logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

பாலஜோதி இராமச்சந்திரன்

சிறுகதை வரிசை எண் # 72


மகளதிகாரம் -பாலஜோதி இராமச்சந்திரன் “ம்மா, டாடியை டிவோஸ் பண்ணிடு” - கார்த்திகா சில நிமிடங்களில் பள்ளியில் இறங்க வேண்டிய நேரமாகப் பார்த்து சொன்னாள். மரக்கடை மேம்பாலத்தின் இறக்கத்தில் வண்டியை மிதமான வேகத்தில் ஒட்டிக் கொண்டிருந்த பவித்ரா, கவனம் சிதறினாள். அதிர்ச்சியோடு ரியர் வியூமிர்ரரில் மகளைப் பார்த்தாள். அவளோ, எந்தவித களங்கமற்ற, சலனமற்ற, பரிசுத்தமான அதிகாலைப் பொழுதைப்போலமுகத்தை வைத்திருந்தாள். ‘அவள்தான் பேசினாளா.. இல்லை, அவள் பேசியதுபோல பிரமை ஏற்பட்டதா?’ - குழப்பமும் கேள்வியும் பவித்ராவின் மனதைக் குடைந்தது. “கார்த்தி.” “ம்மா.” “இப்போ எதுனா சொன்னியா?” “ஆமா.” “என்னடி சொன்னே?” “டாடியை டிவோஸ் பண்ணிடுன்னு சொன்னேன். ஏன், காதுல விழலையா?” “விழுந்துச்சு. இருந்தாலும் நீதான் அப்படி கேட்டியான்னு ஒரு சந்தேகம்.” “இதுல ஒனக்கு எதுக்குமா சந்தேகம், அந்தாளு ஒனக்கு வேணாம்.” “இந்தாடி. அவரு ஒன்னோட அப்பா. இப்படி மரியாதை இல்லாம பேசாதே.” “அப்பாவா நடந்துகிட்டாதான் மரியாதை தரமுடியும்.” “அப்படி என்ன ஒங்கிட்டே நடந்துக்கலே.” “ஒனக்கு தெரியாதா பவித்ரா” - அவளின் எரிச்சலை தூண்டிவிடுவதுபோல், இப்படித்தான் பெயர் சொல்லி அழைப்பாள். இது மாறனுக்கும் பொருந்தும். அதற்காக அவனிடம் கூடுதலான அடியும் அறையும் வாங்கியிருக்கிறாள். “நீ எவ்வளோ பெரிய விசயத்தைப் பத்தி கேக்கறே தெரியுமா?” “டைவர்ஸ் இப்பல்லாம் சாதாரண விசயம்மா. புரிஞ்சிக்க” - குரலில் கனிவையும் பரிவையும் காட்டினாள். அதற்குள் அவள் இறங்க வேண்டிய பள்ளி வந்தது. வண்டியின் வேகத்தை மட்டுபடுத்தி, வாசலருகில் நிறுத்தினாள். மடியில் வைத்திருந்த பெரிய புத்தகப் பையோடு கார்த்திகா இறங்கினாள். முதுகுப் பக்கமாக, மூட்டையை ஏற்றுவதுபோல் பையை மாட்டிக் கொண்டு, அம்மாவைப் பார்த்தாள். “ஈவினிங் பிக்கப் பண்ண வரும்போது நல்ல முடிவா சொல்லும்மா.” “என்னடி சொல்லணும்?” “ம்ம்.. பீட்சால சீஸ் இல்லே. பர்கர்ல கெச்சப் கோட்டிங் இல்லே. ஐஸ் கேக்ல சாக்கோ இல்லலேன்னு. மங்குனி மம்மி” - பவித்ராவின் கன்னத்தைக் கிள்ளி, உதட்டில் வைத்துக் கொண்டாள். “ஈசியான விசயம் இல்லடி. நல்ல வக்கீலா பார்க்கணும். கவுன்சிலிங் போகணும். உங்கப்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பணும். கோர்ட்டுக்கு அலையணும். இப்படி நிறைய ப்ராசஸ் இருக்கு.” “தெரியும் மம்மி. என்னோட க்ளாஸ் மேட் ராகினியோட அம்மா பேமஸ் அட்வைகேட்தான். டிவோர்ஸ் ஸ்பெசலிஸ்ட். ஒனக்கு ஓகேன்னா சொல்லு. அவங்ககிட்டயே அப்பாயிண்மெண்ட் வாங்கித் தரேன். இப்பவே அப்ளை பண்ணத்தான் ஒரு வருஷம் ரெண்டு வருஷம் கழிச்சு, டிவோஸ் கிடைக்கும். ஈவ்னிங் நல்ல முடிவோட வா. பைம்மா” - பவித்ராவின் பதிலை எதிர்பார்க்காமல் பள்ளிக்குள் நுழைந்தாள். அவளது நடையில் உறுதியும் துள்ளலும் பட்டாம்பூச்சியின் பறத்தலும் இருந்தது. திகைத்த நிலையில் அவளையே கவனித்தபடி வண்டியில் அமர்ந்திருந்தாள். விட்டால், இவளே விவாகரத்துப் பத்திரத்தை மாறனிடம் நீட்டி, ‘டாடி. இதுல கையெழுத்துப் போடுங்க. இனிமே மம்மிக்கு நீங்க எக்ஸ் ஹஸ்பெண்ட். எனக்கு எக்ஸ் டாடி. ஓகேவா டாடி? என்று முகத்தில் அடித்ததுபோல் பேசிவிடுவாள்போல. ‘அவள் செய்யக்கூடியவள்தான். ப்பா, இந்தகால பிள்ளைகள் எவ்வளவு அறிவு பெருக்கத்துடன் இருக்கிறார்கள். ரொம்பவும் ஸ்மார்ட்டாக, ஸ்மூத்தாக யோசிக்கிறார்கள். எப்படிப்பட்ட பிரச்சனைகள் என்றாலும், அவற்றுக்கான தீர்வுகளைத் தீர்க்கமாக கண்டுபிடித்து, அதை மிக மிகவேகமாக செயல்படுத்தியும் விடுகிறார்கள். ப்ரேக்அப் என்கிறார்கள். மூவ் ஆன் என்கிறார்கள். ஈஸி மச்சி என்கிறார்கள். கூல் மச்சி என்கிறார்கள். அவர்களின் புத்திசாலித்தனத்திற்கும் வேகத்திற்கும் ஈடு கொடுக்கவும் இணைந்து ஓடவும் ஏன் நம்மால் முடியவில்லை’ - பவித்ரா, இப்படி சிந்தித்து கொண்டிருக்கும்போதே, கார்த்திகா திரும்பிப் பார்த்தாள். அம்மா நிற்பதையும் தன்னையே கவனித்து கொண்டிருப்பதையும் கவனித்து, வலது கையை உயர்த்தி, அதில் கட்டியிருந்த வாட்சை சுட்டிகாட்டி, ‘டைம் போயிட்டிருக்கு. நீ ஆபீஸூக்கு போ’ என்கிற விதமாக சைகை மொழியை காற்றில் கலந்தாள். பவித்ராவும் சைகை மொழியில் பதிலளித்துவிட்டு, மகளுக்கான முத்தத்தை அதே காற்றில் பறக்கவிட்டு, வண்டியைக் கிளப்பினாள். அவளுக்கு அலுவலகம் செல்ல விருப்பமில்லை. போன் செய்து லீவு சொல்லி விடலாமாயெனத் தோன்றியது. ஹெச்.ஆர்.ரேவதி லீவு கொடுத்துவிடுவாள்தான். ஆனால், என்ன செய்வது? வீட்டிற்கும் போகமுடியாது. ஹாலில் மாறன் டிவி பார்த்து கொண்டிருப்பான். “ஆபீஸ் போறேன்னுதானே போனே? லீவே போடாத ஆளு எதுக்கு லீவு போட்டே? ஏன் வீட்டுக்கு வந்தே? நான் என்ன செய்யறேன்னு பார்க்கவந்தியா?” - இப்படி புதிதாக பிரச்சனை ஒன்றை உருவாக்கி, ஏழரையைக் கூட்டுவான். இதுதான் சாக்கு என்று குடித்துவிட்டு வந்து, நாள் முழுக்க நிம்மதி குலைச்சலை உருவாக்குவான். வேண்டாம். வீட்டுப் பக்கமே போக வேண்டாம். வேறு என்னதான் செய்வது. எங்குதான் போவது. கார்த்திகாவுக்கு ஸ்பெசல் வகுப்புகள் முடிவதற்கு ஆறுமணி ஆகிவிடும். அதுவரை இந்த நாளை, இந்தப் பகலை அமைதியாக, பிரயோஜனமாக எப்படி நகர்த்திச் செல்வது. ஒருவேளை காலமும் நேரமும் இந்த நாளை ஆசீர்வதித்து கையளித்திருக்கிறதோ? வாழ்க்கையின் அடுத்த நகர்வுக்காக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, அதனுடைய சாதக - பாதக அம்சங்களை சிந்திப்பதற்காக இந்த நாள் முன் குறிக்கப்பட்டிருக்கிறதோ. கார்த்தி வழியாக சிக்னல் காட்டியிருக்கிறதோ. இருக்கும். இந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிடக் கூடாது. என்ன செய்யலாம்? கல்லணைக்குப் போகலாமா? அய்யயோ, வேண்டவே வேண்டாம். அங்கே சென்று எங்கே உட்கார்ந்தாலும் சர்க்கரையை மொய்க்க விரைந்துவரும் எறும்புகள் போல, பிச்சைக்காரர்கள் வரிசைக் கட்டி வந்துவிடுவார்கள். அவர்கள் அசலான பிச்சைக்காரர்களாக இருந்தால் கூட பரவாயில்லை. அருகாமையில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயகுடிகள். வாழ்ந்து கெட்ட வயதானவர்கள். எஞ்சிய காலத்தை பிடித்துத் தள்ளுவதற்கு பிச்சை எடுப்பவர்கள். நன்றாய் வாழ்ந்த மூப்பர்களும் மூப்பிகளும் கல்லணைக்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பியே, தங்களது வயிற்றைக் கழுவுகிறார்கள். அங்கே சென்றால், கூடுதலான மன உளைச்சலோடும் பாரத்தோடும்தான் வரவேண்டும். வேறு எங்கே போகலாம்?’ - சிந்தித்தபடியே சீரான வேகத்தில் வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தாள். சத்திரம் பஸ் ஸ்டாண்டை நெருங்கியிருந்தாள். அவளது அலுவலகம் கரூர் சாலையில் இருந்தது. தமிழகம் அளவில் பிரபலமான பால் நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவு அங்கே இருந்தது. பால் தொழிற்சாலை கரூர் புறநகரில் இருந்தது. ‘முதலில் ரேவதியிடம் லீவை சொல்லிவிடலாம். பிறகு எங்கே போகலாம், என்ன செய்யலாம் என்பதை யோசிக்கலாம்’ - அந்த முடிவுக்கு வந்த கணமே, தன் இருப்பிடத்தை நோக்கி தன்னியல்பாகச் செல்லும் வண்டிமாடுகளைப்போல, பவித்ராவின் டூவீலர், அலுவலகத்தில் வந்து நின்றது. நேராக ரேவதி இருந்த கேபினை நோக்கிச் சென்றாள். ரேவதிக்கு பவித்ராவின் குடும்பச் சூழ்நிலையைப் பற்றியும் மாறனைப்பற்றியும் தெரியும். அலுவலகத்திற்கு விடுமுறை போடாமல் வருகிற ஒரே நபர் பவித்ராதான். ஒருமுறை அதைப் பற்றி கேட்டபோதுதான், மாறனைப் பற்றி மனம் திறந்தாள். அவனால் தனக்கும் மகளுக்கும் நேருகிற துன்பங்கள், கொடுமைகள், அதனால் நேருகிற மன அழுத்தங்கள் பற்றி உடைத்துப் பேசினாள். கடைசியாக ஒரு கோரிக்கையும் வைத்தாள். “சனி, ஞாயிறும் ஆபீஸ் வையுங்க மேடம். நான் வரேன் அந்தாளு பிக்கல் பிடுங்கல்லேருந்து கொஞ்ச நேரமாச்சும் விடுதலைக் கிடைக்கும்.” அவள் கேட்டுக் கொண்டபடியெல்லாம் செய்யமுடியாது என்பதால், அவள்மீதான கரிசனத்தையும் கனிவையும் கூடுதலாக்கினாள். அவளால் செய்ய முடிந்தது அது ஒன்றுமட்டும்தான். அதுவே, பவித்ராவுக்கு வெந்நீர் ஒத்தடம் போல் ஔஷதமாக இருந்தது. “லீவு வேணும் மேடம்.” “எத்தனை நாள் வேணம்னாலும் எடுத்துக்கோ.” “அய்யய்யோ, இன்னிக்கு ஒருநாள் போதும்.” “ஓகே. இதை நீ வீட்ல இருந்தே கேட்டிருக்கலாமே. இவ்வளவு தூரம் எதுக்கு வந்தே?” “மேடம். ஆபீஸ்தான் வந்துட்டு இருந்தேன். லீவு போடுற ஐடியா திடீர்ன்னு தோணுச்சு.” “அப்படியெல்லாம் செய்யிற ஆள் இல்லியே நீ. என்னாச்சு?” - கேட்ட ரேவதியிடம் வழியில் கார்த்திகா சொன்னதைச் சொன்னாள். “சரியாதான் கேட்டிருக்கா. என்ன முடிவெடுத்திருக்கே?” “அதைப் பத்தி யோசிக்கதான் இந்த லீவு கேட்டேன் மேடம்.” “ஓகே. எங்கே போகப் போறே?” “தெரியல மேடம். இனிமேதான் யோசிக்கணும்” - என்றவளை ஆழ்ந்த யோசனையோடு பார்த்தாள். “நிவாஸ் குடில் தெரியுமா?” “ம். தெரியுமே.” “அங்கே உனக்கு ஏசி ரூம் போட்டுத் தரேன். என்னோட செலவுல. நல்ல யோசிச்சு, நல்ல முடிவா எடு. ஓகேவா?” “ஓகே மேடம்.” ரேவதி போனில் யாரையோ அழைத்தாள். “ஹாய் வினோத். எப்படி இருக்கே. பவித்ரான்னு மேடம் வருவாங்க. அவங்களுக்கு ஏசி ரூம் போட்டு குடு. ஈவினிங் அஞ்சரை மணிபோல வெக்கேட் பண்ணிடுவாங்க. நான் ஃபே பண்ணிடறேன். தேங்க்யூ வினோத்” - பேசிவிட்டு பவித்ராவிடம் விபரம் சொன்னாள். அடுத்த சில நிமிடங்களில் பவித்ரா நிவாஸ் குடிலை நோக்கிப் புறப்பாட்டாள். காவிரி பாலத்தை கடக்கும்போது, உடலும் மனமும் உற்சாக மிகுதியில் மிதப்பது போலவும் பறப்பது போலவும் பவித்ராவுக்குத் தோன்றியது. விடுதலை உணர்வும் அது சார்ந்த மகிழ்ச்சிப் பிரவாகமும் காவிரியாய்க் கரைப் புரண்டோடுவதையும் அவளால் உணரவும் முடிந்தது. இத்தனை வருடகாலமாக அர்த்தமற்று வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையில், மிக முக்கியமான முடிவை எடுப்பதற்காக இந்த நாள் இயற்கையால் - இறையால் - காலத்தால் ஆசீர்வதிக்கப்பட்டு, கையளிக்கப்பட்டிருப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது. வனாந்திரமாக வறண்டும், வழியெங்கும் காஞ்சொறிமுட்களும் புதர்களும் மண்டிக்கிடக்கும் இந்த வறண்ட வாழ்க்கையில், முதல் மழைத் துளிகள் விழுவதுபோலவும் குளிந்தக் காற்று வீசுவதுபோலவும் மனரம்யம் பூவனமாக அவளுக்குள் பூத்துக் குலுங்கியது. ‘இந்த உணர்வும் உணர்தலும் எஞ்சிய வாழ்க்கை முழுவதும் இருந்தால், நீடித்தால் ஆசீர்வாதம் பெற்றவளாக, வரம் பெற்றவளாக இருப்பேன். நிலைப்பேன்’ என்ற சிந்தனை அவளுக்குள் சரக்கொன்றையாக மலர்ந்தது. ஆனால், நினைப்பதெல்லாம் இங்கே யாருக்கும் கைகூடி வருவதுமில்லை. கைகுலுக்குவதுமில்லை. இங்கே பலருக்கும் வாழ்க்கை, நீரின் குமிழ்கள் அல்ல. காற்றின் குமிழ்கள். கண்களுக்கு தெரிவதில்லை. புத்திக்கும் புரிவதில்லை. அம்மா மண்டபம் செல்லும் பிரிவின் சாலை சிக்னலில் நின்றாள். அவளது மனம் சிந்தித்தபடியே இருந்தது. சிந்தனைகளுக்கும் சிக்னல் இருந்தால் தேவலாம் என்று அவளுக்குத் தோன்றியது. அப்படி இருந்தால் எப்படி இருக்கும். தாறுமாறாகத்திரண்டு சிந்தனைகள் வருகிறபோது, மஞ்சள் விளக்கு ஒளிரவேண்டும். ஆபத்தான சிந்தனைகளுக்கு சிவப்பு விளக்கு எரிய வேண்டும். சாத்தியமான - நல்ல சிந்தனைகளுக்கு பச்சை விளக்கு பளிச்சிட வேண்டும். அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, நேராகச் செல்வதற்கான சிக்னல் விழுந்தது. மாம்பலச் சாலையையும் திருவானைக்கோவிலையும் இணைக்கும் புதிய மேம்பாலத்தில் ஏறினாள். தூரத்தில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் தெரிந்தது. சற்றுமுன், காவிரி பாலத்தில் வந்தபோது, அகண்ட ஆற்றின் நீர்வழியாக அழகாய்த் தெரிந்த அதே ராஜகோபுரம், இப்போது கட்டடங்களுக்கு மத்தியில் மற்றொரு கட்டடமாகத் தெரிந்தது. வானத்திலிருந்துப் பார்த்தால், பிரமாண்டமாகவும் மலைப்பாகவும் தெரியலாம். நிலைத்த நீடித்தத்தன்மைக் கொண்ட ராஜகோபுரமே, பார்க்கும் பார்வையில் பலவித மாற்றங்களையும் காட்சிகளையும் கொண்டதாக இருக்கும்போது, கேவலம், மனிதர்கள் வாழ்க்கை எம்மாத்திரம்? காலத்தின் பார்வையில் பல்வேறு மாற்றங்களையும் ஏமாற்றங்களையும் கொண்டதாகத்தான் இருக்கும். பாலத்தின் இறக்கத்தில் மிதமான வேகத்தில் சென்று, சமநிலைச் சாலைக்கு வந்தாள். திருவானைக்கோவில் சிக்னலில் நின்றாள். இடதுபுறமாக, ஸ்ரீரங்கம் செல்லும் சாலைச் சென்றது. அந்த வழியாகவும் விடுதிக்குச் செல்லலாம். ஆனால், அது சுற்று. நேராகச் சென்றால், பத்து நிமிடங்களுக்கு போய்விடலாம். சிக்னல் விழுந்தது. டோல்கேட் நோக்கிச் செல்லும் சாலை வழியாகவே வண்டியைச் செலுத்தினாள். வண்டி சீரான வேகத்திலும் சிந்தனைக் குதிரை வேகத்திலும் சென்றது. கொள்ளிடம் பாலத்துக்கு முன்பாக இடதுபுறமாக பிரிந்தச் சிறுசாலையில் வண்டியைத் திருப்பினாள். சாலையின் முனையில், ‘நிவாஸ் குடில்’ பெயரிட்ட பலகை அம்புக்குறி வடிவில் வழியைக் காட்டியது. அரைக்கிலோ மீட்டர் தூரம் சென்றதும் அந்தப் பிரமாண்டமான விடுதி வளாகம் வந்தது. முதல் பார்வையிலேயே மனதை ஈர்த்தது. அமைதியானச் சூழலில் வடிவமாக இருந்தது. வலதுபுறம் இருந்த அலுவலக வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே நுழைந்தாள். கம்ப்யூட்டரில் வேலைப் பார்த்து கொண்டிருந்த இளைஞன், அவளைப் பார்த்ததும் மெலிதாகச் சிரித்தான். “நீங்கதான் பவித்ராவா?” “ஆமாம்.” “ரேவதி மேம் போன்ல சொன்னாங்க. உங்களுக்கு ரூம் ரெடியா இருக்கு. நம்பர் 501” என்றபடியே, சாவியை எடுத்துத் தந்தான். “ரூம் எங்கே இருக்கு?” “நேரா போயி ரைட்ல திரும்புங்க. மூணாவதா இருக்கும். “தேங்க்ஸ்” - ரூம் கீயை எடுத்து கொண்டு புறப்பட்டாள். அவளுக்கான அறை கடைசியாக இருந்தது. தனி இல்லமாக, குடில் போன்ற அமைப்பில் பார்க்கவே அம்சமாக இருந்தது. வண்டியை வாசலில் நிறுத்தினாள். ஹேண்ட் பேக்கையும் லஞ்ச் பேக்கையும் எடுத்து கொண்டு அறையைத் திறந்தாள். பளிச்சென்று இருந்தது. லாவண்டர் மணம் வீசியது. கண்களை மூடி, நாசியில் ஆழமாய் மணத்தை உள்ளிழுத்தாள். நல்ல நறுமணம் இசையைப் போன்றது. மனதின் கவலைகளை சில நொடிகளாவது மறக்கடிக்கச் செய்யும் வல்லமை இசைக்கும் நறுமணத்துக்கும் உண்டு. அதை பவித்ரா அறிந்தவளாக இருந்தாளா என்பது தெரியவில்லை. ஆனால், அவளது புலன்களில் உள்ள மரபணுக்கள் உணர்ந்திருந்தது. லாவண்டர் மணம் நரம்புகளின் வழியாகச் சென்று, உள்ளுணர்விலும் உடலுணர்விலும் உறைந்தது. அவள் கண்களைத் திறந்தபோது, அந்த அறை நிம்மதியைத் தருகிற தவகூடமாக காட்சி தந்தது. ஏசியை போட்டாள். நீர் நிரம்பியத் தடாகத்தில் விழுவதுபோல், கட்டிலில் சாய்ந்தாள். எதிரே இருந்த டிவியை பார்த்ததும் அவள் முகம் சுண்டியது. சற்றுமுன் லயித்த சுகம் சட்டென புலன்களை விட்டு மறைந்தது. இப்போதெல்லாம் எங்கே டிவியை பார்த்தாலும் மாறன் முகம்தான் அவளுக்கு நினைவுக்கு வருகிறது. அவன் மீதான ஒட்டுமொத்த வெறுப்பும் கோபமும் டிவி மீது குவிந்தது. டிவிதான் அவன். அவன்தான் டிவி என்ற மனநிலை பவித்ராவுக்கு இருந்தது. அவனை விவாகரத்து செய்தாலுமே, டிவிக்கள் அவனை நினைவுபடுத்தி கொண்டே இருக்கும் என்பது அவளுக்கு பெரிய அவஸ்தையாக இருந்தது. தூங்கினால் தேவலை போலிருந்தது. அடுத்த நிமிடமே, ‘தூங்குவதற்கா இங்கே வந்திருக்கிறே பவி’ என்ற குரலும் உள்ளிருந்து அவளைச் ‘சுளுந்தீ’யாகச் சுட்டது. கணவன்தான். ஆனால், கணவனுக்கான எந்தத் தகுதியும் இல்லாதவன். எல்லா பெண்களுமே இங்கே குறைந்த பட்ச தகுதி அற்றவர்களைத்தான் கணவனாக வாய்க்க பெற்றவர்களாக இருக்கிறார்கள். மனைவி என்ற பந்தத்திலிருந்து பிய்த்துக் கொண்டு வருவதற்கு தொண்ணூற்றொன்பது விழுக்காடு பெண்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களைத் தடுப்பது இந்தச் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் அழுத்தங்களின் அடுக்குகள்தான். அதிலும் சிங்கிள் மதர்ஸ் அன்றாடங்களில் சந்திக்கும் சமூக அழுத்தங்கள் என்பது வார்த்தைகளற்ற அவஸ்தை. பவித்ரா, வாழ்க்கையின் கடினமான - நெருக்கடியான - கொடுமையான சூழ்நிலைகளில் தனியாக போய் விடுவோம் என்ற முடிவெடுத்திருக்கிறாள்தான். அந்தச் சமயத்தில் எல்லாம், கார்த்திகாவின் முகம் நினைவுக்கு வரும். ‘அப்பா இல்லாத பிள்ளை’ என்ற நிலைமைக்குக் காரணமாக, தனது முடிவு அமைதுவிடக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தாள். இன்றைக்கு அவளே, ‘அப்பாவை டிவோர்ஸ் பண்ணிடும்மா’ என்று சொல்கிறாளென்றால், அப்பா என்ற உரிமையையும் உறவையும் அவள் துறப்பதற்குத் தயாராகி விட்டாள் என்பதுதானே பொருள். பவிக்கு நெஞ்சு வலிப்பதுபோல் இருந்தது. கண்ணீர் துளிர்த்தது. தனக்கு புருசனாக மாத்திரமல்ல, மகளுக்கு அப்பாவாகவும் இருப்பதற்கான எந்த நியாயத்தையும் கடமையையும் மாறன் செய்ததில்லை. ஒரு சண்டையில் கார்த்திகா அதைக் கேட்டும் விட்டாள். “அப்பாவா நீ எனக்கு என்ன செஞ்சிருக்கே? பொறந்த நாளு, பண்டிகை நாளுக்கு புது டிரெஸ் எடுத்துக் குடுத்துருக்கியா? பிளாஸ்டிக் தோடு, வளையலாச்சும் வாங்கித் தந்திருக்கியா? அட்லீஸ்ட் ஐஸ் கேக்காச்சும் வாங்கிட்டு வந்திருக்கியா? நான் ஏஜ் அட்டெண்ட் பண்ணபோதும் குடிச்சுட்டு வந்த ஆள்தானே நீ?” அவளது கேள்விக்கு மாறன் பதில் சொல்லவில்லை என்பதல்ல விஷயம். அவள் கேட்டதின் நியாயத்தைக் கூட அவன் உணரவில்லை. மகளுக்கு கேட்காமலேயே செய்யவேண்டும் என்ற குறைந்தபட்ச ஞானம் கூட அவனிடம் இல்லை. ஒரு தகப்பன் இப்படியும் இருப்பானா? என்ற விதமாகத்தான் அவன் இருந்தான். இருக்கிறான். மகளுக்கான தேவைகளை செய்யாதவனாகவே இருந்துவிட்டு போகட்டும். அவளது கொலுசுவை விற்று குடிப்பவனாகவும் மாறன் இருந்திருக்கிறான். சீட்டு போட்டு மகளுக்காக பவித்ரா வாங்கிய சின்ன சின்ன தங்கத் தோடு மோதிரத்தையும் அடாவடியாகப் பிடுங்கி, விற்று குடித்திருக்கிறான். சிறுமியாக இருந்த கார்த்திகா அப்பாவின் அச்சுறுத்தலுக்கு பயந்து அவற்றைக் கழற்றி கொடுத்திருக்கிறாள். இப்போது வளர்ந்து நிற்கிறாள். பதின்பருவத்துப் பெண்ணின் ஆசைகள், கனவுகள், தேவைகள் இவற்றைப் புரிந்து கொள்ளாத தகப்பனாகவும் இருப்பதில் பவிக்கு மனம் கசந்துவிட்டது. தனக்குத்தான் சரியான புருசனாக இல்லை. மகளுக்காகவாவது அன்பான - பாசமான அப்பாவாக இருக்கலாமே என்ற அவளின் மனவிருப்பம் மணல் விருப்பமாகவே ஆகிவிட்டது. மகளுக்காக செலவு செய்வதைக்கூட, மாறனுக்குத் தெரியாமல்தான் செய்ய வேண்டியிருக்கிறது. ஏதோ திருட்டுத்தனம் செய்வதுபோல பவிக்கு தோன்றும். மகளிடம் புலம்புவாள். “அவரு கெடக்காரு விடும்மா” அலட்சியமும் ஆறுதலுமாய் கார்த்திகா சொல்வாள். அவளுக்கு இருக்கிற தைரியம் கூட தனக்கு இல்லாமல் போனது ஏன் என்பது பவி பலதடவை சிந்தித்திருக்கிறாள். தான் வளர்ந்த - வளர்க்கபட்ட முறையும் போதிக்கப்பட்ட விசயங்களும்தான் அதற்கான காரணங்கள் என்பது புரிந்தது. இந்தக் காலத்துப் பிள்ளைகளைப் பெற்றோர்கள் வளர்ப்பதில்லை. சமூக வலைத்தளங்களும் ஊடகங்களும்தான் வளர்க்கின்றன. போதிக்கின்றன. இப்போதைய தலைமுறைப் பிள்ளைகள் பெற்றோர்களுக்குத்தான் வழிகாட்டிகளாக - திசைகாட்டிகளாக இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டுதான் பெற்றோர்கள் நடக்கிறார்கள். கார்த்திகா காலையில், “அப்பாவை டிவோஸ் பண்ணிடும்மா” என்று தனக்கான திசைகாட்டியைத் தீர்மானமாக சொன்னபோது, அவளால் மறுக்க முடியவில்லை, பழைய தலைமுறை அம்மாவைப்போல், “வயசுக்குத் தகுந்த பேச்சு பேசு” என்று அதட்ட முடியவில்லை. யோசித்தபடியே படுத்துக்கிடந்தாள். மகளையும் மாறனையும் பற்றியே மாறி மாறி சிந்தித்து கொண்டிருந்தாளே தவிர, தீர்மானமாக ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. தான் எடுக்கும் முடிவு, கார்த்திகாவின் ஸ்டெடிஸ்ஸை பாதித்துவிடக் கூடாது என்ற கவலை எழுந்தது. ப்ளஸ்டூ என்பது, வாழ்வில் மிக முக்கியமான கல்விப் பருவம். விவாகரத்து பற்றிய முடிவுக்கு கார்த்திகாவே தன்னை நெருக்கித் தள்ளினாலும் நிதானமாக முடிவெடுக்க வேண்டும். இத்தனை வருடங்களாக வழிக்கு வராதவன், இனியுமா வழிக்கு வசப்படுவான். திருந்துவான். வருந்துவான். மழுங்கிப் போன ஒருவனை மீண்டும் கூர்நோக்கும் குறிக்கோளும் பொறுப்புகளும் கடமையும் கொண்டவனாக மாற்றுவது கடினம். சாத்தியமற்ற ஒன்று. கணவனை வழிக்குக் கொண்டு வர முயன்ற பெண்கள் எல்லாருமே வழுக்கி விழுந்து சொதப்பிக் கொண்டதுதான் மிச்சம். சிந்தனைத் தந்த அயர்ச்சியும் சோர்வும் அவளுக்குத் தூக்கத்தைக் கொண்டு வந்தது. தூங்கி விடக் கூடாது என்று தீர்மானித்தபடியே விட்டத்தைப் பார்த்தபடி விழித்துக் கிடந்தாள். ஏசி தந்த குளுமையும் அறையில் ததும்பிய நறுமணமும் அவளைத் தூக்கத்தில் ஆழ்த்தி விட்டன. நன்றாகத் தூங்கினாள். நிம்மதியான தூக்கம் என்பார்களே. அப்படியான தூக்கம் அவளை ஆட்கொண்டிருந்தது. கண்விழித்தபோது, மணி மாலை ஐந்து ஆகி இருந்தது. அதிர்ந்து போனாள். கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் தூங்கியதை நினைத்து வெட்கினாள். ஆனாலும் இப்படியான தூக்கம் தூங்கி பல வருடங்கள் ஆனதையும் அவள் உணர்ந்தாள். தவிர, புத்தியும் மனதும் வானம் போல் தெளிவாக இருப்பதையும் உணர்ந்தாள். அந்த உணர்வே அவளுக்குப் புதிதாக இருந்தது. முகத்தைக் கழுவினாள். பசி எடுத்தது. லஞ்ச் பாக்ஸில் காரக்குழம்பும் சோறும் உருளைக்கிழங்கு வறுவலும் இருந்தது. மாறனுக்கும் தனக்குமான உறவுபோல பொருந்தாத உணவுக் கூட்டணி. பொறுமையாக சாப்பிட்டு முடித்தாள். சட்டென்று மூளைக்குள் ஸ்பார்க் அடித்தது. அவளது முகம் முழுக்க வெளிச்சம் பரவியது. அது, தீர்வுக்கான ஒளி. அடித்துப் போட்டது போன்ற உறக்கத்திற்குப் பிறகு புலன்கள் புத்துணர்வில் இருக்கும். அந்தக் தருணத்தில் சில அதிசயங்களை மூளை நிகழ்த்தும். அதுதான் அவளுக்கும் நேர்ந்தது. அறையை காலி செய்துவிட்டு, கார்த்திகாவை பிக் அப் செய்வதற்காக பள்ளியை நோக்கி வண்டியைச் செலுத்தினாள். கார்த்திகா வாசலிலேயே காத்திருந்தாள். வண்டியில் ஏறும்போது கேட்டாள். “மம்மி, என்ன முடிவெடுத்துருக்கே?” “ராகினியோட, அம்மாவைப் பார்க்க அப்பாயிண்மெண்ட் வாங்கிடு கார்த்தி.” “குட் மம்மி. ச்சோ ஸ்வீட் மம்மி” பின்னாலிலிருந்து அம்மாவை இருக்க அணைத்து கொண்டாள். வண்டியை ஒட்டிய பவித்ராவுக்கு பழகிய, பழைய சாலை இப்போது புதிய பாதையாகத் தோன்றியது. -நிறைவு-

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • L.Gopalakrishnan Avatar
    L.Gopalakrishnan - 2 months ago
    மகளே அம்மாவிடம் விவாகரத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்பது வாசகரை சற்று அதிர்ச்சி அடைய செய்யும் என்று நினைக்கிறேன். குடும்பத் தலைவன் தாறுமாறான பாதையில் தொடர்ந்து செல்லும் போது மற்ற உறுப்பினர்களுக்கு இந்த கடினமான முடிவெடுப்பதை தவிர வேறு வழியில்லை. தங்களுக்கு எனது வாழ்த்துகள்.

  • நயினார் . Avatar
    நயினார் . - 2 months ago
    பழைய பாதை. புதிய பாதையாக தோன்றியது. சிறப்பு. இனிய வாழ்த்துகள் தோழர்