குமரி உத்ரா
சிறுகதை வரிசை எண்
# 113
மஞ்சாடி முத்துகள்..
"கெட்டி மேளம்... கெட்டி மேளம் " நாதஸ்வரமும் மேளமும் ஓங்கி ஒலிக்க மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார் மாப்பிள்ளை.
மணவறை சுற்றும் படலம் ஆரம்பமாயிற்று..
தொடர்ந்து சடங்குகள் நடக்க ஒவ்வொருவராக பந்திக்கு முந்தினார்கள். "வான் மதி சாப்பிட போலாமா..,?"
"ம்ம்.. இன்னும் கொஞ்ச நேரம் கழித்து போலாம்"
மாப்பிள்ளை பெண்ணின் தனயன் கொடுத்த பால் பழத்தை சாப்பிட்டுவிட்டு சம்பிரதாயத்துக்கு கொடுத்த வெற்றிலையை வாயில் போட்டு மென்று துப்ப... மாப்பிள்ளையும் பெண்ணும் பெரியோர்களிடம் ஆசி வாங்க எழுந்தார்கள்.
"ரொம்ப பசிக்குதுடி..., வா போலாம் "பந்தி நடக்கும் இடம் நோக்கி தேவகி நடக்க வான்மதி தொடர்ந்தாள்.
அது ஒரு சுமாரான மண்டபம் என்பதால் பந்திக்கு இடம் பிடிக்க எல்லோரும் சென்று கொண்டிருந்தனர்.
அந்த நேரத்திலும் முதல் பந்தி நடந்து கொண்டிருந்தது .
சிறிது நேரத்தில் சாப்பிட்டவர்கள் எழும்ப ஆரம்பித்தனர்.
தேவகியோடு வான்மதியும் எப்படியோ இடம் பிடித்து உட்கார்ந்து விட்டாள்.
சாப்பாட்டு இலைகள் சோறும் குழம்பும் வளிந்த பாயாசமுமாக இலைகளில் தெரிந்தது.
சாப்பிட்ட இலைகளை எடுத்து தாங்கள் கொண்டு வந்த தகர டப்பாவில் போட்டபடியே இருவர் வந்து கொண்டிருந்தார்கள்.
அவர்களை கவனித்த வான்மதி உறைந்து போனாள்.
ஆம்..., அவள்..., அவள் தான்.., உன்னிப்பாக பார்த்த போது
அவளும் இவளை முகத்துக்கு முகம் நேரே பார்த்ததும் பட படப்பாய் ஒரு தடுமாற்றத்தோடு இலைகளை எடுத்தபடி நகர்ந்தாள்.
அடுத்து வந்த ஒருவர் பழைய துணியை வைத்து மேஜைகளை துடைக்க புது இலைகள் பரிமாறப்பட்டது.
வான்மதி முன் புதிதாய் போடப்பட்ட இலையைக் கூட கவனிக்காமல் இருந்தாள்.
தூரத்தில் இலைகளை எடுப்பதும் மல்லிகா மெல்ல மறைந்து செல்வதும் ..,அவள் முகத்திலும் இவளைப் பார்த்த ஒரு அதிர்ச்சியின் கலவரம் தெரிந்ததை பார்த்து மௌனமாக இருந்தாள்.
"ஏன் ஒரு மாதிரி இருக்குறே...?
திடீர்னு முகம் ஒரு மாதிரியா ஆயிடுச்சு என்ன ஆச்சு"..?
தேவகி கேட்டாள்.
"நான் மல்லிகாவைத் தானே கண்டேன்.., ஆம் அது மல்லிகா தான் அந்த கண்ணின் கலவரம் அவளை எனக்கு காட்டி கொடுத்து விட்டது.
"ம்ம்...ஒண்ணுமில்லே...லேசா தலைவலி"...சமாளித்தாள்.
ஏழு வகை கூட்டும் சாதமும் குழம்பும் இலையின் மேல் இருந்தது. அவசரமாக எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள் தேவகி .
வான்மதிக்கு சாப்பிட முடியவில்லை .சாப்பிட தோன்றாமல் சோற்றில் கைகளை அளைந்தாள்.
சாப்பாடு இறங்கவில்லை..மல்லிகா தான் கண்முன்னே நிழலாய் தெரிந்தாள் அந்த அச்சப்பட்ட கண்களின் கலவரம் என்னவோ செய்தது... பார்வையை விரட்டினாள் பந்தி நடக்கும் இடம் வரை..காணவில்லை
வேறு பெண்கள் வேலை செய்தபடி இருந்தார்கள் .
மொய் எழுதிவிட்டு
ஆட்டோவில் ஏறியவளின் மனக்கண் முன் அந்த காட்சிகள் ஓடியது.
தேனம்மை ஒரு உண்டியல் போல..., குலுக்கையைப் போல.., குள்ளமாக சின்ன உருவத்தோடு இருந்தாள். இரண்டு மூக்கிலும் மூக்குத்தி காதில் கல் வைத்த கம்மல் கழுத்தில் ஒரு சரடு தன் கட்டை கால்களை வைத்தபடி நடந்து வந்தாள்.
கூடவே அவள் பேத்தி மல்லிகா அவளை ஒட்டிக்கொண்டு அச்சப்பட்ட கண்களோடு நடந்து வந்தாள். "எம்மோ கொஞ்சம் நெல்லு தாங்கம்மோ".
"வீட்டுல கோதம்பு சோறு..புள்ளய ஒண்ணும் சாப்பிடல.."
" இந்த சாவி நெல்ல பொடச்சிட்டு கொஞ்சம் நெல்லு தாரேன் வாங்கிட்டு போ.."
வான்மதி அம்மா தனலட்சுமி சொன்னாள்.
தேனம்மை குறுங்கட்டியை எடுத்துப் போட்டு முறத்தை வாங்கி புடைக்க ஆரம்பித்தாள்.
முறத்தால் புடைத்த நெல்லை தட்டி வைத்துவிட்டு சாவி நெல்லை பலாமரத்து மேட்டில் தட்டி விட்டு நடந்தாள்.
பத்து மணி வெயில் சுருக்கம் மிகுந்த அவள் முகத்தில் வேர்வையை பெருக்கி விட்டிருந்தது.
"சாப்பிடுறியா...?"
"ஒண்ணும் வேண்டாமோ.. நெல்லு மட்டும் தாங்கம்மோ..,"
ஒரு பக்கம் நெல்லையும் கொஞ்சம்
அரிசி குருணையும் பழைய ஈக்காம்பட்டியில் வைத்துக் கொடுத்தாள் தனலட்சுமி.
அதை வாங்கி இடுப்பில் வைத்துக் கொண்டு பேத்தி மல்லிகாவையும் கையில் பிடித்தபடி நடந்து போனாள் தேனம்மை.
தேனம்மையின் ஒரே மகன் சிங்காரம் அவனுடைய மகள் தான் மல்லிகாவும் வான்மதியின் கூட படிக்கும் சந்திரனும்..,
அவன் தம்பி சரவணனும்....
வான்மதியின் வகுப்பில் தான் சந்திரனும் படித்தான். திடீர் திடீரென சந்திரன் பள்ளிக்கு வராமல் இருந்து விடுவான். ஓரளவு நன்றாகத் தான் படிப்பான் அவன் அடிக்கடி வராததால் வாத்தியார் திட்டிக்கொண்டே இருப்பார் .
ஒரு நாள் மல்லிகாவை கூப்பிட்டு விட்டார்."உங்க அண்ணன் எங்க புள்ள..? பள்ளிக்கூடத்திற்கு வராம இருக்கான்.
மல்லிகா பயத்தோடு நின்றாள்.
தலையை சொறிந்துக் கொண்டு...
"எங்கண்ணன் மேல ஊருக்கு சிங்கி அடிக்க போயிருக்கான்."
"சிங்கியா என்னட்டி ...,"
"ஆமா மேலூருல ஒரு கல்யாணம் . வேலாயுதம் மாமா மேளத்துக்கு போனாரு அவர் கூட சிங்கி அடிக்க போயிருக்கான்"
வாத்தியார் உட்பட எல்லோரும் சேர்ந்து சிரித்தார்கள். அடுத்த நாளிலிருந்து சந்திரன் பள்ளிக்கு வந்தாலே சிங்கி அடி சந்திரன்..., சிங்கி.. சிங்கி்.. என கிண்டல் செய்தார்கள்.
சந்திரன் தலையை குனிந்து கொண்டு கோபத்தோடு மல்லிகாவை முறைத்தான்.
கல்யாண வீடுகளுக்கு போகும்போது அதன் பிறகு வான்மதியும் பார்த்திருக்கிறாள். அந்த நேரங்களில் சந்திரன் நாயனக்காரர்களின் பின்னே மறைந்து நின்று சிங்கி அடிப்பான்.
சந்திரன் ஏழை வீட்டு மாணவன் என்றாலும் அவன் முகத்தில் ஒரு தேஜஸ் இருக்கும். அதே போல் மல்லிகாவிற்கும் அவள் தம்பிக்கும் இருக்கும்.
அவள் தாய் விசாலத்தில் அந்த சிரிப்பும் , கன்னக் குழி விழுந்த கன்னமும் தான் அந்த முக லட்சணம் வர காரணம் என வான்மதி நினைத்துக் கொண்டாள்.
அவள் முகம் அவ்வளவு கலையாக இருக்கும்.
அன்று தேனம்மை நெல் புடைத்து கொண்டிருந்தாள் .பக்கத்தில் மல்லிகா நெல்லை அளைந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
தனலெக்ஷ்மி...வான்மதிக்கு எண்ணெய் தேய்த்து கொண்டிருந்தவள் கத்த ஆரம்பித்தாள். "ஒரு காதுல கிடந்த ஒன்,டூ,திரீ கம்மலை காணால்ல....
முக்காபவுனு நகை...., எங்க கொண்டு போட்டாளோ..?" பரபரப்பாய் தேட ஆரம்பித்தாள்.
நெல் புடைக்க வந்த தேனம்மையும், மல்லிகாவும் நெல் குவியலுக்குள் கைகளால் அளைந்து தேட ஆரம்பித்தார்கள்.
வண்டிக்காரரும், மற்றவர்களும் தேட... வீடே அல்லோகல்லப் பட்டது..
அப்போது நெல்லுக்குள் கிடந்த கம்மலை மல்லிகா எடுத்து தேனம்மையிடம் கொடுத்தாள்."எம்மோ..கம்மல் கிடைச்சிட்டுமோ... எடுத்து கொடுக்கும் போது...மல்லிகாவின் முகத்தில் அப்படி ஒரு வெளிச்சம்..
இவளை விட மல்லிகாவும் ,தேனம்மையும் தான் அதிகமாக சந்தோசப் பட்டார்கள்..
தன லெக்ஷ்மியும் ...நெல்லை அளக்கும் போது ஒரு படி கூட போட்டுக் கொடுத்தாள்.
"வான்மதி முடி வெட்டணும். முகத்து முடி எடுக்கணும் சிங்காரத்த வரச் சொல்லு"..., அப்பா சொன்னதும் மல்லிகா வீட்டுக்கு ஓடினாள் வான்மதி.
தேனம்மை மல்லிகாவுக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தாள் மல்லிகாவின் தாய் விசாலம்
"என்னம்மோ...? என்ன விசயம்மோ..." என்றாள்.
"அப்பா சிங்காரம் அண்ணன வரச் சொன்னாங்க."
"அவரு ஊரணிக்கு குளிக்க போயிருக்காரு..ஏட்டி மல்லிகா அப்பாவ வரச் சொல்லு.."
மல்லிகா பேன் பார்த்த தலையை சொறிந்துக் கொண்டே சிங்காரத்தை தேடி போனாள்
முதுகை வளைத்து பிளாஸ்டிக் சேரை கொண்டு போட்டாள் விசாலம்.
"அம்மோ கொஞ்சம் உக்காந்துட்டு
போங்கம்மோ"
"அம்மா தேடுவாங்க... நான் வாரேன்"
அப்படி ஒருநாள் சிங்காரத்தை கூப்பிட போகும்போது முற்றத்தில் கிடுவு போட்டு அதிலே தேனம்மை, விசாலம்
மல்லிகா சந்திரன், சுந்தரம் எல்லோரும் உளுந்தங் கஞ்சியும், காணத் துவையலையும் குடித்து கொண்டிருந்தார்கள்.
வான்மதியை பார்த்ததும் "
"நிறைய தேங்காய் போட்டு கஞ்சி இருக்கு குடிங்கம்மோ"
அவர்கள் குடிக்கும் கஞ்சியை பார்த்ததும் கருப்பான துவையலை எடுத்து சாப்பிடுவதும் புதிதாக இருந்தது.
வேண்டாம் எனத் தலையை ஆட்டினாலும் அந்த கருப்பு துவையலை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று நாக்கு பரபரத்தது.
அவள் வைத்த கண்வாங்காமல் துவையலேயே பார்க்க விசாலம் புரிந்து கொண்டாள்.
"செணம் வாரேன்.கொஞ்சம் இருங்கம்மோ"
விசாலம் பக்கத்து வாழைத் தோப்பில் நுனி வாழை இலை வெட்டி , தேக்கு மர இலையை எடுத்து வந்து தொன்னை செய்து அதில் கஞ்சியை விட்டு நுனி வாழையிலையில் துவையலையும் வைத்து "எடுத்து குடிங்கம்மோ"
என்றாள் .
வான்மதி இங்கிருந்தே அவள் வீட்டை எட்டிப்பார்த்து...,விட்டு மறைந்து நின்று...., நாக்கில் நீர் ஊற கஞ்சியையும் அதைவிட துவையலையும் ருசி பார்த்தாள்.
ஒத்தை மூக்குத்தியும் பளிங்கு போன்ற முகமும் ஏற்றிக் கட்டிய சேலையும் இரு பக்கமும் குழி விழுந்த கன்னத்தையும் கொண்டு அவள் சிரிக்கும் போது விசாலம் தூசிபடிந்த ஒரு ஓவியம் போல தெரிந்தாள்.
இன்னொரு நாள்...,வடக்கே..தோப்புக்கு போய் திரும்பி வந்து கொண்டிருந்தாள்.வான்மதி.
ஒத்தையடி பாதையில் பாம்பு ஒன்று...வழியில் படுத்து கிடந்தது. இவள் பயந்து போய் நின்று விட..
மாங்காய் பறித்து கொண்டிருந்த மல்லிகா..."என்னம்மோ.." இவள் பாம்பை காட்டிக் கொடுக்க..., "
"பாம்புச் சட்டையை உருவிட்டு படுத்து கிடக்கும்மோ..."
சாரைப் பாம்பும்மோ"... என்றவள் இவளை வேறு வழியாக அழைத்து வந்தாள்.
மல்லிகாவுக்கு அப்படியே தாய் விசாலத்தின் முகம்.
அவள் தாவணி போட்டு வீட்டில் இருந்தபோது தேனம்மை நோயில் படுத்து இறந்து விட்டதாகவும், பின் விசாலம் நோய்வாய்ப்பட்டதும் ..,
வான்மதியை விட சிறியவளான மல்லிகாவுக்கு திருமணம் முடிவு பண்ணி விட்டதாக சிங்காரம் சொன்னான்.
இரண்டு வாரங்களில்..., பதினெட்டு வயது மல்லிகாவுக்கு திருமணம் என்றான்
அம்மா அவள் வீட்டுக்கு தேங்காயும் நெல்லும் அனுப்பி வைத்தார்கள். அதன் பிறகு இப்போது தான் மல்லிகாவை பார்க்கிறாள்.
" மல்லிகாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் .எப்படியாவது நான் உதவ வேண்டும்.."
அந்த கல்யாண மண்டபத்தை தொடர்பு கொண்டு பேசினாள்.
"அதுக்கு இரண்டு குழந்தை இருக்குதும்மா. புருஷன் குடிகாரன் அவளை விட்டுட்டு வேறொருத்திக் கூட போயிட்டான். பிள்ளைகளை படிக்க வைக்க மண்டப வேலைக்கு வருது அந்த புள்ள..."
"நீங்க இந்த வாரத்துல ஒரு நாள் வாருங்க.. அந்த புள்ளயை சந்திச்சு பேசுங்க.." விவரமாக சொன்னார்
மண்டபக்காரர்.
அவர் சொன்ன மாதிரி அடுத்தவாரமே மல்லிகாவை பார்க்க போன போது அந்த மண்டபத்தில் திருமணம் ஏதும் நடக்கவில்லை.
அவள் வருவாள் என வான்மதி போய் காத்திருந்து காத்திருந்து ஐந்து மணி ஆகி வராமல் போகவே இன்னொரு நாள் பார்க்கலாம் .என வீடு திரும்பினாள்.
மறுபடியும் ஒரு நாள் மண்டபத்துக்கு போன் பேசினாள் வான்மதி.
"அது ஒரு சேரிங்க ...,அங்கு தான் அவளோட வீடு இருக்கு."
"கல்யாண மண்டபத்தை சுத்தம் பண்ணனும்னு சொல்லிவிட்டா.. மாமியாரும் மருமகளும் வருவாங்க".
"அந்த பொம்பளை தான் அவளுக்கு உதவியா இருக்கு. ஆனா என்ன செய்ய...? அந்த பொம்பளைக்கு கேன்சர் வந்து அது கஷ்டப்பட்டுட்டு இருக்கு.".
"சரி. அவங்களை ஒருநாள் என்னை பார்க்க வர சொல்லுங்க"...
" அவ மாமியார் வந்துருக்கா..நீங்க வாரீங்களாமா"..
"மல்லிகா ரொம்ப கக்ஷ்டப்படுது.. எம்மவன் அந்த புள்ளைய நட்டாத்துல விட்டுட்டான்."
"அவிய பெரிய வீட்டுக்காரங்க...சின்ன வயசில அவியள பாத்தது..இப்ப இந்த கோலத்தில அவிய கண்ணுல பட்டுட்டேன்... வர மாட்டேன்ன்னு சொல்லிப்புட்டா...வருத்தப்பட்டு பேசுது.. என் மருமவ.."
கையிலிருந்த ஒரு லட்சம் பணத்தை
அவளிடம் கொடுத்து "இதை மல்லிகா கிட்டே சேத்துடுங்க."மா
சொல்லிவிட்டு வெளியேறினாள்.
அந்த மழை நாளில்..
மகன் காரோட்டி செல்ல காரில் உட்கார்ந்து மழையை ரசித்தபடி வான்மதி..
மழைச் சாறலில் தொடங்கிய மழை
வலுக்க ஆரம்பித்தது.
குளிர் காற்று தாக்க..
"மனோ.. பக்கத்தில் எங்கும் டீக்கடை இருக்கா..பாரு.."
சிறிது நேரத்திலேயே டீக்கடை வர காரை நிறுத்தினான்.
"நீங்க உள்ளேயே இருங்க மா.."இதோ வாரேன்.
சொல்லிவிட்டு போனவன் அங்கிருந்து .... "ம்மா...வேறு எதுவும் சாப்பிடுறியா.."
"இல்லை..வேண்டாம். டீ மட்டும்..."
சொல்லிவிட்டு யதேச்சையாக நிமிர்ந்தவள் மல்லிகாவின் மாமியாரை கண்டதும் திகைத்தாள்
கடையில் நான்கு ,,ஐந்து பேர் உட்கார்ந்திருக்க..மல்லிகாவின்
மாமியார் டீ ஆற்றி கொண்டிருக்க .., உள்ளே உட்கார்ந்திருந்தவர்களுக்கு மல்லிகா உணவு பரிமாறி கொண்டிருந்தாள்.
குழி விழுந்த கன்னத்தோடு சிரிப்போடு இருவர்..வெளியே மழையில் நனைந்தபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். மல்லிகாவின் குழந்தைகளாக இருக்கும்..பையன் மட்டும் கொஞ்சம்..
மா நிறம்..தேனம்மையின் சாயலில்....
மகள் அப்படியே மல்லிகா தான்..
"அம்மா...உள்ளி வடை ரொம்ப பிரமாதம்..மா
சாப்பாட்டு மெனுவை பார்த்தியா..? பிரண்டை துவையல்.., காணத் துவையல்...அவியல்.., அவரைக்காய் கூட்டு, அப்பளம்...
ஒரு நாள் இங்கே சாப்பிட்டு பார்க்கணும்.. மா
எல்லாமே இயற்கையா இருக்கு
"சரி...மனோ காரை எடு..போகலாம்..."
"அம்மா...அங்கே பாரு... ,இந்த கடைக்கு.. உன்னோட பேரு..வான்மதி..."
நிமிர்ந்து பார்த்தாள்.
"வான்மதி சாப்பாட்டு கடை "...
முகத்தில் புன்னகை பரவ.. சாய்ந்து உட்கார்ந்தாள் வான்மதி..
வானமும் அவள் முகத்தின் புன்னகையை போல மழையை கொட்டிக் கொண்டிருந்தது...!!
குமரி உத்ரா
நாகர்கோவில்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்