logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

து. இராஜலெட்சுமி

சிறுகதை வரிசை எண் # 64


சில்லென்று பூத்த சிறு நெறிஞ்சிக் காடு… நாகப்பட்டினம் மத்திய பேருந்து நிலையத்தில் கூட்டி வைக்கப்பட்டிருந்த குப்பைகளின் குவியலுக்கு அருகே காலியாக இருந்த சிமென்ட் இருக்கையில் கவலையுடன் உட்கார்ந்து இருந்தாள் மிதுனா.அக்குப்பை குவியலில் கிடந்த நேற்று இரவு பேருந்துக்காக காத்திருந்தவர்கள் சாப்பிட்டு விட்டு வீசி எறிந்த நெகிழித்தாள்களும் எஞ்சிய சாம்பாறும் சட்னியும் பழத் தோல்களும் சேர்ந்து கெட்டவாடை வீசிக் கொண்டிருந்தது. மிதுனாவுக்கு அந்தப்பக்கம் பார்ப்பது அருவருப்பாக இருந்ததால் அதைத் தவிர்த்து தஞ்சாவூர் பேருந்துகள் நிற்கும் திசையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அவள் செல்ல வேண்டிய பேருந்து அந்த இருக்கைக்கு எதிரே தான் வந்து நிற்கும். நகரத்தை விட்டு மூன்று கிலோமீட்டர் வெளியே இருந்த ஒரு பெரு வணிக அங்காடியில் விற்பனைப் பெண்ணாக வேலை செய்து வந்தாள் மிதுனா. நகரம் வெளிப்புறமாக விரிய ஆரம்பித்ததன் விளைவாக நிறைய குடியிருப்புகள் தோன்றிய பிறகு சிறு சிறு கடைகள் மட்டுமே இருந்து வந்த நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட அந்த பெருவணிக அங்காடியில் அந்தப் பகுதியில் உள்ளோருக்கு மிகவும் வசதியாக இருந்தது. மேலும் பல கிராமங்களில் படித்து விட்டு வேலையின்றி இருக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இடமாகவும் அந்த அங்காடி இருந்தது. அவள் வழக்கமாக செல்லும் பேருந்து அவள் வீட்டிலிருந்து கிளம்பி வர சற்று தாமானதால் சென்று விட்டிருந்தது. காலையில் எழும்போதே நேரமாகியிருந்ததை உணர்ந்த மிதுனா எவ்வளவு வேகமாக தயாராக முயன்றும் பேருந்தை பிடிக்க இயலவில்லை. மாதந்திரப் போக்கின் அயர்ச்சியும் நேற்றிரவு அவளது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடந்த சண்டையும் அவளது தூக்கத்தை கெடுத்துவிட்டிருந்து. மேலும் சிறிது நாட்களாக அவளைப் பின் தொடர்ந்து வரும் பிரவீனிடமிருந்து நேற்றிரவு வந்த குறுஞ்செய்தி வேறு அவளை எரிச்சலூட்டியது. "நாளை காலை பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறேன். உனது முடிவிற்காக" என்பதுதான் அந்த குறுஞ்செய்தி. மிதுனா வீட்டிற்கு ஒரே பெண் பிள்ளை தான். அவளின் அம்மா அப்பா இருவருமே கூலி வேலை செய்து வந்தனர். அம்மா அன்னக்கொடி மூன்று வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வந்தார். அப்பா வேல்முருகனுக்கு தனியான எந்த வேலையும் இல்லை. மரம் வெட்டுதல் கட்டிட வேலை மூட்டை தூக்குதல் போன்ற கிடைக்கும் வேலைகளை செய்வான். வேலை செய்து கிடைக்கும் கூலியை அவனது தேவைக்கு பத்தோ இருபதோ எடுத்துக் கொண்டு மிச்சத்தை அப்படியே அன்னக்கொடியிடம் கொடுத்துவிடுவான். அவனது சம்பளத் தொகையும் அன்னக்கொடி வீடுகளில் வேலை செய்து கிடைக்கும் தொகையும் சேர்ந்து ஓரளவுக்கு நிம்மதியாக வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. அன்னக்கொடிக்கும் வேல்முருகனுக்கும் மிதுனாவை நிறைய படிக்க வைக்க வேண்டும் என்று நிறைய ஆசை இருந்தது. அதனால் அவளை எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்து இருந்தனர். ஊரின் கடைசி வீடாக அவர்கள் வீடு இருந்தது. அதனால் பள்ளிக்கூட வேன் காலையில் ஏழு மணிக்கெல்லாம் வந்து விடும். வேல்முருகனும் அன்னக்கொடியும் வேலைகளைப் பகிர்ந்து செய்து மிதுனாவை அரைகிலோமீட்டர் தொலைவில் இருந்த வேன் நிற்குமிடத்தில் கொண்டு விடுவார்கள். பெரும்பாலும் வேல்முருகன் அவளை வேனில் ஏற்றி விட்டு அப்படியே வேலைக்குச் சென்று விடுவான். அன்னக்கொடியும் அவர்களது வீட்டு வேலையை முடித்து விட்டு குளித்து சாப்பிட்டு சரியாக ஒன்பது மணிக்கு முதல் வீட்டு வேலைக்குச் சென்று விடுவாள். மூன்று வீடுகளிலும் வேலை முடித்து திரும்ப மதியம் ஒரு மணிக்கு மேல் ஆகிவிடும். வேலை செய்யும் வீடுகளில் அவள் உணவு தரவேண்டும் என்று எதிர்பார்த்தது இல்லை. ஏதேனும் விஷேச தினங்களில் கொடுத்தாலும் அங்கேயே சாப்பிட்டு விட்டு வந்து விடுவாள். வேலை செய்யும் வீடுகளில் இருந்து உணவை எடுத்து வந்து கொடுக்கும் பழக்கத்தை மிதுனாவுக்கு ஏற்படுத்தக் கூடாது என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர். அவர்களின் வீடு அவர்கள் குடியிருக்கும் தெருவின் கடைசியாக இருந்ததனால் ஊரின் கடைசியும் அதுவாகவே இருந்தது. மிதுனா சிறு பெண்ணாக இருந்த போது அவர்களின் வீடு செங்கல் கொண்டு மண் சுவர் எழுப்பி மேலே தென்னங் கீற்று வேயப்பட்டு அதன் மேல் வைக்கோல் போர்த்தப்பட்டு இருக்கும் . வருடத்திற்கு ஒருமுறை மடித்து போன தென்னங் கீற்றுகளை மாற்றி வைக்கோல் போர்த்த வேண்டும்.இல்லையெனில் மழை நாட்களில் ஒழுகி மண்தரை நச நச வென்று ஆகிவிடும். அவ்வாறு பழுது பார்க்க ஒவ்வொரு வருடமும் செலவு அதிகரித்துக் கொண்டே வந்தது. அதன் காரணமாக அன்னக்கொடி மகளிர் சுய குழுவிலும் தினமும் வேலை செய்யும் வீடுகளிலும் முன் பணம் கடனாகப் பெற்று சுவற்றுக்கு சிமெண்ட் பூசி மேற்பகுதியில் இரும்பு தகடுகள் போட்டு ஓரளவுக்கு வீட்டை பாதுகாப்பானதாக மாற்றினாள். அதுதான் இப்போது மழை மற்றும் வெயிலிலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மிதுனாவின் வீட்டிற்கு இடது புறத்தில் பெரிய திடல் இருக்கும். அது புறம் போக்கு நிலமாகும். அவள் குழந்தையாக இருந்த போது அத்திடலில் பொதுமக்கள் நடக்கும் பாதை தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் அடர்த்தியான பல்வேறு வகையான மூலிகைச் செடிகளும் புதர்ச் செடிகளும் பருவத்திற்கு ஏற்றார் போல பசுமை போர்த்தி கிடக்கும். கார்த்திகை மார்கழி மாதங்களில் நெருஞ்சில் செடி பச்சை பசேலென்று படர்ந்து அடர் இருளில் மின்னும் நட்சத்திரங்களைப் போல மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்துக் கிடக்கும். மிதுனா தளர் நடை நடந்து அந்த பகுதிக்குள் செல்லும் போது கால்களில் முள் குத்தி விடும் என்பதால் வேல்முருகன் வீட்டில் இருந்தால் ஓடிச் சென்று தூக்கிக் கொள்வான். எதையோ நோக்கி விரைவாக சென்று கொண்டிருந்த மிதுனா அவளது தந்தை சட்டென்று சிறு பதட்டத்துடன் தூக்கிக் கொண்டதும் அவள் சென்ற இலக்கு தவறியதால் அலறி அழுவாள். அந்தச் சமயங்களில் அவன் ஓடிச் சென்று அவளிடம் செல்லமாக எத்தனை முறை சொல்லுறேன் முள் குத்தும் என்று அதட்டியவாறு தூக்கும் போதெல்லாம் அவள் அழுகையை நிறுத்துவதற்காக சில்லென்று பூத்த சிறு நெரிஞ்சிக் காட்டினிலே எனத் துவங்கும் செந்தமிழ் தேன் மொழியாள் என்ற பாடலை முழுவதுமாக மிக அழகாக பாடுவான். தந்தையின் பாடலை மகிழ்ச்சியாக ஊன்றி கேட்டுக் கொண்டிருப்பாள் மிதுனா. எல்லாம் மிதுனா ஆங்கிலப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் வரை தான். அதன் பின்னர் அவளைச் சுற்றி நடந்தது எல்லாம் பெரிய பெரிய மாற்றங்கள். மழைக்குப் பின் வண்ண வண்ண பூச்சிகள் ரீங்காரமிடும் பலவகையான செடிகள் முளைத்து செழித்து கிடந்த அந்த இடத்தில் இப்போது சீமைக் கருவேல மர புதர்களும் ஊரின் ஒட்டுமொத்த குப்பைகளுமாக துர் நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. ஆங்காங்கே மரக்கிளைகளில் கோழிக் கழிவுகள் முதல் குழந்தைகள் டையாப்பர்கள் வரை அடைத்த நெகிழிப் பைகள் தொங்கிக் கொண்டிருந்தன. கட்டிடங்கள் கட்டுமிடத்திலும் விவசாய வேலை நடக்கும் போதும் வேலையாட்கள் வேலை துவங்குவதற்கு முன் வேலைக்கு அழைப்பவர்கள் பாக்கெட் சாராயம் வாங்கி கொடுப்பது வழக்கமாகிவிட்டிருந்தது. அந்த சாரயத்தின் விலைக்கான தொகையை அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கூலியில் பிடித்துக் கொண்டு கொடுத்தார்கள் முதலாளிகள். நான் ஒன்றும் தேடிக்கொண்டு செல்லவில்லையே வேலை சுமை தெரியாமல் இருக்கத்தானே என்று வேலையாட்கள் தங்களை தாங்களே சமாதானம் செய்துகொண்டு வீடுகளில் கேட்பவர்களிடத்திலும் அதே சமாதானத்தை சொல்வதை வழக்கமாக்கி குடிகாரர்களாக மாறிப் போனார்கள். அதிலிருந்து வேல்முருகனும் தப்பவில்லை. பாக்கெட்டில் அடைத்து ஒதுக்குப்புறங்களில் வைத்து விற்பனையான மதுவை ஒழிக்க இயலாது என்ற நிலையில் அரசே மதுக்கடைகளை திறந்து கைக்கு அடக்கமான போத்தல்களில் விற்பனைக்கு கொண்டு வந்த போது இன்னும் வசதியாகிப் போனது மதுப் பிரியர்களுக்கு. வேலை செய்து கிடைத்த கூலியில் டீ செலவுக்கு மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அன்னக்கொடியிடம் கொடுத்துக் கொண்டிருந்த வேல்முருகன் பாதி தொகை கொடுக்க ஆரம்பித்தான். அதை வைத்து பள்ளிக் கட்டணமும் வேன் கட்டணமும் கட்ட திணற ஆரம்பித்தாள் அன்னக்கொடி. வரவு பற்றாக்குறை காரணமாக தினமும் சண்டை வர துவங்கியது இருவருக்கும். வேல்முருகன் அதையே காரணம் காட்டி வேலைக்குச் செல்லும் நாட்களில் கிடைக்கும் கூலி முழுவதையும் வீட்டிற்கு கொடுக்காமல் குடித்துவிட்டு வந்து சண்டை போடுவான். அதைப் பார்க்கும் மிதுனா காரணம் எதுவும் புரியாமல் யார் பக்கம் செல்வது என தெரியாமல் விழித்துக் கொண்டு நிற்பாள். சில சமயங்களில் அலறி அழுதவாறே தூங்கிப் போவாள். அன்னக்கொடி எவ்வளவோ மன்றாடி பார்த்தும் அவளால் ஒன்றும் செய்ய இயலவில்லை மிதுனா அப்பொழுது மூன்றாம் வகுப்பு இறுதியில் இருந்தாள். ஆதலால் நான்காம் வகுப்பிற்கான பள்ளி கட்டணத்தை செலுத்த பள்ளி நிர்வாகம் அழுத்தம் கொடுத்தபொழுது திக்கற்று திகைத்துப் போனாள் அன்னக்கொடி. பள்ளிக்கட்டணமாவது எப்படியாவது கட்டிவிட வேண்டும் என்று எவ்வளவோ முயன்றும் அவளால் எதுவும் செய்ய இயலவில்லை. வேல்முருகன் வேலைக்குச் செல்வது குறைய ஆரம்பித்தது. அப்படி அவனே வேலை தேடி செல்லும் சில நாட்களில் வீட்டிற்கு வருவதை தவிர்த்து இருந்தான். அன்னக்கொடி வேலை செய்யும் வீடுகளில் இருந்து சம்பளமாக கிடைத்த வருமானம் அன்றாடத் தேவைக்கே சரியாக இருந்தது. வேல்முருகன் செலவுக்கு பணம் எதுவுமே தராமல் அனைத்தையும் குடித்து குடித்தே குடிநோயாளியாகிக் கொண்டிருந்தான். ஒரு முறை நிறைய குடித்து விட்டு தெருமுனையில் விழுந்து கிடந்த போது அவனுக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. அன்னக்கொடி அதையே காரணம் காட்டி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த மது அடிமைகள் நலமையத்தில் சேர்த்து விட்டிருந்தாள். அங்கே இருந்த கெடுபிடிகளின் காரணமாக சேர்த்த மறுநாளே அங்கிருந்து தப்பி வெளியேறியவன் பத்து நாட்களுக்கும் மேலாக எங்கெங்கோ சுற்றியலைந்து விட்டு வீட்டிற்கு வந்திருந்தான். அதனை நினைத்தும் மிதுனாவின் எதிர்காலம் நினைத்தும் தனது இயலாமையை நினைத்தும் அன்னக்கொடி வெகு நேரம் அழுது கொண்டிருப்பாள். மிதுனாவுக்கு பள்ளி கட்டணம் செலுத்த வேண்டிய நாளும் தவறிப் போனது. இதை எதுவும் உணர முடியாத மிதுனா அம்மா அழுவதைப் பார்த்து தானும் கொஞ்ச நேரம் அமுதுவிட்டு அன்னக்கொடியின் சேலையைப் பிடித்தவாறு தூங்கிப் போவாள். நடந்தது அனைத்தையும் யோசித்துப் பார்த்த அன்னக்கொடி தன்னால் இனி மிதுனாவை ஆங்கில வழிப் பள்ளியில் படிக்க வைக்க இயலாது என்பதை உணர்ந்து மிதுனா மூன்றாம் வகுப்பை முடித்த பின் அவர்கள் வசிக்கும் தெருவிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் அரசுப் பள்ளியில் சேர்த்தாள். அன்றிலிருந்து எப்பொழுதும் வீட்டில் வரும் சண்டையை பார்த்தே வளர்ந்த மிதுனாவுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படவில்லை. அதன் காரணமாக பன்னிரெண்டாம் வகுப்பில் மிகவும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றே அவளால் தேர்ச்சி அடைய முடிந்தது. அன்னக்கொடி எவ்வளவோ மன்றாடியும் கல்லூரியில் சேர மறுத்துவிட்டாள். அன்னக்கொடி வேலை செய்த வீட்டில் கார் ஓட்டுனராக இருந்த முத்துவேல் அண்ணனின் மகன் கார்த்திக் மிதுனா தற்போது வேலை செய்யும் பல் பொருள் அங்காடிக்கு விற்பனைப் பெண்கள் தேவைப்படுவதாகவும் அங்கே அவன் மேற்பார்வையாளனாக இருப்பதாகவும் கூறியதாக மிதுனாவிடம் சொன்னபோது மிதுனா உடனே விற்பனைப் பெண்ணாக போகிறேன் என்றாள். அன்னக் கொடிக்கு அவளை வேலைக்கு அனுப்ப சிறிதும் மனமில்லை. மிதுனாதான் பிடிவாதமாக செல்கிறேன் என்று சென்று கொண்டிருந்தாள். வேலை செய்வதிலும் அவள் சிறப்பாக இருக்கிறாள் என்று பெயர் எடுத்தாள். கார்த்திக் மதிய வேளையில் சில சமயங்களில் சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்வது வழக்கம். அப்படி ஒரு நாள் உணவை வழங்க கார்த்திக்கை பிரவீன் தேடிய போது அவன் வெளியே சென்றிருந்ததால் மிதுனாவே வாங்கினாள். மேலும் பிரவீன் கார்த்திக்கின் நண்பனாகவும் இருந்ததால் அவ்வப்போது அவனை பார்க்க வருவான். அப்போதெல்லாம் பிரவீனின் கண்கள் மிதுனாவையே தேடிக் கொண்டிருக்கும். எப்போதாவது மிதுனா அவனிடம் நட்பாக பேசுவாள். அது கைப்பேசி எண்களை மாற்றிக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்தது. மிதுனாவிற்கு சில நாட்களாக பிரவீனின் பேச்சில் இருந்த மாற்றம் விரும்பத்தக்கதாக இல்லாமல் இருந்ததால் அவனிடம் பேசுவதையும் குறுத்தகவல்களை அனுப்புவதையும் தவிர்த்து வந்தாள். பிரவீனின் மீது மிதுனாவுக்கு காதல் எல்லாம் இல்லை. அதன் காரணமாகவே நேற்று அவன் அனுப்பிய தகவல் அவளுக்கு எரிச்சலைத் தந்தது. அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. கார்த்திக்கினால் தான் வேலை கிடைத்தது என்பதாலோ இல்லை கார்த்திக் அங்கு பணிபுரியும் பெண்களிடம் மிகவும் கௌரவமாகவும் அக்கறையுடனும் நடந்து கொள்வதாலோ மிதுனாவுக்கு அவன் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது.ஆனாலும் அவனிடம் அதிகமாக பேசியது இல்லை. அவளது வளர்ப்புச் சூழல் அவளை சிறு வயதிலிருந்தே இறுக்கமானவளாகவே காட்டியது. அவளாக சென்று யாரிடமும் பேசவும் மாட்டாள். கார்த்திக்கும் வேலை காரணமாக ஏதாவது பேசுவதோடு நிறுத்திக் கொள்வான். அப்பொழுதெல்லாம் அவன் இன்னும் சிறிது நேரம் பேசமாட்டானா எனத் தோன்றும் அவளுக்கு. அனைத்தையும் நினைத்தவாறு அவ்வப்போது பேருந்து வருகிறதா என்று அது உள்ளே வரும் திசையையே பார்த்துக் கொண்டிருந்த மிதுனாவிற்கு இருசக்கர வாகனத்தின் ஒலிப்பானின் ஒலி கேட்க திரும்பி பார்க்கிறாள். அங்கே பிரவீன் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கையில் ஒரு சிவப்பு ரோஜவை கொண்டு வந்து கொடுத்துவிட்டு உடனடியாக அங்கிருந்து நகர்ந்து தனது வாகனத்தின் அருகே இவளையே பார்த்தவாறு நின்று கொண்டு இருக்கிறான். மிதுனா அவளை வாய்க்கு வந்தபடி திட்டியவாறு அதே இடத்தில் அமர்ந்து இருக்கிறாள். இதற்கிடையே அருகே நின்று கொண்டிருந்த பேருந்தின் முன்புறத்திலிருந்து கார்த்திக் ஓடி வந்து அந்த ரோஜாவை எடுத்துக் கொண்டு துடைத்தவாறே செல்கிறான். அதனைப் பார்த்த மிதுனாவிற்கு ஏதோ ஒரு இனிய உணர்வு ஆட்கொண்டு அதுவரை இருந்த எரிச்சலான உணர்வு மறைந்து லேசாகிறது. சட்டென்று கார்த்திக்கை மனது தேடவும் பேருந்து வரவும் ஓடிப்போய் இடம் பிடித்து அமர்கிறாள். மனம் முழுவதும் கார்த்திக் ஆக்கிரமித்து இருக்க பேருந்து மேகங்களுக்கு இடையே பறப்பதாய் உணர்கிறாள் மிதுனா. ராஜலெட்சுமி மயிலாடுதுறை 9443677662 7904264935 narthanavina@gmail.com

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.