முனைவர் உ. அனார்கலி
சிறுகதை வரிசை எண்
# 71
பொக்குன்னு நினைத்தாயோ
- முனைவர் உ. அனார்கலி
மதுரை
அலைபேசி எண்: 9842423391
மின்னஞ்சல் முகவரி: anarkali.apc@gmail.com
பேசி முடித்துவிட்டு, யோசனையுடன் அலைபேசியை அணைத்து வைத்தாள் சகுந்தலா. அமைச்சர்தான் பேசினார்.
‘மேடம், சொன்ன வேலையெல்லாம் முடிந்ததா?’
‘வணக்கம் சார். நேற்றே முடிச்சுட்டேன் சார்...’
‘நல்லதும்மா... அப்புறம் நான் இன்னொரு விஷயம் சொல்லியிருந்தேனே... அது என்னாச்சு?’
குரலில் கடுமையிருந்ததா? கனிவு இருந்ததா? கண்டுபிடிக்க முடியாத ஒரு தொனி...
‘நேற்று நான் சொன்னதுதான் சார்... அதுல செய்றதுக்கு ஒன்னுமே இல்லை சார்...’
‘இல்லம்மா... அது வந்து... சி.எம்.மும்... விரும்புறார்... பாத்து முடிச்சிருங்க...’
‘சாரி சார்... வழி இருந்தால் நான் செய்ய மறுப்பேனா சார்... அதுவும் அமைச்சர், நீங்க சொல்லி...’
‘அமைச்சர் கடுப்பானார்...’
குரல் சற்று உயர்ந்தது...
‘இங்க பாரும்மா...’ ஒருமையில் ஆரம்பித்து... டக்கென்று,
‘இங்க பாருங்கம்மா... துறை அமைச்சர் நான் இவ்வளவு சொல்லியும் கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க... என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது... நாளை பதினொரு மணிக்குள்ளே நான் சொன்னதை முடிச்சிருக்கனும்... இல்லைன்னா...’
‘டக்’கென்று போனை வைத்து விட்டார் அமைச்சர்.
சகுந்தலாவுக்கு அடி வயிற்றிலிருந்து வேகாளம் ஏறிக் கொண்டிருந்தது...
நெஞ்சு நிறைய அனலாய் சினம் தகித்துக் கொண்டிருந்தது...
முகம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் ‘சிவு சிவு’ என்றிருந்தது...
‘இந்த ஆள்... நோ...நோ... மரியாதை... மரியாதை...
அதுதான் எனக்கு... என் பதவிக்கு உகந்தது...’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே இருக்கையில் அமர்ந்தாள்...
காலிங் பெல்லை... மென்மையாய் விட்டு விட்டு மூன்று முறை அழுத்தினாள்...
அவளின் உதவியாளர் அவளின் எண்ணக் குறிப்பைப் புரிந்து கொண்டு அறைக் கதவை மென்மையாக மூடிவிட்டு, அறை வாசலில் போட்டிருந்த ஸ்டூலில் அமர்ந்தார்...
துறைச் செயலரான சகுந்தலா... போட்டித் தேர்வு எழுதி, வெற்றி பெற்று, இந்தப் பணியில் அமர்ந்தவள்...
வயது, நாற்பதைத் தொட, ஒரு சில மாதங்களே உள்ளன...
தேர்வுக்குத் தயாராகும் போதே, மனதிற்குள் உறுதி பூண்டாள்...
‘இன்று இல்லை என்றாலும், நாளை அல்லது மறுநாள் நிச்சயமாக சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவேன்... பணி தொடங்கிய முதல் நாளிலிருந்து, பணி நிறைவு பெறும் வரை, விதிகளுக்குப் புறம்பாய் எதுவும் செய்ய மாட்டேன்’
தனக்குத் தானே சத்தியம் செய்து கொண்டவள்.
ஆனால், சட்டத்திற்கு உட்பட்டு, கனிவோடு செயல்படுவேன்...
தேவைப்படுமேயானால், சட்டத்தில் உள்ள சில சாதகங்களைத் தனதாக்கிப் பிறருக்கு உதவுவாள்.
துறை அமைச்சர் வந்தார். சகுந்தலாவைப் பார்த்தார்.
துறை ரீதியாகச் சில விஷயங்களைப் பேசினார்.
“போகிற போக்கில் இந்த பைலில் கையெழுத்துப் போடுங்க... மேடம் தேதி போட வேணாம்... ஆபிசில் போட்டுக்குவாங்க...”
‘கையெழுத்தா...?’
பைலை வாசிக்கத் தொடங்கினாள் சகுந்தலா...
“பைலை அப்புறம் நிதானமாய் வாசிக்கலாம் மேடம்...
லாஸ்ட் பக்கத்துல கையெழுத்துப் போடுங்க...
நேரமாகுது... சி.எம். வரச் சொல்லியிருக்கார்... போகனும் நேரமாகுது மேடம்...”
சகுந்தலாவிற்கு மண்டைக்குள் வண்டு கிர்... கிர்... என்றது.
‘இருக்கட்டும் சார்... நீங்க போய் சி.எம்மைப் பாருங்க... நான் கையெழுத்துப் போட்டு ஒன் அவர்ல உங்ககிட்டே சேர்த்திடுறேன்...’
‘என்னம்மா... அமைச்சர்ங்கிறதை மறந்திட்டு ஏதோ பொதுஜனத்தோட பேசுற மாதிரி பேசுறீங்க...’
‘சார்...’ பணிவாக ஆரம்பித்தாள்.
‘பொதுஜனம்தானே சார்... உங்களுக்கும் எனக்கும் எப்பவும் முதன்மையானவங்க...’
‘ஓ... எனக்குப் பாடம் எடுக்கிறீங்களா? இந்தாங்க பைல்... கையெழுத்தோடு இன்னும் அரைமணி நேரத்தில் எங்கிட்டே வந்தாகனும்...’
வீசி எறிகிற மாதிரி கோப்பை சகுந்தலாவின் மேசையில் போட்டுவிட்டு, உத்தரவையும் போட்டுவிட்டுப் போனார்.
அமைச்சர் வீசி எறிந்துவிட்டுப் போன கோப்பை எடுத்து, பேப்பர்களை அடுக்கி, படிக்க ஆரம்பித்தாள்...
இரண்டாவது பக்கமே அவளைக் கிறங்கடித்தது...
‘என்ன... செய்யாத வேலைக்கு இரண்டு கோடியா...? அடப்பாவிங்களா!
நாடு தாங்குமா இந்த அநியாயத்தை?’
பைலை மூடி வைத்துவிட்டு நிதானமாய் அடுத்த வேலையைக் கவனிக்கத் தொடங்கினாள்...
சரியாக நாற்பதாவது நிமிடம் அமைச்சரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது...
“என்னங்கம்மா... பைல் இன்னும் வந்து சேரலையே...”
தெரியும் சகுந்தலாவுக்கு... அமைச்சர் பேசுவார்... கையெழுத்தோடு கோப்பை அனுப்பச் சொல்வார் என்று...
அவருக்கான பதிலை அவள் ஏற்கனவே தீர்மானித்து வைத்திருந்தாள்...
‘சார்’
‘சொல்லுங்கம்மா’
‘கையெழுத்துப் போடுறதுக்கு சாத்தியமில்லை சார்...’
கோபத்தின் உச்சிக்குப் போனார்... பலே கில்லாடி...
அடக்கிக் கொண்டு தேனொழுகப் பேசினார்...
‘சகுந்தலா மேடம்... என்ன நீங்க சின்னப் புள்ளையாட்டம்... கொஞ்சம் முன்னப் பின்னதாம்மா இருக்கும்... அதெல்லாம் கண்டுக்காதீங்க...’
நிறுத்திவிட்டு, அவரே தொடர்ந்து பேசினார்.
‘ஏம்மா... ஏதேனும் பிரச்சினை ஆயிடும்னு பயப்படுறீங்களா? அதெல்லாம் நீங்க பயப்பட வேணாம்... எல்லாத்தையும் சி.எம் பாத்துக்குவாரும்மா... நாங்க உங்களை அம்போன்னு விட்டுருவோமா...?’
சி.எம். பேரை உள்ளே இழுத்தால் சகுந்தலா பயந்து விடுவாள் என்று நினைத்தார்.
‘இல்லை சார்... என்னால என் மனசாட்சிக்கு விரோதமா... என் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது... ப்ளீஸ் என்னை வற்புறுத்தாதீங்க...’
மென்மையாக, ஆனால் உறுதியாகக் கூறிவிட்டு, பின் போனை வைக்க நினைத்தாள்...
அது மரியாதை இல்லை என்பதால், அவரே துண்டிக்கட்டும் என்று காத்திருந்தாள்...
அமைச்சரின் குரல் உறுமியது...
“இதுதான்... உன் பதிலா...”
‘டக்’கென்று கையிலுள்ள அலைபேசியில் ரெக்காடு பட்டனை அழுத்தினாள் சகுந்தலா. சின்ன ஓசையோடு அது செயல்படத் தொடங்கியது...
அமைச்சர் என்ற முறையில் தான் சொல்வதை, தன் துறைச் செயலர் கேட்டுச் செயல்படுவார் என்று நினைத்த அமைச்சருக்குச் சகுந்தலாவின் மறுப்பு ஆத்திரத்தை உண்டாக்கியது...
‘சார்... என்னை ஒருமையில் குறிப்பிடுவதை நான் விரும்புவதில்லை’
‘என்னம்மா ஒருமை, எருமை, பெருமைன்னுகிட்டு... அமைச்சர் நான் கொடுத்த பைலில் கையெழுத்துப் போடுங்கன்னா போட வேண்டியது உங்க கடமை...’
‘மன்னிக்கனும் சார்... உயர் அதிகாரியா இருந்துக்கிட்டு அப்படியெல்லாம் செய்யக்கூடாதுன்னு உங்களுக்கே தெரியுமே சார்...’
‘இங்க பாருங்கம்மா... சொல்றதச் செய்யுறதுதான் உங்க வேலை...
மறுத்தா என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியாது...
அமைச்சருக்கு, அரசுக்கு உறுதுணையா இருக்கிறதுதாம்மா... உங்களுக்கு நல்லது...
எதுக்கு வீணா பிரச்சினை பண்ணிக்கிட்டு... சட்டுப்புட்டுன்னு பைலை அனுப்பி வையுங்க...
நீங்க ரொம்ப பயப்படுறீங்கன்னு நினைக்கிறேன்...
எதுன்னாலும் நான் பாத்துக்கிறேன் மேடம்...’
தேனொழுகப் பேசினார்.
சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திருக்கவில்லை...
சகுந்தலா ரெக்கார்டு பண்ணியதை பத்திரப்படுத்திக் கொண்டாள். அந்த உரையாடலை மனதில் ஓர் ஓரத்தில் தள்ளி வைத்துவிட்டாள்... பைலில் இருந்த மேட்டரை செல்போனில் படம் பிடித்துக் கொண்டாள்...
இப்பொழுதெல்லாம் கோப்பு கலாச்சாரம் கிடையாதுதான்... ஆனாலும் ஒரு சில விஷயங்களில் கோப்பு இடம் பெறுவதுண்டு...
மாலை ஆறு மணிக்கு வீட்டுக்குக் கிளம்பினாள்... சிந்தனை முழுவதும் அமைச்சரின் பேச்சு ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. நினைப்பதை நிறுத்த முயற்சித்தாலும் அடுத்தடுத்து பெய்கின்ற மழையில் தலைகாட்டும் குப்பைச் செடிகள் போல அது மனத்திரையில் வந்து கொண்டேயிருந்தது.
வீட்டில் கணவரும் மகனும் இருந்தனர். கணவரும் அரசு உயரதிகாரிதான்... மகன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன்...
சகுந்தலா உள்ளே நுழைந்ததும் இன்முகம் காட்டிய கணவர், ‘சக்கு நீ எப்ப வருவேன்னு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்’ என்றார்.
‘என்ன விஷயம்...?’
‘காபி வேணும்’
‘அம்பிகா வரவில்லையா?’
‘அம்பிகா வீட்டு வேலை செய்யும் பணிப் பெண்...’
‘வந்தாங்க... காபி குடுத்தாங்க... ஆனா நீ போடுற காபி மாதிரி இல்லை... சூடா நல்ல காபி வேணும்...’
‘அம்மா எனக்கும்’ மகன் ஆதிக் தனக்கும் வேண்டுமென்று குரல் கொடுத்தான்...
சகுந்தலாவிற்கு எரிச்சலாய் வந்தது... உள்ளே வந்ததும் வேலை...
சட்டென்று மனதை மாற்றிக் கொண்டாள்...
கணவனோ... மகனோ... காபி தந்தே ஆக வேண்டும் என்று உத்தரவு போடலையே...
சிரித்துக் கொண்டே, பிரிட்ஜைத் திறந்து பாலை எடுக்கப் போன சகுந்தலா அடுப்பு மேடையில் பால் பாக்கெட் இருப்பதைப் பார்த்து பிரிட்ஜை மூடினாள்...
பாக்கெட்டை வெட்டி, காபி பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துவிட்டு, அறைக்குள் போய், கை, கால் கழுவி மாற்றுடை அணிந்து கொண்டு சமையலறைக்கு வந்தாள்... பால் காய்ந்திருந்தது...
மூன்று பேருக்கும் காபி கலந்து எடுத்துக் கொண்டு, ஹாலுக்கு வந்தாள்...
கணவரிடம் ஒரு கப்பைக் கொடுத்துவிட்டு, மகனுக்குக் குரல் கொடுத்துவிட்டு, சோபாவில் அமர்ந்து தனக்கான காபியை அருந்தத் தொடங்கினாள்...
‘சக்கு... அருமை... நல்ல காபி ரொம்ப நல்லாருக்கு...’
மனைவியைப் பாராட்டிக் கொண்டே கணவர் காபியை ருசித்தார்...
கணவரிடம் சொல்லலாமா?
வேண்டாம்... கொஞ்சநாள் பார்ப்போம்...
நாமே சமாளிக்கலாம்...
மூன்று நாட்களாய் அமைச்சரிடமிருந்து அலைபேசி அழைப்பு வரவில்லை... இப்போது வந்தது...
‘வணக்கம் சார்’
‘உன்னோட வணக்கத்தைக் குப்பையில் போடு...’
அழைப்பு வந்தவுடனேயே அமைச்சரும் சகுந்தலாவும் பேசும் உரையாடல் பதிவாக ஆயத்தம் செய்யப்பட்டது.
‘ஏம்மா... எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு உறைக்காதா?’
‘சார்... மைண்ட் யுவர் வேர்ட்ஸ்’
‘என்னம்மா... கத்திரிக்கா... புடலங்காய்ன்னுட்டு... உனக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்...’
‘ரொம்ப நல்லாருக்கு சார்...’
‘அப்படின்னா நீ கையெழுத்துப் போட்ட பைல் ஏம்மா இன்னும் வரலை...’
...............
‘என்ன சத்தம் இல்லை...’
‘ஒருமையில் அழைத்தாலும் மரியாதை வார்த்தைகள் இல்லைன்னாலும் பதில் வராது சார்...’
‘என்னது? பதில் வராதா? உனக்கு அவ்வளவு திமிரா?’
‘நான் யாருன்னு உனக்குத் தெரியலே...
இனி தெரியும் பார்...
..................
இப்ப போட முடியுமா? முடியாதா?
................
சி.எம். விரும்புறாருன்னு சொல்லியும் பேசாம இருக்கிறேன்னா... உனக்கு நெஞ்சழுத்தம் அதிகம்தான்...
....................
காது கேட்குதா? இல்லையா?
.....................’
சகுந்தலாவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லையென்பதால் அமைச்சர் தொடர்பைத் துண்டித்தார்...
சகுந்தலா எந்த ஆரவாரமும் அழுத்தமும் இல்லாமல் யோசித்தாள்...
இனியும் விஷயம் தன்னிடம் மட்டும் இருந்தால் நல்லா இருக்காது...
மேலிடத்துக்குத் தெரிவித்துவிட வேண்டியதுதான்... நினைத்தவள்
தலைமைச் செயலருக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தாள்...
தலைமைச் செயலரின் அணுக்க அலுவலரில் ஒருவர் எடுத்து, ‘வணக்கம் மேடம், நான் பி.ஏ. ரஞ்சன் பேசுறேன்’ என்றார்.
‘வணக்கம் மிஸ்டர் ரஞ்சன்... நான் சீப் செக்ரடரியிடம் பேச வேண்டி உள்ளது. இணைப்பு கொடுக்க முடியுமா...?’
‘தப்பா நினைக்கலைன்னா எதைப் பற்றிப் பேச விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா... ஏன்னா சார் கேப்பாங்க...’
‘சாரி மிஸ்டர் ரஞ்சன்... சார் கிட்டதான் சொல்லனும்னு விரும்புறேன்’
‘ஓ.கே. மேடம்... ஒரு நிமிடம்’
அவர்களின் உரையாடல் கண்ணியமாய், உயர்தரமாய் அமைந்தது...
தலைமைச் செயலர்... தொடர்பில் வந்தார்...
‘மிஸஸ் சகுந்தலா... மார்னிங்... சொல்லுங்க...’
நேரடியாக விஷயத்திற்கு வந்தார்...
‘சார்... குட்மார்னிங் சார்... எனக்குப் பத்து நிமிடம் ஒதுக்க முடியுமா சார்?’
‘எனி பிராப்ளம் மிஸஸ் சகுந்தலா?’
‘இதுவரைக்கும் ஆகலை சார்... ஆனா விரைவில் ஆகிவிடும்ன்னு நினைக்கிறேன் சார்’
‘ஓ... அப்ப ஒன்னு செய்யுங்க... போன்ல வேணாம்... என்னுடைய கேபினுக்கு வந்திருங்களேன்...’
‘தேங்க்யூ... தேங்க்யூ சோ மச் சார்’
அடுத்த பத்தாவது நிமிடம் லிப்ட் மூலம் தலைமைச் செயலரின் கேபினுக்கு வந்தாள்...
அறை மிக அலங்காரமாய், குளிரூட்டப்பட்டு, ஆடம்பரமாய், அழகாக இருந்தது...
அறையின் உள்ளே நுழைந்து, முகமன் கூறி, இருக்கையில் அமர்ந்து, அமைச்சரின் வேண்டுகோளை, மிரட்டலை, அச்சுறுத்தலைத் தெளிவாக விளக்கினாள்... அலைபேசி ஆதாரத்தைக் காண்பித்தாள்...
பொறுமையாகக் கேட்டுக் கொண்ட தலைமைச் செயலர், ‘மிஸஸ் சகுந்தலா... அமைச்சர் கேட்டதைச் செய்து கொடுப்பதில் உங்களுக்கு என்ன கஷ்டம்...? அதான், எதுன்னாலும் நான் பார்த்துக்கிறேன் என்கிறாரே...’
லேசான புன்னகையும் அதே நேரத்தில் உறுதியுடன், ‘என்னோட அறம் அதற்கு இடம் கொடுக்காது சார்’ என்றாள்....
‘மிஸஸ் சகுந்தலா... இந்தக் காலத்துல அறம்... அது... இதுன்னு... அமைச்சரை மீறி நீங்க என்ன செய்திட முடியும்...?’
‘எனக்கு நல்லாவே தெரியும் சார்... அவரால என்ன வேணும்னாலும் செய்ய முடியும்’
‘சரி... இப்ப நான் என்ன செய்யனும்னு எதிர்பார்க்கிறீங்க?’
அவரின் முகத்தையே பார்த்தாள் சகுந்தலா... எதுவும் சொல்லவில்லை...
‘சொல்லுங்க மிஸஸ் சகுந்தலா...’
‘சார் இன்னது செய்யுங்கன்னு உங்ககிட்ட சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை...
ஆனா... நடந்ததை உங்களுக்குத் தெரிவிக்கிறது என்னோட கடமைன்னு நினைச்சேன் சார்...’
‘நீங்க எழுத்து மூலமா எங்கிட்டே தெரிவிச்சிருக்கலாமே...’
‘செஞ்சிருக்கலாம் சார், என்னோட கடிதம் உங்களை வந்து சேர்வதற்கு முன்னாடி, அது யார் கையிலேயும் அகப்பட வழி இருக்கு சார்... அமைச்சர் பெயர் அதில் இருக்கும்... அப்படி ஆச்சுன்னா பெரிய வில்லங்கமா மாறிடும் சார்...’
‘பயப்படுறீங்களா மிஸஸ் சகுந்தலா?’
‘நோ சார்... சிக்கல் வேறு பக்கம் திசை திரும்பிடக் கூடாதுன்னு நினைக்கிறேன் சார்...’
‘குட் மிஸஸ் சகுந்தலா... எதுக்கும் கவலைப்பட வேண்டாம்... நான் பார்த்துக்கிறேன்... உங்க நேர்மையை... அறத்தைப் பாராட்டுறேன்...’
சொல்லி முடிப்பதற்குள் அமைச்சர் சகுந்தலாவை அழைத்தார் அலைபேசியில்...
‘என்னம்மா... என்ன தான் செய்யப் போறே...’
சகுந்தலா ஸ்பீக்கரை ஆன் பண்ணினாள்...
அமைச்சர் பேசுவதைத் தலைமைச் செயலரும் கேட்க முடிந்தது...
‘அமைச்சரை, உங்க வீட்டுக் கிள்ளுக் கீரைன்னு நினைச்சியா... நீ மட்டும் கையெழுத்துப் போடலைன்னா... உன்னைத் தூக்கியடிச்சுட்டு, அந்த இடத்துல இன்னொருத்தரை உக்கார வச்சுக் காரியத்தை முடிச்சிடுவேன்... நினைவில வச்சுக்க...’
‘சார், நீ, போ, வா ன்னு சொல்றதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்...’
‘அட போம்மா... இங்க பாரு... இப்ப நீ அந்த பைலோட என்னோட அலுவலகத்துக்கு வரணும்... வந்தே தீரணும்...’
‘முடியாது சார்... அப்படியெல்லாம், விதியை மீறி உங்க அலுவலகம் வர என்னால் முடியாது...’
‘வந்துதான் ஆகனும் சகுந்தலா.... இல்லைன்னா...’
‘சார் நிறுத்துங்க... உங்க அடாவடிப் பேச்சை... மரியாதை இல்லாத பேச்சை வாபஸ் வாங்குங்க...’
‘அமைச்சர் நான் சொல்றதைக் கேட்காத உனக்கு மரியாதை வேறையா... இன்னும் கொஞ்ச நேரத்துல சமூக ஊடகத்தைப் பார்... உன் பேர் சந்தி சிரிக்கப் போகுது...’
‘அமைச்சர் சார்... நீங்க எந்த எல்லைக்கும் போவீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும்... பெண்கள் மீது ஏவுகின்ற கடைசி ஆயுதம்... அவள் நடத்தையில் களங்கத்தை ஏற்படுத்துவது...
இந்த நச்சு அரவத்துக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்...’
‘நீ ஏன் பயப்படப் போறே... நீ தான் எல்லாத்துக்கும் துணிந்தவளாச்சே...’
‘அமைச்சர் சார்...’
இடி இடித்தது... அரண்டுதான் போனார் அமைச்சர்... அதன்பின் அமைதி...
தலைமைச் செயலர் மூலம் செய்தி முதல்வருக்குப் போக, அதன்பின் நடந்தது வேறு கதை...
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்