Monicka Sree A
சிறுகதை வரிசை எண்
# 68
அதே முத்தம்
உயிரை இழுக்கும் உப்பு நெடி.வலையில் வாழத்
துடிக்கும் கெண்டை மீனின் ருத்ர தாண்டவம்.அலையிலோ ஜோடி மீனின் பரஸ்பர இறுதி ஊர்வலம்.தனக்கு உருவமிருப்பதை உரக்கச் சொல்ல உடலெங்கும் மணல் பூசிச்செல்கிறது மணற்காத்து. பல ஜோடிகளைக் காண்பதாலோ என்னவோ கூச்சத்தில் மலைகட்குபின் ஒளிந்து கொள்கிறது ஞாயிறு.கரையின் ஓரத்தில் சிந்திக்க ஏதுமற்ற சந்திக்க யாருமற்ற சாதா சராசரி பெண்ணாய் துப்பட்டாவை நகற்றிவிட்டு என் மார்புகளுக்குள்ளும் தொடைகளுக்குள்ளும் உயிர்காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.என் முகத்தில் அப்பியுள்ள வெறுமையை மறைக்க மாலை மங்கல்வெளிச்ச சீற்றுகளை முகம் முழுவதும் தழும்புகளாக்க விளைகிறேன்.தன்னை விரும்புவதால் தான் மீ்ண்டும் மீண்டும் வந்து தீண்டிச்செல்கிறது அலை என்ற செருக்கும் சிலிர்ப்பும் என் கொழுசும்.என் அப்பாவை என்னிடமிருந்து பிரித்ததற்கு நிதமும் என் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு பிரசாயித்தம் தேடும் நிம்மதி அலைக்கு .ஒவ்வொரு முறை அலை வந்து தீண்டும் போதும் யாரோ ஒருவரின் அணைப்பினைத் துகள்துகளாய் ரசிக்கும் போதை எனக்கு .தனிமையில் தான் எத்தனை சுகம் , எவரின் ஆணையையும் ஏற்க வேண்டியதில்லை.
எவரின் துணையையும் தேட வேண்டியதில்லை .
நான் . . . என் தனிப்பெருமுலகம் . . .
இதழ்பிரிக்காமல் கத்தினேன்.சட்டென தாகம் எடுத்தது.
வெளியில் எத்தனை நீர் இருந்தால் தான் என்ன உள்ளிருக்கும் தாகத்தைத் தீர்க்க முடியுமா???.நாக்குத் தேநீருக்கு ஏங்கியது .திரும்பிய கணம் இளைஞர் ஒருவர் தெரியாமல் மோதிச் சென்றார்.மன்னிப்பும் கேட்டு சென்றார். தொட்டிலில் தூங்கும் குழந்தை வெப்பம் தணிய மெதுவாகப் பாதத்தை வெளிநீட்டும் பொழுது இதமாய் தென்றல் வருடுவதைப் போல் ஒரு ஆணின் அல்ப ஸ்பரிசம் சுகமாய் நெஞ்சை வருடுகிறது.
அட இப்போது தானே
தனிமை சுகம் என்று கூறினேன் .உடனே மாற்றி பேசுகிறேன்.இதுவே எனக்கு வேலையாகிவிட்டது.எனக்கு நானே பேசிக்கொண்டே பாதி வழி நடந்திருந்தேன் .
தூரத்தில் இழவு போல .ஒப்பாரி சத்தம் என் காதுகளைக் கிழித்தது . அழுகை சத்தம் கேட்டு பல நாளாகிவிட்டது. அன்று பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் என் தாய் தாலியிறங்கும் போது சிந்திய கண்ணீரை கண்டு என் கண்ணீரும் உறைந்து போனது. அதன்பின் அழுதிட எனக்குக் காரணமும் இல்லை , தைரியமும் இல்லை.
அட . . ஹே குட்டிப்பையா ...
ஒரு டீ குடுடா .....
சொல்லி திரும்பிய மாத்திரம் , ஒரு தேவதை ஒரு நான்கு -ஐந்து வயதிருக்கும் .கல்
தடுக்கி கரையில் விழுந்துவிட்டாள் .நான் சென்று தூக்கிவிடும் முன் ஒருவர் பதற்றத்துடன் வந்து குழந்தையை தூக்கினார். தந்தை போலும் "அடியேதும் பட்டதா ?" என்று முச்சுவாங்கியபடியே கேட்டார் . இல்லையென அழகாய் தலையசைக்கவே அவளின் ஒரு கன்னத்தில் முத்தமிட்டார்.அருகில் சென்றேன்.அவள் முதுகில் ஒட்டிய மணலைத் தட்டிவிட்டேன். நன்றி என்பது போல அவள் மொழியில் கையசைத்தாள்.அள்ளி அணைத்துக்கொண்டேன்.அழுத்தி முத்தமிட்டேன்.அவர் முத்தமிட்ட அதே கன்னத்தில் ..
தேக்கி வைத்த ஏக்கங்கங்கள் வெந்து
தணிந்தன அம்முத்தத்தில் .
பெரும் வெறுமையை உடுத்திய என்னுடல் ஒரு கணம் நிர்வாணமாகிப் போனது.
அந்த முத்தம் அவளுக்கா ? அவள் தாயுமானவனுக்கா ?
எனக்குத் தெரியாது !!
காரணமின்றி அதே கன்னத்தில் அதே முத்தம் எதற்காக? . . .
உமக்கு புரியாது.
தேநீர் குவளையைப் பிடித்தப்படியே நின்றிருந்தான் தேநீர்விற்கும் சிறுவன் .
வாங்கிவிட்டேன் .ஒரு வாய்தான் பருக முடிந்தது. தாகம் எப்போதோ தீர்ந்துவிட்டது..
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்