B JAYAVEL
சிறுகதை வரிசை எண்
# 70
அறம்… பொருள்… துன்பம்!
கிழக்கு வெளுக்க இன்னும் நேரமிருந்தது. வண்டிமாட்டு குளம்படி குழித்தடங்களை ஓடை மணலில் சுரந்த நீர் மெதுவாய் நிரப்பிக்கொண்டிருந்தது. கூரீட்டி கண்கொண்டு ஆதவன் உற்று நோக்கினாலும் வேவு பார்க்க முடியாத அளவிற்கு பகல் பொழுதில் இருமருங்கிலும் அடர்ந்த மரங்கள் ஓடையை மூடியிருக்கும். இரவுப் பொழுதின் அடர்த்தியை சொல்லிட்டு நிரப்ப வேண்டியதில்லை. முன்னிரண்டு சாமத்தில் சப்த சமிக்ஞை அனுப்பி கலவிக்குத் துணையைத் தேடிய பாச்சான் பூச்சி சப்தமும், தாடையை ஊதிப் பெரிதாக்கி காற்றை உமிழ்ந்து அதிர்வுறச் செய்யும் தவளைகளின் சப்தமும் நான்காம் சாம மத்தியில் ஓய்ந்திருந்தது. ஓடை அடரிருளின் மிரட்சியால் மாடுகள் அடியெடுத்து வைக்கத் தயங்கின. அடிவயிற்றிலிருந்து ‘ஹேய்… ஹேய்…’ என அதட்டினான் ராமலிங்கம். ஏகாந்தத்தின் பேரமைதியை மரங்களின் அடர்வுளில் மோதிச் சிதைத்தது அவனின் குரல். மின்மினிப் பூச்சியைப்போல வாயில் பீடிக் கங்கு சிவப்பொளியை உமிழ்ந்துகொண்டே இருந்தது. ஓடையைத் தாண்டியதும் மாடுகள் விறுவிறுவென நடையெடுத்தன. இதே வேகத்தில் இரண்டு மணிநேரம் போனால் போதும் காலையிலேயே அச்சிறுப்பாக்கம் சந்தையை அடைந்துவிடலாம். கால்கள் வேகமெடுத்தாலும், காளைகளின் நினைவுகளோ காலத்தைப் பின்னிழுக்கத் தொடங்கின.
ஆறு வருடங்களுக்கு முன்னால் மணப்பாறை காளைக்குக் காயடித்து ஜோடி தேடிக்கொண்டிருந்தபோது, இதே சந்தையில்தான் இன்னொரு காளையைப் பிடித்துவந்தான். சாதிக்குச் சாதி, வெள்ளைக்கு வெள்ளை, உயரத்திற்கு உயரம் எனத் தோதாக அமைந்தது ஜோடி. வளர்த்த மாட்டை வலதாகவும், சந்தை மாட்டை இடதாகவும் பூட்டி பழக்கினான். உழவுக்கும், வண்டிக்கும் ஒன்றுக்கொன்று ஒத்தாசையாக இருந்தன. யாருக்காவது இரவல் கொடுத்தால் மாடுகளை அடித்துவிடுவார்கள் என்பதால் இரவல் பேச்சே இவனிடம் எடுபடாது. வேலையில்லாத பொழுதுகளில் வரப்பில் பிடித்து மேய்ப்பான். காளைகளின் கழுத்து மணிச் சத்தம் அவன் காதுகளுக்கு இனிமையாய் இருக்கும். குளிப்பாட்டுவது, உண்ணிகளை அகற்றுவது, தடவிக் கொடுப்பது என மாடுகளைப் பராமரிப்பதென்பது அவனுக்குத் தனி சுகம். தாயும் பிள்ளையும்போல மாடுகள் அவனிடம் பழகின.
பொங்கல் வந்தால் போதும் மாடுகளுக்குத் திருவிழா கலைவந்துவிடும். ஓடை நீரில் குளிப்பாட்டி, கொம்பு சீவி அதற்கு பெயின்ட் அடித்து, திருஷ்டிப் போக்க இடுப்பிலும் கழுத்திலும் கறுப்புக் கயிறு கட்டுவான். பனங்குருத்தோலையில் கொங்கரை, பலூன், கழுத்து மணிப்பட்டை, கொம்புக்கு மணி என மணப்பெண்ணைப்போல அலங்காரிப்பான். சிறுவர்களும் தாவணிப் பெண்களும் இவன் வண்டியில் போட்டிப் போட்டுக்கொண்டு ஏறிக்கொள்வார்கள். நாலு கால் பாய்ச்சலில் வண்டி சீறி ஓடும்போது முகத்தில் பெருமிதம் பொங்கும்.
பங்குனியில் ஒரு நாள் முன்னிரவு. திடீர் விருந்தாளியாக வீட்டிற்குள் நுழைந்தாள் அம்பிகா. லட்சுமிக்கு நெருங்கிய சொந்தம். சங்கதி இல்லாமல் வரமாட்டாள். உறக்கத்திற்கு முன்பாக மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தாள்.
“கையில வெண்ணெய்யை வச்சிக்கிட்டு நெய்க்கு அலையுற கதையா இல்ல இருக்கு”
“இன்னாக்கா சொல்ற?”
“கொடுங்காலூர்ல நம்ம பழனியப்பனோட மூத்த பையன் வெங்கடேசன் இருக்கான்ல”
“ஆமாம், ஏதோ படிச்சுட்டு மெட்ராசுல வேல பாக்குதுன்னு சொன்னாங்க.”
“ஏதோ படிப்பு இல்லடி. இன்ஜினியர் படிப்பு. இப்பவே எட்டாயிரம் வாங்குறான். இன்னும் ஒரு வருஷத்துல பத்தாயிரத்துக்கு மேல கெடைக்குமாம். பையனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாரு பழனியப்பன். பையன் நல்ல உத்தியோகத்துல இருக்கிறதால ஏகப்பட்ட கெராக்கி. காசு பணத்த விட நல்ல யெடத்துல பொண்ணு வேணும்னு சொல்லி இருந்தாரு. டக்குன்னு நம்ம பொண்ணு ஞாபகம் வந்துடுச்சு. அதான் கௌம்பி வந்துட்டேன்.”
“நல்ல யெடந்தான்க்கா. ஆனா அவங்க ரொம்ப எதிர்பார்ப்பாங்களே.”
“அம்பது சவரன்கூட போடாட்டி எப்படி? நமக்கும் கௌரவம் இருக்கு இல்ல.”
“ஏதோ இருவது முப்பதுன்னா பரவாயில்ல. திடீர்னு அம்பதுக்கு எங்க போறது?” என்றாள் லட்சுமி.
“இருக்குறத போட்டு கல்யாணம் பண்ணிடலாம். அவங்க மேற்கொண்டு எதிர்பார்க்கிறத தை மாசம் போடுறேன்னு சொல்லு. மத்தத நான் பேசிக்கிறேன். அடுத்து இருக்கிறது ஒரே பையன்தானே. பெருசா செலவு கெடையாது. அவனுக்கும் நல்ல யெடம் கெடைக்காமலா போயிடும்? நெலத்தையும் பொண்ணையும் பேசிட்டு சும்மா இருக்கக்கூடாதுன்னு சொல்வாங்க. அப்புறம் உன் இஷ்டம்.” என உசுப்பிவிட்டாள்.
ஆவணியில் திருமணம் நல்லபடியாக முடிந்தது. கல்யாணம், தீபாவளி வரிசை என எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்து முடித்திருந்தான் ராமலிங்கம். ஆனால் சீர்வரிசையில் பதினைந்து சவரன் மட்டுமே பாக்கியாக நின்றது. இதனால் மனக்கஷ்டம் வரக்கூடாது என நிலத்தை அடைமானம் போட்டு கடன் வாங்கியிருந்தான். மார்கழி முதல் வாரத்திலேயே தந்தி அடித்ததுபோல வந்திருந்தாள் அம்பிகா.
“கல்யாணம் நல்லா பண்ணதால உன்மேல அவ்ளோ மதிப்பு வச்சிகீறாரு சம்பந்தி. ஏதோ ஆண்டவன் புண்ணியத்துல நல்ல யெடமா அமைஞ்சுடுச்சு” எனப் பேச்சை ஆரம்பித்தாள்.
“அமாங்க்கா… உன் கைராசி அப்புடி!” எனப் பூரித்தாள் லட்சுமி.
“மீதி நகையைப் பத்தி அவங்க இதுவரைக்கும் வாயைத் தொறக்கல. அதுக்கு முன்னால நாம முந்திக்கிட்டா கௌரவமா இருக்கும். அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்”
“கையில கொஞ்சம் இருக்கு. மிச்சத்துக்கு மாட்ட வித்து பொங்கலுக்கு சீர் செஞ்சிடலாம்னு இருக்கேன். அதோட குலதெய்வம் கோயிலுக்கு போய் வந்தா மொத்த பாரமும் தீர்ந்திடும்.” என்றான் ராமலிங்கம்.
“ஒன்னப் பத்தி எனக்குத் தெரியாதாப்பா. நாக்கு சுத்தமான ஆளாச்சே…” எனப் பல்வரிசையில் தாராளம் காட்டினாள் அம்பிகா.
மாட்டுச் சந்தையில் கூட்டம் குறைவாகவே இருந்தது. ராமலிங்கத்தின் மாட்டைப் பார்க்க வந்தவர்களெல்லாம் பல்லைப் பிடித்துப் பார்த்தார்கள்; சுழி சுத்தம் பார்த்தார்கள்; கண்ணில் பூ விழுந்திருக்கிறதா எனப் பார்த்தார்கள்; நொண்டுகிறதா என நடக்கவிட்டுப் பார்த்தார்கள். எல்லாம் சரியாக இருப்பதாக திருப்திபட்டுக் கொண்டாலும், அவர்களின் விலை முனியனின் விலைக்கு நெருங்கவில்லை. “பதினைஞ்சுன்னா சொல்லு. இப்பவே முடிச்சுடலாம். ரெண்டு மூனு வியாபாரத்தை முடிச்சுட்டு வர்றேன்.” என நழுவினார் கோனேரிகுப்பத்துத் தரகர். அடுத்தடுத்து வந்தவர்களும் அடிமாட்டு விலைக்குப் பேரம் பேசினார்கள். விழுப்புரத்திலிருந்து வருவதாகச் சொன்ன வியாபாரி மிடுக்காக இருந்தார். ஒருவழியாக பதினேழாயிரத்திற்கு அவரிடம் விலை படிந்தது. புதிய நூறு ரூபாய் கட்டு ஒன்றும் ஐந்நூறு ரூபாய் கட்டிலிருந்து பதினான்கு தாள்களையும் எண்ணிக் கொடுத்தார் வியாபாரி. சரிபார்த்துவிட்டு மாட்டின் கயிற்றை அவிழ்த்துச் சுருட்டிக் கொண்டு, திரும்பினான். இவன் போன பாதையையே பார்த்துக்கொண்டிருந்தன மாடுகள். இவனுக்கும் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. பேருந்தில் பயணப்பட்டு வந்தவன் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஓடை வழியாக நடக்கத் தொடங்கினான்.
ஓடையெங்கும் காட்டுக் கொடிகள் புதரில் பின்னிக்கொண்டிருந்தன. கருத்துப் பழுத்த சுரட்டுமுள் பழங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. வெடித்துச் சிதறி எஞ்சிய விதைகளை வைத்திருக்கும் குன்றிமணி விதைகள் கொடிகளில் கறுப்பும் சிவப்புமாகத் தெரிந்தன. புதர் மண்டிய மரங்களின் இடுக்குகளில் இருள் சன்னமாக இருந்தது. சணல் பஞ்சு உருண்டைகளைப் புதர் இடுக்குகளில் செருகி வைத்தாற்போல அணில் கூடுகளும், அதையொத்த தோற்றத்தில் கொம்புத் தேன் கூடுகளும் ஆங்காங்கே இருந்தன. சில்வண்டுகள் ஓயாமல் சப்தமெழுப்பிக்கொண்டிருந்தன. தவிட்டுக் குருவிகள் கிளைக்குக் கிளை தாவி விளையாடிக்கொண்டிருந்தன. உயர்ந்த மரக்கிளை அடர்வுகளில் ஆந்தைகள் பாதையை நோட்டமிட்டுக்கொண்டிருந்தன. தேங்கிய ஊற்றுநீரில் தலைப்பிரட்டைகளும் மீன் குஞ்சுகளும் நீந்தித் திரிந்துகொண்டிருந்தன. ஓடையைக் கடந்து வீடு வந்ததும், சாமி படத்திற்கு முன்பாக பணத்தை வைத்து வேண்டிக்கொண்டான். அந்தி சாய்ந்ததும் பணத்தைப் பத்திரப்படுத்தி வைத்தாள் லட்சுமி.
அடுத்த சில தினங்களில் ராமலிங்கத்தைத் தேடிவந்த முத்துசாமி, “நீ கொடுத்ததுல, ஒரு நோட்டு கள்ள நோட்டு. ஒரக்கடைக்காரன் திருப்பி கொடுத்துட்டான்.” என நூறு ரூபாய்த் தாளை நீட்டினார்.
“கள்ள நோட்டா?!”
“ஒனக்கு யார் கொடுத்தது?”
“சந்தையில மாட்டு வியாபாரி ஒருத்தன் கொடுத்தான்.”
“ஆள் வெவரம் தெரியுமா?”
“ஏதோ விழுப்புரம்னு சொன்னான்.”
“முன்னபின்ன தெரியாதவங்களாண்டலாம் பணத்தை வாங்குறப்ப பார்த்து வாங்கணும். இதோட அவன் சந்தை பக்கமே வரமாட்டான். அடுத்த ஊருக்கு கௌம்பிடுவான். அவன் கொடுத்த பணத்தையெல்லாம் கொண்டு வா பார்க்கலாம்”
ராமலிங்கம் லட்சுமியை நோக்கினான். சந்தையில் வாங்கி வந்த மொத்தப் பணத்தையும் அவள் எடுத்துவந்தாள். எல்லா தாள்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் நூறு ரூபாய்த் தாள்களில் இரண்டும், ஐந்நூறு ரூபாயில் இரண்டும் எனக் கள்ள நோட்டுகளைத் தனியாக தரம் பிரித்து எடுத்துக் கொடுத்தார் முத்துசாமி. கள்ள நோட்டுகளைக் கண்டறியும் முறைகளையும் சொல்லிக் கொடுத்தார். அவனுக்கு முகம் வியர்த்தது. தலையில் இடி விழுந்தாற்போல தரையில் அமர்ந்தான்.
“நாளைக்கு நகைக் கடைக்கு போகலாம்னு இருந்தேன்.”
“நல்ல வேளை… அங்க போனா போலீஸ் கேஸ்னு போயிருக்கும்.”
“பேங்க்குல மாத்தி தருவாங்களா?“
“பிரச்னைய வெல கொடுத்து வாங்காத. பரபரப்பா வியாபாரம் ஆகுற யெடமா பார்த்து எப்படியாவது மாத்திடு. இதப்பத்தி வெளியில யார்கிட்டேயும் மூச்சுவிடக்கூடாது.” என எச்சரித்துவிட்டுப் போனார் முத்துசாமி.
கள்ள நோட்டு பிரச்னையை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அவற்றைத் தனியாகப் பத்திரப்படுத்திக்கொண்டான். பொங்கலுக்குச் சீர் வரிசை செய்யும் வேலையில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தான். பொங்கல் முடிந்த பிறகுதான் மனம் நிம்மதிகொண்டது. ஆனாலும், கள்ள நோட்டுகள் அடிக்கடி கண்களில் வந்துபோயின. திடீரென ஒரு ஞாயிற்றுக்கிழமை தனியாக எடுத்து வைத்திருந்த அந்தப் பணத்தை எடுத்து கீழ்பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சந்தைக்குக் கிளம்பினான். சந்தையில் கூட்டம் நிரம்பியிருந்தது. ஏமாற்றிய மாட்டு வியாபாரியைக் கண்கள் தேடின. சந்தை முழுக்க அலைந்து திரிந்தும் அவன் புலப்படுவதாக இல்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகு கடைத்தெருவிற்கு வந்தான். பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த மளிகைக் கடையில் சாமான்களை வாங்கிக்கொண்டு வேட்டிக்குள் கையைவிட்டு கீழ்பாக்கெட்டிலிருந்து ஓர் ஐந்நூறு ரூபாய்த் தாளை எடுத்துக் கொடுத்தான்.
“இது கள்ள நோட்டு. எங்க ஏமாந்தீங்க. வேற ஏதாவது கொடுங்க.”
“கள்ள நோட்டா?” புதிதாகக் கேட்பவனைப்போலப் முகம் பாவித்தான். பிறகு அந்த தாளை வாங்கி இரண்டு முறை திருப்பிப் பார்த்துவிட்டு, “இப்பதான் வாங்குனேன். நல்லவேளை சொன்னீங்க. வாங்குன யெடத்துலேயே இத கொடுத்துடுறேன்” எனச் சட்டை பாக்கெட்டிலிருந்த நூறு ரூபாய்த் தாள் ஒன்றைக் கொடுத்தான். கூட்டமாக இருந்த டீக்கடைக்குச் சென்று, டீயைக் குடித்துவிட்டு, இரண்டு வடையைச் சாப்பிட்டான். கீழ்பாக்கெட்டிலிருந்து நூறு ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினான்.
“சில்ற இல்லை. ஒண்ணேகால் ரூபா சில்றையா கொடுப்பா.”
டீக்கடைக்காரனின் பதில் ஏமாற்றத்தைத் தந்தது. வேறுவழியில்லாமல் மேல் பாக்கெட்டிலிருந்து சில்லறையைக் கொடுத்துவிட்டு நகர்ந்தான். அடுத்ததாக அவன் உத்தேசித்திருந்தது ஒயின் ஷாப். இதுவரை அதன் வாசலைக்கூட அவன் கால்கள் மிதித்ததில்லை. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கடைக்குள் நுழைந்தான். பிராண்ட் பெயரைக்கூடச் சொல்லத் தெரியாமல் இரண்டு பிராந்தி பாட்டில்களை வாங்கிக்கொண்டு கீழ்பாக்கெட்டில் வைத்திருந்த ஐந்நூறு ஒன்றை எடுத்துக் கொடுத்தான். மீதிப் பணத்தை வாங்கிக்கொண்டு கடையைத் திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்தான். ஓர் ஐந்நூறு ரூபாயை மாற்றிவிட்டதில் நான்கு பெண்களில் ஒரு பெண்ணைக் கட்டிக்கொடுத்ததுபோல இருந்தது. மளிகைச் சாமான்களோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தான். பையில் பிராந்தி பாட்டில்களைக் கண்ட லட்சுமி அதிர்ந்தாள். “இது என்ன புதுப்பழக்கமா இருக்குது!” என்றவளுக்கு மெதுவாக விளக்கிச் சொன்னான்.
அடுத்த நாளில் மதுராந்தகம் சந்தைக்குச் சென்றான். பரபரப்பாக இருக்கும் கடைகளில் நுழைந்து பொருட்களை வாங்கினான். சில்லறையாக வேண்டும் என்றதும், “வேண்டாம்” என நழுவி விடுவான். சில கடைகளில் ‘கள்ள நோட்டு’ எனத் திருப்பி கொடுத்துவிடுவார்கள். இதனால் வேறு பணத்தைக் கொடுத்து தேவையில்லாத பொருட்களை வாங்க நேரிட்டது. ஹோட்டல், டீக்கடை எனச் செலவும் அதிகரித்தது. பல இடங்களில் முயன்றும் கொண்டு வந்த இரண்டு நூறு ரூபாயும், ஓர் ஐந்நூறும் கீழ் பாக்கெட்டில் அப்படியேதான் இருந்தன.
கூட்டம் அதிகமாக கூடும் இடம் எது என நினைத்தபோது சினிமா பக்கம் திரும்பியது பார்வை. அலங்கார் தியேட்டரில் ரஜினியின் ‘தர்மதுரை’ படம் ஓடிக்கொண்டிருந்தது. கூட்டத்தில் நுழைந்து கீழ்பாக்கெட்டிலிருந்த நூறு ரூபாயைக் கொடுத்து டிக்கெட் எடுத்தான். மீதி சில்லறையை வாங்கிக் கொண்டு அரங்கிற்குள் நுழைந்தான். நம்பிக்கை துரோகமும் சமூக சீரழிவும் அப்பாவி மனிதனை எப்படியெல்லாம் சிதைத்து சீரழிக்கிறது எனக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தன. அவை ரசிகர்களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தின. வில்லன்களுக்குள் ஏற்பட்ட போட்டியில் கள்ள நோட்டு அடிக்கும் போட்டியாளனை போட்டுக்கொடுப்பான் இன்னொரு வில்லன். ‘கள்ள நோட்டு அச்சடித்த குற்றத்திற்காகவும், தங்கம் கடத்துனதுக்காகவும் உங்களை நான் அரெஸ்ட் செய்யறேன்’ என கமிஷ்னர் வில்லன்களைத் துப்பாக்கி முனையில் அதிரடியாகக் கைது செய்வார். இந்தக் காட்சிகளைக் கண்டபோது கீழ் பாக்கெட்டில் இருந்த பணம் பெரும் பாரமாய் இருந்தது. கூட்டத்தில் தன்னை யாராவது பார்க்கிறார்களா என ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கொண்டான். இப்படியொரு நல்லப் படத்தைக் கள்ள பணத்தில் பார்க்க நேரிட்டது மனதுக்குள் உறுத்தியது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, கிளிக் கூண்டு எனத் தேவையில்லாத பொருட்களோடு வீட்டிற்குத் திரும்பினான்.
இரண்டு நாள் கழித்து ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு திண்டிவனம் சென்றான். பெட்ரோல் பங்கில் இரண்டு லிட்டர் பெட்ரோலை நிரப்பிக்கொண்டான். பதினேழு ரூபாய் பணத்திற்குக் கீழ் பாக்கெட்டிலிருந்து நூறு ரூபாயைக் கொடுத்தான். ‘இது கள்ள நோட்டு. எங்கிருந்து வர்றீங்க?’ என்றதும் ஊர்ப் பெயரை மாற்றிச் சொல்லிவிட்டு மேல்பாக்கெட்டிலிருந்து பணத்தைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். துணிக்கடை ஒன்றில் வேட்டியும் சட்டைத் துணியும் எடுத்துக் கொண்டு கீழ் பாக்கெட்டிலிருந்து நூறு ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு அவசர அவசரமாகத் திரும்பினான். மீண்டும் பெட்ரோல் பங்க்கைக் கடக்கும் போது திக்திக் என்றது மனம். இப்போது ஓர் ஐந்நூறு ரூபாய் மட்டுமே அவனிடம் மிச்சமிருந்தது. அதைத் தொட்டாலே கைகள் நடுக்கம் கொள்ள ஆரம்பித்துவிடுகின்றன. முகம் இறுக்கமாகி வார்த்தைகள் தடுமாறத் தொடங்கிவிடுகிறது. அவனின் பயமே அவனைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதைப்போல உணர்ந்தான். இப்போதைக்கு அதை வெளியில் மாற்றக்கூடாது என உறுதிகொண்டான்.
அடுத்தநாள் டீக்கடைக்கு சென்றபோது, அங்கே அரசியல் வாடை பலமாக வீசியது. ஈரான்-ஈராக் போர் உச்சத்திலிருந்த காலம் அது. சதாம் உசேனும் அணு ஆயுதமும் தமிழ்ப் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாயின. அவை உள்ளூர் டீக்கடையிலும் பேசுபொருளாயின.
“பொண்ணை கட்டிக் கொடுத்தாச்சு. புதுமாப்பிள்ளை மாதிரி ஜாலியா சுத்திகிட்டு திரியறியே மாமா.” என நக்கலடித்தான் சுப்பிரமணி.
“கல்யாணம் பண்ணிப்பாரு. கஷ்டம் இன்னான்னு தெரியும்.”
“உன் கஷ்டத்தை பார்த்துகிட்டுதான் இருக்கேன். ஞாயித்துக்கெழம ஒயின் ஷாப்புக்கு போயிருக்க. திங்கக்கெழம மேட்னி ஷோ ரஜினி படம் பார்த்துட்டு வந்திருக்க. ரெண்டு நாளைக்கு முன்னகூட புதுத்துணி எடுத்துகிட்டு வந்திருக்க. உன்னைப் பார்த்தா கஷ்டத்துல இருக்குற மனுஷன் மாதிரியா தெரியுது!”
வலக்கை கண்ணாடி டம்ளரில் இருந்த டீ லேசாகத் தளும்ப ஆரம்பித்தது. மெதுவாய் அதை பென்ச்சில் வைத்தவன், “குடிக்கிற பழக்கம் எனக்கு இல்லைன்னு இந்த ஊருக்கே தெரியும். வேலை செய்யறவங்க கேட்டாங்களேன்னு ஏதோ ஒரு நாள் வாங்கியாந்து கொடுத்தேன். மத்தியானம் பஸ்ஸு இல்லையேன்னு சினிமாவுக்கு போனேன். இதெல்லாம் ஒனக்கு எப்புடி தெரியும்?”
“யாரோ பார்த்தவங்க சொன்னாங்க. ஏதோ சந்தோஷமா இருந்தா சரிதான்.”
“திருச்சியில நாலு கோடி ஹவாலா பணம் சிக்கிருச்சி பார்த்தியா?” எனச் செய்தித்தாளைக் காண்பித்தார் வாத்தியார்.
“ஹவாலா பணம்னா, கள்ளப் பணமா?” என அவர் பக்கம் திரும்பினான் சுப்பிரமணி.
“ஹவாலா பணம்னா பேங்க்குக்கு தெரியாம வெளிநாட்ல இருந்து கள்ளத்தனமா கொண்டு வர்றது. கறுப்புப் பணம்னா கவுர்மெண்ட்டுக்கு கணக்கு காட்டாம கள்ளத்தனமா வச்சிருக்குற பணம். அரசாங்கம் அடிக்க வேண்டியதை நாமே திருட்டுத்தனமா அடிச்சிக்குறது கள்ள நோட்டு. மாட்டினா அவ்ளோதான். கள்ள நோட்டு அடிக்கிறது தேசத் துரோகம். கள்ள நோட்டுன்னு தெரிஞ்சு வீட்ல வச்சிருக்கிறதும், யாருக்காவது கொடுக்கிறதும்கூட குற்றம்தான். ஜாமீன்கூட கெடைக்காது. பத்து வருஷம் உள்ள போக வேண்டியதுதான்.”
“போன வாரம்கூட மருதாடு சந்தையில கள்ள நோட்டு வச்சிருந்த ரெண்டு பேரை போலீஸ் புடிச்சிட்டு போயிடுச்சாம் வாத்தியாரே.”
“இப்பல்லாம் நாட்ல எவனையும் நம்ப முடியல. வெள்ளையும் சொள்ளையுமா ஊரைச் சுத்தி திருட்டுப் பசங்களா திரியறானுங்க”
டீக்கடையில் வாயைக் கொடுக்காமல், சட்டையிலிருந்து சில்லறையைக் கொடுத்துவிட்டு நகர்ந்தான் ராமலிங்கம். கள்ள நோட்டு பற்றிய பயம் மனத்தில் வேரூன்றத் தொடங்கியது. வீட்டிற்குச் சென்றதும் அந்த தாளை மட்டும் பத்திரப்படுத்தி ரகசிய இடத்தில் வைக்கச் சொன்னான்.
திடீரென ஒரு நாள் அவன் வீட்டின் முன்பாக போலீஸ் ஜீப் வந்தது. ஜீப்பில் வந்தவர்கள் திபுதிபுவென இறங்கி வீடு முழுக்க சல்லடை போட்டு அலசினார்கள். பீரோவிலிருந்தும், பெட்டியிலிருந்தும் கட்டுக் கட்டாய் கள்ள நோட்டுகளை எடுத்தார்கள். ராமலிங்கத்தின் கைகளில் விலங்கை மாட்டி தரதரவென இழுத்துச் சென்று ஜீப்பில் ஏற்றினார்கள். கதறி அழுதாள் லட்சுமி. “என்னை விட்டுடுங்க… நான் எந்தத் தப்பும் செய்யல” எனக் கதறினான் அவன். நள்ளிரவு தூக்கத்திலிருந்த லட்சுமி பதறியெழுந்தாள். “ஒன்னுமில்லை, கெட்ட கனவு” எனச் சொல்லிவிட்டுப் படுத்தான். விபூதியைக் கொண்டுவந்து அவன் நெற்றியிலிட்டு படுத்தாள் லட்சுமி. அதன் பிறகு அவன் இமைகள் மூடவேயில்லை.
‘முத்துசாமிக்கும் லட்சுமிக்கும் மட்டும்தான் விஷயம் தெரியும். ஊருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. சினிமாவுக்குப் போனதெல்லாம் எப்படியோ ஊரில் இருப்பவனுக்குத் தெரிந்து விடுகிறதே’ என நினைத்துக் கவலைப்பட்டான். இந்த விவகாரத்தில் மாட்டிக்கொண்டால் செய்தித்தாளில் பெயர் வரும், ஊரில் தனக்கு உள்ள மதிப்பும் கெட்டுப் போகும் என்பதை நினைக்கையில் அவனுக்குப் பயம் அதிகரித்தது. தான் ஏமாற்றப்பட்டதற்கு சகமனிதர்களை ஏமாற்றுவதென்பது எப்படிச் சரியாகும். இது அறமல்ல என்பதை உணர்ந்தான். குற்ற உணர்வு நெஞ்சைக் குத்திக்கொண்டே இருந்தது.
அன்று விடுமுறைக்காக வந்திருந்தான் சங்கர். “அப்ரண்டிஸ் முடிஞ்சுடுச்சு. இதோட கம்பெனியில எப்ப கூப்பிடுறாங்களோ அப்பத்தான் போகமுடியும். துபாய்ல வேலைக்கு போலாம்னு எங்கூடப் படிச்சவங்க சொல்றாங்கப்பா” என்றான்.
“உனக்கு எது சரின்னு படுதோ அதை செய்” என விருப்பத்தை சொன்னான் ராமலிங்கம்.
இப்போதெல்லாம் புதிய மனிதர்களைப் பார்த்தாலே அவனுக்கு மனம் பயம் கொள்கிறது. எதையும் உளறிவிடக்கூடாது என்பதற்காகவே பழகியவர்களிடம்கூட பேச்சுக் கொடுக்கத் தயங்கினான். இதனால் தேவையில்லாமல் வெளியில் செல்வதைக்கூட தவிர்த்துக்கொண்டான். திடீரென ஒரு நாள், ”ராமலிங்கம் வீடுதானே இது?” எனக் காக்கி உடையணிந்து வந்த காவலர் கேட்டார். “தோட்டத்துல இருக்கார். கூட்டிட்டு வர்றேன்” என்றாள் லட்சுமி. போலீஸ் வந்திருப்பதாகத் தகவல் சொன்னதும், அவனுக்கு அடி வயிற்றைக் கலக்குவதுபோல இருந்தது. விஷயம் தெரிந்து வந்திருப்பார்களா, சந்தேகத்தில் விசாரிக்க வந்திருப்பார்களா என மனம் பயம்கொண்டது. துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டு, காவலர் முன்பாக வந்து நின்றான்.
“கொஞ்சம் விசாரிக்க வேண்டியிருக்கு”
“எதுக்கு சார்?!”
“பையன் பாஸ்போர்ட் விஷயமாத்தான்.”
விவரங்களை கேட்டறிந்த பின்பாக “சாயங்காலம் ஸ்டேஷன் வந்து லட்டர் வாங்கிக்குங்க.” எனச் சொல்லிவிட்டுச் சென்றார். அப்போதுதான் அவனுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.
“சங்கர் வெளிநாட்டு வேலைக்குப் போறதுக்கு முன்ன ஒரு தடவை குலதெய்வம் கோயிலுக்குப் போய் வந்திடலாம். அதுதான் மனசுக்கு கொறயா இருக்குது.” என்றாள் லட்சுமி. அவனுக்கும் அது சரியாகப்பட்டது. மகளும் மாப்பிள்ளையும் ஊருக்கு வந்திருந்தார்கள். குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்குச் சென்று சிறப்பு அபிஷேகம் செய்து, பொங்கலிட்டு படையலிட்டார்கள். எல்லா பிரச்னையும் இன்றோடு தீரணும் என மனக் கவலைகளைச் சொல்லி வேண்டினான். உண்டியலில் காணிக்கையிட்டான். நீண்ட நாட்களாக மனத்தில் மலைபோல் இருந்த பாரம் இறங்கியதுபோல இருந்தது. அடுத்த நாளே மகளும் மாப்பிள்ளையும் புறப்பட்டுச் சென்றார்கள்.
“ஏங்க… பீரோவுல வச்சிருந்த அந்த பணத்தை எடுத்தீங்களா?”
“அத வச்சு கடன் ஒன்னுத்த அடைச்சுட்டேன்.”
“யாருக்கு?”
“பச்சையம்மாவுக்கு!”
“அடப்பாவி மனுஷா… சாமிக்குப் போய் கள்ள நோட்டு காணிக்கை போட்டிருக்கியே, அடுக்குமா ஒனக்கு? கோயிலு இன்னா குடிக்கிற யெடமா இல்ல கூத்தடிக்கிற யெடமா? இந்த காரியத்த செய்யறதுக்கு முன்ன பொண்ணு வாழ்க்கையை கொஞ்சம் நெனச்சுப் பார்த்தியா?” எனப் பூஜை அறைக்கு ஓடினாள். “ஏதோ தெரியாம செஞ்சிட்டாரு. அந்தப் பணத்துக்கு ஈடா வேற பணத்தைப் போடுறேன் தாயீ.” எனக் கற்பூரத்தை ஏற்றி கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.
“உனக்குத்தான் இது கள்ள நோட்டு. என்னைப் பொருத்தவரைக்கும் அந்த நோட்டோட மதிப்பு ஐந்நூறு ரூபாய். இந்த நாட்டை தாண்டிட்டா நம்ம காசு செல்லாது. மேல இருக்கிற சாமிக்கு எப்படிச் செல்லும்? கடவுளோ, கழுதையோ மனுஷனோட எல்லாப் பணமுமே காகிதம்தான்.” தீர்க்கமாகச் சொல்லிவிட்டு கழனியை நோக்கி நடந்தான்.
மாடுகளின் மணிச்சத்தம் காதுகளில் இதமாய் ஒலித்தது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்