logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

அனந்த் ரவி

சிறுகதை வரிசை எண் # 69


உன் மனத் தாரகை இருள் மெல்ல இறங்கத் தொடங்கியிருந்தது. இயற்கை எதற்காகவாவது தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறதா என்ன? இருளும் மழையும் சேர்ந்து கொண்டால் சிலருக்குக் கொண்டாட்டம். பலருக்குத் திண்டாட்டம். கஷ்யப் மிகுந்த சோகத்தில், என்ன செய்வதென்றே தெரியாமல் உறைந்து போய் நின்றிருந்தான். வெளியே விடாமல் பெய்து கொண்டிருந்த மழை இருளைக் கரைத்துக் கரைத்துக் கடலில் கொட்டிக் கொண்டிருந்தது. அந்தக் கூடத்தின் மெல்லிய திரைச்சீலைகள் இறக்கி விடப் பட்டிருந்தன. முதலிரவு அறைக்குள் செல்லத் தயங்கும் புதுப் பெண்ணை மென்மையாகத் தள்ளி விடும் தோழியைப் போல மெல்லிய காற்று அந்த திரைச்சீலைகளை மௌனத்தின் வெளிக்குள் திரும்பத் திரும்பத் தள்ளி விட, செய்வதறியாது தத்தளித்துக் கொண்டிருந்தன திரைச்சீலைகள். மனதைக் கவ்விப் பிடிக்கும் பாடல்களையும், கண்களைப் பளீரிடச் செய்யும் ஆட்டத்தையுமே பார்த்துப் பார்த்து மகிழ்ந்திருந்த திரைச் சீலைகள் இன்று வேறு காட்சியைக் காணப் பிடிக்காது அசைவின்றி மயங்கிக் கிடக்கவே யத்தனித்தன. அந்தச் சீலைகளின் பின் மெல்லிய, கண்ணை உறுத்தாத விளக்கு வருத்தத்துடன், ஒரு கடமைக்காக, எரிந்து கொண்டிருந்தது. கூடத்தின் பிரகாசமான விளக்குகள் உயிர்ப்பிக்கப் படவில்லை. மெல்லிய இருள் கூடத்தைப் போர்த்தி இருந்தது. வெளிச்சம் குறைவுதான். இனி அங்கே வெளிச்சம் எதற்கு? என்ன தேவை? அங்கு, இனி ஆட்டங்கள் இருக்குமா என்பது உறுதி இல்லை. ஆடின கால்கள் தான் ஓய்ந்து விட்டனவே! அந்தக் கூடத்தின் தரையை உதைத்து உதைத்து ஆடின கால்கள் அவளது நுரையீரல்கள் பிராணவாயுக்காகப் போராடித் துடித்ததைப் போலவே காற்றில் உதைத்து உதைத்துத் துடித்துத் துடித்துப் பின் அடங்கி விட்டனவே. மனித மனத்தின் விளிம்புகளையும், பாசாங்குகளையும் தாண்டி, காதலையும் காமத்தையும் சுண்டி இழுத்துக் கொண்டிருந்த அந்த சாரங்கியும் தபலாக்களும் ஆழ்ந்து மௌனித்துக் கிடந்தன சுவரோரத்தில். ஆற்று நீரின் அடியில் உள்ள இருட்டைப் போல இசை அந்த வாத்தியங்களின் மையங்களில் புதையுண்டு கிடந்தது. எத்தனை எத்தனை மனிதர்களின் சோகங்கள் அங்கே, அந்த கூடத்தில், வடிந்து விழுந்திருக்கும். தினசரி வாழ்க்கையின் போராட்டங்களைச் சற்று மறக்கவே ரசிகர்கள் அங்கு எப்போதும் திரள்வார்கள். குலாபியும், அஷிதாவும் தம்தம் தலைகளை முழங்கால்களில் புதைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அழுது கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை குலுங்கும் அவர்களின் முதுகுகள் காட்டிக் கொடுத்தன. கீழே சமன்லால் எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்தான். “சலோ, சலோ, இன்னும் தஸ் தின் ஆட்டம் கிடையாது”. பைத்தியக் காரன், அவனும் கண் கலங்கித்தான் கிடக்கிறான். அந்த மழையிலும் ரசிகர்கள் ஆவலுடன் ஆட்டத்தைக் காண வந்து கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் பலத்த ஏமாற்றம் தான் அவர்களுக்காக அங்கே காத்துக் கொண்டிருந்தது. மனித மனங்களை ரேஷ்மிதான் எப்படி கவர்ந்து வைத்திருந்தாள்!? அன்பும் கருணையும் காதலும் அவளிடம் பொங்கிப் பரவி மனித மனங்களை சமன் செய்து அங்கு மண்டிக் கிடந்த துக்கத்தையெல்லாம் விரட்டி அடிக்கவில்லையா? அவளில் தன்னையேக் கண்ட மனிதர்கள் ஆயிரமாயிரம். மனிதர்களுக்கு எது சோகத்தைக் கொடுத்திருக்கும் என்று அறிந்து அவற்றைத் தன் பாடல் வரிகள் மற்றும் அபிநயங்கள் மூலமாக இழுத்து வெளியே போட்டவள் அல்லவா ரேஷ்மி? “இந்த மொஹல்லாவில் மெஹ்ரா மட்டும்தான்” அந்தத் தெரு முழுதும் கேட்கும் படி உரக்கப் பிரகடனப் படுத்தியவள் பேரழகி ரேஷ்மி. வேறு எண்ணத்தோடு நுழைந்தவர்களை சமன்லால் துரத்தி விட்டு விடுவானே ! அவள் பாடலுக்கு, அதன் வரிகளுக்கு, மயங்கிக் கிடந்த கூட்டம் மட்டுமே அங்கு நுழைய முடியும். உடலெல்லாம் சரிகையாக மின்னும் உடையில் சுழன்று சுழன்று அவள் ஆடுவதைப் பார்க்க கலாரசிகர்கள் “வாஹ்…வாஹ்” என்று காத்துக் கிடப்பார்களே….அந்தத் தெருவில் ஒரு விசேஷமான, வித்தியாசமான மஹல் இதுவல்லவா?. அவள் பாடும் போதும் ஆடும் போதும் சாரங்கி சோகத்தோடு இணைந்து கொள்ளும். வலை வீசி மீன் பிடிப்பதைப் போல அவளின் வரிகள் ரசிகர்களின் மனதில் நுழைந்து, அங்கு சண்டித்தனம் செய்து கொண்டிருந்த துக்கப் பறவைகளை இழுத்து வெளியே போட்டு விடும். ஆனால் அம்பினால் அடிபட்டப் பறவையைப் போலே அவள் மனது மட்டும் எப்பொழுதும் ஒரு ஆற்றாமையில் துடித்துக் கொண்டேதான் இருக்கும். அவள் திரைவாய்ப்பை நம்பி வந்து பதினைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்றைக்கிருக்கும் வேறு எவளையும் விட அற்புதமாக நடனமாடும் திறன் படைத்தவள்தான் ரேஷ்மி. ஆனால்…..? திறமை மட்டும் இருந்தால் போதுமா? அதுவும் பேரழகியான ஒரு பெண்ணுக்கு? திரையுலகம் அவள் திறமைகளை புறந்தள்ளி அவள் மானத்தையே விலையாகக் கேட்டது. ஆனாலும் தன் நிலையை விட்டுக் கீழிறங்காமல் நெருப்பாகத்தான் வாழ்ந்திருந்தாள் ரேஷ்மி. தன் அழகைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வைத்திருந்தாள்.. தன் பாடலுக்கும் ஆடலுக்கும் காத்துக் கிடக்கும் ரசிகர்களுக்கு மட்டுமே, அவர்களின் கண்களுக்கு மட்டுமே, தன் அழகு என்பதில் மிக உறுதியாக இருந்தவள் ரேஷ்மி. “குலாபி, நம் புனிதத்தை நாம் மட்டுமே நம்ப வேண்டும். “ கண்கள் பனிக்க அவள் சொல்லுவாள். அதுதான் நம் விதி என்பார்கள் கூட ஆடும் நடன மாதுக்கள். உலகம் ஏற்றுக் கொள்ளுமா என்ன? “இவள் வெறும் ஆட்டக்காரி மட்டுமா? கண்டிப்பாக பலரின் படுக்கையறைகளை அலங்கரித்திருப்பாள்” என்று கூசாமல் பேசிய நாக்குகள் உண்டு. அவை கஷ்யப்பின் காதுகளில் விழுந்தால் அவ்வளவுதான். அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவான். “ஸாஹிபா, உங்கள் ஆட்டத்தின் சிறப்பை திரையுலகம் உணரவில்லையா?” பலர் இந்தக் கேள்வியை அவளிடம் கேட்டதுண்டு வறண்டு சிரிப்பாள் ரேஷ்மி. உதடுகள் பிதுங்கும். கண்கள் கலங்கும். அதுதான், அவ்வளவுதான் அவள் பதில். அந்த பதிலில் அவள் மன ஆழத்தில் புதைந்து கிடந்த அபிலாஷையைப் புரிந்து கொண்டவன் கஷ்யப் மட்டுமே. அவளது அந்த கனத்த சோகம் அப்படியே அவளது பாடலின் வரிகளில் இழைந்து, சாரங்கியில் நனைந்து, புகை போல நாலா புறமும் பரவும். அந்தத் திரைச் சீலைகளில், சுவர்களில், அந்த திண்டுகளில், தரை விரிப்பில் எல்லாம் அவள் மனத்தில் இருந்து தினமும் உதிர்ந்த சோக இழைகள் சர விளக்கின் ஒளிக்கற்றைகளாகத் தொங்கிக் கொண்டும் புதைந்து கொண்டும்தான் கிடக்கும். “ஸாஹிபா, ஒரே ஒரு படத்தில், உங்கள் நடனம் இருக்க வேண்டும். திரையுலகமே உங்களைப் போற்றிப் புகழ வேண்டும். உங்கள் பின்னால் இந்த திரையுலக வேட்டை நாய்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைய வேண்டும். செய்வீர்களா சாஹிபா?!” அவளிடம் மட்டும் அந்த நெருப்பு இல்லையா என்ன? இருந்தாலும் அந்தக் கேள்விக்கு பதிலை அவள் தன் பாடலின் வரிகளில் துழாவிக் கொண்டுதான் இருந்தாள். சுப்கே சுப்கே ராத் தின் ஆன்சூன் பஹானா யாத் ஹை. என்று அவள் எடுத்தாலே கஷ்யப் பொங்கி விடுவான். கண்கள் பனித்து விடும். எவ்வளவு அர்த்தம் பொதிந்த வலிமையான வார்த்தைகள் அவை ! “இரவு பகலாக,ஒளிந்து ஒளிந்து, நான் அழுத, அந்த தினங்கள் என் நினைவிலேயே இருக்கின்றன” என்று அவள் இசைக்கும் போது அவனும் கலைந்து விடுவான். உலகை மறந்து சாரங்கியில் தன் துக்கத்தைக் கரைக்கும் பேராவலோடு அமர்ந்து விடுவான். ஹம்கோ அப்தக் ஆஷிகிகா வோ ஜமானா யாத் ஹை (அந்த காதல் தினங்கள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றன) என் முகத்தை மூடும் சல்லாத் துணியை சட்டென இழுத்து விட மாட்டாய் தானே மும்பையின் அழுக்கடைந்த, சப்தமிக்க தெருக்கள், தூசுகள், கூச்சல்கள், சதிகள் எல்லாம் சட்டென விலகி போக அவளின் பாடல் வரிகளில் தன்னை முழுவதுமாக இழந்து விடுவான் கஷ்யப். வாய்ப்புக்காக அவள் காத்திருக்கத் தயார். உலகையே கலக்கும் என்னுடைய ஒரு நடனமாவது திரையில் ஒளிர வேண்டும்.. ஆனால்…ஆனால் அவள் இளமையை காலம் கரையானாக அரித்துத் தின்றுக் கொண்டிருக்கிறதே ! காத்திருந்து காத்திருந்து காலங்கள் ஓடின பொழுது ஒருவன் வந்தான். ரேஷ்மியின் அதியற்புதமான ஆட்டத்தைக் காண விரும்பி வந்தான். கேட்க வேண்டுமா? இத்தனைக் கால காத்திருப்புக்கு இறைவன் முற்றுப் புள்ளி வைத்து விட்டான் என்று கஷ்யப்பும் ரேஷ்மியும் நம்பினார்கள். அன்று ரேஷ்மியின் ஆட்டம் வந்திருந்தவனைச் சிலிர்க்க வைத்தது. உலகை மறக்க வைத்தது. இனு ஆங்கோங் கி மஸ்தி கே மஸ்தானே ஹஸாரோ ஹைங்.. என்ற திரைக் கவிஞனின் வரிகளைப் பாடி அசத்தினாள் ரேஷ்மி. என் கண்கள் காட்டும் இன்பத்தினால், மதி மயங்கிப் போனவர்கள் ஆயிரம் பேர் என்ற அந்த வரிகள் வந்திருந்தவனைக் கட்டிப் போட்டன. அந்த வரிகளின் கம்பீரத்தை, இளமைத் திமிரை, அலட்சியத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டினாள் ரேஷ்மி. பாடலின் வரிகளுக்கு முன் இசைக்கப் படும் சாரங்கியை அப்படியே தன் கைகளில் கொண்டு வந்து கொட்டினான் கஷ்யப். சிறந்த கலாரசிகனாக அமர்ந்திருந்தவன் பிரமித்துப் போனான். மகிழ்ச்சியின் உச்சத்தில் அவன் கண்களில் இருந்து நீர்த் துளிகள் சிந்தின. ரேஷ்மியின் காத்திருப்பு வீண் போகவில்லை. கலையுணர்ச்சி தன்னுள் ததும்பிக் கிடந்த அந்த இளைஞன் ஆகப் பெரிய கலைத் தாகத்தோடு ஒரு திரைப்படத்தை, ஒரு வெறியோடு உருவாக்கினான். ரேஷ்மியின் திறமை முழுவதும் பளிச்சிடும் வகையில் காட்சிகளை அமைத்தான். அவள் கண்கள் காட்டும் பாவங்களைக் கேமிராவில் நுட்பமாகச் சிறைப் பிடித்தான். மனதை மயக்கும் பாடல்களைத் தேர்ந்தெடுத்துத் தன் படத்தில் இணைத்துக் கொண்டான். அது தன்னுடைய லட்சியப் படமாக மிளிர வேண்டும். இதற்கு மேல் இது வரையில் எதுவும் வந்ததில்லை என்ற நிலையைத் தோற்றுவிக்க உறுதி கொண்டான். ஒவ்வொரு காட்சியாக, ஒவ்வொரு நொடியாக அந்த படத்தை ஒரு அழகிய சிற்பமாகச் செதுக்கினான். திரையுலக ஜாம்பவான்கள் மிரண்டு போனார்கள். அதுவரையில் திரைத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த நடிகைகள் மித மிஞ்சிய அச்சத்தில் ஆழ்ந்தார்கள். வாழ்வின் வெற்றிகளைச் சுவைத்தவர்கள் சும்மா இருப்பார்களா என்ன? சிம்மாசனங்களை விட்டுக் கீழே இறங்க யாரும் தயாரில்லை. ரேஷ்மியைச் சுற்றி சதி வலைப் பின்னப் பட்டது. இந்தப் படத்திற்காக லட்சம் லட்சமாகக் கொட்டியத் தயாரிப்பாளர் நெருக்கடிக்கு உள்ளானார். தவிர்க்க முடியாத சுமைகள் அவரை அழுத்தின. படம் வெளிவராமல் இருக்க அவர் கட்டாயப் படுத்தப் பட்டார். இருந்தாலும் படைப்பாளி தன் நிலையில் உறுதியாக இருந்தான். இந்தப் படம் வெளி வந்தால் இந்தியாவையே கலக்கி விடும் என்பதை விவரமாக எடுத்துரைத்தான். ரேஷ்மியோ கடவுளை நம்பி இருந்தாள். அழகு பெண்களின் ஆயுதம் மட்டுமல்ல, எதிரியும் கூட என்பதை ரேஷ்மி பல காலம் உணர்ந்திருந்தாலும், அது அவளைக் கலைத்துப் போட்டதென்னவோ அந்த தருணத்தில்தான். தனிமையில் தன் அழகை நொந்து கொண்டாள். கடவுளால் இன்பச் சுரங்கமாகப் படைக்கப் பட்ட தன் அழகு கஷ்யப் என்ற ஒருவனுக்கு மட்டுமே என்று அதுகாறும் உறுதியாக இருந்தவள் தன்னை நோக்கி எய்யப் படும் பலவிதமான அம்புகளால் மிரண்டு போனாள். படம் தயார். ஒரே ஒரு படம். அவ்வளவுதான். அதன் மூலம் தன் திறமைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விட வேண்டும் என்ற துடிப்பு மித மிஞ்சி இருந்த நேரத்தில் ஒரு பேரிடியாக அந்த செய்தி அவளுள் இறங்கியது. அவள் தன்னை விட்டுக் கொடுத்தால் மட்டுமே படம் வெளிவரும் என்று அவளுக்கு உறுதியாகவும், இறுதியாகவும் சொல்லப் பட்டது. என்ன செய்வாள்? இன்னும் இரண்டு நாளில் என் ஆசை, என் லட்சியம் நிறைவேறியே விடும் என்று அவள் கனவு கண்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், இப்படி ஒரு தடைக்கல் அவள் எதிரே. மானம் மட்டுமே பெரிது, இந்தப் படம் அல்ல என்று இருக்க வேண்டுமா? அல்லது இந்த ஒரு படம் வெளி வந்து விட்டால், தான் மட்டுமல்ல தன்னை சுற்றி இருக்கும் தன்னை நம்பி இருக்கும் இவ்வளவு நபர்களின் வாழ்விலும் விளக்கேற்றி வைக்க முடியும் என்று தன்னை விட்டுக் கொடுக்க வேண்டுமா? திணறிப் போனவள் பின்பு ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாள். இந்தப் படம் வந்தே ஆக வேண்டும். அதே சமயம் நான் என் மானத்தை விலைப் பேசுபவள் அல்ல என்பதையும் இந்த உலகம் புரிந்துக் கொண்டாக வேண்டும். ********* படம் வெளி வந்தது. ரசிகர்களின் ஆரவாரத்தை நேரில் கண்டு மகிழ்ந்தாள் ரேஷ்மி. இந்தியத் திரையுலகே அசந்து போய் உறைந்து நின்றது. ஆனால்..ஆனால்…அவள் இழந்தது இழந்ததுதானே ! இனி மானம் மரியாதை என்றெல்லாம் இந்த மொஹல்லாவில் பேசிக் கொண்டிருக்க முடியுமா என்ன? ஒரே வாரம் அந்தப் படத்தின் வரவேற்பைக் கண் குளிரக் கண்டாள் ரேஷ்மி. வேறு எவரும் நெருங்க முடியாத உயரத்தில் நான் இருக்கிறேன் என உலகத்துக்கு உணர்த்தி விட்டாள். அவள் கனவுகள் நனவாகின. இனி எதற்கு மானமிழந்த வாழ்க்கை!? இன்று இரண்டாவது வாரம் அவளுடைய திரைப்படத்திற்கு. இரண்டாம் நாள் அவளுடைய உயிரற்ற உடலுக்கு. ************** தற்கொலை செய்து கொள்ளுமளவிற்குக் கோழையா ரேஷ்மி. துடித்தான் கஷ்யப். தன்னுடைய பதின்மூன்றாவது வயதிலேயே தாய், தந்தையரை இழந்தவள் ரேஷ்மி. தனியொருத்தியாக, இந்த உலகத்தை, அதன் இருண்ட பக்கங்களைக் கண்டு அஞ்சாமல் நிமிர்ந்து நின்று வாழ்ந்தவள். இப்பிடியா முடித்துக் கொள்வாள் தன் வாழ்க்கையை? அதுவும் யாரோ செய்த தப்பிற்கு? நொந்து போனவன் அவள் பிரத்யேகமாக தனக்காக மட்டுமே எழுதி வைத்திருந்த கடிதத்தை மீண்டும் ஒரு முறைப் படித்துப் பார்த்தான். “கஷ்யப், நீ இந்தக் கடிதத்தைப் படிக்கும் சமயத்தில் நான் காற்றாகக் கரைந்து உன்னைத் தழுவிக் கொண்டுதான் இருப்பேன். மீண்டும் நாம் இணைவோம், கவலைப் படாதே. மானம் போனதே என்று நான் என்னை மாய்த்துக் கொள்ளவில்லை. எந்த அயோக்கியனோ என்னை வன்முறையாக அடைந்திருந்தால் கூட அதை ஒரு விபத்து என்று எடுத்துக் கொண்டு போராடத்தான் செய்திருப்பேன். ஆனால்..ஆனால்….என்னை நானே அந்த அக்னிக்கு ஆகுதியாகக் கொடுத்து விட்டேனே! இதற்கு யாரைக் குற்றம் சொல்வது? உன் பூஜையில் வைக்க முடியாத மலர் நான். உனக்குப் பிரயோஜனப்படாத ரேஷ்மி இனி என்ன சாதித்தால்தான் என்ன? எனவே இறுதியாக விடை பெறுகிறேன். இனி, உன் மனவானில் மட்டுமே இந்தத் தாரகை.” **************** பெருமூச்செறிந்து, கண்களை மூடிக் கலங்கினான் கஷ்யப். “ஜனாப்” என்று அவனை அழைத்து விட்டுக் கண் ஜாடை காட்டினாள் குலாபி. அவள் பார்வையை ஒட்டி பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான் கஷ்யப். தட்டு நிறையப் பழங்களும், இனிப்பும், மலர்களும், கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகளுமாக நின்றிருந்தான் அந்த இளம் இயக்குனர். கண்கள் சிவந்தன கஷ்யப்புக்கு. இரத்தம் தலைக்கேறியது. கஷ்யப் எட்டி உதைத்த உதையில் அந்த தட்டு உயர எழும்பிப் பின் தறி கெட்டு பெருத்த சப்தத்தோடு கீழே விழுந்தது. ரேஷ்மியின் உயிரற்ற கால்களில் சதங்கைகள் கட்டிதான் வைக்கப் பட்டிருந்தன. எழும்பி அவள் காலில் விழுந்த தட்டு அவள் சலங்கைகளை அசைத்துப் பின் கீழே விழ ஒரு மெல்லிய இசை ஒரு வினாடி நேரம் அந்த கூடத்தில் துள்ளி எழுந்துப் பின் மெதுவாக மெதுவாக அடங்கியது. ******************************** எழுதியது : அனந்த் ரவி. அலைபேசி எண் : 9444018042 விலாசம் : A.Ravi, Flat 4A, Malles Altius, Opp: Bharathi Vidyalaya School, Perumbakkam Main Road, Perumbakkam Chennai – 600100 Unicode : Arial Unicode MS வார்த்தைகள் : 1431 இது என் சொந்தக் கற்பனையில் உருவான கதை. வேறு எதனுடைய தழுவலோ மொழிபெயர்ப்போ அல்ல. இது வேறு எந்த பத்திரிக்கையிலும் பிரசுரமாகவோ, பரிசு பெறவோ இல்லை. இந்தப் போட்டியின் முடிவு வரும்வரை வேறு எந்த போட்டிக்கும் இதை அனுப்ப மாட்டேன் என்றும் உறுதி கூறுகிறேன். அனந்த் ரவி.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in