ம.மீனாட்சிசுந்தரம்
சிறுகதை வரிசை எண்
# 112
எதிர்பாராதது……….
ம.மீனாட்சிசுந்தரம்
அன்றாடம் கடைப்பிடிக்கும் ஐந்துநிமிட மூச்சுப்பயிற்சியை முடித்து எழுந்து கதவைத் திறந்தவன், காதில்விழுந்த கடிகாரமணி ஓசையை எண்ணத்துவங்கினான். மணி எட்டு. இன்று சுயமதிப்பீட்டு அறிக்கையை சமர்பிக்க கடைசிநாள். அதுதான் அடுத்த ஆண்டின் சம்பள உயர்வுக்கான காரணி.
அடுத்த அரைமணியில் சங்கரனின் பைக் சத்தத்தை கேட்ட சாரதாம்மா, “தினமும் மூணு வேளையும் வெளியில சாப்பிடுறானேன்னு, உனக்கு பிடிச்ச அடை தோசைன்னு சொல்றதுக்கு வந்து கதவைத் தட்டின சத்தம்கூட கேட்டது தெரியாத தூக்கம் போல. வரவர நீ லேட்டா வர்றது சரியில்ல. உடம்பு முக்கியம். அதமனசுல வச்சு நடந்துக்கோ.” அவர்களின் ஆதங்கமும் அக்கறையும் கலந்த குரலுக்கு “சரிம்மா. ஒருமணி நேரத்துல ஆபிஸ்ல இருக்கணும். இன்னிக்கு ஏழு மணிக்கெல்லாம் வந்துருவேன் வந்து சாப்பிட்டுக்கிறேன்.”
“ஆபீஸ்ல வேலையிருந்தது. அவசரம்னு ஆஸ்பத்திரியிலருந்து போன் வந்ததுன்னு வழக்கமான பாட்டத்தான் பாடுவ.”
“இன்னிக்கு அப்படி எதுவும் நடக்காதுன்னு நம்புறேன்.”
“ராசி பலன் சொல்லுச்சா?”
பதிலுக்கு சிறு சிரிப்புடன் புறப்பட்டுப் போன அவன் கிராமத்திலிருந்து வேலை தேடி வந்த இளைஞர்களில் ஒருவனாக மூன்றாண்டுகளுக்கு முன் அவர்கள் வீட்டில் குடியேறிய ஒரு நாளில் அலுவலகம் செல்ல கீழே இறங்கியவன் “அம்மா பூரி வாசனையில பசி வயித்தக் கிள்ளுதும்மா.” அன்றிலிருந்து அவனுக்கு பிடித்த பூரி, சப்பாத்தி, அடை, ஆப்பம் செய்யும் போது கொடுப்பது சாரதாம்மாளுக்கு வழக்கமாகிப் போனது.
2
வேலைதேடும் படலத்தின் ஒருநாளில் மண்டையைப் பிளக்கும் உச்சிவெயிலில் மரங்களற்ற அந்த சாலையில் நடந்து சென்ற அவன் கண்களில் கண்ட கூட்டத்தின் நடுவில் வயதான மூதாட்டி ஒருவர் சுயநினைவற்றுக் கிடந்ததையும், அவர் அருகிலிருந்த வயதான ஒருவர் கூட்டத்தைப் பார்த்து, “யாராவது தண்ணியிருந்தா குடுங்களேன்.” கேட்ட அவரிடம் பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை கொடுத்தான். அவர்களின் முகத்தில் தண்ணீரை தெளித்தும் பலனில்லை. பின் தலையிலிருந்து ரத்தம் வழிவதைப் பார்த்தவன் “தாத்தா தலையிலருந்து ரத்தம் வழியுது. தாமதிக்கவேண்டாம். ஆஸ்பத்திரிக்கு போகலாம்.” அடுத்த நொடியில் அருகில் நின்ற ஆட்டோவில் அவர்கள் பின்சீட்டிலும், அவன் டிரைவர் அருகிலும் உட்கார “தலைசுத்தி விழுந்துட்டாங்க” கூட்டத்தில் இருந்தவர்களின் ஒருமித்த குரல் அவன் காதில் விழ ஆட்டோ புறப்பட்டது.
“யாருபெத்த புள்ளையோ, இங்க நின்ன யாருக்குமே தோணாத யோசனை அந்தப் புள்ளைக்கு தோணியிருக்கு. அந்த புள்ள மனசுக்கு அந்த அம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது.” அந்த கூட்டத்தில் நின்ற ஒரு மூதாட்டியின் நம்பிக்கைக் குரல் காற்றோடு கலந்து அவன் செவிகளுக்கு எட்டியிருக்குமா? தெரியாது.
ஆஸ்பத்திரியில் சேர்த்ததும் அவனுடன் வந்த பெரியவர் “என்னோட பேத்திய ஸ்கூல்லருந்து கூட்டிட்டு வரணும்பா. பாட்டியம்மாவ பாத்துக்கோ.” அவருடைய அவசரமும் காரணமும் புரிந்து நன்றி சொல்லியனுப்பினான்.
முதல் நாளில் மருந்தின் தாக்கமும், உடல்சோர்வும் அவர்களை உறக்கநிலையில் வைத்திருந்ததால் அவர்களின் உறவினர்கள் குறித்த விபரத்தினை அறியமுடியவில்லை. ஆனதால் அவர்களோடு இருக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு.
3
வயதுக்கேற்ற மருத்துவர்களின் சிகிச்சையும், கண்காணிப்பும் அடுத்த மூன்று நாட்களில் அவர்கள் பூரண குணமடைய, காற்றில் கலந்து வந்த அந்த மூதாட்டியின் வார்த்தைகளும், வேண்டுதலுமே காரணம் போலும்.
அமைதியான அந்த முட்டுத் தெருவின் பிள்ளையார் தரிசனத்தோடு, முதலாவது வீட்டின் முன்னால் நின்ற ஆட்டோ சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டின் கதவு திறந்தவர் பாட்டிம்மாவை பார்த்ததும் “பாட்டிம்மாவுக்கு என்னாச்சு“ என்று அவர் எழுப்பிய சத்தத்தில், அந்த தெருவே கூடிவிட்டது. கூடிநின்றவர்களின் பதற்றமான கேள்விக்கு நடந்ததை சொல்லிமுடித்தான். “தலையில அடிபட்டிருந்தா, ரத்தம் போயிருக்குமேப்பா? “ரத்தம் கிடைச்சதா?” என்ற முதியவரின் கேள்விக்கு “என்னோட ரத்தம் பொருந்தினதுனால சிரமமில்ல.” பதிலுரைத்த அவனுக்கு அத்தனை பேரும் நன்றி சொன்னார்கள்.
பாட்டிம்மா மருத்துவமனைக்கு வந்த காரணத்தை அவர்களின் உடல் நிலை கருதி அந்த நான்கு நாட்களிலும் சொல்ல வேண்டாம் என்ற மருத்துவரின் அறிவுரைப்படி தான் கேட்டும் சொல்லாததை இப்போது அவன் சொல்லக் கேட்ட பாட்டிம்மா கலங்கிய கண்களுடன் “உன்னைப் பெத்து வளர்த்தவளுக்குத்தாம்பா நன்றி சொல்லணும்.”
“சரியா சொன்னீங்க, அம்மா உயிர் பிரியிறதுக்கு முன்னாடி உங்கண்ணு பாக்க உடம்புக்கு முடியாம இருக்கிறவங்களுக்கு முடிஞ்ச உதவிய மறுக்காம செஞ்சிருப்பா. அந்த புண்ணியந்தான் உன் சந்ததிகளுக்கு சேத்துவைக்கிற சொத்துன்னு சொன்னதுதான் உங்கள காப்பாத்துச்சு பாட்டி.
அப்பா என்னோட ஆறுவயசுல இறந்துட்டாரு. அம்மாவும் ஆறுமாசத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க. அப்பாவோட பூர்வீக நிலத்துல உழைச்சும், காட்டுவேலைக்கு போயும் கல்லூரி வரைக்கும் படிக்க வச்சாங்க. அம்மா எதுக்குமே ஆசைப்பட்டதில்ல.
4
நான் அவங்களுக்கு செய்யணும்னு ஆசைப்பட்டதெல்லாம் கனவாப்போயிருச்சு. அம்மா இருந்தா இங்க வந்திருக்கமாட்டேன். ஏன்னா அந்த மண்ணும் மக்களும்தான் அவங்களுக்கு உயிரு. அந்த வார்த்தைக்காக,கூடவேயிருக்கணும்னு ஆசைப்பட்டது நிராசையாயிருச்சு. கிராமத்துல இருக்கும்போது அம்மாவ மறக்கமுடியல. பாதை மாறிடுவேனோன்ற பயம் எனக்கு மட்டுமில்ல, எம்மேல அன்பும் அக்கறையுமுள்ள உற்றாருக்கும் ஊராருக்கும் இருந்தது. அதையறிந்த அவர்கள் மடைமாற்றம் செஞ்சதனாலதான் இங்க வந்தேன்”
ஏடிஎம்ல எடுத்த பணத்துல செலவு போக மீதி பணத்தை பாட்டியிடம் கொடுத்து, போயிட்டு வரேன் “உடம்ப பாத்துக்கோங்க.”
“இந்தாப்பா செலவுக்கு வச்சுக்கோ.” அவன் கொடுத்த பணம் முழுவதையும் அவனிடமே கொடுத்த பாட்டியிடம், “உங்க அன்பும், ஆசிகளும் மட்டுமே போதும் பாட்டி. நாளைக்கு இண்டர்வியூ. எனக்காக எல்லாரும் வேண்டிக்கோங்க. நல்ல செய்தியோட வர்றேன்.” புறப்பட்ட அவனிடம் “ஆல் த பெஸ்ட், வாழ்த்துக்கள்” சொன்ன அனைவருக்கும் நன்றி சொல்லி புறப்பட்டான்.
அன்று இரவு நாளைய இண்டர்வியூ குறித்த எண்ணங்கள் அவன் மனம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டன. இது முதல் அனுபவம். மனதிற்குள் படபடப்பு. நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகள் துறைசார்ந்ததா, படித்த படிப்பிலிருந்தா அல்லது பொதுவானதா. இப்படியான கற்பனையிலேயே உறங்கிவிட்டான்.
மறுநாள் காலை.
பிரமாண்ட கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்த அந்த நிறுவனத்தில் நேர்காணலுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னதாகவே வந்துவிட்டான். அம்மாவையும், குலதெய்வத்தையும் வேண்டிக்
5
கொண்டான். நேரம் நெருங்க நெருங்க நெஞ்சில் படபடப்பு. பாட்டில் தண்ணீர் காலியாயிற்று.
“சங்கரன்” இவன் பெயர் சொல்லி அழைத்ததும், நம்ப முடியாமல் “நானா?” மனசுக்குள் எழுந்த கேள்வியுடன் குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்து அமர்ந்திருந்த அனைவருக்கும் “வணக்கம்” சொன்னான். முகத்திலிருந்த வியர்வைத் துளிகளை கைக்குட்டையில் துடைத்துக் கொண்டான்.
“உட்காருங்க” மூன்று பேரில் ஒருவர் தமிழிலியே அழைத்தது சற்று வியப்பாக இருந்தது. “நன்றி” சொல்லி அமர்ந்ததும், அடுத்தவர் “நீங்கள் நகரத்திற்கு புதியவரா?” “ஆமா சார்” அவரது கேள்விக்கு பதிலளித்ததும் படபடப்பு குறைந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
“முன் அனுபவமிருக்கா?” மூன்றாமவர் கேட்க, “இங்க வாய்ப்புக் கிடைச்சா அதுதான் முதல் அனுபவம் சார்” அவனின் நேர்மறை பதில் அனைவரின் முகங்களிலும் சிறுபுன்னகையாக வெளிப்பட்டது. பயோடேட்டாவில் முன்அனுபவம் இல்லையென்று தெரிந்தும் ஏன் இப்படியொரு கேள்வியை கேட்டார்? பயம் குறைவதற்காக கேட்டிருப்பாரோ!
“முதலாவதாக உங்களை அழைத்ததற்கான காரணம் தெரியுமா?” சிலநொடி மௌனத்திற்குப் பின், “நான் அறிந்த வரையில் ஆங்கில எழுத்துக்கள் வரிசையில் அழைப்பதுதான் நடைமுறை. மாறாக என்னை முதலாவதாக அழைத்ததற்கு தமிழ் எழுத்துக்கள் வரிசையில் “ச” என்ற உயிர் மெய் எழுத்து எனது பெயரின் முதல் எழுத்தில் தொடங்குறதுனால இருக்கலாம்.” பல நூறு நேர்காணலில் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு சரியாக சொன்ன அவனது புத்திகூர்மையை பாராட்டினார்கள்.
6
“உங்களின் மாணவப் பருவத்தில் சமூக சேவையில் ஈடுபட்டதுண்டா?”
“பனைமரங்களின் பயன்பாடு தெரிந்தும், அதன் வளர்ப்பு குறைவாகவும், அழிவு அதிகமாகவும் உள்ளது. எனவே மண்ணின் மைந்தனாக, ஊர் குளக்கரை மற்றும் காட்டுப் பகுதிகளில் நான் வித்திட்ட பனைமரங்களின் பலநூறு எண்ணிக்கையே இன்று சாட்சிகள். அதோடு எங்கள் கிராமத்தின் குடிநீருக்கான ஒரே ஆதாரமான ஊரணியை என்னையொத்த இளைஞர்களோடு சேர்ந்து ஆண்டுக்கொருமுறை சுத்தம் செய்தது.’’
“வேறு சமீபத்திய உதவிகள்.”
பாட்டிம்மா நினைவில் வர அந்த சம்பவத்தை சொல்லி முடித்ததும், அனைவரும் அவனுடன் கைகுலுக்கியதில் நம்பிக்கையோடு கைகூப்பி எழுந்தவனிடம்.
“உட்காருங்க கடைசியா ஒரு கேள்வி?”
“நீங்க படிச்ச பாடத்திலிருந்து சொல்லுங்க.”
வணிகவியலில் அவன் படித்த கம்பெனி கணக்குகள், சட்டதிட்டங்கள் குறித்து விரிவாக சொல்லி முடித்ததும், அனைவரின் முகங்களிலும் மகிழ்சியும், திருப்தியும் இருப்பதை பார்த்தான். இருப்பினும் இது அவனுக்கு சாதகமாக இருக்குமா? எனும் கேள்வியோடு இண்டர்வியூ முடித்து புறப்பட்டான்.
அன்று நண்பகலில் அவன் இமெயிலில் வந்த கடிதப்படி, மறுநாள் காலையில் அம்மாவை நினைத்து, சித்தி விநாயகருக்கு நன்றி சொல்லி மாலை சாற்றி வணங்கிவிட்டு பணியில் சேர்ந்துவிட்டான்.
7
அன்று மாலையில் பணிமுடித்து, பாட்டிம்மாவின் ஆசீர்வாதம், அண்டை வீட்டார்களின் வாழ்த்துக்களோடு, அவர்களுக்கு இனிப்பை கொடுத்துவிட்டு விடை பெற்றான்.
அவன் பணியில் சேர்ந்து அடுத்து வந்த ஞாயிறு காலைப் பொழுது. மேன்சனின் அருகாமையிலுள்ள தெருவில் நடந்தபோது தெருவின் நடுப்பகுதியில் “அன்னை இல்லம்” பெயர் பொறித்த வீட்டின் மாடி காலியிருப்பதை அறிவித்தது கேட்டில் தொங்கிய அட்டை. வேலை கிடைத்ததும் தனிவீடு பார்க்கலாம் எனும் எண்ணத்தில் கேட்டை திறந்து பூட்டியிருந்த கதவருகேயிருந்த அழைப்பு மணியை அழுத்தினான்.
மணிச்சத்தம் கேட்டு சிரித்த முகமும் நெற்றி நிறைய விபூதியுமாக கதவை திறந்த அவர்களைப் பார்த்ததும்,
இருகை கூப்பி “வணக்கம்மா” சொன்ன அவனிடம் “வாப்பா வந்து உட்காரு.” முன்பின் தெரியாத அவனை உள்ளே அழைத்து உட்காரச் சொன்ன அவர்களின் முகத்தையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நம்ப முடியலயா? ஒரு வாரமா ஆணும் பெண்ணுமா, குடும்பமா நிறைய வந்தாங்க. எங்கண்ணுக்கும், மனசுக்கும் சரின்னு தோணல.”
“எப்ப குடி வர்ற?”
அவனைப்பற்றிய விபரம் எதுவும் கேட்காமல், வாடகை, முன்பணம் எதுவும் சொல்லாமல், இந்த உலகத்தில் இப்படி ஒரு மனுசியா?
“ஆச்சரியமாயிருக்கா? உன்னோட முகத்த பாத்துதான்”
“எம்முகத்துல அப்படியென்னம்மா ஈர்ப்பு.”
8
“இந்த பூமியில பிறப்பும், இறப்பும் அன்றாடம் நடக்கிறாப்போல, சில மனிதாபிமான நிகழ்வுகளும் நடந்துக்கிட்டிருக்கு. அந்த மனிதாபிகள் எப்போ எந்த ரூபத்துல கண்ணுல தெரிவாங்கன்னு தெரியாது. இவ்வளவு சீக்கிரமா அதுவும் காலைப் பொழுதில அந்த மனிதாபிமானி நேர்ல வருவான்னு எதிர்பார்க்கலப்பா.”
“…………….?”
அவர்களின் மொபைலில் இருந்த போட்டோவை காட்டி, “இரண்டு நாளைக்கு முன்ன எனக்கு தகவல் தெரிந்து தேவகியை பார்க்க போன போது இன்னிக்கு நான் உயிரோடு இருக்கக் காரணமே இவந்தான்னு உன்னைப்பத்தி சொன்னதும். இந்தக் காலத்துல இப்படி ஒரு பிள்ளையா? அவன எப்போ பார்க்கப் போறோங்கிற ஆவல் இப்போ நிறைவேறிச்சு. கடவுளுக்கு நன்றி.”
சிகிச்சை முடிந்து பாட்டிம்மா வீட்டிற்கு போன அன்று செல்பி எடுத்தது அவன் நினைவில் வந்தது.
அடுத்து பாட்டிம்மாவுக்கும் அவர்களுக்கும் என்ன உறவுன்னு அவன் கேட்க நினைத்ததை,
ஒரே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து, தோழிகள் ஆனதும். இருவருமே அடித்தட்டு குடும்ப குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக ஒரு அறக்கட்டளையை நிறுவும் நோக்கில் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதையும். அந்த அறக்கட்டளை மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்து பதவிகளில் இருப்பதையும் சொன்னார்கள்.
“இப்படி ஒத்த எண்ணமுள்ள உங்க ரெண்டு பேரையும் நினைச்சா பெருமையா இருக்கு.”
“எங்களுக்குள்ளும் மாறுபட்ட எண்ணங்கள் நிறையவே இருந்தது. ஆனால் அதையும் தாண்டி எங்கள் நோக்கம் ஒண்ணா இருந்தது. அந்த
9
விதைதான் இந்த ஆண்டு வெள்ளிவிழா கொண்டாடும் விருட்சமா வளர்ந்து நிக்குது.”
அன்று பணிமுடித்து வீடு திரும்பிய சங்கரனின் சிரித்த முகத்தைப் பார்த்து, அவனைப் பற்றிய நினைவுகளை மனதில் அசைபோட்டபடி வீட்டுமுன் நடைபயின்று கொண்டிருந்த சாரதாம்மா, “இந்த சிரிப்பு காலையில நீ சொன்ன நேரத்துக்கு வந்ததுக்காகவா? இல்ல ரத்தம் கொடுத்துட்டு வந்ததுக்கா?”
“ரெண்டுக்குமே இல்லம்மா. இந்த நகரத்துக்கு வந்ததிலிருந்து என்னோட வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் அத்தனையும் பாட்டிம்மா வீட்ல ஆரம்பிச்சது இப்போதான் முடிஞ்சது. அந்த சந்தோசம் தான்…….”
“எனக்குள்ளும் அந்த ஞாபகந்தாம்பா உன் முகத்தை பார்க்கிற இந்த நொடி வரையில்.”
“அது எப்படிம்மா?”
“ஆத்மார்த்தமான அன்புதான்…...”
“இந்தாங்க உங்களுக்கு பிடிச்ச மைசூர்பா. மேலாளர் பதவி கிடைச்சதுக்காக. ஆசீர்வாதம் பண்ணுங்க. ”பாதம் தொட்டு வணங்கிய அவனை நெஞ்சோடணைத்து வாழ்த்துக்கள் சொன்ன அவர்களின் கையில் விழுந்த அவன் கண்ணீர் துளியை பார்த்ததும் “அம்மா ஞாபகமா?” பதிலுக்கு வார்த்தைகள் வராமல் மேலும் கீழுமாக ஆடிய அவன் தலையை வருடிய அவர்களின் கைகளை கண்ணில் ஒற்றிக் கொண்ட அடுத்த நொடியில் கலங்கி நின்ற கண்களோடு “காலையில உனக்காக எடுத்துவச்ச அடைமாவு இருக்கு. உனக்கு பிடிச்ச கேசரியும் செஞ்சிருக்கேன் சாப்பிட்டுப் போப்பா.” சொன்ன அவர்களிடம் “பத்தே நிமிஷம்மா” சொல்லிவிட்டு படியேறிய அவனையே பார்த்துக் கொண்டிருந்த சாரதாம்மா. “எத்தனையோ பேரு வந்திட்டுப் போயிருக்காங்க. ஆனா கடைசிக்காலத்துல எனக்கு வரமா
10
கிடைச்சிருக்கான். அறக்கட்டளைய நடத்துற பொறுப்புகளை எங்களுக்கு பின்னாடி அவன் பேர்ல எழுதிவச்சுரணும்னு தேவகி சொன்னதுக்கு சம்மதம்னு சொல்லிட்டேன்.” தனக்குத்தானே சொல்லிக் கொண்டார்கள்.
“உனக்குன்னு அரைச்ச வேர்க்கடலை சட்னி எப்படிப்பா இருக்கு.” “அதுக்குத்தான் ரெண்டு கூடுதலா உள்ள போயிருக்கு. கேசரியும் தனி ருசிம்மா. “நாளைக்கு காலையில இட்லியும் சாம்பாரும் வந்து சாப்பிட்டு போப்பா.”
“இன்னிக்கு நேரத்துக்கு ஆபீஸ் போகணுங்கிற அவசரம். மதியம் அலுவலக வேலையா வெளியில போனது. காலையில நீங்க சொன்னதுக்காக இன்னிக்கு பூராவும் மெஸ்ல சாப்பிடல. நாளைக்கும் போகலண்ணா கணக்க முடிச்சிட்டு போப்பான்னு சொல்லிடுவாரு மெஸ் மாமா.”
“ரொம்ப சந்தோஷம்னு சொல்லிட்டு வந்துரு. நஷ்டம் அவருக்குத்தான்.”
“நஷ்டம் அவருக்கில்ல. எனக்குத்தான். அலுவலகத்துக்கு அரை கிலோமீட்டர்ல அவரைப் போல குறைஞ்ச விலயிலையும், தரமா மூணு வேளை உணவையும் கொடுக்கிறதுக்கு அந்த ஏரியாவுல யாருமில்ல.”
“உனக்கும் சேர்த்து செய்றதுல எனக்கு எந்தவொரு சிரமமும் இல்ல.”
“வயசான காலத்துல உங்களுக்கு எதுக்கும்மா கூடுதல் சுமையும் சிரமமும். இந்த நொடி வரையில் நீங்க காட்டுற அன்பும், அரவணைப்புமே போதும்மா. அதுக்காக நாந்தான் உங்களுக்கு நிறையவே கடமைப்பட்டிருக்கேன்.”
“இங்க வந்த நாள்லருந்து எனக்கும் தேவிக்கும் பிள்ளையில்லாத குறையே தெரியாம செஞ்சிக்கிடிருக்கிற உதவிய எங்க ஆயுசுக்கும்
11
மறக்க மாட்டோம்பா. நீ எங்களோட இருக்கிறவரையில நாங்க பாக்கியசாலிகள்.”
“இவ்வளவு பெரிய நகரத்துல எனக்கும் வாய்ப்புக் கிடைக்குமா? கேள்விகளோடு அன்றைய உச்சிப் பொழுதில் நடந்து கொண்டிருந்த என்மீது அதிர்ஷ்டக் காற்று வீசுறதுக்கு காரணமாயிருந்தது பாட்டிம்மாதான். அவங்களுக்கு துணையா ஆஸ்பத்திரியில் இருந்தப்போ அங்கேயிருந்த நாளிதழில் வந்த விளம்பரத்தாலதான் எனக்கு வேலை கிடைச்சது. இப்போ உங்க வீடு எனக்கு பதவி உயர்வு கொடுத்திருக்கு. என் வாழ்க்கைக்கு அடித்தளம் போட்டுக் கொடுத்திருக்கிற உங்க ரெண்டு பேரோட இருக்கிற நானும் பாக்கியசாலிதான். அதுமட்டுமா என் வருங்காலத்திற்கான வாழ்க்கைப் பாடத்த கத்துக் கொடுக்க உங்களை விட்டா யாரு இருக்காங்க. உறுதியா ரெண்டு பேரையும் விட்டுட்டு போகமாட்டேம்மா.”
“நன்றிப்பா. தேவகியும் ரொம்ப சந்தோசப்படுவா.”
“நன்றி சொல்ற அளவுக்கு நானு பெரியாளுல்ல.”
“இதுல பெரியவன் சின்னவன்ங்கிற பாகுபாடு கிடையாது. இது பொதுவானது.”
“நீங்க ஆசிரியர். அதனால…….”
அவர்கள் சிரித்துக் கொண்டே, “மறக்குறக்குள்ள சொல்ல வந்தத சொல்லிடுறேன்.” ஆவல் அவன் முகத்தில் தெரிவதைப் பார்த்து மீண்டும் முகம் முழுக்க சிரிப்புடன் “உம்மேல அன்பு காட்டுறதுக்கும், ஆலோசனை சொல்றதுக்கும் ஒருத்தி இந்த வீட்டுக்கு வரணும். புரியுதா.”
அவன் சிரித்துக் கொண்டே “இதுக்கு காலந்தான் பதில் சொல்லணும்.” சொல்லிவிட்டு சென்ற அவனையே பார்த்துக் கொண்டிருந்த சாரதாம்மா “இப்படி ஒரு பிள்ளைய பெத்தவளுக்கு
12
அவனோடு வாழ்த்துக்கு குடுத்து வைக்கல.” அவர்களின் நெஞ்சோடு நின்றுவிட்டன வார்த்தைகள்.
படியேறியவன் மாடிக்காற்றில் காலாற நடக்கலாம் என்று கையிலிருந்த செல்போனின் வாட்சப்பில் வந்த செய்தியொன்றில் “நமஸ்காரம். எங்களது அப்பாவின் உயிரை காப்பாற்றிய உங்களுக்கு நேர்ல வந்து நன்றி சொல்லணும். தயவுசெய்து உங்க விலாசத்தை அனுப்ப வேண்டுகிறேன். மனோகரி.”
அவன் கொடுத்த ரத்தத்திற்கு போனில் நன்றி என்ற வார்த்தையோடு நிறுத்திக் கொண்ட பலரில், இது வித்தியாசமான அழைப்பாக இருந்தது. ஒரு பெண்ணுக்கு ஏன் சிரமத்தை கொடுக்கவேண்டும் என நினைத்தவன் “நானே நேரில் வருகிறேன். உங்களின் விலாசத்தை அனுப்பிவைக்கவும்.” பதில் செய்தி அனுப்பிவிட்டு மற்ற செய்திகளை படிக்கத் துவங்கினான்.
கடந்த ஒரு வாரமாக அலுவலக வேலை நிமித்தம் மறந்து போன மனோகரி அனுப்பிய விலாசம் நினைவில்வர அலுவலகம் முடிந்து புறப்பட்டான்.
வீட்டின் முன்னால் சேரில் அமர்ந்திருந்த பெண், இவனைப் பார்த்ததும் “வாங்க” என்று அழைத்ததை ஆச்சரியமாய் பார்த்த அவனிடம் “நாந்தான் உங்க அட்ரஸ் கேட்டு அனுப்பிச்சது. மனோகரி.”
விசாலமான ஹாலின் பூஜை அறையில் விளக்குகளின் ஒளிக்கீற்று. ஊதுவத்தியின் வாசனை. மெல்லிய சப்தத்தில் சஷ்டிகவசம் ஒலிக்க வீடு முழுவதும் பக்தி மணம்.
சிரித்த முகம், சிவந்த நிறம். நெற்றிநிறைய விபூதியும், குங்குமமும். “வாங்க தம்பி.” நாற்காலியிலிருந்து எழுந்து வணங்கிய அவனை, “உட்காருங்க. தெய்வமா வந்து காப்பாத்துனீங்க. நன்றிங்கிற வார்த்தையில அடங்குறதுல்ல உங்க உதவி. ஆயுசு பூராம் மறக்கமாட்டோம். உங்களுக்கு சிரமம் குடுத்ததுக்கு மன்னிக்கணும்.
13
உங்க பெருந்தன்மைக்கு நன்றி.” சொன்ன அவர்களிடம் “பெரிய வார்த்தைம்மா. ” அவன் சொல்லி முடித்ததும். “காபி எடுத்துட்டுவர்றேன்” என்று சமையலறைக்குள் சென்றுவிட்டார்கள்.
வாகனச் சத்தத்தை தொடர்ந்து கேட்டை திறக்கும் ஓசை கேட்டு “அக்கா வந்தாச்சும்மா.”
“அம்மா” என்ற குரலோடு வந்தவள் இவனைப் பார்த்ததும் சிலையாய் நின்றாள். தன்நினைவுவர ”அவனா இவன்! இங்க எப்படி?” உதட்டோடு நின்றுவிட்டது.
காலச்சுழற்சியில் மறந்துபோன, கல்லூரியின் கடைசி நாளன்று “மறந்துற மாட்டியே” சொன்ன சங்கரியா இவள். இருவரும் இமைதட்டாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்க.
“அம்மா இங்க வாயேன்”
மகள் சங்கரியின் குரல் கேட்டு அடுக்களையிலிருந்து வந்த அம்மாவிடம், “இவன் யார் தெரியுமா?” “என்னடி மரியாதையில்லாம.” “உனக்கு ஞாபகமிருக்கா. சங்கரன்னு நான் சொன்னது.”
“உனக்கு எப்படி என்னோட விலாசம்….? இன்னிக்கு எதிர்பாரததெல்லாம் நடக்குது. எனக்கு புரமோசன் கிடைச்சதுக்காக உனக்கு பிடிச்ச மைசூர்பா எடுத்துக்கோ.
மூணுவருசப் படிப்போட நமது நட்பு முடிஞ்சிருச்சுன்னு ரெண்டு பேருமே நினைச்சிருக்கமாட்டோம். கல்லூரி காம்பவுண்ட தாண்டி நமக்குள்ள எந்தவொரு தொடர்பும் இல்லாதது எவ்வளவு பெரிய தவறுங்கிறது என் அப்பா பதவி உயர்வுல மாற்றலாகி இங்கே வந்த செய்தியை உங்கிட்ட சொல்ல முடியாத அன்னிக்கு தோணுச்சு. ”
14
உனக்கு பிடிச்ச சப்பாத்தியும் குருமாவும் சாப்பிட்டுத்தான் போகணும். அம்மா நானும் ஹெல்ப்பண்றேன்.” சரவெடியாய் வெடித்துவிட்டு டிரஸ் மாற்றச் சென்றுவிட்டாள்.
அவனிடம் காபியை கொடுத்து “தப்பாயெடுத்துக்காதீங்க தம்பி.”
“காலேஜ்லயும் அவ அப்படித்தான். அது மாறல.” சிரித்துக்கொண்டே சொன்ன அவனிடம் “கடவுள் உங்கள எப்படி அடையாளம் காட்டியிருக்காரு பாருங்க. ஆச்சரியமாயிருக்கு.” அன்றைய நாளிதழைக் கொடுத்துவிட்டு அப்பா தூங்குறாங்க. அதுதான்………”
“பரவால்லம்மா” காபியை கையிலெடுத்தான்.
மூன்றாண்டுகள் கழித்தும் அவள் பேச்சும், முகமும் மாறவில்லை. மாமரத்தடியில் மணிக்கணக்கில் அவளோடு பேசியது, காமர்ஸ்லயும், அக்கவுண்டன்சிலயும் மார்க் அதிகமா வாங்குறது நீயா நானா? பார்க்கலாமா? சங்கரா நாளைக்கு எனக்கு சோள தோசையும் வேர்கடலை சட்னியும் வேணும். உங்க அம்மா கைப்பக்குவம் எங்க அம்மாவுக்கு வரமாட்டேங்குதுடா. இதுக்குப் பதிலா என்ன டி போட்டு கூப்பிட்ட உததான். இப்படி உரிமையோடு அழைத்தது. இதுதான் கடைசி வருசம். இன்னும் ஒரு மாசம். குடுகுடுன்னு ஓடிரும். என்ன மறந்துற மாட்டியே இப்படி அவளோடு அளவளாவிய நாட்கள் அவன் மனத்திரையில் கணநேரத்தில் ஓடி மறைந்து, கையிலிருந்த காபியும் ஆறிப்போனது.
“அந்தநாள் ஞாபகம் வந்திருச்சோ.” மேலும் கீழும் ஆடிய தலைதான் அவளுக்கு பதில் சொன்னது. “பேசமாட்டியா. மறந்துட்டயா?” அவள் உச்சரிப்பில் அதே எதிர்பார்ப்பு, ஏக்கம். “நடந்ததெல்லாம் அம்மா சொன்னாங்க. அது நீதான்னு சொன்னதும் நன்றி உனக்கா கடவுளுக்கா?” கண்ணீருடன் கை கூப்பிய அவளிடம் “கடவுளுக்குத்தான்”. அவன் சொல்லி முடித்ததும்.
15
“சங்கரி அப்பா கூப்பிடுறாங்க” தங்கையின் குரல் கேட்டு “வா அப்பாவ பாக்கலாம்” சங்கரியோடு வந்த இவனை பார்த்து, “வாங்க தம்பி” இருகை கூப்பிய அவர் கரங்களைப் பிடித்து “ஐயா நீங்க பெரியவங்க” அடக்கமாய் சொன்ன அவனிடம் “நானு பெரியவனாயிருக்கலாம். அதவிட உங்க மனசு பெருசு. அதுக்கு என்னோட ரெண்டு கைகள் பத்தாது.” என்று அவனது கரங்களை பற்றிக் கொண்டார். “நீங்க சங்கரியோட காலேஜ்மேட்னு சொன்னாங்க. அதுல கூடுதல் சந்தோசம் எனக்கு. நெஞ்சுவலி வந்ததும் “சங்கரா” ன்னு நானு கும்பிடுற தெய்வந்தான் உங்கள அனுப்பிவச்சிருக்கு. சாப்பிட்டுத்தான் போகணும்.”
அடுத்த அரைமணியில் சாப்பாடு முடிந்து “வர்றேம்மா” சொல்லி புறப்பட்டவனிடம், மீண்டும் நன்றி சொன்ன சங்கரியின் அம்மா, “நீங்க அடுத்தமுறை வரும்போது எங்கவீட்டுப் பிள்ளையா வரணும்.” அந்த வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் மூவரையும் பார்த்து நின்ற அவனுக்கு எந்த சமிக்கையும் கிட்டவில்லை.
வாசல்வரை வந்து வழியனுப்பிய சங்கரி அவனிடம் ஒரு ரோஜாவை கொடுத்து “இதுதான் அம்மா சொன்னதுக்கான அர்த்தம்” என்று சொன்ன அவள் கரங்களைப் பற்றிய அவனிடம், “உம்மனசுல இருக்கேன்னு தெரியுறதுக்கு உன்னோட உதிரம் காரணமாயிருந்திருக்கு.”
“உன்ன விரும்புற பொண்ணா, உனக்கு பிடிச்ச பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோப்பா. அம்மா உயிர்பிரியும்போது சொன்னது இன்னிக்கு நடந்திருக்கு’’ சொல்லிவிட்டு சென்ற அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கரி.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்