B. Srinivasan
சிறுகதை வரிசை எண்
# 114
ரன் அவுட்
'சரேல்' என்று ஒரே ஓட்டமாக வீட்டுக்குள் ஓடினாள் மாலு. 'அறுவை அங்கிள்' வந்து கொண்டிருந்தை மற்றவர்கள் பார்க்கவில்லை. தெருக்கோடி விநாயகர் கோவில் அர்ச்சகரின் குரலைப் போல ,ரேடியோவில் கிரிக்கெட் கமெண்ட்ரி ஏற்ற இறக்கமே இல்லாமல் 'மொணமொண'வென்று கேட்டுக் கொண்டிருந்தது.
"என்னடா அம்பீ ஸ்கோர்?"- மூக்குப் பொடியின் நெடியுடன் எழுந்த குரலைக் கேட்டுத் திரும்பினான் பாலு. அங்கிளைக் கண்டதும் குஷி பிறந்து விட்டது..
"என்ன கேட்டீங்க?"...
"ஸ்கோர் என்னடா வாலு?".
"ஆல் அவுட் ஃபார் நோலாஸ்!".
"ஆல் அவுட்....?" சற்று யோசித்தார்... "எலே, கிண்டலா?".. சுர்ரென்று கோபம் வந்தது... நெருங்கி வந்து காதைத் திருகினார்... " ரெட்டை வால்!.. அபிஷ்டு!"... குரங்கைப்போல் முகத்தை வைத்துக்கொண்டு ' அழகு ' காட்டினான் பாலு...
" அப்பா- எங்கேடா?"..
ஷேவ் செய்யப்பட்டு ' மழுமழு' வென்று இருந்த தாடையில் எதையோ கண்டுவிட்டான்; 'கெக்கே, கெக்கே' யென்று சிரித்தான்..."எங்கப்பாவா?"
"இல்லே, எங்கப்பா!.. கேள்வியைப்பாரு- இந்தக் காலத்துப் பசங்களுக்கே- ----போறாது!".... தசரத ராமனின் மூத்த பிள்ளை கார்த்திக் சாது.. தம்பியின் மீது மணிஐயர் கொண்டிருந்த கருத்தை அறிவான். எனவே மரியாதையாக அவரை நெருங்கி, "அப்பா கிரிக்கெட் மேட்ச்" என்று சொன்னான். "அம்மா லேடீஸ் க்ளப்!"- கீச்சுக் குரலில் கத்தினான் பாலு. 'அறுவை அங்கிளி'ன் முகம் கோணியது.. "நேத்திக்குப் பார்த்த போது கூட மேட்சுக்கு போகப் போறதா என்கிட்ட சொல்லல்லியே உங்க அப்பா?".. பாலு இருவருக்கும் குறுக்கே வந்து நின்றான்.. "கண்ணு ஆந்தை மாதிரி இருக்குமே, அந்த ஃப்ரண்டு வந்து கூட்டிக்கிட்டுப் போயிட்டார்.. அதனாலே பெரிய சண்டை!"... ஆவலுடன், "என்ன, என்ன!" என்று கிளறி விட்டார்.. "அப்பா வெர்சஸ் அம்மா- ஒரே லடாய்; ஜாலி!"... சமையலறையில் ஒளிந்து கொண்டிருந்த மாலுவுக்கு அவனைக் கோட்டை அறையாக அறைய வேண்டும் போலிருந்தது; சிறுபயலுக்குச் சரியாக வம்புப் பேச்சில் இறங்கிய அவர் மீது எரிச்சலாக வந்தது. தன்னைக் கண்டால் வழிவார்... 'வருவது வரட்டும்' என்று வெளியே வந்தாள்.." பாலு, கமெண்ட்ரி கேட்கல்லை?"... "வாம்மா மாலு, உள்ளேதான் இருந்தியா? இன்னைக்குக் காலேஜ் போகலே?"... "ஸண்டேல்லாம் காலேஜ் கிடையாது மாமா!"- கொஞ்சியபடி நெருங்கி வந்தான் பாலு... "நீங்க படிச்ச போது ஸண்டே காலேஜ் இருந்துதா மாமா?".... இப்போது அவரது கழுகுப் பார்வை மேஜை மீது இருந்த புத்தகத்தின் மேல் விழுந்துவிட்டது!
அதைக் கையில் எடுத்தார்--" ஓ, பிரைட் கிரிக்கெட்! நல்ல பொஸ்தகமாச்சேடா இது!"... பக்கங்களை ' விறுக் விறுக்'கென்று திருப்பினார்... மாலு பரபரப்புடன் "அங்கிள், அது.. அது" என்று திணறினாள்... அது அவர் காதில் விழுந்தால்தானே?.. எடுத்துக் கொண்டு போயே போய்விட்டார் அந்த மனிதர்!.... ஒவ்வொரு முறையும் அந்த வீட்டிலிருந்து ஏதாவது ஒரு பொருளை எடுத்துச் செல்வது அவரது பழக்கம் தான்-என்றாலும் அது லைப்ரரி புக் ஆயிற்றே!.... தசரதராமன் கோபக்காரர்; ஆனால் தற்பெருமை அதிகம்!.. யார் 'ஜால்ரா' போட்டாலும் வலையில் விழுந்து விடுவார்! இந்த வீக் பாயிண்ட்டைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்தார், மணி! ... அம்மா நல்லவள் தான்; ஆனால் சமயத்தில் அனைவரையும் பாடாய்ப் படுத்தி விடுவாள்!------ அன்றாடம் தான் சந்தித்தே ஆக வேண்டிய இம்மூவரையும் சமாளிக்கப்போய், தலைவலியே வந்துவிடும், அந்த டீன் ஏஜ் பெண்ணுக்கு!.. அந்தப் புஸ்தகத்தை அவர் எடுத்துச் சென்றதற்கும் அவளுக்குத்தான் 'டோஸ்' கிடைத்தது... ********
"ஸ்வீட் பிரமாதம்! லேடிஸ் கிளப்ல செஞ்சதாக்கும்?"---- அங்கிள் வாஷ்பேஸினை நோக்கி நடந்தார், கையலம்ப.. ஒரே பூரிப்பு அம்மாவுக்கு- "இல்லை, இல்லை.. நான் வீட்டிலே செஞ்சது.. அது மட்டுமில்லே, 'வீட்'லேயே அதாவது கோதுமையிலேயே செஞ்சது!"... " ஆஹா...ஒண்டர்ஃபுல் சிலேடை!": பெருமை தாங்கவில்லை அம்புஜத்திற்கு.. குரலை உயர்த்தி, "அன்னைக்கு சாப்பிட்ட 'ஒன்- டூ- த்ரீ-' தான் நாங்க மூணு பேர் சேர்ந்து பண்ணினது;இது நானே கண்டுபிடிச்சது! இன்னும் பேரு வெக்கலை".. "வெச்சுட்டா போச்சு.. பேருக்கென்ன?"---
மணி ஐயரின் கைகள், டேபிள் மீது இருந்த பொருள்களைக் குடைய ஆரம்பித்தன.' பகீர்' என்றது தசரத ராமனுக்கு... "அந்த கிரிக்கெட் புக்கைக் கொஞ்சம் எக்ஸ்டெண்ட் பண்ணிக்கும் ஓய்.. இன்னும் படிச்சு முடிக்கல்லை" - அலட்சியமாகச் சொல்லியபடி திரும்பிய 'அங்கிள்' திடுக்கிட்டு அலறிவிட்டார்: "அம்பீ... என்னடா இது?".... "பேனாக் கத்தி.." பிடியில் கட்டியிருந்த நூலை நிதானமாக அவிழ்த்துக் கொண்டே இன்னும் அருகில் வந்தான் பாலு.. "நேத்திக்கு ஃப்ரண்டு ஒரு கதை சொன்னான்: 'ராஜாவாகணும்'னு ஆசைப்படறான் ஒருத்தன். அவனுக்குப் புது டிரஸ் எல்லாம் போட்டு, கிரீடத்தையும் வெச்சுச் சிம்மாசனத்துலே உக்காரச் சொல்றா.. கையிலே தட்டு நிறைய ஸ்வீட்டையும் குடுத்துடறா.. ஜாலியா சாப்பிடலாம்னு கொஞ்சம் விண்டு வாயிலே போட்டுக்கத் தலையைத் தூக்கறான்... தூக்கி வாரிப் போடறது: தலைக்கு மேலே உத்தரத்துலே கத்தி ஒண்ணு தொங்கிண்டிருக்கு! எப்ப வேணும்னாலும் அறுந்து தலை மேலே விழுந்துடும்! நடுங்கிப் போயிடறான்.. கையிலே ஸ்வீட், தலைக்கு மேலே கத்தி!---- 'ராஜாவானா ரொம்ப கஷ்டப்படணும்'னு தெரிஞ்சுக்கறான்--- இதுதான் மாரல்!" என்று முடித்தான் பாலு... "அது சரி, இது என்ன?"--- மணி ஐயரின் விரல், கத்தியைச் சுட்டிக் காட்டியது; குரல் நடுங்கியது.. "பேனாக் கத்தி!.. நீங்க ஸ்வீட் சாப்பிட ஒக்காரறதுக்கு முன்னாடியே மேலே இருக்கற கொக்கியிலே மாட்டித் தொங்க விட்டிருந்தேன்.. நீங்களானா ஜாலியா அந்த ஸ்வீட்டை மொக்கிண்டிருந்தீங்க"...
"ஒரு தடவை கூடத் தலையைத் தூக்கி மேல பார்க்கவே இல்லை!... எனக்குப் போர் அடிக்க ஆரம்பிச்சுடிச்சி..... துணி உலர்த்தற கழியாலே ஓங்கி ஒரு தட்டுத் தட்டி, கத்தியைக் கீழே தள்ளினேன்!"... அரண்டு போய் விட்டிருந்தார் அங்கிள்!*******
அந்தக் 'கத்தி அனுபவ'த்திற்குப் பிறகு கூட அடிக்கடி வந்து 'கடி'த்துக் கொண்டிருந்த மனிதர், திடீரென்று வருவதை நிறுத்திவிட்டார்!-- இது பாலுவின் பெற்றோருக்கு வியப்பாக இருந்தது........... ஒரு மாலைப் பொழுது.. வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார் தசரதராமன்.. எதிரே மணி ஐயர்!...." என்ன சார், ஊர்லே தான் இருக்கீங்களா?"... ???????????????என்ன இது? இந்த அலப்புவாயர் பேசாமல் அசடு வழியப் பார்க்கிறாரே யென்று ஆச்சரியத்துடன் நோக்கினார் தசரதராமன்.... "எங்க ஏரியாவுலே.... இலக்கிய... மன்றம்... நடக்குது.." தயங்கி தயங்கிப் பேசினார் மணி ஐயர்...... "தெரியுமே..........ரொம்ப நாளா நடக்குதே"... "நடக்கறது தான்... ஆனா.... நமக்குச் சரிப்பட்டு வராது..." "அப்ப?"......................"சும்மா.. டைம் பாஸ்.. ஒக்காந்திருப்பேன்...அவ்வளவுதான்"......"சும்மா உட்கார்றது கஷ்டமாச்சே?"-- சிரித்துக் கொண்டே சொன்னார் தசரதராமன். "பழகிப் போச்சு....சரி ........நான் வரேன்"....... அவர் விரைந்து செல்வதை, புருவங்களை உயர்த்தியபடி பார்த்துக் கொண்டிருந்தார் பாலுவின் அப்பா**************************
நடந்தது இதுதான்: "உன்னை ஒருவர் 'அறு'த்தால் அவரை 'அறுஅறு' வென்று பதிலுக்கு அறுத்துவிடு- விடுதலை கிடைக்கும் !"-ஓர் அனுபவசாலியின் 'டிப்ஸை'ப் படித்ததிலிருந்து நம்பிக்கை பிறந்தது மாலுவுக்கு.... 'அறுவை அங்கிள்' விஷயத்தில் இந்த உத்தி பலிக்குமா?.. துணிந்து காரியத்தில் இறங்கினாள். பாலுவுடன் அவர் வீட்டுக்குச் சென்றாள்.. அவர் வீட்டில் இல்லை. "வீட்ல அவரைப் பாக்கறதே அபூர்வம்"என்று மிஸஸ் மணி கூறிவிட்டாள். நம்பிக்கை தளர்ந்தது...... மறுநாளே அது தளிர்த்தது- திட்டத்தை மாற்றினாள். 'ஆன்டி'யை ஆராய்ந்தாள்.. மணி ஐயருக்கு அந்த வீட்டில் ஏன் இருப்புக் கொள்ளவில்லை என்பது விளங்கிவிட்டது. 'ஆன்டி'யின் பார்வையில் இருந்த கண்டிப்பு, பாலுவையே அல்லவா கதி கலங்க வைத்துவிட்டது!... குறிப்பிட்ட நேரத்திற்கு ஆஜராகிக் கொண்டிருந்த பள்ளி மாணவர்களுக்கு அவள் டியூஷன் எடுக்கும் முறையைப் பார்த்தான்; உதறல் எடுத்தது; தன்னை இங்கே மடக்கிப் போடத்தான் முயற்சி நடக்கிறது; விஷமம் முற்றினால், இந்தச் சிறைச்சாலையில் தள்ளி விடுவார்கள்.. இது நிச்சயம்!.. வாலைச்சுருட்டிக்கொண்டு அண்ணன் கார்த்திக்கைப் போல் சாதுவாகிவிட்டான்!..... இன்னொரு மாலைப் பொழுது.. பெற்றோர் வீட்டில் இல்லை. பாலு விளையாடப் போயிருந்தான். சில மாதங்கள் 'அஞ்ஞாத வாச'த்தில் இருந்த மணி ஐயர் உள்ளே வந்தார். கண்கள் கலவரத்துடன் மேலே உத்தரத்தைப் பார்த்தன. தயக்கத்துடன் அமர்ந்தார்...."அங்கிள், ஒரு ரெக்வெஸ்ட்..." என்று ஆரம்பித்தாள் மாலு...???????? "பாலு வர வர நல்லாவே படிக்கிறதில்லே.. கணக்கிலே ரொம்ப வீக்.. தினம் ஈவினிங் டியூஷன் எடுக்க முடியுமா?"
"ஒங்க மெயின் ஸப்ஜெக்ட் மேத்ஸ்'னு அப்பா சொல்லி யிருக்கார்; ஆனா ஒங்களைக் கேக்கத் தயக்கம்.. அதனால தான் நான் ரெக்வெஸ்ட் பண்றேன்..." 'அங்கிள்' நாற்காலியில் நெளிய ஆரம்பித்தார்... "பாலுவுக்கு உங்களை ரொம்பப் புடிச்சிருக்கு! உங்களை விட வேற யாராலேயும் நல்லா சொல்லித் தர முடியாது!"... கிட்டத்தட்ட ஓட்டம் பிடிக்கும் நிலை!.. ' ஐயோ, பாலுவுக்கா? அதுவும் கணக்கு! பையன்களைப் பரிகாசம் பண்ணிப் பொழுது போக்கலாம்; பெரியவர்களைச் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கலாம்...ஆனால் --பாடம் சொல்லிக் கொடுப்பது---- லேசான காரியமா? யப்பா! வீட்டில் சதா சர்வ காலமும் டியூஷன் நடப்பது போதாதா?... ஐயோ, எப்பேர்ப்பட்ட தலைவலி அது! அந்தச் சூழ்நிலையிலேருந்தும் முசுட்டு மனைவியிடமிருந்தும் ஒரு சேரத் தப்பித்துக் கொள்ளத் தானே வெளியே திரியவேண்டியிருக்கிறது? கடவுளே!"... .... மாலுவிடம் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிவிட்டு ஓடியே போய்விட்டார். 'இலக்கிய மன்ற'த்தில் ஒளிந்து கொள்ள முடிவெடுத்ததே அதற்குப் பிறகுதான்!...... "மிஸ்டர் மணியைச் சமாளிக்க, மிஸஸ் மணியை ஆராய்ந்தால் போதும்" என்று மிஸ் மாலுவுக்கு ஐடியா கொடுத்தவள், உளவியலில் அவளுக்கு சீனியர் மிஸ் ஜனனி... அந்த ஆருயிர்த் தோழி வீட்டில் பல்லாங்குழி ஆடும் _பரம_ _சாது_!***********
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்