Lakshmi Jayaraman
சிறுகதை வரிசை எண்
# 66
வண்டுவாஞ்சேரி வாணராயன்
(லக்ஷ்மி ஜயராமன்)
அமுதா மீது கோபம் கோபமாக வந்தது!
‘பத்திரிகைக்காரங்க வந்தது என்னைப் பேட்டி எடுக்க… இவளை யார் பேசச் சொன்னாங்க, முந்திரிக் கொட்டை மாதிரி? சே... அந்த ரிப்போர்ட்டர் என்னவெல்லாம் எழுதப் போறானோ?’
“முதற்பரிசு - அதுவும் ‘கேதகி’ இதழின் கவிதைப் போட்டியில் முதற்பரிசு என்றால் இத்தனை தடபுடலும் உண்டு” என்பது தெரியாமல் இல்லை வல்லவனுக்கு… ஆனால், இந்த வாயாடி இப்படி மானத்தை வாங்குவாள் என்று அந்தக் கவிஞன் எதிர்பார்க்கவில்லை!
நிருபர் வரப்போகிறார் என்பதைப் பக்கத்து வீட்டுக்காரியிடம் தம்பட்டம் அடித்திருக்கிறாள். “அடி லக்கி டி நீ… வீடியோ எல்லாம் கூட எடுப்பாங்க” என்று உசுப்பி விட்டாள் அந்தப் பொறாமைக்காரி. அவ்வளவுதான், எந்த நாளும் காலை 7:30க்கு முன் எழுந்திராத அமுதா அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு அகலக்கரை போட்ட பட்டுச்சேலையையும் மேட்சிங் ரவிக்கையையும் அணிந்து கொண்டு உதட்டுச் சாயத்துடன் ரெடியாகிவிட்டாள்.
ஷேவ் செய்தபடி இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வல்லவனுக்கு வியப்பாக இருந்தது. கவிதையில் வடிக்கும் காட்சிகளை விட, நிஜ வாழ்க்கை நிகழ்ச்சிகள் சுவையாக இருக்கின்றனவே! பப்ளிசிட்டிக்கு இவ்வளவு ஆற்றலா!
இதுவரை அவள் தொட்டுக்கூடப் பார்த்திராத அவனது கவிதைத் தொகுப்புகள் இப்போது ஷோகேஸில் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தன. வெட்டிங் ஃபோட்டோ சுத்தமாகத் துடைக்கப்பட்டு 'என்னைப் பார்' என்றது.
ரேசர் கன்னத்தில் நகர்ந்த போது பளிச்சிட்டது ஒரு பேருண்மை: “ஆ! என்னை கட்டிக்கிட்ட பெறவுதான் இவருக்கு யோகம்” என்று வருவோர் போவோரிடம் எல்லாம் அடிக்கடி சொல்லுவாளே, ‘கேதகி’ இதழில் இதை நிரூபிக்கத்தான் இந்த ஏற்பாடா?
சரசரவென்று வேலையை முடித்துவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான். ‘அடியே அமுதா, ஒன்னையா அப்பாவின்னான் ஒன் அப்பேன்!’
இது நாள் வரை அலமாரியில் தூசு படிந்து கிடந்த ஆடியோ கேசட், இப்போது இசையைப் பரப்பிக் கொண்டிருந்தது. ‘இது கவிஞன் இல்லம்’ என்று புகைக் கீற்றுகளால் காற்றில் வரைந்து கொண்டிருந்தது அகர்பத்தி. தினமும் யாராவது ஒரு பத்திரிகை நிருபர் விஜயம் செய்தால் கூடத் தேவலை- வீடாவது பார்க்க லட்சணமாக இருக்கும்.
நிருபரையும் புகைப்படக்காரரையும் முதலில் முகமன் கூறி வரவேற்றது அவள் தான். பின்னால் வந்த கணவன் அவர்களுடன் கைகுலுக்கி விட்டு அமர்ந்தான். அமுதா ஓடியாடி உபசரித்தாள். ‘இந்த வீட்டில் அம்மையார் ஆட்சி தான்’ என்பதை ஊகித்து விட்டது போல் எடுத்த எடுப்பிலேயே பரபரவென்று எதையோ குறித்துக் கொண்டார் நிருபர். புகைப்படக்காரர் அனுபவசாலி. அக்கவிஞன் இயல்பாக அவர் பக்கம் முகத்தை நிமிர்த்திய போது ஸ்நாப் அடித்து விட்டார். ‘அட’ என்று கிரீச்சிட்ட அமுதாவும் அந்தப் போஸில் கேமராவுக்குள் சிக்கிக்கொண்டாள். இருந்தாலும் உள்ளூர அவளுக்கு ஏமாற்றமே - வீடியோ கேமரா வரவில்லை என்பதில்...
“கல்யாணமான புதுசிலே தோசைக்குத் தொட்டுக்க கடப்பா வெச்சேன்... 'ஆஹா' ன்னாரு. அடுத்த நாளே ஒரு கவிதை ரெடி.” தான் விரலை அசைத்தால் கவிதை மழை பொழியும் அந்த வீட்டில் என்பது தானே பொருள்! குறுகிய காலத்தில் மடமடவென்று தனது கவிதைகளை மேம்போக்காகப் படித்து விட்டு இந்தப் போடு போடுகிறாள்! வல்லவன் திகைத்துப் போனான்.
முகத்தில் குறுநகை தவழ நிருபர் குறிப்பு எடுத்துக் கொண்டே போனார். ‘அடப்பாவி, இது மதுரை தான்; சிதம்பரம் இல்லை, என்று எழுதுகிறானோ?’ வண்டுவாஞ்சேரி வாணராயன் என்ற பெயர் ஒன்றே அந்த புருஷனைச் சேர்ந்தது என்று பத்திரிகையில் வந்துவிடுமோ?
“ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்ம்பாங்க, நீங்க என்ன சொல்றீங்க?” -பற்கள் தெரியச் சிரித்தபடி அவளைக் கேட்டார் நிருபர்; கண்களோ அமுதாவையே பார்த்துக் கொண்டிருந்தன. உட்கார்ந்த வாக்கிலேயே சோபாவுக்கு பின்னால் சுவரைப் பார்த்து, “பின்னாலயா?” என்று கேட்டான் கிண்டலாக. திரும்பும் போது பேனா காகிதத்தில் சரசரவென்று எழுத்துக் கோலங்களைப் போட்டதைப் பார்த்தான். நேரடியாகப் பதில் சொல்லாமல் தான் காட்டிய இந்த ‘அவிநயக் குறிப்பு’, நிருபருக்கு வைத்த செக்கென்றும் அமுதாவின் கொட்டத்திற்கு வைத்த குட்டு என்றும் எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டான். “தேங்க்ஸ் சார்… நன்றி மேடம்…”
அவர்களை வழியனுப்பி விட்டு எரிச்சலுடன் திரும்பி வந்தான். ‘மேடம்’ அங்கே இருந்தால் தானே? பக்கத்து வீட்டு வனிதாவின் பொறாமையை விசிறி விட ஓடிப்போயிருந்தாள்! சமையலறையில் திறந்து கிடந்த பாலை ருசி பார்க்கத் திருட்டுத்தனமாக நுழைந்திருந்த பூனை, அவனைக் கண்டதும் ‘விசு’க்கென்று தாவி மறைந்தது.
ஏற்கெனவே தன்மீது ஆதிக்கம் செலுத்தி வரும் அமுதா - அவளைப் பற்றி அச்சில் நாலு வார்த்தை வந்து விட்டால் - கேட்கவே வேண்டாம். தனக்குள்ள கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விடும். ஓர் உந்தல்… மேட்டர் அச்சேறுவதற்குள் அந்த நிருபனைப் பார்த்து கொஞ்சம் பேசி விட வேண்டும். வேகமாக ஸ்கூட்டரை நோக்கி நடந்தான்; சற்று நிதானித்தான் – ‘சே! அசிங்கம்… அவனிடம் என்ன சொல்வது? ‘என் மனைவியை ரொம்பப் புகழ்ந்து எழுதி விடாதீர்கள்’ என்றா...? பைத்தியக்காரத்தனம்! ஏதாவது சொல்லப் போக பத்திரிகைக்கு ‘பஞ்ச்’ வேண்டுமென்ற குஷியில் காது மூக்கு வைத்து எதையாவது எக்கச்சக்கமாக எழுதி விடுவான்; அது தனக்கே அவமானம்… அந்த ஐடியாவை விட்டுவிட்டுத் திரும்பினான். இனிமேல் இவளிடம் கொஞ்சம் கடுமையாகவே நடந்து கொள்ள வேண்டும்! ………………
தொண்டைக் கமறலுடன் அலறிவிட்டு ரயில் ஸ்டேஷனில் இருந்து நகர்ந்தது. ‘கேதகி’யில் வந்துள்ள பாராட்டுக் கட்டுரையை ஜன்னல் பக்கம் நகர்ந்து வல்லவன் படிக்கத் தொடங்கினான். ‘கவிதை எழுதுவதை விட, கவிஞனைப் பற்றி எழுதுவது தான் கடினம்’ என்று பொடி வைத்து ஒரு மாதிரியாகத் தொடங்கியிருந்தார் நிருபர். ‘ரேக்ளா ரங்கன்’, ‘மோரி மணக்குது’, ‘ஆளோடி ஆரோக்கியசாமி’, ‘தூதாண்டிக் கோல்’, ‘மாப்பிள்ளைத் திண்ணை’, ‘மோட்டுத் தெரு மோழை மாடு’… இப்படி, பல தலைப்புகளில் தஞ்சை மாவட்டத்துக் கிராமிய மணம் கமழ, நூற்றுக்கணக்கில் கவிதைகளை யாத்திருக்கும் இக்கவிஞர், திருமணமாகியும் பிரம்மச்சாரி குறும்பை விடாதவர்! இப்போட்டிக்கு இவர் அனுப்பிய கவிதையைப் பாருங்கள்: ‘நரிக்குடி நெல்சன்’ - டக்கரான டைட்டில்! ‘வண்டுவாஞ்சேரி வாணராயன்’ அதிர்ஷ்டசாலி. அடக்கமே உருவான பெண்மணியைத் தம் வாழ்க்கைத் துணைவியாகப் பெற்றுள்ளார்! இவர் இல்லத்தில் நடைபெற்ற பேட்டி முடியும் வரை அவ்வம்மையார் அமைதி காத்த அழகே அழகு! ‘வல்லவன்’ என்னும் இயற்பெயர் கொண்ட இக்கவிஞர் செயலிலும் வல்லமை படைத்தவர்தாம். நுட்பமான விஷயத்தை, தட்டிக் கழிப்பது போல் முதுகுப் புறம் எதையோ தேடினார். சொல், எழுத்து, செயல் அனைத்திலும் இவரது துணைவியாரின் அடக்கமே ஆதிக்கம் செலுத்தி வருகிறதோ என்று தோன்றுகிறது! விசித்திரமான இத்தம்பதியருக்கு ‘கேதகி’யின் வாழ்த்துகள்.
கவிதையும் பாராட்டுக் கட்டுரையும் பிரசுரமான பிரதிகள் இரண்டு வீட்டில் இருந்தன; என்றாலும், டூரில் மீண்டும் படிக்க இரண்டு பிரதிகளைக் கடையில் வாங்கிக் கொண்டு போயிருந்தான். படிக்கப் படிக்கப் பூரிப்பு. ரயிலில் இருந்த போதுதான் இந்தக் ‘கருத்துப் பாய்ச்சல்’ வெளிப்பட்டது: ‘இனிமேல் அமுதாவின் போக்கு எப்படி இருக்கும்?’
ஊருக்குத் திரும்பியதும் ஒரு கடிதத்தை நீட்டினாள் அமுதா. வியப்புடன் வாங்கிப் படித்தான். ‘செவ்வி’ என்ற பத்திரிகையில் இருந்து ‘திருமதி. அமுதா வல்லவன்’ என்று அவள் பெயருக்கு வந்திருந்தது. கண்களை ஓட்டினான்; படிக்கப் படிக்கப் புருவங்கள் உயர்ந்தன; அவ்வப்போது நெரிந்தன. “ ‘கேதகி’யில் பாராட்டப்படும் அளவுக்குக் கணவரை ஊக்குவித்து, பெரிய கவிஞராக உயர்த்தியிருக்கிறீர்கள். நீங்களும் கவிதை புனைவதில் வல்லவர் என்று ஊகிக்கிறோம். தேவையற்ற அடக்கத்தை விட்டு, வெளிச்சத்திற்கு வராத தங்களின் கவிதைகளைத் தயங்காமல் அனுப்புங்கள். பிரசுரிக்க நாங்கள் இருக்கிறோம்………………….. “ இதற்கு மேல் படிக்க விரும்பவில்லை. பார்வையைத் திருப்பிய போதுதான், ‘பிரசுரத்திற்கு ஏற்றதாக இல்லை’ என்று அவனுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட கவிதைகள் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான். அவளைப் பார்த்தான்.
“இதையெல்லாம் என் கையெழுத்திலே மறுபடியும் எழுதி, என் பேரிலே இந்தச் ‘செவ்வி’க்கு அனுப்பப் போறேன்!” --- திகைத்துப் போய் விட்டான் வண்டுவாஞ்சேரி வாணரையன் என்கிற வல்லவன். “ஆமாங்க, வனிதா சொல்லி இருக்கா- ‘எழுதினது திரும்பி வந்துட்டா, கவலைப்படக் கூடாது; அன்னிக்கு அவிங்க மூடு அப்டி… அதையே வேற கவர்ல போட்டு வேற ஒரு பத்திரிகைக்கு அனுப்பிடணும், இல்லையா, கொஞ்ச நாள் கழிச்சு, திருப்பி அனுப்பின அந்தப் பத்திரிகைக்கே அனுப்பினா போட்டுடுவாங்க!’….
-….???
“நிச்சயம் போட்டுடுவாங்க - ஏன்னா இன்னொரு நாள் வேற மூடுல இருப்பாங்க!”………………
சமயம் பார்த்து அடுக்களையிலிருந்து வெளியேறிய பூனையை இருவருமே பார்க்கவில்லை!!!
***********************************************************
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்