logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

Simona M

சிறுகதை வரிசை எண் # 115


கோனாரு தாத்தா ஞாயிற்றுக் கிழமைகளில் கிரீச் என்று கதவு திறக்கும் சத்தம் வரும் போதெல்லாம், " எங்கப்பனுக்கு எப்படித்தான் மூக்கு வேர்க்குமோ தெர்ல, சரியா கரிக்கொழம்பு கொதிச்சதுமே வந்து நின்னுருவாரு"ன்னு சொன்னபடியே மகள் போய் கதவ திறக்குறதுக்கு முன்னமே, பேத்திகள்ல ஒண்ணு யாரு வந்திருக்கான்னு அசரீரி வந்து சொன்னது கணக்கட்டா, தாத்தான்னு ஓடிப்போய் கதவ திறந்து கையபிடிச்சு கூட்டியாருங்க. கோனாரு தாத்தா சின்ன வயசுலையே பொண்டாட்டிய சாவ கொடுத்தவரு. இருந்தது கழிஞ்சதுன்னு ஏழெட்டு பிள்ளைகள பெத்த மவராசி பாதி ஆயுசுக்கு கூட வாழாம பொட்டுன்னு போயி சேந்துட்டா. கடைசியில மவ மூணு மகன் ரெண்டுன்னு தாத்தாக்காக விட்டுட்டுப் போய்ட்டா. றெக்க முளச்சா அது அதுக தானா பறந்து போயிருங்கன்ற மாதிரி எல்லாம் அது அது வாழ்க்கைய தேடிக்கிச்சுக. கடைசியா மல்லி மட்டுந்தான் கோனாரு தாத்தாவ பார்த்துக்கிட்டு கூட இருந்தா. "இந்தாங்க ஆளுக்கு அஞ்சு ரூபா, எதாவது வாங்கித் திண்ணுக்கோங்க" ன்னு பையில இருந்து யாருக்கு எது பிடிக்கும்ன்னு பார்த்து பார்த்து வாங்கியாந்தத எடுத்துக் கொடுப்பாரு. காராச்சேவு, பேரிக்கா, கொய்யாக்கா, சீனிச்சேவுன்னு கொண்டுவந்த மஞ்சப்பைய காலிபண்ணி மடிச்சு பத்திரமா வச்சுக்குவாரு. மக வீட்டுக்காரர, என்னங்க மருமவனேன்ற பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டாரு, மருமகனும் உள்ள ஆயிரம் இருந்தாலும் வாங்க போங்கன்ற பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. தின்னுறது கரிக்கொழம்பா இருந்தாலும் " மாதா ஊட்டாத சோற மாம்பழம் ஊட்டும்மா"ன்னு சொல்லி ரெண்டு மாம்பழத் துண்ட கேட்டு வாங்கிக்குவாரு. "மாம்பழம் இல்லாம ஐயாவுக்கு சோறு எறங்காது" ன்னு, செல்லமா திட்டிக்கிட்டே தான் வாயில ஒரு கீத்த வச்சுக்கிட்டே கோனாருக்கு ரெண்டு கீத்த வைப்பா மக. தேனூற கொழம்பு இருந்தாலும் அது நொட்ட இது நொட்டன்னு எதையாவது குறை சொல்லலேன்னா கோனாருக்கு சாப்பிட்ட சோறு செரிக்காது. இருக்குற நாலு முடியும் வழுக்கி விழுகுற அளவுக்கு செழும்ப எண்ணெய் தேச்சுக்கணும், பெருவிரல்ல பெருசா வளர்த்து வச்சிருக்க நகத்துல பேத்திககிட்ட நகப்பூச்சு பூசச்சொல்லி பூசிக்கணும், பட்டாபட்டிய பத்து தடவ அலசி ஊர்வசி விளம்பரத்துக்கு வர்ற மாதிரி உடுத்திக்கணும், மடிச்சுதான் போடுவாருன்னாலும், தீவாளி தவறாம மருமகன்ட முழுக்கை சட்ட கேட்டு வாங்கி வச்சுக்குவாரு. கடைசியா செத்தப்ப கூட மருமவன் வாங்கிக்குடுத்த சட்டையில அவரு குடுத்த நூறு ரூபாயோடதான் செத்தாரு. "இப்படி திண்ணா என்னைக்கு விடியிறது, அரைக்காப்படி கஞ்சி எந்த வயித்துக்குப் பத்தும்?" ன்னு சொல்லி சொல்லி, பேத்திய கிண்டலா அந்த கிழம் வழியும் சிரிப்போட "அரைக்காப்படி கஞ்சி" ன்னு பட்டப்பேரு வச்சுத்தான் கூப்பிடுவாரு. ஒரு விபத்துல மல்லி செத்துப்போக மூத்தமவன் பொஞ்சாதிகிட்ட சோத்துக்காக நிக்கவேண்டிய சூழல். பாவம் காலையில டீத்தண்ணிய கேட்டு கேட்டு கிடைக்காதுன்ற பட்சத்துல வடிதண்ணிய குடிச்சுப்புட்டு கம்மா பக்கம் போறவரு, மல்லி இல்லாம சோத்துக்கு ரொம்பவே அல்லோல் பட்டாரு. ஊத்துறது வீசிப்போன பழைய கஞ்சியா இருந்தாலும் மூத்த மருமவ மானங்கெட பேசுவா. எத்தன நாளுதான் அத சகிச்சுக்கிட்டு சாப்பிடுறதுன்னு, தனியாவே சமைக்க ஆரம்பிச்சாரு... தட்டாம்பயறு கொழம்புன்னா அப்புடி ஒரு ருசியோட வைப்பாரு.. சட்டி சோறு திண்ணலாம். கொஞ்சம் காலம் பெரிய மகக்கிட்ட, மீதி காலம் சின்ன மகக்கிட்ட, எடையில இளைய மருமகக்கிட்டன்னு, கோனாரு வாழ்க்க நாறு நாறா கிழிஞ்சு தொங்குச்சு. யாருகிட்டையும் ரொம்ப நாள் தங்கிட கூடாதுன்னு உறுதியா இருந்தாரு. ஆனா மூத்தரம் பேயக்கூட எந்திரிக்க முடியாத சூழல்ல, என்ன பண்ணறதுன்னு தெரியாம மூத்த மருமவகிட்ட கஞ்சி வாங்கி குடிக்கவேண்டிய கட்டாயம். மூத்தரம் பேஞ்சு காலெல்லாம் புண்ணாகி வெந்துபோச்சு. அப்பதான் பொண்டாட்டியவே நெனச்சுப் பார்த்தாரு கோனாரு. சாகப்போற நாள்ல சங்கரா சங்கரான்னு சொல்லி என்ன பிரயோசனம். அன்னைக்கு ஒரு நாளு, என்னைக்கும் படியேறாத மூத்த மருமவளும், மவனும் வீடலசிவிட்டு, கோவிந்த குளிப்பாட்டி சட்ட வேட்டியெல்லாம் மாத்திவிட்டாக. கோனாருக்கு ரொம்ப சந்தோசம். "கடைசி காலத்துலையாவது மகன் பாக்குறானே"ன்னு... ஊத்திக் கொடுத்த டீத்தண்ணி கசந்துபோய்க் கெடக்க, எல்லாம் புரிஞ்சு எதுவும் வெளிய சொல்லாம, கடக் கடக் ன்னு மொத்த டீயையும் குடிச்சுப்புட்டு சாஞ்சதா, பக்கத்துவீட்டு பாலு தாத்தா சொன்னாரு.. கொண்டாந்து குடுத்து பார்த்திட்டு போறதுக்காக கட்டி வச்சிருந்த சோத்தோட வந்து இறங்குனா ரெண்டாவது மக, "ஒரு வாரத்துக்கு முன்னாடி எப்படியும் பொலைக்க வச்சுடலாம்ன்னு பீ அள்ளி போட்டு பார்த்துக்கிட்டேன், இப்படி போயிட்டியேப்பான்னு கதறுனா மூத்த மக, காலைல சாப்பிடல ரொம்ப பசிக்குதுன்னு பிரெட் ஆம்பிலேட் போட்டுச் சாப்பிட்டாக பட்டணத்து மருமவளும் மவனும், வர்ற சேலைகள கணக்கா பார்த்து வாங்கிக்கிட்டு இருந்தா மூத்த மருமவ. யாரும் பார்க்க முடியாம வெசத்த வச்சு எலிய கொல்லுறாப்புல கொண்டவனுக, " எங்கப்பன் எந்த குறையும் இல்லாம போய்ச் சேரணும்"ன்னு கரகாட்டம் கூத்துன்னு வைக்க, கண்ணாடி பெட்டிக்குள்ள கோனாரு அசையாம கிடந்தாரு.. என்னதான் இருந்தாலும் கோனாரு பொல்லாத ஆளு, முப்பதாநாள் காரியத்துல கொண்டுவந்த சோத்த எடுத்துச் சாப்பிட முடியாம ஒருமணி நேரம் நாயா பேயா எல்லாரையும் அலைய விட்டுட்டாரு. இன்னவர கிரீச் ன்னு சத்தம் கேக்க கதவ தொறக்குற கோனாரு யாரு கனவுலையும் வரவே இல்ல... - சிமோனாமகாவிஷ்ணு

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.