logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

Sudha Ganapathy

சிறுகதை வரிசை எண் # 63


பாசமா காதலா “டைம் ஆச்சு கிளம்பலாம்.” சுடிதாரில் ஒட்டிக்கொண்டிருந்த மணலைத் தட்டியபடியே சாரு நடக்கலானாள் . “நம்முடைய பிரெண்ட்ஷிப்பை அடுத்த லெவலுக்கு கொண்டுபோக நினைக்கிறேன் . எப்பவும் போல் நோ என்று சொல்லி என்னை நோக அடிக்காதே .நிதானமா யோசிச்சு அடுத்த வாரம் உன் முடிவைச் சொல்லு “ என்ற சித்தார்த்திடம் “ கல்யாணம் ,குழந்தை எல்லாம் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று . பிரசாத் தான் என் வாழ்க்கை . என்னை எதிர்பார்த்து உன் எதிர்காலத்தை வீணடித்துக் கொள்ளாதே . உன்மேல் கோபமோ வருத்தமோ இல்லை நம்ம பிரண்ட்ஷிப் எப்பவும் போல தொடரும் . பை .” ஸ்கூட்டியை ஒட்டிய சாரு மனதில் குடும்பத்தில் நடந்த நிகழ்வுகள் அலைமோதின. குமார்,வீணா, சாரு, பிரசாத் என்னும் அழகான பூங்காவை புற்று நோய் என்னும் சூறாவளி வீணாவை பலி வாங்கி சின்னாபின்னம் ஆக்கிவிட்டது .மூன்றே வயதான டவுன்சிட்ரோம் பாதிப்புள்ள தம்பி பிரசாத்தை சாருதான் தாயைப் போல பொத்திப் பொத்திப் பார்த்துக் கொண்டாள் .காலையில் பல் துலக்குவதில் ஆரம்பித்து இரவு தூங்குவது வரை அவன் பெரும்பாலான தேவைகளை கவனித்துக் கொள்வது சாருதான் .அவள் இல்லாவிட்டால் சாப்பிடாமல், தூங்காமல் அடம் பிடிப்பான். அக்கா தம்பியிடையே பதினைந்து வயது வித்தியாசம் என்பதும் இந்தப் பாசப் பிணைப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம் . வீணாவின் மறைவுக்குப் பின் சாருவின் அத்தை பரிமளம் குமார் குடும்பத்தோடு தங்கியது பெரும் உதவியாக இருந்தது . காலம் யாருக்கும் காத்திருப்பது இல்லை . குமார் பணி ஒய்வு , சாரு கல்லூரி படிப்பு முடித்து வேலையில் சேருவது ,பிரசாத் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளிக்கு போய் வருவது என்று பல மாற்றங்கள் . இருந்தாலும் பிரசாதுக்கு சாரு இல்லாமல் சரிப் படாது . அவள் வீட்டில் இருக்கும் சமயங்களில் எல்லாம் அவளோடுதான் இருப்பான் . முப்பது வயதை நெருங்கிவிட்ட சாருவை திருமணம் செய்து கொள்ள அப்பா எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் சம்மதிக்கவில்லை . உறவினர்கள் அறிவுரையும் பயனற்று போயின . பிரசாத்தை கவனிப்பராற்று விட்டு விட்டு எனக்கென்று ஒரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள மாட்டேன் என்ற தீர்மானத்தில் சாரு உறுதியாக இருந்தாள் . வீடு திரும்பிய சாருவை ஓடி வந்து பிரசாத் கட்டிகொண்டான். ”ஹலோ கண்ணா .கொஞ்சம் லேட் ஆயிடுத்து .டின்னர் சாப்பிட்டாயா ? இப்போ வாஷ் பண்ணிண்டு வந்து உன்னை தூங்க வைக்கிறேன்.” சாரு மேல் காலைப் போட்டுக் கொண்டு தான் பிரசாத் தூங்குவான். அவனைத் தனியாக படுத்துக் கொள்ள பழக்கு என்று அத்தை பலமுறை சொல்லியும் பலன் இல்லை .சாரு இல்லாவிட்டால் ஒரே ரகளைதான் . பிரசாத் தூங்கியவுடன் அப்பாவும் மகளும் சாப்பிட ஆரம்பித்தனர் . சாப்பட்டை பரிமாறியபடி அத்தை ”அம்மா சாரு , எனக்கும் உன் அப்பாவுக்கும் உன் எதிர் காலத்தைப் பற்றி நினத்தால் ரொம்ப கவலையா இருக்கு “ என்று ஆரம்பிக்க “அத்தை நான் நிறைய முறை உங்களிடம் என் முடிவைப் பற்றி சொல்லி விட்டேன். பிரசாத் தான் என் எதிர்காலம்” “உருளைக் கிழங்கு ரோஸ்ட் பிரமாதமா இருக்கு . பிரசாதுக்கு ரொம்ப பிடிக்குமே; நல்லா சாப்பிட்டனா ?அத்தை நீங்க சாப்பிட்டாச்சா” சாரு சாமர்த்தியமாக பேச்சை மாற்ற இயலாமையோடு குமாரும் பரிமளமும் ஒருவரரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் . படுத்துக் கொண்ட சாரு உறக்கம் பிடிக்காமல் புரண்டாள் . சித்துவின் அன்பும் அவன் மீது தனக்கு இருக்கும் ஈடுபடும் ஒரு பக்கம் ; தம்பியைப் பற்றிய கவலை மறுபக்கம் அவளைக் குழப்பின . தான் இல்லாமல் பிரசாத் எப்படி இருப்பான் ; வயசு காலத்தில் அப்பாவுக்கும்.அத்தைக்கும் அவனை சமாளிப்பது பெரும் பிரச்சினை . நீண்ட யோசனைக்குப் பிறகு திருமண எண்ணத்தை விட்டு விடுவதே சரி . சித்துவிடம் பைனலாக அடுத்த முறை சொல்லிட வேண்டும் என்ற தீர்மானத்தோடு தூங்க ஆரம்பித்தாள். இரண்டு நாள் தீவிர யோசனைக்குப் பின் சித்து ஒரு தீர்மானத்திற்கு வந்தான் . அவனுடைய பெற்றோர் கார் விபத்தில் அகாலமாக இறந்து விட அவனுக்கு கார்டியனாக இருந்து படிக்க வைத்து சொத்துக்களைப் பராமரித்து வரும் அட்வகேட் பெரியப்பா வீட்டுக்கு போனான் . சித்துவைப் பார்த்து உற்சாகமான பெரியப்பா கிச்சனில் இருந்த மனைவியிடம் “சரசு சித்து வந்திருக்கன். அவனுக்கும் சேர்த்து டின்னர் ரெடி பண்ணு “என்று குரல் கொடுத்தார் . ‘டின்னர் அரை மணி கழித்து சாப்பிடலாம் .பெரியம்மா நீங்களும் உட்காருங்க . உங்க ரெண்டு பேரோட கொஞ்சம் பேசணும்” பீடிகை போடாமல் சாருவை மனமார நேசிப்பதையும் அவள் குடும்பம் பற்றிய எல்லா விவரங்களையும் சொன்னான் . “ அவள் என்னை விரும்பினாலும் திருமணத்திற்குப் பிறகு பிரசாத்தை நான் ஒதுக்கி அவளிடமிருந்து பிரித்து விடுவேன்” என்று பயந்து பிடிவாதமாக கல்யாணத்தைத் தவிர்க்கிறாள் “ “சாரு இல்லாமல் என்னால் இருக்க முடியாது .அதனால நல்லா யோசிச்சு நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன் “ நிதானமாக ஆனால் தெளிவாக தன் தீர்மானத்தைச் சொல்ல அதிர்ச்சி அடைந்த சரசு,“சித்து இது உன் வாழ்க்கையில் நீ எடுக்கும் ஒரு முக்கியமான முடிவு .ஒரு வேகத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பண்ணுற காரியம் இல்லை. நாளைக்கு நீயும் அந்தப் பெண்ணும் குழந்தை குடும்பம் என்று சந்தோஷமா இருக்கணும் இல்லையா. நடை முறைக்கு இந்த ஏற்பாடு ஒத்து வருமா .நாலு பேரு ஒரு மாதிரி பேச மாட்டாங்களா ” என்றாள் பதட்டத்தோடு . “பெரியம்மா மத்தவங்களப் பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை . உங்க ரெண்டு பேரோட ஆசியும் சாருவோட அப்பாவின் சம்மதமும் தான் எனக்குத் தேவை” நீண்ட விவாதத்திற்கு பிறகு டின்னரை முடித்துக்கொண்டு “நான் கியம்புகிறேன். என்னைப் புரிந்து கொண்டு ஹெல்ப் பண்ணுவதற்கு ரொம்ப தேங்க்ஸ் பெரியப்பா . “ ” உன்னை எங்க பிள்ளையாதான் நினைக்கிறோம் . உன் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம். எங்க ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு உண்டு . சீக்கிரமே எல்லாம் நல்லபடியா நடக்கும் “ ஞாயிற்றுக் கிழமை லஞ்ச் முடிந்ததும் “அம்மா சாரு இன்னைக்கு ஈவினிங் எனக்கு தெரிந்த மூணு பேர் டீக்கு நம்ம வீட்டுக்கு வராங்க .ஸ்நாக்ஸ் எல்லாம் கேட்டரிங் மாமியிடம் சொல்லிவிட்டேன் .அத்தை காபி மட்டும் ரெடி பண்ணிடுவாங்க. உனக்கு வெளில போற வேலை எதாவது இருக்கா ? வீட்டுலதானே இருப்பே ? “ “ யாருப்பா எனக்கு தெரியாத உங்க பிரண்ட்ஸ் ?” “அது உனக்கு சர்ப்ரைஸ் “ பரிமளமும் குமாரும் பொருள் பொதிந்த பார்வையைப் பரிமாறிக்கொள்ள “என் கல்யாண விஷயமா ஏதாவது ஏற்பாடு பண்ணி இருந்தீங்கனா நான் பத்ரகாளி ஆகிவிடுவேன் “ “அம்மா உன்னை கஷ்டப் படுத்த எனக்கு மனசு வருமா “ தன் ரூமுக்குள் நைசாக நழுவி விட்டார் மாலை சித்து தன் பெரியப்பா பெரியாம்மவோடு வீட்டிற்குள் நுழைய குழம்பிய சாரு கோபத்தோடு அப்பாவைப் பார்க்க சித்து சிரித்தபடி “சாரு தேவியே சற்று சாந்தமாக இருங்கள்” என்றபடி உள்ளே வந்தான் . பெரியப்பா குமாரைப் பார்த்து ரொம்ப நாள் பழகியவர் போல கேஷுவலாக “ஹலோ “ என்றபடி சோபாவில் உட்கார சாரு ”நானே சித்துவின் பெரியாப்பவ மீட் பண்ணதில்லை , அப்பாக்கு எப்படி அவரை தெரிகிறது “ என்று குழம்பினாள். பரிமளமும் சரசுவும் அர்த்தமுள்ள பார்வையை பரிமாறிக்கொள்ள பெரியப்பா “போன பத்து நாட்களில் நடந்த விஷயங்கள் சாருவைத் தவிர நம்ம எல்லோருக்கும் தெரியும். பாவம் அவளை இனிமேல் சஸ்பென்ஸில் வைக்க வேண்டாம்” என்று நடந்தவற்றை விளக்க ஆரம்பித்தார் . சில நாட்களுக்கு முன்னால் சித்து என்னிடம் “நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் .நான் பிரசாத்தை அவன் அப்பா சம்மதத்தோடு முறைப்படி தத்து எடுக்க விரும்புகிறேன் .நீங்க சட்டப்படி அதற்கான ஏற்பாடுகளைப் பண்ணுங்க பிளீஸ் .” என்று கேட்டப்ப கொஞ்சம் ஷாக்கா இருந்தது. சாரு மேல் தனக்கு இருக்கும் ஆழமான அன்பையும் பிரசாதுக்கும் அவளுக்கும் இருக்கும் பாசத்தையும் எங்களுக்கு புரிய வைத்தான் .அவளது உணர்வுகளை அவன் மதிப்பது மனதுக்கு ரொம்ப நிறைவா இருந்தது . சித்துவின் பேச்சில் இருந்த தீவிரத்தையும் அவன் தன் முடிவில் உறுதியாக இருப்பதையும் புரிந்துகொண்டு “ உனக்கு சரியான வழி காட்டுவது என் பொறுப்பு. நீ குமாரிடம் பேசி முறைப்படி தத்து ஹோமம் செய்து பிரசாத்தை உனக்கு சுவீகாரம் கொடுக்க சம்மதமா என்று விசாரித்து சொல்லு . மத்த லீகல் பார்மாலிடீஸ் எல்லாம் நான் பார்த்துக்கறேன். “ என்று சந்தோஷமா சொன்னேன். குமாரை சந்தித்ததையும் அவர் சம்மதத்தோடு பிரசாத்தை சித்து சுவீகாரம் எடுக்கும் முடிவைச் செயலாக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டதையும் விளக்கமாக சொல்ல சாரு பிரமித்துப் போய் நின்றாள். “நம்ம கல்யனாத்திற்கு முன்னாலேயே பிரசாத் என் மகனாகி விடுவான் .பின்னால் நீ நினைத்தாலும் அவனை என்னிடமிருந்து பிரிக்க முடியாது . இப்பவாவது முழு மனதோடு என்னைக் கல்யாணம் செய்துப்பியா ?” சித்து கேட்க நன்றிப் பெருக்கோடு கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிய சித்துவின் கைகளை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள் . சரசு கொண்டு வந்திருந்த மஞ்சள் ,குங்குமம் ,பூ, பழங்களை தட்டில் வைத்து சாருவிடம் நீட்ட பெரியவர்கள் காலில் விழுந்து சித்துவும் சாருவும் ஆசி பெற்றனர் . குமார் நாத்தழுக்க “ உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு சித்து “ என்றார். “டிபன் ஆறி போகுது .வாங்க சாப்பிடலாம் “ பரிமளம் அழைக்க பிரசாத் எல்லாம் புரிந்தது போல சிரித்துக்கொண்டு சாருவைக் கட்டிகொண்டான் . சித்து தன் தட்டிலிருந்த பால்கோவாவை எடுத்து பிரசாதுக்கு ஊட்ட அவனும் பிடிவாதம் பிடிக்காமல் ஆசையாக வாய் திறக்க பெரியப்பா “பாருங்க பிரசாத்தும் சித்துவை ஒகே பண்ணிட்டான் “ என்று கூற சூழ்நிலை கல கலப்பானது .” சாரு சித்துவிடம் “ ஆனாலும் நீங்க ரொம்ப அழுத்தம் தான் . எனக்கு தெரியாமலே இவ்வளவு வேலை பண்ணி இருக்கீங்க. இதுல அப்பா வேற உங்களுக்கு கூட்டுக் களவாணி” “நான் அழுத்தம் இல்லை சாரு .எனக்கு உன் மேல் இருக்கும் அன்பு தான் ரொம்ப டீப்” சாருவின் அம்மா வீணாவின் படத்தின் மேல் இருந்த ரோஜா கீழே விழுந்தது. தாங்கள் பெற்றெடுக்காத சிறப்புக் குழந்தை பிரசாத்துக்கு தாயான சாருவையும் தந்தையான சித்துவையும் வானிலிருந்து வீணா வாழ்த்தினாள் .

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in