logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

Anuraadha Jaishankar

சிறுகதை வரிசை எண் # 65


கெத்து நரேன் மணியைப் பார்த்தான். மதியம் ஒன்று. இன்று மிகத் தொடர்ச்சியாக வேலைகள் இருக்கும். மூச்சு விடக் கூட நேரம் இருக்கப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டான். இந்த மின்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பொது மேலாளராக பதவி உயர்ந்த பின் பொறுப்புகளும் கூடிக் கொண்டே தான் போகின்றன. ஒவ்வொரு நாளும் காலை அலுவலகம் வந்தால் கிளம்ப கிட்டத்தட்ட ஏழு மணி ஆகி விடுகிறது. விலை நிர்ணயிப்பு தொடர்பான முக்கியமான இரண்டு முடிவுகள் எடுக்க அன்று இறுதி நாள் என்பது நினைவுக்கு வர, தன் உதவியாளர் வருணை அலுவலக அலைபேசியிலேயே அழைத்தான். "வருண், இரண்டு மணிக்கு பொருட்கள் கொள்முதல் துறை ஊழியர்களை ஆலோசனை அறைக்கு வரச் சொல்லிடுங்க. சில முக்கியமான விவரங்கள் பேசித் தெளிவு படுத்த வேண்டியது இருக்கு " என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்த போது அவனது அலைபேசியில் பிரத்தியேக எண்ணில் ஒரு அழைப்பு வந்தது. உறவுக்காரர்கள் மட்டுமே அழைக்கும் இந்த எண்ணில் பெயர் வராமல் அழைப்பு வரவும் ஒரு நிமிடம் யோசித்தான். எடுக்க வேண்டாம் என்று நினைத்தவன் ஏதோ ஒரு உந்துதலில் அழைப்பை ஏற்றுக் கொண்டான். " வணக்கம் சார். நான் வாணி வித்யா மந்திர் பள்ளியில் இருந்து பேசுகிறேன். நீங்கள் நரேன் குமார் தானே, எட்டாம் வகுப்பு மாணவன் ராகுலின் தந்தை?" " ஆமாம் மேடம். வணக்கம். என்ன விஷயம் சொல்லுங்கள்". "நீங்கள் உடனடியாக இங்கு வந்து பள்ளி முதல்வர் அவர்களைச் சந்திக்க வேண்டும்". புலன்கள் கூர்மையானதுடன் சற்று பதட்டமும் சேர்ந்து கொண்டது. " என்ன ஆச்சு மேடம், ராகுல் நன்றாக இருக்கிறான்தானே?" " உங்கள் மகனுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் நீங்கள் இப்போது உடனடியாக வந்து பள்ளி முதல்வரை சந்திக்க வேண்டும்". நிம்மதிப் பெருமூச்சு எழ, "ஏதோ பிரச்சனை என்று புரிகிறது மேடம். என் அலுவலகத்தில் இருந்து உங்கள் பள்ளிக்கு வரவே ஒரு மணி நேரம் ஆகும். இன்று சில மிக முக்கியமான அலுவல்கள் இருக்கின்றன. என் மனைவி ஊரில் இல்லை. இருந்தால் நிச்சயம் உடனே வந்து இருப்பார். நாளை சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு நான் மிகச் சரியாக வந்து அவர்களை சந்தித்து விடுகிறேன் “ என்று சற்று கெஞ்சும் குரலில் சொன்னான். ஓரிரு நிமிடங்கள் எதிர்முனை அமைதியாக இருந்தது. " சார், உங்கள் மகன் பள்ளியில் தொடர்ந்து படிக்க வேண்டும் என்றால் இப்போது வந்து பாருங்கள். மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு வேறு ஒரு பள்ளியில் சேர்ந்து கொள்வதாக முடிவு செய்தால் நாளை காலை நீங்கள் வரலாம்". நரேன் ஒரு நிமிடம் அதிர்ந்து போனான். இப்படி உடனடியாக வரச் சொல்லும் அளவிற்கு ராகுல் என்ன செய்திருப்பான்... இதுவரையிலும் அவனால் ஒரு பிரச்சினையும் வந்ததில்லை. " சரி மேடம், நான் மூன்று மணிக்குள் வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான். வருணை அழைத்து சில மாற்று ஏற்பாடுகள் செய்ய விவரங்கள் சொல்லிவிட்டு பள்ளியை நோக்கி காரில் விரைந்தான். ****** போகும் வழி நெடுக மனம் ராகுலின் மீதும் அலுவலகப் பணிகள் மீதுமாக அலை பாய்ந்தது. ராகுல் நன்றாக படிக்கிற பையன். இதுவரை பள்ளியில் இருந்து ஒரு புகார் வந்தது இல்லை, எதாவது பணம் கட்ட சொல்லி நம்மிடம் சொல்ல மறந்து இருப்பானோ? இன்று மாலை நாலரை மணிக்கு ஐ டி சி கிராண்ட் சோலாவில் அந்த ஐரோப்பிய வாடிக்கையாளர் கூட பேசி விற்பனை ஒப்பந்தம் முடிவு செய்து விட வேண்டும். மாலை ஆறரை மணிக்குள் டெண்டருக்கான இறுதி விலையை முடிவு செய்து அனுப்ப வேண்டும். மாற்றுச் சான்றிதழ் வாங்குவது என்று எதோ சொன்னார்கள்…கடவுளே …என்ன செய்து இருப்பான்? ரமாவிற்கு போன் செய்யலாமா… வேண்டாம், பாவம். அவள் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றுதான் இரண்டு நாள் ஊருக்கு போய் இருக்கிறாள். தொந்தரவு செய்ய வேண்டாம். வீணே கவலைப்படுவாள். பள்ளிக்குள் நுழைந்து காரை நிறுத்தி விட்டு முதல்வர் அறையை நெருங்கிய போது அறை வாசலில் ராகுல் முகத்தில் சலனமே இல்லாமல் அமர்ந்து இருப்பதை பார்த்தான். "என்ன ஆச்சு ராகுல்?" ராகுல் பக்கத்தில் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவன் பதில் சொல்வதற்குள் அழைக்கப்பட, மகனுடன் முதல்வர் அறைக்குள் நுழைந்தான். " வணக்கம் சார்" " வணக்கம், உட்காருங்கள்". " என்ன ஆயிற்று? இவ்வளவு அவசரமாக வரச் சொன்னீர்களே? " " இன்று மதிய உணவு இடைவேளையின் போது இரண்டு ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுடன் உங்கள் மகனும் சேர்ந்து ஓய்வறையில் ஒளிந்து இருந்து விட்டு வகுப்புகள் தொடங்கியவுடன் மூவருமாக பின் பக்க வாசல் வழியே சினிமா போவதற்கு கிளம்பி இருக்கிறார்கள். காவலர் பார்த்து சொல்லி விட்டார் ". நரேனுக்கு கேட்பதை சிறிதும் நம்ப முடியவில்லை. ராகுலாவது...இது மாதிரி விஷயங்கள் செய்வதாவது.. மேலும் போன வாரம் தான் விரும்பிக் கேட்டான் என்று திரைப்படத்திற்கு கூட்டிப் போனேன். ஏதோ தவறு நடந்து இருக்கிறது என்று உறுதியாக நம்பினான். " உண்மையா? என்னால் நம்ப முடியவில்லை". பள்ளி முதல்வரின் குரலில் சூடு ஏறியது. " உண்மையில்லாமலா உங்களை வரவழைத்து நம் இருவரின் நேரத்தையும் நான் வீணடித்துக் கொண்டு இருக்கிறேன்? வகுப்பில் ஆசிரியர்களை கேலி செய்வது, அடுத்தவர்களை தொந்தரவு செய்வது என்று சமீப ஒரு மாதமாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இரண்டு மூன்று முறை எச்சரித்து விட்டேன். ஆனால் இன்று நடந்திருப்பது ஒத்துக் கொள்ளவே முடியாது. படித்தால் மட்டும் போதாது. ஒழுக்கம் வேண்டும். பள்ளியில் நாங்கள் ஒழுக்கத்தை போதித்தாலும் பெற்றோருக்கும் பொறுப்பு இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மகனுக்கு புத்தி சொல்லி இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக ஒரு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு கூட்டிக் கொண்டு போங்கள். இதுவே முதலும் கடைசியுமான எச்சரிக்கை" என்றார் கடுமையாக. நரேனுக்கு அப்போதும் நம்ப முடியவில்லை. ராகுலின் முகத்தைப் பார்த்தான். ஒரு துளி வருத்தமும் இல்லை. அவன் யாரோ இருவர் பேசிக் கொண்டிருக்கிறார்கள், எனக்கு என்ன என்பது போன்ற முக பாவத்துடன் நின்று கொண்டிருந்தான். ஒன்றும் புரியாதவனாக முதல்வர் சொன்னது போல் எழுதிக் கொடுத்துவிட்டு அவனையும் கூட்டிக்கொண்டு வெளியே வந்தான். மணி மூன்றரை. நரேனுக்குத் தலை சுற்றுவது போல இருந்தது. நடந்தது உண்மையா கனவா என்று புரியாத குழப்ப நிலையில் இருந்தான். இப்போது நேராக ஐடிசி போக வேண்டும். அந்த வாடிக்கையாளர் சந்திப்பு மிகவும் முக்கியம். அவர் ஜெர்மனியில் இருந்து இதற்கென்றே பிரத்தியேகமாக வந்து இருக்கிறார். இவன் செய்து இருப்பது இன்னும் என்னால் முழுமையாக ஜீரணிக்க கூட முடியவில்லை. எப்படி இந்த மாதிரி சேர்க்கை வந்தது? அவன் நண்பர்களைத் தெரியுமே. நல்ல பையன்கள்தானே. இது ஏதோ புதிதாகத் தோன்றுகிறது. நாங்கள் இருவருமே இவனுடன் நன்கு நேரம் செலவழிக்கிறோம், பேசுகிறோம், அதையும் தாண்டி ஏன் இப்படி, ரமாவும் இங்கு இல்லாத இந்த நேரத்தில் இவனை மிகக் கவனமாகக் கையாள வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, ராகுலையும் ஏறச் சொல்லி காரில் அமர்ந்தான். போத்தலில் இருந்து தண்ணீரைக் குடித்தான். காரைக் கிளப்பினான். "எங்கப்பா போறோம்? வீட்டுக்கா?" " இல்லை ராகுல். அப்பாவுக்கு கொஞ்சம் ஆபீஸ் வேலை இருக்கு. என்கூட வா. முடிச்சுட்டு ஏழு மணி போல வீட்டுக்கு போகலாம்". வேறு வழியில்லாமல் ராகுல் தலையை ஆட்டினான். அவன் மனதில் அப்பா நிச்சயம் தன்னிடம் கேட்கப் போகும் கேள்விகளும் அதற்கு தான் சொல்ல வேண்டிய பதில்களும் நண்பர்களோடு பேசி வைத்தது ஒத்திகை போன்று ஓடிக்கொண்டிருந்தது. நிச்சயம் அப்பா இப்படித்தான் கேட்பார். "என்ன ராகுல் இது? என்ன கெட்டப்பழக்கம்? எங்கேயிருந்து இதெல்லாம் கத்துக்கிட்ட?" அவன் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்பதையும் நண்பர்கள் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். "ஒரு நாள் போனா என்னப்பா? இதெல்லாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது செய்யாம வேற எப்ப செய்யறது?" ‘உன் குரல்ல பயமில்லாம கொஞ்சம் அலட்சியம் இருக்கணும். நீ அப்படி சொன்ன உடனே உங்க அப்பா முகத்தில் ஒரு அதிர்ச்சி வரும் பாருடா. அதை கவனி. அதுதான் முக்கியம்’. " செஞ்சது தப்பு. எதுத்தாடா பேசற?" " ஏம்பா எல்லா பசங்களும் பண்றது தானே, நீங்களும் பள்ளிக்கூடம் கட் அடிச்சுட்டு சுத்தி இருப்பீங்கதானே, என்னமோ நான் மட்டும் பெரிய தப்பு பண்ணிட்ட மாதிரி எதுக்கு இப்ப கத்தறிங்க?" ‘நீ குரலை ஒசத்தி கத்தி சொல்லணும்டா ராகுல். இந்த இடத்துல எல்லா அப்பாவுக்கும் கோவம் எகிறிடும். அநேகமா கைய ஓங்கிட்டு வருவாங்க. அப்ப நீ ரெடியா இருக்கணும். அவர் கிட்ட வந்து கையை ஓங்கும் போது உன் கைய தூக்கி அவர் கைய புடிச்சுரு. அப்ப உங்க அப்பா ஒரு நிமிஷம் உறைஞ்சு போய் நிப்பாரு பாரு, அந்த மூஞ்சிய உன்னால மறக்கவே முடியாது. அங்க தான் நமக்கு கெத்து ஆரம்பிக்குது’. ராகுல் அப்பா ஆரம்பிக்க காத்திருந்தான். அம்மா ஊரில் இல்லாததும் நல்லதுதான். இருந்திருந்தால் அம்மாவை வைத்துக்கொண்டு இப்படி எல்லாம் பேச முடியாது. அம்மா பாவம் என்று தோன்றியது. என்ன இந்த அப்பா ஒன்றுமே கேட்கவில்லை என்று ராகுலுக்கு சற்று எரிச்சலாக வந்தது. காரை ஓட்டிக்கொண்டே ஒரு அலுவலக அழைப்பில் பேசிக் கொண்டு வந்த நரேன் ஐடிசி கிராண்ட் சோலா என்கிற அந்த ஏழு நட்சத்திர விடுதிக்குள் நுழைந்து காரை நிறுத்திவிட்டு ராகுலையும் கூட்டிக்கொண்டு வரவேற்பு பகுதிக்குச் சென்றான். அங்கு இருந்த ஒரு சோபாவில் அவனை உட்கார வைத்தான். "ராகுல், ஒரு அரை மணி நேரம். அப்பா ஒருத்தரை வேலை விஷயமா சந்திக்கணும். ஏற்கெனவே ஓத்துக் கொண்ட முக்கியமான சந்திப்பு . முடிச்சிட்டு வந்துடறேன். இங்கேயே இரு. ஏதாவது குடிக்கிறியா இல்ல சாப்பிடுறியா?" " ஒண்ணும் வேணாம் பா. நான் இருக்கேன். நீங்க போயிட்டு வாங்க." என்றான் பெரிய மனுஷத் தோரணையுடன். வரவேற்பில் இருந்த பெண்ணிடம் அவனை காண்பித்து எதோ சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்றான் நரேன். ராகுலுக்கு முதன்முறையாக பார்ப்பதால் அந்த இடத்தின் பிரம்மாண்டமும் ஆடம்பரமும் மிகவும் வியப்பாக இருந்தது. சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். இவ்வளவு பெரிய இடத்திற்கெல்லாம் அப்பா வந்து வேலை செய்கிறார் என்று நினைத்துக் கொண்டான். தன்னை மறந்து வேடிக்கை பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை. தொலைவில் ஒரு உயரமான மனிதருடன் அப்பா வருவது தெரிந்தது. அவர்கள் இருவரும் அருகில் வரவும் ராகுல் எழுந்து நின்றான். " ராகுல், இவர் என் வாடிக்கையாளர் மற்றும் நண்பர் மிஸ்டர் ஜெர்ரி ஆடம்ஸ். மிஸ்டர் ஆடம்ஸ், ராகுல். என் மகன் " என்று இருவரையும் நரேன் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தினான். ராகுலுக்கு கூச்சமாகவும் அதே சமயம் பெருமையாகவும் இருந்தது. தன்னை அறியாமல் பள்ளிச் சீருடையில் இருந்த கழுத்துப் பட்டையை சரி செய்து கொண்டு ஜெர்ரி நீட்டிய கையைப் பிடித்து லேசாக குலுக்கினான். "ஹாய் யங் மேன், யுவர் லுக்கிங் வெரி ஸ்மார்ட். மை பெஸ்ட் விஷஸ் டு பிகம் லைக் யுவர் டாட்". ராகுல் வெட்கத்துடன் தேங்க்யூ என்றான். அப்பாவை ஓரக் கண்ணால் பார்த்தான். இப்போது பெருமையாக நிற்கிற அப்பாவுக்கும் சற்று முன் பள்ளியில் பிரின்சிபல் முன் உட்கார்ந்திருந்த அப்பாவுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம் என்று நினைத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பி நரேனின் அலுவலகத்தை அடைந்தார்கள். "ராகுல் என் உதவியாளர் கிட்ட சொல்லி உணவு விடுதிகள் இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போக சொல்றேன். என்ன வேணுமோ வாங்கி சாப்பிடு. அதுக்கு பிறகு கீழே தரைத் தளத்துல ஒரு சின்ன உடற்பயிற்சிக்கூடம் இருக்கு. அங்க போய் கொஞ்ச நேரம் செலவு செய். அப்பாவுக்கு இரண்டு மீட்டிங் இருக்கு. முடிச்சுடுறேன். அதுக்கு பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்கு போகலாம்”. ராகுல் தலையை ஆட்டினான். அப்பா பள்ளியில் நடந்ததைப் பற்றி எதுவுமே கேட்காமல் இருப்பதும், தான் யோசித்து வைத்திருந்த பதில்களை எல்லாம் சொல்ல முடியாமல் இருப்பதும் அவனுக்கு எரிச்சலை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய வேலை செய்து இருக்கிறேன், அதைப் பற்றிக் கேட்காமல், அதிர்ச்சி அடையாமல் சாப்பிடப் போ, உடற்பயிற்சி செய் என்று சொல்கிறார், அவர் வேலையில் மட்டும் கவனமாக இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டான். அவர் சீக்கிரம் கேட்க வேண்டும், தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டான். "முருகன், என்னோட பையன். சாப்பிட கூட்டிட்டு போங்க" என்றபடி பர்ஸைத் திறந்து பணத்தை வெளியே எடுத்தான் நரேன். "இருக்கட்டும் சார். நான் கூட்டிட்டு போறேன்". முருகன் நகர முயல, "இல்லை, இருங்க" என்று சொல்லி பணத்தை ராகுல் கையில் கொடுத்தான். ராகுலுக்கு ஆச்சரியமாக இருந்தது . இன்று தான் செய்த வேலைக்கு, அப்பா பணத்தை தன் கையில் கொடுப்பார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. இந்த மனிதரிடம் கொடுப்பார் என்றுதான் நினைத்து இருந்தான். அப்பா வெளியிடம் என்பதால் பேசாமல் இருக்கிறாரா, புரிந்து கொள்ளவே முடியவில்லையே என்று நினைத்துக் கொண்டே அவரோடு உணவு விடுதிகள் இருக்கும் தளத்திற்கு சென்றான். ராகுல் எல்லா கடைகளையும் சுற்றிப் பார்த்தான். இறுதியில் ஒரு நெய் ரோஸ்ட் தோசைக்கு சொன்னான். பக்கத்தில் முருகன் நிற்பது கவனித்து "நீங்களும் சாப்பிடுறீங்களா அங்கிள்?" என்றான். முருகனுக்கு ஆச்சரியமாகிவிட்டது. "இல்லை தம்பி. நாங்க மதியம் சாப்பிட்டாச்சு". " அப்படியா? பரவாயில்லை. ஒரு காஃபியாவது குடிங்க" என்றபடி ஒரு காபியும் கொடுத்துடுங்க என்று சொல்லி அவர்கள் கேட்ட பணத்தை எண்ணிக் கொடுத்தான். முருகன் "பார்க்க உங்க அப்பா மாதிரியே இருக்கீங்கன்னு நினைச்சேன் தம்பி. குணத்திலும் அவரைப் போலவே இருக்கீங்க. அவரும் தான் சாப்பிடும் போது யார் பக்கத்துல இருந்தாலும் நிச்சயம் அவங்களை சாப்பிட வச்சுடுவாரு " என்றபடி காபியை வாங்கிக் கொண்டான். சாப்பிட்டு முடித்துவிட்டு கீழ் தளத்தில் இருந்த உடற்பயிற்சி கூடத்துக்கும் சென்று சற்று நேரம் சுற்றி விட்டு ராகுல் நரேனின் அறைக்குத் திரும்பி வந்த போது அங்கு காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அவன் ஒரு ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். அப்பா எல்லோரிடமும் கேள்விகள் கேட்பதையும் அவர்கள் சொல்வதற்கெல்லாம் பொறுமையாக, அதே நேரம் கண்டிப்புடனும் சரியான பதிலைச் சொல்லி அவர்களை ஒத்துக் கொள்ள வைப்பதையும் கவனித்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் கவனித்தான். எல்லோர் முன்பும் சிறிய தட்டில் இரண்டு பிஸ்கட்டுகளும் தேநீர்க் கோப்பையும் இருந்தன. எல்லோரும் அநேகமாக சாப்பிட்டு தேநீரையும் குடித்து முடித்திருந்தார்கள். அப்பாவின் முன்னால் இருந்தது மட்டும் தொடாமலேயே இருந்தது. நரேன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். தேநீர் ஆறிக் கொண்டு இருந்தது. ராகுலுக்கு அப்பா அதைக் குடித்துவிட்டு பேசினால் என்ன என்று தோன்றியது. போய் சொல்லலாமா என்று கூட நினைத்தான். ஆனாலும் பயமாக இருந்தது. தவிப்போடு உட்கார்ந்து கொண்டிருந்தான். எப்போது அப்பா பேசி முடிப்பார், தொண்டைக்கு சற்று ஒய்வு கிடைக்கும் என்று கூடத் தோன்றியது. அப்பாவைத் தொடர்ந்து பார்க்கையில் பிரமிப்பாக இருந்தது. இறுதியாக விவாதம் முடிந்து எல்லோரும் கிளம்பிச் செல்ல நரேனும் தனது மடிக்கணினியை மூடி, பொருட்களை சேகரித்துக் கொண்டு கிளம்பினான். தேநீரும் பிஸ்கட்டும் தொடாமலேயே இருந்தன . " போலாமா ராகுல்? ரொம்ப நேரம் ஆயிடுச்சுல்ல, சாரிடா, உன் பையை எடுத்துக்கோ." ராகுல் தயக்கத்துடன் " அப்பா, நீங்க டீ குடிக்கவே இல்லயே " என்றான். " பரவாயில்லை, வீட்டுக்கத்தானே போறோம், பார்த்துக்கலாம் வா". ராகுல் பையை எடுத்து மாட்டிக்கொண்டு அப்பாவை பின் தொடர்ந்தான். காரில் அமர்ந்து கிளப்பினான் நரேன். அலுவலகத்தில் அதுவரை இருந்த பொறுப்புகள் எல்லாம் மிகச் சுலபமானவை போன்றும் இப்போது ராகுலிடம் பேசுவதுதான் மிக முக்கிய பொறுப்பு போன்றும் உணர்ந்தான். மனதுக்குள் இவனிடம் எப்படி பேசுவது, ஆரம்பிப்பது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டான். அவன் என்ன பதில் சொன்னாலும் பொறுமையாக இருக்க வேண்டும், இந்த வயதில் இவனை ஒரு கண்ணாடிப் பாத்திரம் போலத்தான் கையாள வேண்டும் என்றும் தனக்குள் சொல்லிக் கொண்டான். " ராகுல், என்ன ஆச்சு உனக்கு? ஏன் அப்படி செஞ்சே?" ராகுல் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான். மதியம் முதல் யோசித்து வைத்தது எல்லாம் நினைவுக்கு வந்தது. நண்பர்களின் குரல்கள் காதில் ஒலித்தன. " ரொம்ப சாரிப்பா. என்னை மன்னிச்சுடுங்க. நான் செய்தது தப்புதான். இனிமேல் எப்பவும் இப்படி செய்ய மாட்டேன். இன்னிக்கு நடந்ததை மறந்துடுங்கப்பா . சத்தியமா இனி ஒழுங்கா இருப்பேன். அம்மா கிட்ட மட்டும் சொல்லிடாதீங்கப்பா ” என்றான். *************

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.