V.V.KALAISELVI.
சிறுகதை வரிசை எண்
# 110
வேர்
"ஏங்க நம்ம பக்கம் வர்ர வேர்ல ஆசிட் ஊத்திடலாம்ங்க".. மரம் தானா காஞ்சிடப் போகுது .. அப்புறம் என்ன ..?சுலபமா வேலை முடிஞ்சிடும் என்று அசால்ட்டாகச் சொன்னது பெண்குரல்
" ஏய் என்னடி சொல்ரே.? வேணாம் டி" பாவம் டி பச்ச மரத்த அழிக்கிறது பச்ச குழந்தைய கொல்ரதுக்கு சமம் வேணாம்டி"என்றுஅதிர்ந்து போய் சொன்னது ஆண்குரல்.
"ஆமாங்க. அது தாங்க பிரச்சனைய தீர்க்கறதுக்கு ஒரே வழி.நீங்க பேசாம படுங்க ஆக வேண்டியத நான் பார்த்துக்கிறேன்" ..என்றது பெண்குரல்
"நாளைக்கு பேசிப்பார்க்கலாம் உங்கண்ணண் ஒத்து வந்தா விசயத்தை அப்படியே விட்டுடலாம் . இல்லைன்னா .. அதைத் தான் செய்யணும். என்றது பெண் குரல்.
"வேண்டாம் ப்பா .. அது அப்பா ஆசையா வச்ச மரம்ப்பா".கெஞ்சியது ஆண்குரல
"ஏங்க. உங்க அப்பாக்கு மரம் வைக்க வேற இடமா கிடைக்கலை ?
நட்ட நடுகாட்டுக்குள்ளையா மரத்த வைப்பாங்க? இந்தமுறை கொஞ்சம் குரல் காட்டமாகியது.
"அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கும்ப்பா .. வேணாம்ப்பா மரத்த எதுவும் செய்ய வேணாம்! ..
"அதைய அண்ணணுக்கே விட்டுக் கொடுத்துட்டு வேணும்னா காசு வாங்கிக்கலாம்..
"அதுக்கும் தான் உங்கண்ணண் சம்மதிக்க மாட்டேன்றாரே.. முழுசா இரண்டு செண்ட்ல்ல போகுது .". இறுக்கமாகியது குரல்
"அதுக்காக.. ""?
நீங்க பேசாம இருங்க அதெல்லாம் யாருக்கும் தெரியாதமாதிரி செஞ்சுடலாம்..!
இல்லைன்னா நீங்க மட்டும் இங்கையே இருங்க.நானும் பிள்ளைகளும் எங்கம்மா வீட்டுக்கே போயிடரோம்.?.
அதன்பிறகு எந்த சத்தமும் கேட்டகவில்லை
ஒத்தை கல்லு செங்கல் சுவர்தான் குறுக்கே. செல்வராசு இந்தப்பக்கமும்
பிரபு அந்தப் பக்கமுமாய் இருக்கிறார்கள். பையன்கள்இருவர்க்கும் திருமணத்தை முடித்த கையோடு பெரியசாமி இருவரையும் தனிக்குடித்தனம் வைத்துவிட்டார்.
ஆனால் செல்வா தான் விடாப்பிடியாய் அம்மா அப்பாவோடேயே இருந்து கொள்வதாகச் சொல்லி விட்டான்
தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தவனின் காதில் இந்தக் குரல்கள் விழுந்ததுமே விசுக்கென்று எழுந்து உட்கார்ந்துவிட்டான் செல்வராசு .
"கடவுளே " என்று வாய்விட்டுச் சொன்னவன் கண்முன் ஒரு நொடி கருகிய மரம் வந்துபோனது. அப்பா என்று வாய்விட்டுச் சொன்னான்
அவசரமாய் எழுந்ததில் மேலே கால் போட்டு தூங்கிக் கொண்டிருந்த பையன் கால் நழுவிக் கீழே விழுந்தது அவன் சிணுங்கிக் கொண்டே வேறுபுறமாக ஒருக்கழித்துப் படுத்தான்.
"இது தம்பியும் அவன் மனைவியும் பேசுவது ஆயிற்றே ?"கடவுளே அப்படி மட்டும் நடந்துவிடக்கூடாது" என்று மனசுக்குள் வேண்டிக் கொண்டான்.
மெதுவாக எழுந்து கூடத்திற்கு வந்தான் அம்மாவின் இருமல் அம்மா இன்னும் தூங்கவில்லை என்பதைச் சொன்னது. போய் கேட்டால் அழுவாள் பொலபொலவென்று கண்ணீர் விடுவாள்
வேண்டாம் அம்மாவை இந்த நேரத்திற்கு ஏன் அழவைக்க வேண்டும் என்று தோன்றியது.
ஒரு நிமிடம் சேர்ந்தார் போல கேட்ட இருமல் இப்போது நின்றுவிட்டிருந்தது. எழுந்து தண்ணீர் குடித்திரூப்பாள் என்று தானாக நினைத்துக் கொண்டான் . இல்லையென்றாலும் அம்மா அடக்கிக் கொள்வாள் அத்தனை வைராக்கியம் பிடித்தவள்.
இதுவே அப்பா இருந்திருந்தாரென்றால் சுடுதண்ணீர் வைத்து கொடுத்துவிட்டு ஏதாவது தைலம் தேய்த்துவிட்டிருப்பார் இப்போது அப்படியில்லை அம்மா நிறைய விசயங்களுக்கு தனியாகவே பழகிவிட்டிருந்தாள்.
அம்மா எப்போதும் சொல்வாள் எல்லாவற்றுக்கும் எப்போதும் நம்மை தயாராய் வைத்துக் கொள்ள வேண்டும் என்று. இப்போது அப்படித்தானிருக்கிறாள்.
காலம் எல்லோரையும் எப்போதும் ஒன்றாக இருக்கவிடுவதில்லையே இதோ இப்போது நானும் தம்பியும் கூட அப்படித்தானே இருக்கிறோம்.
ஒரே தட்டில் சாப்பிட்டு ஒரேதுணியைப் போட்டுக்கொண்டு ஒன்றாய் வாழ்ந்தவர்கள் தான் ஆனால் இப்போதுஎதிரும் புதிருமாய் அல்லவா நிற்கிறோம்.?
எல்லாம் இந்த பாழாய்ப் போன சொத்தால் வந்தது. அதுவும் குறிப்பாக அப்பா நட்டுவைத்து இப்போது பூத்துக்குலுங்கி காய்த்துக் கொண்டிருக்கும் அந்த மாமரத்தால் வந்தது தான்.
மங்கலான வெளிச்சத்தில் அப்படியே நடந்து வெளியே வந்தான். தோட்டத்தோடு கூடிய வீட்டின் முன்புறம் வந்து கையைக் கட்டிக் கொண்டு நின்றான். கண்கள் அப்படியே சுழன்றது பௌர்ணமி வெளிச்சம் தோட்டத்தை பளீரென்று காட்டியது அப்பாவின் பலவருட கனவு பத்துவருட உழைப்பு .எல்லா மரம் செடி கொடிகளையும் தாண்டி அந்த மாமரம் தனியாகத் தெரிந்தது. அப்போதைக்கு அவனுக்கு அது அப்பாவைப் போல் தெரிந்தது... நினைவுகள் பின்னோக்கி ஓடியது.
"டேய்" செல்வா 'பிரபு'இரண்டு பேரும் இங்க வாங்கடா டேய் .!என்ற அப்பாவின் உற்சாகக் குரலுக்கு ஒடிவந்தவர்கள் அப்பாவின் கையிலிருந்த மாங்கன்றைப் பார்த்ததும்
"
என்னப்பாஇது? என்றார்கள்.
' மாமரக் கன்னுடா கோயில் பக்கத்துல முளைச்சிருந்துச்சி பாவம்டா யாருமே கண்டுக்காம இருந்தாங்கடா.. தண்ணி இல்லாம சோர்ந்து போயி கிடந்துச்சுடா நாலு நாளா நானும் போக வர பார்த்துட்டே இருந்தேண்டா இன்னைக்கு நானே எடுத்துட்டு வந்துட்டேன்டா என்றார் சின்ன பையனின் உற்சாகத்தோடு..
"நம்ம தோட்டத்துல நட்டுவச்சிடலாம்டா" என்றார் இன்னும் அதிக உற்சாகமாய்
செல்வராசு அப்பா பக்கத்தில் போய் மாங்கன்றின் சின்ன இணுக்கை கிள்ளி முகர்ந்து பார்த்தான் மாம்பழ வாசனை அடித்தது
அப்பாவிடம் சொன்னான்" அப்பா இப்போவே மாங்கா வாசம் அடிக்குதுப்பா" என்று..
"
ஆமாடா என்று அவரும் அவன் கையை முகர்ந்து பார்த்துவிட்டுச் சிரித்தார்
பிரபு பக்கத்தில் வராமல் எட்டவே நின்றிருந்தான். அவன் கொஞ்சம் மேம்போக்கான ஆள் தோட்டம் துறவு என்றாலே "வேணாம்டா சட்டையெல்லாம்
அழுக்காயிடும்டா என்பான்.
அப்போது தான் அம்மாவின் நகைகளைவிற்று இந்த தோட்டத்து வீட்டை வாங்கி இருந்தார் அப்பா ..
ஒரு ஏக்கர் அப்போதே மூணு லட்சத்துக்கு வாங்கினார் நல்ல செம்மண் பூமி எதைப் போட்டாலும் விளையத் தயாராக இருந்தது ..
கூடவே இரட்டைக் கோப்பு வீடும் பதினைந்து தென்னங்கன்றுகளுமாய் இருக்க அம்மா நிறைய சந்தோசப்பட்டாள் ..
அம்மாவும் அப்பாவும் கடினமான உழைப்பாளிகள் அதுவும் அப்பாவிற்கு சொந்தமாய் நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்யவேண்டும் என்கிற ஆசை மனசுக்குள்ஓடிக் கொண்டே இருந்தது.
அடிக்கடி செல்வராசுவை டவுனுக்கு சைக்கிளில் கூட்டிக் கொண்டு போகும்போதெல்லாம் அதைச் சொல்லிக் கொண்டே வருவார்
பிரபுவிற்கு கொஞ்சம் யாரிடமும் ஒட்டாத சுபாவம் அதனால் அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருப்பான் இந்த தோட்ட வேலை எதிலும் கலந்து கொள்ளவே மாட்டான்.
நிலம் வாங்கிய ஒருவருடத்தில் கிணறும் வெட்டிவிட தண்ணீர் மாளாது வந்தது. தென்னைகள் பலன் கொடுக்க ஆரம்பித்தது கூடவே வாழை காய்கறி மஞ்சள் என்று தொட்டதெல்லாம் பொன்னானது..
அம்மா கடுமையாக உழைப்பா ள் இரண்டாள் செய்ய வேண்டியதை தான் ஒருத்தியே செய்வாள். எந்நேரமும் தோட்டமே கதியென்று கிடந்தாள்
அப்போதுதான் அப்பா இந்த மாங்கன்றை கொண்டுவந்தார்
அப்பா அதை குழந்தை போல கையிலேந்திக் கொண்டிருந்தார் அதன் வேர் அவர் முழங்கை வரை நீண்டிருந்தது.
"
அப்பா ஒரே ஒரு வேர்தான்ப்பா இருக்கு இத எப்படிப்பா தழைய வைக்கிறது..? என்றான் செல்வராசு
"டேய் பெரிய மரத்துக்கெல்லாம் வேர் இப்படித்தாண்டா இருக்கும். "இதுக்குப் பேர்தாண்டா ஆணி வேர்"
இது மொதல்ல நிலத்துக்கு கீழ போய் ஸ்ட்ராங்கா நின்னுக்கும்
பிறகுதாண்டா பக்க வேர்களை விடும் என்று ஒரு அறிவியல் விஞ்ஞானி போல சொல்லிக் கொண்டு போனார் ..
மாங்கன்றுகள் அத்தனை சீக்கிரம் முளைக்காதுடா. அப்படியே முளைச்சாலும் சீக்கிரம் வளராதுடா என்று ம் சொல்லிக் கொண்டே போனார்.
பின் கையோடு செல்வாவைக் கூட்டிக்கொண்டுபோய் நட்டும் வைத்தார் ..
"
ஏம்ப்பா உங்க கை தான் ராசிக்கை ஆச்சே நீங்களே நடுங்கப்பா "என்று செல்வா சொன்னதுக்கு
"இல்லடா இதெல்லாம் காலம் காலமா நின்னு பலன் கொடுகிறது அதனால நீயே நடுடா" என்று செல்வாவையே நட்டு வைக்கச் சொன்னார்.
ஏம்ப்பா இப்படி தோட்டத்து நடுவுல நடச்சொல்ரீங்களே ஓரமா நடலாமேப்பா " என்ற செல்வாவைப் பார்த்து
""இல்லடா இது இங்கையே இருக்கட்டும்டா இந்த இடத்துல இது நல்லா வரும்டா என்று சொல்லி கைப்பிடி மண்ணள்ளி முத்தம் கொடுத்தார்
"ஏனந்த இடம்? என்று எத்தனையோ முறை கேட்டும் காரணத்தைச் சொல்லவில்லை அப்பா. செடியை நடுவதற்கு முன் சாமி கும்பிடச் சொன்னார் அவரும் நிலத்து மண்ணை துளி எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டார்.
செல்வாவிற்கு இந்த மரத்தை பார்த்துக் கொள்வது தான் வேலை. பள்ளிக்கூடம் விட்டு வந்ததுமே மரத்திடம் ஓடி வந்துவிடுவான் தண்ணி ஊற்றிவிட்டு மரத்தோடு கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருப்பான் ..
""என்னடா மரத்துகிட்டபோயி பேசிட்டு இருக்கே? என்று பிரபு கேலியாகச் சிரிப்பான்.
அதுக்கும் உயிர் இருக்குடா அது நம்ம பேசரத கேட்கும்டா என்பான் செல்வா.
அப்பா அந்த மரத்தோடு பேசுவதை செல்வா அடிக்கடி பார்த்திருக்கிறான்
கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது மாங்கன்றும் குடும்பமும்.
வைத்த நாலாவது வருடத்தில் முதல் பூவிட்டு பிஞ்சுவிட ஆரம்பித்தது .பிறகு வந்த. வருடங்களில் எல்லாம் அமோக விளைச்சல் தான்
மாம்பழசீசனில் வீட்டிற்கு வரும் அத்தனை பேருக்கும் பைநிறைய மாம்பழங்கள் கொடுத்து அனுப்புவார் அப்பா. அம்மா தன் பங்குக்கு ஊறுகாய் தொக்கு என்று விதவிதமாய் செய்வாள் மீந்ததை ஞாயிறு சந்தையில் விற்று வருவாள்.
செல்வாவிற்கு படிப்பு வரவில்லை. அதனால் ஒருடிகிரியோடு நிறுத்திவிட்டு அப்பாவோடு தோட்டத்தை பார்க்க ஆரம்பித்துவிட்டான் பிரபு படித்து காலேஜ்லெக்சரராக போகிறான் இடையில் இரண்டு பேருக்கும்
கல்யாணம் ஆகி இருவருக்கும் தலா இரண்டு வாரிசு என்று குடும்பம் பெரிதாகிவிட்டது.
எல்லாம் போன வருடம் அப்பா தவறும் வரை நன்றாகத்தான் போய்கொண்டு இருந்தது. அப்பா இறந்த ஆறேமாதத்தில் "சொத்தை பிரிச்சுடலாம்ண்ணா "என்றவனை ஆச்சர்யமாகப் பார்த்தான் செல்வா..
"ஏண்டா "என்று கேட்டதிற்கு
என்னால இங்க தோட்டத்து வீட்ல இருக்க முடியலைண்ணா என்னோட பங்க கொடுத்தா அத .லீசுக்கு விட்டுட்டு நகரத்துல ஒரு வீடு வாங்கி அங்க இருந்துடரேன் அது தான் என் வேலைக்கு சரியாய் இருக்குனு சொன்னான்.
பிரபுவின் மனைவி படித்தவள் நகரத்தில் வாழ்ந்தவள் அதனாலே பெரும்பாலும் அப்பா வீட்டிலேயே இருந்து கொள்வாள்.
செல்வாவிற்கும் பிரபு சொல்வது சரியென்று படவே சொத்தைப் பிரிக்க தானும் ஒத்துக்கொண்டான்.
அப்படிப் பிரிக்கும் போதுதான் இந்த மாமரம் இடைஞ்சலாக வந்து நின்றது. மிகச்சரியாக
அந்தப் பக்கம் பாதியும் இந்தப்பக்கம் மீதியுமாக நின்றது மரம் .
ஒன்று மரத்தை வெட்ட வேண்டும் இல்லையென்றால் யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுக்கனும் என்று முடிவெடுக்கையில் இரண்டு பேரும் ஒத்துக் கொள்ளாத நிலையில் தான் தம்பி மனைவி வேரில் ஆசிட் ஊத்திடலாம் என்கிறாள்.
இது அப்பா வைத்தது அப்பாகவே வாழ்ந்து கொண்டிருப்பது ஆசிட் ஊற்றினால் கொஞ்சம் கொஞ்சமாக இலையெல்லாம் கருகி மரம் கரியாகி மொட்டையாகி நிற்பதை பார்க்க எனக்குத் தெம்பில்லை
அவனும் அப்பாவும் பார்த்துப் பார்த்து வளர்த்த மரம் கரிக்கட்டையாகிப் போவதை எப்படி கண்கொண்டு பார்ப்பான்?. அதனால் ஒருமுடிவு எடுத்தவனாய் உள்ளே போனான் ..
அம்மா ரூமில் லைட் எரிய
"ம்மா" என்றான் மெதுவாக
அம்மா செல்வா நினைத்தபடி விழித்துத் தான் இருந்தாள்
வாய்யா வந்து உட்காருப்பா "என்றாள்
"ஏம்மா தூக்கம் வரலையா? என்றான்
இல்லப்பா. நாளைக்கு விடிஞ்சா சொந்தக் காரங்க எல்லாம் வந்திடுவாங்க வந்து பிரச்சனையபேசி முடிச்சிடுவாங்க யாராவது ஒருத்தர் அந்த இடத்த விட்டுக்கொடுக்கணும் இல்லைன்னா மரத்த வெட்டனும் அப்படித்தான்ப்பா பேச்சு வரும் அத நினச்சுத்தான் கவலையா கிடக்குப்பா என்றாள்..
நீங்க நினைக்கிறமாதிரி இது அப்பா வச்ச மரம் தான் ஆனா அதுக்குள்ள இருக்கிறது அப்பாவோட அப்பா உசுருப்பா
இந்தத் தோட்டத்த அப்பா வாங்குனதுக்கு காரணமே அதுதான் ப்பா என்றாள்..
என்னம்மா சொல்ரீங்க..என்றான் செல்வா.??
அப்பாவோட அப்பா அதான் உங்க தாத்தா இதோ இப்ப நம்ம வசம் இருக்கிற தோட்டத்துலதான் பண்ணையாளா வேலல பார்த்தார்
"அப்பத்தான் இதோ இப்ப இந்த மாமரம் இருக்கே அந்த இடத்துல ஒருநாள் நெஞ்சைப்பிடுச்சிட்டு சாஞ்சிட்டார் "அன்னைக்கு உங்கப்பா ரொம்பவுமே உடைஞ்சு போயிட்டார்
*உங்கப்பாவ தேத்திக் கொண்டு வர்ரதுக்குள்ளே நான் படாத பாடுபட்டேன் நீங்க ரெண்டுபேரும் அப்போ சின்னப்பசங்க. அப்பா கொஞ்சம் கொஞ்சமா தேறிவந்தபிறகு வருசம் ஒருதடவ அவங்க அப்பாவோட கடைசிமூச்சு பிரிஞ்ச இந்த இடத்துக்கு வந்து அன்னைக்கு முழுக்க. பழியா கிடப்பாரு
உங்க தாத்தாவும் அப்பாவ கைவிடலைப்பா எத்தனையோ பிரச்சினைகள்ள சாமியா நின்னு எங்கள காப்பாத்தி வழிநடத்தியிருக்கார் ..
நம்ம சாதிய கீழா நினைச்சு நடத்தின அந்தக்காலத்துல அவுக கிட்டையே வேல செஞ்சு இந்த இடத்த வாங்கரதுக்குள்ள படாதபாடுட்டுட்டார் உங்க அப்பா.
அப்போதான் கோயில் பக்கத்துல இந்த மாங்கன்னு கிடைச்சுதுன்னு கொண்டுவந்து வச்சு வளர்க்க ஆரம்பிச்சார்ப்பா
அதை அவர் அப்பாவாத்தான் பார்த்தாரு.மனசுல என்ன பாரம்ன்னாலும் அதுகிட்ட. போயிசொல்லுவாரு. அதே மாதிரிதான் சந்தோசமா இருந்தா கட்டிப் பிடிச்சுக்குவார்.
இப்போ அவரும் இல்லை நாளையோட அந்த மரமும் இருக்காதுல்ல என்று சொல்லிவிட்டு குலுங்கி அழ ஆரம்பித்தாள்
செல்வா தான் ஒருமுடிவோடு வந்திருப்பதை சொல்லாமலேயே அம்மாவை சமாதானப்படுத்தி தூங்க வைத்துவிட்டு தானும் நிம்மதியாக தூங்கினான்
அடுத்த நாள் எல்லோர் முன்னிலையிலும் தான் மரம் இருந்த இடத்தை தம்பிக்கு கொடுத்துவிடுவதாகவும் பதிலுக்கு தம்பி தனக்கு காசு எதுவும் தரவேண்டாம் எனவும் இந்த மரத்தை அவனாக எப்போதுமே வெட்டக்கூடாது என்று தனக்கு வாக்கு கொடுக்கும்படி கேட்டான்
பிரபுவும் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டான் அம்மா செல்வாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். அதில் நன்றி இருந்தது ஒரு நிம்மதி இருந்தது
எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது
இதோ இன்று இன்னும் கொஞ்ச நேரத்தில் தம்பிகுடும்பம் பட்டணத்திற்கு கிளம்பப் போகிறது
எல்லாம் தயாராக இருக்க காரில் ஏறப்போகும் முன் தம்பியின் சின்ன மகன் ஓடிவந்தான் அவன் கையில் ஒரு சின்ன மாங்கன்று அழகாய்ச் சிரித்தபடி இருந்தது.
நேராக பெரியப்பாவிடம் வந்தவன் "பெரியப்பா இது எங்க ஸ்கூல்ல இருந்துச்சு பெரியப்பா நான்தான் இதுக்கு தினம் தண்ணி ஊத்துவேன்" "
"இனிமே நான் வேற ஊருக்கு போறேன்ல. அதுவுமில்லாம அப்பா உன்கிட்ட. இருந்து பெரிய மரத்த வாங்கிடுச்சுல்ல பெரியப்பா நீ பாவமில்லையா?? அதான் பெரியப்பா உனக்காக இதைக் கொண்டாந்தேன் என்று இருகைகளில் அப்பியிருந்த
ஈரமண்ணோடு நீட்டினான்…
செல்வா அதை வாங்கிக் கொண்டான் "பெரியப்பா நீளமா போகுதுல்ல அதான் ஆணிவேரு" பெரியப்பா
அது தான் முழு மரத்தையும் தாங்குமாம் பெரியப்பா"
எங்க டீச்சர் சொல்லி இருக்காங்க என்று கையை ஆட்டிச் சொல்லிக் கொண்டே
போனான் அப்பா சொல்வது போன்றே இருந்தது
செல்வா அப்படியே தம்பிமகனை வாரிஅனைத்துக்கொண்டான் அப்போது கையிலிருந்த மாங்கன்று லேசாக சிரித்தது போலிருந்தது.
வி.வி. கலைச்செல்வி
137 N.G.G.O காலனி
தாராபுரம்
திருப்பூர் மாவட்டம் 638656
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்