இனிப் பிரிக்க முடியாது. செங்கமலம் பிரிக்கவும் வேண்டாம் என்கிறாள், எனவே நாங்கள் சம்பிரதாயமாக உங்கள் பையனை திருமண நிச்சயம் செய்ய வந்திருக்கிறோம். பெண் வீட்டில்தான் நிச்சயம் செய்வார்கள். நீங்கள் எங்கள் வீட்டிற்கு வராததனால் நாங்கள் வந்துள்ளோம்.
சொல்லிய செங்கமலம் தட்டுகளில் பழங்கள் மற்றும் பொருட்களை வைத்து அவர்கள் இருவரிடமும் கொடுத்தனர்.
அவர்கள் எங்கிருக்கிறார்கள் எனத் தெரியுமா உங்களுக்கு என பயந்து கொண்டே கேட்டார் சரவணன்.
எங்களுக்கும் தெரியாது தான். என்றாலும் அவர்கள் தான் மணமக்கள். எனவே நாம் கவலை கொள்ள வேண்டாம். நாங்கள் திருமணத்தை நடத்துகிறோம். என்று சொன்னார் சிங்கமுத்து.
எங்களுக்கு காபிகூட கொடுக்கமாட்டீர்களா என்றதும்
பக்கத்திலிருந்த பால் கடையில் பால் வாங்கி வந்து காபி கலந்து கொடுத்தார் பாக்கியத்தம்மாள்.
வெளியே வந்த உறவினரில் சிலர், பார்த்தாயா, மாப்பிள்ளையும் பெண்ணும் இல்லாமலேயே, எங்கிருக்கிறார்கள் எனத் தெரியாமலேயே நிச்சயம் பேசி முடிக்கப்படுகிறது. ஆச்சர்யம் தான். எங்கே செங்கமலம் கேட்டு விடப்போகிறார்களோ எனப் பயந்த அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சிட்டாய்ப் பறந்தனர்.
சிங்கமுத்துவும் செங்கமலமும் சரவணனையும் பாக்கியத்தையும் ஆசுவாசப் படுத்தி மகிழ்ச்சியாயிருங்கள். அவர்கள் அலைபேசியில் நம்மை அழைப்பார்கள். எப்படியிருந்தாலும் அவர்கள் கணவன் மனைவி என்றே நினைப்போம். சரியா
சரி தான். உங்கள் பெரிய மனதிற்கு மிகவும் நன்றி என்றனர் தழுதழுத்த குரலில் சரவணனும் பாக்கியமும்.
திருமணமே முடித்திருந்தார்கள் என்றாலும் நாம் வரவேற்பை ஜாம் ஜாமென்று நடத்தி முடிப்போம் என்றார் சிங்கமுத்து.
ஒரு வாரம் கழிந்திருந்தது. முத்தழகு தன் மனைவி பூங்கிளியிடம் நாம் இருவரும் நம் பெற்றோரிடம் சொல்லிவிடுவோம் நடந்ததனைத்தையும் என்றான்.
ஐயோ, ஏதாவது நடந்தால்
ஒன்றும் நடக்காது. தைரியமாயிரு என்றான்.
அவன் சொல்லிக் கொடுத்தது போலவே இருவரும் தாங்கள் இருக்குமிடம், செய்யும் வேலை, தாங்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டது என எல்லாவற்றையும் சொல்லி முடித்தனர் இரு குடும்பத்தாரிடமும்.
இருவரும் மிகவும் கடுமையாக எதிர்ப்பார்கள் என்றே நினைத்தனர்.
ஆனால் அவர்களோ எந்தக் கவலையுமின்றி, எப்போது இங்கே வருகிறீர்கள் என்று சொல்லுங்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைக்கிறோம் என்றனர்.
சேகரனுக்கும் பூங்குழலிக்கும்கூட இது பெருத்த ஆச்சர்யத்தை விளைவித்தது என்றால் என்ன சொல்ல.
அடுத்த வாரம் ப்ளைட் பிடித்து சேகரன் பூங்குழலியோடு முத்தழகும் பூங்கிளியும் திருச்சி புறப்பட்டனர்.
இந்தக் கதை கபிலர் எழுதிய அகநானூறு பாடல் 203ன் பொருள்படி
இக்காலச் சூழலுக்கேற்ப புனையப்பட்ட ஒன்று. இது எனது சொந்தக் கற்பனையில் எழுதிய கதை.
புல்லாங்குழலன்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்